திங்கள் இரவு தான் மறு நாள் இராமநவமி என்பதே நினைவுக்கு வந்தது. (ஏற்கனவே இராமநவமி பற்றிய பதிவு ஒன்றை தயார் செய்து பத்திரமாக வைத்திருந்தபடியால், செவ்வாய் அதை அளிக்க முடிந்தது.)
இராமநவமி விரதம் நாம் இருக்க விரும்பினாலும், மஹா பெரியவா அவர்களும் பிற பெரியோர்களும் அனுஷ்டிப்பது போலவும், சொன்னது போலவும் நம்மால் இருக்க முடியுமா என்ற சந்தேகம் இருந்து வந்தது. இராம நவமிக்கு நாம சங்கீர்த்தனம் எல்லாம் செய்து அட்சர சுத்தமாக நம்மால் இராமநவமி விரதம் இருக்க முடியுமா? என்கிற பயம் எழுந்தது. காரணம் நாம் இருக்கும் நகரம் அப்படி.
இருப்பினும் பாரத்தை இராமன் மீதே போட்டுவிட்டு விரதத்தை துவக்கிவிட்டோம்.
செவ்வாய் அன்று எதுவும் சாப்பிடவில்லை. அவ்வப்போது டீக்கடைக்கு சென்று பால் & ஹார்லிக்ஸ் சாப்பிட்டதோடு சரி. அது கூட, அலுவலகத்தில் நாம் இருந்தபடியால். உழைக்க கொஞ்சமாவது தெம்பு வேண்டுமே.
விரதத்தை பரிபூரணமாக அனுஷ்டிப்பது அதுவும் நம்மை போன்ற லௌகீக பேர்வழிகளுக்கு மிகவும் கஷ்டம். உலகியல் விஷயங்களை பேசக்கூடாது, படிக்கக்கூடாது, பார்க்க கூடாது, மூன்றாம் நபரைப் பற்றி பேசக்கூடாது, யார் மீதும் கோபப்படக்கூடாது இப்படி பல ‘டாதுகள்` உண்டு.
ஒரு வழியாக மாலை வந்தவுடன், எந்த கோவிலுக்கு செல்வது என்று ஒரே குழப்பம். கோவிலுக்கு நிச்சயம் போகத் தான் வேண்டுமா? என்று தீவிர சிந்தனை எழுந்தது. காரணம், கோவிலுக்கு சென்றால் எப்படியும் 2 மணிநேரம் இழுத்துவிடும். அதற்கு பிறகு வீட்டுக்கு போக 9.00 க்கு மேல் ஆகிவிடும். அடுத்த நாள் பதிவை எப்படி தயார் செய்வது. ஏற்கனவே ஒரு சில பதிவுகள் தயாராக இருந்தாலும் அவற்றுக்கு முழுமையான வடிவம் கொடுத்து தயார் நிலையில் வைப்பதற்கு நேரம் தேவை.
ரைட்மந்த்ராவுக்கு பதிவு எழுதுவதே நாம் ஒரு வகையில் வழிபாடாக கருதுவதால் கோவிலுக்கு வேறு தனியாக போகவேண்டுமா? என்ற எண்ணம் தோன்றியது.
மேற்கு மாம்பலத்தை தாண்டியபோது மனம் கேட்கவில்லை. ‘இராமநவமி அன்னைக்கு இராமனை தரிசிக்காவிட்டால் எப்படி?’
அயோத்தியா மண்டபம் சென்றால் தரிசனத்தோடு எப்படியும் ஏதாவது ஒரு சொற்பொழி நடக்கும் அதையும் அமர்ந்து கேட்டுவிட்டு போய்விடலாம், இராமநவமியையும் முழுமையாக அனுஷ்டித்த திருப்தி கிடைக்கும் என்று ஆர்யா கௌடா சாலையில் உள்ள அயோத்தியா மண்டபம் சென்றோம். நாம் நினைத்தது போலவே சொற்பொழிவு நடந்துகொண்டிருந்தது. ஆனால், அந்த பகுதியே ஒரு மாதிரி கசகசவென்று போக்குவரத்து நெரிசலுடன் மிகவும் பரபரப்புடன் இருந்தது. தவிர டூ-வீலரை நிறுத்த இடம் கிடைக்கவில்லை.
எங்காவது ஏடாகூடமாக நிறுத்திவிட்டு உள்ள போனால்…. மனம் முழுதும் நமது வண்டி மீதே இருக்கும். சொற்பொழிவில் ஒன்ற முடியாது. என்ன செய்வதென்று யோசித்தோம். நேரம் அப்போது 7.45 pm.
பேசாமல் சென்ற ஆண்டு தரிசித்த நந்தம்பாக்கம் கோதண்டராமர் ஆலயத்திற்கே சென்றுவிடுவோம் என்று கருதி அங்கிருந்து நேரே நந்தம்பாக்கம் பயணம்.
சென்னை நகர போக்குவரத்தில் நீந்தி, நந்தம்பாக்கம் சென்ற போது இரவு 8.30 இருக்கும்.
நல்ல கூட்டம்.
வெளியே இருந்த ஒரு அம்மாவிடம் அர்ச்சனைக்கு பூ, பழம் முதலியவைகளை வாங்கிக்கொண்டோம்.
“என்ன சார் ரொம்ப நாளா ஆளை காணோம்? கடைசியா வைகுண்ட ஏகாதேசி அன்னைக்கு வந்ததுன்னு நினைக்கிறேன்.”
“ஆமாம்மா… அதுக்கு பிறகு வரமுடியலே… இன்னைக்கு இராமநவமியாச்சே… அண்ணலை பார்க்காம இருக்க முடியாதே…”
அவரிடம் அர்ச்சனை பொருட்களை வாங்கிக்கொண்டு உள்ளே நுழைந்தோம்.
உள்ளே சரியான கூட்டம்…. சுவாமி புறப்பாடுக்கு தயாராகிக்கொண்டிருந்தார்.
மூலவர் சன்னதிக்குள் 30 30 பேராக அதாவது பேட்ச் பேட்ச்சாக அனுமதித்துக்கொண்டிருந்தார்கள்.
சரியாக இருபது நிமிடத்தில் நமது முறை… ஸ்ரீனிவாசனை தரிசித்துவிட்டு, பக்காவட்டில் உள்ள இராமர் சன்னதியில் அர்ச்சனை செய்யப்பட்டது. அந்த நேரம் நம்மைத் தவிர வேறு யாரும் அர்ச்சனைக்கு கொடுக்கவில்லை. அனைத்து அர்ச்சனைகளையும் அந்த பக்கம் ஸ்ரீனிவாசன் பெற்றுக்கொண்டிருந்தார். (இந்த ஆலயத்தை பொருத்தவரை கோதண்டராமர் ஆலயம் என்ற பெயர் விளங்கினாலும், இங்கே மூலவர் போல தனிச் சிறப்பு ஸ்ரீனிவாசனுக்கே உண்டு.).
நமது பெயரிலும், நம் நண்பர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் பெயர்களிலும் கோதண்டராமனுக்கு அர்ச்சனை செய்தோம். வாசகர்களின் நலனை வேண்டிக்கொண்ட பின்னர், பிரசாதம் பெற்று வெளியே வந்தோம்.
பிரகாரத்தை வலம் வந்த போது கோ-சாலை கண்ணில் பட்டது.
“அடடா… பசுக்களை மறந்துவிட்டோமே…” தலையில் குட்டிக்கொண்டோம்.
கோ-சாலையில் ஒருவர் பசுக்களுக்கு வைக்கோல் போட்டுக்கொண்டிருந்தார்.
“ஐயா… பசுக்களுக்கு ஏதாவது வாங்கி தர்றதா இருந்தா என்ன வாங்கி தரலாம் இப்போ?”
“உங்க சௌகரியம்… புல்லுகட்டோ பழமோ ஏதாவது வாங்கி கொடுங்க!”
(கோ-சாலையை பராமரிப்பவர் கண்ணில் பட்டால் அவரிடம் கேட்டுக்கொண்ட பிறகே பசுக்களுக்கு தீனி வாங்கித் தரவேண்டும்.)
நல்லவேளை வாசல் கடையில ரெண்டுல ஏதாவது ஒன்னு நிச்சயம் கிடைக்கும்….
மூன்று முறை வலம் வந்து, கொடிமரத்துக்கு அப்பால் நமஸ்கரித்துவிட்டு, மீண்டும் வாயிலுக்கு சென்றோம்.
ஒரு பெரிய கட்டு புல்லும் கொஞ்சம் பழங்களும் வாங்கிக்கொண்டோம்.
உள்ளே வந்து கோ-சாலையில் தினமும் விஸ்வரூப தரிசனத்துக்கு செல்லும் பசுவுக்கு புல்லை கொடுத்துவிட்டு ஏனைய மாடுகளுக்கு பழங்கள் கொடுத்தோம்.
பின்னர் அங்கு நின்று சிறிது நேரம் பிரார்த்தனை செய்தோம். (கோ-சாலை பிரார்த்தனை பன்மடங்கு பலன் மிக்கது!)
பசுக்களை வணங்கிவிட்டு வெளியே வந்தோம்.
சுவாமி அனுமந்த வாகனத்தில் எழுந்தருளி புறப்பாடுக்கு தயாராக இருந்தார். நாம் காமிராவை வைத்துக்கொண்டு தயாராக நின்றோம்.
சற்று நேரத்தில், ‘இராமா, கோவிந்தா’ முழக்கங்களுக்கு இடையே சுவாமி அனுமன் மீது ஏறி புறப்பட்டார்.
சுவாமி வெளியே வரும்போது எடுத்த படம் கண்கொள்ளா காட்சி.
“தர்மத்தை காக்க, இதோ நான் புறப்பட்டுவிட்டேன்” என்று சொன்னது போல இருந்தது. திருமுடி மீது வெண்கொற்றக்குடை வேறு.
தேவையான படங்களை கிளிக்கிய பிறகு, பார்த்தால்…. சுவாமிக்கு சற்று பின்னால், ஒரு சிறிய குழுவினர் நாமசங்கீர்த்தனம் செய்தபடி நின்றுகொண்டிருந்தனர்.
“அடி தூள்…. இதை இதைத் தான் எதிர்பார்த்தோம்!” என்றபடி அவர்களை நோக்கி ஓடிச் சென்றோம்.
சிறுவர்களும், பெரியவர்களுமாக நாம சங்கீர்த்தனம் களைகட்டியது.
நாம சங்கீர்த்தனத்தின் பெருமையை நாளெல்லாம் சொல்லிக்கொண்டே இருக்கலாம். நாம சங்கீர்த்தனம் மிக உயர்ந்த வழிபாடு. அதுவும் கலியுகத்தில் நாம சங்கீர்த்தனமே கண்கண்ட மருந்து. அவனை அடையும் எளிமையான வழி.
பரவசத்துடன் அவர்களை பார்த்துக்கொண்டிருந்த நாம் திடீரென்று, அவர்களுக்கு முன்பு சென்று, நடுத்தெருவில் சாஷ்டாங்கமாக அவர்கள் காலில் விழுந்தோம்.
“ஐயனே… தீராத வினையெல்லாம் உன் அடியவர்களின் பாத தூளி தீர்க்கும் என்பது உண்மையானால் என் வினைகள் யாவும் ஒழியட்டும்” என்று வேண்டியபடி அவன் அடியவர்களின் கால்களில் வீழ்ந்தோம்.
சிறுவர்கள் மிகவும் பரவசமாக நாமசங்கீர்த்தனம் செய்தபடி இருந்தனர். தாள கட்டைகளும், தம்பூராவும், ஆர்மோனியமும் அவர்கள் கைகளில் விளையாடியது.

2014 ல், அதுவும் சென்னை போன்ற நகரங்களில் நாம சங்கீர்த்தனம் செய்வதற்கும் அவனை பாடுவதற்கும் அடியார்களும் சிறுவர்களும் இருக்கிறார்கள் என்பதே நமக்கு ஒரு வகையில் சந்தோஷம்.
இவர்களை பார்த்ததும், இவர்களின் பாதங்களில் வீழ்ந்து ஆசி பெற்றதும் நாம் செய்த பாக்கியமே அன்றி வேறு ஒன்றுமில்லை.
அவர்களுடனே சிறிது நேரம், நாமும் இனைந்து நாம சங்கீர்த்தனம் செய்துகொண்டிருந்த வேளையில், அவர்களுக்கு ஏதேனும் தொண்டு செய்யவேண்டும் என்று தோன்றியது.
அந்த குழுவை வழிநடத்துபவர் போன்று எனக்கு பட்ட ஒருவரிடம், “சார்…. உங்க எல்லாருக்கும் ஏதாவது வாங்கித் தர ஆசைப்படுறேன்…” நாம் சொல்லி முடிப்பதற்குள், என்ன நினைத்தாரோ “அதெல்லாம் ஒன்னும் வேண்டாம் சார்” என்றார் பட்டென்று.
நமது முகம் வாடிப்போனது.
சரி… நாம் கொடுத்து வெச்சது அவ்ளோ தான் என்று கருதியபடி, மேலும் சில நேரம் அவர்களுடன் நாம சங்கீர்த்தனம் செய்தபடி இருந்தோம்.
சுவாமி மீண்டும் நகர, இவர்களும் சற்று தூரம் நடந்தார்கள்.
எப்படியாவது இவர்களுக்கு ஏதேனும் வாங்கித் தந்துவிடவேண்டும் இந்த அரிய சந்தர்ப்பத்தை விட்டுவிடக்கூடாது என்று மனம் சொல்லியபடி இருந்தது.
“சார்… குடிக்க தண்ணி தேவைப்படுமா? நான் வாங்கிட்டு வரவா??” என்றோம்.
“கூல்ட் ட்ரிங்க்ஸ் வேணும்னா ஏதாவது வாங்கிக் கொடுங்க! அதோ அங்கே கூட கிடைக்கும்!” என்று அதே தெருவில் இருந்த ஒரு கடையை காண்பித்தார்.
அப்பாடா அடியாரிடமிருந்து உத்தரவு கிடைத்துவிட்டது.
நேரே அந்த கடைக்கு சென்றோம். சுதேசி தயாரிப்பான பவண்டோ கேட்டோம். அது அங்கு இல்லை. வேறு வழி இன்றி மிரிண்டா 2 லிட்டர் பாட்டில் மற்றும் 15 பிளாஸ்டிக் டம்பளர்கள் வாங்கிக்கொண்டோம்.
நாம சங்கீர்த்தனம் செய்துகொண்டிருந்த குழுவினரிடம் வந்து அனைவருக்கும் டம்பளரில் அந்த பானத்தை ஊற்றிக் கொடுத்தோம்.
பரவசத்துடன் வாங்கி அருந்தினார்கள் சிறுவர்கள்.
நமக்கு உள்ளுக்குள் ஒரே சந்தோஷம். மனநிறைவு.
அனைவரும் தாக சாந்தி செய்த பிறகு… பாட்டிலில் மீதம் கொஞ்சம் இருந்தது.
அந்த தெருவின் மற்ற சிறுவர்கள் சிலரும் “அண்ணா எனக்கு… அண்ணா எனக்கு…” என்று ஆளாளுக்கு கேட்க, “இவங்க கூட சேர்ந்து நீங்களும் பாடறீங்களா? இன்னொரு பாட்டில் கூட வாங்கி வந்து தர்றேன்!” என்றோம்.
சற்று தயங்கினார்கள்.
“சரி பரவாயில்லே… பாண்டுரங்கா…. பண்டரிநாதான்னு ஒரு முறை சொல்லுங்க பார்க்கலாம்!”
அனைவரும் “பாண்டுரங்கா… பண்டரிநாதா” என்று கோரசாக முழங்க, பாட்டிலில் எஞ்சியிருந்தவற்றை அந்த சிறுவர்களுக்கு கொடுத்தோம்.
நேரம் ஓடிக்கொண்டிருந்தது.
சரி… வீட்டிற்கு கிளம்பலாம் என்று முடிவு செய்து, அவர்களிடம் இருந்து விடைபெற்றோம்.
அதுவரை மனதை அழுத்திக்கொண்டிருந்த ஒரு பாரம் நீங்கியது போன்று இருந்தது. இராமனையும் தரிசித்து, பசுக்களுக்கு உணவிட்டு, நாம சங்கீர்த்தனத்திலும் சில வினாடிகள் பங்கு பெற்று, அடியார்களுக்கு தாக சாந்தியும் செய்தாயிற்று.
நம்மை பொருத்தவரை இராமநவமி விரதம் பரிபூரணமாக நமக்கு திருப்தி ஏற்படும் வகையில் அனுஷ்டிக்கப்பட்டது. குறைகள் இருந்தால் கோதண்டன் பொறுக்கவேண்டும்.
(இவற்றையெல்லாம் நாம் சொல்வது எதற்காகவென்றால், ஆலய தரிசனத்தின் போதும், விரதத்தை அனுஷ்டிக்கும்போதும் இது போன்ற சூழ்நிலைகளை சந்தித்தால், சுலபமாக நீங்கள் செய்யகூடிய ஆனால் மிகப் பெரிய பலனை தரக்கூடிய சேவைகளை தயங்காது செய்யவேண்டும் என்பதை வலியுறுத்தவே. நாம சங்கீர்த்தனம் செய்வோருடன் சேர்ந்து அவன் நாமத்தை கூறுவதற்கு தயங்கக்கூடாது, கூச்சப்படக்கூடாது. நாம் கூச்சப்படவும், வெட்கப்படவும் எத்தனையோ விஷயங்கள் இருக்கின்றன!)
கிருத யுகத்தில் த்யான மார்க்கத்திலும், த்ரேதாயுகத்தில் யஞ்ஞங்களாலும், துவாபர யுகத்தில் அர்ச்சா வடிவை பூஜிப்பதாலும் கிடைக்கும் பலன் (அதாவது பகவத் அனுக்கிரஹம்) கலியுகத்தில் நாம சங்கீர்த்தனத்திலேயே எளிதில் கிடைத்துவிடும்.
நாடியபொருள் கைகூடும் ஞானமும் புகழும் உண்டாம்
வீடியல் வழியதாகும் வேரியங்கமலை நோக்கும்
நீடிய அரக்கர் சேனை நீறுபட்டழிய வாகை
சூடிய சிலையிராமன் தோள்வலி கூறுவோர்க்கே!
[END]
தங்கள் பதிவு நேரில் சுவாமி தர்சன் செய்தது போன்ற உணர்வு ஏற்பட்டது. நாம் வைகுண்ட ஏகாதசி அன்று இந்த கோவிலில் தரிசனம் செய்ததால் பெருமாளையும், மகாலட்சுமி தாயரையும் நேரில் பார்த்த ஒரு feeling.
நாங்கள் ராம நவமி அன்று வீட்டில் பூஜை செய்து விட்டு அருகில் உள்ள கோவிலுக்கு சென்றோம்
நன்றி
உமா
வாழ்க வளமுடன் .
Nice experience and nice photo sharing.
ராம நவமி விரதம் இருந்தும் என்னால் கோவிலுக்கு செல்ல முடியாத சூழ்நிலை. ஆனால் இந்த பதிவில் ராமரைப் பார்த்தது மிக்க சந்தோசம்.
கலி யுகத்தில் கடவுள் நாமங்களை நினைத்தாலே நமக்கு கோடி புண்ணியம்.கடவுளை நோக்கி நாம் ஒரு அடி எடுத்து வைத்தால் அவன் நம்மை நோக்கி பத்து அடி எடுத்து வைப்பான்.
கஷ்டபடாமல், தியானம் தவம் செய்யாமல் சுலபமாக புண்ணியம் கிடைக்க வழி இருக்கும் போது அதை நாம் கட்டாயமாக செய்யலாம்.
டியர் சுந்தர்
ராமநவமி பதிவும் படங்களும் ஸ்ரீராமரை நேரில் தரிசனம் செய்தது போல் இருந்தது. மிக்க நன்றி
தாங்கள் அனுப்பிய .சுந்தர காண்டம் புத்தகங்கள் மற்றும் ராமர் ஜாதகம் மிகவும் சரியான சமயத்தில் என் கைக்கு கிடைத்தது. (என்ன ஒரு 9 மாதங்கள் தாமதம்) தாமதத்திற்கு காரணம் ஒரு 5 நாளில் தெரிந்தது. அவனுக்கு தெரியாதா – யார் யாருக்கு எப்ப என்ன என்ன கொடுக்கணும் என்று. எண் ராசிப்படி தற்சமயம் ராமர் ஜாதகத்தை வீட்டில் வைத்து பூஜை செய்ய வேண்டும். அதை என் சகோதரர் மூலம் எனக்கு கிடைக்க வைத்த இறைவனின் கருணையை என்னென்று சொல்வது. நான் பணம் கொடுத்தோ அல்லது வேறு யார் மூலமோ கிடைத்திருந்தாலும் இவ்வளவு சந்தோசம் கிடைத்திருக்காது. நம் அனைவரின் நலனுக்காகவும் எப்பொழுதும் இறைவனிடம் பிரார்த்திக்கும் சுந்தர் மூலம் கிடைத்தது மிக்க மகிழ்ச்சி.
ஜெய் ஸ்ரீராம் ! ஜெய் மாருதி !
நான் முன்பே உங்களுக்கு அனுப்பியிருந்தால் இராமர் ஜாதகம் உங்களுக்கு கிடைத்திருக்காது. ஏனெனில், இப்போது தான் சுந்தரகாண்டம் நூல்களுடன் இராமர் ஜாதகத்தையும் இணைத்து அனுப்பி வருகிறேன்.
உங்களுக்கு இராமர் ஜாதகத்துடன் கிடைக்கவேண்டும் என்கிற ப்ராப்தம் போல.
எப்படியோ மிக்க மகிழ்ச்சி.
– சுந்தர்
சிவாய சிவ …ஸ்ரீ ராம ஜெயம் ….சுந்தர் சார் இந்த ராம நவமியில் எங்கள் சார்பாக ஒரு வேண்டுகோள் ….திருகடையூர் அபிராமி அம்மன் அமிர்த கடேஸ்வரர் ஆலயம் செல்லும் வழியில் அதாவது திருகடையூர் பேருந்து நிறுத்தம் எதிரில் “ராம நந்தீஸ்வரர்”திருகோயில் என்னும் 1500 வருடங்களுக்கும் மேற்பட்ட சிவாலயம் செடி,கொடிகள் முளைத்து ,பராமரிப்பு இண்டி ,[முதலமைசர் ஒரு கால பூஜா திட்டத்தின் படி மட்டும் ] காணப்படுகிறது …அதுவும் திருகடையூர் வீதியில் ,மெயின் ரோட்டிலே இருப்பது ….உங்களால் முடியும் …
திருவருள் துணையிருந்தால் நிச்சயம் செய்வோம். நன்றி.
– சுந்தர்
திருவருள் கூடி வரும் சார் …எனக்கு அந்த கோயிலை பார்த்ததும் முதலில் உங்க நினைவு தான் வந்தது சார் ..கண்டிப்பா சுந்தர் சார் ஆண்டவன் துணை நிற்பான் ….
Sairam Sundarji,
WE had “Sai Bhajan” at our house, on Ramnavami day. Everyone sang Ram Bhajan and there was 100% positive vibration in the entire house. Generally we are not suppose to keep any prasadam for the sai bhajan, because people start comparing and keep costly prasadams. Only kumkum and vibhuti is given as a prasad to maintain the uniformity. Since it was Lord Rama’s Bday, I had bought mawa cup cakes (healthy cakes – i.e no maida/eggs). After the bhajan got over, everybody told me that “Payasam” should have been kept as a prasad. I just cracked joke saying that “Ram Bhagwan was bored eating only payasam in Tretha Yuga, so HE requested me to keep something unique prasad. So I thought since this is kalyug, and in modern times better to keep Cake as a prasad. Everybody had a hearty laugh and I could feel thatLLord also was very happy to have cakes as prasad).
sairam
shashi