Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Tuesday, March 19, 2024
Please specify the group
Home > Featured > “ஆடுகளைத்தான் பலியிடுகிறார்களேயொழிய சிங்கங்களை அல்ல!” டாக்டர் அம்பேத்கர்

“ஆடுகளைத்தான் பலியிடுகிறார்களேயொழிய சிங்கங்களை அல்ல!” டாக்டர் அம்பேத்கர்

print
பாபாசாகேப் என்று மக்களால் அன்புடன் அழைக்கப்பட்ட டாக்டர்.அம்பேத்கர் நம் பாரதம் கண்ட ஒப்பற்ற தலைவர்களுள் ஒருவர். இந்திய சட்ட நிபுணர், அரசியல் தலைவர், தத்துவவாதி, மாந்தவியலாளர், வரலாற்று ஆய்வாளர், பேச்சாளர், பொருளாதார மேதை, பள்ளி ஆசிரியர் மற்றும் பத்திரிகை ஆசிரியர் என் பன்முகம் கொண்டவர்.

டாக்டர்.அம்பேத்கர் மகாராஷ்டிர மாநிலம் ரத்னகிரி மாவட்டத்தில் அம்பாவாதே என்னும் கிராமத்தில் 1891 ஏப்ரல் 14 அன்று ராம்ஜி – பீமாபாய் ஆகியோரின் 14-வது குழந்தையாகப் பிறந்தார். இவரது இயற்பெயர் பீமாராவ் என்பதாகும். தாழ்த்தப்பட்ட சமுதாயத்தில் பிறந்ததால் இளம் வயதில் பல்வேறு துன்ப, துயரங்களை அனுபவித்தார்.

மாட்டு வண்டி பயணத்தில் அவமானம்

பீமாராவ் தனது இளம் வயதில் ஒரு முறை மாட்டு வண்டியில் சகோதரருடன் பயணம் செய்து கொண்டிருந்தபொழுது, இவர்கள் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் என்பதை வண்டிக்காரன் அறிந்ததும் உடனே மாட்டை அவிழ்த்து விட்டு இவர்களை குப்பையைக் கொட்டுவது போலக் கொட்டிய கொடுமை நிகழ்ந்தது. இக்கொடுமைகளைக் கண்ட அம்பேத்காரின் பிஞ்சுமனம் வெம்பியது.

பள்ளிக்கூடத்தில் சாதிக் கொடுமை

1900 ஆண்டில் சாத்தாராவில் உள்ள ஒரு பள்ளியில் தனது தொடக்கக் கல்வியைத் முடித்த அம்பேத்கர் உயர்நிலைப்பள்ளியில் சேர்ந்து பயின்றார். அங்கு தாழ்த்தப்பட்ட மாணவர்கள் தனியே அமர்த்தப்பட்டனர். மற்ற மாணவர்களுடன் பேசவோ விளையாடவோ முடியாது. அவர்களின் குறிப்பேடுகளையும் புத்தகங்களையும் தொடமாட்டார்கள். கேள்விகள் கேட்பதும் கிடையாது. தண்ணீர் வேண்டுமென்றாலும் பிறர் ஊற்ற கையால் பருகவேண்டும். அமருவதற்கு இம்மாணவர்கள் ஒரு கோணிப்பையைத் தங்கள் வீட்டிலிருந்தே கொண்டு வர வேண்டும். வடமொழி கற்கவும் தடை இருந்தது.

பீமாராவ் அம்பேத்கர் ஆனது எப்படி?

இந்தியாவில் சாதியக்கொடுமைகள் தலைவிரித்தாடிய காலகட்டம் அது. இங்கு பாரதியார் சாதியத்தையும் சாதீய வேறுபாட்டையும் கண்டு குமுறியதை போல, பீமாராவ் படித்த பள்ளியின் பிராமண சமுதாயத்தை சேர்ந்த ஆசிரியர் மகாதேவா அம்பேத்கர் என்பவரும் இந்த கொடுமைகளை கண்டு கொதித்தெழுந்தார். பீமாராவை அரவணைத்து அன்புகாட்டி அவன் படிப்பதற்கு தேவையான உதவிகளை செய்து அவனை கண்ணும் கருத்துமாக வளர்த்துவந்தார். தன்னை வளர்த்து ஆளாக்கிய அந்த ஆசிரியருக்கு நன்றி செலுத்தும் விதமாகவே தனது பெயரை அம்பேத்கர் என்று மாற்றிக்கொண்டார் பீமாராவ்.

வறுமையிலும் கல்வித் தாகம்

குடும்பத்தில் மிகவும் வறுமை சூழ்ந்த நிலையிலும் கல்வியை விடாமல் மெட்ரிக்குலேசன் தேர்வில் தேர்ச்சி பெற்றர். இவரது குடும்பமே அம்பேத்கரின் கல்வியில் ஆர்வம் காட்டியது. மெட்ரிகுலேசன் தேர்வு முடிந்ததும் அம்பேத்கருக்கும் ஒன்பது வயதான ராமாபாய் என்ற பெண்ணுக்கும் திருமணம் நடைபெற்றது. கல்லூரியில் சேர்ந்து கல்வியைத் தொடர விரும்பிய அம்பேத்கருக்கு பரோடா மன்னர் உதவி புரிந்தார். சாதிக் கொடுமை கல்லூரியிலும் தொடர்ந்தது. ஆயினும் பேராசிரியர் முல்லர் என்பவர் அன்புடனும் அனுதாபத்துடனும் நூல்கள், உணவு மற்றும் உடைகள் கொடுத்து உதவினார். இவரின் உதவியால் அம்பேத்கர் நன்கு படித்து பி.ஏ இளங்கலைப் பட்டதாரியானார்.

படிப்பு முடிந்ததும் குடும்பச் சுமையை ஏற்பதற்காக சிறிது காலம் பரோடா மன்னரின் அரண்மனையில் படைகளுக்குத் தலைவராக ‘லெப்டினன்ட்’ பதவியில் வேலைக்குச் சேர்ந்தார். அங்கும் நிலவிய சாதி வேற்றுமையால் மனம் நொந்து மும்பைக்கே திரும்பினார். பின்னர் மும்பைக்கு வந்த பரோடா மன்னரை நேரில் சந்தித்து தான் வேலைக்கு வர இயலாத சூழ்நிலையை எடுத்துக் கூறினார். மிகவும் வேதனையடைந்த மன்னர், மிகச் சிறந்த கல்வியாளரான அம்பேத்கர் கொலம்பியா பல்கலைக் கழகத்தில் உயர் கல்வி பயில ஏற்பாடு செய்தார். தாழ்த்தப்பட்ட சமூகத்தில் உயர்கல்வி பயின்றவர் என்ற பெருமையும் பெற்றார்.

மேல்நாட்டில் உயர்கல்வி

1913 ஆம் ஆண்டு ஜூன் 4 ஆம் நள் அம்பேத்கர் அமெரிக்கா சென்றார். உயர்கல்வி பெறுவதற்காக அமெரிக்கா சென்ற முதல் இந்தியர் என்ற பெருமையைப் பெற்றார். கொலம்பியா பல்கலைக்கழகத்தில் சேர்ந்து பொருளாதாரம், அரசியல், தத்துவம் மற்றும் சமூகவியல் ஆகிய பாடங்களைப் படித்தார்.

பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்துக்கு எதிரான போராட்டத்தில் டாக்டர் அம்பேத்கர் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். அதே நேரத்தில், சமுதாய அமைப்பிலும் பொருளாதாரத்திலும் ஒடுக்கப்பட்டவர்கள் கையில் அதிகாரம் கிடைக்க வேண்டும் என்று போராடினார்.

சட்ட அமைச்சர்

இந்தியா விடுதலை பெற்றவுடன் அமைந்த காங்கிரசு அரசு அம்பேத்கரை சட்ட அமைச்சராக பதவியேற்றுக்கொள்ளும்படி அழைத்தது. அம்பேத்கர் அதை ஏற்று விடுதலை பெற்ற இந்தியாவின் முதல் சட்ட அமைச்சரானார். ஆகசுட்டு 29ல் அம்பேத்கர் இந்திய அரசிலமைப்பை உருவாக்கும் ஆணையத்திற்கு தலைவரானார்.

அம்பேத்கரால் முன்மொழியப்பட்ட இந்திய அரசியலமைப்பு மிகச்சிறந்த சமூக ஆவணம் என்று வரலாற்றுவியலாளரும் இந்திய அரசியலமைப்பை நன்கு அறிந்தவருமான கிரான்வில்லா ஆசுட்டின் கூறுகிறார்.

அம்பேத்கரால் உருவாக்கப்பட்ட அரசியலமைப்பு குடிமக்களின் உரிமைகளுக்கு பலவகைகளில் பாதுகாப்பை வழங்கியது. அரசியலமைப்பு நவம்பர் 26, 1949 அன்று மக்களவையில் ஏற்கப்பட்டது.

இந்திய ரிசர்வ் வங்கி அமைப்பதற்கான பரிந்துரைகளையும் வழங்கியது இவரே!

1948ல் இருந்து அம்பேத்கர் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். 1955ம் ஆண்டில் இவர் உடல்நலம் மேலும் மோசமடைந்தது. 1956 டிசம்பர் 6ல் டில்லியிலுள்ள இவர் வீட்டில் தூக்கத்தில் உயிர் பிரிந்தது.

======================================================
அம்பேத்கர் படித்து பெற்ற பட்டங்கள் எத்தனை தெரியுமா?

Dr.AMBEDKAR (1891-1956)
B.A., M.A., M.Sc., D.Sc., Ph.D., L.L.D., D.Litt., Barrister-at-Law !!!
B.A.(Bombay University) Bachelor of Arts,
MA.(Columbia university) Master Of Arts,
M.Sc.( London School of Economics) Master Of Science,
Ph.D. (Columbia University) Doctor of Philosophy ,
D.Sc.( London School of Economics) Doctor of Science ,
L.L.D.(Columbia University) Doctor of Laws ,
D.Litt.( Osmania University) Doctor of Literature,
Barrister-at-Law (Gray’s Inn, London) law qualification for a lawyer in royal court of England.
======================================================

சி.என்.என். ஐ.பி.என். தொலைகாட்சி நடத்திய THE GREATEST INDIAN ஓட்டெடுப்பில் மிக அதிக வாக்குகள் பெற்று முதலிடத்தை பெற்றவர் டாக்டர்.அம்பேத்கர். அந்தளவு மக்கள் நெஞ்சங்களில் நீங்கா இடம் பிடித்து வாழ்ந்துவருகிறார்.

அவரது விடாமுயற்சியும், துணிச்சலும், தன்னம்பிக்கையையும், கல்வி தாகமும், அற்பணிப்பு உணர்வும், அவரிடம் நாம் கற்றுக் கொள்ளவேண்டிய நற்பன்புகலாகும்!

ஜெய் ஹிந்த்!

டாக்டர்.அம்பேத்கரின் புகழ் பெற்ற பொன்மொழிகள் சில :

* ஆடுகளைத்தான் கோவில்கள் முன்பாக வெட்டுகிறார்களேயொழிய சிங்கங்களை அல்ல; ஆடுகளாக இருக்க வேண்டாம்; சிங்கங்களைப் போன்று வீறுகொண்டு எழுங்கள்.

* வெற்றியோ தோல்வியோ எதுவரினும் கடமையைச் செய்வோம். யார் பாராட்டினாலும், பாராட்டாவிட்டாலும் கவலை வேண்டாம். நமது திறமையும், நேர்மையும் வெளியாகும்போது பகைவனும் நம்மை மதிக்கத் தொடங்குவான்.

* நான் வணங்கும் தெய்வங்கள் மூன்று. முதல் தெய்வம் அறிவு; இரண்டாவது தெய்வம் சுயமரியாதை; மூன்றாவது தெய்வம் நன்னடத்தை. இவற்றைத் தவிர வேறு தெய்வங்கள் எனக்கு இல்லை.

* சமுதாயத்தில் இருக்கின்ற ஏற்றத் தாழ்வுகள் ஜனநாயகத்தை அழிக்கின்ற கரையான்கள் ஆகும். ஆதலால், மக்களின் நல்வாழ்விற்கான திட்டங்கள், செயல்முறைகள் ஆகியவற்றைக் கொண்டதே உண்மையான ஜனநாயகம் ஆகும்.

* உங்களின் வறுமை உடன் பிறந்தது; தவிர்க்க முடியாதது, தீர்க்க முடியாதது என்றெண்ணுவது மடமை ஆகும். அடிமை வாழ்வுதான் கிடைத்த கதி என்ற எண்ணத்தைக் குழிதோண்டிப் புதையுங்கள்.

* ஒரு லட்சியத்தை மேற்கொள்ளுங்கள். அதை அடைவதற்காக விடா முயற்சியுடன் உழைத்து முன்னேறுங்கள்.

* சமூகத்தை உயர்த்த வேண்டும் என்ற விழுமிய நோக்கத்தில் உந்தப்படுபவரே உயர்ந்த மனிதர்.

* முக்கியமான மூன்று விஷயங்களில் நாம் நம்மை அர்ப்பணித்துக் கொள்ள வேண்டும். அவை பொது ஒழுக்கம், முன்னேற்றத்தில் சிரத்தை, சிந்தனையில் மகத்தான புரட்சி என்பனவாகும்.

[END]

7 thoughts on ““ஆடுகளைத்தான் பலியிடுகிறார்களேயொழிய சிங்கங்களை அல்ல!” டாக்டர் அம்பேத்கர்

  1. வரலாற்றில் ஈடு இணை இல்லாத ஒப்பற்ற மாமேதையை பற்றி பல அறிய விஷயங்களை வழங்கியமைக்கு மிக்க நன்றி !!!

    மாமேதை அம்பேத்கர் அவர்களது சாதனைகள் வார்த்தைகளில் அடங்காதவை !!!

  2. அம்பேத்கர் படித்து பெற்ற பட்டங்கள் எத்தனை தெரியுமா?

    படிப்பதற்கே பிரமிப்பாக உள்ளது .

    சட்டமாமேதை வாழ்ந்த மண்ணில் நாம் பிறந்தது மகிழ்ச்சி அளிக்கிறது.

    அம்பேத்கரின் பொன்மொழிகள் அற்புதமாக உள்ளது.

    நிறைவான கட்டுரை .

    நன்றி .

  3. “ஆடுகளைத்தான் கோவில்கள் முன்பாக வெட்டுகிறார்களேயொழிய சிங்கங்களை அல்ல; ஆடுகளாக இருக்க வேண்டாம்; சிங்கங்களைப் போன்று வீறுகொண்டு எழுங்கள்”
    -அம்பேத்கர்

    “ஒரு லட்சியத்தை மேற்கொள்ளுங்கள். அதை அடைவதற்காக விடா முயற்சியுடன் உழைத்து முன்னேறுங்கள்.”
    -அம்பேத்கர்

    நான் கொடுத்த பிரிண்ட் அவுட்டை வைத்து மேற்கண்ட பொன்மொழியை எனது நண்பர்கள் ஆட்டோக்களில் ஒட்ட அது நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது .

    பொன்மொழியை தொகுத்து வழங்கியமைக்கு நன்றி தெரிவிக்கும்படி கேட்டுக்கொண்டனர்.
    நன்றிகள் பல …

  4. சுந்தர் சார், அண்ணல் அம்பேத்கரை பற்றி இவ்வளவு சிறிய பதிவில் எவ்வளவு பெரிய செய்திகள். நன்றி

  5. DR பாபா ஷாஹெப் அம்பேத்கர் அவரே மனிதரில் மாணிக்கம் , சட்டம் எழுத ஒருத்தர் பிறந்தார் என்றால் அவர் அம்பேத்கர் ஆக தான் இருக்க முடியும், இன்னொரூ மனிதன் பிறக்க போனால் திரும்ப அம்பேத்கர் வந்தால் தான் அது முடியும் ,,,

  6. டாக்டர். பாபாசாகிப் அம்பேத்கர் அவர்களின் சாதனைகள் வார்த்தைகளால் சொல்லமுடியாதவை.
    இவ்வளவு கொடுமைகள் இருந்தும் தன்னால் சாதிக்க முடியும் என்ற அவரது தன்னம்பிக்கை பாராட்டுக்குரியது!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *