Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Friday, March 29, 2024
Please specify the group
Home > Featured > பிள்ளையை சுமந்த ஒரு தகப்பன் – படித்த, ரசித்த, வியந்த ஒரு பேட்டி!

பிள்ளையை சுமந்த ஒரு தகப்பன் – படித்த, ரசித்த, வியந்த ஒரு பேட்டி!

print
ந்த தளம் துவக்கியதில் இருந்து நாம் ஒரு விஷயத்தில் உறுதியாக இருந்து வருவதை கவனித்திருப்பீர்கள். சினிமா, அரசியல் இந்த இரண்டும் தொடர்பான எந்த ஒரு பதிவையும் நம் தளத்தில் அளிக்கக்கூடாது என்பதே அது. ஆனால், நமது கொள்கைகளை சற்று தளர்த்தி இன்று ஒரு நடிகரை பற்றிய பதிவை இங்கே அளிக்கிறோம். காரணம், இதில் நமக்கு ஒளிந்திருக்கும் பாடங்கள், வாழ்வியல் நீதிகள்.

சமீபத்தில் நாம் படித்த, ரசித்த, வியந்த ஒரு நடிகரின் பேட்டி இது. ஆனந்த விகடன் இதழுக்கு திரு.ராஜ்கிரண் அவர்கள் அளித்த பேட்டி இது. பேட்டியை படிக்கும்போதே பல இடங்களில் எழுந்து நின்று கைதட்டினோம். முடிக்கும் போது நெகிழ்ச்சியில் கண்கலங்கிவிட்டோம். ரைட்மந்த்ரா வாசகர்கள் அனைவருக்கும் இதில் இடம்பெற்றுள்ள கருத்துக்கள் அவசியம் போய் சேரவேண்டும் என்று கருதி இங்கு தருகிறோம்.

இந்த பேட்டியை நீங்கள் படித்த பிறகு வாழ்க்கையை குறித்த உங்கள் அணுகுமுறை இன்னும் பக்குவப்படும். கடவுளை குறித்த உங்கள் பார்வை இன்னும் சற்று மாறும் என்பது உறுதி.

(இந்த பேட்டியில் திரு.ராஜ்கிரண் அவர்கள் கூறியிருக்கும் வேட்டி விளம்பரத்தை மறுத்தது தொடர்பான பகுதி மட்டும் இணைய உலகில் பரபரப்பாக பேசப்பட்டது. ஆனால், அதையும் தாண்டி இவரது பேட்டிக்குள் புதைந்திருக்கும் அற்புதமான விஷயங்களை உங்கள் கவனத்திற்கு கொண்டு வரவேண்டியே இந்த பதிவு.)

பேட்டியின் மூலம் நீங்கள் உணர்ந்துகொண்ட நீதிகளை அவசியம் தெரியப்படுத்தவும்.

பிள்ளையை சுமந்த ஒரு தகப்பன்!

ராஜ்கிரண்… அலாதியான மனிதர்! இவர் நடிப்பதாலேயே அந்தந்தக் கதாபாத்திரம் மீது பச்சக்கென அப்பிக்கொள்கிறது ஒரு பாசம். அவருடன் பேசப் பேச, அதற்கான காரணங்கள் புரிகின்றன.

”என்ன கதை, என்ன சூழ்நிலையா இருந்தாலும் குணச்சித்திரக் கதாபாத்திரம்னா அப்படியே அச்சு அசலா மேட்ச் ஆகிடுறீங்களே… என்ன ரகசியம் அது?”

”சினிமாங்கிறது ஒரு வெகுஜன ஊடகம். இங்கே என்ன சொன்னாலும் அது மிகச் சுலபமா மக்கள்கிட்ட போய் சேந்திரும். அப்படியான துறையில் இறைவன் என்னை வெச்சிருக்கான். அதனால சமூகச் சீர்கேட்டுக்குக் காரணமான விஷயங்களைச் சொல்ற படங்கள் வேண்டாம்னு நிராகரிச்சுடுவேன். பண்ற ஒவ்வொரு படத்துலயும் ஏதாவது ஒரு நல்ல விஷயம் இருக்கணும் நினைக்கிறேன். தவிர, இது கலைச்சேவை, லொட்டு லொசுக்குனு எல்லாம் சொல்ல மாட்டேன். இது வியாபாரம். பணம் போட்டு உழைக்கிற மற்ற வியாபாரங்களைப் போல் இதுவும் ஒரு வியாபாரம். ஆனாலும் இங்கே நான் கற்பூரம் விப்பேன்; சந்தனம் விப்பேன்; ஊதுவத்தி விப்பேன்; காய்கறி விப்பேன்; பழங்கள் விப்பேன்; பூ விப்பேன். ஆனா, சாராயம் விக்க மாட்டேன்… செம்மரம் கடத்த மாட்டேன். அது எனக்கு வேண்டாம். (அதிர அதிரச் சிரிக்கிறார்).

இங்கே நான் கற்பூரம் விப்பேன்; சந்தனம் விப்பேன்; ஊதுவத்தி விப்பேன்; காய்கறி விப்பேன்; பழங்கள் விப்பேன்; பூ விப்பேன். ஆனா, சாராயம் விக்க மாட்டேன்… செம்மரம் கடத்த மாட்டேன். அது எனக்கு வேண்டாம்.

எவ்வளவோ பணத் தேவைகள், எல்லாவிதமான வட்டி கட்டுற சூழல்ல இருந்தாலும், எனக்குப் பிடிக்காத கதையில நடிக்கிறதே இல்லை. ஏன்னா, காசுக்காக ஆடுறவன் நான் இல்லை. அதனாலதான் ஹீரோவா நடிக்க ஆரம்பிச்சு 25 வருஷங்கள் கழிச்சும் இதுவரை 21 படங்கள்தான் நடிச்சிருக்கேன்!”

Rajkiran

”உங்களை வில்லனா நடிக்கவைக்க, கோலிவுட்ல பலர் முயற்சி பண்றாங்களே!” ” ‘

‘தவமாய் தவமிருந்து’ வெளியான புதுசு. ‘நீங்க இப்போ வாங்குற சம்பளம் மாதிரி 10 மடங்கு தர்றோம்’னு சொல்லி வில்லனா நடிக்கக் கூப்பிட்டாங்க. பிடிச்சுத் திட்டிவிட்டுட்டேன். ‘இந்தக் கதாபாத்திரத்துக்கு இன்னார்தான் நடிக்கணும்னு ஒரு முறை இருக்கு. முன்னாடி எல்லாம் ராஜ்கிரண்னா, சென்டிமென்ட், ஆக்ஷன் இருக்கணும்னு எதிர்பார்ப்பாங்க. ஆனா, ‘தவமாய் தவமிருந்து’ படத்துக்கு அப்புறம் என்னை ரசிகர்கள் அவங்களையும் மீறி, ‘அப்பா இங்க வாங்கப்பா… இப்படி உட்காருங்கப்பா, ஜாக்கிரதைப்பா’னு ‘அப்பா’வுக்கான மரியாதை கொடுக்க ஆரம்பிச்சுட்டாங்க. அப்படி எல்லாரும் என்னை அப்பனா நினைச்சுட்டு இருக்கும்போது, நான் வில்லனா நடிச்சா எவன் வந்து பார்க்கிறது? அதுவே உங்க படத்துக்கு பெரிய மைனஸ். தவிர, நான் கமல் சார் மாதிரியோ, விக்ரம், நாசர் மாதிரியோ நடிப்பே உயிர்மூச்சுனு வாழ்ற ஆள் கிடையாது. அப்படிப்பட்டவங்களாலதான் வில்லனா நடிக்க முடியும். ஆனா, எனக்கு நடிக்க வராது. நான் நடிக்கிற படங்கள் ஹிட் ஆகக் காரணம், என் நிஜ இயல்புக்கு ஏற்ற கதாபாத்திரங்கள்ல நடிக்கிறதுதான். அதனால நான் நல்லா நடிக்கிற மாதிரி தோணுது. அதுதான் உண்மையே தவிர, நடிப்பைப் பத்தி எனக்கு ‘அ’ன்னா, ‘ஆ’வன்னாகூடத் தெரியாது. அப்புறம் எப்படி நான் வில்லனா நடிக்க முடியும்?’னு கேட்டு அனுப்பிட்டேன்!”

”விளம்பரங்கள்ல நடிக்க வந்த வாய்ப்பையும் மறுத்துட்டீங்களாமே… ஏன்?”

”ஆமா தம்பி. நான் எப்பவும் வேட்டியிலயே இருக்கிறதால, வேட்டி விளம்பரத்துல நடிக்கக் கூப்பிட்டாங்க. மறுத்தேன். ‘மற்ற நடிகர்களுக்கு ஒருநாள் ஷூட்டுக்கு அஞ்சாறு லட்சம் கொடுப்போம். உங்களுக்கு டபுள்’னு கூப்பிட்டாங்க. அப்பவும் மறுத்தேன். அப்புறம் அதுவே படிப்படியா 25 லட்சம், 50 லட்சம், ஒரு கோடி வரை போச்சு. மறுத்துட்டே இருந்தேன். பொறுமை இழந்து மிரட்டுற தொனியில் ‘ஒன்றரைக் கோடி தர்றோம். மறுக்காதீங்க’ன்னாங்க. விடாப்பிடியா மறுத்தேன்.

‘நீங்க கடன்ல இருக்கீங்கனு தெரியும். இவ்வளவு பெரிய அமௌன்ட் கொடுக்க முன்வந்தும் ஏன் நடிக்க மாட்டேங்கிறீங்க. அதுக்கான காரணத்தை மட்டும் தெரிஞ்சுக்கலாமா?’னு கேட்டாங்க. ‘வேட்டிங்கிறது ஏழை விவசாயிங்க உடுத்துற உடை. மிஞ்சிப்போனா, அதை அவனால 100 ரூபாய் கொடுத்து வாங்க முடியும். நீங்க எனக்கே ரெண்டு கோடி சம்பளம் கொடுத்தீங்கன்னா, அந்தக் காசையும் அவன்கிட்ட இருந்துதானே வசூலிப்பீங்க. அதான் நடிக்க மாட்டேன்’னு சொன்னேன். பதில் சொல்லாமப் போயிட்டாங்க!”

திருமூலர், சுவாமி விவேகானந்தர்
திருமூலர், சுவாமி விவேகானந்தர்

”நீங்க பிறப்பால் முஸ்லீம். ஆனா, இந்து மதத்திலும் ஆழ்ந்த பற்றோடு இருக்கீங்க. அந்தப் புரிதல் எப்போ வந்தது?”

”திருமூலரையும் விவேகானந்தரையும் முழுமையா தெரிஞ்சுக்கிட்டா இந்து மதம்னா என்னனு தெளிவா புரிஞ்சுக்கலாம். யாரெல்லாம் அற வழியில் நடக்கிறாங்களோ, அவங்க எல்லாம் இந்து. இவ்ளோதான் இந்து மதத்துக்கான விளக்கம். இதையேதான் இஸ்லாமும் சொல்லுது. முகமது நபிகிட்ட, ‘இஸ்லாம்னா என்னனு சொல்லுங்க?’னு கேட்டாங்களாம். ‘நேர் வழி’னு மட்டும் சொன்னாராம். எந்தவொரு காரியம் செய்யும்போதும், ‘இது சரி… இது தப்பு’னு  உள்மனசு சொல்லிடும். நல்லதுனு சொல்றதை மட்டும் கேட்டா, அது நேர்வழி. தப்புனு தெரிஞ்சும் அதைச் செஞ்சா அது தவறான வழி. அப்ப நேர் வழியில் யாரெல்லாம் நடக்கிறானோ அவனே இஸ்லாமியன். இப்ப சொல்லுங்க… இந்துவும் இஸ்லாமும் ஒண்ணுதானே!”

திருமூலரையும் விவேகானந்தரையும் முழுமையா தெரிஞ்சுக்கிட்டா இந்து மதம்னா என்னனு தெளிவா புரிஞ்சுக்கலாம். யாரெல்லாம் அற வழியில் நடக்கிறாங்களோ, அவங்க எல்லாம் இந்து. இவ்ளோதான் இந்து மதத்துக்கான விளக்கம்.

”அப்போ ”நந்தா’, இப்போ ‘சிவப்பு’னு இலங்கை அகதிகள் பத்தின படங்கள்ல ஈடுபாட்டோடு நடிக்கிறீங்களே?”

”நம்மள்ல பலர், சொந்த ஊர்ல இருந்து பொழைக்கிறதுக்காக சென்னைக்கு வந்திருக்கோம். இன்னைக்கு நினைச்சா நாளைக்கே சொந்த ஊருக்குப் போய் ஓடி ஆடின இடங்களைப் பார்க்க முடியும். ஆனா, அவங்களால முடியுமா? எல்லாத்தையும் இழந்து, அலைஞ்சு திரிஞ்சு இங்கே வந்திருக்காங்க. அவங்களை

அணுசரணையா பார்த்துக்கிட வேண்டாமா? ஆனா, உள்ளதை உள்ளபடி சினிமா சொல்ல இந்திய சென்சார் போர்டு அனுமதிக்காது. அரசியல் ரீதியாகவும் ஆதரவு கிடைக்காது.

இந்தத் தமிழ்நாட்டு, இந்திய அரசியல்வாதிகள் எல்லாரும் சேர்ந்து விடுதலைப் புலிகளையும், பிரபாகரனையும் ஏன் அழிச்சாங்கனு தெரியுமா? இந்தியா சுதந்திரம் அடைஞ்சப்ப, ‘இதை நான் சுதந்திரம்னு சொல்ல மாட்டேன். ஓர் இளம் பெண், தங்க நகைகள் அணிந்துகொண்டு நள்ளிரவில் வெளியே சென்று பத்திரமாக என்று வீடு திரும்புகிறாளோ, அன்றுதான் இந்தியாவுக்கு உண்மையான சுதந்திரம் கிடைத்ததாக அர்த்தம்’னு சொன்னார் மகாத்மா காந்தி. அப்படி காந்தி கனவு கண்ட ஒரு ஆட்சியை, இலங்கையின் வடகிழக்கு மாகாணங்கள்ல பிரபாகரன் நடத்தினார்.

‘இந்தத் தகவல் வெளியே தெரிஞ்சா, அப்படி ஒரு ஆட்சியைத்தானே எதிர்பார்ப்பாங்க? ஆனா, நாம அப்படி ஆட்சி நடத்த முடியாதே. கொள்ளை அடிச்சோமா, சொத்து சேர்த்தோமானு இருக்க முடியாதே’னு தமிழக, இந்திய, உலக அரசியல்வாதிகளுக்குப் பயம். அதான் அவருடைய ஆட்சிப் பெருமைகள் வெளியே தெரியாமல் அழிச்சுட்டாங்க!”

”ஆனா, பிரபாகரனும் இங்கே இருக்கிறவங்களை நம்பினாரே..! அரசியல், சினிமா துறையைச் சேர்ந்த சிலர் அவரைச் சந்திச்சுட்டு வந்தாங்களே?”

”சில கருத்துக்களை சினிமா, நாடகம் போன்ற கலை மூலமா மக்களிடம் எளிமையா கொண்டுபோய்ச் சேர்க்க முடியும். அதனால அங்கே உள்ளவர்களுக்கு நாடகம், சினிமால பயிற்சி வேணும்னு இங்கே உள்ள சினிமா சம்பந்தப்பட்ட ஆட்கள் சிலரை தலைவர் பிரபாகரன் கூப்பிட்டார். அப்படித்தான் பாரதிராஜா, மகேந்திரன், சீமான்னு நாலைஞ்சு பேரைக் கூப்பிட்டு ஆளுக்கு

10 நிமிஷம், அரை மணி நேரம் பேசியிருக்கார். அவ்வளவுதான். ‘சினிமா பத்திப் பேசுங்கப்பா’னு சொல்லி இவங்களைக் கூட்டிட்டுப் போனதுதான். ஆனா, அங்க போய் ஏதோ உலக அரசியலையே அவர்கிட்ட உட்கார்ந்து விவாதிச்சுட்டு வந்த மாதிரி சிலர் பேசிட்டு இருக்காங்க!”

” ‘என் ராசாவின் மனசிலே’ படத்தின் இரண்டாம் பாகம் எடுக்கப்போறீங்களாமே?”

”ஆமா. கதை, திரைக்கதையை எழுதிட்டு இருக்கேன். ‘என் ராசாவின் மனசிலே’ படத்தில் மாயாண்டி, சோலையம்மா மேல உசுரையே வெச்சிருந்தான். ஆனா, அவனை அவ புரிஞ்சுக்கலை. புரிஞ்சிக்கிற நேரத்துல அவ இறந்துடுவா. அவ போன பாதிப்புல அவனும் செத்துருவான். ரெண்டாம் பாகத்துல, அவங்க ரெண்டு பேரும் இன்னைக்கு உயிரோடு இருந்தா எப்படி இருக்கும்னு சொல்லப்போறேன்.

மாயாண்டி காவக்காரன். வயக்காட்டுல கதிர் முத்தி வர்ற நேரத்துல, ஒருத்தன் மாட்டை மேயவிட்டான்னு பெல்ட்டைக் கழட்டி அவனைப் பின்னியெடுப்பான். அப்படி விவசாயத்தையும் மண்ணையும் நேசிக்கிற வெள்ளந்தி மாயாண்டி. இப்போ எந்த விவசாயிகிட்டயும் எதுவும் கேட்காம நிலத்தை அரசாங்கம் பறிச்சுக்கலாம்னு சட்டம் கொண்டுவர்றாங்க. அந்தச் சூழல்ல மாயாண்டி என்ன பண்ணுவான்? புருஷனோட போராட்டத்துக்கு சோலையம்மா என்ன பண்றா… இதான் கதை. எனக்கு ஜோடி மீனா. இசை இளையராஜா அண்ணன். நானே படத்தைத் தயாரிச்சு இயக்கப்போறேன். விஷயம்            தெரிஞ்சதும், ’10 கோடிக்கு ஃபர்ஸ்ட் காப்பி முடிச்சுக் கொடுங்க’னு கேக்கிறாங்க. ‘பார்ப்போம்’னு சொல்லியிருக்கேன்!”

”நீங்க எந்த மாதிரியான படங்கள் விரும்பிப் பார்ப்பீங்க?”

”தொழில் காரணமா சில படங்கள் பார்த்திருக்கேன். ஹீரோவான பிறகு ப்ரிவியூ போறதோடு சரி. அதுவும் என் மகன் பிறந்த பிறகு வெளியே போய் படம் பார்க்கிறதே இல்லை. தியேட்டருக்குப் போக ஒரு மணி நேரம், திரும்பி வர ஒரு மணி நேரம், படம் மூணு மணி நேரம்னு மொத்தம் அஞ்சு மணி நேரம் வேஸ்ட். அந்த நேரத்துல புள்ளைங்களைக் கவனிக்கலாமேனு படம் பார்க்கிறதையே விட்டுட்டேன்!”

குடும்பத்தினருடன்....
குடும்பத்தினருடன்….

”நீங்களே சினிமாக்காரர். ஆனா, சினிமா பார்க்கிற நேரத்துல குடும்பத்தைக் கவனிக்கலாம்னு சொல்றீங்களே… சினிமா மேல அவ்வளவு வெறுப்பா… குடும்பம் மேல அவ்வளவு பாசமா?”

”அது… என் சூழ்நிலை அப்படி தம்பி.

50 வயசு வரைக்கும் நான் வாழ்ந்தது வேஸ்ட். என் முன்னாள் மனைவி, அந்தத் திருமணம், சொந்தபந்தங்கள் எல்லாமே கெட்டகனவு.

50 வயசு வரைக்கும் நான் வாழ்ந்தது வேஸ்ட். என் முன்னாள் மனைவி, அந்தத் திருமணம், சொந்தபந்தங்கள் எல்லாமே கெட்டகனவு.

நான் அஞ்சு வேளை தொழும் இஸ்லாமியன். என் 50-வது வயசுல மைசூர் ஸ்ரீரங்கப்பட்டினம் போயிருந்தேன். திப்புசுல்தான் கட்டின பள்ளிவாசல்ல முகமண் கொடுத்துட்டு வரும்போது, ஒரு முஸ்லீம் பெரியவர் என்னை அதட்டிக் கூப்பிட்டார். என்னைப் பத்தி சில தகவல்கள் சொல்லி, ‘இன்னும் 15 நாள்ல உனக்குக் கல்யாணம் நடக்கும்’னு சொன்னார். அவர்தான் என் குருனு தோணுச்சு. அவர்தான் சையத் பாவா. அவர் சொன்ன மாதிரி பத்து நாளுக்குள்ள எனக்குக் கல்யாணம் ஆச்சு. அடுத்த மாசமே மனைவி கருத்தரிச்சாங்க. மகன் பிறந்தார். ஆனா, ஏழரை மாசத்துலயே குறைபிரசவம். ‘இன்குபேட்டர்ல வைக்கணும்’னு சொன்னாங்க. 50 வருஷங்களுக்குப் பிறகு கிடைச்ச வாழ்க்கை. அதை இழந்துடக் கூடாதுனு தவிப்பு.

‘இன்குபேட்டர்ல வைக்க மாட்டேன். நெஞ்சு சூடு கொடுத்து குழந்தையைக் காப்பாத்திக்கிறேன்’னு சொல்லி புள்ளையை வாங்கிட்டு வந்துட்டேன். அன்னையில இருந்து ஒன்றரை வருஷம், ஒரு நாளைக்கு 18 மணி நேரம் மேல துணி போடாம என் நெஞ்சு மேலயே பையனை வெச்சு, நெஞ்சு சூடு கொடுத்து புள்ளையைக் காப்பாத்தினேன். இத்தனைக்கும் அந்த ஒன்றரை வருஷமும் கஷ்டமான சூழல். பொழப்புக்கும் போக முடியாது. ஏகப்பட்ட வாய்ப்பு வரும். ‘இல்லைங்க ஒரு பிரச்னை. பிஸியா இருக்கேன்’னு சொல்லிச் சமாளிப்பேன். ரொம்ப விடாப்பிடியா நின்னா ஏறுக்குமாறா சம்பளம் கேட்டு நோகடிப்பேன். அந்தத் தவிப்புதான் இந்தக் குடும்பப் பிணைப்புக்குக் காரணம்னு நினைக்கிறேன்!”

(நன்றி : ஆனந்த விகடன் 13/05/2015)

=====================================================================

மனித வாழ்க்கையே அதிசயங்கள் நிரம்பிய ஒரு பயணம் தான். பலர் அதை உணராமலே போய்விடுகின்றனர். முதல் திருமண வாழ்க்கை தோல்வி. அவர் வாழ்க்கை கிட்டத்தட்ட முடிந்துபோய்விட்டது என்று பலரும் கருதிய ஒரு தருணத்தில் அதாவது ஐம்பது வயதுக்கு பிறகு திரு.ராஜ்கிரண் அவர்களுக்கு மீண்டும் வாழ்க்கையில் வசந்தம் வீசியிருக்கிறது. இது சாதாரண விஷயம் அல்ல. யாருக்கு எப்போது வேண்டுமானாலும் எது வேண்டுமானாலும் நடக்கலாம். எந்த சூழ்நிலையிலும் நம்பிக்கை இழக்காமல், இறை நம்பிக்கை கொண்டு கொண்ட கொள்கையில் உறுதியாக இருந்தால் போதும். நிச்சயம் ஜெயித்துவிடலாம். நாம் இழந்ததாக கருதும் அனைத்தும் திரும்ப பெறலாம். இது தான் இவர் வாழ்க்கை உணர்த்தும் பொது நீதி.

ஆற்றின் ஒழுக்கி அறனிழுக்கா இல்வாழ்க்கை
நோற்பாரின் நோன்மை உடைத்து. (குறள் 48)

பொருள் :  தானும் அறவழியில் நடந்து, பிறரையும் அவ்வழியில் நடக்கச் செய்திடுவோரின் இல்வாழ்க்கை, துறவிகள் கடைப்பிடிக்கும் நோன்பைவிடப் பெருமையுடையதாகும்.

(இந்த பேட்டியை விகடனில் படித்ததிலிருந்தே திரு.ராஜ்கிரண் அவர்களை நமது தளம் சார்பாக சந்தித்து கௌரவித்து சில வார்த்தைகள் பேச முயன்று வருகிறோம்! சந்திப்புக்கு பின்னரே இந்த பதிவை அளிக்க நினைத்தோம். ஆனால் அவர் மிகவும் பிஸியான ஆர்டிஸ்ட் என்பதால் தாமதமாகிறது. அதற்குள் இதையாவது அளிக்கலாமே என்று அளித்திருக்கிறோம்! ராஜ்கிரண் அவர்களை சந்திக்க நேர்ந்தால், வேறு சுவாரஸ்யமான விஷயங்களை பெற முயற்சிக்கிறோம்! நன்றி!!)

=====================================================================

உங்களை நம்பி உங்களுக்காக ஒரு தளம்!

Rightmantra.com is a website that focuses on Spirituality, Self-development and True values without any commercial interest. We are running full-time. Give us your hand. Help us to serve you better. Join our ‘Voluntary Subscription’ scheme or Donate us liberally. Ask your near and dear ones to help us in our mission. We are striving to make this world a better place to live. Little Drops of Water Make the Mighty Ocean. If you don’t who else will?

Our A/c Details:

Name : Rightmantra Soul Solutions
A/c No. : 9120 2005 8482 135
Account type : Current Account
Bank : Axis Bank, Poonamallee Branch, Chennai – 600 056.
IFSC Code : UTIB0001182

இந்த மாத விருப்ப சந்தா செலுத்திவிட்டீர்களா?? ரைட்மந்த்ரா தொய்வின்றி தொடர உதவிடுங்கள்!

=====================================================================

Also check :

ஒரு கவர்ச்சி நடிகையின் மறுப்பக்கம்!

வாழ நினைத்தால் வாழலாம் வழியா இல்லை பூமியில் – கவியரசுவின் வாரிசு திரு.காந்தி கண்ணதாசனுடன் ஒரு சந்திப்பு – Part 1

சரித்திரம் படைத்த வெற்றியாளர்களிடம் உள்ள ஒரு ஒற்றுமை என்ன? திரு.காந்தி கண்ணதாசனுடன் ஒரு சந்திப்பு – Part 2

“ஒன்றென்றிரு.. தெய்வம் உண்டென்றிரு…” – ஏழிசை வேந்தர் திரு.டி.எம்.எஸ். அவர்களுடன் ஒரு பிரத்யேக சந்திப்பு!

=====================================================================

[END]

7 thoughts on “பிள்ளையை சுமந்த ஒரு தகப்பன் – படித்த, ரசித்த, வியந்த ஒரு பேட்டி!

  1. வாழ்வியல் நீதிகள் கொண்ட தொகுப்பே திரு. ராஜ்கிரண் அவர்களின் பேட்டி..

    ஒன்றா..இரண்டா..அவரது ஒவ்வொரு வார்த்தையும் ஓராயிரம் அர்த்தத்தை சொல்கிறது..

    பொறுமை, நேர்மை, தொழில் பக்தி, தன்னடக்கம் ,பொது நலம் என அனைத்து நற்பண்புகளையும் தொட்டு காட்டிவிட்டார்..
    அனால் நம் தளத்தில் இந்த
    பதிவை படித்த பின்பு தான் பேட்டியின் நோக்கம், பதிவின் நோக்கம் என பல வழிகளில் சிந்திக்க தூண்டுகிறது..சிந்திப்பதை செயல்படுத்தவும் வேண்டும்..

    தக்க நேரத்தில் பகிர்ந்தமைக்கு நன்றிகள் பற்பல..

  2. ஒவ்வொரு கேள்விக்கான பதிலை அவர் கூறியதை படித்த பொழுது அதற்காக பாராட்ட வேண்டுமென்று தோன்றியது. ஆனால் ஒட்டு மொத்தமாக அவரின் பேட்டியை படித்ததும் மனதில் தோன்றும் ஒரே வார்த்தை “ அவர் தான் மனிதன்”.

  3. திரு ராஜ் கிரணின் பேட்டி ஒரு துளி கூட பந்தா இல்லாமல் எதார்த்தமாக உள்ளது.

    திரு ராஜ்கிரண் அவர்கள் இந்து மதத் திற்கான விளக்கத்தை திருக்குறள் போல் அழகாக சொல்லி இருக்கிறார். மிகவும் தன்னடக்கமான மனிதரின் பேட்டி யை நம் தளத்தில் அளித்ததில் மிக்க மகிழ்ச்சி.

    தாங்கள் எடுக்கும் பேட்டியையும் படிக்க ஆவல். விரைவில் நிறைவேற்றவும்.

    நன்றி
    உமா வெங்கட்

  4. சினிமா உட்பட எந்த துறையில் இருந்தாலும் எதிர்மறையான புறக்காரணிகள் நம்மை சீண்டாதவாறு நேர்வழியில் வாழ்கையை நகர்த்த முடியும் என்று வாழும் உதாரணங்களில் திரு.ராஜ்கிரண் அவர்களும் ஒருவராய் நிற்கிறார்.

    பிள்ளையை சுமந்து தாயுமானவனாய் நின்ற பாசப்பிதா அவர்களுக்கு வணக்கங்கள்!

    பகிர்ந்தமைக்கு நன்றி சுந்தர்.

  5. வணக்கம் சுந்தர். அவரே பேட்டியில் சொல்லி இருப்பது போல அவரின் இயல்பு அவர் ஏற்றுகொண்ட கதாபாதிரங்களிலும் வெளிபடுகிறது.அதனால்தான் யதார்த்தமாக இருக்கிறது அந்த கதாபாத்திரங்கள்.ஒரு கொள்கையோடு வாழுகின்ற அருமையான தந்தைக்கு வாழ்த்துக்கள்.நன்றி .

  6. என் ராசாவின் மனசிலே படத்தில் இருந்தே திரு.ராஜ்கிரண் அவர்களின் யதார்த்தமான நடிப்பும், அந்த முரட்டு குரலின் ஓசையும், அவர் உருவத்திற்கு ஏற்ற மாதிரியான அவர் மீசையும் ரசிக்கும் படி இருக்கும்.
    முடிந்தவரை அவர் படங்கள் அனைத்தும் பார்த்து விடுவேன்.
    பேட்டியில் அவர் கூறியுள்ள அனைத்தும் அவர் குரலுடன் ஒப்பிட்டு பார்த்து படிக்கும் போது இன்னும் ரசனையாக உள்ளது.
    கஷ்டப்பட்ட சமயத்திலும் அவர் தன்னம்பிக்கை விடாமல் வேட்டி விளம்பரத்தில் நடிக்காமல் இருந்தது அவர் நமக்கு சொல்லும் ஒரு பாடம்.
    எல்லோருக்கும் பெற்ற பாசம் இருக்கும் ஆனால் குறை மாச குழந்தையை நெஞ்சு சூடு கொடுத்து காப்பாற்றியது நாம் நம் பிள்ளைகள் மேல் வைத்து இருக்கும் பாசத்தை போல நூறு மடங்கு. இதில் நாம் இன்னும் வளரவேண்டும்.
    எல்லாவற்றிற்கும் சிகரம் வைத்தது போல 50 வயதில் ஆண்டவன் கொடுத்த பரிசு (அவர் குடும்பம்) இறைவன் ஒரு கருணை வடிவானவன் என்பதை காட்டுகிறது.
    அவர் ஒரு முஸ்லிம் என்பது இந்த பதிவிற்கு பிறகு தான் பல பேருக்கு தெரியும்.(என்னை போல). ஹிந்து முஸ்லிம் விளக்கம் நன்றாக இருந்தது.
    இவரை மாதிரி இன்னும் பல பேர் இருந்தால் உலகமே அன்பு மயமானதாக மாறி விடும்
    என்றும் அன்புடன்.

Leave a Reply to Mugunth Cancel reply

Your email address will not be published. Required fields are marked *