Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Tuesday, March 19, 2024
Please specify the group
Home > Featured > பணிக்கு சென்ற இடத்தில் பஞ்சாமிர்த அபிஷேகம் – யோக தக்ஷிணாமூர்த்தியின் கருணை!

பணிக்கு சென்ற இடத்தில் பஞ்சாமிர்த அபிஷேகம் – யோக தக்ஷிணாமூர்த்தியின் கருணை!

print
காஞ்சிபுரம் மாவட்டம் திருஇலம்பையங்கோட்டூரில் சென்ற வாரம் நம் தளம் சார்பாக உழவாரப்பணி நடைபெற்றது நினைவிருக்கலாம். தக்ஷிணாமூர்த்தி சன்னதி, நால்வர் சன்னதி மற்றும் சூரியன் சந்திரன் சன்னதிகளின் கூரைக்கு வர்ணம் பூசும் கைங்கரியம் நம் தளத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டு செவ்வனே செய்து முடிக்கப்பட்டது.

தவிர மின்விளக்குகள், சிமெண்ட்டினால் ஆன கோவிலின் திசைக்காட்டி பெயர்ப்பலகைகள் (பிரதான இடங்களில் நிறுவுவதற்கு) ஆகியவையும் செய்து முடிக்கப்பட்டுவிட்டது.

இப்போதைக்கு, ஆவலுடன் காத்திருப்பவர்களுக்காக இது ஒரு சிறிய அப்டேட்.
======================================================

தக்ஷிணாமூர்த்தி சன்னதி – வர்ணம் பூசப்படுவதற்கு முன்பு
வர்ணம் பூசிய பின்பு

======================================================

திருஇலம்பையங்கோட்டூர், யோக தக்ஷிணாமூர்த்தி எழுந்தருளியுள்ள சிறந்த குரு பரிகாரத் தலம் என்பதால் பணியை துவக்கும் முன், குருபகவானுக்கு அபிஷேகம் மற்றும் விசேஷ அர்ச்சனை செய்துவிட்டு பிறகு உழவாரப்பணியை துவக்கினால் நன்றாக இருக்கும் என்றுநமக்கு தோன்றியது.

(இந்த தலத்தில் எழுந்தருளியுள்ள தக்ஷிணாமூர்த்தி தனது வலது கையை மார்புக்கு மேலே வைத்திருப்பார். இது போன்றதொரு அமைப்பு வேறு எந்த கோவிலிலும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.)

குருக்களிடம் பேசியபோது, அபிஷேகத்திற்க்குரிய பாலை தாம் ஏற்பாடு செய்வதாகவும், வெற்றிலை பாக்கு, பூ மற்றும் பழங்கள் உள்ளிட்ட மங்கலப் பொருட்களை மட்டும் நாம் வாங்கி வந்தால் போதும் என்றும் கூறினார்.

உழவாரப்பணிக்கு முந்தைய தினம் எப்போதும் விடுமுறை எடுத்துவிடுவேன். அப்போது தான் அனைத்து ஏற்பாடுகளையும் செய்யமுடியும். ஆனால் இந்த முறை எனக்கு விடுப்பு கிடைக்கவில்லை. எனவே அலுவலகத்திலிருந்த படி உழவாரப்பணி தொடர்பான ஏற்பாடுகளை செய்ய முடியவில்லை. எனவே சனிக்கிழமை நேரம் செல்ல செல்ல, டென்ஷன் அதிகமானது.

அர்ச்சனைக்குரிய பொருட்கள் எதுவும் வாங்காத நிலையில் நான் அலுவலகத்திலிருந்து கிளம்பும்போதே இரவு 8 மணியாகிவிட்டது. ஆகையால் வடபழனி கோவிலுக்கு அருகில் குடியிருக்கும் நம் வாசகி சுபாஷினி அம்மா அவர்களை அலைபேசியில் அழைத்து  நாளை வரும்போது அர்ச்சனைக்குரிய பொருட்களை மட்டும் வாங்கி வர முடியுமா என்று கேட்டபோது அவர்களும் மகிழ்ச்சியுடன் ஒப்புக்கொண்டார்கள்.

ஒரு பெரிய டென்ஷன் குறைந்தது என்று நிம்மதி பெருமூச்சு விட்டேன்.

பஞ்சாமிர்தம் செய்ய பழங்கள் நறுக்கப்படுகிறது

உழவாரப்பணியில் எப்படியும் 15 முதல் 20 நபர்கள் வரை கலந்துகொள்வார்கள் என்பதால் வழக்கமாக கோவிலுக்கு அர்ச்சனை  செய்ய செல்லும்போது வாங்கும் இரண்டு பழங்கள் நிச்சயம் போதாது என்று தோன்றியது. பழங்கள் சற்று தாரளமாக இருந்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றியது. (அர்ச்சனை முடிவில் அனைவருக்கும் விபூதி குங்குமத்துடன் மேற்படி பழங்களில் இருந்து ஆளுக்கு ஒரு பழம் தரலாம் என்பது நம் திட்டம்.) எனவே அன்னாசி, ஆப்பிள், மாதுளை, கற்பூரவல்லி, உள்ளிட்ட பழங்களை சற்று தாரளமாக வாங்கிக்கொண்டேன்.

அனைத்து ஏற்பாடுகளும் ஓரளவு செய்து முடிக்கப்பட்ட நிலையில், மறுநாள் காலை வழக்கம்போல அனைவரும் 6 மணிக்கு வேனில் புறப்பட்டோம். ஒரு வழியாக இடையில் சிற்றுண்டியை முடித்துவிட்டு இலம்பையங்கோட்டுரை அடையும்போது மணி 9 am ஆகிவிட்டது. முதல் வேலையாக மூலவர் தெய்வநாயகேஸ்வரரையும் அம்பாள், தாயினும் நல்லாளையும் தரிசித்தோம்.

பிறகு தக்ஷிணாமூர்த்தி சன்னதியில் பூஜைக்கு தயாரானோம். ஒரு பெரிய மூங்கில் தட்டில் நாம் வாங்கி வந்த பழங்களை எல்லாம் அடுக்க, அதை பார்த்த அர்ச்சகர், “இவ்ளோ பழம் வாங்கிட்டு வந்திருக்கீங்களே… பேசாம பழங்களை நறுக்கி பஞ்சாமிர்தம் பண்ணிடுங்களேன்….” என்றார்.

“பஞ்சாமிர்தமா…??? அதுக்கு தேனெல்லாம் வேணுமே?” என்றேன்.

“தேன்… தானே? நான் வாங்கிட்டு வந்திருக்கேன்” என்று பெங்களூரிலிருந்து வந்திருந்த நண்பர் குமரன் கூற, எனக்கு ஒரே இன்ப அதிர்ச்சி.

சொன்னவர் உடனே தேன், சர்க்கரை உள்ளிட்டவைகளை தான் கொண்டு வந்த பையிலிருந்து எடுத்து வைத்தார்.

“என்ன சார்… ஏதோ பஞ்சாமிர்தம் பண்ண தயாரா வந்த மாதிரி தேன், சர்க்கரை எல்லாம் கொண்டு வந்திருக்கீங்க…?” என்றேன்.

“சுவாமிக்கு முடிஞ்சா அபிஷேகம் பண்ணிடலாம்னு நான் பெங்களூர்லயே எல்லாத்தையும் வாங்கிட்டு வந்துட்டேன்….” என்று சொன்னவர், அடுத்து இளநீர், ராமேஸ்வரம் தீர்த்தம், கங்கை தீர்த்தம், பன்னீர், விபூதி, மஞ்சள், சந்தனம் உள்ளிட்ட அபிஷேக பொருட்களை எடுத்து அடுக்க ஆரம்பிக்க எனக்கு இன்னும் அதிர்ச்சி.

ஜஸ்ட் ஒரு சர்ப்ரைஸாக இருக்கட்டும் என்று தக்ஷிணாமூர்த்திக்கு நாம் பாலாபிஷேகம் மற்றும் சிறப்பு அர்ச்சனை ஏற்பாடு செய்திருப்பதை நண்பர்கள் எவரிடமும் நான் கடைசி வரை சொல்லவில்லை. சொல்லப்போனால் பாலாபிஷேகம் செய்யலாம் என்பதை கூட முந்தைய தினம் மாலை தான் நான் முடிவே செய்திருந்தேன். (உடனே அர்ச்சகரிடம் அலைபேசியில் தொடர்பு கொண்டு அபிஷேகத்திற்கு தயார் செய்யும்படி கேட்டுக்கொண்டேன்.)

பஞ்சாமிர்த பிரசாதம் விநியோகிக்கப்படுகிறது

இந்நிலையில் அர்ச்சகர் நாம் கொண்டு சென்ற பழங்களை பார்த்து “பஞ்சாமிர்தம் செய்துவிடுங்களேன்” என்று கூற, நண்பர் தேன் பாட்டிலை கொடுக்க, அப்போதும் எனக்கு தயக்கம்… “பஞ்சாமிர்தம் செய்வது என்ன சாதாரண வேலையா? அதுவும் இப்போதே…?” என்றேன்.

ஆனால் நம் மகளிரணியினர், “பத்தே நிமிஷம் டயம் கொண்டுங்க… உடனே பஞ்சாமிர்தம் தயார் செய்துவிடுகிறோம்” என்று கூறி, களத்தில் இறங்கிவிட்டனர்.

மகளிர் குழுவினர் அனைவரும் சேர்ந்து பழங்களை நறுக்கி ஒரு பெரிய பேசனில் போட, பின்னர் நண்பர் குமரன் வாங்கிவந்திருந்த சர்க்கரை மற்றும் தேனை அதில் கலக்க…. சொன்னது போல பத்தே நிமிடத்தில் அற்புதமான பஞ்சாமிர்தம் தயார்.

தொடர்ந்து தக்ஷிணாமூர்த்திக்கு அபிஷேகம் தொடங்கியது.

பால், சந்தனம், மஞ்சள், விபூதி, பன்னீர், இளநீர், கங்கை மற்றும் ராமேஸ்வர புண்ணிய தீர்த்தங்கள், இறுதியில் பஞ்சாமிர்தம் என தக்ஷிணாமூர்த்திக்கு அன்று அவர் மேனி குளிர அபிஷேகம்.

அபிஷேகத்தை பார்த்த எங்கள் அனைவருக்கும் ஒரு கணம் நெகிழ்ச்சியில் கண்கள் கலங்கிவிட்டது. எப்பேற்ப்பட்ட பாக்கியம்…!

முந்தைய தினம் (சனிக்கிழமை 24/08/2013) அன்று தான் மேற்படி தக்ஷிணாமூர்த்தி சன்னதிக்கு வர்ணம் பூசும் பணி நிறைவுபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. (3 ஓவியர்கள் மற்றும் பெயிண்டர்கள் நான்கு நாட்கள் கோவிலிலேயே தங்கியிருந்து இந்த பணியை மேற்கொண்டார்கள்.)

எப்படியோ தனது சன்னதிக்கு வர்ணம் பூசும் பொன்னான வாய்ப்பை நமக்களித்ததோடு, சன்னதி புதுப் பொலிவு பெற்றவுடன் உடனே நம்மை பஞ்சாமிர்த அபிஷேகமும் செய்யவைத்து தனது ஆசையை ஞானகுரு நிறைவேற்றிக்கொண்டார்.

தனக்கு பஞ்சாமிர்த அபிஷேகம் வேண்டும் என்று பகவான் விரும்பியதாலேயே அது சாத்தியமாயிற்று.

பஞ்சாமிர்த அபிஷேகம் செய்வது குறித்த எந்த வித யோசனையும் இல்லாமல் நாம் புறப்பட்டு வந்தபோதும் அது சாத்தியப்பட்டது என்றால் அது முழுக்க முழுக்க அவன் திருவுள்ளமேயன்றி வேறொன்றுமில்லை.

அவன் நினைத்து ஒன்று நடக்காமல் இருக்குமா?

சற்று யோசித்து பாருங்கள்…. முந்தைய தினம் இரவு திடீரென்று எனக்கு ஏராளமான பழங்கள் வாங்கவேண்டும் எனக்கு தோன்றியது ஏன் ? (அதுவும் மாதுளை, ஆப்பிள், அன்னாசி போன்றவைகளை இதற்க்கு முன்பு நான் கோவிலுக்கு செல்லும்போது வாங்கியதேயில்லை!)

உழவாரப்பணிக்கு வரும் நண்பர் குமரன், (அதுவும் பெங்களூரில் இருந்து) அபிஷேக பொருட்களோடு சரியாக தேன், சர்க்கரை இவையெல்லாம் கூட கொண்டு வந்தது எப்படி?

நாடகத்தை நடத்த முடிவு செய்யும் இறைவனுக்கு அதற்கு ஏற்றபடி பாத்திரங்களை அதற்கு தயார் செய்ய தெரியாதா என்ன?

ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தி காயத்ரி

ஓம் தக்ஷிணாமூர்த்தியைச வித்மஹே
தியான ஹஸ்தாய தீமஹி
தந்நோ தீச ப்ரசோதயாத்

==============================================================
திருஇலம்பையங்கோட்டூரில் நடைபெற்ற உழவாரப்பணி குறித்து நிறைய எழுத வேண்டியுள்ளது. இந்த கோவிலில் இதுவரை இல்லாத அளவு எங்களுக்கு சற்று கடுமையான பணிகள் இருந்தன. (உழாவரப்பணியை பொருத்தவரை எவ்வளுக்கெவ்வளவு வேலை அதிகமோ அவ்வளவுக்கவ்வளவு சந்தோஷம் கிடைக்கும். அது தான் உழவாரப்பணியின் மகத்துவம்!!)

இம்முறை உழவாரப்பணி மற்றும் இதர செலவினங்களுக்கு பணியில் பங்கேற்ற நண்பர்கள் பெருமளவு உதவினாலும் பெயிண்டிங் வேலையை ஏற்றுக்கொண்டிருந்தபடியால் இம்முறை பட்ஜெட் மிக அதிகமாகி கடைசியில் பற்றாக்குறையானது தனிக்கதை! (எல்லாமே ஸ்மூத்தா போய்கிட்டுருந்தா எப்படி?)

பேரம்பாக்கம் நரசிம்மர் கோவிலில் நடைபெற்ற நமது முந்தைய உழவாரப்பணி குறித்து நேரம் கிடைக்கும்போதெல்லாம் எழுது வருகிறேன். அதை பதிவிட்ட பிறகு திருஇலம்பையங்கோட்டூரில் நடைபெற்ற பணி குறித்த முழுமையான பதிவு இடம்பெறும். சற்று பொறுத்திருக்கவும் ப்ளீஸ்..!

==============================================================

நால்வர் சன்னதி – வர்ணம் பூசப்படுவதற்கு முன்பு
நால்வர் சன்னதி – வர்ணம் பூசிய பின்பு

======================================================

சூரியன் சன்னதி – வர்ணம் பூசப்படுவதற்கு முன்பு
சூரியன் சன்னதி – வர்ணம் பூசிய பின்பு

======================================================

சிமெண்ட் பெயர்ப்பலகைகள் செய்யப்பட்டு தயார் நிலையில் உள்ளது

 

[END]

15 thoughts on “பணிக்கு சென்ற இடத்தில் பஞ்சாமிர்த அபிஷேகம் – யோக தக்ஷிணாமூர்த்தியின் கருணை!

  1. உழவார பணிக்கு தாங்களுடன் வந்து இறைவனின் அருளை முழுமையாகப் பெற்றோம்!..நன்றிகள் ..

    நேற்று என்ன சாப்பாடு சாப்பிட்டேன் என்பது கூட என்னால் நினைவுகூர முடியவில்லை ஆனால் நீங்கள் ஒருமாதத்துக்கு முன் நடந்தது கூட கேமராவில் படம் பிடித்ததுபோல் ஒரு நிகழ்வு விடாமல் கூறமுடிகிறது ..your talent is very great but your looking is very simple..

    அன்புடன் சந்திரசேகரன் ..

  2. வணக்கம் சுந்தர் சார்

    இனிப்பான சுவையான பதிவு சார்

    திவ்ய தர்சிணம் சார்

    நன்றி

  3. இதை படிக்கும் போது பஞ்சாமிர்தம் கிடைச்சமாதிரி இருக்கு…!

    குரு திருவடி சரணம் …….!

    நன்றி சுந்தர் சார் …!

    -Uday

  4. வாழ்க வளர்க உங்கள் பணி……
    வாழ்த்துகள். வளர்க உங்கள் தொண்டு.
    வாழ்க வையகம் வாழ்க நலமுடன்
    வாழ்க அறமுடன்..வளர்க அருளுடன்..

  5. சுந்தர் சார்,

    இந்த பதிவை படிக்கும் போது பஞ்சாமிர்தம் சாபிட்டது போல் உள்ளது. மிகவும் பெருமைபட வேண்டிய விஷயம். எனக்கு எப்பொழுது சந்தர்ப்பம் கிடைக்கும் என்று காத்து கொண்டிருக்கிறேன்.

    நன்றியுடன் அருண்.

  6. God’s Grace s there with u always—no doubt..!!
    But I have a doubt. Do u sleep or not anna??2 am ur posting an article!!what shd I call it –ridiculous or dedication??ll rather prefer commitment!!apt word for it!!
    Ur setting standards that is tough to follow!!will try anyways!

    Admire ur work ethic!!
    Preserve ur mind and body because these two are the most important tools for u—u know this truth better than me anna!!

    Keep rocking!!
    Regards
    R.HariHaraSudan.
    “HE WHO KNOWS THE SELF KNOWS ALL”

  7. நானும் மோனிஸ்ராஜ் இருவரும் மனம் குளிர அபிசேகம் நடந்ததை கண்குளிர கண்டு ரசித்தோம் .இதை நம் குழுவினர் யாரும் எதிர்பார்க்கவில்லை.எல்லோருக்கும் மிகவும் சந்தோசம் தாங்கமுடியவில்லை .எல்லோருடைய பெயரிலும்&குடும்பத்தினர் பெயரிலும் அர்ச்சனை செய்விக்கப்பட்டது .ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தி அபிசேகம் அன்று தான் முதன் முதலில் அனுபவித்தேன் .இதற்கெல்லாம் சுந்தர் அவர்களின் உழைப்பும் ,விடாமுயற்சியும் உள்ளது என்பதை நாங்கள் அனைவரும் அறிந்துள்ளோம் .எல்லோரும் பஞ்சாமிர்தம் சுவையாக அமைந்தது மிகவும் மகிழ்ச்சி .

    எல்லா புகழும் இறைவனுக்கே .

    எங்கள் பாராட்டும் நன்றியும் சுந்தர்ஜி அவர்களுக்கே …..

    -மனோகர்

  8. வணக்கத்திற்குரிய சுந்தர் அவர்களுக்கு,

    வாய்ப்பளித்த உங்களுக்கு உளமார நன்றிகள் பல பல.
    இறைவன் உள்ளம் கருணை (பாவம் கரைக்கும்) இல்லம்.
    குருவை வணக்கினால் நிச்சயம் உயர்வான (எல்லா வகையிலும்) வழி என்றென்றும் கிடைக்கும் என்பதில் சிறிதும் ஐயமில்லை.

  9. அபிஷேகத்தை பார்த்த எங்கள் அனைவருக்கும் ஒரு கணம் நெகிழ்ச்சியில் கண்கள் கலங்கிவிட்டது. எப்பேற்ப்பட்ட பாக்கியம்…! –

    அந்த பாக்கியம் எனக்கு கிட்டவில்லை. நீங்கள் அளித்த வாய்ப்பை என்னால் பயன்படுத்தி கொள்ள முடியவில்லை.

    இந்த பதிவை படிக்கும் போது பஞ்சாமிர்தம் சாபிட்டது போல் உள்ளது. மிகவும் அருமை அண்ணா.

    அடுத்த முறை நிச்சயம் கலந்து கொள்வேன்.

  10. நானும் இந்த பணியில் கலந்து கொண்டதற்கு அப்பாவின் கருணை தான் காரணம்
    அபிஷேகம் முழுவதும் நன்றாக கண் குளிர பார்த்தோம்.
    அபிசேகத்தின் போது எங்கள் சுந்தர் சாரின் எல்லா கனவுகளும் நிறைவேற மனதார வேண்டிகொண்டோம்.
    எங்கள் குழுவின் அணைத்து எண்ணங்களும் நிறைவேறி அவர்கள் மனம் போல வாழவேண்டும்.

  11. நானும் கலந்துக்க ஆசைபட்டேன் ஆனால் கலந்துக்க முடியல ..கண்டிப்பா அடுத்தமுறை கலந்து இறைஅருள் கிட்ட ஆண்டவனை வேண்டுகின்டின்

  12. காட்டூர் மலைகோயில் காலபைரவர் திருகோயில்காத்து கிடக்கிறது …நீங்க தான் பைரவர் கோயில் பணிக்கு உகந்த
    சரியான மனிதர் …..
    சிவாய நம…..பைரவமே சிவம்…..

    1. எனக்கு simplesundar@gmail.com என்ற முகவரிக்கு உங்கள் தொடர்பு எண்ணை குறிப்பிட்டு மின்னஞ்சல் அனுப்பவும். நம் மகளிர் குழுவில் உள்ள சீனியர் எவர் தொடர்பு எண்ணாவது உங்களுக்கு அனுப்புகிறேன். அவர்களுடன் நீங்கள் தொடர்பில் இருந்தாலே போதுமானது. அவர்கள் உங்களுக்கு தெரியப்படுத்துவார்கள்.

      ஆர்வத்துக்கு மிக்க நன்றி.

      – சுந்தர்

  13. புகைப்படங்கள் அனைத்தும் அருமை

    மனம் இருந்தால் மார்கம் உண்டு என்பதற்கு நல்ல ஒரு உதாரணம்

    சுயநலம் கருதாது பெறுதற்கு அறிய இந்த மானிட பிறவியை பிறர் நலத்திற்க்காக எவரொருவர் தம்மை முழுமையாக ஈடுபடுத்திக்கொள்கிராரோ அவர் இறைவனை நோக்கி செல்ல வேண்டியதில்லை மாறாக இறைவன் அவரை நோக்கி விரைந்து வந்து அருள் புரிவார்

    உழவாரப்பனியில் தம்மை ஈடுபடுத்திக்கொண்ட அனைத்து அன்பு உள்ளங்களுக்கு எமது நன்றிகளும் பாராட்டுதல்களும் !!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *