Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Wednesday, April 24, 2024
Please specify the group
Home > Featured > நிம்மதியான நல்வாழ்வுக்கு மஹா பெரியவரின் கட்டளைகள் பத்து!

நிம்மதியான நல்வாழ்வுக்கு மஹா பெரியவரின் கட்டளைகள் பத்து!

print
காஞ்சி மஹா பெரியவர் ஸித்தியடைந்த நாள் இன்று. ஆம்… ஜனவர் 8, 1994 ஆம் ஆண்டு தான் அவர் தனது ஸ்தூல சரீரம் விடுத்து சூட்சும சரீரம் புகுந்தார்.

பெரியவர் தான் ஜீவனுடன் இருந்தபோது நமது நல்வாழ்வுக்கு நாம் பின்பற்றக் கூடிய எளிய விஷயங்களை பத்து கட்டளைகளாக கூறியிருந்தார். இவற்றைப் பின்பற்ற பணம் காசே தேவையில்லை. மனமிருந்தால் போதும்.

பெரியவரின் அந்து பத்து கட்டளைகளை வரிசையாகப் பார்ப்போம்.

1.காலையில் எழுந்தவுடன் இரண்டு நிமிடங்களாவது கடவுளை மனதில் நினைத்து பிரார்த்தனை செய்

2.அன்றைய தினம் நல்ல தினமாக இருக்க கடவுளை வேண்டிக்கொள்

3.அடுத்து புண்ணிய நதிகள், கோமாதா, சிரஞ்ஜீவிகள், சப்த கன்னியர்கள் முதலியவர்களை குறைந்தபட்சம் ஒரு நிமிடமாவது நினை,

4.வாரத்தில் ஒரு நாளாவது அருகிலுள்ள திருக்கோயிலுக்குச் சென்று கடவுளை வழிபடு

5.உன் பக்கத்தில் வாழ்பவர்களையும், மற்றவர்களையும் நேசி.

6. சாப்பிடும் முன் மிருகங்களுக்கோ, பட்சிகளுக்கோ ஆகாரம் அளித்துவிட்டு பிறகு சாப்பிடு

7.அன்றாடம் குறைந்தபட்சம் சக்திக்கேற்றபடி தர்மம் செய்

8.நெற்றியில் தவறாது திலகம் வைத்துக் கொள்

9.உறங்கச் செல்லுமுன் அன்றைய நாளில் நீ செய்த நல்லது கெட்டதுகளை எண்ணிப் பார்

10.ஆண்டவன் நாமத்தை 108 முறை உச்சரித்துவிட்டு பின்பு உறங்கு.

இதுதான் அந்த பத்து கட்டளைகள். இதில் எதை நம்மால் பின்பற்ற முடியாது? இதில் எதைப் பின்பற்ற பிறர் தயவை நாம் எதிர்பார்க்க வேண்டும்? மிக மிகச் சுலபமான விஷயம் இது என்றால், இது போதுமா? இந்த பத்தைச் செய்தபடி எதை வேண்டுமானால் செய்து கொண்டு வாழலாமா என்று இடக்காக கேட்கக் கூடாது. இந்த பத்தின் வழி வாழப் பழகிவிட்டால் இடக்கு முடக்கான சிந்தனைகளே முதலில் தோன்றாது. வாழ்க்கை நிறைந்த மன நிம்மதியோடு ஒரு தெளிவுக்கு மாறுவதையும் உணரலாம். இதை வைராக்கியமாகப் பின்பற்ற வேண்டும். அதுதான் இதில் முக்கியம்.

இந்த பத்து கட்டளைகளில் பத்தாவது கட்டளையாக ஆண்டவன் நாமத்தை 108 முறை உச்சரித்துவிட்டு என்று இருக்கிறதல்லவா? அந்த ஆண்டவன் நாமம் எது என்று சிலருக்கு கேட்கத் தோன்றும். ஏன் என்றால் இஷ்டதெய்வம் என்று ஒன்று, குலதெய்வம் என்று ஒன்று, இதுபோக ஒவ்வொருவரும் ‘ரொம்ப சக்தி வாய்ந்த சுவாமி’ என்று அவரவர் உணர்வு நிலைக்கேற்ப சுட்டிக் காட்டும் தெய்வங்கள் என்று பல தெய்வங்கள் நம்மிடையே இருக்கிறதே! இதில் எதை தியானிப்பது என்று கேட்கலாம். இம்மட்டில் அவரவர் மனமும் எந்த தெய்வத்திடம் போய் நிற்கிறதோ அதுதான் அவர்கள் தியானிக்க ஏற்ற நாமமாகும். ஆனாலும், அனைவருக்கும் ஏற்ற ஒரு நாமமும் உள்ளது.

கோவிந்த நாமம்தான் அது! ‘கோவிந்தா… கோவிந்தா… கோவிந்தா…’ – இதுதான் பெரியவருக்கே தியான மந்திரம்!

கோவிந்த நாமாவுக்குள்ள அனேக சிறப்புகளில் இன்னொரு சிறப்பு, ஆதிசங்கர பகவத்பாதாளுக்கும் மிகப் பிடித்த நாமம் இதுதான்.

‘பஜகோவிந்தம்’ என்பது, அவருடைய சிவானந்த லஹரி, சௌந்தர்ய லஹரி அல்லது ஷட்பதீ ஸ்தோத்திரம் போன்று ஒரு ஸ்வாமியை ஸ்தோத்தரிக்கும் பிரார்த்தனை இல்லை. வைஷ்ணவர், சைவர் என்று பேதமில்லாதபடி சகல ஜனங்களுக்குமானது இது.

இப்படிப்பட்ட க்ரந்தத்தில் ஆசார்யாள் ‘பரமாத் மாவை பஜியுங்கள்’ என்று பொதுவாகச் சொல்லாமல், ‘கோவிந்தனைப் பஜியுங்கள்’ என்று சொல்கிறாரென்றால், அந்தப் பெயர் எத்தனை உயர்ந்ததாக, அவருக்குப் பிடித்தமானதாக இருக்க வேண்டும்?

கோவிந்த நாமத்துக்கு இன்னொரு விசேஷமும் இருக்கிறது. மகாவிஷ்ணுவுக்கு மிக ப்ரீதியான நாமாக்கள் பன்னிரண்டு. அதில் முதல் மூன்றில் ஒரு முறையாகவும், அதாவது ‘அச்சுத, அனந்த, கோவிந்த’ என்பதில் ஒரு முறையும், பின் கேசவ, நாராயண, மாதவ, கோவிந்த, விஷ்ணு, மதுசூதன, த்ரிவிக்ரம, வாமன, ஸ்ரீதர, ரிஷிகேச, பத்மநாப, தாமோதர என்பதில் ஒரு தடவையும் என்று இரு தடவை இடம்பெறும் ஒரே நாமம் கோவிந்தாதான்! அதனாலேயே இதை ஆசார்யாளும் ‘பஜகோவிந்தம் பஜ கோவிந்தம் பஜகோவிந்தம்’ என்று மூன்று முறை சொல்லி சந்தோஷப்பட்டிருக்கிறார்.

ஒன்றை மூன்று முறை சொல்வது என்பது சத்யப் பிரமாணத்திற்காக என்றால், கோவிந்த நாமமே சத்யப் பிரமாணம் என்றாகிறது. இந்த சத்யப் பிரமாண நாமாவை பகவத் பாதாள் மட்டுமல்ல; ஆண்டாளும் தன் திருப்பாவையில் மூன்று இடங்களில் அழைத்து இந்தப் பிரமாண கதியை உறுதி செய்கிறாள்.

‘கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா’ என்று ஒரு இடத்திலும், ‘குறைவொன்றுமில்லாத கோவிந்தா’ என்று இன்னொரு இடத்திலும், ‘இற்றைப் பறை கொள்வான் அன்று காண் கோவிந்தா’ என்று இன்னொரு இடத்திலும் குறிப்பிடுகிறாள்.”

இப்படி கோவிந்த நாமச் சிறப்பை பெரியவர் தகுந்த உதாரணங்களோடு கூறிடும் போதுதான், நமக்கும் அதன் பிரமாண சக்தி புரிய வருகிறது. அதே சமயம் இன்று இத்தனை உயர்ந்த கோவிந்த நாமத்தை, சிலர் மிக மலிவாக ஒருவர் தம்மை ஏமாற்றிவிட்டாலோ இல்லை பெரும் ஏமாற்றங்கள் ஏற்படும்போதோ ‘எல்லாம் போச்சு… கோவிந்தா’ எனச் சொல்வதைப் பார்க்கிறோம். யார் முதலில் இதைச் சொல்லி பின் இது எப்படிப் பரவியது என்றும் எண்ணிப் பார்க்க வேண்டியுள்ளது.

பெரும் ஏமாற்றம் ஏற்பட்ட நிலையில், தன் மனதைத் தட்டி எழுப்பி தான் நிமிர்ந்து நின்றிட கோவிந்த நாமா மட்டுமே உதவும் என்று நம்பியே அவர் ‘கோவிந்தா கோவிந்தா’ என்றிருக்க வேண்டும். ஆனால், அவர் சொன்ன அடிப்படை புரியாமல், ஏமாந்தவர்கள் ஏமாற்றியவர்களைப் பார்த்துச் சொல்லும் ஒன்றாக இது காலப்போக்கில் மாறி விட்டது.

===================================================================

வேலைக்கு போகிறவர்கள் (குறிப்பாக ஸ்திரீகள்) ஜெபிக்க சுலபமான மந்திரம்!

அலுவலகத்தில் வேலை பார்க்கும் பெண்மணி ஒருவர், பெரியவாள் தரிசனத்துக்கு வந்தார். இந்நாளைய பெண்மணியாக இருந்தாலும், உள்ளுர பக்தி இருந்தது; சமய சடங்குகளையும் மந்திர தோத்திரங்களையும் முறையாக பெற்றுக்கொண்டு அனுஷ்டிக்க முடியவில்லையே என்ற தாபம் இருந்தது.

மனமுருக பெரியவாளிடம் பிராத்தித்து கொண்டார்: “நான் வேலைக்கு போகிறவள். எனக்கு ஓய்வு நேரம் குறைவு. அத்துடன், மடி, ஆசாரம் என்றெல்லாம் கண்டிப்புடன் இருக்க முடியாது. நீளமான ஸ்தோத்திரங்கள், பாராயணம் செய்யவும் இயலாது. அதனால், எதாவது சுலபமான மந்திர ஜெபம் செய்யவேண்டும் என்ற ஆசை இருக்கிறது. பெரியவாள் அனுக்ரகம் பண்ணனும்.”

உடனே, கருணாமூர்த்தியான பெரியவாள், அந்த பெண்மணியின் உள்ளுணர்வையும் சிரத்தையையும் புரிந்துக்கொண்டு , “சொல்லு…” என்றார்கள்.

‘ஹரிநாராயண துரிதநிவாரண பரமானந்த
சதாசிவ சங்கர’

உபதேசம் பெற்ற அம்மங்கையர்கரசி, மனமகிழ்ந்து, பெரியவாளுக்கு நமஸ்காரம் செய்தார். ‘ஆசார அனுஷ்டானமில்லாத உனக்கெல்லாம் மந்திர உபதேசம் என்ன வேண்டியிருக்கு?” என்ற கடிய சொற்களை எதிர்பார்த்து வந்தவருக்கு, கனிவான உபதேசத்தால் நெகிழ்ந்தே போனார்.

ஆனால், இந்த மந்திரம் அந்த பெண்மணிக்கு மட்டும் அளிக்கப்பட்ட உபதேசம் அல்ல; நம் அத்தனை பேருக்கும்தான்!

(நன்றி : balhanuman.wordpress.com, தீபம் மாத இதழ், periva.proboards.com)

==================================================================

[END]

6 thoughts on “நிம்மதியான நல்வாழ்வுக்கு மஹா பெரியவரின் கட்டளைகள் பத்து!

  1. அன்பு சகோதரா,
    மிக்க நன்றி சகோதரா…மிக நல்ல பதிவு….மஹா பெரியவாவின் குணத்தைப் போன்றே அவரது வழி முறைகளும் மிக எளியது….இந்த அறிய தகவலைப் பகிர்ந்து கொண்ட உங்களுக்கு கோடானு கோடி புண்ணியம் கிடைக்கட்டும்….மஹா பெரியவாவின் சித்தி திருநாளான இன்று இந்த அறிய விஷயம் கிடைத்தது எங்கள் பாக்கியம் தான்…வாழ்க வளமுடன் வளர்க நலமுடன்… _/|\_

  2. dear sundarji

    தங்கள் பதிவு அருமை. மகா பெரியவரின் பத்து கட்டளைகளை follow பண்ண முயற்சிக்கிறேன்.

    வேலைக்கு செல்லும் பென்களுக்காண சுலோகம் எங்களை போன்றவர்களுக்கு useful ஆகா இருக்கும். my ananth koti நமஸ்கார் to ஸ்ரீ மகா பெரியவர்.

    ஸ்ரீ மகா பெரியவரின் ஆசியுடன் ரைட் மந்த்ரா தளம் வளர வாழ்த்துக்கள்.

    நன்றி
    உமா

  3. ஒரு நல்ல விஷயம் கடை பிடித்தாலும் பத்து நல்ல விஷயம் தானே வந்து சேரும்……ஒரு கெட்ட விஷயத்தை கைவிட்டாலும் மீதி ஒன்பது கெட்ட விஷயமும் தானே நம்ம விட்டு போய்டும்னு சொல்லுவாங்க …………….பெரியவா சொன்ன ஒரு விஷயத்த இன்னைல இருந்து உறுதியா ………. இவன் எடுதுக்கிறான்………. உறங்குமுன்பு 108 முறை ராம நாமம் ஜபிச்சிட்டு தூங்க பெரியவா கருணை பண்ண வேண்டுகிறோம்.

  4. ‘ஹரிநாராயண துரிதநிவாரண பரமானந்த
    சதாசிவ சங்கர’

    ‘ஹரிநாராயண துரிதநிவாரண பரமானந்த
    சதாசிவ சங்கர’

    ‘ஹரிநாராயண துரிதநிவாரண பரமானந்த
    சதாசிவ சங்கர’

  5. சுந்தர் அய்யா.
    நமஸ்காரம்
    நீங்கள் செய்து வரும் இந்த தொண்டிற்கு என்று என்றும் என் வாழ்த்துகள்.
    இதே போல் மனித சமுதாயத்திற்கு அருதொண்டர்டும் திரு ஹீலெர் பாஸ்கர் அவர்களை பற்றியும் ஒரு தொகுப்பு எழுதினால் நிறைய பேருக்கு பேருதவியாக இருக்கும் என்று நினைக்கிறன்.அவர் மருந்தில்லா மருத்துவம் மூலம் அனைவரது வாழ்வில் ஒளி ஏற்றுகிறார்.அவருடைய வெப் ஐ டி யை கீழே கொடுத்துள்ளேன் தயவு கூர்ந்து அதை பற்றியும் நம் வலை தலத்தில் வெளியிட வேண்டுகிறேன்.அனடோமிக் தெரபி

    நன்றி
    http://www.anatomictherapy.org

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *