Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Friday, March 29, 2024
Please specify the group
Home > Featured > திருநின்றவூரின் திருவாய் நிற்கும் ஏரிகாத்த ராமர் – ஸ்ரீராமநவமி ஸ்பெஷல் !

திருநின்றவூரின் திருவாய் நிற்கும் ஏரிகாத்த ராமர் – ஸ்ரீராமநவமி ஸ்பெஷல் !

print
வருகிற ஏப்ரல் 15 – ஸ்ரீராமநவமி. அதையொட்டி இந்த விசேஷ பதிவு அளிக்கப்படுகிறது.

வேதநெறியை காக்கவும் தர்மத்தை நிலைநிறுத்தவும் இதுவரை ஸ்ரீமந் நாராயணன் எடுத்துள்ள ஒன்பது அவதாரங்களில் முதன்மையானது ராமாவதாரம் தான். காரணம் இறைவன் ராமாவதாரம் முழுவதிலுமே தனது இறைசக்தியை பிரயோகிக்காமல் மானிடனாகவே வாழ்ந்து, மானிடன் படும் துன்பங்களை தானும் பட்டு தர்மம் காக்க போராடினார்.

Ramar 33

அகலிகை சாபவிமோசனம், ஜடாயு மோட்சம் உள்ளிட்ட சில சம்பவங்களில் அவரையுமறியாமல் அவரது ‘நாராயணத்துவம்’ வெளிப்பட்டுவிட்டது என்பதே உண்மை.

இன்றைக்கு ராமர் பாலம் உண்மையா பொய்யா என்றெல்லாம் ஏட்டுக்கல்வியை வைத்து ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கின்றனர். உண்மை என்னவெனில் ஸ்ரீராமர் தான் திரேதா யுகத்தில் வாழ்ந்த காலகட்டங்களில் நம் பாரதத்தின் பல பகுதிகளுக்கு சென்றிருக்கிறார். வாலிவதம், அகலிகை மோட்சம் முதலிய ராமாயணத்தில் வரும் சம்பவங்கள் அனைத்தும் உண்மையில் நடந்தவையே. அந்த இடங்கள் இன்றும் உள்ளன.

தனது வனவாச காலகட்டத்தில் எங்கெல்லாம் ராமர் சென்றாரோ அங்கெல்லாம் பிற்பாடு ராமருக்கு ஆலயங்கள் தோன்றின. அவற்றில் பல திவ்யதேசங்களும் அடக்கம். நம் மண்ணோடு மக்களோடு கலந்து உறவாடிய தெய்வம் ஸ்ரீராமர் என்றால் மிகையாகாது.

ஸ்ரீ விஸ்வாமித்திரருடன் ராமர் மேற்கொண்ட யாத்திரைகள் மலைக்க வைக்கும் ஒன்றாகும்.

RAMAR map 2

ஸ்ரீ ராமர் மேற்கொண்ட 4 யாத்திரைகள் பிரதானமாகக் குறிப்பிடப்படுகின்றன. அவை அயோத்தியாவில் இருந்து விஸ்வாமித்திரருடன் யாகத்திற்கென சென்றது, பின் மிதிலா நகரம் சென்று சீதையினை மணமுடித்தது, அயோத்தியா திரும்பியது மற்றும் 14 ஆண்டுகள் வனவாசம் இருந்தவையாகும். அப்போது அவர் விஜயம் செய்த இடங்கள் குறித்து வால்மீகி குறிப்பிட்டுள்ளார். அதன் வரைபடம் இது. (நண்பர் சாய்குமார் அவர்கள் வெளியிட்டுள்ள ‘சரணடைந்தோரை ரட்சிக்கும் ராமர் தலங்கள்’ என்னும் நூலில் இந்த வரைபடம் இடம்பெற்றுள்ளது!)

திருநின்றவூர் – ஏரி காத்த ராமர்!

