Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Wednesday, April 17, 2024
Please specify the group
Home > Featured > ரத சப்தமி – சூரிய பகவானின் அருளை பெற அருமையான வாய்ப்பு !

ரத சப்தமி – சூரிய பகவானின் அருளை பெற அருமையான வாய்ப்பு !

print
பிரத்யட்ச தெய்வம் என்று கொண்டாடப்படும் சூரியனின் வட திசைப் பயணம், தை முதல் நாள் தொடங்குகிறது என்று சொன்னாலும், அந்தப் பயணம் தைமாதம் ‘சப்தமி’ நாளில்தான் ஆரம்பமாகிறது. திருப்பத்தில் ஓடிவரும் ஏழுபேரும் ஒரே நேர்க்கோட்டில் வருவது தாமதப்படும் என்பதை விளையாட்டுப் போட்டியில் நாம் பார்த்திருக்கிறோம். அதுபோல ஏழு குதிரைகளும் ஒரு சேரத் திரும்பி, பயணம் தொடங்கும் நாள் தை மாத சப்தமி. ரத சப்தமி விரதம் மகத்துவம் வாய்ந்த விரதங்களில் ஒன்று. தெற்குப் பாதையில் பயணிக்கும் சூரியன், அன்றுமுதல் வடக்கு வழியில் திசை திரும்பிப் பயணிப்பதாக ஜோதிட புராண நூல்கள் சொல்கின்றன. அதாவது அன்றுதான் தட்சிணாயன காலம் முடிந்து உத்தராயண காலம் ஆரம்பமாகிறது.

Sooriya Bhagavan_ Sooriya Narayayanரதசப்தமி நாளில் சூரியன் பிறந்ததாகக் கருதப்படுவதாலும், அந்த நாளில் சூரியனுக்கு விசேஷமான ஒளிபிறப்பதாலும், அன்றைய தினத்தில் விரதம் கடைப்பிடித்து சூரிய பகவானை வழிபட வேண்டும். சூரிய உதயத்திற்குமுன் எழுந்து காலைக்கடன்களை முடித்துக்கொண்டு ஆண்கள் சூரியனுக்குப் பிடித்த எருக்கன் இலைகள் ஏழு எடுத்து அத்துடன் அட்சதையும் (சிறிதளவு பச்சரிசி) விபூதியையும் தலையின்மீது வைத்துக்கொண்டு கிழக்கு திசை நோக்கி நீராட வேண்டும். பெண்கள் (கன்னி மற்றும் சுமங்கலிகள்) ஏழு எருக்கன் இலைகள் மேல் சிறிதளடு மஞ்சள் தூளையும் அட்சதையையும் வைத்துக்கொண்டு நீராட வேண்டும். சூரியனின் ஏழு வகையான கிரணங்கள் எருக்கன் இலைகள் மூலமாக உடலில் பாய்ந்து உடல்நலத்தை வலுப்படுத்தும் என்பது ஐதீகம். அதற்குப்பின் சூரிய நமஸ்காரம் அவசியம் செய்யவேண்டும். அப்போது அர்க்ய மந்திரம் சொல்லி நீர்விட வேண்டும். வேதம் அறிந்த விற்பன்னர்களிடம் உபதேசம் பெற்று மந்திரத்தை அறிந்துகொள்வது நலன் தரும்.

ஆண்களும் பெண்களும் ரதசப்தமி அன்று எப்படி நீராடவேண்டும்?

ரத சப்தமி  அன்று சூரிய உதய நேரத்தில் எழுந்து ஆறு, ஏரி அல்லது குளத்தில் நீராடச் செல்வது சிறப்பு. இயலாதவர்கள் அவரவர் இல்லத்தில் சிறிதளவாவது சூரிய ஒளிபடும் இடத்தில் நீராடலாம். நீராடும்போது, ஏழு எருக்கிலைகளை ஒன்றன் மீது ஒன்றாக அடுக்கி, அவற்றின் மீது சிறிது அரிசி, மஞ்சள் ஆகியவற்றை வைத்து அதனை அப்படியே உச்சந் தலையில் வைத்துக் கொண்டு நீரில் மூழ்கி எழவேண்டும். வீட்டில் நீராடும் போது அவற்றைத் தலையில் வைத்துக் கொண்டபின், தண்ணீர் ஊற்றிக்கொண்டு குளிக்கலாம். இப்படிச் செய்வதால் நம் பாவங்கள் விலகி பகலவனைக் கண்டு பனி மறைவது போல மறைந்து போகும். புண்ணிய பலன்கள் பெருகும் என்பது ஐதிகம்.

Erukkuசூரியனை வழிபட்டு, விசேஷ பலன்களைப் பெறவும், புதிய செயல்களைத் தொடங்கவும், இந்த நாள் மிகச் சிறப்பானது. இந்த நாளில், விரதம் மேற்கொள்வது, தடைகளைப் போக்கி, காரியங்களை கைகூடச் செய்யவல்லது. பிதுர் லோகத்துக்கு அதிபதியாகவும், ஆத்ம காரகனாகவும் விளங்கும் சூரியனுக்கான இந்த விரதம், உடல் நலம், மன நலம், நற்குணப் பெருக்கம், செல்வ வளம், காரிய வெற்றி ஆகியவற்றைத் தரவல்லது.

அன்றைய தினம் குளித்து முடித்தபின் சூரியனை நமஸ்கரிக்க வேண்டும். அதன் பின் தெரிந்த சூரிய துதிகளைச் சொல்ல வேண்டும். எந்த தெய்வத்தை வழிபடுகிறோமோ அந்த தெய்வத்தின் திருக்கரங்களில் நீர் வார்ப்பது போன்ற அர்க்கியம் விடுவது. எனவே ரத சப்தமியன்று சூரியனுக்கு அர்க்கியம் விடுவது முக்கியத்துவம் உடையது. சூரியனுக்கு உகந்த நிவேதனம் சர்க்கரைப் பொங்கல். பொங்கல் வைத்து அது சூடு ஆறும் முன்பாக நைவேத்தியம் செய்துவிட வேண்டும். சூரியனுக்குப் படைத்த சர்க்கரை பொங்கலை பிறருக்கு விநியோகிப்பது சிறப்பான பலன் தரும். ரத சப்தமி நாளில் வீட்டு வாசலிலும், பூஜை அறையிலும் தேர்க் கோலம் போடுவது பலரது வழக்கம். இந்தக் கோலத்தினை வீட்டு வாசலில் போட்டு, அதன் வடமாக ஒரு கோட்டினை தெருவரை நீளும்படி வரைவதும் உண்டு.

நாராயணனின் அம்சம் சூரியன்

நாராயணனின் அம்சமே சூரியன் என்பதால் ரதசப்தமி நாளில் பெருமாள் ஆலயங்களில் சூரிய பிரபையில் எம்பிரான் எழுந்தருள்வார். அன்றைய தினம் விரதம் இருப்பது நீடித்த ஆயுளும், குறையாத ஆரோக்யமும் அளிக்கும் என்பது நம்பிக்கை. இவ்விரதம் இருப்பது சுமங்கலித்துவம் நிலைக்கச் செய்யும் எனவும் சிலர் கூறுவர். பார்வைக்குத் தெரியும் பகவானை பகலவனை ரதசப்தமி தினத்தில் வழிபடும்போது சூரியனை நோக்கி, ஓம் நமோ ஆதித்யாய.. ஆயுள், ஆரோக்யம், புத்திர் பலம் தேஹிமே சதா! என்று சொல்லி வணங்கலாம். அறிவு, ஆற்றல், ஆரோக்யம், ஆயுள் என யாவற்றிலும் சிறந்து விளங்கும் அனுமனுக்கு அந்த ஆற்றலை குருவாக இருந்து அளித்தவர் சூரியன். சூரியனை பொங்கலன்றும் ரத சப்தமி நாளிலும் மட்டும் வழிபடாமல் தினமுமே வணங்கலாம். ஆதவனை வழிபடுவோர் வாழ்வில் தீவினை இருள் விலகி நன்மை ஒளி பரவும் என்பது நிச்சயம்!

ரத சப்தமி அன்று…

* ஆதித்ய ஹ்ருதயம் படிக்கலாம். * சூரியனுக்கு அர்ச்சனைகள் செய்யலாம். * பெருமாள் கோவிலுக்கு சென்று பெருமாளை தரிசிக்கலாம். * சூரியப் பிரபையில் எழுந்தருளி சூரியநாராயணனாக காட்சி தரும் சென்னை திருமழிசை ஜகன்னாதப் பெருமாளை தரிசிக்கலாம்.

(ஆக்கத்தில் உதவி : கல்கி வழங்கும் ‘தீபம்’ இதழ், temple.dinamalar.com)

4 thoughts on “ரத சப்தமி – சூரிய பகவானின் அருளை பெற அருமையான வாய்ப்பு !

  1. சுந்தர்ஜி
    சூரியனை வழிபட்டு, விசேஷ பலன்களைப் பெற சிறந்த நாளான ரதசப்தமி பற்றி செய்தி மிக அருமை.

  2. அன்பு சகோதரா சுந்தர்
    வாழ்க வளமுடன். உங்களுடைய இந்த பதிவிற்கு நன்றி…மிக நல்ல பதிவு…எங்களால் உங்களைப் போன்று…நேரடியாக புண்ணிய காரியங்களில் ஈடு பட முடியாவிடிலும்…எங்களது பாவங்களைக் கழிக்க இத்தகைய ஒரு எளிய வழியைக் கூறிய உங்களுக்கு எத்தனை கோடி நன்றி கூறினாலும் ஈடாகாது. ..ஆம் இந்த நாட்டில் எருக்க இலை தேடி…ஒரு பூக்காரப் பெண்ணிடம் கூறி கொடுக்க சொன்னதில் எனக்கு இடித்தது..வெள்ளெருக்கு…கண்டதும் மனம் பூரித்து போனது…உங்களுக்கும் புண்ணியங்கள் பான் மடங்கு பெருக என்னுடைய பிரார்த்தனைகள் …வாழ்க வளமுடன் _/|\_

  3. டியர் சுந்தர்ஜி

    ரத சப்தமி பதிவு அருமை. எல்லோரும் இன்று சூரியனை வணங்கி அருள் பெறுவோம்.

    நன்றி
    உமா

Leave a Reply to V UMA Cancel reply

Your email address will not be published. Required fields are marked *