Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Tuesday, March 19, 2024
Please specify the group
Home > Featured > விதியை மாற்றி எழுதிய சிவபுண்ணியம் – கர்மா Vs கடவுள் (4)

விதியை மாற்றி எழுதிய சிவபுண்ணியம் – கர்மா Vs கடவுள் (4)

print
மது ‘கர்மா Vs கடவுள்’ தொடரில் மிக மிக முக்கியமான அத்தியாயம் இது. ‘ஏற்கனவே தீர்மானிக்கப்பட்ட நமது விதிப்படி தான் அனைத்தும் நடக்கிறது. அதை மாற்ற முடியாது’ என்கிற கருத்து பலரை ஆட்டிப்படைக்கிறது. ஆனால் ‘அதை மாற்ற முடியும். இந்த மண்ணில் யாவரும் நல்ல வண்ணம் வாழலாம், எண்ணில் நல்லகதிக்கு யாதுமோர் குறைவிலை’ என்று உணர்த்துவதே இந்த தொடரின் நோக்கம். ஆனால் இது மந்திரத்தில் மாங்காய் வரவழைக்கும் முயற்சியல்ல. உங்கள் எண்ணங்களையும், சிந்தனை ஓட்டத்தையும் முற்றிலும் மாற்ற நடக்கும் வேள்வி. அதை நினைவில் வைத்திருங்கள்!

ந்த கதையை நீங்கள் ஏற்கனவே கேள்விப்பட்டிருக்கலாம். படித்திருக்கலாம். கேட்டிருக்கலாம். ஆனால் நமது பாணியில் அதை தந்திருக்கிறோம். கவனத்துடன் படிக்கவும்.

அவர் ஒரு பிரபல ஜோதிடர். அவர் ஒருவருடைய ஜாதகத்தை கணித்து ஒரு விஷயத்தை சொன்னால், அது அந்த பிரம்மாவே சொன்னது போல. அந்தளவு ஜோதிடத்தில் பாண்டியத்மும் நிபுணத்துவமும் பெற்றவர். எனவே அவரை சந்தித்து தங்கள் எதிர்கால பலன்களை தெரிந்துகொள்ள பல ஊர்களில் இருந்தெல்லாம் மக்கள் வருவார்கள்.

தனது எதிர்காலம் குறித்தும் மிகவும் கவலை கொண்ட ஒரு ஏழை கூலித் தொழிலாளி அந்த ஜோதிடரை சந்திக்க வந்தான்.

“நான் மிகவும் வறுமையில் இருக்கிறேன். கடன் பிரச்சனை வேறு என்னை வாட்டுகிறது. எனக்கு இரண்டு பெண் குழந்தைகள் வேறு. அவர்களை எப்படி கரையேற்றப் போகிறேன் என்று தெரியவில்லை. நான் நன்றாக வாழ ஏதாவது வழி இருக்கிறதா? என்று என் ஜாதகத்தை பார்த்துச் சொல்லுங்கள்” என்று தன் ஜாதகத்தை கொடுத்தார்.

ஜோதிடரும் அந்த ஏழை தொழிலாளியின் ஜாதகத்தை கணிக்கத் தொடங்கினார். சோழிகளை உருட்டிப்போட்டார். கட்டங்களாய் ஆராய்ந்தார். ஒரு கட்டத்தில் ஜோதிடரின் முகம் சுருங்கியது.

பிறகு தொழிலாளியிடம், “ஐயா எனக்கு இன்றைய தினம் மிகவும் முக்கியமான பணி ஒன்று இருக்கிறது. உங்கள் ஜாதகத்தை சற்று விரிவாக ஆராயவேண்டி இருக்கிறது. எனவே அது என்னிடம் இருக்கட்டும். நீங்கள் இன்று போய் நாளை இதே நேரத்திற்கு வாருங்கள். நான் உங்களுக்கு அனைத்தையும் சொல்லிவிடுகிறேன்” என்றார்.

“சரிங்க ஐயா நான் நாளைக்கு வர்றேன். இப்போ பார்த்ததுக்கு எதாச்சும் தரணுமா ஐயா?” என்று ஜோதிடரிடம் கேட்டார்.

“அதெல்லாம் ஒன்னும் வேண்டாம்… நாளைக்கு வரும்போது கொடுங்க போதும்…”

“ரொம்ப நன்றிங்க ஐயா… நான் நாளைக்கு வர்றேன்…”

தொழிலாளி அங்கிருந்து புறப்பட்டார்.

அப்போது அங்குவந்த ஜோதிடரின் மூத்த மகள், “”அப்பா… ஏன் அவர்கிட்டே அவசர வேலை இருக்குன்னு சொல்லி அனுப்பினீங்க? இன்னைக்கு எனக்கு வேலை எதுவும் இல்லை. முழுக்க முழுக்க வர்றவங்களுக்கு ஜாதகம் தான் பார்த்து பலன் சொல்லப்போறேன்னு சொன்னீங்க?” என்று கேட்டாள்.

அதற்கு ஜோதிடர், “அம்மா… அவரது ஆயுட்காலம் இன்றிரவு முடியப்போகிறது. அவரது ஜாதகம் உணர்த்துவது அதைத் தான். மேலும் சோழி உருட்டிகூட பார்த்துவிட்டேன். பரிகாரம் செய்வதற்கு கூட அவருக்கு அவகாசம் இல்லை. இதை அவரிடம் தெரிவிக்க மனமில்லை. அதனால்தான் பொய் சொல்லி அவரை இங்கிருந்து அனுப்பினேன்… பாவம்…” என்றார்.

இதற்கிடையில் அந்த தொழிலாளி தனது ஊரைநோக்கி வயல்வெளிகளுக்கு இடையே நடந்து கொண்டிருந்தார்.

அப்போது திடீரென வானம் மேகமூட்டமாகி இருள் சூழ்ந்தது. சிறிது நேரத்தில் மழைதூற ஆரம்பித்து வலுப்பெற்று, இடியுடன் பலத்த மழை கொட்டியது.

வயல்வெளிக்குள் ஒதுங்க இடமின்றி, ஓட்டமும் நடையுமாக அந்த தொழிலாளி விரைந்து நடக்க ஆரம்பித்தான். சற்று தூரத்தில் ஏதோ ஒரு ஆள் அரவமற்ற கோவில் போன்ற கட்டிடம் ஒன்று தென்பட, அதை நோக்கி ஓடினான் தொழிலாளி.

Ruined siva temple restoration 2

அது ஒரு பாழடைந்த சிவன் கோவில். அங்குசென்று மழைக்கு ஒதுங்கினான் அந்த தொழிலாளி.

மண்டபத்தில் நின்றிருந்த அவர் சிதிலமடைந்து கிடக்கும் கோவிலின் நிலைமையைக் கண்டு மிகவும் வருந்தினார். “ஈசன் குடியிருக்கும் கோவில் இப்படி கவனிப்பாரற்று சிதிலமடைந்து காணப்படுகிறதே… நான் மட்டும் ஏழையாக இல்லாமல் பணவசதியுடன் இருந்தால் இந்த கோவிலைப் புதுப்பித்து கும்பாபிஷேகம் செய்துவிடுவேன்’ என்று நினைத்துக்கொண்டார்.

அத்துடன் அவர் மனஓட்டம் நிற்காமல் சிவன் கோவிலை தான் புதுப்பிப்பதாக மானசீகமாக நினைத்துக்கொண்டார். கோபுரம், ராஜகோபுரம், பிராகாரங்கள், மண்டபங்களை திருப்பணி செய்து சீரமைத்தார். கும்பாபிஷேகத்திற்கு புரோகிதர்களை அமர்த்தி வேத மந்திரங்கள் முழங்க திருக்குடத்தை ஊர்வலமாக எடுத்துவந்து கும்பாபிஷேகம் நடத்தி, கருவறையில் உறையும் இறைவனை வணங்குவதுபோல் தனது சிந்தனையை ஓடவிட்டார்.

அந்த சிந்தனையினூடே அவர் மண்டபத்தின் மேற்பகுதியைப் பார்த்தபோது, அங்கே அவரது தலைக்குமேல் நல்ல பாம்பு ஒன்று படமெடுத்து அவரை கொத்த தயாராக இருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தார். வினாடி கூட தாமதிக்காமல் அம்மண்டபத்தை விட்டு வெளியே ஓடினார்.

========================================================

For earlier episodes…

கர்மாவும் ஒன்றுக்கு பத்தும் – கர்மா Vs கடவுள் (3)

நம் தலைவிதியை மாற்ற முடியுமா? பெரியோர்கள் என்ன கூறுகிறார்கள்? – கர்மா Vs கடவுள் (2)

ஊழ்வினையை அனுபவித்தே தீரவேண்டுமா? அது அத்தனை சக்திமிக்கதா? கர்மா Vs கடவுள் (1)

========================================================

இவர் வெளியே வந்தது தான் தாமதம், அடுத்த நொடி ஒரு பேரிடி விழுந்து அந்த மண்டபம் இருந்த பகுதி அப்படியே நொறுங்கி தூள் தூளானது. அதில் ஒரு கல்லானது இவர் கால் மேல் விழுந்து தெறிக்க சிறு காயத்துடன் இவர் தப்பினார். நாகத்தை கண்ட அதிர்ச்சியிலிருந்தே மீளாத அந்த தொழிலாளி மேலும் அதிர்ச்சியில் உறைந்துபோனார். அப்போது சரியாக இரவு ஏழரை மணி.

வீட்டுக்கு சென்று தன் மனைவி மக்களிடம் தான் தப்பித்த கதையை திகிலுடன் கூறினார்.

மறுநாள் மாலை வழக்கம்போல ஜோதிடரை சந்திக்க சென்றார். தொழிலாளியை பார்த்த ஜோதிடருக்கு ஆச்சரியம் தாங்க முடியவில்லை. அவரை வரவேற்று அமரவைத்துவிட்டு ஒருவேளை தான் சரியாக பலன் கணிக்கவில்லையா என்ற சந்தேகத்துடன் மீண்டும் அந்த தொழிலாளியின் ஜாதகத்தை ஆராய்ந்தார்.

ஜோதிட நூல்களை, ஓலைச் சுவடிகளை மீண்டும் புரட்டினார். அவர் கணக்கு சரியாகவே இருந்தது. பின் அவர் எப்படி பிழைத்தார்? இதுபோன்ற கண்டத்திலிருந்து தப்பிக்கவேண்டுமென்றால், அந்த நபர் சிவன் கோவில் ஒன்றைக் கட்டி அதற்கு கும்பாபிஷேகம் செய்த புண்ணியம் பெற்றிருக்கவேண்டும் என்று ஜோதிட நூல்களில் பரிகாரம் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் இவரோ பரம ஏழை. அந்த பரிகாரத்தை இவர் சொல்லியிருந்தாலும் அதை இவரால் செய்திருக்க முடியாது. இவரால் எப்படி கோவில் கட்டி கும்பாபிஷேகம் செய்யமுடியும்? அதுவும் ஒரு இரவுக்குள்? இப்படி பலவாறு சிந்தித்தபடி, “நேற்றிரவு என்ன நடந்தது?” என்று அந்த தொழிலாளியிடம் கேட்டார்.

ஜோதிடர் தான் சென்றபோது மழை பெய்ததையும், அப்போது மழைக்கு ஒரு பாழடைந்த சிவாலயத்தின் பக்கம் தான் ஒதுங்கியதையும் கூறினார்.

மேற்கொண்டு என்ன நடந்தது என்று ஜோதிடர் ஆர்வத்துடன் கேட்க, இவர் அந்த சிதிலமடைந்த ஆலயத்தை பார்த்த வருத்தமுற்றதாகவும், பணமிருந்தால் கும்பாபிஷேகம் செய்து வைக்கலாமே என்று தான் கருதியதாகவும் கூறினார்.

ஜோதிடருக்கு அடுத்த நொடி அனைத்தும் விளங்கிவிட்டது. இந்த தொழிலாளி மனதளவில் செய்ய நினைத்த சிவாலய புனருத்தாரனமும் கும்பாபிஷேகமுமே அவருக்கு முழுமையான பலன்களை தந்து ஈசனருளால் அவரது விதி மாற்றி எழுதப்பட்டதை உணர்ந்துகொண்டார்.

“இது உங்களுக்கு மறுஜென்மம். அதுவும் ஈசன் கொடுத்த ஜென்மம். இனி உங்களுக்கு எந்தக் குறையும் இருக்காது போய் வாருங்கள்” என்று அவரை வழியனுப்பி வைத்தார்.

ஆக, போகிற போக்கில் நம்மிடம் தோன்றும் நல்ல சிந்தனை கூட நமது விதியை மாற்ற வல்லவை. எனவே எப்போதும் நல்லதையே நினைக்கவேண்டும். அந்த தொழிலாளிக்கு அடிப்படையிலேயே நல்ல சிந்தனையும் பக்தியும் இருந்ததால் மழைக்கு ஒதுங்கிய இடத்தில் அப்படி ஒரு சிந்தனை தோன்றி அதன் மூலம் விதி மாற்றி எழுதப்பட்டது.

இது ஏன் உங்கள் வாழ்விலும் நடக்காது?

நிச்சயம் நடக்கும். அதற்கு நீங்கள் சிவபுண்ணியச் செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வரவேண்டும்.

சிவபுண்ணியம் என்பது மிக மிக எளிமையானது. ஆனால், தலையெழுத்தையே மாற்றவல்லது. அந்த தொழிலாளி அன்றிரவு இடி தாக்கி மரணமடையவேண்டும் என்பது விதி. ஆனால் அவர் மனதால் செய்த சிவபுண்ணியம் அவரை கடைசி நேரத்தில் காப்பாற்றிவிட்டது. இதன் பெயர் தான் வினை சுருங்குதல். அதாவது அனுபவித்தே தீரவேண்டும் என்ற விதியை மாற்றுவது. தலைக்கு வருவதை தலைப்பாகையோடு போகச் செய்யும் சக்தி சிவபுண்ணியத்துக்கு உண்டு. கர்மவினைக் கொள்கை சிவனை வழிபடுகிறவர்களிடம் எடுபடாது. இதை நாம் சொல்லவில்லை திருஞானசம்பந்தரே சொல்லி இருக்கிறார்.

Sivalingam3

தொண்டணை செய்தொழில் துயரறுத் துய்யலாம்
வண்டணை கொன்றையான் மதுமலர்ச் சடைமுடிக்
கண்டுணை நெற்றியான் கழுமல வளநகர்ப்
பெண்டுணை யாகவோர் பெருந்தகை யிருந்ததே.

சீர்காழி பிரம்மபுரீஸ்வரரை நோக்கி சம்பந்தப் பெருமான் பாடிய இந்தப் பாடலின் பொருள் என்ன தெரியுமா?

“தொன்றுதொட்டு உயிர்களைப் பற்றி வருகின்ற வினையால் உண்டாகும் துன்பத்தை நீக்கி உய்விக்கும் பொருட்டு , வண்டுகள் மொய்க்கின்ற தேனையுடைய கொன்றை மலர்களைச் சடைமுடியில் அணிந்தும், நெற்றியில் ஒரு கண் கொண்டும், கழுமலம் (சீர்காழி) என்னும் வளநகரில் உமாதேவியை உடனாகக் கொண்டும் பெருந்தகையாகிய சிவபெருமான் வீற்றிருந்தருளுகின்றான்!” 

ஆம்… நமக்கு அருள் செய்வதற்கென்றே காத்திருக்கிறான் அந்த காருண்யமூர்த்தி! அவன் கழல் பற்றுவோர் பாக்கியசாலிகள்!!

‘சிவபுண்ணியம்’ என்கிற வார்த்தை எத்தனை வலிமையானது என்று இப்போது உங்களுக்கு புரிந்திருக்கும் என்று நம்புகிறோம்!

கடவுள் Vs கர்மா தொடர் இனி சிவபுண்ணியம் என்றால் என்ன, என்னென்ன செயல்கள் சிவபுண்ணியத்தை தரவல்லவை என்று விளக்கும் தொடராக பயணிக்கும். பிரத்யேக ஓவியங்களும் அதிர வைக்கும் தகவல்களும் நிகழ்வுகளும் இந்த தொடரில் உண்டு!

‘கடவுள் Vs கர்மா Vs சிவபுண்ணியம்’ தொடரும்…

==========================================================

* To those who are new to this website

We need your SUPPORT. Help Rightmantra in its functioning. Click here!

==========================================================

Don’t miss this…

லய தரிசனமும், விரதமும், வழிபாடும் ‘ஆன்மிகம்’ என்னும் ஆலமரத்தில் ஒரு சிறு கிளை. அவ்வளவே. அது ஒன்றே ஆன்மீகம் ஆகிவிடாது. இறையருளையும் பெற்றுத் தராது. இறைவனை தேடி நாம் போகாமல் இறைவனை நம்மை தேடி வரச் செய்யவேண்டும். அது தான் ஆன்மிகம்.

போகிற போக்கில் மனதில் இருக்கும் சிறு ஈரத்தால் நாம் செய்யும் ஒரு செயல், இறைவனை நம் பக்கம் ஈர்த்து நமது வாழ்க்கையையே மாற்றிவிடும்…

எப்படி தெரியுமா?

பாசமுள்ள பார்வையிலே ‘கடவுள்’ வாழ்கிறான்… சரித்திரம் கூறும் உண்மை நிகழ்வு!

==========================================================

For similar articles….

பாடுபட்டு சம்பாதிக்கும் புண்ணியம் ஏன் தங்குவதில்லை தெரியுமா?

ஒரு பாவமும் அறியாத எனக்கு மட்டும் ஏன் இப்படி? கேள்வியும் பதிலும்!

ரைட்மந்த்ரா பிரார்த்தனை கிளப் – வாருங்கள் விதியை மாற்றுவோம்!

வெற்றிகரமான பிரார்த்தனைக்கு ஒரு வழிகாட்டி!

உங்கள் பிரார்த்தனைகள் சுலபமாக நிறைவேற வேண்டுமா?

அபலையின் கண்ணீரை துடைத்த ஆபத்பாந்தவன்!

========================================================

[END]

6 thoughts on “விதியை மாற்றி எழுதிய சிவபுண்ணியம் – கர்மா Vs கடவுள் (4)

  1. இந்த கதையை நான் ஏற்கனவே அறிந்திருக்கிறேன். ஆனாலும் தங்கள் எழுத்து நடையால் மறுமுறை வாசிக்கும்போது மிகவும் சுவையாக இருக்கிறது. அது தவிர தலைவரின் அடியார்களின் கதைகளையும், இது போன்று சிவபுண்ணிய கதைகளையும் இந்த ஜென்மம் முழுவதும் படிதுக்கொண்டேயிருக்கலாம்.

    ஓம் நமசிவாய.

  2. அருமையான கதை. அற்புதமான ஓவியம். அதியற்புதமான கருத்து.

    கதை முடிந்தவுடன், நீங்கள் கொடுத்துள்ள அந்த விளக்கம் அபாரம். ஒவ்வொரு வரியும் பொருள் பொதிந்தவை.

    சிவபுண்ணியதிற்கு உள்ள மகத்துவத்தை இதை விட எளிதில் புரியவைக்கமுடியாது. நமது ஓவியர் ரமீஸ் அவர்களுக்கு நமது பாராட்டுக்கள்.

    சிவபுண்ணியம் குறித்த தொடரை ஆவலோடு எதிர்பார்க்கிறோம்.

    – பிரேமலதா மணிகண்டன்,
    மேட்டூர்

  3. சுந்தர்ஜி அவர்களுக்கு இனிய காலை வணக்கம் . ” சிவாயம் என்போர்க்கு அபாயம் இல்லை ”
    “கந்தையில் அழுக்கிருந்தால் கசக்கி விடு சிந்தையில் அழுக்கிருந்தால் சிவனை நினைத்திடு ” விதி வலியது , விதியை மாற்ற இயலாது என்ற விதி இருந்தாலும் அந்த விதியை திருத்தி அமைக்க வல்லவர் நம் தலைவர் . அவரை தொழுது நம் பிறவி பிணிகளை களைவோம் .
    சிவ புண்ணியம் மகா பாக்கியம்

  4. டியர் ஜி,

    இது போன்ற ஒரு ( not same as life threat ) இனிய சம்பவம் என் வாழ்விலும் நடந்தது. அதை நம் வாசக நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள விழைகிறேன்.

    2 அல்லது 3 வருடங்களுக்கு முன்பு என் முன்னாள் சக ஊழியரின் (Ex – கொலிக்) திருமணம் சென்னை ஆவடியில் நடந்தது. அங்கு சென்று நண்பரின் திருமணத்தில் கலந்து கொண்டு திரும்பும் வழியில் மார்க்கெட் அருகில் உள்ள கற்பக விநாயகர் கோயிலுக்கு சென்று ” என்னை வாழ்வில் நல்ல நிலைமையில் வைத்தால் உனக்கு ஒரு விளக்கு எற்றுகிறேன் ” என்று இந்த கதையில் வருவது போல் “உளமார” பிரார்த்தனை செய்து கொண்டு வந்தேன்.

    நான் அப்போது மந்தைவெளி பகுதியில் வசித்து வந்தேன். எனவே பெரிய பெரிய அபிஷேகம் போன்று எதுவும் வேண்டவில்லை. (Transport & arrangement கருதி )

    1 வருட இடைவெளியில் கற்பக விநாயகர் ஒரு வீட்டையே அந்த பகுதியில் அளித்து அருள் புரிந்தார். கடந்த 15 நாட்களுக்கு முன்புதான் அந்த வீட்டிற்கு குடிபுகுந்தேன், அன்று சாயங்காலம், வேண்டியபடி அவருக்கு விளக்கு ஏற்றி விட்டு பின்புதான் எங்கள் வீட்டில் விளக்கு ஏற்றினொம்.

    சிவனை போன்றே சிவ சுதனும் அருள் சுரந்தார்!

    நன்றிகள் பல……

    அன்பன்
    நாகராஜன் ஏகாம்பரம்

    1. வாழ்த்துக்கள் ஜி!

      அற்புத கீர்த்தி வேண்டின்
      ஆனந்த வாழ்க்கை வேண்டின்
      நற்பொருள் குவிதல் வேண்டின்
      நலமெலாம் பெருகவேண்டின்
      கற்பக மூர்த்தி தெய்வக்
      களஞ்சியத் திருக்கை சென்று
      பொற்பதம் பணிந்து பாரீர்!
      பொய்யில்லை கண்ட உண்மை.
      – கவிஞர் கண்ணதாசன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *