Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Friday, April 19, 2024
Please specify the group
Home > All in One > “பழிக்கு பழி வாங்கணும் சாமி…”

“பழிக்கு பழி வாங்கணும் சாமி…”

print
“நினைத்துப் பார்த்தால் நெஞ்சு கொதிக்கிறது சாமீ. எத்தனை பேர் என்னை கேலி செய்திருக்கிறார்கள்? எத்தனை பேர் வசை பாடியிருக்கிறார்கள்? எத்தனை பேர் முதுகில் குத்தியிருக்கிறார்கள்? அவர்கள் ஒவ்வொருவரையும் பழி வாங்காமல் ஓயமாட்டேன்” என்று என்று அந்த சாமியார் முன் வந்து பொருமினான் சீடன்.

“ஏதாவது மந்திரம் கிந்திரம் இருந்தா சொல்லுங்க சாமி” என்றான்.

சாமி யோசித்தார்.

“சரி… ஒன்று செய்யலாம்” என்று கோணிப்பையை சீடன் கையில் கொடுத்தார் சாமி.

“நீ யாரையெல்லாம் பழி வாங்கவேண்டும் என நினைக்கிறாயோ, அவர்கள் பெயரை ஒரு உருளைக்கிழங்கில் செதுக்கி இந்த கோணிப்பையில் போட்டுக்கொண்டே வா” என்றார்.

“ஆனால் இரண்டு நிபந்தனைகள்” என்று தொடர்ந்தார்…. “ஒரு உருளைக்கிழங்கில் இரண்டு மூன்று பெயர்களை செடுக்கக்கூடாது. ஒவ்வொரு பெயரையும் தனித்தனியாய் செதுக்க வேண்டும்”.

“சரி… அப்புறம்?”

“நீ எங்கெல்லாம் போகிறாயோ அங்கெல்லாம் இந்த கோணியை தூக்கி கொண்டு போகவேண்டும்”

“ப்பூ, இவ்வளவுதானா? நான் என்னமோ பெரிசா ஏதோ சொல்லப்போறீங்கன்னு நினைச்சேன்” என்று சீடன் எழுந்து போனான்.

அன்றிலிருந்து யார் யார் மீதெல்லாம் ஆத்திரமோ யார் யாரை பழிவாங்க வேண்டும் என்று நினைப்பு வருகிறதோ, அப்போதெல்லாம் ஒரு உருளைக்கிழங்கை எடுத்து பெயரை செதுக்கி கோணிப்பையில் போட்டுக்கொண்டே வந்தான்.

ஆரம்பத்தில் கோணியை தூக்கி கொண்டு திரிவது ஒன்று பெரிய சிரமமாய் தெரியவில்லை. ஆனால் நாளாக நாளாக அது சுமையாக தோன்றியது. இன்னும் கொஞ்சநாள் போனதும் தூக்குவதே சிரமமாகிவிட்டது.

இதனிடையே சில நாட்களுக்கு பின் அந்த உரித்த உருளைக்கிழங்குகளிலிருந்து வாசனை வர ஆரம்பித்தது. நாள் போக போக அது சகிக்க முடியாத அழுகிய நாற்றமாக வீச ஆரம்பித்தது. அவன் மூட்டையை தூக்கி கொண்டு வந்தாலே, எல்லோரும் – நெருங்கிய நண்பர்கள், கட்டிய மனைவி, பெற்ற பிள்ளைகள் என எல்லோரும் ஓட ஆரம்பித்தார்கள். அவனிடம் பேசவோ, அவன் சொல்வதை யாரும் காதுகொடுத்து கேட்கவோ கூட தயாராக இல்லை.

சீடன் மறுபடியும் சாமியிடம் வந்தான்.

“என்ன சாமி இப்படிப் பண்ணிட்டீங்களே..?” என்றார்.

“என்ன புரிந்தது?” என்றார் சாமி.

“பழி வாங்கும் குரோத உணர்வை செகரித்துக்கொண்டே வந்தால் அது சுமையாகிவிடும். துர்நாற்றம் வீசும். யாரும் பக்கத்தில் வரமாட்டார்கள். அதை எனக்கு விலகத்தானே இப்படி செய்தீர்கள்?” என்றான் சீடன்.

“ம்…  சரி. ஆனால் நீ இன்னும் முழுக்கிணற்றை தாண்டவில்லை” என்றார் சாமி.

“புரியலையே…?”

“உன் பிரச்னை சுமை கூடி போச்சே என்பதும் நாற்றமடிக்கிறதே என்பதும் தான் என நீ நினைக்கிறாய், இல்லையா?”

“ஆமாம்”

“சரி… அந்த உருளைக்கிழங்குகளை அவ்வபோது கொட்டி அந்த கோணியை காலி செய்து கொண்டே வந்தால் இந்த சுமைப் பிரச்னை, நாற்றப் பிரச்னை தீர்ந்துவிடும் என்று நினைக்கிறாய் இல்லையா?”

“ஆமாம்.”

“மகனே, பிரச்னை உருளைக்கிழங்கில்லை. கோணிப்பை. கோணி இருப்பதால் தானே அதில் உருளைகிழங்கை சேர்க்க ஆரம்பித்தாய்? எனவே, உனக்கு சுமையில்லாமல் இருக்க வேண்டுமானால், அந்த சுமை நாற்றமெடுக்காமல் இருக்க வேண்டுமானால் கோணியை முதலில் தூக்கி எறி. உனக்கு துன்பம் இழைத்தவர்களை இறைவன் பார்த்துக்கொள்வான். நீ உன் வேலையில் கவனம் செலுத்தி உன் கடமையை சரியாக செய்து வா.”

கைவிடவேண்டியது பழி வாங்கும் நினைப்பை மட்டுமல்ல, பழி வாங்கும் மனதையும் கூட என அந்தச் சீடன் புரிந்து கொள்ளச் சற்று நேரமாகியது.

[நன்றி : புதிய தலைமுறை அக்டோபர் 2009]

[Illustration Copyright : Rightmantra.com]

———————————————————————————
நிஜத்திலும் முன்பு இதே போன்று உருளைக்கிழங்கு மூட்டையோடு அலைந்தவன் நான். அப்போது என்னை பார்த்து பரிதாப்பட்ட நண்பர் ஒருவர், “புதிய தலைமுறையில் இந்த வாரம் வந்திருக்கும் கதை உங்களுக்காகத் தான். தயவு செய்து அதை படித்து நடைமுறையில் பின்பற்றுங்கள்!” என்று கேட்டுக்கொண்டார்.

கதையை படித்த பின்பு தான், நான் எத்துனை பெரிய தவறை செய்துகொண்டிருக்கிறேன் என்று புரிந்தது. அன்று தூக்கி எறிந்த மூட்டை தான். அதற்கு பிறகு தீயவைகளை பற்றி யோசிக்க கூட நேரமில்லாது, பாசிட்டிவ்வான விஷயங்களில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறேன்.

‘மிகுதியான் மிக்கவை செய்தாரைத் தாந்தம்
தகுதியான் வென்று விடல்’. குறள் 158

பொருள் : ஆணவத்தினால் தங்களுக்கு தீமை செய்தவர்களை தங்கள் பொறுமையால் வெற்றி கொள்ளவேண்டும்.

என்னைப் பொறுத்தவரை, நான் ஒரு தவறு செய்தால் – ஒரு தவறான முடிவை எடுத்தால் – அதை சுட்டிக்காட்டி என்னை நல்வழிபடுத்தக்கூடியவர்கள் தான் என் நண்பர்களாக இருக்கிறார்கள். நான் செய்யும் செயல்களுக்கெல்லாம் ‘ஆமாம் சாமி’ போட்டு, என்னை குப்புறத் தள்ளுபவர்கள் அல்ல. அந்த வகையில் நான் அதிர்ஷ்டசாலி. இறைவனுக்கு தான் அதற்கு நன்றி சொல்லவேண்டும்.

———————————————————————————

[END]

5 thoughts on ““பழிக்கு பழி வாங்கணும் சாமி…”

  1. காமம், குரோதம், பழிவாங்கும் எண்ணம் இவை மனிதனின் மனதில் இருக்கும் வரை அதுவே அவனுக்கு பெரிய வியாதி ஆகிவிடுகிறது. தற்போது கீழ்க்கண்ட பழமொழி நினைவில் வருகிறது:

    Anger is an Acid that can do more harm to the vessel in which it is stored than to anything on which it is poured

    அன்பே சிவம்

  2. எல்லா செயல்களுக்கும் அதற்கு சமமான மற்றும் எதிர் செயல்கள் உண்டு(Newton’s third law). So leave ur negative thoughts.Trust in GOD. Be happy

  3. தவறு செய்தவர்களை தண்டிக்காமல் அவர்களுக்கு நல்லன செய்து அவர்கள் தான் செய்த தவறை வருந்த வைப்பதே இன்றிலிருந்து நான் எடுத்த சபதம்.

    //இன்னா செய்தாரை ஒருத்தல் அவர் நாண நன்னயம் செய்து விடல்//

    நன்றி
    உமா வெங்கட்

Leave a Reply to manoharan Cancel reply

Your email address will not be published. Required fields are marked *