Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Wednesday, April 24, 2024
Please specify the group
Home > Featured > அடியாரின் பொருட்களை கொள்ளையடித்த ஈசன்- எங்கு, ஏன் ?

அடியாரின் பொருட்களை கொள்ளையடித்த ஈசன்- எங்கு, ஏன் ?

print
ன்று சேக்கிழார் குருபூஜை. சேக்கிழார் பெருமான் சைவ சமயத்திற்கு செய்திருக்கும் தொண்டு வார்த்தைகளால் விவரிக்க இயலாதது. தன்னிகரற்றது. தனித்துவமிக்கது.

8 ம் ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த சுந்தரர் அடியார்களின் பெருமையை விளக்கும் ‘திருத்தொண்டத் தொகை’ பாடினார். அவர் மூலம் தான் நமக்கு முதன் முதலில் நாயன்மார்கள் குறித்த விபரம் தெரியவந்தது. அதற்கு பிறகு இரண்டு நூற்றாண்டுகள் கழித்து 9 ஆம் நூற்றாண்டின் இறுதியில் இராஜராஜ சோழன் காலத்தில், திருநாறையூரை சேர்ந்த நம்பியாண்டார் நம்பி, திருத்தொண்டத் தொகையை சற்று விரிவாக்கி ‘திருத்தொண்டர் திருவந்தாதி’ பாடினார்.

சேக்கிழார் பெருமான்
சேக்கிழார் பெருமான்

இதன்பிறகு இரு நூற்றாண்டுகள் கழித்து 12 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த சேக்கிழார் பெருமான், சுந்தரரும் நம்பியாண்டார் நம்பியும் போற்றிப் பரவிய அடியார்கள் யாவரும் உண்மையில் வாழ்ந்தவர்களே அன்றி கற்பனை பாத்திரங்கள் அல்ல என்று உலகிற்கு எடுத்துக்காட்ட விரும்பி, தமிழகம் முழுதும் சுற்றுப் பயணம் செய்து அடியார்கள் வாழ்ந்த, முக்தி பெற்ற தலங்களுக்கும் அந்தந்த ஊர்களுக்கும் நேரில் சென்று கல்வெட்டு, பட்டயங்கள், செவிவழிச் செய்திகள் இவற்றை எல்லாம் அலசி ஆராய்ந்து தொகுத்து ‘திருத்தொண்டர் புராணம்’ என்னும் பெரிய புராணத்தை இயற்றினார்.

தில்லையில் நடராஜப் பெருமான் சன்னதியில் இதை அவர் அரங்கேற்றியபோது, இறைவனே அசரீரியாக “உலகெலாம்” என்று இதற்கு அடியெடுத்துக்கொடுத்து இதற்கு நற்சான்று வழங்கினான் என்றால் இதன் பெருமைக்கு நிகரேது?

பெரியபுராணத்தை ‘மங்கல நூல்’ என்று குறிப்பிடுவது வழக்கம். அந்தளவு அந்த நூல் முழுக்க மங்களமான விஷயங்களையே கொண்டிருக்கும். அடியார்கள் ஈசனுக்காக உயிரைத் தியாகம் செய்யும் இடங்களில் கூட சேக்கிழார் பெருமான் அமங்கல சொற்களை பயன்படுத்தியிருக்கமாட்டார் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.

எனவே பெரியபுராணத்தை தினந்தோறும் வீட்டில் படித்து வந்தால், ஓதி வந்தால் அவ்வீட்டில் மங்கலமான விஷயங்கள் தொடர்ந்து நடைபெறும். வம்சம் விருத்தியடையும், வியாபாரம் செழிக்கும், குடும்பத்தில் பூசல்கள் மறைந்து அமைதி ஏற்படும், சர்வ மங்களமும் அந்த இல்லத்தில் பொங்கிப் பெருகும். இது கண்கண்ட உண்மை.

DSC09843-22

நம் தளத்தின் பிரதான நோக்கங்களுள் ஒன்று மக்கள் மத்தியில் அறநெறியையும், தெய்வ பக்தியையும் பரவச் செய்வது. இதன் பொருட்டு திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகிய நால்வரின் வாழ்க்கை வரலாறு தொடர்புடைய பல தலங்களுக்கு நேரடியாக சென்று அது குறித்த தகவல்களை திரட்டி, புகைப்படங்கள் எடுத்து உங்களுக்கு சிவ விருந்தாக அளிப்பதை ஒரு வேள்வியாகவே செய்துவருகிறோம்.

இதன் மூலம் நாம் கனவிலும் நினைத்துப் பார்க்காத பல இட(தல)ங்களுக்கு செல்லும் வாய்ப்பு கிடைத்து வருகிறது.

மேலும் இந்த எளியோன் செல்லும் இடமெல்லாம் எளியோருக்கு எளியோன் எந்தை ஈசன் தான் முன் சென்று நமக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்து தருகிறான் என்பது தான் ஆச்சரியமே. இல்லையெனில் இதெல்லாம் அத்தனை சுலபம் அல்ல. (சமீபத்திய ஒரத்தநாடு, ஆச்சாள்புரம் பயணமெல்லாம் வாவ்… வாவ்… அத்தனை அற்புதம்!)

சரி… துவங்கிய விஷயத்திற்கு வருகிறோம்.

இன்று சேக்கிழார் பெருமானின் குருபூசைத் திருநாள். இந்த நன்னாளில் சுந்தரமூர்த்தி சுவாமிகளிடம் நம் தலைவர் விளையாடிய ஒரு விளையாட்டை பார்ப்போம்.

அதற்கு முன் ஒரு சிறிய அறிவிப்பு…

========================================================

மன்னார்குடி பயணம்!

நாளை – வியாழன் 09/06/2016 – திருவாரூர்வா மாவட்டம் மன்னார்குடியில் நடைபெறவுள்ள நமது வாசகர் இல்லத் திருமணத்தில் பங்கேற்க இன்றிரவு திருவருள் துணைக்கொண்டு ஒரு நாள் பயணமாக மன்னார்குடி புறப்படுகிறோம். காலை திருமணத்தில் பங்கேற்று மணமக்களை வாழ்த்திவிட்டு பின்னர் மன்னார்குடி ராஜகோபாலசுவாமியை தரிசித்ததுவிட்டு சில பாடல் பெற்ற சில சிவத் தலங்களுக்கும் செல்ல திட்டமிட்டிருக்கிறோம். திருவருளும் குருவருளும் கூடி நின்று அனைத்தையும் நல்லபடியாக நடத்தித்தரவேண்டும். மீண்டும் நாளை இரவே புறப்பட்டு மறுநாள் வெள்ளிக் கிழமை காலை ஈசனருளால் சென்னை திரும்பிவிடுவோம். சிவாய நம!

– ‘ரைட்மந்த்ரா’ சுந்தர்,
ஆசிரியர், Rightmantra.com
M : 9840169215  |  E : editor@rightmantra.com

==========================================================

காக்கவேண்டியவன் கொள்ளையடித்தான்! 

திருவாரூரில் சுந்தரருடன் இனிதே நாட்களை கழித்த சேரமான் பெருமான் தனது நாட்டுக்கு திரும்ப விரும்பினார். அந்த விருப்பத்தை சுந்தரரிடம் தெரிவித்து, அவரும் தன்னுடன் வந்திருந்து தனது அரண்மனையில் சிறிது காலம் தங்கியிருந்து தனது உபசரிப்பை ஏற்றுக்கொள்ளவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

சுந்தரரும் ஒப்புக்கொண்டு நண்பருடன் பயணமானார். செல்லும் வழியில் மிகப் பெரிய அற்புதம் ஒன்றை ஈசனருளால் பதிகம் பாடி நிகழ்த்தினார் சுந்தரர். (அது பற்றி வேறு ஒரு பதிவில் சொல்கிறோம்.)

DSC00656-22
திருமுருகன்பூண்டி திருமுருகநாத சுவாமி திருக்கோவில்

சேரமானும் சுந்தரரும் கொடுங்கோளூரை அடைந்தவுடன் ஊரே திரண்டு நின்று இருவரையும் வரவேற்றது.

(இருவருக்கும் இடையே நிலவிய நட்பை பற்றி விரிவான பதிவு வண்ண சித்திரத்துடன் இடம்பெற்றுள்ளது. Please check : பாக்கியங்களுள் முதன்மையான பாக்கியம், செல்வங்களுள் தலையாய செல்வம்! )

வரலாற்று தகவல் : கொடுங்கோளூர் சேரநாட்டின் தலைநகர் ஆகும். இதற்கு மகோதை என்று வேறு ஒரு பெயரும் உண்டு. இதனருகே தான் ‘திருவஞ்சைக்களம்’ உள்ளது. ‘திருவஞ்சைக்களம்’ பற்றி நமது தளத்தில் ஏற்கனவே பதிவு வெளியாகியுள்ளது.

சுந்தரர் திருவஞ்சைக்களம் சென்று மகாதேவரை தரிசித்து உளம் மகிழ்ந்தார். அரண்மனை திரும்பியவுடன் அவரை தனது சிம்மாசனத்தில் அமரவைத்து, சேரமானும் அவரது துணைவியாரும் அவரது பாதங்களை கழுவி மலர்கள் கொண்டு பூஜித்து மகிழ்ந்தனர். எப்பேற்ப்பட்ட பாக்கியசாலிகள்.

நண்பரின் உபசரிப்பில் தன்னை மறந்து சுந்தரர் இருந்த காலத்தில் ஒரு நாள், இப்படியே தாம் இருப்பது சரியல்ல என்று தீர்மானித்து ஆரூர் புறப்பட ஆயத்தமானார்.

சேரமானுக்கோ நண்பரை பிரிய மனமேயில்லை. “நானும் உங்களுடனே வருகிறேன் ஆரூரரே” என்றார். ஆனால் சுந்தரர் மறுத்துவிட்டார்.

“மன்னா… நீ இங்கிருந்து ஆட்சி பொறுப்பை கவனிப்பதே சரி. குடிமக்களை பரிபாலனம் செய்யவேண்டிய மிகப் பெரிய பொறுப்பு உனக்கு உள்ளது. நீ என்னுடன் வருவது சரியல்ல….” என்றார்.

அரைமனதாக அதற்கு ஒப்புக்கொண்ட சேரமான் நம்பி, தனது பொக்கிஷ அறைக்கு சென்று பொன்னும் பொருளும் மணியும் மூட்டை மூட்டையாக கட்டி சுந்தரரிடம் அளித்து, “அடியார் பணி செய்ய இது உங்களுக்கு உதவக்கூடும். மறுக்காமல் ஏற்றுக்கொள்ளவேண்டும்” என்று கேட்டுக்கொண்டார்.

(அந்த காலகட்டங்களில் திருவாரூரில் சுந்தரரின் இல்லத்தில் தினசரி அதிதி போஜனம் நடைபெற்று வந்தது. எண்ணற்ற அடியார்கள் அதன் மூலம் தங்கள் பசியாறி வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது! இது தொடர்பான பதிவு சித்திரத்துடன் ஏற்கனவே விரிவாக வழங்கப்பட்டுள்ளது. Please check : ஈசன் ஆணையால் குபேரன் குவித்த நெல்மலைகள்!)

சுந்தார் அதை அன்புடன் ஏற்றுக்கொண்டு ஆரூர் புறப்பட்டார். பல காடுகள், மலைகள் இவற்றை தாண்டி சேரநாட்டிலிருந்து சோழ நாட்டுக்கு வந்துகொண்டிருந்தார்.

இத்தனைக் காலம் தன்னை பாடி தன்னிடமே பொருள் பெற்று வந்த தன் அடியவன், வேறு ஒருவரிடம் பொருள் பெற்றது இறைவனுக்கு பிடிக்கவில்லை. (ஹூம்!)

மெய்யடியார் சுந்தரருக்கு மற்றொரு அடியார் அளித்த பொருள் தான் என்றாலும் ஈசன் திருவுள்ளம் வேறாக இருந்தது.

சிவகணங்களை அழைத்து அந்த பொருட்களை உடனே கவர்ந்து வரும் படி கட்டளையிட்டார். இதையடுத்து சிவகணங்கள் வேடர்களாக உருவெடுத்து அவினாசிக்கு தென்கிழக்கே நொய்யல் ஆற்றங்கரை அருகே அடியார் கூட்டத்துடன் வந்துகொண்டிருந்த சுந்தரரை வழிமறித்து, அவர்களை உருட்டி மிரட்டி அனைத்து பொருட்களையும் பறித்துக்கொண்டு மாயமாக மறைந்துபோயினர்.

என்ன நடக்ககிறது ஏது நடக்கிறது என்று சுந்தரர் யூகிக்கும் முன்னே அனைத்து பொருட்களும் சிவகணங்களாக வந்த வேடர்கள் பறித்து சென்றுவிட்டனர்.

இறைவன் திருவுள்ளம் இது தான் என்றால் நான் என்ன செய்யமுடியும் என்று வருந்திய சுந்தரர், திருமுருகன் பூண்டியை அடைந்ததும் அங்கே எழுந்தருளியிருக்கும் ஆவுடைநாயகி சமேத திருமுருகநாதரை தரிசித்து, “ஐயனே… அடியார்க்கு சேரவேண்டிய பொருட்கள் இப்படி கொள்ளையர்களிடம் பறிபோய்விட்டதே… பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டபோது எங்கே போனீர்கள்… காத்தருள வேண்டியது உங்கள் கடமையன்றோ?” என்ற பொருளில்,

”கொடுகு வெஞ்சிலை வடுக வேடுவர் விரவலாமை சொல்லித்
திடுகு மொட்டெனக் குத்திக் கூறை கொண்டாறவைக்குமிடம்
முடுகுநாறிய வடுகர் வாழ்முருகன்பூண்டி மாநகர்வாய்
இடுகு நுண்ணிடை மங்கை தன்னொடும் எத்துக் கிங்கிருந்தீர் எம்பிரானீரே!”

ஒரு பதிகத்தை பாடினார்.

DSC00666

DSC00668-22
இந்த இடத்தில் தான் சிவகணங்கள் சுந்தரரிடம் கொள்ளையடித்த பொருட்களை மறைத்து வைத்தன!

இறைவன் உடனே மகிழ்ந்து, “அன்பா… உமக்கு என் கையால் நாம் தரவிரும்பியே இதை செய்தோம். சேரமான் கொடுத்த பொருட்களை நாம் கவர்ந்து இங்கே தான் பத்திரமாக வைத்திருக்கிறோம்” என்று கூறி திருமுருகன்பூண்டி ஆலயத்திற்குள் சிவகணங்கள் மறைத்து வைத்த கொள்ளை போன பொருட்களையெல்லாம் திரும்பக் கொடுத்தார்.

சேரமான் என்னும் அடியார் கொடுத்த பொருட்கள், தற்போது ஈசனின் பொருட்களாக அருட்பிரசாதமாக சுந்தரருக்கு திரும்ப கிடைத்தன.

இந்த சம்பவம் மட்டும் நடக்கவில்லையெனில் நமக்கு இப்படி ஒரு அற்புதமான பதிகம் கிடைத்திருக்குமா? அதுமட்டுமா, இறைவன் ஒன்றை பறிக்கிறான் என்றால் அதைவிட மதிப்பு மிக்க ஒன்றை தருவான் என்று அர்த்தம்.

DSC00664-22

பூதகணங்கள் பொருட்களை மறைத்து வைத்த இடம் இன்றும் திருமுருகன்பூண்டி ஆலயத்தில் உள்ளது. (புகைப்படங்கள் இணைக்கப்பட்டிருக்கின்றன).

பெரியபுராணத்தில் வரும் யாவும் உண்மையில் அந்தந்த காலத்தில் நடைபெற்றவையே என்பதற்கு இதைவிட பெரிய சாட்சி வேண்டுமா என்ன?

கோவை மாவட்டம் செல்பவர்கள் அவசியம் அவினாசிக்கும், அதன் அருகே உள்ள வேடுபறி நடைபெற்ற திருமுருகன்பூண்டிக்கும் செல்லவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

தங்கள் விலைமதிப்பற்ற பொருட்களை உடைமைகளை பறிகொடுத்தவர்கள் இந்த பதிகத்தை தொடர்ந்து படித்து வர இழந்த பொருள் திரும்ப கிடைக்கும் என்பது உறுதி.

==========================================================

We are running on your contribution alone. Please support us…

We need your support and financial assistance. Click here!

==========================================================

Also check :  

திருமுறை பெற்றுத் தந்த வேலை – உண்மை சம்பவம்!!

பன்னிரு திருமுறைகளின் பெருமையும் அதை மீட்டுத் தந்த நம்பியாண்டார் நம்பியும்!

பிள்ளைகளுக்கு நீங்கள் மறக்காமல் சேர்க்க வேண்டிய ‘சொத்து’ என்ன தெரியுமா?

‘தீயவை மாள, பிணிகள் அகல, எதிர்கால சந்ததியினர் சிறக்க, தளம் சார்பாக ஒரு தடுப்பூசி!’

ஆதரவற்ற குழந்தைகளுடன் கொண்டாடிய திருஞானசம்பந்தர் குரு பூஜை!

எதுக்கு இத்தனை பதிகங்கள்? ஒரே பதிகம் / ஸ்லோகம் அத்தனை பலனையும் தராதா??

திருநாவுக்கரசர் பதிகம் பாடி புரிந்த அற்புதங்கள்!

மனக்கவலைக்கு மருந்தாகும் திருமுறைகள்!

பிள்ளைகளுக்கு  என்ன சொல்லிக் கொடுத்து வளர்க்க வேண்டும்?

ஆலய தரிசனம் என்னும் அருமருந்து!

கோவில்களுக்கு செல்வதன் முழு பலனை அடைய….

பள்ளி மாணவர்களுக்கு இலவச திருமுறை வகுப்பு – சங்கர் அவர்களின் அயராத சிவத்தொண்டு!

‘மாணவர்கள் மனதில் மாணிக்கவாசகர்’ – திவாகரும் அவரது திருவாசகத் தொண்டும்!

நெகிழ்ச்சியும் மகிழ்ச்சியும் கரை புரள, சிவலோகத்தில் சில மணித்துளிகள்…!

======================================================

Something different….

ஜப்திக்கு போன யானை சிவத் தொண்டுக்கு வந்த கதை!

கபாலீஸ்வரருடன் ஒரு பொன்மாலைப் பொழுது!

‘நின்றும் இருந்தும் கிடந்தும்’ செய்த ஒரு சிவபக்தி!

பசுவுக்குப் புல்லும், சமைப்பதற்கு விறகும், ஸ்நானத்திற்குத் தீர்த்தமும் இருந்தால் வேறு என்ன வேண்டும்?

======================================================

[END]

One thought on “அடியாரின் பொருட்களை கொள்ளையடித்த ஈசன்- எங்கு, ஏன் ?

Leave a Reply to Ramesh Cancel reply

Your email address will not be published. Required fields are marked *