Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Thursday, April 25, 2024
Please specify the group
Home > Featured > தேர்வை புறக்கணித்த சிறுவன் சேதுராமன் அருட்கவி ஸாதுராம் ஆன கதை – யாமிருக்க பயமேன் ? (9)

தேர்வை புறக்கணித்த சிறுவன் சேதுராமன் அருட்கவி ஸாதுராம் ஆன கதை – யாமிருக்க பயமேன் ? (9)

print
முருகப் பெருமானின் ‘வேல்’ மீது அருணகிரிநாதரால் பாடப்பெற்றது ‘வேல்வகுப்பு’. அதில் உள்ள வரிகளை முன்னும் பின்னும் மாற்றி போட்டு ‘வேல்மாறல்’ என்னும் கவசத்தை உருவாக்கியது வள்ளிமலை சச்சிதானந்த ஸ்வாமிகள். அதற்கென்றே பிரத்யேக யந்திரத்தை வடிவமைத்து அதன் புகழை பரப்புவதற்கென்றே வேல்மாறல் மன்றத்தை துவக்கியது ஸாதுராம் ஸ்வாமிகள். வள்ளிமலை சச்சிதானந்த சுவாமிகளின் நேரடி சீடர் இவர். ஸ்வாமிகள் கடந்த 2000 வது ஆண்டு முக்தியடைந்துவிட்டார். அவர் தம் வரலாற்றை தற்போது பார்ப்போம்.

Sadhuram Swamigalகடலை கமண்டலத்துக்குள் அடக்குவது போன்றது தான் ஸாதுராம் போன்ற மெய்ஞானிகளின் வாழ்க்கையை ஓரிரு பதிவில் அடக்குவது என்பது. இப்போதைக்கு பிள்ளையார் சுழி போட்டு சுவாமிகளின் திருவரலாற்றை துவக்கிவிடுகிறோம். பதிவு வளர வளர பல விஷயங்கள் சேர்க்கப்படும்.

கருவிலேயே திருவருள் பெற்று பிறந்த அருஞ்செல்வர் ஸாதுராம் ஸ்வாமிகள். எத்தனையோ முற்பிறவிகளில் ஈட்டிய பெரும் புண்ணியம் காரணமாக இவர் ஒரு அருட்கவியாக திகழ்ந்தார். வள்ளிமலை சச்சிதானந்த சுவாமிகளிடம் தீட்சை பெற்றவர். மகா பெரியவரை அடிக்கடி தரிசிக்கும் பாக்கியம் பெற்றவர். அவரின் வாழ்க்கை வரலாற்றை விவரிக்கும் இந்த தொடரில் நீங்கள் ரமணர், சேஷாத்ரி ஸ்வாமிகள், ஞானனந்த கிரி ஸ்வாமிகள், மகா பெரியவா இப்படி பலரைப் பற்றியும் தெரிந்துகொள்ளலாம். இவர்கள் அனைவருடனும் ஸாதுராம் ஸ்வாமிகளுக்கு தொடர்பிருக்கிறது. (ஸாதுராம் ஸ்வாமிகள் கடந்த 2000 மாவது ஆண்டு திருச்சமாதி எய்தினார்).

இன்றும் திருப்புகழ், முருகப் பெருமான், வள்ளிமலை ஸ்வாமிகள்,  சம்பந்தப்பட்ட பழைய நூல்களை நீங்கள் எடுத்துப் புரட்டினால் அருட்கவி சாதுராம் அவர்களின் பாடல் நிச்சயம் அதில் இடபெற்றிருக்கும்.

சேதுராமன் ஸாதுராம் ஆனது எப்படி?

1952 ஆம் ஆண்டில் சேதுராமன், எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு  எழுத வேண்டும்.   பரீட்சைக்குப் பணம் கட்ட வீட்டில் பதினைந்து ரூபாய் தந்தார்கள்.  ஆனால், அவன் அதைக் கட்டவில்லை.  ஒரு ரூபாயை மட்டும் எடுத்துக் கொண்டு மீதி பதினான்கு ரூபாயைப் பெட்டியில் வைத்துவிட்டான்.  ஒரு சீட்டில், “எனக்கு இந்தப் படிப்பு படிக்க இஷ்டமில்லை.  இதற்காக பதினைந்து ரூபாயைச் செலவு செய்ய வேண்டாம்” என்று எழுதி அத்துடன் பெட்டியில் வைத்து விட்டு யாரிடமும் கூறாமல் காஞ்சீபுரத்திற்கு சென்று விட்டான்.

பின்னர், அங்கிருந்து எங்கெல்லாமோ சென்று, மகாபலிபுரத்தில இருந்த ஒரு சத்திரத்தில் படுத்து உற்ங்கும்போது வள்ளிமலை சுவாமிகள் கனவில் தோன்றினார்.  “சேது, நீ வீட்டை விட்டு வந்தது நன்மையும் தீமையும் கலந்தது.  நடமாடும் தெய்வங்களான தாய் தந்தையரைத் துயரத்திற்கு உள்ளாக்கிப் பிரிந்து வந்தது தவறு. நீ நாளைக்குத் திருப்போரூருக்கு போ.  கந்தசாமி ஆலயத்தில் ஒரு கிழவரைக் காண்பாய்.  அவர் உனக்கு நல்வழி காட்டுவார்” என்று கூறி மறைந்தார்.

குருவின் கட்டளையை மீற முடியுமா? பொழுது விடிந்ததும் திருப்போரூருக்குப் புறப்பட்டுச் சென்றான்.  திருக்குளத்தில் நீராடிவிட்டு, வேட்டியை உலர்த்தி உடுத்திக்கொண்டு, திருநீறு பூசி ஆலய தரிசனத்திற்குச் சென்றான்.  கண்கண்ட தெய்வாமாம் முருகனை வழிபட்டான்.  அரை மணிக்கு மேல் சந்நிதியில் தங்கியிருந்தான்.  வள்ளிமலை சுவாமிகள் கூறுயது போல், அங்கு ஒரு கிழவரையும் காணவில்லை.  ஏமாற்றத்துடன் திரும்பினான்.

 திருப்போரூர் அருள்மிகு கந்தசாமி கோவில்

திருப்போரூர் அருள்மிகு கந்தசாமி கோவில்

கோபுர வாசலை நெருங்கியிருப்பான் சேதுராமன்.  பின்னால் யாரோ நடந்து வரும் ஒலி கேட்டது.  திரும்பிப் பார்த்தான்.  என்ன ஆச்சர்யம்!

குருநாதர் கூறியது போலவே அங்கு ஒரு கிழவர் தென்பட்டார்! அவருக்கு 80 வயது இருக்கும்.  மெலிந்த உருவம்.  நல்ல உயரம்.  நீண்ட வெந்தாடி அவர் மார்பில் புரண்டது.  நெற்றியில் திருநீறு துலங்கியது.  வெண்மை நிறத்தில் ஓர் அங்கி அணிந்திருந்தார்.  அந்த உருவத்தைப் பார்த்ததும் மெய்ம்மறந்து நின்றுவிட்டான் சேதுராமன்.  சிறுவனின் உடல் சற்று நடுங்கியது.  அவனுக்குப் பேச நா எழவில்லை.

கிழவர் அவனை அன்புடன் அருகில் அழைத்தார்.  ஆதரவோடு முதுகில் தடவிக் கொடுத்தார்.  “உன் பையை என்னிடம் கொடு” என்றார்.  பதில் பேசாமல் தன் கைப்பையை அவரிடம் கொடுத்தான் சேது.  கிழவர் தன் கையில் மடித்து வைத்திருந்த ஒரு காகிதத்தை அந்தப் பையில் போட்டுவிட்டு, அதைச் சிறுவனிடமே திருப்பிக் கொடுத்தார்.

வள்ளிமலை சச்சிதானந்த ஸ்வாமிகள்
வள்ளிமலை சச்சிதானந்த ஸ்வாமிகள்

பின்னர், சேதுவைக் கோயிலுக்கு அழைத்துச் சென்று அவன் பார்க்காத இடங்களையெல்லாம் சுற்றிக் காட்டினார். திருப்போரூரிலுள்ள உணவு விடுதியொன்றில் சேதுவுக்கு ஆகாரம் வாங்கிக் கொடுத்துவிட்டு, அவனைத் திருக்கழுக்குன்றத்துக்கு அழைத்துச் சென்றார் அந்தக் கிழவர்.  மலைக்கோயிலில் தரிசனம் செய்து வைத்தார்.  அடுத்து இருவரும் பஸ் ஏறிச் செங்கல்பட்டுக்கு வந்தனர்.  அங்கிருந்து மாலை இரயிலில் சென்னைக்குப் புறப்பட்டனர்.

எழும்புர் இரயில் நிலையித்தில் வந்து இறங்கி, இருவரும் சிந்தாதிரிப்பேட்டை மங்கபதி நாயக்கன் தெருவை அடைந்தனர்.  தமது கையிலிருந்த மீதிச் சில்லரையைச் சேதுவின் பையில் போட்டார் கிழவர்.  “வேண்டாம் தாத்தா” என்று அவன் எவ்வளவு தடுத்தும் அவர் கேட்கவில்லை.   “சேது, உன் வீடு எங்கே இருக்கிறது?” என்று கேட்டார் கிழவர்.  “அடுத்த தெருவில் இருக்கு தாத்தா” என்று கூறிக் கிழவரை வேதகிரி மேஸ்திரி தெருவிற்கு அழைத்து வந்து, தன் வீட்டைக் காட்டினான் சேது.  கிழவர் வெளியே நின்று கொண்டு, “உள்ளே போ” என்றார்.  தன் பெற்றோரும் பிறரும் அந்த அதிசயத் தாத்தாவைக் காண வேண்டும் என்ற கொள்ளை ஆசை சேதுவுக்கு.  “தாத்தா நீங்களும் எங்க வீட்டுக்கு வாங்கோ” என்று அழைத்தான்.  தாத்தா மறுத்தார்.  சிறுவன் பிடிவாதம் பிடித்தான்.  அவர் மசியவில்லை.  “நீ போய் உன் பையை வைத்துவிட்டு வரப் போகிறாயா, இல்லையா!” என்று சற்று உரிமையோடு கடிந்து கொண்டார் கிழவர்.  சேது துள்ளிக் குதித்துக் கொண்டு வீட்டுக்குள் ஓடினான்.

காணாமற்போன பிள்ளையைக் கண்டதும் தர்மாம்பாளின் பெற்ற வயிற்றில் பால் வார்த்தது போலாயிற்று.  “சேது, வந்துட்டாயாடா கண்ணே?  எங்கடா போயிருந்தே? எப்படிடா வந்தே?”  என்று கேட்டாள் உணர்ச்சிவசப் பட்டவளாய்.

“அம்மா, எல்லாம் அப்புறம் சொல்றேன். சீக்கிரம் வாசலுக்கு வாயேன் .  என்னைக் கொண்டு வந்து விட்ட தாத்தாவைப் பாரும்மா.  அவரை நீ உள்ளே கூப்பிட்டேன்.  நான் கூப்பிட்டா வரமாட்டேங்கிறார்.”  என்று உற்சாகத்துடன் கூறிக் கொண்டே வாசல்பக்கம் ஓடி வந்தான் சேது.  வீட்டிலிருந்தவர்கள் அவன் பின்னால் ஓடிவந்து தெருவில் எட்டிப் பார்த்தார்கள்.  ஆனால், அங்குக் கிழவரைக் காணவில்லை.    “தாத்தா, தாத்தா, என்னை விட்டுட்டு எங்கே தாத்தா போயிட்டே” என்று கதறிக் கொண்டே நடுத்தெருவில் ஓடினான்.  தாயும் சகோதரனும் பின்னால் ஓடிச்சென்று அவனைக் கட்டிப்பிடித்து வலுக்கட்டாயமாக வீட்டுக்குள் அழைத்து வந்தனர்.

இரவு சாப்பிடாமலேயே உறங்கிவிட்டான் சேதுராமன். கனவில் ஸ்ரீவள்ளிமலை சுவாமிகள் தோன்றினார்.  “உன்னுடன் வேறு யார் வருவார்கள்? நான்தான் வந்தேன்.  உன்னை உன் வீட்டில் கொண்டு போய்ச் சேர்க்கலாம் என்று வந்தால், எல்லோருக்கும் தரிசனம் கொடுக்கச் சொல்லுகிறாயே?  உன் பொருட்டுத்தான் வந்தேன்.  அதனால்தான் ஒருவர் கண்ணிலும் படாமல் சென்று விட்டேன்.  பைக்குள் நான் வைத்த காகிதத்தைப் பிரித்துப் பார்.  நாளை மாலை, குத்து விளக்கின் ஐந்து முகங்களையும் ஏற்றி வைத்து, வீட்டில் உள்ளவர்களெல்லாம் காகிதத்தில் உள்ள பாடல்களைக் கும்மியடித்துப் பாடுங்கள்.  உங்களுக்கு எல்லாவித நன்மையும் உண்டாகும்” என்று குருநாதர் கூறி மறைந்து விட்டார்.

மறுநாள் ஆவலுடன் அந்தக் காகிதத்தை எடுத்துப் பார்த்தான் சேதுராமன்.  அதில் நூற்றெட்டு ‘ஹர ஹரோ ஹரா’ நாமாவளிகள் எழுதியிருக்கக் கண்டான். திருமுருகனின் பெருமைப் பேசும் அந்தக் கும்மிப் பாடல்கள் தன் கையெழுத்திலேயே இருந்த அதிசயத்தையும் கண்டு வியந்தான்.  அந்த நாமாவளியை வீட்டில் உள்ளோர் அனைவரும் பக்தி சிரத்தையுடன் கும்மி அடித்துப் பாடி மகிழ்ந்தனர்.

இந்தப் பாடல்களே சாதாரணமான சேதுராமன் ‘அருட்கவி’ சேதுராமன் ஆவதற்கு மூல காரணமாக அமைந்தன.  இந்த கும்மி கிடைத்த சில நாட்களுக்குள் சேதுராமன் ஆசு கவிகள் பாடத் துவங்கினான். அருளமுதம் வற்றாமல் பொங்கியது.

திருப்போரூர் முருகனே பாடித் தந்துள்ள ‘திருமுருகன் ஹர ஹரோ  ஹராக் கும்மி’  என்னும் அந்த பாடலை பாடினால் முருகப் பெருமானின் அருள் பரிபூரணமாக கிட்டும். மேலும் 108 போற்றிகளை நினைவுபடுத்தும் வகையில் 108 வரிகளில் அந்தக் கும்மி பாடல் அமைந்திருப்பது சிறப்பு. அதை பாராயணம் செய்வதும் பெண்கள் கும்மியடித்து பாடுவதும் மிகுந்த நற்பலன்களை தரும். பாடப்படும் இடத்தில சர்வ மங்களங்களையும் தரும். பதிவின் நீளம் கருதி இங்கு தரப்படவில்லை. தனிப்பதிவாக அது தரப்படும்.

(‘சென்னை திருக்கோயில்கள் திரு அருட்புகழ்’ என்னும் நூலில் உள்ள சுவாமிகளின் வரலாற்றை நாம் கேட்டுக்கொண்டபடி தட்டச்சு செய்து தந்து நமக்கு உதவியவர் முகலிவாக்கத்தை சேர்ந்த நண்பர் கே.எஸ்.வெங்கட் அவர்கள். ‘ஹர ஹரோ ஹரா கும்மி’ பாடலை தட்டச்சு செய்து தந்து உதவியவர் வாசகி உமா அவர்கள். இருவருக்கும் நம் நன்றி!)

=============================================================

வேல்மாறல் நூலை பெற்றோர் & பெற விரும்புவோர் கவனத்திற்கு….

நடைமுறை மற்றும் சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக ‘வேல்மாறல்’ மன்றம் மூலம் அந்நூலைப் பெறமுடியாதவர்கள், கிராமப்புறங்களில் வசிப்பவர்கள், முதியவர்கள் போன்றோர் சிரமப்படவேண்டாம். நம்மை தொடர்புகொள்ளவும். நாம் அனுப்பிவைக்கிறோம்.

நம்மிடம் ஏதேனும் இது போல ஒரு விஷயத்திற்கு தொடர்புகொண்டால், அந்த நோக்கம் நிறைவேறும் வரை தவறாக நினைக்காமல் திரும்ப திரும்ப நமக்கு மின்னஞ்சல் மூலம் நினைவூட்டிக்கொண்டே இருக்கவும். நாம் ஃபாலோ செய்து முடித்து தருவதற்கு உதவியாக இருக்கும். புரிதலுக்கு நன்றி.

Sundar | www.rightmantra.com | Mobile : 9840169215 | E-mail : simplesundar@gmail.com

=============================================================
உழவாரப்பணி அறிவிப்பு !

நமது அடுத்த உழவாரப்பணி வரும் ஞாயிறு ஜனவரி 18 ஆம் தேதி சென்னை போரூர் ஈஸ்வரன் கோவில் தெருவில் அமைந்துள்ள பாலமுருகன் திருக்கோவிலில்  நடைபெறும். நேரம் காலை 7.00 – மதியம் 12.00. மதிய உணவு ஏற்பாடு செய்யப்படும். போரூர் ஜங்கஷனில் இறங்கி அங்கிருந்து கோவிலுக்கு நடந்து வந்துவிடலாம். கலந்துகொள்ள விருப்பம் உள்ள அன்பர்கள் நம்மை தொடர்புகொள்ளவும். நன்றி.  விரிவான பதிவு விரைவில்…

=============================================================

அடுத்து…

* யார் இந்த திருப்புகழ் சகோதரர்கள் ?

* மகா பெரியவாவும் திரு.ஸாதுராம் சுவாமிகளும்…

* மகா பெரியவா சூட்டிய ‘திருப்புகழ் சகோதரர்கள்’ என்னும் நாமம்

அடுத்து வரும் பாகங்களில் விரிவாக!

TO BE CONTINUED…

=============================================================

Also check :

நம் வாசகியின் மகனுக்கு வேல்மாறலால் கிடைத்த வேலை! – யாமிருக்க பயமேன் ? (Part 8)

‘வேல்மாறல் எனும் வரப்பிரசாதம்’ – உண்மை சம்பவம் – (Part 7)

‘வேல்மாறல்’ யந்திர தரிசனம் — யாமிருக்க பயமேன்? (Part 6)

நம் வாசகர் வீட்டில் ‘வேல்மாறல்’ செய்த அதிசயம் — யாமிருக்க பயமேன்? (Part 5)

கைமேல் பலனைத் தந்த ‘வேல்மாறல்’ பாராயணம் — யாமிருக்க பயமேன்? (Part 4)

இழந்த வாழ்க்கையை மீட்டுத் தந்த ‘வேல்மாறல்’ — யாமிருக்க பயமேன்? (Part 3)

வினைகளை தகர்க்கும் ‘வேல்மாறல்’ எனும் மஹாமந்த்ரம் — யாமிருக்க பயமேன்? (Part 2)

வேல் தீர்க்காத வினை உண்டா? உண்மை சம்பவம்! — யாமிருக்க பயமேன்? (Part 1)

உன்னை தொழுவதொன்றே இங்கு யான் பெற்ற இன்பம்!

முருகனின் வியர்வையும் பின்னர் பெருகிய கருணையும் – உண்மை சம்பவம்!

சிறுவனின் ஏளனம் – வாரியார் செய்தது என்ன? ஆடி கிருத்திகை சிறப்பு பதிவு!

முருகப் பெருமானை நேரில் கண்ட பாக்கியசாலிகள் – வைகாசி விசாகம் – SPL 2

ஒரு பக்தன் எப்படி இருக்க வேண்டும்?

கருவறையில் மட்டுமா இருக்கிறான் கந்தன் ? தமிழ்ப் புத்தாண்டு ஆலய தரிசனம் PART 2

ஏற்பது இங்கே இகழ்ச்சியல்ல!

நல்லதை நினைத்தால் போதும்… நடத்திக்கொள்ள ஆண்டவன் தயார்!

கலையழகு மிக்க குன்றத்தூர் சேக்கிழார் மணிமண்டபம்… தமிழ்ப் புத்தாண்டு ஆலய தரிசனம் PART 1

தேவாரம், திருப்புகழ் மணம் பரப்பும் வாரியாரின் வாரிசுகள் – ஒரு சந்திப்பு!

காங்கேயநல்லூர் வாரியார் சுவாமிகள் ஞானத் திருவளாகம் – ஒரு திவ்ய தரிசனம்!

ஏழை திருமணத்துக்கு உதவிய வள்ளல் & வாரியாரின் வாழ்வும் வாக்கும் – தமிழ் புத்தாண்டு SPL & வீடியோ!

காங்கேயநல்லூருக்கு பதில் காக்களூரில் கிடைத்த வாரியார் தரிசனம்!

=============================================================

[END]

4 thoughts on “தேர்வை புறக்கணித்த சிறுவன் சேதுராமன் அருட்கவி ஸாதுராம் ஆன கதை – யாமிருக்க பயமேன் ? (9)

  1. சாதுராம் மகானின் கதையை படிக்க படிக்க பரவசமாக உள்ளது.

    //அவரின் வாழ்க்கை வரலாற்றை விவரிக்கும் இந்த தொடரில் நீங்கள் ரமணர், சேஷாத்ரி ஸ்வாமிகள், ஞானனந்த கிரி ஸ்வாமிகள், மகா பெரியவா இப்படி பலரைப் பற்றியும் தெரிந்துகொள்ளலாம். இவர்கள் அனைவருடனும் ஸாதுராம் ஸ்வாமிகளுக்கு தொடர்பிருக்கிறது. // சாது ராம் ஸ்வாமிகள் மற்ற மகாங்களுடன் உள்ள தொடர்பை பதிவாக எதிர்பார்கிறேன்.

    திருபோரூர் கோயில் குளம் தண்ணீருடன் பார்பதற்கு கொள்ளை அழகு. சாதுராம் ஸ்வாமிகள் கதையை படிக்கும் பொழுது ரமண மகரிஷியின் கதை ஞாபகத்திற்கு வருகிறது., அவரும் சிறு வயதில் தனது படிப்பை துறந்து வீட்டை விட்டு வெளியேறிய நிகழ்ச்சி நினைவுக்கு வருகிறது.

    ஹர ஹரோ ஹரா கும்மி’ பாடலை தட்டச்சு செய்தது நான் செய்த பாக்கியம் இந்த சான்ஸ் கொடுத்ததற்காக தங்களுக்கு நான் நன்றி தெரிவித்து கொள்கிறேன்

    நன்றி
    உமா வெங்கட்

  2. அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் .

  3. சமீபத்தில் இந்த தளத்தை படிக்க தொடங்கினேன். வேல் மாறல் பற்றிய தகவல்களுக்கு நன்றிகள், இந்த பதிவை படித்த பின் youtube லிங்க் தேடியதில் வேல் மாறல் லிங்க் கிடைத்தது. அருமையான தளத்தை உருவக்கியுள்ளமைக்கு நன்றிகள் பல!

  4. சாதுராம் சுவாமிகளின் வரலாற்ற மேலும் அறிந்துகொள்ள ஆவலாக இருக்கின்றோம். உங்களுடன் ஆக்கத்தில் பங்கேற்ற சகோதரர், சகோதரிக்கும் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். அனைவருக்கும் தமிழர் திருநாள் வாழ்த்துகள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *