Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Tuesday, March 19, 2024
Please specify the group
Home > Featured > ‘இடரினும் தளரினும்…’ – பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிப்பவர்களுக்கு இதோ ஒரு அருமருந்து !

‘இடரினும் தளரினும்…’ – பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிப்பவர்களுக்கு இதோ ஒரு அருமருந்து !

print
பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிப்பவர்களுக்கு அருமருந்தாக அமையக்கூடிய, திருஞானசம்பந்தர் அருளிய ‘இடரினும் தளரினும்…’ என்கிற பதிகத்தை பற்றி சில நாட்களுக்கு முன்பு கூறியிருந்தேன். திருவள்ளுவர் திருக்கோவில் அர்ச்சகர் திரு.ஆறுமுகம் அவர்களின் இல்லத்தரசி திருமதி.கற்பகம் காரணீஸ்வரர் கோவிலில் அப்பதிகத்தை பாடிவிட்டு வீட்டுக்கு வந்து சேர்ந்தவுடன் அவர்களுக்கு ரூ.10,000/- வீடு தேடி வந்த விஷயத்தையும் கூறியிருந்தது நினைவிருக்கலாம். (பணத்தை தேடி வரவழைத்த பதிகம்! மெய்சிலிர்க்க வைக்கும் உண்மை சம்பவம்!!)

மேற்படி பதிகத்தை சம்பந்தப் பெருமான் எந்த சூழ்நிலையில் பாடினார், இறைவன் அப்போது நிகழ்த்திய திருவிளையாடல் என்ன என்பது குறித்து ஒரு விரிவான பதிவு அளிப்பதாக கூறியிருந்தேன்.

இதோ முதலில் சம்பந்தப் பெருமான் எந்த சூழ்நிலையில் அந்த பதிகத்தை பாடினார் என்பது குறித்து முதலில் அறிந்துகொள்ளுங்கள். இறுதியில் பதிகத்தை பொருளோடு தந்திருக்கிறேன். பிரதி எடுத்து வைத்து எப்பொழுதெல்லாம் முடியுமோ அப்போது படித்து வாருங்கள். (அதில் ஒரு ஒழுங்கு இருக்கட்டும்). உங்கள் பொருளாதார பிரச்னை விரைவில் தீர்வதை உணர்வீர்கள்.

அரசமரத்தை ஒரு முறை சுற்றிவந்துவிட்டு அடி வயிற்றை தடவிப் பார்த்த கதையாக ஒரே நாளில் பலனை எதிர்பார்க்கக் கூடாது. சம்பந்தப் பெருமான் பாடியவுடன் இறைவன் உடனே பொருளை தந்துதவினான் என்றால் சம்பந்தப் பெருமானின் தகுதியை இந்த இடத்தில் நாம் எண்ணிப் பார்க்கவேண்டும். அவருடைய பக்தியை எண்ணி பார்க்கவேண்டும்.

“உனக்கு ஏதாவது தேவையென்றால் நீ அழைக்காமலே இறைவன் இறங்கி வந்து “என்ன வேண்டும் உனக்கு?” என்று கேட்பான். உனக்கு தகுதியிருந்தால்.”

நமக்கு சம்பந்தப் பெருமானைப் போல பக்குவத்துடன் பக்தி செய்ய முடியாது. இருப்பினும் அதில் ஆயிரத்தில் ஒரு பங்காவது முயற்சிப்போம்

மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம்
பழித்தது ஒழித்து விடின். (குறள் 280)

வள்ளுவர் எத்தனை அழகாக சொல்லியிருக்கிறார் பாருங்கள். இறையருளை பெற மொட்டையடித்து, சடை வளர்த்து தவம் செய்யவேண்டாம். இந்த உலகம் பழிக்கும் செயல்களை நீ விட்டுவிட்டாலே போதும் என்கிறார்.

இதுவும் ஒரு வகையில் பக்தி தான். இந்த பக்தியை கூடவா நம்மால் செய்ய முடியாது ?

இந்த பதிகத்தை பொருளுணர்ந்து பக்தியோடு படித்து வாருங்கள். விரைவில் வினையற்ற செல்வம் உங்களை வந்து சேரும். பல்கிப் பெருகும். அறம் வளரும். இல்லறம் சிறக்கும்.

(குறிப்பு : நியாயமான பொருளாதார தேவைகளுக்கே இந்த பதிகத்தை பயன்படுத்தவேண்டும். மேலும் இறைவனிடம் நாம் என்ன வேண்டிக்கொண்டாலும் நாமும் அதற்காக உழைக்கவேண்டும் என்பதையும் மறக்காதீர்கள்.)

‘இடரினும் தளரினும்’ பதிகம் பிறந்த கதையையும் இறைவன் சம்பந்த பெருமானுக்கு அருள் செய்த நிகழ்வையும் விவரிக்கும் கட்டுரை ஒன்றை ammandharsanam.com என்ற இணையத்தில் இருந்து எடுத்து தந்திருக்கிறேன்.

மெய்சிலிர்க்க வைக்கும் – சிந்திக்க வைக்கும் – கட்டுரை இது. இறுதியில் முழு பதிகத்தையும் பொருளுடன் தந்திருக்கிறேன்.

(இதே போன்ற ஒரு சந்தர்ப்பத்தில் திருவீழிமிழலையில் எழுந்தருளியிருக்கும் திருவீழிநாதர், திருஞானசம்பந்தர் மற்றும் திருநாவுக்கரசர் ஆகியோருக்கு படிக்காசு அருளிய இடம் உள்ளது. சமீபத்தில் சீர்காழி சென்றிருந்தபோது இங்கும் சென்றிருந்தோம். அப்போது  புகைப்படங்கள் தான் நீங்கள் இங்கு காண்பது.)

நன்றி!

============================================================
(இந்த பதிவில் காணப்படும் புகைப்படங்கள் கடும் உழைப்பில் விளைந்தவை. காப்புரிமை பெற்றவை. எடுத்தாளுபவர்கள் அவசியம் நம் தளத்தின் முகவரி அளிக்கவேண்டும் என்று நட்புடன் கேட்டுக்கொள்கிறேன்.)
============================================================

எழில்மிகு திருவீழிமிழலை – திருவீழிநாதர் திருக்கோவில்

ஞானசம்பந்தரின் புரட்சி

சீர்காழியில் கௌண்டின்ய கோத்திர மரபில் தோன்றிய ரிக் வேத பண்டிதரான சிவபாத இருதயர் என்னும் அந்தணருக்கு ஆண்மகவாக அவதாரம் செய்தார் ஞானசம்பந்தப் பெருமான். மூன்றாம் வயதில் உமையம்மையிடம் ஞானப்பால் அருந்திய தினம் முதலே தம் புரட்சியை தம் அவதாரத்தின் இறுதிநாள் வரை விட்டாரில்லை.

ஊர் ஊராகச் சென்று சைவத்தையும் வேதத்தையும் தமிழையும் வளர்த்தார். ஒவ்வொரு தமிழனும் தன்னைத் தமிழன் என்று கூறிக்கொள்ள வேண்டும் என்பதனை தம் தேவாரப் பாடல்கள் மூலம் வெளிப்படுத்தினார். அவரது ஒவ்வொரு பாடலிலும் சைவ மணம் செழித்துக் காணப்பட்டது. வைதீக மணம் வையகத்தையும் வானகத்தையும் விஞ்சிற்று. தமிழ் மணம் தரணியெங்கும் தழைத்தோங்கியது.

வேள்வி செய்ய அஞ்சிய வேதியர்கள் மீண்டும் வேள்விகள் செய்ய முற்பட்டனர். சிவ சின்னங்களை சவச் சின்னங்கள் என எண்ணி அவற்றை விட்டிருந்த சைவர்கள் மேனி எங்கும் நீறு பூசி மேதினியில் மிளிர்ந்தனர். தமிழ் பயிலுதலும் தமிழ்ப் பாக்களை இயற்றுதலையும் தம் மரண பயத்தினால் விட்டிருந்த தமிழர்கள் தலைநிமிரத் தொடங்கினர். தமிழ்ல் பாமாலைகளைத் தொடுத்தனர்.

அவ்வாறாக நாடெங்கும் சூறாவளி சுற்றுப்பயனம் மேற்கொண்டிருந்த ஞானசம்பந்தப் பெருமான் திருவாவடுதுறையில் முகாமிட்டிருந்த சமயம் இறைவன் தன் திருவிளையாடலை நடத்தத் திருவுள்ளம் பூண்டான். வேதங்களைப் பொய் என்றும் குடிகாரர்களால் போதையில் உளறப்பட்டவை என்றும் கூறிக்கொண்டு கொட்டமடித்த கொடியவர்களின் கோமாளித்தனத்தைக் கூறுபோட நினைத்தான். ஸ்வாயம்புவ மனு தன் தவ வலிமையால் கண்ட “ஈஸாவஸ்ய உபநிஷத்” என்றழைக்கப்படும் வேத பாகம் எக்காலத்தும் உண்மையே எனவும், அவ்வாக்கியங்களைக் கொண்டே அவர், பரமாத்மா ஸ்ரீமன் நாராயணனைத் துதி பாடியது உண்மை என்பதையும் இவ்வுலகம் அறிய வேண்டி உவகை கொண்டான் திருவாவடுதுறையில் உறையும் மாசிலாமணியீசன்.

ஞானசம்பந்தப் பெருமான் அவர்கள் திருவாவடுதுறையில் தங்கி, அத்தலத்தில் அமர்ந்து உலகோரை உய்விக்கும் மாசிலாமணியீசனைத் தம் பாமாலையால் அனுதினமும் அலங்கரித்து அழகு பார்த்தார். அவ்வமயம், தன் மகனைக் காண வேண்டி சிவபாத இருதயரும் அத்தலத்திற்கு வந்தார்.

சைவமும் தமிழும் ஒருங்கே தன் மகனைப் பொலிவுறச் செய்யும் அந்த அழகில் தன்னை மறந்தார். “இவன் தந்தை எந்நோற்றான் கொல் என்னும் சொல்” என்னும் திருக்குறளை மனம் மெல்ல ஞாபகப்படுத்திக் கொண்டது. குருவுடனும் சுக்கிரனுடனும் சேர்ந்த சந்திரன் எவ்வாறு ஒளி வீசுவானோ அவ்வாறு சைவமும் தமிழும் சேர்ந்த ஞானசம்பந்தப் பெருமான் தமிழ் ஞானசம்பந்தப் பெருமானாக ஒளி வீசிக்கொண்டிருந்தார். தந்தையைக் கண்ட தனயன் அவருக்கு சாஷ்டாங்க நமஸ்காரம் செய்தார். தலை வணங்கிய தனயனை வாரியணைத்து உச்சி முகர்ந்தார். நெஞ்சாரத் தழுவி, ஆனந்தக் கண்ணீர் பெருக்கினார். இருவரும் சேர்ந்து மாசிலாமணியீசனை வணங்கி வழிபட்டு மட்டற்ற மகிழ்ச்சி கொண்டனர். களைப்புற்றிருந்த தந்தையை இளைப்பாறச் செய்ய வேண்டிய ஏற்பாடுகளைச் செய்து கொடுத்தார்.

சில நாள்கள் தம் அருமை மகனுடன் சிவத்தொண்டு செய்து வந்த சிவபாத இருதயர் ஒரு நாள் தன் உள்ளக்கிடக்கையை மகனிடம் வெளிப்படுத்தினார். “மகனே! நீ செய்து வரும் புரட்சியினால் சைவமும் வேதமும் தமிழும் ஒருங்கே உயர்ந்து ஓங்கு புகழ் பெற்று வருகின்றன. நாடெங்கிலும் வைதிகர்கள் விரக்தியிலிருந்து விடுபட்டு வேள்வி செய்து வருகின்றனர். அதுபோல் நானும் நம்குல வழக்கப்படி வேள்வி புரிய ஆசைப்படுகிறேன். ஆனால் அதற்குப் பெருஞ்செல்வம் தேவைப்படுகிறது. தற்போது என்னிடத்தில் வேள்விக்குரிய பெருஞ்செல்வம் இல்லை எனினும், என் மனம் வேள்வி புரியப் பேராவல் கொண்டுள்ளது. ஆகையால் மகனே! வேள்விக்கான ஏற்பாடுகளைச் செய்து தர நீ தான் முன்வர வேண்டும். அத்தகைய மாபெரும் சாமர்த்தியம் உன்னிடம் மட்டுமே உள்ளது. வேத வேள்வியை நடத்த வேண்டி நிற்கும் இவ்வேதியனுக்குத் துணை புரிவாயா? மகனே!” என கண்ணீர் மல்கத் தன் மகனிடம் மனக்கிடக்கையைக் கொட்டித் தீர்த்தார்.

தந்தையின் சொல்லனைத்தும் செவிமடுத்த ஞானசம்பந்தப் பெருமான், இறைவனின் திருவிளையாடலை எண்ணினார். நாடெங்கிலும் வாதவேள்வி செய்து வெற்றிவாகை சூடி வரும் இவ்வேளையில் நம் வாயிலாகவே இறைவன், வேதவேள்வியையும் நடத்திக்கொள்ள திருக்குறிப்புக் கொண்டுள்ளான் என மனத்தில் நினைத்துக் கொண்டார். செல்வத்தை தானே கொடுக்கப்போகிறானா? என்ன செய்யப் போகிறான் நம் செல்லக்குழந்தை? என அமைதியாய் ஆவடுதுறையில் அமர்ந்திருந்தான் மாசிலாமணியீசன்.

திருவீழிழிமலையில் இறைவன் சம்பந்தர்க்கு படிக்காசு அருளிய பீடம்

இப்போது சம்பந்தப் பெருமான் முன்னிற்கும் கேள்விகள் ஆயிரமாயிரம்.

நாடெங்கிலும் வாத வேள்விகளைச் செய்து சைவத்தையும் வேதத்தையும் தமிழையும் தழைக்கச் செய்யும் இந்த இக்கட்டான சூழ்நிலையில் வேத வேள்வி தேவைதானா?

வாத வேள்வியை ஏற்று வெற்றியை வழங்கி வரும் இறைவன் வேத வேள்வியையும் ஏற்று அருள் வழங்குவாரா?

இறைவனுக்கு வைதிக சடங்குகளிலும் சம்மதம் உண்டா?

வேத வேள்விகளும் அதில் இயற்றப்படும் சடங்குகளும் வழிபாடுகளும் எதற்காகவெனில் இறைவனின் அருளைப் பெறுவதற்காக. அத்தகைய அருளைத்தான் தாமும் தம் தந்தையும் முன்னமே பெற்றாகிவிட்டதே! அப்படியெனில் இறைவனின் அருளை வேண்டிச் செய்யப்படும் இவ்வேள்வி வீணோ?

இறைவன் தனக்களித்த செல்வத்திலிருந்து தன் தந்தைக்குக் கொடுப்பதா? அல்லது தனக்குள்ள செல்வாக்கைப் பயன்படுத்தி அரசர்களிடமோ அல்லது தனவந்தர்களிடமோ கேட்டுப் பெற்றுக் கொடுப்பதா?

சைவத்தையும், தமிழையும் வளர்க்க வேண்டிய இத்தருணத்தில் இது போன்ற மரபு வழிச் சடங்குகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதா?

நயவஞ்சக நாஸ்திகர்களை விரட்டியடிக்க வேண்டி, ஞானப்பால் அருந்திய நாள் முதலாகக் கொண்ட கொள்கையை விட்டு மற்றைய விஷயங்களில் நாட்டம் கொள்ளுதல் முறையா? “கொள்கைப் பிடிப்பு இல்லை” என்ற பழிக்கு ஆளாகி விடமாட்டோமா?

இதுபோன்ற ஆயிரமாயிரம் கேள்விகள் சம்பந்தப் பெருமானின் உள்ளத்தில் தோன்றி விடையில்லாமல் திக்குமுக்காடி நின்றன. இவற்றிற்கெல்லாம் பதில் காண பெருமானார் முற்படவில்லை. நேரே மாசிலாமணியீசனிடம் சென்று முறையிடுதலே சாலச் சிறந்தது எ ன எண்ணிக்கொண்டார். ஈஸாவஸ்ய உபநிஷத்தும் அதைத்தான் கூறுகிறது. இவ்வேள்வி விஷயத்தில் இறைவனுக்கு முழுச் சம்மதம் எனில் அவனே அதற்குரிய செல்வத்தைத் தந்தருளுவான். “இறைவனால் கொடுக்கப்பட்டதேயன்றி மற்றவரின் செல்வத்தை எண்ணாதே” என்று ஈஸாவாஸ்யம் கூறுகிறதே! வேத வாக்கியம் அப்படியிருக்க நான் போய் எவ்வாறு பிறரிடம் செல்வத்தைக் கேட்க முடியும்? வேதம், சைவம், தமிழ் வளர்க்க வந்தவனென்று தன்னைப் பிரகடனப் படுத்திக்கொண்டு அவ்வேத வாக்கியங்களுக்கு விரோதமாகச் செயல்படுதல் முறையோ என்று தனக்குத்தானே கூறிக்கொண்டு மாசிலாமணியீசர் சந்நிதியை அடைந்தார்.

இறைவனைக் குறித்து பின் வருமாறு தன் விண்ணப்பத்தைத் தெரிவித்து “இடரினும் தளரினும்…” எனத் தொடங்கும் தமிழ்ப் பாமாலையால் இறைவனை அலங்கரித்தார்.

“நீண்டகாலம் மூப்பின்றி வாழும் பொருட்டு அமுதம் வேண்டி தேவர்கள் அசுரர்களுடன் சேர்ந்து பாற்கடலைக் கடைந்தனர். அவ்வமயம் முதற்கண் அமுதம் தோன்றாமல் ஆலகால விஷம் தோன்றிற்று. விஷத்தின் வேகம் தாங்காத தேவர்களும் அசுரர்களும் உயிர் பிழைக்க வேண்டி புறங்கால் பிடரியில் படுமாறு ஓடினர். பயந்து நடுங்கினர். “தேவர்களைக் காக்க எண்ணி, அவ்வாலகால விஷத்தைக் குடித்து அதனைக் கண்டத்திலேயே நிறுத்திய அருளாளா! நான் மேற்கொண்டுள்ள சைவம், வேதம் மற்றும் தமிழ் ஆகியவற்றைக் காத்து வளர்க்கும் பணியில் ஏதேனும் இடர்ப்பாடு ஏற்படுமானால் நான் உன் திருவடியையே தொழுதெழுவேன். தங்கள் அடியவனான என்னைப் பாதுகாக்கும் விதமாக இவ்வுலகோர் அறியுமாறு தந்தைக்குத் தேவையான பொருள் தந்து உதவ வேண்டும் ஆவடுதுறை அரனே! அருள்புரிக.”

“பரந்து விரிந்த கங்கையையும், பிறை மதியையும் தன் சடையிலே அனிந்த புண்ணியனே! இவ்வுலகில் அறத்தோடு வாழும்போதும், இவ்வுலகை விட்டு உன் திருவடி நிழலை அடையும் போதும் நான் உன் திருவடி துணையன்றி வேறொன்றையும் நினைக்கமாட்டேன். அத்தகைய அடியவனான என்னை, நீ உய்விப்பது உண்மை என உலகோர் அறியும் வண்ணம் வேள்வி செய்யும் பொருட்டு பொருள் வேண்டி நிற்கும் என் தந்தைக்கு அருள்வீராக!”

“குளிர்ச்சி பொருந்திய கொன்றை மலரைக் கொண்டையிலும், வெம்மை நிறைந்த தீச்சுடரைக் கையிலும் கொண்டு அருள் செய்யும் அரனே! நான் விழித்திருக்கும்போதும், உறங்கும்போதும், புலன்கள் செயல்படாத காலத்திலும் கூட உன் திருநாமத்தை விட்டு வேறு அறியேன். அத்தகைய அடியவனுக்கு வேண்டிய பொருள் தந்து உதவ வேண்டும்.

“மேரு மலையை வில்லாகக் கொண்டு முப்புரமும் எரித்த மன்னவனே! எனக்குத் தும்மல் முதல் கடுமையான பிணி வரை எது வந்து வருத்தினாலும், என் நா உன் திருவடிப் புகழல்லாது பிறவற்றைப் பாடாது. ஆகையால் உன் அடியவனான எனக்கு அருள் செய்யும் விதமாக வேள்விக்கு வேண்டிய பொருளைக் கொடுப்பாயாக.

“ஆலகால விஷத்தால் உன் கழுத்து கறுப்பாயிற்று. அது உனக்கு அழகு சேர்த்ததேயன்றி உன் அழகினைக் குறைக்கவில்லை. அத்தகைய பெருமையை உடைய பூரணனே! கையில் உள்ள பொருள் அனைத்தும் இழந்த போதிலும் அதன் பொருட்டு பிறரால் இகழப்பட்டாலும், என் சிந்தை உன் திருவடியையே பற்றி நிற்குமேயன்றி பிறவற்றை நாடாது. ஆகையால் என்னை ஆட் கொள்ளும் விதமாக, அடியேனுக்கு வேண்டிய தனத்தைக் கொடுத்தருள்வீராக.

திருவீழிமிழலையில் இறைவன் திருநாவுக்கரசருக்கு படிக்காசு அருளிய பீடம்

“கொடிய விஷத்தையுடைய ஸர்ப்பங்களை அணிகலன்களாக அணிந்துள்ளவனே! உடலெங்கும் வெண்ணீறு பூசிய மெய்ப்பொருளே! கொடுமையான துன்பம் என்னை அணுகி வந்து அச்சுறுத்தினாலும் என் நா உன் திருப்பெயரல்லாது மற்றையதை உரையாது. அத்தகைய அடியவனான என்னை ஆளும் விதமாக வேள்விக்கு வேண்டும் தனம் தந்து அருள்வீராக.

“துன்பமும், வேதனையும் கூடிய கொடிய வினைகள் விரைந்து வந்து என்னை வீழ்த்தினாலும், நான் உன் திருவடியை விட்டுப் பிறவற்றை நாடமாட்டேன். உன்னையல்லாது பிறவற்றை என் நா ஒருபோதும் பேசாது. ஆகையால் நான் வேண்டுவதை எனக்களித்து அருள்வீராக.

“பத்துத்தலையனை (இராவணனை) பனிமலையின் கீழ் அழுத்தி அறம் புகட்டியவனே! ஆவடுதுறை அரசே! மீளாத்துயர் வரினும், பிணிவந்து பற்றிடினும் அதுபற்றி யான் நினையாது, உன் பொன்னார் திருவடிகளையே நான் சிந்தனை செய்வேன். அரனே! அடியவன் வேண்டும் தனம் தந்து அருள்வீராக.

“உண்ணும் காலத்தும், உண்டபின் ஏற்படும் மயக்க நிலையிலும், உணவின்றி வீணே திரியும் காலத்தும், உணவின்மையால் உண்டாகும் மயக்க நிலையிலும் என் நா உன் திருவடிப் புகழல்லாத பிறவற்றைக் கூறுவதில்லை. ஆகையால் அரசே! அரசே! அருளாளா! அடியவனை ஆட்கொண்ட விதமாக வேண்டும் பொருளைத் தந்தருளுவீர்.

“பித்தம் தலைக்கேறி அதனால் பிதற்றும் நிலை வந்தாலும் என் நா உன் திருவடிப் புகழையல்லாது பிறவற்றைப் பாடாது. அடியவர்க்கு அருள் செய்யும் ஆவடுதுறை அரசே! அடியேனுக்கு அருளும் வண்ணம் வேள்விப் பொருள் தந்து உதவவேண்டும்.”

இவ்வாறு இறைவனிடத்தில் காதலாகிக் கசிந்து உருகி தன் விண்ணப்பத்தை இறைவனின் திருவடியில் வைத்துப் பணிந்தார். வேதம் நான்கினும் மெய்ப்பொருளான இறைவன், திருஞானசம்பந்தரின் வேண்டுகோளினை ஏற்று தன் பூத கணம் ஒன்றின் மூலம் பொற்கிழி ஒன்றினைக் கொடுத்தனுப்பினார். ‘அந்தப்பொற்கிழி விரும்பும் அளவிற்கு தனத்தைக் கொடுக்கும் ஆற்றல் உடையது’ என அசரீரி வாக்கின் மூலம் ஞானசம்பந்தருக்குத் தெரிவிக்கப்பட்டது. பூதகணம் ஞானசம்பந்தருக்கு பொற்கிழி வழங்கிய இடத்தை இன்றும் திருவாவடுதுறையில் கண்டு தரிசிக்கலாம்.

இந்நிகழ்ச்சியின் மூலம் வேதமும் தமிழும் இறைவனுக்கு உவப்பானதே என்பதனையும், வேதத்தைத் தழைக்கச் செய்த தமிழ் வேதத்தையும் தழைக்கச் செய்தான் என்பதையும் நம்மால் உணர முடிகிறது. ஒன்றைக் காட்டிலும் மற்றொன்று உயர்ந்தது என்று பிரித்தறிதலுக்கோ அல்லது ஒன்றைக்காட்டிலும் மற்றொன்றில் தரம் குறைந்தது என புறந்தள்ளலுக்கோ இங்கே எள்ளளவும் இடமில்லை என்பதைக் காட்டவே இறைவன் மேற்கண்ட திருவிளையாடலை நிகழ்த்திக் காட்டியுள்ளான் என்பது துணிபு.

=================================================================

இடரினும் தளரினும்….

பாடல் எண் : 1

இடரினும் தளரினும் எனதுறுநோய்
தொடரினும் உனகழல் தொழுதெழுவேன்
கடல்தனில் அமுதொடு கலந்தநஞ்சை
மிடறினில் அடக்கிய வேதியனேஇதுவோஎமை ஆளுமா றீவதொன்றெமக் கில்லையேல்
அதுவோவுன தின்னருள் ஆவடுதுறை அரனே.

பொழிப்புரை :

திருப்பாற்கடலில் , அமுதம் பெறும் பொருட்டுக் கடைந்தபோது தோன்றிய நஞ்சினைக் கழுத்தில் அடக்கித் தேவர் களைக் காத்த வேதநாயகனே ! வாழ்க்கையில் இடையூறு ஏற்பட்டுத் துன்பம் உண்டானாலும் , இளமை நீங்கி மூப்பினால் தளர்ச்சி யுற்றாலும் , தீவினைப்பயனால் நோய் தொடர்ந்து வந்தாலும் , உன்திரு வடிகளைத் தொழுது வணங்குவேன் . அத்தகைய அடியேனை நீ ஆட்கொள்ளும் தன்மை இதுவோ ? திருவாவடுதுறையில் வீற்றி ருக்கும் சிவபெருமானே ( உலக நன்மையின் பொருட்டுத் தந்தை செய்ய விரும்புகின்ற வேள்விக்குத் ) தேவைப்படுகின்ற பொருளை நீ எனக்குத் தரவில்லையானால் அஃது உன் திருவருளுக்கு அழகாகுமா ?

பாடல் எண் : 2

வாழினும் சாவினும் வருந்தினும்போய்
வீழினும் உனகழல் விடுவேன்அல்லேன்
தாழிளந் தடம்புனல் தயங்குசென்னிப்
போழிள மதிவைத்த புண்ணியனேஇதுவோஎமை ஆளுமா றீவதொன்றெமக் கில்லையேல்
அதுவோவுன தின்னருள் ஆவடுதுறை அரனே.

பொழிப்புரை :

ஒளிர்கின்ற செஞ்சடையில் குளிர்ச்சியான கங்கை யையும் , பிறைச்சந்திரனையும் அணிந்த சிவபெருமானே ! இம்மையில் மண்ணுலகில் நல்வினைப் பயனால் இன்பம் அனுபவிக்கின்ற காலத் திலும் , தீவினைப் பயனால் துன்புற்று வருந்தும் காலத்திலும் , நன்னெறி யினின்று விலகித் தீநெறியில் செல்கின்ற காலத்திலும் , வினைப் பயன்களை அனுபவித்து முடித்துச் சாகப்போகும் காலத்திலும் , உன்னுடைய திருவடிகளை இறுகப் பற்றியதிலிருந்து நீங்கியவன் அல்லேன் . இத்தகைய என்னை நீ ஆட்கொள்ளும் தன்மை இதுவோ ? திருவாவடுதுறையில் வீற்றிருக்கும் சிவபெருமானே ! ( உலக நன்மையின் பொருட்டுத் தந்தை செய்ய விரும்புகின்ற வேள்விக்காக ) எனக்குப் பொருள் தாராவிடில் அஃது உனது இன்னருளுக்கு அழகாகுமா ?

பாடல் எண் : 3

நனவினும் கனவினும் நம்பாஉன்னை
மனவினும் வழிபடல் மறவேன்அம்மான்
புனல்விரி நறுங்கொன்றைப் போதணிந்த
கனல்எரி அனல்புல்கு கையவனேஇதுவோஎமை ஆளுமா றீவதொன்றெமக் கில்லையேல்
அதுவோவுன தின்னருள் ஆவடுதுறை அரனே.

பொழிப்புரை :

கங்கையையும் , நறுமணம் கமழும் கொன்றை யையும் அணிந்து கனன்று எரிகின்ற நெருப்பைக் கையிலேந்தி யுள்ளவனே ! அனைவரின் நம்பிக்கைக்கும் , விருப்பத்திற்குமுரிய உன்னை நனவிலும் , கனவிலும் , மனம் ஒன்றி வணங்குவதற்கு மறந் திலேன் . இத்தகைய என்னை நீ ஆட்கொள்ளுமாறு இதுவோ ? திரு வாவடுதுறையில் எழுந்தருளியிருக்கும் சிவபெருமானே ! ( உலக நன்மைக்காகத் தந்தை செய்ய விரும்புகின்ற வேள்விக்குத் ) தேவை யான பொருளை எனக்குத் தாராவிடில் , அஃது உனதின்னருளுக்கு அழகாகுமா ?

பாடல் எண் : 4

தும்மலொ டருந்துயர் தோன்றிடினும்
அம்மலர் அடியலால் அரற்றாதென்நாக்
கைம்மல்கு வரிசிலைக் கணையொன்றினால்
மும்மதிள் எரிஎழ முனிந்தவனேஇதுவோஎமை ஆளுமா றீவதொன்றெமக் கில்லையேல்
அதுவோவுன தின்னருள் ஆவடுதுறை அரனே.

பொழிப்புரை :

கையிலே மேருமலையை வில்லாக ஏந்தி அக்கினியைக் கணையாகத் தொடுத்து முப்புரங்களை எரியும்படி செய்தவனே ! தும்மல் , அவற்றின் உபாதைகள் இவற்றால் துன்பம் வரும்பொழுதும் உன்னுடைய மலர் போன்ற திருவடிகளைப் போற்றுதல் அல்லாமல் என் நா வேறெதனையும் நவிலாது . திருவாவடுதுறையில் எழுந்தருளியிருக்கும் சிவபெருமானே ! இத்தகைய தன்மையுடைய என்னை நீ ஆட்கொள்ளும் முறை இதுவோ ? ( உலக நன்மைக்காகத் தந்தை செய்ய விரும்புகின்ற வேள்விக்குத் ) தேவையான பொருளை எனக்குத் தாராவிடில் அஃது உனதின்னருளுக்கு அழகாகுமா ?

பாடல் எண் : 5

கையது வீழினும் கழிவுறினும்
செய்கழல் அடியலால் சிந்தைசெய்யேன்
கொய்யணி நறுமலர் குலாயசென்னி
மையணி மிடறுடை மறையவனேஇதுவோஎமை ஆளுமா றீவதொன்றெமக் கில்லையேல்
அதுவோவுன தின்னருள் ஆவடுதுறை அரனே.

பொழிப்புரை :

கொய்து அணியப்பெறும் நறுமணம் கமழும் மலர்களைச் சூடியுள்ள முடியையும் , மை போன்ற கருநிறக் கண்டத் தையும் உடைய மறையவனே ! கைப்பொருள்கள் யாவும் இழந்து வருந்தும் காலத்திலும் , பிறரால் இழிவாகக் கருதப்பட்டுக் கழிவுப் பொருள் போன்று ஒதுக்கப்பட்ட காலத்திலும் , உன்னுடைய செம்மை வாய்ந்த திருவடிகளைப் போற்றுதலல்லாமல் , வேறெதனையும் நான் சிந்தை செய்யேன் . திருவாவடுதுறையில் எழுந்தருளியிருக்கும் சிவபெருமானே ! இத்தன்மையுடைய என்னை நீ ஆட்கொள்ளும் முறை இதுவோ ? ( உலக நன்மைக்காகத் தந்தையார் செய்ய விரும்புகின்ற வேள்விக்குத்) தேவையான பொருளை எனக்குத் தாராவிடில் அஃது உனதின்னருளுக்கு அழகாகுமா ?

பாடல் எண் : 6

வெந்துயர் தோன்றியோர் வெருவுறினும்
எந்தாய்உன் னடியலால் ஏத்தாதென்நா
ஐந்தலை யரவுகொண் டரைக்கசைத்த
சந்தவெண் பொடியணி சங்கரனேஇதுவோஎமை ஆளுமா றீவதொன்றெமக் கில்லையேல்
அதுவோவுன தின்னருள் ஆவடுதுறை அரனே.

பொழிப்புரை :

ஐந்து தலைகளையுடைய பாம்பை அரையில் கச்சாகக் கட்டி , நறுமணம் கமழும் திருவெண்ணீற்றினைத் திருமேனி யில் அணிந்துள்ள சங்கரனே ! கொடிய துன்பத்தால் அச்சமுற்றாலும் , எம் தந்தையே ! உன்திருவடிகளைப் போற்றுதல் அல்லாமல் என் நா வேறெதனையும் சொல்லாது . அங்ஙனமிருக்க திருவாவடுதுறையில் எழுந்தருளியிருக்கும் சிவபெருமானே ! நீ எம்மை ஆட்கொள்ளும் வகை இதுவோ . ( உலக நன்மைக்காகத் தந்தையார் செய்ய விரும்பும் வேள்விக்குத் ) தேவையான பொருளை எனக்குத் தாராவிடில் அஃது உனதின்னருளுக்கு அழகாகுமா ?

பாடல் எண் : 7

வெப்பொடு விரவியோர் வினைவரினும்
அப்பாவுன் அடியலால் அரற்றாதென்நா
ஒப்புடை ஒருவனை உருவழிய
அப்படி அழலெழ விழித்தவனேஇதுவோஎமை ஆளுமா றீவதொன்றெமக் கில்லையேல்
அதுவோவுன தின்னருள் ஆவடுதுறை அரனே.

பொழிப்புரை :

அழகில் தனக்கு ஒப்புமையாகத் தன்னைத் தவிரப் பிறரைச் சொல்ல முடியாத மன்மதனை , அவனுடைய வடிவம் அழியு மாறு நெருப்புத் தோன்ற நெற்றிக் கண்ணைத் திறந்து விழித்தவனே ! திருவாவடுதுறையில் எழுந்தருளியிருக்கும் சிவபெருமானே ! கொடிய வினையினால் துன்பம் நெருப்புப் போல வந்து தாக்கினாலும் , அனைத் துயிர்கட்கும் தந்தையான உன் திருவடிகளைப் போற்றுதலல்லாமல் என் நா வேறொன்றையும் நவிலாது . இப்படிப்பட்ட என்னை நீ ஆட்கொள்ளும்முறை இதுவோ ? ( உலக நன்மைக்காகத் தந்தையார் செய்ய விரும்புகின்ற வேள்விக்குத் ) தேவையான பொருளை எனக்குத் தாராவிடில் அஃது உனதின்னருளுக்கு அழகாகுமா ?

பாடல் எண் : 8

பேரிடர் பெருகிஓர் பிணிவரினும்
சீருடைக் கழல்அலால் சிந்தைசெய்யேன்
ஏருடை மணிமுடி யிராவணனை
ஆரிடர் படவரை அடர்த்தவனேஇதுவோஎமை ஆளுமா றீவதொன்றெமக் கில்லையேல்
அதுவோவுன தின்னருள் ஆவடுதுறை அரனே.

பொழிப்புரை :

அழகிய மணிமுடியணிந்த இராவணன் பொறுத்தற் கரிய துன்பமடையும்படி கயிலை மலையின்கீழ் அடர்த்தவனே ! திருவாவடுதுறையில் எழுந்தருளியிருக்கும் சிவபெருமானே ! தீவினை யால் பெருந்துன்பம் தரும் நோய் வரினும் வாழ்வுதரும் உன் திருவடிகளைப் போற்றுதல் அல்லாமல் வேறெதனையும் நான் சிந்தனை செய்ததில்லை . இப்படிப்பட்ட என்னை நீ ஆட்கொள்ளும் முறை இதுவோ ? ( உலக நன்மைக்காகத் தந்தையார் செய்ய விரும்புகின்ற வேள்விக்குத் ) தேவையான பொருளை எனக்குத் தாராவிடில் அஃது உனதின்னருளுக்கு அழகாகுமா ?

பாடல் எண் : 9

உண்ணினும் பசிப்பினும் உறங்கினும்நின்
ஒண்மல ரடியலால் உரையாதென்நாக்
கண்ணனும் கடிகமழ் தாமரைமேல்
அண்ணலும் அளப்பரி தாயவனேஇதுவோஎமை ஆளுமா றீவதொன்றெமக் கில்லையேல்
அதுவோவுன தின்னருள் ஆவடுதுறை அரனே.

பொழிப்புரை :

திருமாலும் , மணங்கமழ் தாமரையில் வீற்றிருக்கும் பிரமனும் அளந்தறிதற்கு அரியவனே ! திருவாவடுதுறையில் எழுந்தருளியிருக்கும் சிவபெருமானே ! நான் உண்ணும் நிலையிலும் , பசியால் களைத்திருக்கும் நிலையிலும் , உறங்கும் நிலையிலும் ஒளிபொருந்திய உன் திருவடிகளைப் போற்றுதலல்லாமல் என் நா வேறெதையும் நவிலாது . அப்படிப்பட்ட என்னை நீ ஆட்கொள்ளும் முறை இதுவோ ? ( உலக நன்மைக்காகத் தந்தையார் செய்யும் வேள்விக்குத் ) தேவைப்படும் பொருளை எனக்குத் தாராவிடில் அஃது உனதின்னருளுக்கு அழகாகுமா ?

பாடல் எண் : 10

பித்தொடு மயங்கியோர் பிணிவரினும்
அத்தாவுன் னடியலால் அரற்றாதென்னாப்
புத்தரும் சமணரும் புறன்உரைக்கப்
பத்தர்கட் கருள்செய்து பயின்றவனேஇதுவோஎமை ஆளுமா றீவதொன்றெமக் கில்லையேல்
அதுவோவுன தின்னருள் ஆவடுதுறை அரனே.

பொழிப்புரை :

புத்தரும் , சமணரும் புறங்கூறினாலும் பொருட் படுத்தாது உன்னை வணங்குகின்ற பக்தர்கட்கு அருள்புரிகின்றவனே ! பித்த நோயால் மயங்கும் நிலையுற்றாலும் , தலைவா ! உன் திரு வடிகளைப் போற்றுதலல்லாமல் என் நா வேறெதையும் பேசாது . திருவாவடுதுறையில் எழுந்தருளியிருக்கும் சிவபெருமானே ! இப்படிப்பட்ட என்னை நீ ஆட்கொள்ளும்முறை இதுவோ ? ( உலக நன்மைக்காகத் தந்தையார் செய்ய விரும்புகின்ற வேள்விக்குத் ) தேவைப்படும் பொருளை எனக்குத் தாராவிடில் அஃது உனதின்னருளுக்கு அழகாகுமா ?

பாடல் எண் : 11

அலைபுனல் ஆவடு துறைஅமர்ந்த
இலைநுனை வேற்படை யெம்இறையை
நலமிகு ஞானசம் பந்தன்சொன்ன
விலையுடை அருந்தமிழ் மாலைவல்லார்
வினையாயினநீங் கிப்போய் விண்ணவர் வியனுலகம்
நிலையாகமுன் ஏறுவர்நிலமிசை நிலையிலரே.

பொழிப்புரை :

அலைகளையுடைய காவிரிவளம் பொருந்திய திருவாவடுதுறையில் வீற்றிருக்கும் இலை போன்ற நுனியையுடைய திரிசூலப் படையேந்திய எம் இறைவனைப் பற்றி உலக நலன்களை விரும்பிய ஞானசம்பந்தன் அருளிய சிறப்புடைய அருந்தமிழ் மாலையாகிய இத்திருப்பதிகத்தை ஓதுபவர்கள் வினையாவும் நீங்கப் பெற்று விரிந்த விண்ணுலகில் நிலையாக வீற்றிருப்பர் . துன்பம் தரும் இம்மண்ணுலகில் மீண்டும் வந்து பிறவார் .
நன்றி : www.thevaaram.org
=================================================================

8 thoughts on “‘இடரினும் தளரினும்…’ – பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிப்பவர்களுக்கு இதோ ஒரு அருமருந்து !

  1. அண்ணா, இதில் வேள்விக்காக திரு ஞானசம்பந்தர் இப்பாடலை பாடி இறைவனிடம் செல்வத்தை வேண்டுகிறார் அதுவும் தனக்காக இல்லாமல் வேறோருவருக்காக(தந்தைக்காக, உலக நலனுக்காக). ஆனால் இப்பாடலை நம் சுய முன்னேற்றத்துக்கு செல்வம் பெற பாடுவது எப்படி உகந்ததாகும். என் அறியாமையை மன்னிக்கவும். இவ்வாறு நாம் செய்வதால் தவறொன்றும் இல்லையா.

    1. அதனால் என்ன? நீங்களும் செல்வம் பெற்று, அனைத்தையும் நீங்களே துய்க்காமல் அதில் சரி பாதியை நல்ல காரியங்களுக்கு செலவு செய்யுங்களேன்.

      – சுந்தர்

      1. உங்கள் பதிவிற்கும் பதிலுக்கும் மிக்க “நன்றி அண்ணா”…
        நண்பருக்காக ( நேற்று அவருடைய பண பிரச்சினைய சொன்னார், உங்க முந்தய பதிவு நியாபகம் வந்தது). இன்று இந்த பதிவை எதிர்பார்க்கவில்லை … அவருக்காக இந்த கேள்விய கேட்டேன். கண்டிப்பா அவரோடு நானும் இதை செய்வேன். எல்லாம் இறைவன் செயல். ஓம் சிவாய நமஹ !

  2. சுந்தர் சார்,
    Rightmantra.com -ல் பல நல்ல விசயங்களையும் மற்றும் பல சாதனையாளர்களையும் தெரிந்து கொண்டோம். அதனால் எங்கள் வாழ் நாளிற்கு மிகவும் பயனுல்லதா இருந்து கொண்டிருக்கிறது.

    இப்பொழுது செல்வம் பெறுவதற்கும் வழி காட்டி இருக்கிறிர்கள். அதில் சரி பாதி நல்லவைகளுக்கு உதவுங்கள் என்று சொல்லுவது மிக பெரிய புன்னியத்திருக்கும் வழி காட்டி விட்டீர்கள்.

    நன்றியுடன் அருண்.

  3. பொருதார நெருக்கடி

    இன்றையசூழ்நிலையில் ஒரு சாமானியனுக்கு இருக்கும் மிகப்பெரிய பிரச்சனைகளில் ஒன்று

    எதுவாக இருந்தால் என்ன சமாளித்துவிடலாம் என்ற உறுதி உள்ளோரையும் அசைத்துபார்க்கும் அசகாய சூரன்

    இந்த அரக்கனிடம் சிக்கி சின்னாபின்னம் ஆகாதவர்கள் இருக்கமுடியாது – அதற்க்கு அந்த திருமலை தெய்வமே சாட்சி

    நாம் எவ்வளவுதான் முயற்சி எடுத்தாலும் முழுமையாக வெற்றிகொள்ளமுடியாத பெரும் பிரச்சனையாக நம் கண்முன் நிற்பது

    இவ்வளவு பலம் வாய்ந்த ஒரு பிரச்சனைக்கு ஒரு எளிய இனிய தீர்வை நமக்கு வழிகாட்டிய அந்த ஞான சம்பந்த பெருமானுக்கு நாம் என்றென்றும் கடைப்பற்றிருக்கிறோம்

    தக்க சமையத்தில் பலரது துயர் துடைக்கும் இந்த அற்புதமான பதிவை தந்தமைக்கு மிக்க நன்றி !!!

    வாழ்க வளமுடன் !!!

  4. டியர் சார்

    வொந்டெர்புல்

    தங்கள் சேவை மிக உன்னதமானது

    நீண்ட ஆயுளை. ஆரோக்யத்தை இறைவன் உங்களுக்கு

    அளிக்கட்டும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *