Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Tuesday, March 19, 2024
Please specify the group
Home > Featured > உழைத்து வாழ வேண்டும்; பிறர் உழைப்பில் வாழ்ந்திடாதே!

உழைத்து வாழ வேண்டும்; பிறர் உழைப்பில் வாழ்ந்திடாதே!

print
டந்த அக்டோபர் மாதம் நவராத்திரியை முன்னிட்டு வாரியாரின் வாரிசுகள் செல்வி.வள்ளி & லோச்சனா அவர்களின் இசை நிகழ்ச்சியை மேற்கு மாம்பலம் காசி விஸ்வநாதர் ஆலயத்தில் நாம் ஏற்பாடு செய்திருந்தது நினைவிருக்கலாம். அந்நிகழ்ச்சிக்கு பக்கவாத்தியமாக வயலின் இசைக்க வந்திருந்தவர் மணலியை சேர்ந்த திரு.குமார் என்பவர். அபாரமாக வயலின் வாசித்த திரு.குமார் (வயது 26) அவர்கள் பார்வையற்றவர் என்பதை அறிந்தபோது ஒரு பக்கம் நெகிழ்ச்சி மறுபக்கம் வியப்பு.

Kumar Violinst 5அந்நிகழ்ச்சியின் முடிவில் அவருக்கு சன்மானம் அளித்து கௌரவம் செய்யும் வாய்ப்பு நமக்கு கிடைத்தது நாம் செய்த பாக்கியம். அதற்கு பிறகு அவரை சந்திக்கும் வாய்ப்பு நமக்கு கிடைக்கவில்லை. அதற்கு சில மாதங்கள் கழித்து ராமாபுரத்தில் ஒரு அம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றபோது, வள்ளி & லோச்சனா சகோதரிகளின் பாடல் கச்சேரி அங்கு நடைபெற்றது. அதற்கு வயலின் வாசிக்க குமார் வந்திருந்தார். அப்போது மீண்டும் அவரை சந்தித்து நம்மை அறிமுகப்படுத்திக்கொண்டு உரையாடிக்கொண்டிருந்தோம்.

அரக்கோணத்தை பூர்வீகமாக கொண்ட திரு.குமாருக்கு பத்தாம் வகுப்பு வரை கண் பார்வை நன்றாக இருந்துள்ளது. ஆனால் அதற்கு பிறகு நிகழ்ந்த விபத்து ஒன்றில் ஒரு கண்ணில் பார்வை போய்விட்டது. பின்னர் காலப்போக்கில் மற்றொரு கண்ணிலும் பார்வை போய்விட்டது.

ஒரு கண்ணில் பார்வை பறிபோனவுடனேயே, என்ன செய்வது ஏது செய்வது என்று கலங்கித் தவித்தவர், சும்மாயிருக்க விரும்பாமல் பல வேலைகளை செய்திருக்கிறார். பன்னாட்டு நிறுவனம் ஒன்றின் கேண்டீனில் ஹவுஸ் கீப்பிங் வேலை பார்த்துள்ளார். எந்த வித கௌரவுமும் பாராமல் உழைத்து உண்ணவேண்டி தட்டு, டம்ளர் கழுவுவது உள்ளிட்ட பணிகளை செய்திருக்கிறார். அப்போது அந்த உணவகத்தின் மேலாளர் இவரை நடத்திய விதம் பிடிக்காமல் போகவே அங்கிருந்து நின்றுவிட்டார்.

வயலின் வாசிக்கும் குமார் அவர்கள் (வலது ஓரம்)
வயலின் வாசிக்கும் குமார் அவர்கள் (வலது ஓரம்)

‘இனி நாம் யாரையும் தேடி போகக்கூடாது. நம்மை தேடி நான்கு பேர் வரவேண்டும்’ என்று முடிவு செய்து, அதற்குரிய வழிமுறைகளை ஆராய்ந்து வந்தார். இந்நிலையில் ஒரு நாள் வானொலியில் வயலின் இசை நிகழ்ச்சி ஒன்றை கேட்க நேர்ந்தது. வயலின் இசை மிகவும் பிடித்துப்போய்விட, வயலின் கற்க முடிவு செய்து, அது பற்றி விசாரித்து அடையாரில் உள்ள அரசு இசைக்கல்லூரியில், மூன்றாண்டு வயலின் டிப்ளோமா படிப்பு சேர்ந்துள்ளார். வயலின் படிப்பை மிகவும் ஆர்வமாக மூன்றாண்டுகளும் கற்றவர் அதை வெற்றிகரமாக முடித்து முதல் மாணவனாக வந்து கோல்ட் மெடல் பெற்றார். பின்னர் மேலும் படித்து, வயலின் இசையில் ஆசிரியப் பயிற்சியும் முடித்து அதற்கும் சான்றிதழ் பெற்றுவிட்டார்.

இசைக் கல்லூரியின் பட்டமளிப்பு விழா நடைபெற்றபோது ஆசிரியப் பயிற்சியின் சான்றிதழை இசைப்புயல் திரு.ஏ.ஆர்.ரஹ்மான் அவர்களின் கைகளினாலேயே பெற்றார்.

Kumar Violinst 1

இசைக்கல்லூரியில் வயலின் படிப்பை முடித்து, கூடவே ஆசிரியப் பயிற்சியையும் முடித்த பிறகு வெற்றிகரமாக வெளி நிகழ்சிகளுக்கு சென்று வயலின் வாசிக்க ஆரம்பித்தார். கோவில் உற்சவங்கள், திருவிழாக்கள், தனியார் இசை நிகழ்சிகள், திருமண வரவேற்பு உள்ளிட்டவைகளில் வயலின் வாசித்து பொருளீட்ட ஆரம்பித்தார்.

இடையே சன் டி.வி. நடத்திய ‘சாம்பியன்’ நிகழ்ச்சியில் இறுதி சுற்று வரை சென்றுவிட்டு திரும்பினார். அதன் பிறகு ‘மஸ்கட் தமிழ் சங்கம்’ நடத்திய நிகழ்ச்சிக்கு வளைகுடா சென்று அங்கு வயலின் திறமையை நிரூபித்திருக்கிறார்.

தான் சொன்னது போல, தற்போது நான்கு பேர் இவரை தேடி வரும் நிலையில் இருக்கிறார் திரு.குமார். ஒய்வு நேரத்தில் வீட்டிலேயே மாணவர்களுக்கு வயலின் கற்றுத் தருகிறார்.

Kumar Violinst 2

நான் வயலின் கற்றுக்கொள்ளப்போவதாக வீட்டில் சொன்னபோது, “எதுக்கு இதுல எல்லாம் டயம் வேஸ்ட் பண்றே?” என்றனர். உறவினர்களோ “இனி உன்னால காலேஜ்லாம் போய் ஏதாவது கத்துக்க முடியுமா? ஏதாவது பெட்டிக் கடை வெச்சித் தர்றோம்… பிழைச்சிக்கோப்பா” என்றனர். அவர்கள் வார்த்தைகள் அனைத்தும் இவரது வைராக்கியத்துக்கு உரமாய்த்தான் அமைந்தனவே தவிர, இவரை துவளச் செய்யவில்லை.

“யாருடைய கையையும் எதிர்பார்க்காமல் என் தேவைகளுக்கு நானே சம்பாதிக்கிறேன். இதுவே எனக்கு போதுமானது…!” என்று சந்தோஷமாக கூறுகிறார் குமார்.

கல்லூரியில் படிக்கும் காலத்தில் தினமும் மாலை வேளையில் ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் கிளைகளில் சென்று இரண்டு மணிநேரம் வயலின் வாசிப்பாராம். கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிறுவனர் முரளி அவர்களை நேரில் சந்தித்து ‘வாய்ப்பு தாருங்கள்’ என்று கேட்டபோது அவர் ஒப்புதலின் பேரில் இந்த அரிய வாய்ப்பு இவருக்கு அதன் கிளைகளில் கிடைத்தது. அதற்காக இவருக்கு இரண்டு மணிநேரத்துக்கு ரூ.75/- கிடைத்ததாம். (ஆறேழு ஆண்டுகளுக்கு முன்பு). அப்போதைய ரூ.75/- இப்போதைய 200 ரூபாய்க்கு சமம். இது தவிர சில சமயம் நல்ல டிப்ஸ் கிடைக்குமாம்.

Kumar Violinst 6

கிருஷ்ணா ஸ்வீட்ஸ் கிளைகளில் வாசிக்க ஆரம்பித்தவருக்கு நாளடைவில், அவர்களின் மிகப் பெரிய உணவகமான ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள ‘ரசம்’ என்னும் ரெஸ்டாரண்ட்டில் தினசரி வாசிக்கும் வாய்ப்பு கிடைத்தது. பின்னர் அதன் மூலம் நகரின் முக்கிய நட்சத்திர ஓட்டல்களான ரெயின்ட்ரீ, தாஜ், சோழா உள்ளிட்ட இடங்களில் உள்ள ரெஸ்டாரண்ட்களில் வாய்ப்பு கிடைத்தது. இதன் மூலம் படிக்கும் காலத்தே பாக்கெட் மணி கிடைத்ததோடு, தான் விரும்பிய இசைக்கருவிகளையும் வாங்க முடிந்தது என்று கூறுகிறார்.

இசைப்புயலுடன்...
இசைப்புயலுடன்…

உங்கள் வாழ்க்கையில் நடைபெற்ற நெகிழ்ச்சியான சம்பவம் ஏதாவது ?

நான் திருமண நிகழ்சிகளுக்கு வாசிக்கும் INSTRUMENTAL ORCHESTRA வைத்திருக்கிறேன். ஒரு முறை ஒருவர் தனது உறவினர் ஒருவரின் இல்லத் திருமணத்தில் எனது குழு வாசிப்பதற்கு எனக்கு அடவான்ஸ் கொடுத்து என்னை புக் செய்தார். திருமணம் நடைபெறுவதற்கு இரண்டு நாள் முன்பு என்னை தொடர்புகொண்டு, “சார்… ப்ரோக்ராம்ல நீங்க வாசிக்க வேண்டாம்னு பொண்ணும் மாப்பிள்ளையும் ஃபீல் பண்றாங்க. நீங்க கீழே உட்கார்ந்துகிட்டு டைரக்ட் பண்ணுங்க. உங்க ட்ரூப் வாசிக்கட்டும். அதுல எந்த மாற்றமும் இல்லே!”ன்னார். (அடப்பாவிகளா… இது எவ்ளோ பெரிய பாவம் தெரியுமா?)

Kumar Violinst 4

“என் திறமையை வெச்சு நான் சம்பாதிக்கத்தான் நான் ட்ரூப் நடத்துறேனே தவிர மத்தவங்களை வெச்சி இல்லே. ஸாரி… நீங்க கான்சல் பண்றதா இருந்தா பண்ணிக்கோங்க!” அப்படின்னு சொல்லிட்டேன்.

இதை அவர் சொன்னபோது எழுந்து நின்று அவரது தன்மானத்துக்கு சல்யூட் அடித்தோம்.

(உங்கள் வீட்டு திருமணம் போன்ற சுபகாரியங்களுக்கு காதை கிழிக்கும், யாருமே சட்டை செய்யாத சினிமா பாடல்களை ஆர்கெஸ்ட்ரா வைப்பதற்கு பதில், இவரைப் போன்றவர்களை ஒப்பந்த செய்து திறமைக்கு ஒரு வாய்ப்பு கொடுங்களேன்!)

அதே நேரம், சன் டி.வி.யில் என் நிகழ்ச்சியை முதல் வாரமே பார்த்த ஒருவர், என் நம்பரை எப்படியோ பெற்றுக்கொண்டு என் வீடு தேடி வந்து, “என் பொண்ணு கல்யாணத்துல நீங்க தான் வாசிக்கிறீங்க”ன்னு சொல்லி, அட்வான்ஸ் கொடுத்துட்டு போனார். அதே மாதிரி போய் அந்த கல்யாணத்துல வாசிச்சேன். அவரை என்னால மறக்க முடியாது. (மணமக்கள் பல்லாண்டு வாழ்க!).

(இந்த இடத்தில நாம் என்ன சொல்லியிருப்போம் என்பதை உங்களுக்கு சொல்லவேண்டுமா என்ன? பகவான் திருவுளப்படி எல்லாம் நடக்கும்!)

 வயலின் குமார் அவர்களுடன் நாம்....
வயலின் குமார் அவர்களுடன் நாம்….

வெல்டன் சார்.. இனி உங்கள் அடுத்த கட்ட லட்சியம் என்ன என்று கேட்டபோது, சினிமா பாடல்களுக்கு தொடர்ந்து 1000 மணிநேரம் வயலின் இசைக்கும் சாதனையை நிகழ்த்தவிருப்பதாக கூறுகிறார். அது தொடர்பான ஏற்பாடுகளில் இறங்கியுள்ளார். ஸ்பான்சர் கிடைப்பதை பொறுத்து அது விரைவில் வடிவம் பெறும்.

அடுத்து அந்த முக்கிய கேள்வியை கேட்டோம். பார்வையே இல்லாமல் பிறப்பது ஒரு வகை. ஆனால், பார்வை இருந்துவிட்டு பின்னர் பறிபோவது தான் மிகப் பெரிய கொடுமை.

IMG-20150515-WA0028
மற்றுமொரு சாதனைப் பயணத்தில்…

10 வகுப்பு வரையில் நல்லபடியாக இருந்து பிறகு பார்வை பறிபோனதை எப்படி எடுத்துக்கொண்டீர்கள் என்று கேட்டபோது, தனக்கு பார்வை பறிபோனது குறித்து ஆரம்பத்தில் தான் வருந்தியதுண்டு எனவும், ஆனால் தற்போது அதுவும் ஒருவகையில் நன்மைக்கே என்று கருதுவதாகவும் கூறுகிறார். பார்வை பறிபோனதால் தான் எனக்கு வயலின் இசை மீது ஆர்வம் திரும்பி, இன்று பல முக்கியப் பிரமுகர்களை அனாயசமாக சந்திக்கும் வாய்ப்பும் வெளிநாடுகளுக்கு செல்லும் வாய்ப்பும் கிடைக்கிறது. இல்லையெனில், எங்கோ யாருக்கோ ஏதோ அடிமை வேலை பார்த்துக்கொண்டிருப்பேன் என்று கூறுகிறார் இந்த தன்னம்பிக்கை சிற்பி.

பொறியின்மை யார்க்கும் பழியன்று அறிவறிந்து
ஆள்வினை இன்மை பழி. (குறள் 618)

உடல் உறுப்பு, செயலற்று இருப்பது குறை ஆகாது. அறிய வேண்டியவதை அறிந்து முயற்சி செய்யாது இருப்பதே குறை.

(தொடர்புக்கு : திரு.மணலி குமார் 9884949174)

=====================================================================

An appeal – Help us in our mission!

Rightmantra.com is a website that focuses on Spirituality, Self-development and True values without any commercial interest. We are running full-time. Give us your hand. Help us to serve you better. Join our ‘Voluntary Subscription’ scheme or Donate us liberally. Ask your near and dear ones to help us in our mission. We are striving to make this world a better place to live. Little Drops of Water Make the Mighty Ocean. If you don’t who else will?

Our A/c Details:

Name : Rightmantra Soul Solutions
A/c No. : 9120 2005 8482 135
Account type : Current Account
Bank : Axis Bank, Poonamallee Branch, Chennai – 600 056.
IFSC Code : UTIB0001182

ரைட்மந்த்ரா தொய்வின்றி தொடர உதவிடுங்கள்!

=====================================================================

Also check :

“கண் போனால் என்ன? கால் போனால் என்ன?” – தேவாரத் திருப்பணியில் அசத்தும் ஞானப்பிரகாசம்!

பார்க்கத் தெரிந்தால் பாதை தெரியும் என உணர்த்தும் தன்னம்பிக்கை சிகரம் கண்ணப்பன்!

ராதாபாய் – விழியிழந்தும் பிறருக்கு வழிகாட்டும் பாரதி கண்ட புதுமைப் பெண்!

விழியில்லையானால் என்ன… இதோ இருக்கிறது வாழும் வழி! – UNSUNG HEROES 4

கடவுள் வரம் தருவதாகச் சொன்னால் என்ன கேட்பாய்? பார்வையற்ற குழந்தை சொன்ன பதில்!

இவரை பார்க்க நேர்ந்ததே புண்ணியம் தான் !

தமிழகத்தின் மிகப் பெரிய கோடீஸ்வரர்களுள் ஒருவரை சந்திப்போமா?

மனித குலம் அவசியம் செய்ய வேண்டிய அறங்கள்!

ஒரு கவர்ச்சி நடிகையின் மறுப்பக்கம்!

ஆதரவற்றவர்களின் ஆலமரம் – இதோ வடலூரில் ஒரு வாழும் வள்ளலார்!

பாரதி கண்ட புதுமைப் பெண் – பாஸிட்டிவ் கௌசல்யா!

ஷேர் ஆட்டோவில் ஒரு சமூகத்தொண்டு!

தினமும் இருவேளை – ஆயிரக்கணக்கில் படையெடுக்கும் கிளிகள் – சென்னையில் ஒரு அதிசயம்! DIRECT PICTORIAL REPORT!

சினிமாவில் மட்டுமே சாத்தியப்பட்டதை நிஜத்திலும் சாதித்து காட்டியுள்ள ஒரு நிஜ ஹீரோ!

இது போன்ற பிரமிக்க வைக்கும் ரோல் மாடல் / சாதனையாளர் சந்திப்பு தொடர்பான பதிவுகளுக்கு :

http://rightmantra.com/?cat=8

=====================================================================

[END]

7 thoughts on “உழைத்து வாழ வேண்டும்; பிறர் உழைப்பில் வாழ்ந்திடாதே!

  1. இவர் மட்டும் நினைத்திருந்தால் எதுக்கு வீண் ரிஸ்க் என்று வீட்டிலேயே இருந்திருக்கலாம். ஆனால் சாதிக்க வேண்டும் என்ற உத்வேகமும், தைரியமும் அவரை வயலின் கலைஞர் ஆக்கியிருக்கிறது, சும்மாவா சொல்லியிருக்கிறார்கள் “WHAT YOU THINK; YOU BECOME ” என்று.

    மென்மேலும் வளர வாழ்த்துகள்.

    “கடமையைச் செய்; பலனை எதிர்பார்”

    விஜய் ஆனந்த்

  2. வாழ்வின் பல விசயங்களை சுட்சுமுகமாய், இந்த பதிவின் மூலம் உணர்ந்து கொண்டோம்.

    வயலின் “குமார் ” சார் அவர்களின் தன்னம்பிக்கை,உழைப்பு,விடாமுயற்சி என ஒவ்வொரு பண்பினையும் நாம் கற்று கொண்டு,வாழ்வில் மேன்மை பெறுவோம்.

    “ஒலியின்” மூலம் “ஒளியை” நோக்கி சாதனை புரிகின்ற குமார் சாருக்கும் வாழ்த்துக்கள்,

    மேலும், குமார் சாரை நம் தள மூலமாய் கௌரவித்ததருக்கும், எங்களுக்கு அறிமுகம் செய்ததற்கும் மிகவும் நன்றி சுந்தர் அண்ணா..

    “மனதி லுறிதி வேண்டும்
    வாக்கினி லேனிமை வேண்டும்;
    நினைவு நல்லது வேண்டும்,
    நெருங்கின பொருள் கைப்பட வேண்டும் ;
    கனவு மெய்பட வேண்டும்,
    கைவசமாவது விரைவில் வேண்டும்
    தனமும் இன்பமும் வேண்டும்
    தரணியிலே பெருமை வேண்டும்;
    கண் திறந்திட வேண்டும்;
    காரியத்தி லுறிதி வேண்டும்;
    பெண் விடுதலை வேண்டும்,
    பெரியகடவுள் காக்க வேண்டும்;
    மண் பயுனுற வேண்டும்,
    வானகமிங்கு தென்பட வேண்டும்;
    உண்மை நின்றிட வேண்டும் ”
    ஓம் ஓம் ஓம் ஓம்

  3. சுந்தர்ஜி

    குமார் அவர்களுக்கு ஒரு ராயல் வணக்கம்.கண் இருந்தும் பயன் இல்லாதவர் நடுவில் குமார் ஒரு இமயம்.அவர் வாழ்வில் இன்னும் பல சாதனைகள் புரிய வாழ்த்துகள்

  4. தன்னம்பிக்கை நாயகன் குமார் அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்

    நமது தளம் மூலமாக அவரைப் பற்றி அறிந்து கொண்டதில் மிக்க மகிழ்ச்சி

    நன்றி
    உமா வெங்கட்

  5. வாழ்க வளமுடன்

    மணலி குமார் அவர்களை வரும் ஆண்டின் ரைட் மந்த்ரா

    சாதனையாளராக முன் மொழிகின்றேன்

    நன்றி

  6. வணக்கம் சுந்தர். வாழ்த்துக்கள் குமார். மென்மேலும் முன்னேற வாழ்த்துக்கள் . குறைகளை பொருட்படுத்தாமல் துணிந்து களத்தில் இறங்குபவர்கள்கு வெற்றி காத்து இருக்கிறது என்று மற்றும் ஒரு முறை இவர் மூலம் நிருபிகபட்டுள்ளது. முயற்சிக்கும் ,தன்மானத்துக்கும் ,வாழ்த்துக்கள். நன்றி.

  7. தன்னம்பிக்கை
    தன் இலக்கு
    தன் உழைப்பு
    தரணி போற்றும்.

    என்று காட்டும் திரு. குமார் அவர்கள் வாழ்க வளர்க !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *