Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Tuesday, March 19, 2024
Please specify the group
Home > Featured > கர்மாவும் ஒன்றுக்கு பத்தும் – கர்மா Vs கடவுள் (3)

கர்மாவும் ஒன்றுக்கு பத்தும் – கர்மா Vs கடவுள் (3)

print
ர்மா என்றால் என்ன? அதை நாம் வெல்ல முடியாதா? அனுபவித்தே தீரவேண்டுமா? அப்படியெனில் கடவுள் எதற்கு? கோவில்கள் எதற்கு? வழிபாடு எதற்கு? பரிகாரங்கள் எதற்கு? என்ற கேள்விகள் எழுகிறதல்லவா…!

அதற்கு விடை கூறவே இந்த தொடரை துவக்கினோம். இரண்டு அத்தியாயங்கள் முடிந்த சூழ்நிலையில், தற்போது மூன்றாம் அத்தியாயத்தை தருகிறோம். பல வாசகர்கள் மூன்றாவது அத்தியாயம் எப்போது வரும் என்று கேட்டபடி இருந்தனர்.

முதலில் கர்மாவை பற்றி சரியாக புரிந்துகொள்வோம்.

சுவற்றில் அடித்த பந்து திரும்ப வரும். அது விதி. அதே பந்து பத்து மடங்கு வேகத்தில் திரும்ப வந்தால்….?

அதன் பெயர் தான் ‘கர்மா’.

karmaநீங்கள் செய்யும் நல்ல செயலோ, தீய செயலோ ஒன்றுக்கு பத்து மடங்கு உங்களுக்கு திரும்ப கிடைக்கும். அது தான் கர்மா. இதிலிருந்து யாரும் தப்ப முடியாது.

உங்களுக்கு நடக்கப்போவது என்ன என்பது உங்கள் விதியை பொருத்தது. ஆனால் தற்போது நீங்கள் எப்படி நடந்துகொள்கிறீர்கள் என்பது உங்கள் மதியை பொருத்தது. விதிக்கும் மதிக்கும் உள்ள வித்தியாசம் இது தான்.

எனவே சொல்லாலும், செயலாலும், எண்ணத்தாலும் யாருக்கும் எந்த தீமையையும் செய்யக்கூடாது.

சிறு பாவமானாலும் அதற்குரிய தண்டனையை அடைந்தே தீரவேண்டும் அதுவும் பத்து மடங்கு.

சிறு பாவத்திற்கு எப்படி பெருந்தண்டனை கிடைக்கும்?

========================================================

For earlier episodes…

நம் தலைவிதியை மாற்ற முடியுமா? பெரியோர்கள் என்ன கூறுகிறார்கள்? – கர்மா Vs கடவுள் (2)

ஊழ்வினையை அனுபவித்தே தீரவேண்டுமா? அது அத்தனை சக்திமிக்கதா? கர்மா Vs கடவுள் (1)

========================================================

புராண காலங்களில் நம் நாட்டில் எத்தனையோ தேசங்கள் இருந்தன. அவற்றுள் ஒன்று சாலவ தேசம். செழிப்பும் வனப்பும் மிக்க ஒரு நாடு. ஒரு சமயம் அரண்மனையில் புகுந்து பொக்கிஷங்களை கொள்ளையடித்த சில திருடர்கள் கொள்ளையடித்த செல்வங்களுடன் தப்பியோடினர். அவர்களை அரண்மனைக் காவலர்கள் துரத்தி வந்தனர். கானகத்துக்குள் புகுந்த கொள்ளையர்கள் கானகத்தில் இருந்த ஒரு ஆஸ்ரமத்தை கண்டு, அதனுள் சென்று பதுங்கி கொண்டனர். கொள்ளையர்கள் வந்த நேரம் அங்கிருந்த முனிவர் நிஷ்டையில் இருந்தபடியால் கொள்ளையர்களுக்கு வசதியாக போய்விட்டது. அந்த ஆஸ்ரமம் மாண்டவ்யருக்கு சொந்தமானது. மகா தபஸ்வி.

karma law

கொள்ளையர்களை தேடி வந்த காவலர்கள், இவரது ஆஸ்ரமத்துக்கு வந்து இவரிடம் விசாரித்தனர். மாண்டவ்யர் நிஷ்டையில் இருந்ததால், காவலர்களுக்கு பதில் சொல்லவில்லை. காவலர்கள் உள்ளே புகுந்து தேடியபோது அங்கு மறைந்திருந்த திருடர்களையும், கொள்ளையடித்த பொருட்களையும், கண்டனர். மாண்டவ்யர் தான் இவர்களுக்கு தலைவனாக இருக்கவேண்டும் என்று கருதி அரசனிடம் நடந்த அனைத்தையும் கூறினார்.

தீர விசாரித்து தீர்ப்பு வழங்கவேண்டும் என்பதை உணராத மன்னன், “ஓஹோ… சந்நியாசி வேடத்தில் ஒரு கொள்ளைக்கூட்ட தலைவனா? அவனையும் அவனது கூட்டாளிகளையும் உடனே கழுவிலேற்றுங்கள்” என்றான்.

mandavyar

கழுவிலேற்றப்பட்ட திருடர்கள் மடிந்துவிட, மாண்டவ்யர் மட்டும் மாளவில்லை. தவத்திலும் தியானத்திலும் இருந்த மாண்டவ்யருக்கு தன் உடலைப் பற்றிய உணர்வு எதுவுமே இல்லை.

இதே நேரம் பிரதிஷ்டினாபுரம் என்கிற ஒரு ஊரில், மௌத்கல்யர் என்பவர் தொழுநோய் கண்டு அவதியுற்றார். அவர் மனைவி நளாயினி. சிறந்த கற்புக்கரசி. கணவனே கண்கண்ட தெய்வம் என்று வாழ்ந்து வந்தவள்.

மௌத்கல்யரை சிற்றின்ப வேட்கை வாட்டியெடுக்க, தன் மனைவியிடம் தன்னை தாசியிடம் அழைத்துச் செல்லும்படி கேட்டுக்கொண்டார். உடனே தனது கணவனை ஒரு கூடையில் வைத்து தன் தலைக்கு மேல் அதை சுமந்து தாசி வீட்டை நோக்கி புறப்பட்டாள் நளாயினி. அவ்வாறு செல்லும்போது வழியில் அரண்மனையில் திருடியதாகக் குற்றம் சாட்டப்பட்டு கழுவில் ஏற்றப்பட்ட மாண்டவ்யரை கடக்க நேர்ந்தது. இருளில் கழுமரம் சரியாக கண்களுக்கு தெரியவில்லை.

நளாயினி தன் கணவனைச் சுமந்து சென்ற கூடையின் ஒரு முனை அக்கழுவில் இடித்தது. மாண்டவ்யரின் நிஷ்டை இதனால் கலைந்தது. வலியால் துடித்தார். வலி பொறுக்காமல் ”எவன் என்னை இடித்தானோ அவன் நாளை சூரியோதயத்தில் சாகக்கடவன்!” என்று சபித்தார்.

இதைக் கேட்ட நளாயினி, “சூரியன் உதயமானால் தானே கணவனின் உயிருக்கு ஆபத்து? நாளை சூரியனே உதிக்காமல் போகட்டும்” என்று பதில் சாபமிட்டாள்.

கற்புக்கரசியின் வார்த்தையாதலால் அது உடனே பலித்தது. சூரியன் உரிய நேரத்தில் உதயமாகவில்லை. மூன்று நாட்கள் சூரியன் தொடர்ந்து உதிக்கவில்லை. உலகம் இருளில் சிக்கித் தவித்தது.

உயிர் சுழற்சி பாதிக்கப்பட்டது. எங்கும் குழப்பம் தலைவிரித்தாடியது. வேள்விகள் தடைபப்ட்டதால் தேவர்கள் கலக்கமடைந்தனர். அசுரர்கள் ராஜ்ஜியம் இதனால் ஏற்பட்டுவிடக்கூடாதே என்று கலங்கினர்.

பிரும்மதேவரிடம் சென்று முறையிட்டனர். அவர் ஒரு பதிவிரதையின் கோபத்தை மற்றொரு பதிவிரதை மூலமே தணிக்கவேண்டும் என்று கருதி, அத்திரி மகரிஷியின் பத்தினி அனுசூயாவை சந்தித்து அவள் பாதம் பணிந்தனர்.

அவள் நளாயினியை நான் சாந்தப்படுத்துகிறேன் என்று கூறி, நளாயினியை சென்று சந்தித்து, சூரியன் உதயமாகாததால் தேவர்கள் உட்பட அனைவரும் படும்பாட்டை சொல்லி, ”நளாயினி உன் சாபத்தை விலக்கிக் கொள். சூரியன் உதிக்கட்டும். உன் கணவர் இறந்தவுடனே, என் ஆற்றலால் நான் அவரை உயிர்பித்துத் தருகிறேன்”

நளாயினியும் சம்மதிக்க, இருள் நீங்கி உலகம் ஒளியை பெற்றது. மௌத்கல்யரும் மாண்டவயரின் சாபத்தால் மறித்தாலும் மீண்டும் உயிர்பிழைத்துக்கொண்டார்.

உண்மையை பிற்பாடு தெரிந்துகொண்ட சாலவ மன்னன், மாண்டவ்யரிடம் நடந்தவற்றுக்கு மன்னிப்பு கேட்டு அவரை தண்டனையிலிருந்து விடுவித்தான். எனினும் கழுவிலிருந்து அவரை முழுமையாக விடுவிக்க முடியவில்லை. எனவே மாண்டவ்யரின் உடலுக்கு வெளியே உள்ள கழு மரத்தின் பகுதிகளை மட்டும் வெட்டி எடுத்தனர். கழுவின் ஒரு பகுதியை உடலுடன் தாங்கிக் கொண்டே பயணித்த மாண்டவ்ய முனிவர் ‘ஆணி மாண்டவ்யர்’ என்ற பெயரால் அறியப்பட்டார்.

பின்னர் மாண்டவ்யர், எம தர்மராஜனிடம் சென்று ஒரு தவறும் செய்யாத தான் கழுவில் ஏறி தண்டனை அடைய காரணம் கேட்டார்.

அதற்கு எமன், “நீங்கள் சிறுவனாக இருந்த போது, தும்பியை பிடித்து அதை ஊசியால் குத்தி துன்புறுத்தினீர்கள். அதன் வாலில் நூலைக் கட்டி பறக்கவிட்டீர்கள். அந்த பாவமே பிற்காலத்தில் நீங்கள் செய்யாத தவறுக்கு கழுவில் ஏற்றப்படக் காரணமாயிற்று” என்றான்.

“நீ சொல்வது உண்மை. ஆனால் குழந்தைகள் செய்யும் தவறுகளைச் சாத்திரங்கள் பாவமாக கொள்ளாது, மேலும் அது என்னை நல்வழிப்படுத்த தவறிய பெற்றோர்களையே சாரும். சிறு குற்றத்திற்காக என்னைக் கொடுமையாக தண்டித்தபடியால், நீ பூலோகத்தில் தாழ்த்தப்பட்ட வகுப்பில் பிறந்து சபையில் நான்கு பேருக்கு நடுவே அவமதிக்கப்படுவாய்” என்று எமதர்மராஜனுக்கு சாபமிட்டார்.

எமதர்மராஜனே பிற்காலத்தில் விதுரராக பிறந்து, ‘விதுர நீதி’ என்னும் நூலை உபதேசித்தார்.

சிறுவயதில் என்ன பாவம் வேண்டுமானாலும் செய்யலாம் என்பதல்ல இதன் நீதி. குழந்தைகளுக்கு நல்லது கெட்டது தெரியாத பருவத்தில் பெற்றோரே அவர்களை நல்வழிப்படுத்தவேண்டும். மேலும் நாம் செய்யும் சிறு பாவம் கூட ஒன்றுக்கு பத்தாய் நம்மை திருப்பி தாக்கும் என்பதை அனைவரும் உணரவேண்டும்.

பாவம் என்னும் பெருந்தீக்கு அஞ்சுவோம்.

தீயவை செய்தார் கெடுதல் நிழல்தன்னை
வீயாது அடிஉறைந் தற்று – தீவினையச்சம் – குறள் 208

தீய செயல்களைச் செய்தவர் கேட்டை அடைதல், ஒருவனுடைய நிழல் அவனை விடாமல் வந்து அடியில் தங்கியிருத்தலைப் போன்றது.

(… தொடரும்)

========================================================

Support Rightmantra in its mission!

Rightmantra.com is a website that focuses on Spirituality, Self-development and True values without any commercial interest. We are running full-time. Give us your hand. Help us to SUSTAIN. Donate us liberally.

Our A/c Details: Rightmantra Soul Solutions   A/c No. : 9120 2005 8482 135
Account type : Current Account   Bank : Axis Bank, Poonamallee, Chennai – 600 056.
IFSC Code : UTIB0001182

Rightmantra Soul Solutions, Room No.64, II Floor, Murugan Complex, (Opp.to Data Udupi Hotel), 82, Brindavan Street, West Mambalam, Chennai-600033.
Phone : 044-43536170 | Mobile : 9840169215

ரைட்மந்த்ரா தொய்வின்றி தொடர உதவிடுங்கள்!

========================================================

For similar articles….

பாடுபட்டு சம்பாதிக்கும் புண்ணியம் ஏன் தங்குவதில்லை தெரியுமா?

ஒரு பாவமும் அறியாத எனக்கு மட்டும் ஏன் இப்படி? கேள்வியும் பதிலும்!

ரைட்மந்த்ரா பிரார்த்தனை கிளப் – வாருங்கள் விதியை மாற்றுவோம்!

வெற்றிகரமான பிரார்த்தனைக்கு ஒரு வழிகாட்டி!

உங்கள் பிரார்த்தனைகள் சுலபமாக நிறைவேற வேண்டுமா?

அபலையின் கண்ணீரை துடைத்த ஆபத்பாந்தவன்!

========================================================

[END]

 

One thought on “கர்மாவும் ஒன்றுக்கு பத்தும் – கர்மா Vs கடவுள் (3)

  1. வினை விதைத்தவன் வினை அறுப்பான் என்பதை மிக மிக அருமையாக பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி சார்.

    சோ. ரவிச்சந்திரன்
    கர்நாடகா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *