Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Tuesday, March 19, 2024
Please specify the group
Home > Featured > நம் ராமநவமி தரிசனமும், பொறுமைக்கு கிடைத்த பரிசும்!

நம் ராமநவமி தரிசனமும், பொறுமைக்கு கிடைத்த பரிசும்!

print
ராமநவமித் திருநாளில் நிச்சயம் ஏதாவது ஒரு ராமர் கோவிலுக்கு போய் ராமனை தரிசித்துவிடவேண்டும் என்பதில் உறுதியாக இருந்தேன். காலையில் நேரமிருக்கலை. சரி சாயந்திரம் போகலாம்னு விட்டுட்டேன்.

நாம ஏதாவது ஒரு பிளான் பண்ணி டயத்துக்கு கிளம்பனும்னு முடிவு பண்ணா அன்னைக்கு தான் ஆபீஸ்ல அதிக வேலை கொடுப்பாங்க. இன்னைக்கும் அதே தான். அட…ராமா இது என்ன சோதனைன்னு நொந்துட்டேன். ஒரு வழியா வேலையை முடிச்சு ஆபீஸ்ல இருந்து கிளம்பும்போதே மணி 7.30 இருக்கும். எந்த ராமர் கோவில் போகலாம்னு யோசிச்சப்போ… நாம மார்கழி மாசம் போனோமில்லையா நந்தம்பாக்கம் ராமர் கோவில்… அது தான் ஞாபகத்துக்கு வந்தது… உடனே பைக்கை ஸ்டார்ட் செய்ய… நேரா சைதாப்பேட்டை வழியா கிண்டி போய் அங்கேயிருந்து நந்தம்பாக்கம். 8.15 மணிக்கெல்லாம் நந்தம்பாக்கம் கோதண்டராமர் கோவிலுக்கு வந்துட்டேன்.

நான் போற நேரம் சரியா இராமர் (அனுமந்த சேவை) திருவீதி உலா கிளம்புறார். திவ்ய தரிசனம்… ஒரு அஞ்சு நிமிஷம் அப்படியே சுவாமியை ராஜகோபுரத்துக்கு முன்னால நிக்க வெச்சாங்க…. தீபாராதனை எல்லாம் நடந்தது. டக்குனு தோணிச்சு… இந்த திவ்ய தரிசனத்தை நம்ம வாசகர்கள் பார்த்தா எவ்ளோ நல்லாயிருக்கும் ? உடனே பேக்ல இருந்த நண்பர் ராஜாவோட காமிராவை எடுத்து படங்களை கிளிக்கிட்டேன்.

அனுமந்த வாகனத்தில் திருவீதி உலா புறப்படும் ராமர்

(நண்பர் ராஜா கிட்டே மூணு நாள் முன்னேயே காமிராவை ரிட்டர்ன் பண்ணியிருக்கணும். எல்லாம் நல்லதுக்கு தான்னு இப்போ தான் புரியுது. ஒருவேளை காமிராவை ரிட்டர்ன் பண்ணியிருந்தேன்னா.. இந்த படங்களை எடுத்திருக்க முடியாது… நீங்களும் இப்படி ஒரு அற்புதமான படங்களை பார்த்திருக்க முடியாது…!)

கை கால் கழுவிக்கொண்டு, அர்ச்சனை தட்டு வாங்கிக்கொண்டு இராமரை சேவித்தேன். முதல்ல வாங்கினது நம்ம தட்டைத் தான். அத்தனை கூட்டத்திலும் அர்ச்சனை நிறுத்தி நிதானமாக செய்தமையால் மந்திரங்களை நன்கு கேட்க முடிந்தது. இன்னைக்கு தாங்க இந்த செவிகள் சுத்தமாச்சி.

அர்ச்சனை முடிந்து தீபாராதனை காண்பித்த பிறகு…. தீர்த்தமும் சடாரியும் வைத்தார்கள். பின்னர் அவரவர் அர்ச்சனை பை திரும்ப தரப்பட்டது. எல்லாம் கிடைத்தும் குங்குமப் பிரசாதம் மட்டும் கிடைக்கவில்லை. தாயார் சன்னதியில் தருவார்கள் என்று நினைத்து அங்கு சென்றால் அங்கு மஞ்சள் தான் தந்தார்கள் என்று அங்கு நின்றுகொண்டிருந்தவர்கள் சொன்னார்கள்.

அந்த நேரம் அங்கு ராமர் சன்னதியில் இருந்த அர்ச்சகரைத் தவிர வேறு யாரும் இல்லை. மற்றவர்கள் சுவாமி திருவீதி உலா சென்றுள்ள படியால் உடன் சென்றுவிட்டார்கள். இங்கோ ஒரே கூட்டம்…. இவர்களுக்கு தரிசனம் செய்வித்து, துளசி தந்து, தீர்த்தம் தருவதற்கே இவருக்கு சரியாக இருக்கிறது. பெருமாள் சன்னதிக்கு யாராவது ஒரு அர்ச்சகர் வந்து அவர் தான் குங்குமம் தரவேண்டும் என்று புரிந்துகொண்டேன்.
எவ்ளோ நேரம் ஆனாலும் பரவாயில்லே… குங்குமம் வாங்காம போவதில்லை என்று உறுதியாக தீர்மானித்துவிட்டபடியால்…. ஒரு ஓரமாக அமைதியாக நின்று கொண்டிருந்தேன். சரியாக பத்து நிமிடங்கள் இருக்கும்… நமக்கு தெரிந்த அர்ச்சகர் ஒருவர் வர… அவரிடம் நலம் விசாரித்துவிட்டு, “குங்கும பிரசாதம் வேணும்… கிடைக்குமா?” என்றேன். “இதோ… தர்றேனே” என்று சொல்லி உள்ளே சென்றவர் ஒரு சிறிய குங்கும பாக்கெட் மற்றும் சுவாமியின் திருமேனியில் இருந்த புஷ்பங்கள் ஆகியவற்றை கொண்டு வந்து தந்தார். கண்களில் ஒத்திக்கொண்டு வாங்கிக்கொண்டேன்.

நந்தம்பாக்கம் கோதண்ட ராமர் திருக்கோவில் பகல் பொழுதில்….

“மஞ்சள் தான் கிடைச்சிடுச்சே… குங்குமம் இல்லாட்டி என்ன?” என்று நினைத்து நான் அவசரப்பட்டு கிளம்பியிருந்தா தற்போது கிடைத்த இந்த பாக்கெட் குங்குமமும், புஷ்பமும் கிடைத்திருக்காது.

மேலோட்டமா பார்த்தா இது ரொம்ப சாதாரண விஷயம் தான்…. ஆனா… இது பொறுமைக்கு கிடைத்த பரிசு அல்லவா? தவிர இன்னைக்கு ராம நவமியாச்சே…! எனக்கு எவ்ளோ சந்தோஷமா இருந்திருக்கும்… யோசிச்சு பாருங்க…!

ஆண்டவன் உங்களுக்கு கொடுக்கவேண்டியதை தாமதப்படுத்துறான்னு நீங்க நினைச்சா… அதுக்கு நிச்சயம் ஏதாவது காரணம் இருக்கும். நீங்க நினைக்கிறதைவிட மிகச் சிறப்பான ஒன்னை உங்களுக்கு கொடுக்குறதுக்காகத் தான் இருக்கும். எனவே அவசரப்படாம அவன் மேல் பொறுமையும் நம்பிக்கையையும் வைத்து நீங்கள் பாட்டுக்கு உங்கள் கடமையை செஞ்சிகிட்டு வாங்க. மத்ததை நேரம் கனியும்போது அவன் பார்த்துக்குவான்.

உங்கள் முயற்சி – அது பாட்டுக்கு நம்பிக்கையுடன் தொடர்ந்து கொண்டிருக்க வேண்டும். உங்கள் முயற்சியையும் ஆண்டவன் அருளையும் போட்டு குழப்பிக்கொள்ளக்கூடாது!

நாம் ஆண்டவனிடம் எதை வேண்டிக்கொண்டாலும் நாமும் அதற்காக உழைப்போம். அவன் விரும்புவது அதைத் தான்!!

சரிதானுங்களே…?

(இராம நவமியை முன்னிட்டு நாம் தருவதாக சொன்ன இரண்டாவது பதிவுக்கு பதில் இந்த பதிவு தரப்பட்டுள்ளது. அந்த பதிவு கையிருப்பாக வைத்திருந்து வேறொரு நாள் வெளியிடப்படும்.)

13 thoughts on “நம் ராமநவமி தரிசனமும், பொறுமைக்கு கிடைத்த பரிசும்!

  1. ///////////ஆண்டவன் உங்களுக்கு கொடுக்கவேண்டியதை தாமதப்படுத்துறான்னு நீங்க நினைச்சா… அதுக்கு நிச்சயம் ஏதாவது காரணம் இருக்கும். நீங்க நினைக்கிறதைவிட மிகச் சிறப்பான ஒன்னை உங்களுக்கு கொடுக்குறதுக்காகத் தான் இருக்கும். எனவே அவசரப்படாம அவன் மேல் பொறுமையும் நம்பிக்கையையும் வைத்து நீங்கள் பாட்டுக்கு உங்கள் கடமையை செஞ்சிகிட்டு வாங்க. மத்ததை நேரம் கனியும்போது அவன் பார்த்துக்குவான்///////////////

    சூப்பர் ஜி…

  2. நாம் மார்கழி மாதம் முழுவதும் தரிசனம் செய்த இந்த கோதண்டராமர் கோவிலுக்கு சனிகிழமை தோறும் (இபொழுது கூட விஷவரூப தரிசனம் முடித்து விட்டுத்தான் இதை பதிவு செய்கிறேன்) தவறாமல் வருகிறேன். அதற்கு சந்தர்பம் ஏற்படுத்தி கொடுத்த உங்களுக்கு இந்த தருணத்தில் நன்றி சொல்ல கடமை பட்டுள்ளேன்.
    .
    அலுவல் பணி காரணமாக நேற்று நீங்கள் அழைத்தும் இந்த நிகழ்ச்சியல் என்னால் கலந்து கொள்ள முடியவில்லை. எல்லாத்துக்கும் அந்த ஆண்டவன் ஒரு கணக்கு வைதுறுப்பன். உங்கள் பதிவை பார்த்ததும் நேரில் பார்த்த ஒரு அனுனுபவம் கிடைத்தது.

  3. {அட…ராமா…} இது என்ன சோதனைன்னு நொந்துட்டேன்.

    திவ்ய தரிசனம்… ஒரு அஞ்சு நிமிஷம் அப்படியே சுவாமியை ராஜகோபுரத்துக்கு முன்னால நிக்க வெச்சாங்க…. தீபாராதனை எல்லாம் நடந்தது.

    அட…ராமா..

    கொடுத்துவைத்தவர் நீயோ ……

  4. நீங்கள் மிகவும் கொடுத்து வைத்தவர் தான். ஆனால் அந்த பொறுமை கான்செப்ட் தான் முடியவில்லை.

    //////////////// “ஆண்டவன் உங்களுக்கு கொடுக்கவேண்டியதை தாமதப்படுத்துறான்னு நீங்க நினைச்சா… அதுக்கு நிச்சயம் ஏதாவது காரணம் இருக்கும். நீங்க நினைக்கிறதைவிட மிகச் சிறப்பான ஒன்னை உங்களுக்கு கொடுக்குறதுக்காகத் தான் இருக்கும். எனவே அவசரப்படாம அவன் மேல் பொறுமையும் நம்பிக்கையையும் வைத்து நீங்கள் பாட்டுக்கு உங்கள் கடமையை செஞ்சிகிட்டு வாங்க. மத்ததை நேரம் கனியும்போது அவன் பார்த்துக்குவான்.” ////////////////

    சில சமயம் பொறுமை சலிப்பாக மாறி விடுகிறது.

    1. உங்கள் வருத்தம் புரிந்துகொள்ளக்கூடியதே.

      இருப்பினும் உங்கள் ஆறுதலுக்காக இதை சொல்கிறேன்….

      திருநீலகண்ட நாயனாரை கேள்விப்பட்டிருப்பீர்கள். சிவபெருமான் மீது அவர் மனைவி இரத்தின சாலை இட்ட ஆணை காரணமாக மனைவியையே தொடாமல் வாழ்ந்துவந்தார். சிவனடியார் வேடத்தில் வந்த சிவபெருமான், இவரிடம் திருவோடு கொடுத்து பாதுக்காப்பாக வைக்கச் சொல்லிவிட்டு போய்விடுகிறார்.

      30 ஆண்டுகள் கழித்து மீண்டும் வரும் சிவனடியார் தனது திருவோட்டை திரும்ப கேட்க, வைத்த இடத்தில் அதை காணாது திகைக்கிறார் திருநீலகண்டர். வழக்கு தில்லை வாழ் அந்தணர் சபைக்கு செல்கிறது. ‘மனைவியின் கையைபிடித்து திருவோட்டை நான் கவரவில்லை. உண்மையில் அது தொலைந்துவிட்டது’ என்று இவர் சத்தியம் செய்யவேண்டும் என்று சிவனடியார் வேடத்தில் இருந்த சிவன் வாதாட, சபையும் அவ்வண்ணமே தீர்ப்பு கூறுகிறது.

      நீலகண்டரோ சத்தியம் செய்த சூழ்நிலையை சொல்ல முடியாது தவிக்கிறார். பின்னர் ஒரு வழியாக தமக்கும் தமது மனைவிக்கும் வேறொரு பெண் தொடர்பாக ஏற்பட்ட ஒரு பிணக்கில் அவர் மனைவி “நீலகண்டத்தின் மீது ஆணை. இனி என்னை தொடாதீர்…” என்று கூறியதால் மனைவியை பல ஆண்டுகள் தொடாமல் வாழ்ந்துவருவதாகவும், எத்தனையோ இன்னல்கள் மற்றும் சோதனைக்கிடையிலும் இந்த சத்தியத்தை தாங்கள் காப்பாற்றி வருவதாகவும், எங்களது இளமையே இதில் தொலைந்துவிட்டது என்றும் கண்கள் கலங்கியபடி ஊரறிய கூறி பின்னர் ஒரு மூங்கில் கழியில் இருவரும் ஆளுக்கு ஒரு பக்கம் பிடித்து குளத்தில் மூழ்கி சத்தியம் செய்கின்றனர்.

      மூழ்கி எழும்போது இருவரும் முதுமை மறைந்து இளமை பொலிவுடன் எழுகின்றனர். சிவனடியார் வேடத்தில் இருந்தவர் மறைந்து அங்கு ரிஷப வாகனத்தில் சிவபெருமான் உமையோடு தோன்றி அருள்பாலிக்கிறார்.

      30 ஆண்டுகள் சத்தியத்தின் மீது நம்பிக்கை வைத்து இளமை, தாம்பத்தியம், என அனைத்தையும் தொலைத்த திருநீலகண்டரை சற்று நினைத்து பாருங்கள்…. அவர் அளவுக்கு நமக்கு பொறுமை வேண்டியதில்லை… அதில் நூற்றில் ஆயிரத்தில் ஒரு பங்காவது நம்மால் முடியாதா? (திருநீலகண்ட 8 ஆம் நூற்றாண்டில் சிதம்பரத்தில் வாழ்ந்த அடியார். 63 நாயன்மார்களில் ஒருவர்).

      இறைவன் தரும் சோதனையில் நாம் இழந்ததாக கருதும் அத்தனையும் சோதனையின் முடிவில் நிச்சயம் திரும்ப கிடைக்கும். முன்னைவிட உறுதியாக.

      வேண்டியதெல்லாம் நம்பிக்கை ஒன்றே….!

      – சுந்தர்

      1. சுந்தர்ஜி,

        கோதண்டராமர் ஹனுமந்த சேவை வீதி உலா நேரில் பார்த்தார் போல் உள்ளது.

        என்ன இருந்தாலும் உங்கள் பொறுமையை நினைத்து பெருமை படுகின்றேன். சாக்ஷாத் அந்த ராமர்தான் உங்களுக்கு பொறுமையை கொடுத்து உள்ளார்.

        /////இறைவன் தரும் சோதனையில் நாம் இழந்ததாக கருதும் அத்தனையும் சோதனையின் முடிவில் நிச்சயம் திரும்ப கிடைக்கும். முன்னைவிட உறுதியாக.வேண்டியதெல்லாம் நம்பிக்கை ஒன்றே….! //////

        தம்பி இந்த வரிதான் கண்களில் நீர் அரும்புகின்றது.

        பொறுமை காக்கின்ற தம்பிக்கு கூடிய விரைவில் சகல நலன்களும், சௌபாக்கியங்களும் பெற்று நீடூஷி வாழ்க ,வாழ்க ,வாழ்க ,வாழ்க …….. என்று வாழ்த்துகின்றேன்.

      2. இறைவன் தரும் சோதனையில் நாம் இழந்ததாக கருதும் அத்தனையும் சோதனையின் முடிவில் நிச்சயம் திரும்ப கிடைக்கும்.என்று நிச்சியமாக சொல்ல முடியாது,எனக்கு தெரிந்த,மற்றும் கேல்விபட்ட குடும்பங்கல்,எவ்வலவோ வசதியோடு வாழ்ந்து பின் இருந்த இடம் தெரியாமல் போய்விட்டன.அத்தனைக்கும் காரனம் அவரவர் கர்மா..
        ஆண்டவன் போடும் கனக்கு அது புரியாது நமக்கு..

        1. ஆனால் இழந்ததை மீண்டும் பெற்ற குடும்பங்கள் பல எனக்கு தெரியுமே…. ஊரறிய பறித்தவனுக்கு அதே ஊரறிய கொடுக்கத் தெரியாதா?

          நமது கர்மாவினால் தான் அனைவருக்கும் சோதனைகள் ஏற்படுகிறது என்பது உண்மை தான். ஆனால் அவனிடம் தஞ்சம் புகும் அடியவர்களுக்கு அவை அவன் தரும் சோதனைகளாகிவிடுகின்றன. முடிவில் அவை நன்மையே தருகின்றன. இது பற்றி நமது கடவுள் Vs கர்மா பதிவில் நிஜ உதாரணங்களுடன் விரிவாக விளக்குகிறேன். அப்போது நீங்களே ஒப்புக்கொள்வீர்கள்.

          இன்னொன்று… அற்புதங்களோ அதிசயங்ளோ அவற்றை நம்புகிறவர்களுக்கு தான் அவை நடக்கும். மற்றவர்களுக்கு விதிப்படி என்ன நடக்குமோ அது தான் நடக்கும். அப்படியே நடந்தாலும் அவர்களால் அதை உணரவே முடியாது.

          நன்றி….!

          – சுந்தர்

  5. பொறுமைக்கு என்றென்றும் பெருமையே!!!

    ராம நாமம் ஜெபிப்போம் !!!
    வாழ்வில் வளமும் நலமும் பெறுவோம் !!!

  6. கடவுள் என்றுமே நமக்கு உண்டானதை தக்க நேரத்தில் கொடுப்பான்

  7. நாம் எதை வேண்டும் என்று நினைகிறோமோ அதை அடவைதர்கான உழைப்பில் இறங்கினால் போதும்
    அதற்கு பின் அது நமக்கு கிடைப்பது கிடைக்காமல் காலதமாதம் ஆவது எலாம் அவன் போடும் கணக்கு
    நம்மக்கு அதற்கு தகுதி இருப்பின் கண்டிப்பா கிடைக்கும் கிடைக்க வைப்பான்
    இல்லை அதைவிட அதிகாமா தகுதி இருப்பின் கொஞ்சம் காலதாமதமாகி வேறு உருவில் நமக்கு அதை வட்டியும் முதலுமாய் குடுப்பான்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *