Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Thursday, March 28, 2024
Please specify the group
Home > Featured > பிள்ளைகளுக்கு என்ன சொல்லிக் கொடுத்து வளர்க்க வேண்டும்?

பிள்ளைகளுக்கு என்ன சொல்லிக் கொடுத்து வளர்க்க வேண்டும்?

print
ஸ்ரீரங்கத்தை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் ஸ்ரீமான் டிரஸ்ட் (www.srimaantrust.com) என்ற அமைப்பின் சார்பாக மேற்கு மாம்பலத்தில் உள்ள பிரசன்ன வெங்கடேசப்  பெருமாள் திருக்கோவிலில் சென்ற மார்கழி மாதம் முழுக்க தினமும் மாலை திருப்பாவை உபன்யாசம் நடைபெற்றது.

இதில் நெல்லையை அடுத்த ஆழ்வார் திருநகரியை சேர்ந்த இளையவல்லி உ.வெ. ஸ்ரீராமன் சுவாமிகள் கலந்துகொண்டு திருப்பாவை பற்றியும் அதன் சிறப்புக்கள் பற்றியும் பேசினார்கள். அவரது ஏழு வயது பாலகன் ஸ்ரீ சடஜித் எம்பெருமானின் திருக்கல்யாண உற்சவங்களை வாரம் ஒரு கல்யாணம் வீதம் கூறி சொற்பொழிவாற்றினார். ஏழு வயதேயானாலும் எழுபது வயதுக்குரிய சரளமும் நாவன்மையும் அக்குழந்தைக்கு வாய்க்கப் பெற்றிருந்தது கோவிந்தனின் அருள் தான்.

திருப்பாவை உபன்யாசம் தவிர இந்த முப்பது நாளும் ஒவ்வொரு நாள் மாலையும் இறைவனின் தொண்டுக்காக தங்களை அற்பணித்துக்கொண்ட பலவேறு தொண்டர்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு ‘நல் அடியார்’ என்னும் விருதும் பணமுடிப்பும் தந்து ஸ்ரீமான் டிரஸ்ட்டினர் மரியாதை செலுத்தினார்கள். இந்த கைங்கரியத்தில் தம்மை இணைத்துக்கொண்டு பெரிதும் உதவியர் ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் உரிமையாளர் திரு.முரளி.

இந்த வைபவத்துக்கு ‘தொண்டின் ஆராதனை’ என்ற பெயரும் சூட்டியிருந்தார்கள். (இது பற்றிய ஒரு பதிவை ஏற்கனவே நாம் அளித்திருந்தோம்.)

=================================================
‘தொண்டின் ஆராதனை’ – இதுவன்றோ சேவை !
=================================================

இப்படி கௌரவிக்கப்படும் இறையடியார்கள் எவரேனும் ஒரு சிலருக்காவது  நம் தளம் சார்பாக ஒரு நாள் ஏதேனும் கௌரவம் செய்யவேண்டும் என்று நமக்கு தோன்றியது. முதல் நாள் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டதிலிருந்தே இந்த எண்ணம் அரும்பிவிட்டது.

ஸ்ரீமான் டிரஸ்ட் என்னும் மிகப் பெரிய அமைப்பும் கிருஷ்ணா சுவீட்ஸ் என்ற நிறுவனமும் நடத்தி வரும் இந்த வைபவத்தில் எளியோன் நாம் பெரிதாக எதுவும் செய்துவிடமுடியாது என்றாலும் இந்த அரிதினும் அரிய கைங்கரியத்தில் நம் பங்கு நிச்சயம் ஒரு அணுவளவேனும் இருக்கவேண்டும் – அப்படி இருந்தால் அதுவே இந்த தளத்திற்கும் நமக்கும் பிறவிப் பயனாக இருக்கும் என்று விரும்பினோம்.

எனவே ஒரு குறிப்பிட்ட தேதியை தேர்ந்தெடுத்து அன்று கௌரவிக்கப்படும் அடியார்களுக்கும் நம் தளம் சார்பாக ஏதேனும் பரிசளிக்க முடிவு செய்தேன். அடியவர்களுக்கு அவர்களுக்கு உபயோகமாய் இருக்கும் வண்ணம் என்ன வாங்கிக்கொடுப்பதென்று யோசித்து கடைசி வரை ஒன்றுமே புலப்படவில்லை.

கடைசியில் மிகப் பெரிய கடை ஒன்றில் உயர் ரக இனிப்புக்கள் கிப்ட் பாக்ஸ் 2 வாங்கிக்கொண்டு சென்றேன். நிகழ்ச்சி அமைப்பாளர்களிடம் கொடுத்து அடியார்களை இறுதியில் கௌரவிக்கும்போது இந்த எளிய அன்பளிப்பை கொடுக்குமாறு கேட்டுக்கொண்டேன். ஆனால் அவர்களோ சொற்பொழிவு முடிந்து கடைசியில் அடியார்களுக்கு மரியாதை செய்யும்போது நம் கையால் நாமே கொடுக்கலாம் என்றும் கூறிவிட்டார்கள்.

இதற்கிடையே நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களின் அனுமதியுடன் உபன்யாசம் கேட்க வந்திருந்த பக்தர்களுக்கு நம் தளத்தின் சார்பாக நாம் அச்சிட்ட ‘ஆலய தரிசன விதிமுறைகள்’ நோட்டீஸை விநியோகம் செய்தேன். ஒரு சிலர் எக்ஸ்ட்ரா காப்பி கேட்டு வாங்கிக் கொண்டார்கள்.

தொடர்ந்து சொற்பொழிவு நடைபெற்றது. அன்றைய சொற்பொழிவு முடிந்த பின்னர் ‘தொண்டின் ஆராதனை’ நிகழ்ச்சி நடைபெற்றது.

முன்னதாக மைக்கில் பேசிய ஸ்ரீமான் டிரஸ்ட்டின் தன்னார்வலர் திரு.ஸ்ரீவத்சன், அன்றைக்கு கௌரவிக்கப்பட்ட இரு அடியார்களை பற்றி கூறிவிட்டு…. பின்னர்…. “இங்கு நம்மிடம் சுந்தர் என்கிற அன்பர் வந்திருக்கிறார். இவரும் மிகப் பெரிய பகவத் சேவை ஒன்றில் தம்மை ஈடுபடுத்திக்கொண்டு வருகிறார். தனது ஒய்வு நேரத்தில் ரைட்மந்த்ரா.காம் என்கிற இணையதளத்தை நடத்திவருகிறார். அதில் பல ஆன்மீக சுயமுன்னேற்றக் கருத்துக்களை தினசரி பதிவு செய்து வருகிறார். நமது ‘தொண்டின் ஆராதனை’ பற்றியும் அதில் சிறப்பான ஒரு கட்டுரையை சமீபத்தில் எழுதியிருக்கிறார். இவரது சேவை மேன்மேலும் தொடர வேண்டும் என்று ஸ்ரீ பிரசன்ன வெங்கடேசப் பெருமாளை வேண்டிக்கொள்கிறோம். இன்று நாம் கௌரவிக்கும் நல் அடியார்களுக்கு தன் தளம் சார்பில் அவரும் கௌரவிக்க விரும்பி அவர்களுக்கு இனிப்புக்கள் எல்லாம் கூட வாங்கி வந்திருக்கிறார். இனிப்புக்களை தன் கையாலேயே அடியார்களுக்கு இப்போது சுந்தர் அவர்கள் வழங்குவார். அதற்கு முன் உங்களிடையே அவர் சிறிது உரையாற்றுவார்!” என்றார்.

இதை நான் எதிர்பார்க்கவில்லை. அதாவது உரையாற்றுவார் என்று கூறியதை நான் எதிர்பார்க்கவில்லை. இது அந்த வெங்கடேசனின் திருவுள்ளம் போலும் என்று நினைத்து…. மைக் முன் நின்றேன்.

“அனைவருக்கும் வணக்கம். இங்கு மிகப் பெரிய மனிதர்களும் பகவத் சேவைக்கென்றே தம்மை அர்பணித்துக்கொண்ட இறை அடியார்களும் வந்திருக்கீங்க. திடீரென்று பேச சொன்னதால என்ன பேசுறதுன்னு தெரியலே. இருந்தாலும் உங்களிடையே பேச வாய்ப்பு கிடைத்தது நான் செய்த பாக்கியம். இந்த நேரத்தில் எனக்கு தோன்றும் சில கருத்துக்களை பதிவு செய்கிறேன்.

இங்கு கௌரவிக்கப்படும் நல் அடியார்களின் சேவை மிக மிக பெரிது. எதனுடனும் ஒப்பிட முடியாதது. அவங்களுக்கு எம்பெருமானின் திருவருள் என்றைக்கும் கிடைக்கவேண்டும். அவர்களை கௌரவிக்கும் இந்த மிகப் பெரிய நிகழ்வில் என் பங்கும் ஒரு துளி இருக்கவேண்டும் என்று விரும்பி என் சக்திக்கு உட்பட்டு அந்த அடியார்களுக்கு என்னால் இயன்றதை செய்ய வந்திருக்கிறேன். அவர்கள் அதை ஏற்றுக்கொண்டு எம்மை ஆசீர்வதிக்கவேண்டும்.

ஸ்ரீவத்சன் அவர்கள் கூறியது போல, என்னுடைய ஃப்ரீ டயத்தில் ரைட்மந்த்ரா.காம் என்கிற வெப் சைட்டை நடத்தி வருகிறேன். இணைய நேரத்தை பயனுள்ள வகையில் அனைவரும் செலவிட வேண்டும் என்பதே என் நோக்கம்.

கணித மேதை ஸ்ரீனிவாச ராமானுஜன் அவர்களை பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள். கும்பகோணத்தில் ஒரு வைதீக குடும்பத்தில் பிறந்தவர். உலகையே தனது கணித ஆற்றலால் திரும்பி பார்க்க வைத்தவர். அவர் தன் வாழ்நாளில் தனக்கு வேண்டும் என்று கேட்டது என்ன தெரியுமா?

(சற்று இடைவெளி விட்டு…)

“ஒரு வாய் சோறு…. ஆம் பசிக்கு ஒரு வாய் சோறு. அது கூட கிடைக்காது அந்த மேதை வறுமையில் உழன்றார். வறுமையிலேயே வாழ்ந்தார். கணக்குகளை போட்டுப் பார்க்க சிலேட்டுகள் கூட வாங்க வசதியின்றி சாரங்கபாணி கோவில் சுவற்றில் சாக் பீஸில் தனது கணக்குகளை சூத்திரங்களை எழுதி பழகுவார்.

ஸ்ரீவில்லிப்புத்தூர் பால்கோவா தரப்படுகிறது

இன்றைக்கு நம் பிள்ளைகளுக்கு, தம்பிகளுக்கு, தங்கைகளுக்கு கிடைக்கும் வசதிகள் என்னென்ன? வாய்ப்புக்கள் என்னென்ன? சௌகரியங்கள் என்னென்ன? கொஞ்சம் யோசித்து பாருங்கள். கால்குலேட்டர், லேப்டாப் முதல் ஸ்டடியிங் ரூம் வரை அவர்கள் விரும்புவது எல்லாமே அவர்களுக்கு கிடைக்கிறது.

இப்படிப்பட்ட சூழ்நிலையில், தமக்கு கிடைக்கும் இந்த சௌகரியங்களின் மதிப்பை உணர்ந்து அவர்கள் படிக்கவேண்டும். பொறுப்புடன் நடந்துகொள்ளவேண்டும். பசிக்கு ஒரு வாய் சோறு கூட கிடைக்காத இராமானுஜன் வாழ்ந்த நாட்டில் அவர்களுக்கு இத்தனை கிடைக்கிறது என்பதை அவர்களுக்கு அடிக்கடி நீங்கள் சொல்ல வேண்டும்.

இராமானுஜன் போல நாட்டுக்கு பெருமை சேர்க்கவில்லை என்றாலும் பரவாயில்லை, குறைந்த பட்சம் வீட்டுக்காவது நம் பிள்ளைகள் பெருமை சேர்க்க வேண்டும். அதுவே என் விருப்பம். அந்த கோவிந்தனின் விருப்பமும் கூட.

இந்த விஷயத்தில் பெற்றோர்களுக்கும் பொறுப்பு இருக்கிறது.

“நல்லா படிக்கணும்… நல்லா படிச்சி நல்ல வேலைக்கு போகணும்” என்று மட்டும் கூறி உங்கள் பிள்ளைகளை வளர்க்காமல் அவர்களுக்கு MORAL VALUES ஐ சொல்லிக்கொடுத்து வளர்க்கவேண்டும். படிப்பும், உத்தியோகமும், சம்பளமும் மட்டுமே வாழ்க்கையில் முக்கியம் என்று சொல்லிக்கொடுத்து உங்கள் பிள்ளைகளை வளர்த்தால் அவர்கள் கடைசியில் உங்களை கொண்டு சேர்க்கும் இடம் முதியோர் இல்லமாகத் தான் இருக்கும்.

எனவே உங்கள் பிள்ளைகளுக்கு  MORAL & TRUE VALUES ஐ சொல்லிக்கொடுத்து வளர்ப்பது மிக மிக அவசியம். இப்படி வளர்க்கப்படும் குழந்தைகளுக்கு படிப்பும் மற்ற பண்புகளும் தாமே வந்துவிடும். அதற்கு தனியாக மெனக்கெட வேண்டியதில்லை.
வாய்ப்பளித்தமைக்கு அனைவருக்கும் நன்றி.”

“படிப்பும், உத்தியோகமும், சம்பளமும் மட்டுமே வாழ்க்கையில் முக்கியம் என்று சொல்லிக்கொடுத்து உங்கள் பிள்ளைகளை வளர்த்தால் அவர்கள் கடைசியில் உங்களை கொண்டு சேர்க்கும் இடம் முதியோர் இல்லமாகத் தான் இருக்கும்.”

பேசி முடிச்சவுடனே…. ரொம்ப உணர்ச்சி வசப்பட்டுட்டோமோ என்று நினைத்தேன். ஆனால் அனைவரும் நம் உரையை ஆமோதிப்பது போல கைதட்டி தங்கள் ஒப்புதலை வெளிப்படுத்தினார்கள்.  அப்புறம் தான் என் படபடப்பு அடங்கியது.

அடுத்து அடியார்கள் கௌரவிக்கப்பட, நம் தளம் சார்பாக அவர்களுக்கு நமது தளத்தின் காலண்டருடன் ஸ்வீட் பாக்ஸ்களை கொடுத்தோம்.

“என்னால் முடிந்த எளிய பரிசு. உங்கள் வீட்டில் உள்ள குழந்தைகளுடன் இதை தாங்கள் பகிர்ந்துகொள்ளவேண்டும்” என்று கூறினேன். மிகவும் மகிழ்ச்சியுடன் இரண்டு அடியார்களும் பெற்றுக்கொண்டார்கள். அவர்கள் பாதம் பணிந்து ஆசி பெற்றேன்.

சிறுது நேரத்தில் மடப்பள்ளியில் செய்யப்பட்ட அவல் கேசரி பிரசாதம் சூடாக தந்தார்கள். சாப்பிட்டுவிட்டு கிளம்ப எத்தனித்தோம்.

“இந்தாங்க ஸ்ரீவில்லிபுத்தூர்ல இருந்து நம்ம பக்தர் ஒருத்தர் கொண்டு வந்தார். ஆண்டாள் கோவில் பால்கோவா…” என்று கூறி ஒரு பெரிய பொட்டலத்தை என்னிடம் தந்தார்கள்.

ஒரு கணம் மகிழ்ச்சியில் திக்குமுக்காடிப் போனேன்.

அடுத்த சில வினாடிகள் கழித்து வந்திருந்த பக்தர்களில் ஒரு பெரியவர் நம்மை நோக்கி வந்து…. “ரொம்ப பிரமாதமா பேசினீங்க சார். நீங்க சொன்னது நூற்றுக்கு நூறு உண்மை. என் வீட்டுல கூட என் பேரக் குழந்தைங்க கிட்டே இதைத் தான் சொல்லிகிட்டிருக்கேன். உங்க வேப்சைட்டோட அந்த PAMPHLET எனக்கு ஒரு ரெண்டு மூணு கொடுங்க” என்று கேட்டு வாங்கிக்கொண்டார்.

அந்த பால்கோவாவைவிட அவர் அளித்த நற்சான்று இன்னும் இனிமையாக இருந்தது!

(தவிர்க்க இயலாத நிலையில் இந்த பதிவில் என் புகைப்படங்களை தந்திருக்கிறேன். இங்கே கோவிலில் எனக்கு கிடைத்த கௌரவம் தனிப்பட்ட எனக்கு கிடைத்ததல்ல நம் தளத்திற்கு கிடைத்தது என்பதை நினைவில் கொள்ள வேண்டுகிறேன். எல்லாம் பெருமையும் உங்களையே சாரும்!  கருவியாக்கி அழகுபார்த்த இறைவனுக்கு நன்றி!!)

==========================================================
பிள்ளைகளுக்கு MORAL & TRUE VALUES சொல்லிக் கொடுத்து வளர்க்க என்ன செய்யவேண்டும்?

அடுத்த பதிவில்….
==========================================================

உழவாரப்பணி அறிவிப்பு :

நம் தளம் சார்பாக உழவாரப்பணி – (கோவில் மற்றும் கோவில் வளாகத்தை சுத்தம் செய்தல்) வரும்  ஞாயிறு ஏப்ரல் 7, 2013 காலை 7.00 – பகல் 12.00 வரை சென்னையை அடுத்துள்ள திருமழிசை ஜெகந்நாதப்பெருமாள் திருக்கோயிலில் நடைபெறவுள்ளது.

இந்த கைங்கரியத்தில் பங்கு பெற விரும்பும் அன்பர்கள் நம்மை தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இது பற்றிய பதிவு விரைவில் அளிக்கப்படும். நன்றி.

Mobile : 9840169215  | E-mail  : simplesundar@gmail.com

9 thoughts on “பிள்ளைகளுக்கு என்ன சொல்லிக் கொடுத்து வளர்க்க வேண்டும்?

  1. “தொண்டின் ஆராதனை”

    தலைப்புக்கு தகுந்தாற்போல் அனைத்தும் நன்மையாக நடந்துள்ளது.

    அனைவரின் ஆசிர்வாதமும் தங்களுக்கு கிடைத்ததில் மிக்கமகிழ்ச்சி.

    \\குறைந்த பட்சம் வீட்டுக்காவது நம் பிள்ளைகள் பெருமை சேர்க்க வேண்டும். அதுவே என் விருப்பம். அந்த கோவிந்தனின் விருப்பமும் கூட\\

    சிறியவர் பெரியவர் அனைவருக்கும் கேள்வியும் பதிலும் .
    வாழ்த்துக்கள் ஜி .

  2. அன்புள்ள சுந்தர்

    ஆண்டாளின் பால்கோவா பிரசாதம் உங்களுக்கு கிடைத்திருக்கிறது. கூடிய விரைவில் உங்களுக்கு திருமணம் நடைபெறும் என்று என் மனதில் தோன்றுகிறது.
    வாழ்த்துக்கள். வாழ்க உங்கள் தொண்டு.

    நன்றி

  3. “படிப்பும், உத்தியோகமும், சம்பளமும் மட்டுமே வாழ்க்கையில் முக்கியம் என்று சொல்லிக்கொடுத்து உங்கள் பிள்ளைகளை வளர்த்தால் அவர்கள் கடைசியில் உங்களை கொண்டு சேர்க்கும் இடம் முதியோர் இல்லமாகத் தான் இருக்கும்”

    நீங்க பேசுனது ரொம்ப சரியா இருந்தது !!!

    I missed your speech.

    —Uday

  4. சுந்தர்ஜி,

    அருமையான பதிவு. இன்றைய கால கட்டத்தில் ஒவ்வொரு வீட்டிலும் பிள்ளைகளை வளர்த்து ஆளாக்குவது மிகவும் கடினமாக உள்ளது.என்னதான் நாம் எடுத்து சொன்னாலும் சொல்வதை கேட்கும் பிள்ளைகளாக உருவாக்குவதற்கு அதிகபடியான EFFORT பெற்றோர்கள் எடுத்து ஆக வேண்டும். எல்லோர் வீட்டிலும் உங்களை போன்று ஒருவர் இருந்தால் பிரச்சினை இல்லை. மற்றும் உங்கள் புகை படங்கள் பதிவில் இருந்தால் MORAL AND TRUE VALUES முன் உதாரணமாக உங்களை காட்டி பிள்ளைகளை நல வழி படுத்த உங்களை ஒரு ROLL MODEL ஆக இறைவன் கொடுத்து உள்ளார் என்று நினைத்து,நல்ல சகோதரனை கொடுத்த அந்த கடவுளுக்கு நன்றியை தெரிவித்து கொள்கின்றோம்.

  5. நல்ல கருத்தை பெரியவர்கள் முன்னிலையில் பதிவு செய்து
    உள்ளிர்கள். நன்றி.

  6. ஸ்ரீமான் டிரஸ்ட் பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்துகொண்டேன். சரியான இடத்தில சரியான கருத்தை சொல்லி இருக்கிறீர்கள். சகோதரி உஷா குறிப்பிட்டுள்ளதுபோல் நாம் என்னதான் நல்லது சொல்லி வளர்த்தாலும் பிள்ளைகள் நாம் சொல்வதை கேட்பதற்கு நிச்சயம் கூடுதல் முயற்சி தேவைப்படுகிறது. நாம் கூறும் அறிவுரை எப்போது எடுபடும் தெரியுமா ? நாமும் அதுபோல் வாழ்ந்துகாட்டும்போதுதான். This is what they say “Leading by example or Living by example”. பதிவிற்கு நன்றி சுந்தர்.

  7. பாலுட்டும் அன்னை அவள் நடமாடும் தெய்வம்,
    அறிவூட்டும் தந்தை நல வழிகாட்டும் தலைவன். இவர்களுக்குத்தான் இன்று முக்கிய பொறுப்புகள் மிக அதிகமாக உள்ளது. குறிப்பாக தற்போதுள்ள கோடை விடுமுறை நாட்களில் பழங்கால கோயில்கள் சரித்திர புகழ்பெற்ற இடங்களுக்கு குழந்தைகளை அழைத்துச்சென்று அதன் முக்கியதுவத்தை தெரியபடுத்தினால் நல்லது.

    இதை மறந்துவிடக்கூடாது:

    Don’t think your children are not listening to you;
    Be aware, they are watching you

    அன்பே சிவம்

  8. சுந்தர் சார்,
    சொல்லவும், எழுதவும் வார்த்தை இல்லை. மிக்க நன்றி.

  9. MORAL AND TRUE VALUES ALWAYS LEAD THE CHILDREN IN GOOD PATH FOR THEIR LIFE.

    EXCELLANT SIR,

    ராமானுஜன் பட்ட கஷ்டங்கள் நம்ம குழந்தைகளுக்கு கட்டாயம் தெய்ர்யனும்.

    நல்ல உரை சார்,

    கிடைத்த இடத்தில நச்சுனு பேசருதில் நீங்க கில்லாடி சார்,

    வளர்க உங்கள் ஞானம் .

    தங்களின்

    சோ. ரவிச்சந்திரன்.

    கார்வார், கர்நாடகா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *