Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Tuesday, March 19, 2024
Please specify the group
Home > Featured > கேட்பதை தருவார், கேட்டதும் தருவார் குருராஜர் – ஸ்ரீ ராகவேந்திர தரிசனம் 3

கேட்பதை தருவார், கேட்டதும் தருவார் குருராஜர் – ஸ்ரீ ராகவேந்திர தரிசனம் 3

print
சென்ற அத்தியாயத்தில் போரூரை சேர்ந்த சுகுமாரன் என்பவரின் வாழ்க்கையில் ராயர் புரிந்த அற்புதத்தை பார்த்தோம். தற்போது அதன் தொடர்ச்சி…

திரு.சுகுமாரன் அவர்களின் வாழ்வில் ராயர் புரிந்த அடுத்தடுத்த அற்புதங்களை தெரிந்துகொள்வதற்கு முன்பு தஞ்சை வடவாற்றங்கரையில் உள்ள ராகவேந்திரர் பிருந்தாவனத்தை பற்றி தெரிந்துகொள்ளவேண்டும்.

ஸ்ரீ ராகவேந்திரர் கும்பகோணம் விஜயீந்திர சுவாமிகளின் மடத்தில் பட்டமேற்ற பிறகு தேச சஞ்சாரம் சென்றுகொண்டிருந்தார். அச்சமயம் தஞ்சை மாநிலம் முழுவதும் மழையின்றி கடும் பஞ்சத்தில் வாடியது. அப்போது தஞ்சை மன்னர் சேவப்ப நாயக்கர் ஸ்வாமிகளைப் பணிந்து, பஞ்சம் தீர ஏதேனும் உபாயம் வேண்டினார். அதன்படி ஸ்வாமிகள் வருண ஜபத்துடன் யாகம்  ஒன்றை நிகழ்த்தினார். யாகம் செய்த உடனே  மழை பொழிந்து மண் குளிர்ந்தது. ஏரி குளங்கள் நிறைந்தன. மகிழ்வெய்திய மன்னர் விலையுயர்ந்த ரத்தினங்கள் பதித்த அழகிய மணிமாலையை தனது அன்பின் அடையாளமாக வழங்கினார். அப்போது தாம் செய்து கொண்டிருந்த யாகத்தில் அதனை ஸ்வாமிகள் அர்ப்பணித்தார். அதைக் கண்டு மன்னர் வருந்தியதை உணர்ந்தார் ஸ்வாமிகள்.

Sri Raghavendra Swamyதமது திருக்கரத்தினை யாககுண்டத்துள் விட்டு மாலையைத் திரும்பவும் எடுத்து மன்னருக்கே  அளித்தார். சற்றும் மாற்றுக் குறையாமல் பொலிந்தது மணிமாலை. ஸ்வாமிகளின் திருக்கரத்தினிலோ, மாலையிலோ தீயின் சுவடு கூட இல்லை. ஸ்வாமிகளுக்கு அக்னியும் அடிபணிவதை உணர்ந்த மன்னர் அன்று முதல் ஸ்வாமிகளின்  அடியவரானார்.

அவரின் பேரன் 1673 ஆம் ஆண்டு. தஞ்சையை ஆண்டுகொண்டிருந்தார். அவ்வப்போது தனது ஆலோசகர்களோடும் அமைச்சர்களோடும் இந்த வடவாற்றங்கரையில் காலாற நடப்பது மன்னரின் வழக்கம். அது சமயம், மக்கள் பிரச்னைகள், நாடு எதிர்நோக்கியுள்ள பிரச்னைகள் பற்றி சிந்திப்பது வழக்கம். அப்போதெல்லாம் ஒரு குறிப்பிட்ட இடத்தை கடக்கும்போது பிரச்சனைகளுக்கு தீர்வு தோன்றுவதை  உணர்ந்தார். இது ஒரு முறையல்ல… பல முறை நிகழ்ந்துள்ளது.

காரணம் இல்லாமில்லை… ஸ்ரீ ராகவேந்திரர் சுமார் 12 ஆண்டுகள் தவம் செய்த இடம் அது.

இப்படி இருக்கையில் ஒரு நாள் ஸ்ரீ ராகவேந்திரர் மன்னரின் கனவில் தோன்றி, தஞ்சையில் குறிப்பிட்ட அந்த இடத்தில் தனக்கு பிருந்தாவனம் அமைக்கும்படி கேட்டுக்கொண்டார். எத்துனை பெரிய பாக்கியம்… நெக்குருகிய மன்னர்… உடனே அதற்க்கான பணிகளில் இறங்கினார். ஆனால், சரியாக எந்த இடத்தில அமைப்பது என்று குழப்பம் ஏற்பட்டது. மறுபடியும் கனவில் வந்த ராகவேந்திரர், நாளை வடவாற்றங்கரைக்கு செல்லுமாறும், ஒரு அதியசத்தை பார்ப்பாய் என்றும் அந்த இடத்தில் பிருந்தாவனத்தை எழுப்பு என்று கூறி  மறைந்தார்.

மறுநாள் மன்னர் தனது அமைச்சரகளுடன் வடாவற்றங்கரைக்கு சென்றபோது, குறிப்பிட்ட ஒரு இடத்தில் ஐந்து தலை சர்ப்பம் ஒன்று படமெடுத்து ஆடிக்கொண்டிருந்ததை பார்த்தார். அந்த சர்ப்பம் இவர்களின் வரவுக்காகவே காத்துக்கொண்டிருந்ததை போன்றே இருந்தது. அந்த இடம் தான் பிருந்தாவனத்தை எழுப்பவேண்டிய இடம் என்பதை உணர்ந்து அங்கு ஒரு  பிருந்தாவனம் எழுப்பப்பட்டது.

எங்கும் இல்லாத வகையில் தஞ்சை வடவாற்றங்கரை பிருந்தாவனம் மட்டும் சர்ப்ப பீடத்தில் உள்ளதை இன்றும் நீங்கள் நேரில் சென்றால்  காணலாம். பொதுவாக அனைத்து இடங்களிலும் ஸ்ரீ ராகவேந்திரரின் பிருந்தாவனம் கூர்ம பீடத்தில் (ஆமை) இருக்கும். ஆனால், இங்கு சர்ப்பம் வந்து ஆடிய இடத்தில் எழுப்பப்பட்டுள்ள இந்த பிருந்தாவனம் சர்ப்ப பீடத்தில் இருக்கும். மேலும் நாட்டில் உள்ள மற்ற பிருந்தாவனங்கள் அனைத்தும் மிருத்திகா பிருந்தாவனம் ஆகும். அதாவது மந்த்ராலயத்தில் இருந்து மிருத்திகையை கொண்டு வந்து அந்தி பிரதிஷ்டை செய்து பிருந்தாவனம் எழுப்பியிருப்பார்கள். ஆனால் தஞ்சை பிருந்தாவனம் ராகவேந்திரரே எழுப்பும்படி கூறி வந்து அமர்ந்த பிருந்தாவனம்.

Tanjore brindhavanam

மந்த்ராலயத்திற்கு எந்தளவு சக்தி உள்ளதோ அதே அளவு தஞ்சை பிருந்தாவனத்துக்கும் உள்ளது. வாய்ப்பு கிடைக்கும்போது அனைவரும் அவசியம் ஒரு முறை தஞ்சை பிருந்தாவனத்திற்கு சென்று வரவேண்டும்.

மந்த்ராலய பீடாதிபதி ஸ்ரீ ஸுஷமீந்த்ர தீர்த்தர் இங்கு விஜயம் செய்த போது, ஆரத்தி காட்டும்போது ஆரத்தி சர்ப்ப வடிவத்தில் அனைவருக்கும் காட்சி  கொடுத்துள்ளது. அப்போது மட்டுமல்ல மேலும் பலமுறை ஆரத்தி சர்ப்ப வடிவம் போல காட்சி தந்துள்ளது.இது வேறெங்கும் காணக்கிடைக்காத சிறப்பு.

இது மிருத்திகா பிருந்தாவனம் இல்லை என்றாலும் இங்கு மிருத்திகா தான் பிரசாதமாக தரப்படுகிறது. எப்படி என்றால் ஸ்ரீ ராகவேந்திரர் 12 ஆண்டுகள் தவம் செய்த வடவாற்றங்கரையிலிருந்து மண்ணை கொண்டு வந்து நிரப்பி, தினசரி அபிஷேகத்திற்கு பிறகு, அதை பக்தர்களுக்கு பிரசாதமாக தருகிறார்கள்.

முன்னேர் ஒரு பிரார்த்தனை பதிவில், வரட்டி தட்டிய பெண்களுக்குள் யார் தட்டிய வரட்டி என்று பிரச்னை ஏற்பட்டபோது, துக்காராம் அவர்கள் வரட்டியை காதில் வைத்து அதில் ஒலித்த ‘விட்டல விட்டல’ நாமத்தை வைத்து உரியவரிடம் வரட்டிகளை தந்த கதை நினைவிருக்கிறதா? வரட்டி தட்டிய ஒரு சாதாரணம் பெண்ணுக்கே அப்படி என்றால், 12 ஆண்டுகள் ராமநாமத்தையும் ஸ்ரீ ஹரியையும் தியானம் செய்த ராகவேந்திரர் மூலம் அந்த இடத்தின் மண்ணுக்கு எத்தனை சக்தி கிடைத்திருக்கும்?

எனவே அவசியம் தஞ்சை பிருந்தாவனம் ஒரு முறை சென்று வாருங்கள். அங்கு தரப்படும் மிருத்திகையையும் பெற்றுக்கொள்ளுங்கள்.

சரி… இந்நேரம் தஞ்சை பிருந்தாவனத்தை உடனே தரிசிக்கவேண்டும் என்கிற ஆவல் உங்களுக்கு ஏற்பட்டிருக்குமே?

இதே போன்று தான் ஒரு நாள் ஸ்ரீ ராகவேந்திர ஆராதனையின் போது மந்த்ராலயம் சென்ற சுகுமாரனுக்கும் ஏற்பட்டது. தஞ்சை பிருந்தாவனத்தை அவர் ஓரிரண்டு முறை தரிசித்திருந்தாலும் ராகவேந்திரரின் அவதார தினத்தின் போது அதை தரிசிப்பது என்பது அவரது பேராவல்.  காரணம், தஞ்சை பிருந்தாவனம் மற்ற பிருந்தாவனங்களில் இருந்து வேறுபட்டு தனித்து நிற்பதால். அத்வும் பஞ்சமுக சர்ப்ப பீடத்தில் உள்ள பிருந்தாவனம் ஆயிற்றே அது…!

Tanjore Vadavaantrangarai Brindhavanam

மந்த்ராலயத்தில் மூல பிருந்தாவனத்தை தரிசிக்கையில், இன்று தஞ்சை பிருந்தாவனத்தை தரிசிக்கும் பாக்கியம் கிடைத்தால் எப்படி இருக்கும் என்று நினைத்தவாறு தரிசனம் செய்கிறார்.

தரிசனம் முடித்துவிட்டு வெளியே வந்தார். அப்போது தரப்பட்டு வந்த சூடான சர்க்கரை பொங்கல் பிரசாதத்தை தந்து கொண்டிருந்தார்கள். அதை ஒரு தொண்ணையில் பெற்றுக்கொண்டு ஒரு ஓரமாக ஒதுங்க முற்பட, தனக்கு தரையில் கீழே ஏதோ படம் ஒன்று விழுந்து கிடப்பதை பார்க்கிறார். உள்பக்கம் புரண்டு கிடந்தது அது. பார்ப்பதற்கு ஏதோ புகைப்படம் போன்று இருக்க…. பிரசாதத்தை ஒரு ஓரமாக வைத்துவிட்டு அதை என்னவென்று எடுத்து பார்க்கிறார்…. பார்த்தவர்… “ராகவேந்திரா” என்று கத்தியே விடுகிறார்.

திடீரென்று இவர் “ராகவேந்திரா”என்று கத்தியதை மற்றவர்கள் பார்க்க, இவர் கண்களில் ஆனந்தக் கண்ணீர். எந்த தஞ்சை பிருந்தாவனத்தை இவர் தரிசிக்க விரும்பினாரோ அதே தஞ்சை பிருந்தாவனத்தின் புகைப்படம் அது. அதுவும் ஆராதனையின்போது எடுத்த படம். ஒன்றல்ல… இரண்டல்ல மூன்று புகைப்படம்.

அன்று தான் ஆராதனை. அதற்குள் எப்படி தஞ்சையில் இருந்து புகைப்படம் வந்திருக்க முடியும். அதுவும் சரியாக இவருக்கு முன்பாக அது கிடந்தது எப்படி?

அதை அப்படியே தனது நெஞ்சுக்குள் பத்திரப்படுத்தி வைக்கிறார். மீண்டும் மந்த்ராலயத்தில் மூல பிருந்தாவனத்திற்கு சென்று கண்கள் குளிர தரிசனம்.

திரு.சுகுமாரன் அவர்கள் நமக்கு ஸ்கேன் செய்து அனுப்பிய அந்த அதிசய புகைப்படம் உங்கள் பார்வைக்கு. (மேலே அளிக்கப்பட்டுள்ளது.)

தேவலோகத்தில் உள்ள கற்பகத் தரு கூட கேட்பதைத் தான் தரும். ஆனால், நினைப்பதைக் கூட தர வல்லவர் குருராஜர். அதுவும் ஒன்றுக்கு மூன்றாய்.

ஸர்வபீஷ்டார்த்த ஸித்யார்த்தம் நமஸ்காரம் கரோம்யஹம்
தவ ஸங்கீர்த்தநம் வேதசா ரஸ்த்ரார்த்தஜ்ஞாந ஸித்தயே!

Sukumaranஅந்த மூன்று படங்களில் ஒன்றை அவருக்கு பின்னேர் நின்று கொண்டிருந்த பக்தர் ஒருவர், “எனக்கு ஒன்னு கொடுங்க” என்று கேட்டு  வாங்கிக்கொள்ள, மற்றொன்றை இவர் சென்னை வந்து மானாமதுரை சேதுராமன் அவர்களிடம் தந்துவிட்டார். மற்றொன்றை தான் பிரேம் செய்து தனது பூஜை அறையில் வைத்திருக்கிறார்.

சென்னை திரும்பிய பின் ஒரு நாள் சொற்பொழிவில் இருந்த திரு.சேதுராமன் அவர்களிடம் இதை காட்டி, நடந்த சம்பவங்களை விவரித்த போது, “உனக்கு ராயரின் அருட்கடாக்ஷம் பரிபூரணமாக இருக்கிறதப்பா!” என்று வாழ்த்தினாராம்.

இதற்கிடையே சென்ற அத்தியாயத்தில் நாம் கேட்ட ஒரு கேள்விக்கு பதிலை  தருகிறோம்.

ராயரை அனுதினமும் துதிப்பவர்கள் எத்தனையோ பேர் கணக்கில்லாமல் இருக்க சுகுமாரை மட்டும் தேடி வந்து அருள் செய்ய காரணம் என்ன?

பல வருடங்களுக்கு முன்பு எப்போதோ ஒரு நாள் ஏதோ ஒரு ஆலய திருப்பணிக்கு உதவியிருப்பீர்கள். ஒரு கோவிலுக்கு மின்விளக்கு வாங்கி கொடுத்திருப்பீர்கள். அல்லது அன்னதானத்துக்கு உதவியிருப்பீர்கள். அல்லது சுவாமி திருவீதி வரும்போது ஓடிச் சென்று தோள் கொடுத்திருப்பீர்கள். அல்லது கோவிலில் வேலை செய்யும் ஒரு ஏழைக்கு உதவியிருப்பீர்கள். அல்லது ஆலய வளாகத்தை அசுத்தம் செய்ய முயன்றவர்களை கண்டித்திருப்பீர்கள். அல்லது சிறுவயதில் யாரோ சொன்னார்கள் என்பதற்காக ஏதோ ஒரு ஸ்லோகத்தை பல நாட்கள் தினமும் படித்திருப்பீர்கள். அல்லது இது எதுவுமே இல்லை… “இன்ன பிரச்சனையில் சிக்கியிருக்கிறேன்… என்னை காப்பாற்று” என்று ஒரு முழம் பூ வாங்கிகொடுத்து ஏதோ ஒரு கோவிலில் கிடந்திருப்பீர்கள். இதையெல்லாம் நீங்கள் மறக்கலாம். ஆனால் ஆண்டவன் ஒரு போதும் மறக்கமாட்டான். உரிய நேரம் வரும்போது அபயக்கரம் நீட்டுவான். தடுத்தாட்கொள்வான்.

திரு.சுகுமாரன் அவர்கள் வாழ்விலும் நடந்தது இது தான். என்றோ எப்போதோ அவர் செய்த ஒரு நற்செயல், உரிய நேரத்தில் அருள்மழையாக பொழிந்திருக்கிறது. அவ்வளவே.

ராயரின் அருள்மழை சுகுமார் அவர்களின் வாழ்வில் இத்தோடு முடிந்துவிட்டதா என்ன?

அது தான் இல்லை.

கொடுக்கம் தெய்வம் கூரையை பிய்த்துக்கொண்டல்லவா கொடுக்கும்? அது பற்றிய விபரங்களை அடுத்த பதிவில் பார்ப்போம்.

Success_Rightmantra

======================================================================

Also check :

“அழைத்தால் போதும் அடுத்த கணமே நினைத்தது நடக்கும்!” – ஸ்ரீ ராகவேந்திர தரிசனம் 2

திருவருளும் குருவருளும் – ஸ்ரீ ராகவேந்திர தரிசனம் (1)

குருராஜர் இருக்க கவலை எதற்கு? நெகிழ்ச்சியூட்டும் நிஜ அனுபவங்கள்!

நம் தளத்திற்கு கிடைத்த ஸ்ரீ ராகவேந்திர சுவாமிகளின் பரிபூரண ஆசி! எங்கே… எப்படி?

ஆங்கில கவர்னருக்கு ராகவேந்திரர் காட்சியளித்த அற்புதம் – கஜெட் ஆதாரத்துடன்!

யாருக்கு தேவை தண்ணீர்?

உச்சரிப்பை விட உன்னத பக்தியே சிறந்தது!

இறைவா… பிறர் நிறைவில் பெருமிதமே தினம் காணும் குணம் வேண்டும்!

எது வந்த போதும் துணை நீயே குருராஜா – உண்மை சம்பவம்

முக்காலமும் நீ அறிவாய் குருராஜா – நம் தள வாசகரிடம் ஸ்ரீ ராகவேந்திரர் நிகழ்த்திய அற்புதம்!

======================================================================

[END]

9 thoughts on “கேட்பதை தருவார், கேட்டதும் தருவார் குருராஜர் – ஸ்ரீ ராகவேந்திர தரிசனம் 3

  1. மெய் சிலிர்க்க வைக்கும் சிறப்பான பதிவு
    குருவே சரணம்

  2. மிகவும் அருமையான நீண்ட பதிவு. குரு வாரத்தில் ராகவேந்திரரின் மகிமையைப் படித்து அளவற்ற மகிழ்ச்சி அடைந்தோம். இந்த பதிவை படித்தவுமடன் நமக்கும் தஞ்சை பிருந்தாவனம் சென்று இறைவனை தரிசிக்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டுள்ளது. எல்லா படங்களும் அருமை.

    திரு சுகுமார் அவர்களின் வாழ்கையில் நடந்த அற்புதங்களை படிக்கும் பொழுது பரவசமாக உள்ளது. அவருக்கு குருவின் அருட் பார்வை உள்ளது. அவர் வாழ்க்கையில் குரு நடத்திய மகிமை அற்புதம். நாமும் நம்மால் முடிந்த நல்ல காரியங்கள் செய்து இறை அருள் பெறுவோம்.

    இதை பதிவாக தட்டச்சு செய்து வெளியிட்ட தங்களுக்கும் இறைவன் அருள் புரிய வாழ்த்துகிறோம்

    //If god delays something, it does not mean that He denies.It means, he just wants to give you the best// superb quote

    நன்றி
    உமா .

  3. வணக்கம்…

    குருவின் மகிமையைக் கண்டு எப்போதும் போல் கண்களில் கண்ணீர்………

  4. மீண்டும் ஒரு வாரம் காத்திருக்க வேண்டுமா? நல்ல விஷயங்களுக்கு காத்திருப்பதில் தவறில்லை.
    குருவே துணை.

  5. கற்பூர ஆரத்தி நிழற்படம் அதிர்ச்சியளித்தது. மெய்சிலிர்க்கவைத்தது. தங்களின் சேவைக்கு நன்றி என்ற வார்த்தையைத் தவிர சொல்வதற்கு வேறு வார்த்தைகள் கிடைக்கவில்லை. நன்றி!……………..

  6. வணக்கம் சுந்தர் சார்

    மெய் சிலிர்க்க வைக்கும் சிறப்பான பதிவு

    நன்றி

  7. படிக்கும் போதே மெய் சிலிர்கிறது.
    இந்த உணர்வு நம் அனைவருக்குமே உள்ளது.
    அதனால் தான் அனைவரும் ஒரே மாதிரி கமெண்ட்ஸ் கொடுத்திருக்கிறோம்.

  8. அற்புதம், மெய் சிலிர்த்துப்போனேன்.

  9. சார்,
    நங்கநல்லூர் ராகவேந்திர சுவாமி பிருந்தாவனத்திலும் கற்பூரத்தில் நாகர் வடிவம் வந்த காட்சி உள்ளது. தயவு செய்து தரிசிக்கவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *