இந்த ஆண்டுக்கான தொடராக என்ன சப்ஜெக்ட்டை தேர்ந்தெடுக்கலாம் என்று யோசித்தபோது ஒரு முடிவுக்கு வரமுடியவில்லை. அனந்த கோடி கல்யாண குணங்களை கொண்ட ஈசனின் பெருமையை ஒரு குறுந்தொடருக்குள் அடக்குவது சவாலான விஷயம். அதுவும் நம்மைப் போன்ற அரைகுறை விஷய ஞானம் உள்ளவர்களுக்கு அது பெருங்கடலில் கைப்பிடி உப்பை சேர்ப்பது போலத் தான்.
‘சிவராத்திரி வேறு நெருங்கிக்கொண்டிருக்கிறது… என்ன செய்யலாம்?’ – யோசித்தபோது குழப்பமே விஞ்சியது.
இதற்கிடையே ஆழியார் அறிவுத் திருக்கோவில் சென்று (பிப்ரவரி 17 – 21) அங்கே தங்கி ஒரு ஐந்து நாள் யோகா, தியான வகுப்பு இவற்றில் கலந்துகொண்டு புத்துணர்வு பெற்று திரும்பவேண்டும் என்று அதற்கான ஏற்பாடுகளில் இறங்கினோம். மனதில் ஏகப்பட்ட குழப்பம்… அவசியம் ஒரு CHANGE தேவைப்பட்டது.
பொள்ளாச்சியில் உள்ள நண்பர் ஒருவரிடம் ஆழியார் பயண விபரத்தை பற்றிய கூறியபோது “சார் நீங்க எதற்கும் கவலைப்படவேண்டாம் அனைத்து ஏற்பாடுகளையும் நான் செய்கிறேன்” என்று கூறி, “டிக்கட் எப்போது புக் செய்யவேண்டும் அதை மட்டும் சொல்லுங்கள்” என்றார்.
17 பிப்ரவரி ஆழியாரில் வகுப்புகள் துவங்குகின்றன என்றாலும் ஒரு நாள் முன்னதாக கோவை சென்று அவிநாசி உள்ளிட்ட சில தலங்களை தரிசித்துவிட்டு பின்னர் ஆழியார் செல்லலாம் என்று கருதி, பிப்ரவரி 15 இரவு சென்னை – கோவைக்கு புக் செய்யுமாறு கேட்டுக்கொண்டோம். நண்பரும் தட்கலில் புக் செய்துவிட்டார்.
15 ஆம் தேதி அலுவலகம் வந்து வழக்கமான பதிவுகள் தயார் செய்து கொண்டிருந்தபோது, மகாமகம் தொடர்பான சில செய்திகளை படிக்க நேர்ந்தது. மகாமகம் நமக்கு புதிதல்ல 1992 இல் நடைபெற்ற மகாமகத்திற்கு (+1 படிக்கும்போது) நாம் சென்னையிலிருந்து தனியாகவே கும்பகோணம் சென்று மகாமக தீர்த்தத்தில் நீராடிவிட்டு வந்தோம். (அப்போது அதாவது 92 ல் நாம் வாங்கிய செய்தித்தாள் இன்னும் இருக்கிறது. ஆனால், எங்கே வைத்திருக்கிறோம் என்று தான் தெரியவில்லை. ஒருவேளை கிடைத்தால் பகிர்கிறோம்.)
அந்த நினைவுகள் மனதில் மீண்டும் அரும்பின. எனவே இந்த முறை மகாமகம் செல்ல ஆவல் ஏற்பட்டது. மகாமகம் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை வரும் விஷேஷமல்லவா? எனவே ஆழியார் பயணத்தை ஒத்திவைத்துவிட்டு மகாமகம் செல்ல தீர்மானித்தோம்.
நமக்காக பொள்ளாச்சி நண்பர் அத்தனை ஏற்பாடுகளையும் செய்து வரும் வேளையில்… தட்கல் டிக்கெட் வேறு புக் செய்திருந்தபடியால் என்ன செய்வதென்று யோசித்தோம். நண்பரிடம் ஃபோன் செய்து பயண ரத்தானதை தெரிவிக்க மனமில்லை. பேசாமல் திட்டமிட்டபடி கோவை சென்று அவிநாசியப்பரையும், திருமுருகநாதரையும் மட்டும் தரிசித்துவிட்டு வந்துவிடுவோமே என்று தோன்றியது.
நாம் அவிநாசி செல்ல மிகவும் ஆசைப்பட்டதன் காரணம் சுந்தரமூர்த்தி ஸ்வாமிகளோடு நெருங்கிய தொடர்புடையது அவிநாசியும் அதனருகே உள்ள திருமுருகன்பூண்டியும்.
அவிநாசி என்னும் திருப்புக்கொளியூரில் முதலை உண்ட பாலகனை சுந்தரர் பதிகம் பாடி மீட்ட அந்த குளம் இன்றும் இருக்கிறது. அந்த குளத்தை தரிசிக்கவேண்டும் என்று மிகவும் ஆசை நமக்கு. சொல்லப்போனால் அந்த இடத்தை பார்க்கவேண்டும், உங்களுக்கும் படம்பிடித்து காட்டவேண்டும் என்கிற ஆவலே அவிநாசி பயணத்தின் தூண்டுகோலாக அமைந்தது.
எனவே திட்டமிட்டபடி கோவை சென்று அவிநாசியப்பரையும் திருமுருகநாதரையும் தரிசித்துவிட்டு அப்படியே தாமரைக்குளத்தையும் (முதலையுண்ட பாலகனை சுந்தரர் மீட்ட இடம்) பார்த்துவிட்டு வருவோம் என்று தீர்மானித்தோம்.
கோவையில் உள்ள நண்பர் தம்பி விஜய் ஆனந்துக்கு நமது ஒரு நாள் பயணத் திட்டத்தை பற்றி தகவல் சொல்லி தயாராக இருக்கச் சொன்னோம். தமக்கிருக்கும் வேறு பணிகளை ஒத்திவைத்துவிட்டு நம்முடன் வருவதாக சொன்னார்.
நேற்று முன்தினம் நாம் அளித்த ‘பொன்மழையில் நனைந்த ஏழை பிரம்மச்சாரி’ பதிவில் நமது ஒரு நாள் கோவை பயணத்தை பற்றி குறிப்பிட்டு அவிநாசி, திருமுருகன்பூண்டி தலங்களை தரிசிக்கவிருப்பதையும் கூறியிருந்தோம்.
அதைப் படித்துவிட்டு நேற்று முன்தினம் மாலை நம்மை தொடர்புகொண்ட திருப்பூரை சேர்ந்த பாலாஜி என்கிற வாசகர் நமது பயணத்திட்டம் பற்றி கேட்டார்.
கோவை சென்று நண்பர் ஜகதீஷ் வீட்டில் தங்கி ஓய்வெடுத்துவிட்டு பின்னர் அவினாசி, திருமுருகன்பூண்டி செல்வதாக பிளான் என்று கூறினோம்.
“எதுக்கு சார் அதுக்கு கோயமுத்தூர் போகணும்? திருப்பூர்ல இறங்கிட்டீங்கன்னா நம்ம வீட்ல தங்கி ரெஸ்ட் எடுத்துட்டு தயாராகி அவிநாசி போகலாமே… இங்கேர்ந்து அவிநாசி, திருமுருகன்பூண்டி ரெண்டுமே ரொம்ப பக்கத்துல…” என்றார்.
நாம் யோசித்தோம்….
இவர் சொல்வதும் வாஸ்தவம் தானே… கோயமுத்தூர் சென்று எதற்கு மறுபடியும் 41 கி.மீ. தூரம் வரவேண்டும்? நமக்கிருக்கும் ஒரே பிரச்னை சற்று ஓய்வெடுத்து குளித்து முடித்து தயாராவது தான். அதையும் தன் வீட்டிலேயே பார்த்துக்கொள்ளலாம் என்று கூறுகிறார்… பரிசீலிப்போம் என்று கருதி, “நீங்கள் கூறுவதும் நல்ல ஐடியா தான் சார்… எதற்கும் புறப்படுவதற்கு முன்பு உங்களிடம் கன்பர்ம் செய்கிறேன்” என்று கூறி நன்றி தெரிவித்தோம்.
விஜய் ஆனந்திடம் அலைபேசியில் தொடர்புகொண்டு விஷயத்தை சொன்ன போது, “நானே சொல்லனும்னு நினைச்சிட்டிருந்தேன்ணா… அவர் சொல்றது தான் சரி.. திருப்பூர்லயே உங்களை இறங்கச் சொல்லலாம்னு நினைச்சேன். ஆனா, உங்களை எங்கே தங்கவைக்கிறதுன்னு தான் யோசிச்சிட்டுருந்தேன்…” என்றார்.
தொடர்ந்து திருப்பூர் வாசகர் பாலாஜி அவர்களுக்கு ஃபோன் செய்து திருப்பூர் வரும் விஷயத்தை கன்பர்ம் செய்தோம்.
தானே காலை ஸ்டேஷன் வந்து நம்மை பிக்கப் செய்துகொள்வதாக கூறி சொன்னபடி அதிகாலை 4.30 க்கெல்லாம் திருப்பூர் ஜங்க்ஷன் வந்து நம்மை பிக்கப் செய்துகொண்டார்.
புதிதாக சேர்த்துள்ள நமது உதவியாளர் சொந்த ஊர் சென்றிருப்பதால் நாம் மட்டும் தான் இந்த முறை பயணம். வேறு யாரும் வரவில்லை.
நண்பர் வீட்டில் நல்ல தூக்கம். சுமார் 7.30 க்கு எழுந்து குளித்து முடித்து தயாரானோம்.
அவரது குடும்பத்தாரிடம் சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்துவிட்டு பின்னர் டிபன் தயாராக, அவர் வீட்டிலேயே டிபன் முடித்துக்கொண்டோம். எம் அம்மாவின் கையில் சாப்பிடுவது போல இருந்தது அவரது அம்மாவின் கைப்பக்குவம். அத்தனை ருசி.
தொடர்ந்து அவரது பைக்கிலேயே அனைத்து பொருட்களையும் எடுத்துக்கொண்டு அவினாசி புறப்பட்டோம்.
நம்முடன் நேரத்தை செலவிடும் பொருட்டு தனது பணிக்கு அரை நாள் விடுமுறை எடுத்துக்கொண்டார் பாலாஜி.
அவிநாசி கோவிலை அடைந்த போது கோவிலின் கோபுரத்தை பார்த்தபோதே நாடி நரம்பு என அத்தனையும் சிலிர்த்தது.
கோபுரத்தை வணங்கிக்கொண்டே உள்ளே சென்றோம்.
கோவிலில் மிதமான கூட்டம் தான். எனவே அற்புதமான தரிசனம். குருக்களிடம் நம்மை அறிமுகப்படுத்திக்கொண்டு நமது பிரார்த்தனை கிளப் பற்றி கூறி, இந்த வார பிரார்த்தனைக்கு கோரிக்கை அனுப்பிய அத்தனை பேருக்கும் பேர், ராசி, நட்சத்திரம் கூறி சங்கல்பம் செய்தோம்.
அர்ச்சனை நடந்துகொண்டிருக்க அவிநாசியப்பரை கண்குளிர பார்த்துக் கொண்டிருந்தோம்.
![அரிய பொருளே... அவிநாசியப்பா!](http://rightmantra.com/wp-content/uploads/2016/02/Avinasiyappar-Karunambikai-1.jpg)
எத்தனையோ சிவாலயங்களை தரிசித்திருக்கிறோம். இங்கே கிடைத்த அந்த ஆத்மானுபவம்… அப்பப்பா… அந்த அனுபவத்தை என்னவென்று சொல்ல? ஏன் என்று தெரியவில்லை நம்மையுமறியாமல் கண்களில் கண்ணீர் ஆறாக பெருகி வழிந்தோடியபடி இருந்தது.
காதலாகி கசிந்துருகி கண்ணீர் மல்கி
ஓதுவார் தமை நல்நெறிக்கு உய்ப்பது
வேதநான் கினும் மெய்பொருள் ஆவது
நாதன் நாமம் நமச்சிவாயமே!
‘காதலாகி கசிந்துருகி கண்ணீர் மல்கி’ என்கிற வார்த்தைகளின் உண்மையான அர்த்தம் அப்போது தான் விளங்கியது.
சும்மா எதையோ செண்டிமெண்டாக எழுதவேண்டும் என்பதற்காக சொல்லவில்லை… உண்மையில் உள்ளம் உருகி கண்களில் கண்ணீர் வழிந்த தருணம் அது.
சிவதரிசனம் சாதாரண விஷயம் அல்ல. மனிதப் பிறவியின் மிகப் பெரும் பாக்கியங்களுள் ஒன்று சிவதரிசனம். தேவர்களே நினைத்தால் கூட சிவபெருமானை எளிதில் பார்க்க முடியாது. பேறுகளில் எல்லாம் பெரும் பேறு சிவபக்தி.
எனவே தான்,
மனித்தப் பிறவியும் வேண்டுவதே, இந்த மாநிலத்தே!
என்று மனிதப் பிறவியின் ஒரே பயனை பட்டியலிடுகிறார் அப்பர் பெருமான்.
எந்த பிறவியில் அடியேனுக்கு அவிநாசியப்பருடன் என்ன தொடர்பு இருந்தது என்று தெரியாது. நம் ஊனிலும் உதிரத்திலும் கலந்திட்ட கோவில் இது என்று மட்டும் புரிந்தது. (ஒருவேளை இந்த கோவிலில் திரிந்துகொண்டிருந்த மூஷிகமாக இருந்திருப்போமோ என்னவோ!)
நாம் எப்படிப்பட்டதொரு மன பாரத்தொடு இந்த ஆலய தரிசனத்தை மேற்கொண்டிருப்போம் என்பதை அவிநாசியப்பன் நன்கு அறிவான். நமது குழப்பத்திற்கு விடைசொல்வது போலிருந்தது அவன் தந்த அந்த தரிசனம்.
“ஏனப்பா… இதைவிட என்ன வேண்டும் உனக்கு?” என்று ஈசன் நம்மை கேட்பது போலிருந்தது பரபரப்பானதொரு கோவிலில் நமக்கு கிடைத்த அந்த அற்புத தரிசனம். (நமக்கோ நம்முடன் வந்த பாலாஜி அவர்களுக்கோ இங்கே யாரையும் முன் பின் தெரியாது என்பது கவனிக்கவேண்டிய ஒரு விஷயம்.)
ஒரு சில நிமிடங்கள் தான் என்றாலும் ஆண்டுக்கணக்கில் சிவதரிசனத்தில் லயித்திருந்த ஒரு ஆத்மானுபவத்தை உணர்ந்தோம்.
“இத்தனைக் காலம் உன்னை வந்து தரிசிக்காமல் போனேனே என் ஐயனே… தறிகெட்டு திரிந்துகொண்டிருந்த இந்த எளியோனை கொஞ்சம் முன்பே தடுதாட்கொண்டிருக்கக் கூடாதா? உன் பெருமைகளை இன்னும் கொஞ்சம் இந்நேரம் எழுதியிருப்பேனே….”
“என் ஜீவன் உள்ளவரை உன் பெருமையை எழுதிக்கொண்டே இருக்கவேண்டும் ஐயனே… உன் கடன் அடியேனை தாங்குதல். என் கடன் பணி செய்து கிடப்பதே!” அவிநாசியப்பரிடம் பிரார்த்தித்துக்கொண்டோம். நம்மை அவன் தாங்கினால் தானே நாம் கவலையின்றி பணி செய்ய முடியும்? அதனால் தான் அப்பர் பெருமான் முதலில் ‘நீ என்னை தாங்கவேண்டும்’ பின்னர் ‘என் கடன் பணி செய்து கிடப்பது’ என்று பாடினார்.
இனி அடிக்கடி அவிநாசியப்பரை தரிசிப்போம் என்பது மட்டும் உறுதி. விதியையே ரீவைண்ட் செய்த கோவில் அல்லவா?
குருக்கள் பிரசாதத்தை கொண்டு வந்து கொடுத்தபோது, கண்களில் ஒற்றி பெற்றுக்கொண்டோம்.
![இந்த வார பிரார்த்தனையாளர்களின் பெயர் பட்டியலுடன் அவிநாசியப்பர் மஹா பிரசாதம்!](http://rightmantra.com/wp-content/uploads/2016/02/Avinasi-Prasadham.jpg)
அம்பாள் சன்னதியைவிட்டு வெளியே வந்தோம். மேலே அறுபத்து மூவர் சன்னதியில் ஆலய ஊழியர் ஒருவர் சிரத்தையோடு பெருக்கிக் கொண்டிருந்தார். அவரிடம் ஒரு சிறு தொகையை கொடுத்தோம்.
மலர்ச்சியுடன் பெற்றுக்கொண்டார்.
“உங்கள் சிரத்தைக்கு நன்றி. இதே போன்று பணி செய்து அவிநாசியப்பரை நன்றாக பார்த்துக்கொள்ளுங்கள். கோவிலில் யாரையும் அசுத்தம் செய்ய விடாதீர்கள்” என்றோம்.
“அதை சரியா தான் செஞ்சு போட்டு வர்றேனுங்க” என்றார் கோயமுத்தூர் பாஷையில்.
நன்றி கூறி அவ்விடத்தை விட்டு அகன்றோம்.
பிரதட்சிணம் வரும்போது, கோவிலின் அழகை ஒவ்வொரு அங்குலமாக ரசித்தபடி, நுகர்ந்தபடி நடந்தோம். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்ட ஒரு கோவில், இன்னும் அதன் பழமையோடு காட்சியளிப்பது உண்மையில் பெரிய அதிசயம் தான்.
திருவாரூர் பயணத்தின்போது நாம் தரிசித்த கோயில்வெண்ணி இதே போன்று பழமை மாறாமல் காட்சியளித்தாலும் அது அளவிற் சிறிய கோவில். ஆனால், அவிநாசியப்பர் கோவிலோ மிகப் பெரிய கோவில். இத்தனை பெரிய கோவில் பழைமை மாறாமல் இந்த கலியுகத்தின் கேடுகளுக்கு ஈடுகொடுத்து நிற்கிறதென்றால் அது என்ன சாதாரண விஷயமா?
அவசியம் அனைவரும் வாழ்நாளில் ஒருமுறை அல்ல பலமுறை தரிசிக்கவேண்டிய கோவில் அவிநாசியப்பர் கோவில்.
சில கோவில்களுக்கு உள்ளே நுழையும்போதே ஒரு வித வைப்ரேஷனை உணரமுடியும். அவிநாசியில் நாம் அதை நன்றாக உணர்ந்தோம். (* ஒரு இடத்திற்கு நாம் செல்லும்போது நமது மனதில் ஏற்படும் நல்லதொரு மாற்றத்தையே வைப்ரேஷன் என்கிறோம்.)
அவிநாசியே இனி ‘வாழ்க்கை கோவில்’!
அது என்ன வாழ்க்கை கோவில்?
அது பற்றி வேறொரு பதிவில் விளக்குகிறோம்.
அவிநாசியின் மற்றுமொரு சிறப்பு சுவாமிக்கு வலதுபுறம் அம்பாள் இருக்கும் ஒரே கோவில் அவிநாசியப்பர் கோவில் மட்டுமே.
அம்பாள் பெயர் என்ன தெரியுமா?
கருணாம்பிகை!
எத்தனை அழகான பெயர்…!
இந்த அம்பாளின் அழகை காணவாவது நீங்கள் அவிநாசி செல்லவேண்டும்.
காசிக்கு நிகரான அவிநாசியின் பெருமைகளை சொல்வதென்றால் ஓரிரு பதிவுகளில் சொல்ல முடியுமா?
‘அவிநாசி அற்புதங்கள்’ என்கிற குறுந்தொடரை வரவிருக்கும் மகா சிவராத்திரியை முன்னிட்டு துவக்குவது என்று முடிவு செய்திருக்கிறோம்.
**********************
நேற்றைய அவிநாசி பயணத்தின்போதும், தரிசனத்தின் போதும் நமது உதவியாளர் இல்லாத குறையை திரு.பாலாஜி போக்கினார் என்றால் மிகையாகாது. கொஞ்சம் கூட டிக்னிட்டி பார்க்காமல் நமக்கு வலது கை போல பல விதங்களில் உதவியாக இருந்தார். இவர் இல்லாவிட்டால் மிகவும் திண்டாடியிருப்போம். (ஆலய தரிசனத்திற்கு போனது தனிப்பட்ட ரைட்மந்த்ரா சுந்தர் அல்ல. ஒரு பத்திரிகை அலுவலகம்!)
எல்லாம் அவிநாசியப்பரின் கருணை. ‘நாம் பின் செல்ல தான் முன் சென்று அனைத்து ஏற்பாடுகளையும் செய்தான் எந்தை ஈசன்’ என்று நாம் முந்தைய பதிவில் கூறியிருந்தது நினைவிருக்கிறதா?
யோசித்துப் பாருங்கள்… திரு.பாலாஜி அவர்கள் முன் தினம் மாலை நமது பதிவை பார்த்துவிட்டு தான் விஷயத்தை தெரிந்துகொண்டார். அதுவும் கோவை பயணம் பற்றிய செய்தியை சும்மா ஒரு தகவலுக்காக பதிவில் கடைசியில் சேர்த்திருந்தோம். அதற்கு முக்கியத்துவம் கூட கொடுக்கவில்லை.
பதிவை படித்தபோது அதை தெரிந்துகொண்டு அதற்கு பிறகு தான் அவர் சீனுக்குள்ளேயே வருகிறார். முழுமையான விருந்தோம்பலுடன் நம்மை ஒரு குழந்தையை கவனித்துகொள்வது போல கவனித்துக்கொண்டார் திரு.பாலாஜி.
திரு.பாலாஜி நம்மை தொடர்புகொண்டதும், கோவை செல்லவிருந்த நாம் திருப்பூரில் இறங்கியதும், அவரது வீட்டில் தங்கியதும், நமது ஆலய தரிசனத்தில் அவர் நம்முடன் வந்து பலவிதங்களில் நமக்கு உதவியாக இருந்ததும், அனைத்தும் பக்காவாக யாரோ பிளான் போட்டு கொடுத்து அதன் படி நடந்தது போல் அமைந்தது.
அவிநாசியப்பன் போட்ட பிளான் அல்லவா? இம்மி பிசகாமல் நடந்தது. அதுவும் வாழ்க்கையில் மறக்க முடியாத அளவிற்கு.
நேற்று மதியம் 3.35க்கு திருப்பூரில் இருந்து கோவை எக்ஸ்பிரஸ்ஸில் சென்னைக்கு புறப்பட்டு இரவு 11.30 அளவில் வீடு திரும்பியாயிற்று.
ஆக ஒரு மாதம் திட்டமிட்டு நடைபெறவேண்டிய ஒரு பயணம், அரைநாளில் மிக மிக சிறப்பாக நடந்தது என்றால் அது மனிதன் நினைத்தால் முடியுமா?
**********************
அவிநாசி குறித்து பிரமிக்க வைக்கும் பல தகவல்களையும், சுந்தரர் முதலையுண்ட பாலகனை மீட்ட இடத்தையும் நேரடியாக தரிசிப்பதோடு இன்னும் பல விசேஷ தகவல்களையும் பார்ப்போம்.
“திருவாரூரில் பிறக்க முக்தி. அருணாசலத்தை நினைக்க முக்தி. சிதம்பரத்தைத் தரிசிக்க முக்தி. காசியில் இறக்க முக்தி. ஆனால் அப்பன் அவிநாசியைப் பற்றி வாயாரப் பேசினாலே முக்தி” என்று சொல்வார்கள்.
என்ன நம்ப முடியவில்லையா?
அடுத்த அத்தியாயத்தில் அவிநாசியப்பர் தொடர்புடைய ஒரு அசத்தலான கதையுடன் சந்திக்கிறோம்….!
இதுவோ அவிநாசி..? இவ்வாறே நள்ளா(று)
இதுவோ திருப்புக்கொளியூர்..? இதுவோதான்
மூவாண்டு சென்று முதலை வாய்ப்பிள்ளை தனை
வாவென அழைத்த மண்? -பழம் பாடல்
நாளை முதல்….
“அவிநாசி அற்புதங்கள் – சிவாராத்திரி ஸ்பெஷல்” குறுந்தொடர் இனிதே தொடங்குகிறது!
========================================================
Support Rightmantra to sustain!
Rightmantra.com is a website that focuses on Spirituality, Motivation, Self-development and True values without any commercial interest. Join our ‘Voluntary Subscription’ scheme to run this website without break. Donate us liberally. Your contribution really makes a big difference.
Our A/c Details:
Name : Rightmantra Soul Solutions | A/c No. : 9120 2005 8482 135 | Account type : Current Account | Bank : Axis Bank, Poonamallee, Chennai – 600 056.
IFSC Code : UTIB0001182
ரைட்மந்த்ரா தொய்வின்றி தொடர உதவிடுங்கள்!
========================================================
Also check :
சென்ற ஆண்டு அளித்த சிவராத்திரி ஸ்பெஷல் தொடர் மற்றும் இதற்கு முன்பு நாம் அளித்த சிவராத்திரி சிறப்பு பதிவுகளுக்கு….
கண்ணைக் கட்டிக்கொண்டு துவங்கிய ஒரு சிவராத்திரி பயணம்! – சிவராத்திரி ஸ்பெஷல் FINAL
மனக்கோயில் கொண்ட மாணிக்கத்துடன் ஒரு மாலை! – சிவராத்திரி ஸ்பெஷல் 6
சிவபெருமானின் அனந்த கல்யாண குணங்கள் – சிவராத்திரி ஸ்பெஷல் 5
சிவராத்திரி – செய்யவேண்டியதும், செய்யக்கூடாததும்! சிவராத்திரி ஸ்பெஷல் 4
இறைவனிடம் கேட்கக்கூடாத கேள்வி – சிவராத்திரி ஸ்பெஷல் 3
கல் நந்தி புல் சாப்பிட்டு தண்ணீரும் குடித்த உண்மை சம்பவம் – சிவராத்திரி ஸ்பெஷல் 1
========================================================
Also check :
சிறுவாபுரி முருகன் கோவிலை பார்த்துக்கொள்ளும் ‘பரமசிவன்’!
நீ என்னப்பன் அல்லவா என் தாயும் அல்லவா….
சிவனின் பெருமையை பேசாத நாளெல்லாம் பிறவா நாளே!
திருமுறை பெற்றுத் தந்த வேலை – உண்மை சம்பவம்!!
சிவபெருமான் கண்ணாடியில் ரசித்த தனதுருவம்… பிறகு நடந்தது என்ன?
பக்தன் கேட்க, பெருமாள் கொடுத்த சிவனின் பிரசாதம் – உண்மை சம்பவம்!
ஹரியின் துணையோடு ஹரன் நடத்திய திருவிளையாடல் – நெகிழ வைக்கும் உண்மை சம்பவம்!
இதை ஓதின் எல்லா பதிகங்களையும் ஓதிய பேறு உண்டாகும்!
ஐந்து மாதங்களாக வராத சம்பளத்தை ஒரே நாளில் பெற்றுத் தந்த பதிகம்!
தேடி வந்த மூன்று லட்சம் – படிக்க படிக்க பணத்தை வரவழைக்கும் பதிகம் – உண்மை சம்பவம்!
மாற்றுக் குறைந்த பொற்காசு மூலம் வாழ்வு செழிக்க ஒரு பாடலை தந்த இறைவன்!
கலியுகத்திலும் காலனிடமிருந்து காப்பாற்றும் ஒரு அதிசய மந்திரம் – உண்மை சம்பவம்!
அன்னையின் அருளால் விளைந்த ‘ஆனந்தக் கடல்’ – உண்மை சம்பவம்!
பக்தன் கேட்க, பெருமாள் கொடுத்த சிவனின் பிரசாதம் – உண்மை சம்பவம்!
========================================================
[END]