Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Tuesday, March 19, 2024
Please specify the group
Home > Featured > தன்னை இகழ்ந்தவருக்கும் அருள் செய்த ஸ்ரீ ராகவேந்திரர் – ரைட்மந்த்ரா பிரார்த்தனை கிளப்

தன்னை இகழ்ந்தவருக்கும் அருள் செய்த ஸ்ரீ ராகவேந்திரர் – ரைட்மந்த்ரா பிரார்த்தனை கிளப்

print
ஸ்ரீ ராகவேந்திரர் மந்த்ராலயத்தில் பிருந்தாவனப் பிரவேசம் செய்த பின்பு பல ஆண்டுகள் கழித்து நடந்த ஒரு நிகழ்ச்சி இது. ஸ்ரீ வியாச தத்வக்ஞ தீர்த்தர் என்பார் மிகச் சிறந்த ஆச்சார்யாள்களில் ஒருவராக திகழ்ந்து வந்தார். அவரிடம் பல சிஷ்யர்கள் பாடம் பயின்று வந்தனர்.

ஒரு நாள் தனது சிஷ்யர்களுக்கு ‘நியாய சுதா’ என்ற நூலை போதித்து வந்தார். ‘நியாய சுதா’ என்பது மிகவும் கடினமான நூல். இதை புரிந்துகொள்வதென்பது அவ்வளவு சாமான்யமானதல்ல. அதிகமான ஞானம் இருந்தால் தான் நியாய சுதாவை புரிந்துகொள்ள முடியும்.

DSC_0209

ஸ்ரீ ஸ்ரீ ராகவேந்திர ஸ்வாமிகள் வெங்கடநாதராய் கும்பகோணம் விஜயீந்திர ஸ்வாமிகள் மடத்தில் ஸ்ரீ சுதீந்திர தீர்த்தரிடம் வித்யாப்யாசத்தில் இருந்த காலத்தில் நியாய சுதா என்னும் இந்த கடினமான நூலுக்கு பாஷ்யம் எழுதினார். யாருமே தர முடியாத விளக்கங்களை எல்லாம் மிகவும் எளிமையாய் எல்லாரும் எளிதில் புரிந்துகொள்ளுமாறு வெங்கடநாதர் நியாய சுதாவிற்கு உரை எழுதியிருந்ததை கண்டு ஸ்ரீ சுதீந்திர தீர்த்தர் வியந்தார். வெங்கடநாதனைப் பற்றி குறை சொன்ன சக சிஷ்யர்களிடம் வெங்கடநாதரின் புலமையை எடுத்துரைத்து ‘பரிமளாச்சாரியார்’ என்ற பட்டத்தை கொடுத்து கௌரவித்து நியாய சுதாவின் உரைக்கு ‘சுதா பரிமளம்’ என்ற பெயரையும் வைத்திருந்தார்.

அப்படிப்பட்ட நியாய சுதாவைத் தான் ஸ்ரீ வியாச தத்வக்ஞ தீர்த்தர் தனது சீடர்களுக்கு பாடமாய் நடத்திக்கொண்டிருந்தார். ஆனால் ஸ்ரீ வியாச தத்வக்ஞ தீர்த்தருக்கு ஸ்ரீ ராகவேந்திரர் இயற்றிய சுதா பரிமளத்தின் மேல் அவ்வளவாக நல்ல அபிப்ராயம் ஏற்படவில்லை. அவரது கருத்துப்படி சுதா பரிமளம் என்பது ஒரு மூகடிப்பிணி. அதாவது கருத்துக்களை சரிவர விளக்காமல் மேம்போக்கான விளக்கம் கொடுக்கப்பட்டிருக்கிறது என்பது தான் ஸ்ரீ வியாச தத்வக்ஞ தீர்த்தரின் அபிப்ராயமாக இருந்தது.

இதனால் நியாய சுதாவை பாடம் நடத்தும்போது ஸ்ரீ ராகவேந்திரரின் சுதா பரிமளத்தை சமயம் கிடைக்கும்போதெல்லாம் சிஷ்யர்களிடம் பரிகசித்தும் வந்தார். தான் சொல்வது தான் சிறந்தது என்பது போல, சுதா பரிமளத்தை இரண்டாம் பட்சமாக்கினார்.

இப்படியாக இருக்கும்போது ஒரு நாள், ஸ்ரீ வியாச தத்வக்ஞ தீர்த்தரின் சிஷ்யர்கள் நியாய சுதாவை பற்றிய சில சந்தேகங்களை கேட்டு அதை விளக்குமாறு கேட்டுக்கொண்டார்கள்.

“உங்கள் சந்தேகங்களை போக்க வேண்டியது என் கடமை. உங்களுக்கு எந்த இடத்தில் புரியவில்லை என்று கேளுங்கள். எளிமையாக விளக்குகிறேன்…!” என்று கம்பீரமாக தீர்த்தர் சொன்னதும் சிஷ்யர்கள் தமது சந்தேகங்களை அவரிடம் இயம்பினர்.

சிஷ்யர்கள் கேட்ட சந்தேகங்களுக்கு ஸ்ரீ வியாஸ தத்வக்ஞ தீர்த்தர் விளக்கமளிக்க முற்பட்டார். எப்படி எல்லாமோ விளக்கங்களை கொடுக்க முற்பட்டபோதும் அதில் அவருக்கே திருப்தி ஏற்படவில்லை. சிஷ்யர்களுக்கும் சந்தேகம் தீரவில்லை. பலவாறாக சிந்தித்தும் பார்த்தார். தீர்த்தருக்கு விளக்கங்களே தோன்றவில்லை. தான் அளிக்கும் விளக்கம் தான் சிறந்தது, சுதா பரிமளாவில் தனக்கு தெரியாதது எதுவுமே இல்லை என்று இது நாள் வரை மார்தட்டி வந்த தீர்த்தர் இப்போது தலை குனிந்தார். சிஷ்யர்களின் சந்தேகங்களை களைய முடியவில்லையே என ஆதங்கம் கொண்டார்.

மனம் குழம்பிய தீர்த்தர் அதற்கு மேலும் பாடம் நடத்தாமல் அன்றைய வகுப்பை சீக்கிரம் முடித்துக்கொண்டு, விளக்கங்களை அடுத்த நாள் தருவதாக சொன்னாரே தவிர, அன்று முழுவதும் சிந்தித்து சிந்தித்தே நேரத்தை கழித்தாரே தவிர, எந்தவொரு விளக்கமும் அவருக்கு கடைசி வரை தோன்றவேயில்லை.

சஞ்சலத்தில் ஆழ்ந்திருந்த வெகு நேரம் வரை உறக்கம் பிடிக்காமல் புரண்டு கொண்டிருந்தார். பாதி இரவிற்கு மேல் தான் அவருக்கு உறக்கமே வந்தது. கூடவே ஒரு அதிசயமும் நிகழ்ந்தது.

ஆம்… சிஷ்யர்களின் சந்தேகங்களை போக்க முடியாமல் அவதிப்பட்ட ஸ்ரீ வியாச தத்வக்ஞ தீர்த்தரின் கனவில் ஸ்ரீ ராகவேந்திரர் தோன்றினார். எந்தெந்த இடங்களுக்கு விளக்கங்கள் தேவை என்று தீர்த்தர் குழம்பினாரோ, அந்த இடங்களுக்கெல்லாம் சுதா பரிமளத்தில் தெளிவான விளக்கங்கள் இருப்பதை சுட்டிக் காட்டி, தீர்த்தரை தெளியவைத்து ஸ்ரீ ராகவேந்திரர் மறைந்தார்.

ஸ்ரீ வியாச தத்வக்ஞ தீர்த்தருக்கு மெய்யெல்லாம் ஜில்லிட்டது. பரபரப்புடன் எழுந்து சுதா பரிமளத்தை புரட்டினார்.

“ஆஹா… ஆஹா… என்ன அருமையான விளக்கங்கள். இப்பேர்ப்பட்ட பாஷ்யத்தையா நான் இது வரையில் இகழ்ந்து வந்தேன். என்னே என் மடமை. குரு ராகவேந்திரா…! நின்னை இகழ்ந்த என் மீது இவ்வளவு கருணை பூண்டனையே…! ஆஹா என்னே என் பாக்கியம்!! என் ஜென்மம் சாபல்யம் பெற்றது. உன்னையே ஒவ்வொரு நாழிகையும் வேண்டி துதிப்போர் கணக்கில்லாமல் இருக்க, உன்னைப் பரிகசித்த என் கனவில் தோன்றி எனது சஞ்சலத்தை களைந்து என்னை நானே உணரச் செய்த குரு தேவா! இனி என்றென்றும் நான் உன் அடிமை… என்றென்றும் நீ எனக்கு அருள் புரிய வேண்டும் குருதேவா!” என்று ஸ்ரீ ராகவேந்திரரை ஸ்மரித்துக்கொண்டார்.

அடுத்த நாள் காலையில் தனக்கு முந்தைய இரவு ஏற்பட்ட ஆத்மானுபவத்தை கூறி சந்தேகங்களுக்கான விளக்கத்தையும் சுதா பரிமளத்திலிருந்து சிஷ்யர்களுக்கு விளக்கியதும், ஸ்ரீ ராகவேந்திரரின் கருணையையும் மகிமையையும் அனைவரும் போற்றித் துதித்தனர்.

(நன்றி : ‘ஸ்ரீ ராகவேந்திர மகிமை’ பாகம் 1 | தட்டச்சு : www.rightmantra.com )

================================================================

திரு.அம்மன் சத்தியநாதன் அவர்கள் எழுதிய ‘ஸ்ரீ ராகவேந்திர மகிமை’ நூல் இதுவரை ஒன்பது பாகங்கள் வெளிவந்துவிட்டது. முதல் பாகத்தில் இடம்பெற்ற இந்த சம்பவம் நமக்கு மிகவும் பிடித்த ஒன்று. 22 ஆண்டுகளுக்கு முன்னர் ‘ஸ்ரீ ராகவேந்திர மகிமை’ முதல் பாகம் வெளியானபோது அப்போதே இந்த அத்தியாயத்தை படிக்கும்போதெல்லாம் சிலிர்த்து போய் கண்கலங்கியிருக்கிறோம்.

(வெள்ளியன்று எப்படியும் பிரார்த்தனை பதிவு அளித்துவிடவேண்டும் என்று முயற்சி செய்து அளித்து வருவது நீங்கள் அறிந்ததே. ஏனெனில், ஐ.டி. துறையில் பணிபுரியும் வாசகர்களுக்கு சனிக்கிழமை விடுமுறை. வெள்ளியன்று அவர்கள் பிரார்த்தனை பதிவை படித்தால் தான், ஞாயிறு பிரார்த்தனை செய்யமுடியும். இந்த பதிவை இன்று அளிக்க முடியுமா முடியாதா என்றே நமக்கு முதலில் தெரியவில்லை. காரணம்,நேற்று இரவு முழுக்க வீட்டில் மின்சாரம் இல்லை. எனவே நாம் 10.00 மணி வரை பார்த்துவிட்டு பின்னர் உறங்கிவிட்டோம். நல்லவேளை நள்ளிரவு ஒரு மணிக்கு மின்சாரம் வந்தது. எனவே காலை சீக்கிரம் எழுந்து பதிவை தயார் செய்தோம். எல்லாம் ராயரின் அருள் தான். இல்லையெனில் இந்த பதிவை இன்று அளித்திருக்க முடியாது.)

================================================================

இந்த வார பிரார்த்தனைக்கு தலைமை தாங்குபவர் : ‘மந்த்ரலாய முரசு’ திரு.மானாமதுரை சேதுராமன் அவர்களின் புதல்வர் திரு.லக்ஷ்மி நரசிம்மன் அவர்கள்.

சிறு வயதிலேயே நமக்கு ஆன்மீகத்தில் ஈடுபாடு ஏற்பட காரணமாக இருந்தவர் ‘மந்த்ரலாய முரசு’ திரு.மானாமதுரை சேதுராமன் அவர்கள். சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்னர் ஸ்ரீ ராகவேந்திரர் பற்றி அவர் நிகழ்த்திய சொற்பொழிவு ஒன்றை கேட்டுத் தான் நமது மனதில் ஆன்மீகத்தின் விதை துளிர்த்தது. இன்று சேதுராமன் அவர்கள் இல்லையென்றாலும் அவரது ராகவேந்திரரின் பிருந்தாவனப் பிரவேச சி.டி.யை அடிக்கடி கேட்டு அவரை நினவு கூர்ந்து வருகிறோம்.

அவருடைய புதல்வர் திரு.லக்ஷ்மி நரசிம்மன் அவர்கள் நமக்கு நெருங்கிய நண்பர். லக்ஷ்மி நரசிம்மன் அவர்களுடன் நமக்கு அறிமுகம் ஏற்பட்டது எப்படி, மகா பெரியவா எப்படி நம்மை அவருடன் இணைத்து வைத்தார், திரு.சேதுராமன் அவர்களின் துணைவியார் திருமதி.சாந்தா சேதுராமன் அவர்கள் நமக்கு அளித்த ஆசி ஆகியவற்றை பற்றி http://rightmantra.com/?p=2436 பதிவில் விரிவாக விளக்கியிருக்கிறோம்.

லக்ஷ்மி நரசிம்மன் நரசிம்மன் அவர்கள் நமக்கு நண்பர் மட்டுமல்ல நமது தளம் சார்பாக நடைபெறும் நிகழ்ச்சிகளுக்கும் வந்திருக்கிறார்.

திரு.லக்ஷ்மி நரசிம்மன் அவர்கள் நமது ‘மகா பெரியவா மகிமை’ நிகழ்ச்சியில் கலந்துகொண்டு நமக்கு ஸ்ரீ ராகவேந்திரரின் மிருத்திகையை பரிசளித்தபோது எடுத்த படம்….

கடந்த ஆண்டு துவக்கத்தில் சென்னை கே.கே. நகர் சக்தி விநாயகர் கோவிலில் நம் தளம் சார்பாக நடைபெற்ற திரு.சுவாமிநாதன் அவர்களின் ‘மகா பெரியவா மகிமை’ நிகழ்ச்சிக்கு தன் குடும்பத்துடன் வந்திருந்ததோடல்லாமல் நமக்கு ஸ்ரீ ராகவேந்திரரின் மூல பிருந்தாவனத்தில் இருந்து கொண்டு வந்த மிருத்திகையையும் பரிசளித்தார். மேலும் திரு.மானாமதுரை சேதுராமன் அவர்கள் முதன்முதலில் ஸ்ரீ ராகவேந்திர மகிமை சொற்பொழிவு நிகழ்த்தியது இந்த கே.கே.நகர் சக்தி விநாயகர் பிள்ளையார் கோவில் ஹாலில் தான் என்கிற தகவலையும் நமக்கு சொன்னார். (நமது தளத்தின் நிகழ்ச்சிகள் இங்கு தான் நடைபெறுவது வழக்கம்.)

‘புலிக்கு பிறந்தது பூனையாகுமா?’ என்கிற பழமொழிக்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டு திரு.லக்ஷ்மி நரசிம்மன் அவர்கள். தந்தையைப் போலவே ராயரின் பக்தியில் திளைத்து வருகிறார். கடந்த முப்பது ஆண்டுகளாக ஒவ்வொரு வியாழக்கிழமையும் சாலிக்கிராமத்தில் உள்ள ஸ்ரீ ராகவேந்திரரின் பிருந்தாவனத்திற்கு செல்வதை வழக்கமாக கொண்டுள்ளார். தவிர்க்க முடியாத காரணங்களினால் சாலிக்கிராமம் செல்ல முடியாவிட்டால் தி.நகர் பிருந்தாவனம் சென்றுவிடுவார். ஆனால் குருவாரம் தோறும் ராயரை தரிசிக்காமல் இருந்ததேயில்லை.

பன்னாட்டு நிறுவனம் ஒன்றில் கம்பெனி செக்ரட்டரியாக பணிபுரியும் திரு.லக்ஷ்மி நரசிம்மன், வணிகவியலில் பட்டப்படிப்பு முடித்து பல ஆண்டுகள் கழித்து தான் C S படிப்பை படிக்க துவங்கினார். ஆனால் ராயரின் அருளால் வெற்றிகரமாக C S முடித்து தற்போது கம்பெனி செக்ரட்டரியாக பணிபுரிவதாக நெகிழ்ச்சியுடன் கூறுகிறார். (C S என்பது CA, ICWA போன்று சற்று கடினமான ஒரு படிப்பு. ஆனால் படித்து முடித்துவிட்டால் நல்ல வேலை உறுதி!).

இன்றும் தினசரி காலை குளித்து முடித்ததும் பூஜை அறையில் அமர்ந்து “ஓம் ஸ்ரீ ராகவேந்திராய நம” என்னும் மந்திரத்தை 108 தரம் நோட்டுப் புத்தகத்தில் எழுதி வருகிறார். நாம் அனைவரும் பின்பற்றவேண்டிய பழக்கம் இது.

சென்னை ராமாபுரத்தில் வசிக்கும் திரு.லக்ஷ்மி நரசிம்மனுக்கு திருமணமாகி தற்போது இரண்டு குழந்தைகள் உள்ளனர். மூத்த மகள் ஒன்பதாம் வகுப்பும், மகன் ஏழாம் வகுப்பும் படித்து வருகிறார்கள்.

இவருடைய தாயார் திருமதி.சாந்தா சேதுராமன் அவர்கள் (நம் தாயாரின் பெயரும் சாந்தா தான்!) ஒரிஸ்ஸாவில் உள்ள பூரி ஜெகன்னாதரை தரிசிக்க உறவினர்களுடன் சென்றிருக்கிறார்.

இந்த வார பிரார்த்தனைக்கு தலைமை ஏற்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டபோது மகிழ்ச்சியுடன் ஒப்புக்கொண்டார். பூரி சென்றுள்ள தன் தாயாரையும் முடிந்தால் ஜெகன்னாதரின் சன்னதியிலேயே பிரார்த்தனை செய்யச் சொல்வதாக கூறியிருக்கிறார்.

திரு.லக்ஷ்மி நரசிம்மன் நமது பிரார்த்தனை கிளப்புக்கு தலைமை ஏற்பது சாட்சாத் ஸ்ரீ ராயரின் கருணையே அன்றி வேறில்லை.

(இதில் என்ன விசேஷம் என்றால் நேற்று வரை இவர் தான் இந்த வார பிரார்த்தனைக்கு தலைமை ஏற்கவேண்டும் என்று நாம் முடிவு செய்யவில்லை. நேற்று ‘ஸ்ரீ ராகவேந்திர தரிசனம்’ தொடரை நமது தளத்தில் அளித்தபோது தான் இவர் நினைவு நமக்கு மீண்டும் வந்தது. குருராஜர் அதை நிகழ்த்தியதும் ஒரு காரணத்துடன் தான் என்பதை அப்புறம் தான் புரிந்துகொண்டோம். எப்படி என்றால், நமது ‘ஸ்ரீ ராகவேந்திர தரிசனம்’ தொடர் சம்பந்தமாக பக்தர்களின் அனுபவங்களை திரட்ட பலரிடம் பேசி வருகிறோம். நேற்று மாலை பிரார்த்தனை கிளப் பற்றி இவரிடம் பேசிக்கொண்டிருந்தபோது நாம் துவங்கியுள்ள ராயரின் இந்த தொடர் பற்றி இவரிடம் சொன்னபோது, பல மிருத்திகா பிருந்தாவனங்களின் தொடர்பை ஏற்படுத்தி தருவதாகவும், அதன் மூலம் பக்தர்கள் வாழ்வில் பல இடங்களில் ராயர் நிகழ்த்திய பல மகிமைகளை தெரிந்துகொள்ளலாம் என்றும் கூறி நம்மை திக்குமுக்காட செய்தார். இது தொடர்பாக முதலில் நாம் நங்கநல்லூர் ராகவேந்திர பிருந்தாவனம் செல்லவிருக்கிறோம். குருவின் மகிமையை கேட்க அங்கே இங்கே இன்று அலைந்து திரிய இருந்த நம்மை, தன் பிருந்தாவனத்துக்கே அழைத்திருக்கிறார் குருராஜர். என்னே அவர் கருணை!)

மேலும் நம்மிடம் உள்ள மானாமதுரை சேதுராமன் அவர்களின் ‘ஸ்ரீ ராகவேந்திர மகிமை’ சொற்பொழிவு சி.டி.யை மீண்டும் குருராஜரின் பக்தர்கள் அனைவரிடமும் கொண்டு சேர்க்கும் மகத்தான பணி தொடர்பாக இவரிடம் ஒப்புதல் பெற்றிருக்கிறோம். நம் வாசகர்கள் ஒரு சிலர் கூட நம்மிடம் அந்த சி.டி.யை கேட்டிருக்கிறார்கள். ஒவ்வொரு வியாழக்கிழமையும் அனைவர் இல்லத்திலும் ஒலிக்க வேண்டிய சி.டி. அது !

================================================================

இந்த வார பிரார்த்தனைக்கு கோரிக்கை பார்க்கலாமா?

வீட்டில் மழலைச் சத்தம் கேட்க வேண்டும்!

என் பெயர் எஸ்.பி.ராகவேந்திரன். எனது சொந்த ஊர் மதுரை. வேலூரில் ஒரு அரசு நிறுவனத்தில் அதிகாரியாக பணி புரிந்துவருகிறேன்.

சென்ற மாதம் ஒரு நாள் சுந்தரகாண்டம் தொடர்பாக இணையத்தில் ஏதோ தேடிக்கொண்டிருந்தபோது இந்த தளத்தின் முகவரி கிடைத்தது. அது முதல் தளத்தை நேரம் கிடைக்கும்போதெல்லாம் பார்த்துவருகிறேன். நல்ல முயற்சி. எனது வாழ்த்துக்கள்.

இந்த வார ரைட்மந்த்ரா பிரார்த்தனை கிளப்புக்கு என் கீழ்கண்ட கோரிக்கையை சமர்ப்பிக்கிறேன்.

என் பெற்றோருக்கு பிறந்த முதல் குழந்தை பிறந்தவுடன் இறந்துவிட்டபடியால், அடுத்த குழந்தையாவது நல்லபடியாக பிறக்கவேண்டுமே என்கிற கவலையில், மதுரையில் உள்ள ராகவேந்திரர் பிருந்தாவனத்தில் என் பெற்றோர் வேண்டிக்கொண்டனர். தொடர்ந்து நான் பிறந்தேன். குருராஜரின் அருளால் நான் பிறந்ததால் எனக்கு ராயரின் பெயரையே வைத்துவிட்டார்கள்.

எனக்கு தற்போது திருமணமாகி மூன்றாண்டுகள் ஆகிறது. என் மனைவியின் பெயர் ஆண்டாள். எங்களுக்கு இன்னும் புத்திர பாக்கியம் கிடைக்கவில்லை. ஸ்ரீ ராகவேந்திரர் அருளால் எங்கள் வீட்டில் விரைவில் மழலைச் சத்தம் கேட்க வேண்டும்.

அதற்கு உங்கள் அனைவரையும் பிரார்த்தனை செய்யும்படி கேட்டுக்கொள்கிறேன்.

எஸ்.பி.ராகவேந்திரன்,
வேலூர்

(இதை அன்பர் அலைபேசியில் நம்மிடம் சொல்ல சொல்ல நாம் தட்டச்சு செய்தது.)

================================================================

அடுத்து பெயர் வெளியிட விரும்பாத ஒரு வாசகி நமக்கு அனுப்பியிருக்கும் மின்னஞ்சல்.

அவரது மின்னஞ்சலில் இருந்து அவர் தீராத கடன் பிரச்சனையில் சிக்கியிருப்பது தெரிகிறது. மேலும், உத்தியோகம் தொடர்பாகவும் அவர் ஏதோ கடும் சிக்கலில் இருப்பதாக கூறுகிறார். தனது எதிர்காலமே இந்த இரண்டு பிரச்னைகளும் தீர்வதில் தான் இருக்கிறது என்று நமக்கு எழுதியிருக்கிறார்.

அவரது வரிகளில் இருந்து அவர் கடுமையான மன உளைச்சலில் இருப்பது புரிகிறது. தற்காலிக பிரச்னைகளுக்கு பயந்து நாம் நிரந்தரமாக வருந்தும்படி எதையும் செய்துவிடக்கூடாது.

இந்த வாசகியின் கடன் பிரச்னைகள் தீர்ந்து, விரைவில் தனது உத்தியோகத்தில் இவர் எதிர்பார்க்கும் மாற்றமும் ஏற்றமும் ஏற்பட இறைவனை வேண்டுவோம்.

உடனடியாக இவ்வாசகி தமது பகுதிக்கு அருகில் இருக்கும் ராகவேந்திரரின் பிருந்தாவனத்திற்கு ஒவ்வொரு வியாழக் கிழமையும் செல்லும்படி கேட்டுக்கொள்கிறோம். அங்கு அப்பண்ணாச்சாரியார் இயற்றிய ‘ஸ்ரீ ராகவேந்திர ஸ்தோத்திரம்’ கிடைக்கும். அதை ராயரின் சன்னதியிலே அமர்ந்து படித்து வரவும். ஒவ்வொரு வாரமும் செல்லச் செல்ல, சொல்லச் சொல்ல பிரச்சனைகள் மெல்ல மறைந்து சுபிக்ஷம் ஏற்படும் என்பது உறுதி.

குருராஜர் இருக்க கவலை எதற்கு?

முதலில் பிரார்த்தனை சமர்பித்திருக்கும் நண்பருக்கு வழக்கம் போல திரு.விஜய் பெரியசுவாமி அவர்கள் பரிகாரம் கூறுவார். பின்பற்றி பலன்பெறவும்.

================================================================

இந்த வார பொது பிரார்த்தனை :

கிளிகளின் தந்தைக்கு குமுறல் தீரவேண்டும்! தொண்டு சிறக்கவேண்டும்!!

இது ஏற்கனவே நமது பகுதியில் இடம்பெற்ற விபரம் தான். இருப்பினும் சூழ்நிலையின் அவசரம் கருதி மீண்டும் வைக்கப்படுகிறது.

ராயப்பேட்டையில் தன்னை தேடி தினசரி வரும் ஆயிரக்கணக்கான கிளிகளுக்கு தினமும் உணவளிப்பவர் திரு.சேகர். எத்தனையோ பிரச்சனைகளுக்கு நடுவே அவர் இந்த தொண்டை செய்துவருகிறார். இது பற்றி கேள்விப்பட்டவுடன், நம்மால் இயன்றளவு அவரது தொண்டுக்கு தோள் கொடுக்கவேண்டும் என்று முடிவு செய்து அவருக்கு உதவி வருவது நீங்கள் அறிந்ததே.

DSC06742கிளிகளுக்கு இப்படி தினசரி இவர் அரிசி வைப்பதால் எலித் தொல்லை ஏற்படுவதாக அக்கம் பக்கத்தினர் புகார் கூற துவங்கியுள்ளனர். (எலி இல்லாத இடம் தான் ஏது?). மேலும் வாடகை வீட்டில் வேறு வசிப்பதால் இந்த தொண்டை எத்தனை காலத்துக்கு செய்ய முடியும் என்று தெரியவில்லை என்றும் கூறுகிறார் சேகர். சேகர் அவர்கள் அங்கு இல்லையெனில், நிச்சயம் உணவை தேடி தினமும் வரும் ஆயிரகணக்கனக்கான கிளிகள் ஏமாந்து போகும். சரியான உணவின்றி அவை வாடநேரிடும்.எனவே திரு.சேகர் அவர்கள் செய்து வரும் தொண்டுக்கு இடையூறாக உள்ள பிரச்சனைகள் அகன்று அவர் எந்த வித மன உளைச்சலோ  கவலையோ இன்றி தனது தொண்டை அவர் தொடரவேண்டும். தொழில் ரீதியாக அவருக்கு முன்னேற்றம் ஏற்பட்டு அவர் விரும்புவதைப் போல அவரிடம் உள்ள விலை மதிப்பில்லா பழைய, அரிய வகை காமிராக்கள் நம் விஸ்காம் மாணவர்கள் பயன்படும் வகையில் அரசுடமையகக்கப்பட்டு அருங்காட்சியில் வைக்கப்படவேண்டும். அவர் இருக்கும் அந்த இல்லம் அவருக்கு சொந்தமாக வேண்டும்.  அன்னை மீனாட்சியையும், ஆண்டாளையும், ஸ்ரீ ராகவேந்திரரையும் இந்த கோரிக்கைகள் நிறைவேற வேண்டிக்கொள்வோம்.(சேகர் அவர்களை பற்றிய பதிவுக்கு : ஆயிரக்கணக்கில் படையெடுக்கும் கிளிகள் – சென்னையில் ஒரு அதிசயம்! DIRECT PICTORIAL REPORT!)

================================================================

http://rightmantra.com/wp-content/uploads/2013/04/Mahaperiyava-36.jpgவேலூரை சேர்ந்த திரு.எஸ்.பி.ராகவேந்திரன் – ஆண்டாள் தம்பதியினருக்கு புத்திர பாக்கியம் கிடைத்து அவர்கள் வீட்டில் மழலைச் சத்தம் கேட்கவும், பெயர் வெளியிட விரும்பாத நம் வாசகிக்கு கடன் பிரச்னையும், உத்தியோகத்தில் ஏற்பட்டுள்ள பிரச்னையும் தீரவும், கிளிகளின் தந்தை திரு.சேகர் அவர்களின் பிரச்சனைகள் யாவும் தீர்ந்து அவர்தம் தொண்டு சிறக்கவும்  எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கொள்கிறோம்.c. இந்த வார பிரார்த்தனைக்கு தலைமை ஏற்றுள்ள திரு.லக்ஷ்மி நரசிம்மன் அவர்கள் எல்லா நலனும் வளமும் பெற்று வாழவும் இறைவனைவேண்டுவோம்.

நமது பிரார்த்தனைகளை இறைவனிடம் கொண்டு சேர்த்து பலன் பெற்று தரவேண்டிய பொறுப்பு நாம் என்றும் வணங்கும் மகா பெரியவா அவர்களையே சாரும். அவரது திருவடிகளில் இந்த பிரார்த்தனைகளை சமர்ப்பிக்கின்றோம்.

கூட்டுப் பிரார்த்தனை அவருக்கு மிகவும் பிடித்த ஒன்று என்பதால் நிச்சயம் மகா பெரியவா அவர்கள் இந்த விஷயத்தில் சீக்கிரமே தமது அனுக்ரஹத்தை நல்குவார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது.

இதற்கு முன்பு, பிரார்த்தனை கிளப்பில் நாம் பிரார்த்தனை செய்தவர்களுக்காகவும் ஒரு சில வினாடிகள் பிரார்த்திப்போம்.

நாம் இறைவனிடம் எதை வேண்டிக்கொண்டாலும் நாமும் அதற்காக உழைப்போம்!!!

பிரார்த்தனை நாள் : ஜூலை 13,  2014 ஞாயிறு  நேரம் : மாலை 5.30 – 5.45

இடம் : அவரவர் இருப்பிடங்கள்

============================================================

பிரார்த்தனை கிளப்பிற்கு கோரிக்கை அனுப்பியுள்ள மற்றவர்கள் கவனத்திற்கு:

உங்கள் கோரிக்கைகள் அடுத்தடுத்து இடம்பெறும். கோரிக்கை இடம்பெறும் வரையிலும் அதற்கு பிறகும் கூட நீங்கள் தவறாமல் வாரா வாரம் நடைபெறும் இந்த பிரார்த்தனையில் கலந்துகொண்டு பிரார்த்தனை செய்துவாருங்கள். உங்கள்  வேண்டுதலை பிரார்த்தித்துவிட்டு கூடவே இங்கு கோரிக்கை அனுப்பும் பிறர் நலனுக்காகவும் சில நிமிடங்கள் பிரார்த்தனை செய்யுங்கள். பிறருக்காக பிரார்த்தனை செய்வது மிகவும் உன்னதமான விஷயம்.  இறைவனுக்கு மிகவும் ப்ரீதியான ஒன்று.

============================================================

பிரார்த்தனையை துவக்கும் முன் மூன்று முறை ராம…ராம….ராம… என்று உச்சரித்துவிட்டு பிரார்த்தனையை ஆரம்பிக்கவும். ராம நாமத்தை மூன்று முறை உச்சரித்தால் விஷ்ணு சஹஸ்ர நாமத்தை முழுமையாக உச்சரித்த பலன் கிடைக்கும்.

அதே போன்று முடிக்கும்போது ‘ஓம் சிவ சிவ ஓம்’ என்ற மந்திரத்தை மூன்று முறை உச்சரிக்கவும்.

(பிற மதத்தவர்கள் இந்த பிரார்த்தனையில் பங்கேற்றால் அவரவர் வழிபாட்டு தெய்வத்தை நினைத்து பிரார்த்தனை செய்யும்படி கேட்டுக்கொள்கிறோம். பிரார்த்தனைக்கு மதம், இனம் மொழி கிடையாது என்பது நீங்கள் அறிந்ததே.)

=============================================================

உங்கள் கோரிக்கை பிரார்த்தனை கிளப்பில் இடம் பெற…

உங்கள் கோரிக்கைகள் இந்த பகுதியில் வெளியிடப்பட்டு பிரார்த்தனை செய்யப்படவேண்டும் என்று நீங்கள் விரும்பினால் அதை எங்களுக்கு மின்னஞ்சல் செய்யவும்.

உங்கள் வேண்டுதல்கள் குடும்பப் பிரச்னை, நோயிலிருந்து விடுதலை, நல்வாழ்வு, அறுவை சிகிச்சையில் வெற்றி, வழக்குகளில் நல்ல தீர்ப்பு (நியாயம் உங்கள் பக்கம் இருப்பின்), வேலைவாய்ப்பு மற்றும் இதர நியாயமான கோரிக்கைகளை அடிப்படையாக வைத்து இருக்கலாம். பிரார்த்தனையால் தீர்க்க முடியாத பிரச்சனைகளே இல்லை!

உங்கள் பெயரையும் சூழ்நிலையும் வெளியிட விரும்பாவிட்டால் வேறு ஒரு பெயரை நீங்களே குறிப்பிட்டு நமக்கு மின்னஞ்சல் அனுப்பவும். பொதுவாக உங்கள் பிரச்னை நீங்க குறிப்பிடும் புனைப் பெயருடன் அறிவிக்கப்பட்டு பிரார்த்தனை நடைபெறும்.

E-mail : editor@rightmantra.com    Mobile : 9840169215

=======================================================

பிரார்த்தனையின் மகத்துவத்தை போற்றும் வகையிலும் இறையருளின் தன்மைகளை வலியுறுத்தும் வகையிலும் ஒவ்வொரு பிரார்த்தனை பதிலும் ஒரு கதை இடம்பெறுகிறது. அந்த கதைகளை படிக்க, வாசச்கர்கள் கீழ்கண்ட முகவரியை செக் செய்யும்படி கேட்டுகொள்ளப்படுகிறார்கள்.

இதற்கு முன்பு பிரார்த்தனை கிளப் பகுதியில் இடம் பெற்ற பதிவுகளை படிக்க:
http://rightmantra.com/?cat=131

=======================================================

சென்ற வார பிரார்த்தனைக்கு தலைமை தாங்கியவர் : பிரபல ஆன்மீக பேச்சாளர் / நடிகர் திரு.ஆடுதுறை அழகு.பன்னீர்செல்வம் அவர்கள்.

16 thoughts on “தன்னை இகழ்ந்தவருக்கும் அருள் செய்த ஸ்ரீ ராகவேந்திரர் – ரைட்மந்த்ரா பிரார்த்தனை கிளப்

  1. சுந்தர்

    Can you pls. tell me where to get this ஸ்ரீ ராகவேந்திர மகிமை சொற்பொழிவு CD pls

    Thanks

    1. பலர் கேட்டிருக்கிறார்கள். இந்த சி.டி. தொடர்பாக தளத்தில் அனைவருக்கும் ஒரு விரிவான அறிவிப்பு வெளியிடப்படும். அப்போது மின்னஞ்சல் மூலம் நம்மை தொடர்புகொள்ளவும். அனுப்பி வைக்கிறோம். நன்றி.

      – சுந்தர்

  2. Sundar Sir,

    My sincere thanks for your prayer and great effort to post my prayer in rightmantra.com

    Thanks to ragavendra and gnananandha swami for introducing me to you.

    I am happy to join this spiritual life tour with you. Really Blessed.

    Our humble thanks to Mr.lakshmi narasimman sir and our readers who are going to pray for me.

    Thanks
    By,
    S.P.Ragavendran

  3. இன்று எமது இனிய பிறந்த நாளில் குரு ராகவேந்திரரின் மகிமையை படித்து மெய் சிலிர்த்தோம். தன்னை பற்றி தாழ்வாக நினைத்தவரிடம் கூட, அவருக்கு கனவில் வந்து காட்சி கொடுத்து கருணை மழை பொழிந்திருக்கிறார். தாங்கள் குருவின் மகிமையை எழுதவேண்டும் என்று நினைத்த உடனேயே அதகுநடன வழி முறைகளை காண்பித்து கொடுத்த ராகவேந்திரரின் மகிமையை என்ன வென்பது. இந்த வார பிராத்தனைக்கு தலைமை ஏற்கும் திரு லக்ஷ்மி நரசிம்மனுக்கு எனது பணிவான வணக்கங்கள்/

    இந்த வார பிரார்த்தனைக்கு கோரிக்கை வைத்திருக்கும் திரு ராகவேந்திரனுக்கு மழலை செல்வம் கிடைக்கவும் மற்றும் நம் வாசகிக்கு கடன் பிரச்சனை தீரவும் திரு சேகரின் கோரிக்கை நிறைவேறவும் பிராத்தனை செய்வோம்

    இன்று நாம் காலையிலேயே ரைட் மந்திரா prayer பாடலை படித்து விட்டுதான் இன்றைய நாளை தொடங்கினோம். இன்று காலையிலேயே குருவின் தரிசனம் எமக்கு கிடைத்தது

    லோக சமஸ்த சுகினோ பவந்து
    ராம் ராம் ராம்
    உமா

    1. பிறந்த நாள் வாழ்த்துக்கள். உங்கள் குடும்பத்தில் அறம் பெருகி, இன்பம் பொங்கி, மகிழ்ச்சி ததும்ப வேண்டுகிறேன்.

      – சுந்தர்

    2. பிறந்த நாள் வாழ்த்துக்கள் உமா. எல்லா நலமும், வளமும் பெற்று நீடுழி வாழ வாழ்த்துகிறோம்.

  4. பிரார்த்தனை செய்கிறேன். அருமையான பதிவு. அழகான கட்டுரை. கட்டுரைகள் நாளுக்கு நாள் பக்குவ பட்டு கொண்டிருக்கின்றன.

  5. தன்னை இகழ்ந்தோருக்கும் அருள் புரிபவர்கள் தான் மகான்கள் என்பது புரிந்தது. இவ்வாரம் . பிரார்த்தனைக்கு விண்ணப்பம் வைத்திருக்கும் திரு.ராகவேந்திரன் அவர்களின் வேண்டுதல் நிறைவேறவும் மற்றும் கடன் பிரச்சினையுடன் செய்யும் வேலையிலும் தொந்தரவுகள் ஏற்பட்டு அதனால் மன சஞ்சலத்திற்கு ஆளாகியுள்ள சகோதரியின் துயர் தீரவும் கிளிகளுக்காவே தன்னுடைய விருப்பங்களை தவிர்த்துவிட்டு வாழ்ந்து கொண்டிருக்கும் திரு. சேகர் அவர்களின் பிரச்சினைகள் குறையவும் மகாப்பெரியவா அவர்களின் திருவடியை வேண்டிக்கொள்கிறேன்.

  6. இந்த வார பிரார்த்தனைக்கு தலைமை ஏற்றுள்ள திரு.லக்ஷ்மி நரசிம்மன் அவர்களுக்கு மிக்க நன்றி.

    வேலூரை சேர்ந்த திரு.எஸ்.பி.ராகவேந்திரன் – ஆண்டாள் தம்பதியினருக்கு புத்திர பாக்கியம் கிடைத்து அவர்கள் வீட்டில் மழலைச் சத்தம் கேட்கவும், அவர்கள் எந்தவித குறையும் இன்றி இன்பமாய் வாழவும்,

    பெயர் வெளியிட விரும்பாத நம் வாசகிக்கு கடன் பிரச்னையும், உத்தியோகத்தில் ஏற்பட்டுள்ள பிரச்னையும் தீர்ந்து, எல்லா நலமும், வளமும் பெற்று வாழவும்,

    கிளிகளின் தந்தை திரு.சேகர் அவர்களின் பிரச்சனைகள் யாவும் தீர்ந்து அவர்தம் தொண்டு சிறக்கவும் மகா பெரியவாவை வணங்கி மனம் உருகி பிரார்த்தனை செய்வோம். நன்றி.

  7. இக்கலியுகத்தில் வாழும் ஸ்ரீ குரு ராஜரின் லீலைகள் ஏராளம் அவற்றை ஆவலுடன் எதிர் நோக்கும்….

    ஸ்ரீ குருவே சரணம்..

    விசு

  8. சிவ .அ.விஜய் பெரிய சுவாமி
    ஒரு அமாவாசை நாளில் காலையில் திருவெண்காடு திருகோயிலில் உள்ள முக்குள[மூன்று தீர்த்த குளம் ] தீர்த்தத்தில் நீராடி ஈசனை வழிபட்டு ,பின்பு அங்கிருந்து மயிலாடுதுறை வழியாக
    திருவாலங்காடு செல்ல வேண்டும் .திருவாலங்காடு என்று இரண்டு சிவதலங்கள் உள்ளன ….ஓன்று திருவள்ளூர் அருகில் உள்ளது ,..இன்னொரு தலம் திருவாவடுதுறை அருகில் உள்ளது .இதில் காலை 9 மணியளவில் திருவாவடுதுறை சென்று திருவாவடுதுறை ஆதீனம் குரு மஹா சந்நிதானத்திடம் அருள் ஆசி வாங்கி ,பின்பு அருகில் உள்ள திருவாவடுதுறை கோமுக்தீஸ்வரர், ஒப்பிலா மூலைஅம்மை திருகோயில் சென்று வழிபட்டு ,அர்ச்சித்து அங்கு தனி சந்நிதியில் உள்ள புத்திர தியாகேசர்கு அபிசேகம் , அர்ச்சனை செய்து வழிபடவும் …பின்னர் அருகில் உள்ள திருவாலங்காடு[9751549549] வடாரண்யேசுவரர் திருகோயில் சென்று அங்குள்ள புத்திர காமேச்வர தீர்த்தத்தில் நீராடி,வடாரண்யேசுவரர்,வண்டார்குழலி அம்மன்[புதிய பிரதிஷ்டை ] ,பழைய அம்மனையும் அபிசேகம் செய்து , வழிபட்டு பின்பு வெளி பிரகாரத்தில் தனி சந்நிதியில் உள்ள புத்திர காமேஸ்வர்ரை அபிசேகம் ,அர்ச்சனை செய்து வழிபட வேண்டும் .இதனை அமாவாசையில் செய்வது சிறப்பு …அதுவும் பங்குனி மாதம் அம்மாவாசை நாளில் இத்தல புத்திர காமேச்வர தீர்த்தத்தில் நீராடி வடாரண்யேசுவரர்,வண்டார்குழலி,புத்திர காமேஸ்வர்ரை வழிபட்டால் மலடியும் குழந்தை பெறுவாள் என்கிறது இந்த ஆலய தலபுராணம் ……பின்பு அதே நாள் மாலையில் திருக்கருகாவூர் கர்ப்பரட்சாம்பிகை திருகோயில் சென்று கர்ப்பரட்சாம்பிகை அம்மன் ,மாதுவானேஈஸ்வர் [முல்லை வன நாதர் ] வழிபட்டு ,அங்கு கர்ப்பரட்சாம்பிகை அம்மன் சந்நிதியில் தரப்படும் நெய் வாங்கி வந்து தம்பதியர் இருவரும் தினமும் 48 நாட்கள் உண்டு வர வேண்டும்.ஒரே வாரத்தில் நெய்யை சாபிட்டு விட கூடாது ..48 நாட்கள் வீதம் தினமும் சாபிட்டு வரவும் .இதில் பெண்கள் மட்டும் வீட்டுக்கு விலக்கு நாட்களில் இந்த நெய்யை சாப்பிடக்கூடாது .[ஒரே நாளில் 4 திருக்கோயில்களையும் வழிபடலாம் ]……
    பதிகம் 48 நாட்கள் படித்து வரவும் …அசைவம் விலக்குதல் நலம் பயக்கும் .
    கண்காட்டு நுதலானுங் கனல்காட்டுங் கையானும்
    பெண்காட்டும் உருவானும் பிறைகாட்டுஞ் சடையானும்
    பண்காட்டும் இசையானும் பயிர்காட்டும் புயலானும்
    வெண்காட்டில் உறைவானும் விடைகாட்டுங் கொடியானே.

    பேயடையா பிரிவெய்தும் பிள்ளையினோ டுள்ளநினை
    வாயினவே வரம்பெறுவர் ஐயுறவேண் டாவொன்றும்
    வேயனதோ ளுமைபங்கன் வெண்காட்டு முக்குளநீர்
    தோய்வினையா ரவர்தம்மைத் தோயாவாந் தீவினையே.

    மண்ணொடுநீ ரனல்காலோ டாகாயம் மதிஇரவி
    எண்ணில்வரு மியமானன் இகபரமு மெண்டிசையும்
    பெண்ணினொடாண் பெருமையொடு சிறுமையுமாம் பேராளன்
    விண்ணவர்கோன் வழிபடவெண் காடிடமா விரும்பினனே.

    விடமுண்ட மிடற்றண்ணல் வெண்காட்டின் தண்புறவின்
    மடல்விண்ட முடத்தாழை மலர்நிழலைக் குருகென்று
    தடமண்டு துறைக்கெண்டை தாமரையின் பூமறையக்
    கடல்விண்ட கதிர்முத்த நகைகாட்டுங் காட்சியதே.

    வேலைமலி தண்கானல் வெண்காட்டான் திருவடிக்கீழ்
    மாலைமலி வண்சாந்தால் வழிபடுநன் மறையவன்றன்
    மேலடர்வெங் காலனுயிர் விண்டபினை நமன்தூதர்
    ஆலமிடற் றான்அடியார் என்றடர அஞ்சுவரே.

    தண்மதியும் வெய்யரவுந் தாங்கினான் சடையினுடன்
    ஒண்மதிய நுதலுமையோர் கூறுகந்தான் உறைகோயில்
    பண்மொழியால் அவன்நாமம் பலவோதப் பசுங்கிள்ளை
    வெண்முகில்சேர் கரும்பெணைமேல் வீற்றிருக்கும் வெண்காடே.

    சக்கரமாற் கீந்தானுஞ் சலந்தரனைப் பிளந்தானும்
    அக்கரைமே லசைத்தானும் அடைந்தயிரா வதம்பணிய
    மிக்கதனுக் கருள்சுரக்கும் வெண்காடும் வினைதுரக்கும்
    முக்குளம்நன் குடையானும் முக்கணுடை இறையவனே.

    பண்மொய்த்த இன்மொழியாள் பயமெய்த மலையெடுத்த
    உன்மத்தன் உரம்நெரித்தன் றருள்செய்தான் உறைகோயில்
    கண்மொய்த்த கருமஞ்ஞை நடமாடக் கடல்முழங்க
    விண்மொய்த்த பொழில்வரிவண் டிசைமுரலும் வெண்காடே.

    கள்ளார்செங் கமலத்தான் கடல்கிடந்தான் எனஇவர்கள்
    ஒள்ளாண்மை கொளற்கோடி உயர்ந்தாழ்ந்தும் உணர்வரியான்
    வெள்ளானை தவஞ்செய்யும் மேதகுவெண் காட்டானென்(று)
    உள்ளாடி உருகாதார் உணர்வுடைமை உணரோமே.

    போதியர்கள் பிண்டியர்கள் மிண்டுமொழி பொருளென்னும்
    பேதையர்கள் அவர்பிறிமின் அறிவுடையீர் இதுகேண்மின்
    வேதியர்கள் விரும்பியசீர் வியன்திருவெண் காட்டானென்
    றோதியவர் யாதுமொரு தீதிலரென் றுணருமினே.

    தண்பொழில்சூழ் சண்பையர்கோன் தமிழ்ஞான சம்பந்தன்
    விண்பொலிவெண் பிறைச்சென்னி விகிர்தனுறை வெண்காட்டைப்
    பண்பொலிசெந் தமிழ்மாலை பாடியபத் திவைவல்லார்
    மண்பொலிய வாழ்ந்தவர்போய் வான்பொலியப் புகுவாரே.
    [சம்பந்தர் ]
    திருச்சிற்றம்பலம்
    ………………………………………………………………………………………………………………

    பதினே ழொன்றும்விழை செய்ய பாத மோலிடநன்
    மதிபோன் மமைமுக மண்ட லம்ப குக்கநகுங்
    கதியே வேற்குழவீ நின்னைக் காத லாற்றழுவ
    நிதியே வாராயோ கைக ணீளு கின்றனவே.

    சீவி முடித்தசிகை செம்பொற் சுட்டி நன்குழைகள்
    மேவு முறுப்புநிழல் செய்ய வாடும் வேற்குழவீ
    ஏவல் கொடுத்தருள வெண்ணி யென்முன் வாராயோ
    கூவை வெறுத்தகண்க ளிச்சை கொள்ளு கின்றனவே.

    பாவே றுஞ்சவையர் மெச்சிப் பாடும் வேற்குழவீ
    சேவே றுன்பவளத் தெய்வ வாயை யேதிறந்து
    தூவே றின்கரைக ளிங்குச் சொல்ல வாராயோ
    கோவே யென்செவிக ளிச்சை கொள்ளு கின்றனவே.

    பொன்னார் கண்டசர நன்கு பூண்ட தங்கவொளிக்
    கொன்னார் வேற்குழவீ நல்ல கொவ்வை நின்னிதழை
    என்னார் வந்தீர விங்கு நல்க வாராயோ
    உன்னா ருண்ணிலையும் வாயு மூறு கின்றனவே.

    எண்ணே றும்பலயி லென்ற வேல்பி டித்தசையுங்
    கண்ணே செங்குழுவீ யென்றன் கண்க ணாடழகே
    தண்ணே றும்வதன முத்தந் தாரா யோயிறிது
    நண்ணா வென்னுளந்தா னின்னை நாடு கின்றதரோ

    முத்தே மாமணியே முல்லை வெட்சி நன்கடம்பு
    வைத்தா ரம்புனைந்தென் முன்னர் வாரா யோவுழலுஞ்
    சித்தார் வேற்குழவீ யுச்சி செவ்வன் மோந்துகொள்ள
    வித்தே யென்மூக்கி னிச்சை மீறு கின்றதரோ.

    ஐயார் நல்லரையிற் பொன்வ டங்க ளாடவுழல்
    வையார் வேற்குழவீ யிங்கு வாரா யோகால்கள்
    மையார் கண்மலர்க ளின்பு மல்க மோந்துகொள்ள
    மெய்யா யென்மூக்கி னிச்சை மீறு கின்றதரோ

    பொன்போன் மேனியிலே நல்ல பூம ணங்கமழும்
    இன்பே வேற்குழவீ யிங்கு வாரா யோவிரியா
    அன்பார் புன்முறுவல் செய்யு மார்விற் பல்லழகென்
    துன்பீ ரம்பெனவே னெஞ்சந் துள்ளு கின்றதரோ.

    கள்ளார் செங்கரும்பே கண்டு தேனே யின்னமுதுண்
    கிள்ளாய் வேற்குழவீ யன்பர் கேளே மாதுமையாள்
    பிள்ளாய் கண்ணியொன்று நல்ல பெட்பி னான்றருவேன்
    தள்ளா தேகொளற்கென் முன்னர் வாரா யோதகையே.

    மாண்பார் சந்தமுனி யின்ப வாழ்வே நின்னெழிலைக்
    காண்பார் வேறழகு மிங்குக் காண்பார் கொல்லோநான்
    ஊண்பா டஞ்சியுனை நன்கு காண்பா னின்றுவந்தேன்
    வீண்போ காதபடி யிங்ஙன் வாராய் வேற்குழவீ.

    ………………………………[இத்திருப்பத்து, காலை மாலை பூசிக்கப்பட்டுப் பத்திபிறங்கப் பாடப்படுமாயிற் புத்திரதோடம் நிவர்த்தியாம். சந்ததி விருத்தியாம்—ஸ்ரீமத் பாம்பன் சுவாமி]

  9. ஒரு திங்கட்கிழமை காலையில் திருவாரூர் கமலாம்பிகை உடனுறை தியாகராஜர் திருக்கோயில்[94433 54302]சென்று அங்கு வெளி பிரகாரத்தில் தனி சன்னதியில் உள்ள ஸ்ரீரிண விமோசனரை மரிகொளுந்து சாற்றி ,வில்வத்தால் அர்ச்சித்து , நெய் தீபம் ஏற்றி வழிபடவும் .பின்பு நண்பகலில் அங்கிருந்து நேராகஅருகில் உள்ள திருசேறை[9443737759] ஸ்ரீஞானாம்பிகா சமேத ஸ்ரீசாரபரமேஸ்வரர் திருக்கோயிலில் உள்ள ரிணவிமோசன லிங்கேஸ்வரருக்கு [கடன் நிவர்த்தி ஈஸ்வரர்] வழிபாடு செய்யவும் . பதினொரு திங்கட்கிழமைகள் இவருக்கு அர்ச்சனை செய்தால், கடன்கள் எல்லாம் நிவர்த்தியாகும். 11 வாரம் செல்ல முடியாதவர்கள் திருகோயில் அலுவலகத்தில் முதல் திங்கள் அன்று செல்லும் போதே 250 ரூபாய் செலுத்தி விட்டால் 9 வார திங்கள்கிழமைகலில் அர்ச்சனை பிரசாதம் வீடு தேடி வரும். கடைசி 11 வது வார திங்கள் அன்று மீண்டும் திருகோயில் வந்து அபிஷேகம் செய்து பிரார்த்தனையை நிறைவு செய்ய வேண்டும் .தேவார பாடல் பெற்ற காலபைரவரும் இக்கோயிலில் எழுந்தருளியுள்ளார்.பின்பு மாலையில் திருநல்லூர் பெருமணம்( ஆச்சாள்புரம்/திருஞான சம்பந்தர் திருமணக் கோலத்துடன் சோதியுள் கலந்த தலம் ) சிவலோக தியாகேசர் உடனுறை திருவெண்ணீற்று உமையம்மை திருகோயில் சென்று அங்கு உள்ள ஸ்ரீரிண விமோசனரை
    நெய் தீபம் ஏற்றி வழிபடவும்.பின்பு அன்று இரவு அருகில் உள்ள சிதம்பரம் திருகோயிலில் அர்த்தசாமபூஜை [ இரவு 9.30 முதல் 10 மணிக்கு நடைபெறுகிறது ] நடராஜரை வழிபட்டு அவர் அருகில் உள்ள ஸ்வர்ண பைரவரை வழிபடவும் [ஸ்வர்ண பைரவர் வெளியில் இருந்து பார்த்தல் முடியாது .சிற்சபையில் தீட்சிதர்கள் உதவியுடன் மட்டுமே தரிசிக்கமுடியும் ]…பின்பு வீட்டில் தினமும் பின்வரும் பாடலை எப்போதும் படித்து வரவும் .

    விச்வேச்வராய நரகார்ணவ தாரணாய
    கர்ணாம்ருதாய சசிசேகர தாரணாய
    கர்பூரகாந்தி தவளாய ஜடாதராய
    தாரித்ரிய துக்க தஹணாய நமசிவாய

    கௌரீ ப்ரியாய ரஜனீச கலாதராய
    காலாந்தகாய புஜகாதிப கங்கணாய
    கங்காதராய கஜராஜ விமர்தனாய
    தாரித்ரிய துக்க தஹனாய நமசிவாய

    பக்தி ப்ரியாய பவரோக பயாபஹாய
    உக்ரராய துர்க பவஸாகர தாரணாய
    ஜ்யோதிர்மயாய குணநாம ஸீந்ருத்யகாய
    தாரித்ரிய துக்க தஹனாய நமசிவாய

    சர்மாம்பராய ஸவபஸ்ம விலேபனாய
    பாலேக்ஷனாய பணிகுண்டல மண்டிதாய
    மஞ்சீர பாத யுகளாய ஜடாதராய
    தாரித்ரிய துர்க்க தஹனாய நமச்சிவாய

    பஞ்சானனாய பணிராஜ விபூஷணாய
    ஹேமாம் சுகாய புவனத்ரய மண்டிதாய
    ஆனந்த பூமிவரதாய தமோமயாய
    தாரித்ரிய துக்க தஹனாய நமசிவாய

    பானுப்ரியாய பவஸாகர தாரணாய
    காலாந்தகாய கமலாஸன பூஜிதாய
    நேத்ர த்ரயாய சுபலக்ஷண லக்ஷிதாய
    தாரித்ரிய துக்க தஹனாய நமசிவாய

    ராமப்ரியாய ரகுநாத வரப்ரதாய
    நாகப்ரியாய நரகார்ணவ தாரணாய
    புண்யேஷு புண்யபரிதாய ஸுரார்ச்சிதாய
    தாரித்ரிய துக்க தஹனாய நமசிவாய

    முக்தேச்வராய பலதாய கணேச்வராய
    கீதப்ரியாய வ்ருஷபேச்வர வாஹனாய
    மாதங்க சர்மவஸனாய மஹேச்வராய
    தாரித்ரிய துக்க தஹனாய நமசிவாய

    …….”கடன் நிவாரண ஸ்தோத்ரம்”இது ..தினமும் ஈசனை நினைத்து எப்போதும் படித்து வரவும் ..முடிந்தால் ஒருமுறை திருச்சி மலைகோட்டை உச்சிபிள்ளையார் திருகோயில் எதிரில் உள்ள பெரிய கடை வீதி சென்று அங்கு உள்ள அக்கசாலை பிள்ளையார் திருகோயில் அருகில் உள்ள ஸ்வர்ண பைரவர் திருகோயில் சென்று அஷ்ட புச்பார்ச்சனை செய்து வழிபடவும் ,நெய் தீபம் ஏற்றி வழிபடவும் .உங்கள் வீட்டில் விடுபட்டு போன பித்ரு பூசை ,குலதெய்வ பூசனை செய்து வரவும் ..பின்வரும் பதிகம்களை தொடர்ந்து நம்பிக்கையுடன் படித்து வரவும் “படுதுயர் களையாய்
    பாசுப தாபரஞ் சுடரே. ” இதை தினமும் மனமுருகி படித்து உங்கள் பண கடன் முழுமையும் தீர்த்து விடலாம் , . …விட்டு போன திருகோயில் பிரார்த்தனைகளை உடனே நிறைவு செய்யவும் …அசைவம் தவிர்கவும் ….
    திருச்சிற்றம்பலம்

    திருவுமெய்ப் பொருளுஞ் செல்வமும் எனக்குன்
    சீருடைக் கழல்களென் றெண்ணி
    ஒருவரை மதியா துறாமைகள் செய்து
    மூடியும் உறைப்பனாய்த் திரிவேன்
    முருகமர் சோலை சூழ்திரு முல்லை
    வாயிலாய் வாயினால் உன்னைப்
    பரவிடும் அடியேன் படுதுயர் களையாய்
    பாசுப தாபரஞ் சுடரே.

    கூடிய இலயம் சதிபிழை யாமைக்
    கொடியிடை உமையவள் காண
    ஆடிய அழகா அருமறைப் பொருளே
    அங்கணா எங்குற்றா யென்று
    தேடிய வானோர் சேர்திரு முல்லை
    வாயிலாய் திருப்புகழ் விருப்பால்
    பாடிய அடியேன் படுதுயர் களையாய்
    பாசுப தாபரஞ் சுடரே.

    விண்பணிந் தேத்தும் வேதியா மாதர்
    வெருவிட வேழமன் றுரித்தாய்
    செண்பகச் சோலை சூழ்திரு முல்லை
    வாயிலாய் தேவர்தம் மரசே
    தண்பொழில் ஒற்றி மாநகர் உடையாய்
    சங்கிலிக் காஎன்கண் கொண்ட
    பண்பநின் னடியேன் படுதுயர் களையாய்
    பாசுப தாபரஞ் சுடரே.

    பொன்னலங் கழனிப் புதுவிரை மருவிப்
    பொறிவரி வண்டிசை பாட
    அந்நலங் கமலத் தவிசின்மேல் உறங்கும்
    அலவன்வந் துலவிட அள்ளல்
    செந்நெலங் கழனி சூழ்திரு முல்லை
    வாயிலாய் திருப்புகழ் விருப்பால்
    பன்னலந் தமிழாற் பாடுவேற் கருளாய்
    பாசுப தாபரஞ் சுடரே.

    சந்தன வேருங் காரகிற் குறடுந்
    தண்மயிற் பீலியுங் கரியின்
    தந்தமுந் தரளக் குவைகளும் பவளக்
    கொடிகளுஞ் சுமந்துகொண் டுந்தி
    வந்திழி பாலி வடகரை முல்லை
    வயிலாய் மாசிலா மணியே
    பந்தனை கெடுத்தென் படுதுயர் களையாய்
    பாசுப தாபரஞ் சுடரே.

    மற்றுநான் பெற்ற தார்பெற வல்லார்
    வள்ளலே கள்ளமே பேசிக்
    குற்றமே செயினுங் குணமெனக் கொள்ளுங்
    கொள்கையால் மிகைபல செய்தேன்
    செற்றுமீ தோடுந் திரிபுரம் எரித்த
    திருமுல்லை வாயிலாய் அடியேன்
    பற்றிலேன் உற்ற படுதுயர் களையாய்
    பாசுப தாபரஞ் சுடரே.

    மணிகெழு செவ்வாய் வெண்ணகைக் கரிய
    வார்குழல் மாமயிற் சாயல்
    அணிகெழு கொங்கை அங்கயற் கண்ணார்
    அருநடம் ஆடல றாத
    திணிபொழில் தழுவு திருமுல்லை வாயிற்
    செல்வனே எல்லியும் பகலும்
    பணியது செய்வேன் படுதுயர் களையாய்
    பாசுப தாபரஞ் சுடரே.

    நம்பனே அன்று வெண்ணெய்நல் லூரில்
    நாயினேன் தன்னையாட் கொண்ட
    சம்புவே உம்ப ரார்தொழு தேத்துந்
    தடங்கடல் நஞ்சுண்ட கண்டா
    செம்பொன்மா ளிகைசூழ் திருமுல்லை வாயில்
    தேடியான் திரிதர்வேன் கண்ட
    பைம்பொனே அடியேன் படுதுயர் களையாய்
    பாசுப தாபரஞ் சுடரே.

    மட்டுலா மலர்கொண் டடியிணை வணங்கும்
    மாணிதன் மேல்மதி யாதே
    கட்டுவான் வந்த காலனை மாளக்
    காலினால் ஆருயிர் செகுத்த
    சிட்டனே செல்வத் திருமுல்லை வாயிற்
    செல்வனே செழுமறை பகர்ந்த
    பட்டனே அடியேன் படுதுயர் களையாய்
    பாசுப தாபரஞ் சுடரே.

    சொல்லரும் புகழான் தொண்டைமான் களிற்றைச்
    சூழ்கொடி முல்லையாற் கட்டிட்
    டெல்லையில் இன்பம் அவன்பெற வெளிப்பட்
    டருளிய இறைவனே என்றும்
    நல்லவர் பரவுந் திருமுல்லை வாயில்
    நாதனே நரைவிடை ஏறீ
    பல்கலைப் பொருளே படுதுயர் களையாய்
    பாசுப தாபரஞ் சுடரே.

    விரைதரு மலர்மேல் அயனொடு மாலும்
    வெருவிட நீண்டஎம் மானைத்
    திரைதரு புனல்சூழ் திருமுல்லை வாயிற்
    செல்வனை நாவலா ரூரன்
    உரைதரு மாலையோர் அஞ்சினோ டஞ்சும்
    உள்குளிர்ந் தேத்தவல் லார்கள்
    நரைதிரை மூப்பும் நடலையு மின்றி
    நண்ணுவர் விண்ணவர்க் கரசே.

    [சுந்தரர் ]

  10. சார் நான் நிறைய வட்டிக்கு பணம் வாங்கியுள்ளேன், இப்பொழுது என்னால் எல்லா பணத்திற்கும் வட்டி கட்ட முடியவில்லை. நான் ஒரு தனியார் கம்பெனியில் கிளேர்க்க வேலை பர்கேறேன். எனக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளது. என்னால் குடும்பத்தில் நிம்மதியாக இருக்க முடியவில்லை. தற்பொழுது நான் எனது வாழ்க்கையை வாழ்வா? சாவா? என்ற முடிவில் உள்ளது. நான் உங்களது ஆன்மிகம் பற்றி தற்சமயம் தெரிந்துகொண்டேன். நீங்கள் எனது கடன் பிரச்னை தீர ஒரு வழி சொல்லுங்கள் என்றும் எனது குடும்பத்தில் நிம்மதி கிடைக்க அருள் புரியும்படி உங்களை வேண்டி கேட்டுகொள்கிறேன்.

    1. உங்களுக்கு தேவை உடனடி நிவாரணம். நீங்கள் http://rightmantra.com/?p=18142 இந்த பதிவை படித்து இதில் இடம்பெற்றுள்ள பதிகத்தை உடனடியாக படித்து வரவம். உங்கள் கடன் பிரச்சனை தீர என்ன செய்யவேண்டும் என்று பிறகு சொல்கிறேன். நம்பிக்கையுடன் படித்து வரவும்.

      எப்போது, எங்கே, எப்படி ஆரம்பிப்பது என்றெல்லாம் கேட்கவேண்டாம். இது மருந்து. உடனே உட்கொள்ளுங்கள்.

      புறந்தூய்மையும் அகத்தூயமையும் முக்கியம்.

      புறந்தூய்மை நீரா னமையும் அகந்தூய்மை
      வாய்மையால் காணப் படும். (குறள் 298)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *