Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Thursday, March 28, 2024
Please specify the group
Home > Featured > நடிகரின் சந்திப்பு ஏற்படுத்திய திருப்பு முனை! மகாபெரியவா ஜெயந்தி SPL 2

நடிகரின் சந்திப்பு ஏற்படுத்திய திருப்பு முனை! மகாபெரியவா ஜெயந்தி SPL 2

print
னித வாழ்க்கையே விசித்திரமானது. எங்கே, எப்போது, யார் மூலம் திருப்பு முனை ஏற்படும் என்றெல்லாம் தெரியாது. நாம் மிக மிக முக்கியமான சந்திப்பாக நினைப்பது வெகு சாதாரணமாக பத்தோடு பதினொன்றாக போய்விடும். வெகு சாதாரணமாக நினைப்பது மிகப் பெரிய திருப்பு முனையை  ஏற்படுத்திவிடும்.

மஹா பெரியவா அவர்கள் மீதும் நாம் எப்போதுமே பெரு மதிப்பு வைத்திருந்தாலும், சில ஆண்டுகளுக்கு முன்பு வரை நமக்கு அவரை பற்றிய அதிகம் தெரியாது. அவர் புரிந்த அற்புதங்கள் பற்றியும் தெரியாது. அவரது மகத்துவம் பற்றியும் தெரியாது.

நாங்கள் அரக்கோணத்தில் இருந்தபோது என் பெற்றோர் ஒரு முறை (அதாவது 30 ஆண்டுகளுக்கு முன்பு) என் சித்தியின் (அம்மாவின் தங்கை) திருமண பத்திரிக்கையை பெரியவாளிடம் வைத்து ஆசி பெறுவதற்காக சென்றிருக்கிறார்கள். அப்போது மஹா சுவாமிகளை நம் பெற்றோர் தரிசித்திருக்கிறார்கள். அவ்வளவு தான் நமக்கும் காஞ்சி மடத்துக்கும் உள்ள தொடர்பு.

mahaperiyava1 copy

மற்றபடி, தேடிச் சோறு நிதம் தின்று, சின்னஞ்சிறு கதைகள் பேசி, மனம் வாடி துன்பம் மிக உழன்று, உண்டு, உறங்கி, எழும் – பூமிக்கு பாரமான ஒரு வித வாழ்க்கையைத் தான் – வாழ்ந்துவந்தோம்.

இந்நிலையில், சில ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு பேட்டி தொடர்பாக பிரபல நடிகர் வினுச்சக்கரவர்த்தியை அவரது இல்லத்தில் சந்திக்க நேர்ந்தது.

வினுச்சக்கரவர்த்தியை ஒரு வில்லன் நடிகராக ஒரு குணச்சித்திர நடிகராக நாம் அறிவோமே தவிர, அவரை பற்றி அவ்வளவாக நமக்கு தெரியாது.

DSC01225

பேட்டியின் போது தான் தெரிந்துகொண்டோம் அவர் எவ்வளவு ஒழுக்கமானவர் என்றும், திரைத் துறையில் கெட்டுப் போவதற்கான அத்தனை வாய்ப்புக்கள் கொட்டிக கிடந்தும் அவர் எந்தவித தீய பழக்கங்களும் இல்லாதவர் என்றும். எனவே அவர் மீது வைத்திருந்த மதிப்பு பன்மடங்கானது.

பேட்டியின் முடிவில், நமக்கு வினுச் சக்கரவர்த்தி அவர்களுக்கும் ஒருவித நட்பு ஏற்பட்டுவிட்டது.

இது நடந்து சில மாதங்கள் இருக்கும். ரைட்மந்த்ரா பிறந்த நேரம் அது. ஒரு நாள் வினுச் சக்கரவர்த்தி அவர்களிடம் இருந்து நமக்கு அலைபேசி வந்தது.

DSC01239

“என்ன தம்பி எப்படி இருக்கீங்க? நீங்க எடுத்த பேட்டி ரொம்ப நல்லா இருந்ததுன்னு நிறைய பேர் சொன்னாங்க. யூ.எஸ்.ல இருந்து கூட இன்னைக்கு காலைல போன் வந்தது. உங்க நம்பரை நான் மிஸ் பண்ணிட்டேன். அவங்க கிட்டே கேட்டு தான் இப்போ உங்களுக்கு பண்றேன்!” என்றார்.

“நல்லாயிருக்கேன் சார்…. பேட்டி முடிஞ்சதும் உங்க பேட்டியோடு முழு வெர்ஷனை ஒரு பிரிண்ட்-அவுட் தரலாம்னு உங்களுக்கு போன்  செஞ்சேன்.ஆனால், போன் வேலை செய்யலே…”

“அட… ஆமாம் தம்பி. நான் என்னோட மகன் வீட்டுக்கு லண்டனுக்கு போய்ட்டேன். இப்போ போனவாரம் தான் திரும்பி வந்தேன். அப்புறம் என்ன பண்றாப்பல தம்பி?”

அப்போது அவரிடம் ஆன்மீக, தனிமனித மற்றும் சமூக முன்னேற்றத்துக்காக நாம் துவங்கியிருக்கும் இந்த தளம் பற்றி சொன்னோம்.

“வேலையும் பார்த்துகிட்டு இவ்ளோ பெரிய விஷயம் பண்றீங்கன்னா அதை உண்மையிலேயே பாராட்டனும். அதுவும் நீங்க நடத்துறது ஆன்மீக  வெப்ஸைட் வேற. இன்னைக்கு நாட்டுக்கும் நம்ம இளைஞர்களுக்கும் அவசியம் தேவையான ஒன்னு. ரொம்ப சந்தோஷம். அப்புறம் சுந்தர் இன்னைக்கு என் பிறந்த நாள்!”

“அடடே…. வாழ்த்துக்கள் சார். WISH YOU MANY MORE HAPPY RETURNS OF THE DAY!”

“நீ என்ன பண்றே… இன்னைக்கு சாயந்திரம் ப்ரீயா இருந்தேன்னா வெத்தலை, பாக்கு, பழம் இதெல்லாம் வாங்கிட்டு என் வீட்டுக்கு வா… வரும்போது ஒரு வீடியோகிராஃபரையும் காமிராவோட கூட்டிகிட்டு வா… நான் உனக்கு ஆன்மிகம் பற்றி ஒரு பேட்டி தர்றேன்!” என்றார்.

நமக்கு ஒரே இன்ப அதிர்ச்சி. கரும்பு தின்ன கசக்குமா? தளம் துவங்கி ஒரு சில மாதங்களே ஆகியிருக்கும் ஒரு பிரபல நடிகர் நம்மை கூப்பிட்டு ஆன்மீக பேட்டி தருகிறேன் என்றால் எப்படி இருக்கும்?

நண்பர்கள் ராஜா, மற்றும் விஜய் ஆனந்த ஆகியோரிடம் சொல்லி, ஒரு வீடியோகிராபரையும் ஏற்பாடு செய்து அன்று மாலை அழைத்துச் சென்றோம்.

IMG_8171

நடப்பது கனவா நனவா என்கிற சந்தேகம் நமக்கு. ஏனெனில், அன்று காலை வரை அவரிடம் இருந்து இப்படி ஒரு அழைப்பு வரும் என்று நமக்கு தெரியாது. நமது வியப்பை அவரிடம் தெரிவித்தோம்.

“அது ஒண்ணுமில்லே சுந்தர்….ஆன்மிகம் என்கிற உன்னதமான விஷயத்தை நீங்க எடுத்திருக்குறதால ஆண்டவனே உங்களுக்கு தேவையான உதவிகளை செய்வான்!”

பேட்டிக்கு ஒப்புக்கொண்டு வீடியோகிராபரையும் அழைத்துச் சென்றோமே தவிர, ஆன்மீகத்துல இவர் என்ன பேட்டி கொடுப்பார் என்று எனக்கு உள்ளுக்குள் ஒரு சந்தேகம் இருந்தது. ஆனால் பேட்டியில் மனிதர் பேச ஆரம்பித்தார் பாருங்கள்… ஒரு கட்டத்தில் எனக்கு நெகிழ்ச்சியில் கண்ணீர் முட்டி விட்டது.  நாம ஏதோ உணர்ச்சிவசப்பட்டுவிட்டோம் போல என்று நினைத்து நண்பர்களை பார்த்தால் அவர்களுக்கும் அப்படித்தான்.

IMG_8175 copyபேட்டி அளித்துக்கொண்டிருந்த திரு.வினுச்சக்கரவர்த்தியோ பெருகி வந்த கண்ணீரை கட்டுப்படுத்திக்கொண்டு பேசிக்கொண்டிருந்தார். அந்தளவு மனிதர் ஊனை உருக்கி எடுத்துவிட்டார்.

பின்னே மகா பெரியவா அவர்களை நேரில் தரிசித்து அவர் கால்களை தொடும் பாக்கியம் பெற்றவராயிற்றே…! (அது பற்றிய விரிவான தகவலுக்கு கீழே இணைக்கப்பட்டுள்ள வீடியோவை பாருங்கள்!)

கலியுகத்தில் கண்கண்ட தெய்வமாய் விளங்கியவரும், தன்னை நாடி வந்த பக்தர்களின் பாவங்களை பார்வையினாலேயே பொசுக்கியவருமான,
மகா பெரியவாவை பற்றி அவர் நிகழ்த்திய அற்புதங்களை பற்றி நான் நான் நிறைய கேள்விப்பட்டிருக்கிறேன். படித்திருக்கிறேன். அவர் மீது எனக்கு பெரு மதிப்பு உண்டு. ஆனால் அவரையே நினைத்து உருகியது கிடையாது. ஆனால் மேற்படி நடிகர் அவரது அனுபவத்தை கூறியவுடன் எனக்கு பெரியவா மீது பேரன்பும் பெருமதிப்பு ஏற்பட்டதோடல்லாமல் எனக்கு பெரியவாவை பற்றி மேலும் தெரிந்துகொள்ளும் ஆர்வம் ஏற்பட்டது. பல நூல்களை படித்தேன். தொடர்ந்த தேடலின் விளைவாக இதோ இன்று அவரது பரம பக்தனாக மாறிவிட்டேன்.

தெய்வம் என்னை தடுதாட்கொண்டது. வேறென்ன சொல்ல?

Maha Periyava 2மகா பெரியவர் தான் வாழ்ந்த காலத்தில் பக்தர்கள் வாழ்க்கையில் நிகழ்த்திய அற்புதங்கள் பலப் பல. ஏன் தற்போது கூட அவரது ஆத்யந்த பக்தர்களின் வாழ்வில் அவர் நிகழ்த்தி வரும் அற்புதங்களுக்கு குறைவே இல்லை.

தன்னை சந்திக்க வரும் எத்தனையோ பேருக்கு தன்னுடைய புண்ணியத்தின் பலன்களை வழங்கி அவர்களின் கர்மவினைகளை உடைத்தெறிந்து நல்லது நடக்க வைத்தவர் மகா பெரியவர்.

தான் செய்த உபதேசப்படி வாழ்ந்து காட்டிய மகான். சாட்சாத் அந்த ஈஸ்வரனின் அம்சமாக கருதப்பட்ட அவர் மீது பக்தர்கள் பேரன்பு வைத்திருந்தனர். தன்னை நாடி வருவோர்க்கெல்லாம் குறைகளை தீர்க்கும் கற்பக விருட்சமாக திகழ்ந்தார் மகா பெரியவா. தனது மகா சமாதியில் ஜீவனுடன் இருந்து தற்போதும் பக்தர்களின் குறைகளை தீர்த்து வருகிறார்.

எந்த ஜென்மத்தில் நான் செய்த புண்ணியமோ தெரியாது…. கடும் சோதனை, அதன் விளைவாக ஏற்பட்ட தேடல், பின்னர் நல்லோர்களின் நட்பு, சாதனையாளர்களுடன் அறிமுகம், சான்றோர்களின் ஆசி என தற்போது வாழ்க்கையே தலை கீழாக மாறிவிட்டது என்று தான் சொல்லவேண்டும்.

நமக்கென்று எந்த பெருமையும் இந்த உலகில் இல்லை. வேண்டவும் வேண்டாம். மகா பெரியவா நம்மை ஏற்றுக்கொண்டாலும் ஏற்றுக்கொள்ளாவிட்டாலும் அவரின் பக்த கோடிகளில் அடியேனும் ஒருவன் என்கிற ஒரு பெருமையே எனக்கு போதும்.

“நான் அவர் பக்தன்” என்று ஒருவர் சொல்வது எளிது. ஆனால் அவர் கூறியுள்ள நெறிமுறைப்படி வாழ்வது மிக மிக கடினம். ஆனால் அப்படி வாழ அனுதினமும் முயற்சிக்கிறேன் என்பது தான் நிஜம்.

நம்மை ஒவ்வொரு கணமும் வழி நடத்துகிறவர் அவரே.

லௌகீக வாழ்க்கையில் உழன்று, பல்வேறு ஆசாபாசங்களில் சிக்கி, பொருளுக்கு அலைந்திடும் பொருளற்ற வாழ்க்கையை வாழ்கிறேன் என்பது தான் நிதர்சனம்.

குருவின் பெயரை சொல்லவோ அவரைப் பற்றி எழுதவோ எனக்கு எந்தளவு தகுதி இருக்கிறது என்று தெரியாது. ஆனால் தகுதியுடையவனாக என்னை ஆக்கிக்கொள்ள முயற்சிக்கிறேன்… முயற்சிக்கிறேன்…. முயற்சித்துக்கொண்டே இருக்கிறேன். அந்த முயற்சியில் ஒரு நாள் வெற்றி பெற்றுவிட்டாலே போதும், இந்த பிறவியின் பலனை அடைந்துவிடுவேன்.

* இந்த பதிவை நாம் இதற்கு முன்பு பலமுறை அளிக்க முயற்சித்தும்  (அதாவது வினுச் சக்கரவர்த்தி அவர்களின் பேட்டி வீடியோ) முடியவில்லை. ஏதோ ஒரு தடங்கல் ஏற்பட்டுக்கொண்டே இருந்தது. இன்று தான் அளிக்க முடிந்தது. 2014 ஆண்டு தனது ஜெயந்தி அன்று இந்த பதிவு வெளியாகவேண்டும் என்று மஹா பெரியவா அவர்கள் விரும்பியிருக்கிறார். ஞானிகளின் செயல்களுக்கு காரணங்களை அவர்களைத் தவிர யார் அறிவார்கள்?

===========================================================

மஹா பெரியவா மற்றும் ஆன்மீகம் குறித்து நம் தளத்திற்கு நடிகர் வினுச்சக்கரவர்த்தி அவர்கள் அளித்த எக்ஸ்க்ளூசிவ் பேட்டி

ACTOR VINU CHAKRAVARTHI’S EXCL. INTERVIEW ABT MAHA PERIYAVA

===========================================================
மஹா பெரியவா அருள்வாக்கு : –

*நாம் விரும்பியோ விரும்பாமலோ இந்த பூமியில் பிறப்பெடுத்துவிட்டோம். யாராக இருந்தாலும் என்றாவது ஒருநாள் இவ்வுலகைவிட்டுப் போய் தான் ஆக வேண்டும். அதுவரை இந்தப்பிறவியால் நம் மனதில் எவ்வளவோ அழுக்கை ஏற்றுக்கொண்டு விடுகிறோம்.

* மனம், வாக்கு, உடம்பு ஆகியவற்றால் எவ்வளவோ பாவங்களைச் செய்துவிட்டோம். அதே உடலைக் கொண்டே பாவங்களுக்குப் பிராயச்சித்தமும் தேடவேண்டும்.

* சாஸ்திர நூல்கள், திருத்தலங்கள், தீர்த்தம் முதலிய நல்ல விஷயங்களில் நம் மனம் ஈடுபடவேண்டும். புண்ணியங்களைச் செய்து பாவங்களைக் கரைத்துவிடவேண்டும்.

* நம் மனதில் எப்போது ஒழுக்கம், கட்டுப்பாடு, மனத்தூய்மை எல்லாம் உண்டாகிறதோ அப்போது தான் உண்மையான பக்தியும், ஞானமும் உண்டாகும். அதுவரை நாம் செய்யும் பூஜை, வழிபாடு எல்லாம் இரண்டாம்பட்சம் தான்.

* நல்லதையே சிந்தித்து இறையருளைப் பூரணமாகப் பெற்றவன் ஒருவன் உலகில் இருந்தாலும் போதும். அவன் மூலமாக இந்த தேசம் முழுதும் நன்மை பெறும்.

===========================================================

 மஹா பெரியவா ஜெயந்தி ஸ்பெஷல் மேலும் தொடரும்….
[END]

15 thoughts on “நடிகரின் சந்திப்பு ஏற்படுத்திய திருப்பு முனை! மகாபெரியவா ஜெயந்தி SPL 2

  1. வினு சக்கரவர்த்தி அவர்களின் பேட்டியை பார்க்க முடியவில்லை. Will see it when i go home. ஆனால் மகா பெரியவருடன் அவருக்குள்ள தொடர்பை பற்றி ஒரு புத்தகத்தில் படித்திருக்கிறேன்,

    குருவின் பிறந்த நாளில் அவரது பக்தரின் பேட்டி நம் தளத்தில் வர வேண்டும் என்பது பெரியவரின் அனுக்கிரகம்

    நன்றி
    உமா

    1. மிகவும் அருமையான வீடியோ. திரு வினுச்சக்ரவர்தியின் பேச்சு எங்களை இருந்த இடத்தை விட்டு அசையாது முழு வீடியோ வையும் பார்க்க வைத்த பெருமை ரைட் மந்த்ராவை சாரும்.

      அவர் ஆரம்பத்தில் கொடுத்த ஆன்மிக Definition மிக அருமை. பகவான் ரமண மகரிஷி 600 ஆண்டுகளுக்கு முன் பிறந்து மனித பிறவி எடுத்து மக்கள் மகான் ஆனது பற்றி இப்பொழுது தான் தெரிந்து கொண்டோம்.

      மகா பெரியவரை பற்றி உருகி உருகி பேசி எங்களை உருக வைத்து விட்டார். அவர் இப்படி பேசுவார் என்று எதிர பார்கவில்லை. அவர் எவ்வளவு புண்ணியம் செய்திருக்கிறார் இறைவனின் காலை பிடிப்பதற்கு. பார்க்கும் பொழுது கண்கள் கசிந்து விட்டது.

      விவேகாநந்தரை பற்றி அற்புதமாக பேசினார். அம்மாவே நாம் வணங்கும் தெய்வம் என்று தன்னை வணங்கிய பையனுக்கு கூறி அம்மாவின் மகிமையை எடுத்துகூறிநார்.

      கடைசியில் ரைட் manthara விற்கு Definition கூறி நிகழ்ச்சி மிகவும் நன்றாக நிறைவு செய்து விட்டார். கண்ணீரும் தண்ணீரும் ஆன்மிகத்திற்கு தேவை என்று கூறி இறைவனை நெருங்குவதற்கு உண்டான ஆயுத்தை கூறி மெய் சிலிர்க்க வைத்து வீட்டார் . வாழ்க ஆன்மிகம் வளர்க இறை தொண்டு
      நன்றி
      உமா

  2. மிக்க நன்றி சுந்தர் சார். நல்ல விளக்கத்தை கேட்ட சந்தோசம். நான் வினுசக்ரவர்த்தி சாரை ஒரு நடிகராக தான் பார்த்துள்ளேன் . ஆனால்
    இன்றுதான் அவர் ஒரு சிறந்த ஆன்மிக மனிதராகவும் பார்க்கிறேன்.
    அவரது பேட்டி என் மனதில் ஒரு நிறைவை தந்துள்ளது. தொடரட்டும்
    தங்களது பயணம். வாழ்க வளமுடன் .

  3. முதலில் இந்தப் பேட்டிக்காக என்னையும் அழைத்துச் சென்ற சுந்தர் அண்ணா-விற்கு நன்றி…! முதலில் சுந்தர் அண்ணா என்னை அழைத்தவுடன் ஒரு திரைப்பட நடிகரைக் காணப் போகிறோம் என்றுதான் வந்தேன். ஆனால் அய்யா வினுச்சக்கரவர்த்தி அவர்களின் பேட்டி, அவரை வேறு ஒரு கோணத்தில் எங்கள் முன் நிறுத்தியது. ரொம்பவும் கறாரான மனிதர் அவர். கோபக்காரரும் கூட. ஆனால் அவரின் கோபத்தில் ஒரு அக்கறை இருக்கும். எல்லாவற்றிலும் ஒரு ஒழுங்கைக் கடைபிடிக்க நினைப்பவர். பேட்டி எடுக்க நாங்கள் சென்றிருந்த போது, புகைப்படக் கேமராவில் பேட்டரி போடாமல் மறந்து எடுத்துச் சென்றுவிட்டோம், பேட்டிக்கு அவர் தயாராகி வந்தவுடன், அவரையும், வீட்டில் இருந்த மற்ற புகைப்படங்களையும் புகைப்படம் எடுக்கச் சொன்னார். நாங்கள் மறந்தவாறே பேட்டரி இல்லாத கேமராவில் கிளிக்க, வெறும் சத்தம் மட்டும் தான் வந்தது. மனிதர் கடுப்பாகி எங்களை கோபமாகக் கடிந்துகொண்டார். எங்களுக்கு என்ன செய்வதென்றே தெரியாமல் விழிக்க, திட்டியதற்கான காரணத்தை அவரே சொன்னார் “நான் ஏன் திட்டினேன் தெரியுமா?…இப்ப திட்டினா தான் அடுத்த தடவை மறக்காம எல்லாம் சரியா எடுத்துட்டு வருவீங்க. ஒவ்வொரு தடவை கிளம்பும்போதும் எல்லாம் சரியா இருக்கான்னு பாக்குற எண்ணம் வரும்”…உண்மைதாங்க. இன்னைக்கும் நான் வெளிய கிளம்பும்போது எல்லாம் இருக்கானு பார்த்துட்டு தான் கிளம்புறேன்.

    பேட்டியின் போது மகா பெரியவரைப் பற்றி பேசும்போது அவருடன் சேர்ந்து நாங்களும் நெகிழ்ந்து போனோம். கடைசியில், பேட்டி முடிந்து நாங்கள் கிளம்பும்போது நெற்றியில் திருநீறு இட்டு எங்களை வாழ்த்தி அனுப்பினார். நெகிழ்ந்து போனோம்.

    “கடமையைச் செய்; பலனை எதிர்பார்”

    விஜய் ஆனந்த்

    1. சுந்தர் சார்,
      நல்ல பதிவை கொடுத்துள்ளீர்கள். அருமை. சங்கர ஜெயந்திக்காக நேற்று காஞ்சி மடம் பெரியவாவின் சன்னதியை குடும்பத்துடன் சென்று தரிசனம் செய்துவிட்டு வந்தோம். மனதிற்கு சந்தோஷம்.

      விஜய்,
      மிக நன்றாக பதில் தந்திருக்கிறீர்கள். இப்பொழுது இதன் மூலம் நீங்கள் நல்ல ஒரு அணுகுமுறையை கற்றுகொண்டீர்கள். இதற்கு நம் சுந்தர் சாருக்கு பாராட்டுக்கள்.

      நன்றியுடன் அருண்.

  4. நமஸ்தே நன்றி தங்களின் இந்த பகிர்தலுக்கு நன்கு உள்ளது

  5. சார்,

    உங்களுடைய நற்பணி தொடர நான் காஞ்சி மகா பெரியவாளை மனதார பிரார்த்திக்கிறேன்…..

    நன்றி
    கார்த்திக்

  6. வீடியோ முழுமையும் பார்த்தேன், மகா பெரியவா ஆத்மார்ததிர்க்கும், வினு சாரின் பகிர்தலுக்கும் ”ரைட் மந்த்ரா” சிறப்பான பணிக்கும் நன்றிகள்…

  7. ஜெயா ஜெயா சங்கர ஹர ஹர சங்கர
    மஹா பெரியவ சரணம்

  8. நடிகர் வினு சக்கரவர்த்தி அவர்களை ஒரு நல்ல நடிகராக அறிவோம்.
    கோபம் இருக்கும் இடத்தில் தான் குணம் இருக்கும் என்பார்கள்.
    அவர் மகா பெரியவ அவர்களிடம் கொண்டுள்ள பக்தி அவர் பேட்டியில் தெரிகிறது.
    நம் தளத்தில் மகா பெரியவா பதிவுகளுக்கு மட்டும் நிறைவான பகிர்தல் வருவதே அவர் மீது நாம் கொண்டிருக்கும் பக்தியும் மரியாதையையும் காட்டுகிறது
    மகா பெரியவா அவர்களின் அருள்வாக்கு நாம் எல்லோரும் படித்து புரிந்து கடைபிடிக்கவேண்டும்.
    படிக்க கேட்க அருமையாக உள்ள பதிவு. நன்றி.

  9. நான் நம்பியார் அவர்களை பற்றி அறிவேன் அதே போன்று வினுவும் இருப்பது மகிழ்ச்சி!

    CHANDRASEKARAN

  10. I dont have system in home. Office la video open agadhu
    mudindhal , can you put it in text format….

  11. Dear Sundarji,

    Excellent speech by Mr.Vinuchakravarthy.

    கண்களில் வடிந்தது கண்ணீர்

    Thanks & Regards

    Harish V

Leave a Reply to HARISH Cancel reply

Your email address will not be published. Required fields are marked *