தென் தமிழ்நாட்டில் உள்ள குடந்தை, திருச்சி, மதுரை போன்ற கோவில் நகரங்களுக்கு சற்றும் சளைத்ததல்ல தொண்டை நாட்டில் அமைந்திருக்கும் நம் தருமமிகு சென்னை. சொல்லப்போனால் மற்ற நகரங்களுக்கு இல்லாத சிறப்பு சென்னைக்கு உண்டு. நாம் ஏற்கனவே சொன்னது போல பல பாடல் பெற்ற தலங்களும் திவ்ய தேசங்களும் சென்னையில் உள்ளன. அவற்றில் முக்கியமான ஒன்று சென்னையிலிருந்து சுமார் 30 கி.மீ. தொலைவில் உள்ள திருநின்றவூர்.

‘திரு’நின்றவூர் – எத்தனை அழகான பெயர் பார்த்தீர்களா?

IMG_01492

திருநின்றவூரில் 108 வைஷ்ணவ திவ்யதேசங்களில் ஒன்றான பக்தவத்சலப் பெருமாள் திருக்கோவிலும், இருதயாலீஸ்வரர் என்னும் சைவத் திருத்தலமும் அருகருகே அமைந்திருக்கின்றன. பூசலார் நாயனார் அவதாரத் தலம் இது. இறைவன் பெயர் ‘மனக்கோவில் கொண்ட மாணிக்கம்’. ஆஹா… என்ன அருமையான அழகான பெயர்…!

இங்குள்ள பக்தவத்சலப் பெருமாள் கோவிலுக்கு பின்புறம் சாலைக்கு அந்தப்புறம் ராமபிரான் ஏரிக்கரையில் கோவில் கொண்டுள்ளார். இதுவும் பக்தவத்ஸலர் கோவிலைச் சேர்ந்த தனிக் கோவிலாகும். திருநின்றவூர் ஏரி பிரம்மாண்டமானதாக அக்கரையே தெரியாத அளவுக்குக் பெரிய ஏரியாகும்.

DSC04646-copy2

(தமிழ்நாட்டின் ஏழாவது பெரிய ஏரி இது என்று கூறப்படுகிறது. சுற்று வட்டாரத்தில் சுமார் 16 கிராமங்களுக்கு நீர்த்தேவையை பாசனத் தேவையை இந்த ஏரி தான் பூர்த்தி செய்கிறது. நீண்ட வருடங்களுக்கு பிறகு சமீபத்திய டிசம்பர் மாத மழையில் இந்த ஏரி நிரம்பியது.)

டிசம்பர் மாத மழையை போன்று ஏறக்குறைய சுமார் நூறு நூற்றைம்பது ஆண்டுகளுக்கு முன்பு ஒரு முறை கடும் மழை பொழிந்து திருநின்றவூரே வெள்ளத்தில் மிதந்தது. அப்போது இந்த ஏரியின் கரை உடைந்து ஊரையே அழிக்கும் நிலை ஏற்பட்டது.

DSC04649

DSC04650அப்போது திருநின்றவூரில் கேம்ப் செய்திருந்த இருந்த ஆங்கிலேய ஆளுனர் மதுராந்தகம் ஏரியை ராமபிரான் காத்து அருளிய வரலாற்றினைக் இவ்வூர் மக்கள் மூலம் கேள்விப்பட்டு, இங்கேயும் ராமபிரானை வேண்ட, அனைவரும் அதிசயிக்கும் வண்ணம் ஒரே இரவில் பொங்கி எழுந்த நீர் உள்வாங்கி கரைக்குள் அடங்கிற்று என்று இவ்வூர் ஸ்தல புராணம் கூறுகின்றது. எல்லையற்ற கடலினையே அடக்கி இலங்கை சென்று சீதாபிராட்டியைச் சிறைமீட்ட ராமபிரானுக்கு இந்த ஏரியைக் கரைக்குள் அடைத்து மக்களை காத்தல் என்ன கடினமான தொழிலா என்ன?

வாக்களித்தபடி ஊர்மக்கள் ஒத்துழைக்க அந்த ஆங்கிலேய கவர்னரும் நிலம் ஒதுக்கி ஆணை பிறப்பித்தது ராமபிரானுக்குத் தனிக் கோவிலை நிர்மாணித்துக் கொடுத்தாராம். இப்படி பிற மதத்தினரையும் அரவணைக்கும் கருணை வள்ளல் கடல் வண்ணனான ராமரல்லால் வேறெவர் உள்ளனர்? இந்தக் கோவிலும் மதுராந்தகம் அது முதல் போன்றே ”ஏரிகாத்த ராமர் கோவில்” என்று அழைக்கப்பட்டது. இந்த ஏரிக்கு வருணபுஷ்கரிணி என்று பெயர்.

DSC04651w

DSC04652

இந்தக் கோவிலுக்கு என்ன சிறப்பு என்றால் இங்கிருக்கும் ராமர் போன்று உயரமான மூலவர் எங்கும் கிடையாது. அஜானுபாகுவான தோற்றத்தில் எம்பிரான் கோதண்டராமராக கம்பீரமாக நெடிது உயர்ந்து 6 அடிக்கும் மேலான உயரத்தில் காட்சி அளிக்கிறார். அவருக்கு வலப்புறம் அன்னை சீதாதேவியும், இடப்புறம் லக்ஷ்மணனும் உள்ளனர்.

DSC04648

வேறு எங்கும் இல்லாத வகையில் இங்கே லக்ஷ்மணர், அம்பு ஏந்திய கைகளுடன் காட்சி தருவது தனித்துவம். தன் தமயன் எதிரிகளை சம்ஹரிக்க வில்லேந்தும்போது உடனடியாக அம்பைத் தருவதற்கு வசதியாக தன் கைகளில் அம்பு ஏந்தி காத்திருக்கும் கோலம்.

உற்சவ மூர்த்திகள் ஸ்ரீ பக்தவத்ஸலப் பெருமாள் ஸந்நிதியில் வைக்கப்பட்டுள்ளன. நின்ற வண்ணத்தில் இந்த ராமபிரான் தைலத் திருகாப்புத் திருமேனியாகத் திகழ்வது விசேஷமாக உள்ளது. பெரும்பாலும் தைலகாப்பு திருமேனி கிடந்த வண்ணருக்கே.

காரார் கடலை அடைத்திட்டு இலங்கை புக்கு
ஓராதான் பொன்முடி ஒன்பதோடு ஒன்றையும்
நேரா அவன் தம்பிக்கே நீள் அரசு ஈந்த
ஆராவமுதனைப் பாடிப்பற ! அயோத்தியர்
வேந்தனைப்பாடிப் பற !

என்ற பெரியாழ்வாரின் ”உந்திப் பறத்தல்” பாசுரமே நினைவுக்கு வருகிறது.

DSC04780

இந்த கோவிலின் வரலாறோடு தொடர்புடை வேறொரு சுவாரஸ்யமான தகவலும் உண்டு. ஸ்ரீமத் ராமானுஜரின் சகோதரி கோதாம்பிகா. இவர் அனந்த நாராயண தீட்சிதர் என்பவரை திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு பிறந்த குழந்தை தான் முதலியாண்டான். காலம் கி.பி.1033 – 1136.

அதாவது ஸ்ரீமத் ராமானுஜரின் மருமகன் ஸ்ரீ முதலியாண்டான் அவர்கள். வைணவ சம்பிரதாயத்தில் முக்கியமான இடம் இந்த முதலியாண்டானுக்கு உண்டு. இவரது திருஅவதாரதிற்கு பின்னே ஏரி காத்த ராமருக்கு தொடர்பு உண்டு.

DSC04800

எப்படி தெரியுமா?

அனந்த நாராயண தீக்ஷிதர் – கோதாம்பிகா தம்பதிகளுக்கு நீண்ட நாள் புத்திர பாக்கியம் இல்லை. இருவரும் ஸ்ரீனிவாசனை வேண்டிக்கொள்ள திருமலைக்கு பாதயாத்திரை புறப்பட்டார்கள். வழியிலே திருநின்றவூர் என்கிற இந்த தலம் வரும்போது, பக்தவத்சலப் பெருமாளையும் என்னைப் பெற்ற தாயாரையும் தரிசித்தனர். பின்னர் நேரமாகிவிட்டபடியால் மேற்கொண்டு பயணத்தை அடுத்த நாள் தொடரலாம் என்று இந்த ஏரி காத்த ராமர் சன்னதியில் இரவைக் கழித்தார்கள். அன்று இரவு ராமபிரான் கனவில் தோன்றி, தனது அம்சமாக அவர்களுக்கு ஒரு புத்திரன் பிறப்பான் என்றும் தம்பதியர் திருவேங்கடம் செல்ல தேவையில்லை என்றும் அருளினார்.

DSC04786

ராமர் அளித்த வரத்தின்படியே கோதாம்பிகா விரைவில் கருவுற்றார். அடுத்த சில மாதங்களில் ஒரு அழகான ஆண் குழந்தை பிறந்தது. அக்குழந்தைக்கு அவர்கள் ‘தாசரதி’ என்றே பெயரிட்டனர். (ஸ்ரீராமபிரானது வேறு பெயர் தான் இந்த ‘தாசரதி’. மகாபாரதத்திலும் ராமாயணத்திலும் இப்பெயர் பரவலாக ராமரை குறிப்பிட பயன்படுத்தப்பட்டுள்ளது!)

உடையவர் ஸ்ரீ ராமானுஜருக்கு பல சீடர்கள் இருந்தார்கள். அவர்களுக்கு ‘முதலி’ என்றொரு பெயரும் உண்டு. இந்த முதலிகளுக்கெல்லாம் முதன்மையானவராகவும், அவர்களை எல்லாம் ஆண்டபடியாலும், அவருக்கு ‘முதலி ஆண்டான்’ என்ற திருநாமம் ஏற்பட்டது. முதலி ஆண்டான், ஸ்ரீ ராமானுஜருக்கு மிகவும் வேண்டப்பட்டவரகவும், அவரின் பாதுகையாகவே கருதப்பட்டார்.

DSC047942

ராமர் சன்னதிக்கு நேரெதிரே அனுமனின் சன்னதி இருக்கிறது. அது தவிர ராமர் சன்னதிக்கு இடது புறம் சுமார் மூன்றடி உயரத்தில் ஒரு ஆஞ்சநேயர் உண்டு. இவர் காலடியில் லங்கிணி என்னும் அரக்கி இருக்கிறாள். சீதா தேவியை தேடி இலங்கை புக முயன்றபோது அனுமனால் வதம் செய்யப்பட்டவள் இந்த அரக்கி.

ராமருக்கு வலது பக்கத்தில் காளிங்க நர்த்தன கிருஷ்ணன்.

பொதுவாகவே பக்தவத்சலப் பெருமாளை சேவிப்பவர்கள் ஆலயத்திற்கு பின்னால் இப்படி ஒரு அழகான ராமர் எழுந்தருளியிருப்பதை தெரியாமலே போய்விடுகிறார்கள். திருநின்றவூர் பக்தவத்சலப் பெருமாளுக்கு இணையாக இந்த ஏரி காக்கும் ராமரும் வழிபடப்பட வேண்டியவர். எனவே அடுத்த முறை திருநின்றவூர் சென்றால் இருதயாலீஸ்வரரையும், பக்தவத்சலப் பெருமாளையும் கூடவே இந்த ராமரையும் தரிசியுங்கள்.

சென்னை-திருவள்ளூர் மின்சார ரயில் பாதையில் திருநின்றவூர் ரயில் நிலையத்தில் இறங்கிக்கொண்டு, தெற்கு நோக்கிச் சென்றால் கோயிலை அடையலாம். சுமார் 2 கி.மீ. தொலைவு என்பதால் ரயில் நிலையத்தின் அருகிலிருந்தே ஆட்டோ அல்லது ஷேர் ஆட்டோ மூலம் செல்லலாம். சென்னையிலிருந்து சாலை வழியாக வருவோர் ஆவடியைக் கடந்து சுமார் 8 கி.மீ. தொலைவில் திருநின்றவூர் ஊருக்கு வந்து வடக்கே திரும்பிப் பயணித்தால் விரைவில் கோயிலைக் காணலாம். அது தவிர திருமழிசை வழியாக திருநின்றவூர் சென்று அங்கிருந்து ஜப்பான் லைட்டிங் கம்பெனி அருகே திரும்பி இரண்டு கி.மீ. சென்றால் திருநின்றவூரை அடையலாம்.

இந்த ஏரிகாத்த ராமனை மழையில்லாத நாட்களில் வேண்டினால் மழை பெய்யும். அதிகமழை பெய்து துன்பங்கள் ஏற்படும் போது, அவை பகலவனைக் கண்ட பனிபோல் விலகி ஓடும் என்பது இவ்வாலயம் உணர்த்தும் உண்மை.

அதுமட்டுமா ராம நாமமும் ராம தரிசனமும் என்னென்ன தரும் என்று கம்பர் குறிப்பிடுகிறார் பாருங்கள்…

‘நன்மையும் செல்வமும் நாளும் நல்குமே
தின்மையும பாவமும் சிதைந்து தேயுமே
ஜன்மமும் மரணமும் இன்றித் தீருமே இம்மையே
‘ராம’ என்றிரண்டெழுத்தினால்’

========================================================

Help us to run this website… 

We need your SUPPORT. Help Rightmantra in its functioning. 

==========================================================

சென்ற ஆண்டு (2015) ராமநவமி சிறப்பு பதிவுகள் :

ஆங்கிலேய கலெக்டருக்கு காட்சி தந்த மதுராந்தகம் ஏரி காத்த ராமர் – முழு கவரேஜ் – ஸ்ரீ ராமநவமி SPL!

சபரியின் பக்தியும் இழந்த பொலிவை பெற்ற பம்பை நதியும்! இராமநாம மகிமை (4)

அனுமனுடன் யுத்தம் செய்த இராமர்! எங்கே? ஏன்? – இராமநாம மகிமை (3)

ராம்சுரத்குமார் விளக்கிய ராமநாம மகிமை – (2)

கருடனின் கர்வத்தை அழித்த சிவபெருமான் – இராமநாம மகிமை (1)

==========================================================

Similar articles….

இராமர் முறித்த ‘சிவதனுசு’ எங்கிருந்து வந்தது தெரியுமா? 

தீராத வினை தீர்க்கும் அடியார்கள் பாத தூளி  – நம் இராமநவமி அனுபவம்!

108 திவ்ய தேசங்களை தரிசித்த பலனைத் தரும் தவறவிடக் கூடாத ஒரு தலம்!

புடவை கட்டிக்கொள்ளும் பெருமாள் – சென்னை புறநகரில் ஒரு அதிசய மலைக்கோவில்!

வரங்களை அருள்வதில் திருமலைக்கு நிகரான ‘திருநீர்மலை’ திவ்யதேசம்!

மலை மீது ஒரு எழில் கோலம்! சென்னை புதுப்பாக்கம் ஸ்ரீ வீர ஆஞ்சநேயர் திருக்கோவில்! (ஆலய தரிசனம் 1)

விருந்துண்ண சென்றவனுக்கு மருந்தும் கொடுத்தனுப்பிய என் கோதண்டராமன் – (ஆலய தரிசனம் 2)

நம் ராமநவமி தரிசனமும், பொறுமைக்கு கிடைத்த பரிசும்!

ராம நாம மகிமை & போதேந்திராள் வாழ்க்கை வரலாற்று நாடகம்! ஒரு நேரடி அனுபவம்!!

‘நாளை’ என்பதில்லை நரசிம்மனிடத்தில்!

பேரெழில் கொஞ்சும் பேரம்பாக்கம் ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மர் – நரசிம்ம ஜெயந்தி ஸ்பெஷல்!

சுழன்றும் ஏர்ப் பின்னது உலகம் – நம் நரசிம்ம ஜெயந்தி அனுபவம்!

நரசிம்மரும் நாயன்மாரும் நமக்கு வழங்கியுள்ள மிகப் பெரிய பொறுப்பு!

அண்ட சராசரங்களை கிடுகிடுக்க வைத்த நரசிம்மர் ஒரு வேடனிடம் கட்டுண்ட கதை!

=========================================================

[END]

6 thoughts on “திருநின்றவூரின் திருவாய் நிற்கும் ஏரிகாத்த ராமர் – ஸ்ரீராமநவமி ஸ்பெஷல் !

  1. டியர் சுந்தர்,

    திருநின்றவூர் ஒரு மகத்தான திவ்யதேசம் !!!
    பக்தவச்சல பெருமானுடன் அருள் பாலிக்கும் தாயார் பெயர் “என்னை பெற்ற தாயார்” – என்ன ஒரு மகோன்னதமான திருநாமம்!!!

    இங்குள்ள பெருமாள் “பசு தனது கன்றை எப்பிடி தனது நாவால் நக்கி நக்கி பாசம் பொழியுமோ அப்படி பக்தர்களின் பாவங்களை போக்க வல்லவர் !!”

    ஒரு செவி வழி கதை- “திருமங்கை ஆழ்வார் இந்த பெருமானை தரிசிக்கும்போது பெருமான் பிராட்டியுடன் அளவளாவிக் கொண்டு இருந்தார். ஆழ்வாரை கவனிக்கவில்லை. திருமங்கை மன்னனும் இறைவனை தொழுதுவிட்டு பாசுரம் பாடாமலே திருக்கடல் மல்லை (மகாபலிபுரம்) சென்றார். அவரை தொடர்ந்த பெருமாள் மல்லையில் அவருக்கு தரிசனம் தந்தார். அங்கு ஆழ்வார் பாசுரம் படைத்தார் “. அதனால் தான் பக்தவத்சலன்- பக்தர்களிடம் வாத்சல்யம் (பாசம்) பொழிபவன்.

    அன்புடன்

    நெ வீ வாசுதேவன்

  2. டியர் சுந்தர்,

    என் முந்தைய பதிவில் குறிப்பிட்ட பாசுரம்:-

    “நீண்ட வாத கருமுகிலை எம்மான் தன்னை
    நின்றவூர் நித்திலதொதார் சோலை
    காண்டவத்தை கணலேறிவாய் பெய்வித்தானை
    கண்டது நான் கடல் மலை தலசயனத்தே”

    அன்புடன்
    நெ வீ வாசுதேவன்

  3. டியர் சுந்தர் ஜி , 108 திவ்ய தேசங்களில் 58 வது திருதல தரிசனம் கிடைக்க பெற்று மகிழ்ந்தேன் .
    “என்னை பெற்ற தாயார் சமேத பக்தவத்சல பெருமாள் திருவடி போற்றி ”
    அன்புடன்
    சோமசுந்தரம் பழனியப்பன்

  4. Excellent Information About Thirunidravur Bakthavatchala Perumal Temple . Thank You Mr. Vasudevan Sir for the Information.

    We Have an Excellent UZhavarapani in this Temple in 2014 By of Rightmantra Team.

    Thanks & Regards,
    S.Narayanan.

  5. ராம நவமி அன்று ராமரை பற்றிய பதிவு படிக்க சந்தோசம்.
    எப்போதும் போல தல வரலாறும் புகைப்படங்களும் விசேஷம்.
    நன்றி

  6. வணக்கம் என்னுடைய பெயர் வத்சலன் . பக்கதவாட்சla பெருமாள் சன்னதியில் ரைட்மந்த்ரா.கம என்று ஒரு சுலோகம் உள்ளது முடிந்தால் சுலோகம்
    ஸ்ரீவட்சன்.௯௮௬@ஜிமெயில்கு அனுப்பவும்.
    இப்படிக்கு டைசன் வாயினும் விகனபனம்
    Thaசன்
    வத்சலன்..

    .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *