Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Friday, March 29, 2024
Please specify the group
Home > Featured > வள்ளலாரின் பசி தீர்க்க ஓடிவந்த வடிவுடையம்மன் – Rightmantra Prayer Club

வள்ளலாரின் பசி தீர்க்க ஓடிவந்த வடிவுடையம்மன் – Rightmantra Prayer Club

print
ள்ளலார் அண்ணனோடும் அண்ணியோடும் சென்னையில் வசித்த காலம் அது. திருவொற்றியூர் வடிவுடை அம்மன்மேல் வள்ளலாருக்கு அதீத பக்தி.  அம்பிகையின் அருள்பொங்கும் முகம்தான் எத்தனை அழகு. அந்த தெய்வீகச் சிலையைப் பார்த்துக்கொண்டே மணிக்கணக்கில் அமர்ந்திருப்பார்.

IMG_6918
திருவொற்றியூர் வடிவுடையம்மன் சமேத தியாகராஜ சுவாமி திருக்கோவில்

என் தாயை விட்டு இல்லம் போகும் நினைப்பே வரவில்லையே என்று கோவிலிலேயே பெரும்பாலான நேரம் வாசம் செய்வார். பல நாட்கள் இரவு வெகுநேரம் ஆலயத்திலேயே அவர் தியானத்தில் ஆழ்ந்திருப்பதுண்டு. ஒருநாள் இரவு அவர் தியானத்தில் அமர்ந்து தன்னை மறந்தார். காலம் கடப்பதை அவர் அறியவில்லை. இரவு வீட்டுக்குப் போய் அண்ணி கையால் சாப்பிட்டுவிட்டு உறங்குவது அவர் வழக்கம். அன்று அம்பிகை அவரது நேரத்தை எடுத்துக் கொண்டுவிட்டாள். நள்ளிரவு தாண்டிய பிறகுதான் தியானத்திலிருந்து விழித்துக் கொண்டார். அம்பிகையின் நினைவில் தோய்ந்தவாறே இல்லம் சென்றார். வீடு உள்ளே பூட்டியிருந்தது. பாவம், அண்ணி எத்தனை நேரம் காத்திருந்தாரோ! அகாலத்தில் அண்ணியை எழுப்பித் தொந்தரவு செய்யவேண்டாம் என வெளித் திண்ணையிலேயே படுத்துக் கொண்டுவிட்டார் வள்ளலார்.

vallalar-portrait-web copyஎண்ணற்ற ஏழைகளின் பசிப்பிணியை வருங்காலத்தில் தீர்க்கப்போகும் ஒருவர் பசியோடு வாடுவதை அன்னை பொறுப்பாளா? அப்போது அவர் முன்னே அண்ணி வடிவில் தோன்றினாள் அம்பிகை.

அவரைப் பார்த்து கலகலவெனச் சிரித்தாள். “என்ன இவ்வளவு தாமதமாக வீட்டுக்கு வருகிறாய்?” என்று விசாரித்தாள். வந்தது அம்பிகை என வள்ளலார் அப்போது அறியவில்லை. அண்ணி என்றே கருதினார். “ஆலயத்தில் திருவொற்றியூர் வடிவுடை அம்மனை தியானம் செய்ததில் நேரம் போனது தெரியவில்லை, அதுதான் தாமதமாகிவிட்டது” என்றார். “அம்பிகையை ஆலயத்தில் போய் பார்ப்பானேன்? என்னைப் பார்த்தால் போதாதோ?” என்றாள் அண்ணி! “வள்ளலார் திகைத்தார் என்ன அண்ணி சொல்கிறீர்கள்?” என்று குழப்பத்துடன் கேட்டார். “எல்லாப் பெண்களுமே அம்பிகையின் வடிவம்தானே என்றேன்!” என்றாள் அம்பிகை.

பிறகு, “சரி, சரி, உட்கார் முதலில் பசிதீரச் சாப்பிடு!” என்று அம்பிகை திண்ணையிலேயே வாழையிலையை விரித்தாள். உணவு பரிமாறினாள். வள்ளலாருக்கு அன்று நல்ல பசி. அந்தப் பசிக்கு அந்த உணவு தேவாமிர்தமாக இருந்தது! “அண்ணி! வழக்கத்தைவிட இன்று சாப்பாடு மிக ருசியாக இருக்கிறதே? இன்று யார் சமைத்தார்கள்?” என்று கேட்டார் வள்ளலார். “ஆமாம் தேவலோகத்திலிருந்து ஆள் வந்தார்கள் சமைக்க, போயேன். போய் கைகழுவு! பிறகு போய்ப் படுத்துத் தூங்கு” என்ற அம்பிகை மெல்ல நடந்து மறைந்தாள்.

வள்ளலார் உணவின் சுவை பற்றி அதிசயத்தவாறே கை கழுவிவிட்டு உறங்கலானார். சற்று நேரத்தில் வீட்டுக் கதவு உள்ளிருந்து திறந்தது. வள்ளலாரின் உண்மையான அண்ணி வந்து அவரை எழுப்பினாள். “என்ன இது, கதவைத் தட்டி என்னை எழுப்பக் கூடாதா? சாப்பிடாமலேயே தூங்குகிறாயே?” என்று கோபித்துக் கொண்டாள். “இப்போதுதானே சாப்பிட்டேன் அண்ணி! நீங்கள்தானே உணவு பரிமாறினீர்கள். சாப்பாடுகூட தேவாமிர்தமாக இருந்தது என்று உங்களிடம் இப்போதுதானே சொன்னேன்; அதற்குள் நீங்களே மறுபடி வீட்டுக்குள்ளிருந்து வருகிறீர்களே?” என்று ஆச்சரியத்தோடு வினவினார் வள்ளலார். அதன்பிறகுதான் புரிந்தது – சற்றுமுன் வந்தது அண்ணி அல்ல; அம்பிகை என்பது.

வள்ளலாருக்குத் தன்னை தெய்வம் கவனித்துக் கொள்ளும் என்ற மன உறுதி வந்தது அப்போதுதான் வள்ளலார் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தது. அம்பிகையின் அருள் அவரை ஆனந்தத்தில் ஆழ்த்தியது.

(இதே போன்று விவேகானந்தர் ஒரு முறை பசியால் வாடியபோது, இராமபிரான் உணவை கொடுத்தனுப்பிய கதையை நம் தளத்தில் பகிர்ந்தது நினைவிருக்கலாம். பசியோடிருந்த சுவாமி விவேகானந்தர் – உணவு அனுப்பிய ஸ்ரீ ராமபிரான் !)

=================================================================

இந்த வார பிரார்த்தனைக்கு தலைமை தாங்குபவர் : விழுப்புரம் மாவட்டம் வளையாம்பட்டியை சேர்ந்த மூதாட்டி பாஞ்சாலி அம்மாள்.

DSCN3518

சென்ற ஞாயிறு மே 4 அன்று, நாம் திடீர்ப் பயணமாக இரண்டாவது முறையாக வடலூர் சென்றிருந்தோம். சனிக்கிழமை  இரவு கிளம்பி, ஞாயிறு அதிகாலை வடலூர் சென்றுவிட்டோம். அங்கு சிவப்பிரகாச சுவாமிகளை சந்தித்து பேசிவிட்டு, சுமார் 11.30 AM அளவில் புறப்பட முற்பட்ட போது, நம்மை இருந்து மதிய உணவு சாப்பிட்டுவிட்டு போகலாம் என்று கேட்டுக்கொண்டார் சுவாமிகள். மதிய உணவுக்கு எப்படி பார்த்தாலும் ஒரு மணியாகிவிடும் என்று தெரிந்தது. ஆனால், மாலைக்குள் சென்னையில் இருக்கவேண்டும் என்பது நமது திட்டம். “இல்லை சுவாமி… சென்ற முறை வந்தபோதே நான் வள்ளலார் சித்தியடைந்த சித்தி வளாகம், மற்றும் பல் குச்சியால் உருவாக்கிய தீஞ்சுவை நீரோடை உள்ளிட்ட வேறு சில இடங்களை  தரிசிக்க தவறிவிட்டேன். இப்போது அங்கெல்லாம் போகவேண்டும். அப்போது தான் நேரம் சரியாக இருக்கும். அங்கு எங்காவது சாப்பிட்டுக்கொள்கிறேன்” என்று கூறி விடைபெற்றோம்.

DSCN3494 copy

அடுத்து மேட்டுக்குப்பத்தில் அமைந்துள்ள வள்ளலார் சித்தி பெற்ற இடமான சித்திவளாகம் சென்றோம். சென்னையில் எங்கு சென்றாலும் பைக் தான். ஆனால் வடலூரில்  கால்கடுக்க நிறைய நடக்கவேண்டியிருந்தது. காலை 8.00 மணிக்கு ஆஸ்ரமத்தில் லைட்டாக டிபன் சாப்பிட்டது தான். மணி தற்போது 12.00. சரியான பசி. சித்தி வளாகத்தில் சாப்பிடலாம் என்று அங்கு தினசரி நடைபெறும் அன்னதானம் பற்றி விசாரித்தபோது மதியம் 1.30 க்கு தான் அன்னதானம் என்று சொன்னார்கள். இன்னும் ஒன்றரை மணிநேரம் இருக்கிறதே. பேசாமல் ஆஸ்ரமத்திலேயே ஸ்வாமிகள் சொன்னதை போல சாப்பிட்டுவிட்டு கிளம்பியிருக்கலாமோ என்று தோன்றியது.

 நாம் பசியாறிய தீஞ்சுவை நீரோடை  தருமச் சாலை
நாம் பசியாறிய தீஞ்சுவை நீரோடை தருமச் சாலை

ஊர் வேறு புதியது. அங்கிருந்து சென்னை பஸ் பிடிக்க வடலூர் செல்லவேண்டும். மினி பஸ்சுக்கு இன்னும் ஒரு மணி நேரம் ஆகும் என்று சொன்னார்கள். ஆட்டோ வசதி அந்த ஊரில்   கிடையாது. செய்வதறியாது திகைத்து நின்றோம். பசி வேறு வாட்டியது. அப்போது தான் இந்த மூதாட்டியை அங்கு பார்த்தோம். நம்மை நோக்கி வந்தவர், நம்மை பற்றி விசாரித்தார். அடுத்து நம்மிடம் கேட்ட கேள்வி, “தம்பிக்கு பசி போலருக்கு… என் கூட வாங்க. பக்கத்துல தீஞ்சுவை நீரோடை கூட்டிட்டு போறேன். அங்கே 12.30 க்கெல்லாம் சாப்பாடு போட ஆரம்பிச்சுடுவாங்க. இங்கே 1.30 தான் சாப்பாடு போடுவாங்க. நாம் கிளம்பி நடந்தோம்னா சரியா இருக்கும்!” என்றார்.

பரவாயில்லை… நம்ம கஷ்டம் தெரிஞ்சி வள்ளலாரே அனுப்பியிருப்பார் போல…என்று நினைத்துக்கொண்டு அவருடன் புறப்பட்டோம். வள்ளலார் தொடர்புடைய பல இடங்களை சுற்றிக் காண்பித்தார். அந்த பகுதியில் மொத்தம் 5 கி.மீ.க்கும் மேல் இருவரும் நடந்திருப்போம். அப்போது பாட்டியிடம் பேசியபோது தான் அவரைப் பற்றி பல விஷயங்களை தெரிந்து கொண்டோம். தீஞ்சுவை நீரோடை அருகே உள்ள அன்ன சாலையில் தான் இருவரும் உணவருந்தினோம். (என்ன சுவை… என்ன சுவை… இப்படி ஒரு சாப்பாடை இதுவரை நாம் சாப்பிட்டதில்லை!).

பாஞ்சாலி அம்மாள் மட்டும் அன்று இல்லையெனில், பல இடங்களை பார்க்காமலே திரும்பியிருப்போம். அன்னை வடிவுடையம்மனே அவரை நமக்கு துணையாக அனுப்பியதாக தான் நாம் கருதுகிறோம். நம்முடனே கூட வந்து நம்மை உணவருந்த வைத்துவிட்டு, வடலூரில் இருந்து நாம் மீண்டும் சென்னை பஸ்ஸை பிடிக்கும் வரை நம் அருகிலேயே இருந்தார்கள் பாட்டி.

DSCN3492 copY 2

பாஞ்சாலி அம்மாள் வடலூர் வள்ளலாரின் தீவிர பக்தர். அவர் வசிப்பது விழுப்புரம் மாவட்டம் அரசூரை அடுத்துள்ள வளையாம்பட்டி  கிராமத்தில். இந்த வயதிலும், அவ்வப்போது தனியாளாக கிளம்பி வடலூர் வந்து சத்திய தரும சாலை மற்றும் மேட்டுக்குப்பம், கருங்குழி உள்ளிட்ட இடங்களில் உள்ள வள்ளலாரின் நினைவாலயங்களை தரிசித்துவிட்டு, உணவருந்திவிட்டு, கூடவே தரும சாலைகளுக்கு நன்கொடையும் கொடுத்துவிட்டு செல்கிறார்.

மகன், மகள்கள் மற்றும் பேரன் பேத்திகளுடன் வாழ்வாங்கு வாழ்ந்து வரும் பாஞ்சாலி அம்மாள், தனது சொந்த ஊரில் மாரியம்மனுக்காக கோவில் கூட கட்டிவருகிறார். ஒவ்வொரு தைப்பூசத்தின் போதும், வள்ளலாரின் நினைவாக எண்ணற்றோருக்கு அன்னதானம் செய்யும் இவர், புலால் உண்பதில்லை.

நமது பிரார்த்தனை கிளப் பற்றி அப்போதே அவரிடம் எடுத்துக்கூறி அடுத்த வார பிரார்த்தனைக்கு நீங்கள் தான் தலைமை ஏற்கவேண்டும் என்றும் கூறினோம். அவருக்கு அது பற்றியெல்லாம் புரியவில்லை. “சரி விடுங்க…. ஒன்னும் வேண்டாம் பாட்டி. வர்ற ஞாயிற்று கிழமை சாயந்திரம் 5.30 மணிக்கு நான் சொல்ற மாதிரி நீங்க பிரார்த்தனை பண்ணா போதும்!” என்று கூறியிருக்கிறோம். அவரது அலைபேசி எண்ணை தந்திருக்கிறார்கள். விரைவில் அவரை தொடர்பு கொண்டு பிரார்த்தனை விபரங்கள் தெரிவிக்கப்படும்.

(வள்ளலார் பல் துலக்கும் குச்சியால் உருவாக்கிய தீஞ்சுவை நீரோடை, தண்ணீரால் விளக்கெரித்த இடம் ஆகியவை பற்றிய விரிவான பதிவு விரைவில்…)

=================================================================
குளிர்வித்த கோடை மழை!

இந்த கோடை அனைவருக்கும் இதமாக குறிப்பாக ஏழை, எளியோர் மற்றும் விவசாயிகள் வெயிலில் அலைந்து திரிந்து பணி செய்வோர் ஆகியோருக்கு இதமாக இருக்கவேண்டும் என்று முந்தைய பிரார்த்தனை பதிவு ஒன்றில் பதிவு செய்திருந்தோம். தமிழகம் வறட்சியை எதிர்நோக்கும் அபாயம் இருப்பதால் இந்த கோடையில் போதுமான மழை பொழிய வேண்டும் என்றும் இறைவனிடம் விண்ணப்பித்திருந்தோம். தவிர அறநிலையத் துறை சார்பில் பல ஆலயங்களில் மழை வேண்டி வருண ஜெபம் வேறு நடைபெற்றது.

இதோ கத்திரி வெயிலின் துவக்கத்திலயே தமிழகம் முழுதும் பரவலாக மழை பொழிந்து பூமியை குளிர்வித்திருக்கிறது.

கருணைக் கடலாம் எங்கள் இறைவனுக்கு நன்றி.

இந்த வார பிரார்த்தனைக்கான கோரிக்கைகளை பார்ப்போமா?

=================================================================

Sister should recover well

Dear Sir,

One of my colleague referred this website for me. My sister Janaki (58) slipped in bathroom and fell down and sustained heavy injuries. She is being admitted in Madras Medical Mission hospital for surgery in back head. Surgery will be held on coming Monday 12/05/2014. Her body is very weak and she’s very much afraid of the operation.

I request to pray for the successful operation and quick recovery of her.

– N. Karthikeyan,
Keerthi Infrastructure Pvt.Ltd.,
Anna Nagar, Chennai-40.

=================================================================

தோழிக்கு இழந்த சொத்துக்கள் திரும்ப கிடைக்க வேண்டும்!

வணக்கம்.

என் பெயர் தெய்வானை முத்துக்குமரன். திருச்சியையை அடுத்த துறையூர் எனது ஊர். இந்த தளத்தை கடந்த சில மாதங்களாக பார்த்துவருகிறேன்.

இங்கு வெளியிடப்படும் பிரார்த்தனை எனது தோழி ஒருத்திக்காக. அவள் பெயர் கோகிலா (55). அவளுக்கு என்று யாரும் கிடையாது. அவள் அப்பாவும் அம்மாவும் ஒரு விபத்தில் காலமான பிறகு, அவள் இருந்த வீட்டை பறித்துக்கொண்டு அவளுக்கு வரவேண்டிய சொத்துக்களை எல்லாம் அவள் உறவினர்கள் அபகரித்துக்கொண்டு அவளை விரட்டிவிட்டுவிட்டார்கள். அவள் ஒரு அப்பாவி. இதை எப்படி எதிர்கொள்வது என்று கூட அவளுக்கு தெரியவில்லை. திருச்சியில் ஒரு முதியோர் இல்லத்தில் தங்கியிருக்கிறாள். அவளை அடிக்கடி போய் பார்த்துவிட்டு வருவேன்.

நமது பிரார்த்தனை கிளப்பில், வெளியிட்டால் அவளுக்கு விரைவில் இழந்த சொத்துக்கள் திரும்ப கிடைக்கும் அவள் பக்கம் நியாயம் கிடைக்கும் என்று கருதியே இங்கு பதிவு செய்கிறேன்.

இந்த பிரார்த்தனை வெளியிடப்படும் வாரம், அந்த ஞாயிறு சமயபுரம் சென்று மாரியம்மன் சன்னதியில் என் தொழிக்காகவும் உங்கள் அனைவருக்காகவும் பிரார்த்தனை செய்வதாக தீர்மானித்திருக்கிறேன்.

ரைட்மந்த்ரா வாசகர்கள் அனைவரும் எப்போதும் சந்தோஷமாக எல்லா வளங்களும் பெற்று வாழ பிரார்த்திக்கிறேன்.

– தெய்வானை முத்துக்குமரன்,
துறையூர்.

=================================================================

இந்த வார பொது பிரார்த்தனை….

பள்ளிச் சிறுமிகளை கடத்திச் சென்ற நைஜீரிய தீவிரவாதிகள்

மத்திய ஆப்பிரிக்க நாடுகளில் இஸ்லாமிய சட்டதிட்டங்களுக்கு உட்பட்ட ஆட்சியை அமைக்க வேண்டுமென போக்கோ ஹரம் என்ற தீவிரவாத அமைப்பு ஆயுதமேந்திய போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறது. தேவாலயங்களை தாக்குவது, திடீர் திடீரென்று பள்ளிகள் மீது குண்டு வீசி அப்பாவி மாணவர்களை கொல்வது என இவர்கள் செய்து வரும் அட்டகாசம் / கொடுமை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

nigeria_abduction_protest

சில நாட்களுக்கு முன்னர் போர்னோ மாவட்டத்தின் சிபோக் பகுதியில் உள்ள பெண்கள் உறைவிட மேல்நிலைப் பள்ளிக்குள் நுழைந்த போக்கோ ஹரம் தீவிரவாதிகள், காவலர்களுடன் கடுமையான துப்பாக்கிச் சண்டையில் ஈடுபட்டனர். விடுதிக்குள் தூங்கிக்கொண்டிருந்த சுமார் 200 இளம் வயது மாணவிகளை பலவந்தமாக வாகனங்களில் தூக்கிப் போட்டுக்கொண்டு கடத்திச் சென்றனர். மேற்கத்திய நாடுகளின் கல்வி முறையை தீவிரமாக எதிர்த்து வரும் போக்கோ ஹரம் அமைப்பினர், சமீப காலமாக பள்ளிகள் மற்றும் மாணவர்களைக் குறி வைத்து தாக்குதல் நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது கடப்பட்டுள்ள மாணவிகள் அனைவரையும் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்போவதாக அவ்வமைப்பினர் கூறியுள்ளனர். இதனால் மாணவிகளின் பெற்றோர் செய்வதறியாது கண்ணீர் வடிக்கின்றனர்.

இது குறித்து, பெண் கல்விக்காக போராடி வரும் ஐ.நா விருது பெற்ற யூசுப் மலாலா கூறுகையில், “இஸ்லாத்தை சரியாக புரிந்துகொள்ளாதவர்களின் கோழைத்தனமான செயல் இது” என்று கருத்து தெரிவித்துள்ளார்.

கடத்தப்பட்ட மாணவிகள் எந்த வித துன்பமும் இல்லாமல் விடுவிக்கப்படவேண்டும். தீவிர வாத செயல்கள் நைஜீரியாவில் முடிவுக்கு வந்து அங்கு அமைதி தவழவேண்டும். மக்கள் நிம்மதியாக இருக்கவேண்டும்.

ஆப்கானிஸ்தான் நிலச்சரிவு

‘பட்ட காலிலே படும்.. கெட்ட குடியே கெடும்’ என்ற பழமொழிக்கு ஏற்ப, ஏற்கனவே தீவிரவாதம், உள்நாட்டுப் போர் என் கடுமையாக பாதிப்பட்டு வரும் ஆப்கானிஸ்தானில் இயற்கையும் தன் பங்கிற்கு கோரத் தாண்டவம் ஆடியிருக்கிறது.

20140504AFGHANISTAN-slide-D686-jumbo

ஆப்கானிஸ்தானின் பாதாக்ஷன் மாகாணத்தில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்தது. இதன் காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் ஒரு கிராமமே மண்ணில் புதையுண்டு போனதாக அதிகாரிகள் கூறுகின்றனர். இந்த கிராமத்தில் வாழ்ந்த 2500 பேர் பலியானதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானின் வடகிழக்கு பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி சுமார் 2,100 பேர் உயிரிழந்திருக்கலாம் என்று அந்நாட்டு ஆளுநரின் செய்தி தொடர்பாளர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் அந்நாட்டு ராணுவமும், மருத்துவக் குழுக்களும் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளன.

நிலச்சரிவில் குடும்பத்தினர் அனைவரையும் இழந்த ஒரு பெண்மணி கதறி அழுகிறார்
நிலச்சரிவில் குடும்பத்தினர் அனைவரையும் இழந்த ஒரு பெண்மணி கதறி அழுகிறார்

பாதிக்கப்பட்ட மக்களுக்கு விரைவில் நிவாரணம் கிடைக்கவும், உயிரிழந்த அனைவரின் ஆன்மா சாந்தியடையவும், அவர்களை இழந்து வாடும் அவர்கள் குடும்பத்தினரும் உறவினர்களும் ஆறுதல் பெறவும் இறைவனை பிரார்த்திப்போம்.

=================================================================

சென்னை அண்ணா நகரை சேர்ந்த திரு.கார்த்திகேயன் அவர்களின் சகோதரி ஜானகி அவர்களுக்கு நடைபெறவுள்ள அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்து அவர் பரிபூரண குணம் அடையவும், துறையூரை சேர்ந்த தெய்வானை முத்துக்குமரன் அவர்களின் தோழி கோகிலாவுக்கு இழந்த சொத்துக்கள் திரும்ப கிடைத்து அவர் சௌக்கியமாக சந்தோஷமாக வாழவும், நைஜீரியாவில் தீவிரவாதிகளால் கடத்தப்பட்டுள்ள சுமார் 200 பள்ளி மாணவிகள் எந்த வித ஆபத்தும் இன்றி விடுதலை அடையவும், ஆப்கானிஸ்தான் நிலச்சரிவில் சிக்கி பாதிக்கப்பட்டிருப்பவர்களுக்கு விரைவில் அனைத்து வகையான நிவாரணங்கள் கிடைக்கவும், நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் ஆன்மா சாந்தியடையவும் இறைவனை பிரார்த்திப்போம். இந்த வார பிரார்த்தனைக்கு தலைமை ஏற்கும் மூதாட்டி பாஞ்சாலி அம்மாள் அவர்கள் எந்த வித குறையுமின்றி நோயற்ற வாழ்வும்  குறைவற்ற செல்வமும் பெறவேண்டும் என்றும் பிரார்த்திப்போம்.

http://rightmantra.com/wp-content/uploads/2013/04/Mahaperiyava-36.jpgநமது பிரார்த்தனைகளை இறைவனிடம் கொண்டு சேர்த்து பலன் பெற்று தரவேண்டிய பொறுப்பு நாம் என்றும் வணங்கும் மகா பெரியவா அவர்களையே சாரும். அவரது திருவடிகளில் இந்த பிரார்த்தனைகளை சமர்ப்பிக்கின்றோம்.

கூட்டுப் பிரார்த்தனை அவருக்கு மிகவும் பிடித்த ஒன்று என்பதால் நிச்சயம் மகா பெரியவா அவர்கள் இந்த விஷயத்தில் சீக்கிரமே தமது அனுக்ரஹத்தை நல்குவார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது.

இதற்கு முன்பு, பிரார்த்தனை கிளப்பில் நாம் பிரார்த்தனை செய்தவர்களுக்காகவும் ஒரு சில வினாடிகள் பிரார்த்திப்போம்.

நாம் இறைவனிடம் எதை வேண்டிக்கொண்டாலும் நாமும் அதற்காக உழைப்போம்!!!

பிரார்த்தனை நாள் : மே 11,  2014 ஞாயிறு  நேரம் : மாலை 5.30 – 5.45

இடம் : அவரவர் இருப்பிடங்கள்

============================================================

பிரார்த்தனை கிளப்பிற்கு கோரிக்கை அனுப்பியுள்ள மற்றவர்கள் கவனத்திற்கு:

உங்கள் கோரிக்கைகள் அடுத்தடுத்து இடம்பெறும். கோரிக்கை இடம்பெறும் வரையிலும் அதற்கு பிறகும் கூட நீங்கள் தவறாமல் வாரா வாரம் நடைபெறும் இந்த பிரார்த்தனையில் கலந்துகொண்டு பிரார்த்தனை செய்துவாருங்கள். உங்கள்  வேண்டுதலை பிரார்த்தித்துவிட்டு கூடவே இங்கு கோரிக்கை அனுப்பும் பிறர் நலனுக்காகவும் சில நிமிடங்கள் பிரார்த்தனை செய்யுங்கள். பிறருக்காக பிரார்த்தனை செய்வது மிகவும் உன்னதமான விஷயம்.  இறைவனுக்கு மிகவும் ப்ரீதியான ஒன்று.

============================================================

பிரார்த்தனையை துவக்கும் முன் மூன்று முறை ராம…ராம….ராம… என்று உச்சரித்துவிட்டு பிரார்த்தனையை ஆரம்பிக்கவும். ராம நாமத்தை மூன்று முறை உச்சரித்தால் விஷ்ணு சஹஸ்ர நாமத்தை முழுமையாக உச்சரித்த பலன் கிடைக்கும்.

அதே போன்று முடிக்கும்போது ‘ஓம் சிவ சிவ ஓம்’ என்ற மந்திரத்தை மூன்று முறை உச்சரிக்கவும்.

(பிற மதத்தவர்கள் இந்த பிரார்த்தனையில் பங்கேற்றால் அவரவர் வழிபாட்டு தெய்வத்தை நினைத்து பிரார்த்தனை செய்யும்படி கேட்டுக்கொள்கிறோம். பிரார்த்தனைக்கு மதம், இனம் மொழி கிடையாது என்பது நீங்கள் அறிந்ததே.)

=============================================================

உங்கள் கோரிக்கை பிரார்த்தனை கிளப்பில் இடம் பெற…

உங்கள் கோரிக்கைகள் இந்த பகுதியில் வெளியிடப்பட்டு பிரார்த்தனை செய்யப்படவேண்டும் என்று நீங்கள் விரும்பினால் அதை எங்களுக்கு மின்னஞ்சல் செய்யவும்.

உங்கள் வேண்டுதல்கள் குடும்பப் பிரச்னை, நோயிலிருந்து விடுதலை, நல்வாழ்வு, அறுவை சிகிச்சையில் வெற்றி, வழக்குகளில் நல்ல தீர்ப்பு (நியாயம் உங்கள் பக்கம் இருப்பின்), வேலைவாய்ப்பு மற்றும் இதர நியாயமான கோரிக்கைகளை அடிப்படையாக வைத்து இருக்கலாம். பிரார்த்தனையால் தீர்க்க முடியாத பிரச்சனைகளே இல்லை!

உங்கள் பெயரையும் சூழ்நிலையும் வெளியிட விரும்பாவிட்டால் வேறு ஒரு பெயரை நீங்களே குறிப்பிட்டு நமக்கு மின்னஞ்சல் அனுப்பவும். பொதுவாக உங்கள் பிரச்னை நீங்க குறிப்பிடும் புனைப் பெயருடன் அறிவிக்கப்பட்டு பிரார்த்தனை நடைபெறும்.

E-mail : simplesundar@gmail.com    Mobile : 9840169215

=======================================================

பிரார்த்தனையின் மகத்துவத்தை போற்றும் வகையிலும் இறையருளின் தன்மைகளை வலியுறுத்தும் வகையிலும் ஒவ்வொரு பிரார்த்தனை பதிலும் ஒரு கதை இடம்பெறுகிறது. அந்த கதைகளை படிக்க, வாசச்கர்கள் கீழ்கண்ட முகவரியை செக் செய்யும்படி கேட்டுகொள்ளப்படுகிறார்கள்.

இதற்கு முன்பு பிரார்த்தனை கிளப் பகுதியில் இடம் பெற்ற பதிவுகளை படிக்க:
http://rightmantra.com/?cat=131

=======================================================

சென்ற வார பிரார்த்தனைக்கு தலைமை தாங்கியவர் :  ராம புத்திரர்கள் லவ குசர்கள் ஸ்தாபித்த குறுங்காலீஸ்வரருக்கு தினமும் பூஜை செய்யும் பேறு பெற்ற சசிகுமார் குருக்கள் அவர்கள்.

9 thoughts on “வள்ளலாரின் பசி தீர்க்க ஓடிவந்த வடிவுடையம்மன் – Rightmantra Prayer Club

  1. வள்ளலார் கதை நன்றாக உள்ளது.
    பசியோடு இருந்த தன பிள்ளைக்கு உணவு கொடுத்த வடிவுடையம்மன் கருணையை என்னவென்று சொல்வது.
    வள்ளலாருக்கு ஒரு வடிவுடையம்மன். சுந்தருக்கு ஒரு பாஞ்சலியம்மன். இந்த வார பிரார்த்தனை விருந்தினர் சிறப்பு மிக்கவர். நம் பாட்டி நமக்காக பிரார்த்தனை செய்வது மாதிரி இருக்கிறது.
    கோவில் கோபுரம் படம் மற்றும் இதர படங்கள் அருமை.
    சென்னை அண்ணா நகரை சேர்ந்த திரு.கார்த்திகேயன் அவர்களின் சகோதரி ஜானகி அவர்களுக்கு நடைபெறவுள்ள அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்து அவர் பரிபூரண குணம் அடையவும், துறையூரை சேர்ந்த தெய்வானை முத்துக்குமரன் அவர்களின் தோழி கோகிலாவுக்கு இழந்த சொத்துக்கள் திரும்ப கிடைத்து அவர் சௌக்கியமாக சந்தோஷமாக வாழவும், நைஜீரியாவில் தீவிரவாதிகளால் கடத்தப்பட்டுள்ள சுமார் 200 பள்ளி மாணவிகள் எந்த வித ஆபத்தும் இன்றி விடுதலை அடையவும், ஆப்கானிஸ்தான் நிலச்சரிவில் சிக்கி பாதிக்கப்பட்டிருப்பவர்களுக்கு விரைவில் அனைத்து வகையான நிவாரணங்கள் கிடைக்கவும், நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் ஆன்மா சாந்தியடையவும் இறைவனை பிரார்த்திப்போம். இந்த வார பிரார்த்தனைக்கு தலைமை ஏற்கும் மூதாட்டி பாஞ்சாலி அம்மாள் அவர்கள் எந்த வித குறையுமின்றி நோயற்ற வாழ்வும் குறைவற்ற செல்வமும் பெறவேண்டும் என்றும் பிரார்த்திப்போம்.

    நன்றி சார்.

  2. வள்ளலாரின் பசி தீர்க்க ஓடி வந்த இறைவியை பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொண்டோம். வாடிய பயிரை கண்ட போதெல்லாம் வாடிய மகானல்லவா அவர்.

    வள்ளலார் ஸித்தி பெற்ற ஸித்தி வளாகம் மற்றும் தீஞ்சுவை நீரோடை பற்றி இந்த பதிவை படித்த பிறகு தான் தெரிந்து கொண்டோம்.

    தங்கள் பசிதீர்க்க உதவிய இந்த வார பிராத்தனைக்கு தலைமை தாங்கும் பாஞ்சாலி அம்மாளுக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கம்.

    இந்த வார பிராத்தனைக்கு கோரிக்கை வைத்திருக்கும் அனைவருக்காகவும் பிரார்திப்போம்.

    ” லோகா சமஸ்தா சுகினோ பவந்து “”

    ராம் ராம் ராம்

    நன்றி
    உமா

  3. கார்த்திகயேன் அய்யா அவர்களுக்கு ,அய்யா தங்கள் உடனே சென்னை கற்பகம் அம்பாள் கபாலிஸ்வரர் திருகோயில் சென்று உங்கள் சிஸ்டர் அவர்கள் பெயருக்கு சுவாமிக்கு அபிசேகம் , அர்ச்சனை பண்ணிவிட்டு ,8 நெய் தீபம் ஏற்றி ,பின்பு பிரகாரத்தில் உள்ள பைரவர் சன்னதி விளக்கில் நெய் தீபம் சேர்த்து வேண்டி கொள்ளுங்கள் ..பின்பு வெகு விரைவில் ஸ்ரீவாஞ்சியம்[9442403926]திருகோயில் சென்று அங்கு உள்ள எமன், சுவாமி ,அம்பாள் ,மகிஷா சுரமர்தினி ,யோக பைரவர் சன்னதிகளில் அபிசேகம் ,அர்ச்சனை செய்து நெய் தீபம் ஏற்றி வழிபடுங்கள்… தினமும் பின்வரும் பதிகம்களை காலை ,மாலை ,இரவு படித்து வாருங்கள் .அசைவம் தவிருங்கள் ..ஈசன் அவன் துணை வருவான் …துணை நிற்பான் ….. தினமும் பைரவரை நினைத்து வாருங்கள் ..

    “ஒம் ஸ்ரீ கால பைரவாய நமஹ,சிவாய நம”,மனதுகுலே எப்போதும் சொல்லி வர சொல்லுங்கள் …கந்தர் சஷ்டி கவசம் படிக்கவும் …
    திருச்சிற்றம்பலம்

    கண்டு கொள்ளரி யானைக் கனிவித்துப்
    பண்டு நான்செய்த பாழிமை கேட்டிரேல்
    கொண்ட பாணி கொடுகொட்டி தாளங்கைக்
    கொண்ட தொண்டரைத் துன்னிலுஞ் சூழலே.

    நடுக்கத் துள்ளும் நகையுளும் நம்பற்குக்
    கடுக்கக் கல்ல வடமிடு வார்கட்குக்
    கொடுக்கக் கொள்க வெனவுரைப் பார்களை
    இடுக்கண் செய்யப் பெறீரிங்கு நீங்குமே.

    கார்கொள் கொன்றைக் கடிமலர்க் கண்ணியான்
    சீர்கொள் நாமஞ் சிவனென் றரற்றுவார்
    ஆர்க ளாகிலு மாக அவர்களை
    நீர்கள் சாரப் பெறீரிங்கு நீங்குமே.

    சாற்றி னேன்சடை நீண்முடிச் சங்கரன்
    சீற்றங் காமன்கண் வைத்தவன் சேவடி
    ஆற்ற வுங்களி பட்ட மனத்தராய்ப்
    போற்றி யென்றுரைப் பார்புடை போகலே.

    இறையென் சொன்மற வேல்நமன் றூதுவீர்
    பிறையும் பாம்பு முடைப்பெரு மான்றமர்
    நறவம் நாறிய நன்னறுஞ் சாந்திலும்
    நிறைய நீறணி வாரெதிர் செல்லலே.

    வாம தேவன் வளநகர் வைகலுங்
    காம மொன்றில ராய்க்கை விளக்கொடு
    தாமந் தூபமுந் தண்ணறுஞ் சாந்தமும்
    ஏம மும்புனை வாரெதிர் செல்லலே.

    படையும் பாசமும் பற்றிய கையினீர்
    அடையன் மின்னம தீசன் அடியரை
    விடைகொ ளூர்தியி னானடி யார்குழாம்
    புடைபு காதுநீர் போற்றியே போமினே.

    விச்சை யாவதும் வேட்கைமை யாவதும்
    நிச்சல் நீறணி வாரை நினைப்பதே
    அச்ச மெய்தி அருகணை யாதுநீர்
    பிச்சை புக்கவன் அன்பரைப் பேணுமே.

    இன்னங் கேண்மின் இளம்பிறை சூடிய
    மன்னன் பாதம் மனத்துட னேத்துவார்
    மன்னும் அஞ்செழுத் தாகிய மந்திரந்
    தன்னி லொன்றுவல் லாரையுஞ் சாரலே.

    மற்றுங் கேண்மின் மனப்பரிப் பொன்றின்றிச்
    சுற்றும் பூசிய நீற்றொடு கோவணம்
    ஒற்றை யேறுடை யானடியே யல்லாற்
    பற்றொன் றில்லிகள் மேற்படை போகலே.

    அரக்கன் ஈரைந் தலையுமோர் தாளினால்
    நெருக்கி யூன்றியிட் டான்தமர் நிற்கிலுஞ்
    சுருக்கெ னாதங்குப் பேர்மின்கண் மற்றுநீர்
    சுருக்கெ னிற்சுட ரான்கழல் சூடுமே.

    திருச்சிற்றம்பலம்

    ………………………………………………………………………………
    திருச்சிற்றம்பலம்

    மருந்தவை மந்திரம் மறுமைநன் னெறியவை மற்றுமெல்லாம்
    அருந்துயர் கெடுமவர் நாமமே சிந்தைசெய் நன்னெஞ்சமே
    பொருந்துதண் புறவினிற் கொன்றைபொன் சொரிதர துன்றுபைம்பூஞ்
    செருந்திசெம் பொன்மலர் திருநெல்வே லியுறை செல்வர்தாமே.

    என்றுமோ ரியல்பின ரெனநினை வரியவ ரேறதேறிச்
    சென்றுதாஞ் செடிச்சியர் மனைதொறும் பலிகொளும் இயல்பதுவே
    துன்றுதண் பொழில்நுழைந் தெழுவிய கேதகைப் போதளைந்து
    தென்றல்வந் துலவிய திருநெல்வே லியுறை செல்வர்தாமே.

    பொறிகிளர் அரவமும் போழிள மதியமுங் கங்கையென்னும்
    நெறிபடு குழலியைச் சடைமிசைச் சுலவிவெண் ணீறுபூசிக்
    கிறிபட நடந்துநற் கிளிமொழி யவர்மனங் கவர்வர்போலுஞ்
    செறிபொழில் தழுவிய திருநெல்வே லியுறை செல்வர்தாமே.

    காண்டகு மலைமகள் கதிர்நிலா முறுவல்செய் தருளவேயும்
    பூண்டநா கம்புறங் காடரங் காநட மாடல்பேணி
    ஈண்டுமா மாடங்கள் மாளிகை மீதெழு கொடிமதியந்
    தீண்டிவந் துலவிய திருநெல்வே லியுறை செல்வர்தாமே.

    ஏனவெண் கொம்பொடும் எழில்திகழ் மத்தமும் இளஅரவுங்
    கூனல்வெண் பிறைதவழ் சடையினர் கொல்புலித் தோலுடையார்
    ஆனின்நல் லைந்துகந் தாடுவர் பாடுவர் அருமறைகள்
    தேனில்வண் டமர்பொழில் திருநெல்வே லியுறை செல்வர்தாமே.

    வெடிதரு தலையினர் வேனல்வெள் ளேற்றினர் விரிசடையர்
    பொடியணி மார்பினர் புலியதள் ஆடையர் பொங்கரவர்
    வடிவுடை மங்கையோர் பங்கினர் மாதரை மையல்செய்வார்
    செடிபடு பொழிலணி திருநெல்வே லியுறை செல்வர்தாமே.

    அக்குலாம் அரையினர் திரையுலாம் முடியினர் அடிகளன்று
    தக்கனார் வேள்வியைச் சாடிய சதுரனார் கதிர்கொள்செம்மை
    புக்கதோர் புரிவினர் வரிதரு வண்டுபண் முரலுஞ்சோலைத்
    திக்கெலாம் புகழுறுந் திருநெல்வே லியுறை செல்வர்தாமே.

    முந்திமா விலங்கலன் றெடுத்தவன் முடிகள்தோள் நெரிதரவே
    உந்திமா மலரடி யொருவிரல் உகிர்நுதி யாலடர்த்தார்
    கந்தமார் தருபொழில் மந்திகள் பாய்தர மதுத்திவலை
    சிந்துபூந் துறைகமழ் திருநெல்வே லியுறை செல்வர்தாமே.

    பைங்கண்வாள் அரவணை யவனொடு பனிமல ரோனுங்காணா
    அங்கணா அருளென அவரவர் முறைமுறை யிறைஞ்சநின்றார்
    சங்கநான் மறையவர் நிறைதர அரிவையர் ஆடல்பேணத்
    திங்கள்நாள் விழமல்கு திருநெல்வே லியுறை செல்வர்தாமே.

    துவருறு விரிதுகில் ஆடையர் வேடமில் சமணரென்னும்
    அவருறு சிறுசொலை யவமென நினையுமெம் அண்ணலார்தாங்
    கவருறு கொடிமல்கு மாளிகைச் சூளிகை மயில்களாலத்
    திவருறு மதிதவழ் திருநெல்வே லியுறை செல்வர்தாமே.

    பெருந்தண்மா மலர்மிசை அயனவன் அனையவர் பேணுகல்வித்
    திருந்துமா மறையவர் திருநெல்வே லியுறை செல்வர்தம்மைப்
    பொருந்துநீர்த் தடமல்கு புகலியுள் ஞானசம் பந்தன்சொன்ன
    அருந்தமிழ் மாலைகள் பாடியா டக்கெடும் அருவினையே.

    திருச்சிற்றம்பலம்

  4. சகோதரி தெய்வானை முத்து குமரன் அவர்களுக்கு ,சமயபுரம் மாரிஅம்மனை கெட்டியாக பிடித்து கொள்ளுங்கள் …சோதனைகள் ஓடி போகும் ….சமயபுரம் மாரியம்மனுக்கு ” தீச்சட்டி” எடுப் பதாக கோகிலா அவர்களை நேர்ந்து கொள்ள சொல்லுங்கள் ..உடனே கொல்லங்குடி[சிவகங்கை ,நாட்டரசன் கோட்டை அருகில்90479 28314] வெட்டுடையார் காளி திருக்கோயில்,மடப்புரம்[மதுரை அருகில்04575272411 ] பத்திர காளியம்மன் திருக்கோயில் சென்று அங்கு உள்ள முறைபடி வழிபடவும் … இரு கோயில்களையும் ஒரே நாளில் வழிபட்டு விடலாம் ..தேய்பிறை,வளர்பிறை அஷ்டமி நாட்களில் திருச்சி மலைகோட்டை தரிசித்து எதிரில் உள்ள பெரிய கடை வீதியில் அக்க சாலை பிள்ளையார் கோயில் அருகில் உள்ள சொர்ண பைரவர் திருகோயில் சென்று நெய் தீபம் ஏற்றி வழிபடவும் ….அங்கு உள்ள பைரவரின் நாய் வாகனத்திற்கு மரிகொளுந்து சாற்றி தொடர்ந்து 8 அச்டமிகள் செய்து வரவும் …இதனை அந்தி சாயும் பொழுதில் செய்தல் உடனடி பலன்களை பெற்று தரும் …பைரவர் பூசனையின் பொது அசைவம் தொடாதிர்கள்… பின்வரும் பதிகம்களை எப்போதும் படித்து வர சொல்லவும் …

    திருச்சிற்றம்பலம்

    செய்ய னேதிரு ஆலவாய் மேவிய
    ஐய னேயஞ்ச லென்றருள் செய்யெனைப்
    பொய்ய ராம்அம ணர்கொளு வுஞ்சுடர்
    பைய வேசென்று பாண்டியற் காகவே.

    சித்த னேதிரு ஆலவாய் மேவிய
    அத்த னேயஞ்ச லென்றருள் செய்யெனை
    எத்த ராம்அம ணர்கொளு வுஞ்சுடர்
    பத்தி மன்தென்னன் பாண்டியற் காகவே.

    தக்கன் வேள்வி தகர்த்தருள் ஆலவாய்ச்
    சொக்க னேயஞ்ச லென்றருள் செய்யெனை
    எக்க ராம்அம ணர்கொளு வுஞ்சுடர்
    பக்க மேசென்று பாண்டியற் காகவே.

    சிட்ட னேதிரு ஆலவாய் மேவிய
    அட்ட மூர்த்திய னேயஞ்ச லென்றருள்
    துட்ட ராம்அம ணர்கொளு வுஞ்சுடர்
    பட்டி மன்தென்னன் பாண்டியற் காகவே.

    நண்ண லார்புரம் மூன்றெரி ஆலவாய்
    அண்ண லேயஞ்ச லென்றருள் செய்யெனை
    எண்ணி லாவம ணர்கொளு வுஞ்சுடர்
    பண்ணி யல்தமிழ்ப் பாண்டியற் காகவே.

    தஞ்ச மென்றுன் சரண்புகுந் தேனையும்
    அஞ்ச லென்றருள் ஆலவா யண்ணலே
    வஞ்சஞ் செய்தம ணர்கொளு வுஞ்சுடர்
    பஞ்ச வன்தென்னன் பாண்டியற் காகவே.

    செங்கண் வெள்விடை யாய்திரு ஆலவாய்
    அங்க ணாவஞ்ச லென்றருள் செய்யெனைக்
    கங்கு லார்அமண் கையரிடுங் கனல்
    பங்க மில்தென்னன் பாண்டியற் காகவே.

    தூர்த்தன் வீரந் தொலைத்தருள் ஆலவாய்
    ஆத்த னேயஞ்ச லென்றருள் செய்யெனை
    ஏத்தி லாஅம ணர்கொளு வுஞ்சுடர்
    பார்த்தி வன்தென்னன் பாண்டியற் காகவே.

    தாவி னான்அயன் தானறி யாவகை
    மேவி னாய்திரு ஆலவா யாயருள்
    தூவி லாஅம ணர்கொளு வுஞ்சுடர்
    பாவி னான்தென்னன் பாண்டியற் காகவே.

    எண்டி சைக்கெழில் ஆலவாய் மேவிய
    அண்ட னேயஞ்ச லென்றருள் செய்யெனைக்
    குண்ட ராம்அம ணர்கொளு வுஞ்சுடர்
    பண்டி மன்தென்னன் பாண்டியற் காகவே.

    அப்பன் ஆலவா யாதி யருளினால்
    வெப்பந் தென்னவன் மேலுற மேதினிக்
    கொப்ப ஞானசம் பந்தன் உரைபத்துஞ்
    செப்ப வல்லவர் தீதிலாச் செல்வரே.

    திருச்சிற்றம்பலம்
    ……………………………………………………………………………….

    திருச்சிற்றம்பலம்

    அப்பன்நீ அம்மைநீ ஐய னும்நீ
    அன்புடைய மாமனும் மாமி யும்நீ
    ஒப்புடைய மாதரு மொண்பொரு ளும்நீ
    ஒருகுலமுஞ் சுற்றமும் ஓரூ ரும்நீ
    துய்ப்பனவும் உய்ப்பனவுந் தோற்று வாய்நீ
    துணையாயென் நெஞ்சந் துறப்பிப் பாய்நீ
    இப்பொன்நீ இம்மணிநீ இம்முத் தும்நீ
    இறைவன்நீ ஏறூர்ந்த செல்வன் நீயே.

    வெம்பவரு கிற்பதன்று கூற்றம் நம்மேல்
    வெய்ய வினைப்பகையும் பைய நையும்
    எம்பரிவு தீர்ந்தோம் இடுக்கண் இல்லோம்
    எங்கெழிலென் ஞாயி றெளியோ மல்லோம்
    அம்பவளச் செஞ்சடைமேல் ஆறு சூடி
    அனலாடி ஆனஞ்சும் ஆட்டு கந்த
    செம்பவள வண்ணர்செங் குன்ற வண்ணர்
    செவ்வான வண்ணரென் சிந்தை யாரே.

    ஆட்டுவித்தால் ஆரொருவர் ஆடா தாரே
    அடக்குவித்தால் ஆரொருவர் அடங்கா தாரே
    ஓட்டுவித்தால் ஆரொருவர் ஓடா தாரே
    உருகுவித்தால் ஆரொருவர் உருகா தாரே
    பாட்டுவித்தால் ஆரொருவர் பாடா தாரே
    பணிவித்தால் ஆரொருவர் பணியா தாரே
    காட்டுவித்தால் ஆரொருவர் காணா தாரே
    காண்பாரார் கண்ணுதலாய் காட்டாக் காலே.

    நற்பதத்தார் நற்பதமே ஞான மூர்த்தி
    நலஞ்சுடரே நால்வேதத் தப்பால் நின்ற
    சொற்பதத்தார் சொற்பதமுங் கடந்து நின்ற
    சொலற்கரிய சூழலாய் இதுவுன் றன்மை
    நிற்பதொத்து நிலையிலா நெஞ்சந் தன்னுள்
    நிலாவாத புலாலுடம்பே புகுந்து நின்ற
    கற்பகமே யானுன்னை விடுவே னல்லேன்
    கனகமா மணிநிறத்தெங் கடவு ளானே.

    திருக்கோயி லில்லாத திருவி லூருந்
    திருவெண்ணீ றணியாத திருவி லூரும்
    பருக்கோடிப் பத்திமையாற் பாடா வூரும்
    பாங்கினொடு பலதளிக ளில்லா வூரும்
    விருப்போடு வெண்சங்க மூதா வூரும்
    விதானமும் வெண்கொடியு மில்லா வூரும்
    அருப்போடு மலர்பறித்திட் டுண்ணா வூரும்
    அவையெல்லாம் ஊரல்ல அடவி காடே.

    திருநாமம் அஞ்செழுத்துஞ் செப்பா ராகிற்
    தீவண்ணர் திறமொருகால் பேசா ராகில்
    ஒருகாலுந் திருக்கோயில் சூழா ராகில்
    உண்பதன்முன் மலர்பறித்திட் டுண்ணா ராகில்
    அருநோய்கள் கெடவெண்ணீ றணியா ராகில்
    அளியற்றார் பிறந்தவா றேதோ வென்னிற்
    பெருநோய்கள் மிகநலியப் பெயர்த்துஞ் செத்துப்
    பிறப்பதற்கே தொழிலாகி இறக்கின் றாரே.

    நின்னாவார் பிறரின்றி நீயே யானாய்
    நினைப்பார்கள் மனத்துக்கோர் வித்து மானாய்
    மன்னானாய் மன்னவர்க்கோ ரமுத மானாய்
    மறைநான்கு மானாயா றங்க மானாய்
    பொன்னானாய் மணியானாய் போக மானாய்
    பூமிமேற் புகழ்தக்க பொருளே உன்னை
    என்னானாய் என்னானாய் என்னி னல்லால்
    ஏழையேன் என்சொல்லி ஏத்து கேனே.

    அத்தாவுன் அடியேனை அன்பா லார்த்தாய்
    அருள்நோக்கில் தீர்த்தநீ ராட்டிக் கொண்டாய்
    எத்தனையும் அரியைநீ எளியை யானாய்
    எனையாண்டு கொண்டிரங்கி யேன்று கொண்டாய்
    பித்தனேன் பேதையேன் பேயேன் நாயேன்
    பிழைத்தனகள் எத்தனையும் பொறுத்தா யன்றே
    இத்தனையும் எம்பரமோ ஐய ஐயோ
    எம்பெருமான் றிருக்கருணை இருந்த வாறே.

    குலம்பொல்லேன் குணம்பொல்லேன் குறியும் பொல்லேன்
    குற்றமே பெரிதுடையேன் கோல மாய
    நலம்பொல்லேன் நான்பொல்லேன் ஞானி யல்லேன்
    நல்லாரோ டிசைந்திலேன் நடுவே நின்ற
    விலங்கல்லேன் விலங்கல்லா தொழிந்தே னல்லேன்
    வெறுப்பனவும் மிகப்பெரிதும் பேச வல்லேன்
    இலம்பொல்லேன் இரப்பதே ஈய மாட்டேன்
    என்செய்வான் தோன்றினேன் ஏழை யேனே.

    சங்கநிதி பதுமநிதி இரண்டுந் தத்து
    தரணியொடு வானாளத் தருவ ரேனும்
    மங்குவார் அவர்செல்வம் மதிப்போ மல்லோம்
    மாதேவர்க் கேகாந்த ரல்லா ராகில்
    அங்கமெலாங் குறைந்தழுகு தொழுநோ யராய்
    ஆவுரித்துத் தின்றுழலும் புலைய ரேனுங்
    கங்கைவார் சடைக்கரந்தார்க் கன்ப ராகில்
    அவர்கண்டீர் நாம்வணங்குங் கடவு ளாரே.

    திருச்சிற்றம்பலம்

    சர்வத்துக்கும் சமயபுரத்தாளே சாட்சி என்று அவள் பதம் பணிந்து உயர்ந்திடுங்கள் ……

    1. மிகச் சரியான சிறப்பான பரிகாரங்களை கூறியமைக்கு நன்றி விஜய் பெரியசுவாமி அவர்களே.

      சம்பந்தப்பட்டவர்கள் பயன்படுத்திக்கொண்டு விரைந்து நிவாரணம் பெறுங்கள்.

      – சுந்தர்

  5. விழுப்புரம் மாவட்டம் வளையாம்பட்டியை சேர்ந்த மூதாட்டி பாஞ்சாலி அம்மாள் ……அவர் யாரு அல்ல …..”அவர்கண்டீர் நாம்வணங்குங் கடவு ளாரே”…இப்படி எல்லாம் பெரும் பாக்கியம் நம் சுந்தர் சார் அவர்களுக்கு தான் கிடைகிறது ….சிவாய சிவ

  6. இன்று விடி காலையில் தான் வள்ளலாரை தியானிக்கும் ஒருவர் இந்த வார பிரார்த்தனை க்ளபிற்கு தலைமை தாங்குவது போலவும். கோரிக்கை அனுப்பிய அனைவருக்கும் அது நிறை வேருவதாகவும், பின் அவர்கள் வள்ளல் பெருமானை FOLLOW பண்ணுவது போலவும் ஒரு எண்ணம் தோன்றியது. ( ஒரு வேளை தீபம் டிரஸ்ட் ஐ பற்றி நான் தங்களிடம் கூறியதால் இருக்கலாம் ) பிறகு வந்து தங்கள் சைட்டை பார்த்தால் அதே போல் உள்ளது. அற்புதம்.
    இதனுடன் நான் அனுப்பி உள்ள ஒரு வீடியோவை அவசியம் பார்க்க வேண்டுகிறேன். இதை பார்த்தால் வள்ளல் பெருமான் எது வரைக்கும் போனார், சித்தர்கள் எது வரைக்கும் போனார்கள் என்பது தெளிவாக புரியும். மலேசியாவை சேர்ந்த தருமலிங்கம் அவர்கள் தெளிவாக சார்ட் போட்டு அதை விளக்கி உள்ளார்.
    http://www.youtube.com/watch?v=HFiro1qww3I

  7. தாங்கள் போட்டு இருக்கும், இந்த கருங்குழி இல்லத்தில் உள்ள இந்த வள்ளலாருடைய PHOTO தான் கிட்ட தட்ட அவருடைய சாயலில் நம்மிடம் இருக்கும் ஒரே படம். ஏனெனில் அவரை எட்டு முறை
    PHOTO ( அவருக்கு தெரிந்தும், தெரியாமலும்) எடுத்தும் ஒரு படத்தில் கூட அவர் உருவம் விழவில்லை. (சுற்றி இருக்கும் அனைவரும் தெரிகின்றார்கள்.) அவர் உருவ பொம்மையை ஒருவர் செய்து போய் காட்டியதும், அதையும் கிழே போட்டு உடைத்து விட்டார்.
    வள்ளல் பெருமானை உலகம் புரிந்து கொள்ளும் நாள் வெகு அருகில் வந்து விட்டது.
    அருட்பெருஜோதி தனிபெருங்கருணை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *