Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Friday, March 29, 2024
Please specify the group
Home > Featured > இன்னும் பொறுப்புள்ள மனிதரின் தூக்கத்தினால் பல பொன்னான வேலையெல்லாம் தூங்குதப்பா!

இன்னும் பொறுப்புள்ள மனிதரின் தூக்கத்தினால் பல பொன்னான வேலையெல்லாம் தூங்குதப்பா!

print
தேவாரம், திருவாசகம் உள்ளிட்ட சைவத் திருமுறைகள் பாடிய 63 நாயன்மார்களும், திவ்விய பிரபந்தம் பாடிய பன்னிரு ஆழ்வார்களும் பிறந்த தமிழ் நாட்டில் பக்தி இலக்கியங்களுக்கு ஏற்பட்டுள்ள நிலையை பாருங்கள்.

சமீபத்தில் இணையத்தில் படித்த தினமலர் நாளிதழ் கட்டுரை செய்தி ஒன்றை இங்கே பகிர்ந்துகொண்டிருக்கிறேன்.

இந்த கட்டுரை சம்பந்தப்பட்ட நாளிதழில் வெளியாகி இரண்டு ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. ஆனாலும் ஆட்சிகள் மாறியும் காட்சிகள் மாறவில்லை என்பதே நிதர்சனம். இன்னும் பொறுப்புள்ள மனிதரின் தூக்கத்தினால் பல பொன்னான வேலையெல்லாம் தூங்குதப்பா’ என்கிற பட்டுக்கோட்டையாரின் பாடல் தான் நினைவுக்கு வருகிறது.

ஓதுவார் குறையை அரசிடம் ஓதுவார் யார்…? பக்தி இலக்கியங்களுக்கு உயிர் வருமா?

தமிழகத்திற்கும், தமிழ் மொழிக்கும் பெருமை சேர்த்த தேவாரம், திருவாசகம், நாலாயிர திவ்யபிரந்தம், பெரியபுராணம் மற்றும் பதிகப் பாடல்களை தெரிந்த ஓதுவார், அரையர்கள் பலர் இருந்தும், அவர்களை அரசு பயன்படுத்திக் கொள்ளாமல் புறக்கணித்து வருகிறது. இதை மாற்றி, பழைமை வாய்ந்த சைவ, வைணவப் பாடல்களை தினந்தோறும் கோவில்களில் ஒலிக்கச் செய்யவும், வகுப்புகள் எடுக்கவும் அறநிலையத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சைவக் கோவில்களில், பூஜையின் போது, தேவார திருமுறைகளைப் பாடும் பணியைச் செய்பவர்கள் ஓதுவார்கள். புகழ்பெற்ற சைவ மடங்களில், குருகுல முறைப்படி படித்து வந்த இவர்களுக்கு, அறநிலையத்துறையினர் உரிய பணி வழங்காமலும், வழங்கியவர்களுக்கு முறையான சம்பளம் வழங்காமலும் உள்ளனர்.

இதனால், பாடல்பெற்ற தலங்களில் கூட ஓதுவார்கள் பணியில் இல்லாத அவலம் நீடிக்கிறது. சைவப் பெரியார் திருநாவுக்கரசர் தேவாரத்தை அரங்கேற்றிய, கடலூர் மாவட்டம் திருவதிகைக் கோவிலிலும், சுந்தரமூர்த்தி நாயனார் தேவாரத்தை அரங்கேற்றிய, திருவெண்ணெய் நல்லூரிலும் இன்று தேவாரம் பாட ஓதுவார் இல்லை.

வைணவக் கோவில்களில் பாசுரம் பாடும் பணியில், “அரையர்’கள் ஈடுபடுத்தப்படுவர். வைணவத்தில் புகழ்பெற்ற வைபவமான வைகுண்ட ஏகாதசியன்று நடக்கும், பகல்பத்து, ரா பத்து ஆகியவை தமிழ் திருவிழாக்களாகவே நடந்து வருகின்றன. சைவக் கோவில்களைப் போல், வைணவக் கோவில்களிலும், “அரையர்’ சேவையின்றிப் பூஜைகள் அரங்கேறி வருகின்றன.

ஓதுவார்களின் கோரிக்கை குறித்து, இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் கூறியதாவது: பாடல் பெற்ற சைவக் கோவில்களில் ஓதுவர்களும், புகழ்பெற்ற வைணவக் கோவில்களில் அரையர்களும் நியமிக்கப்படவில்லை. அப்படி நியமிக்கப்பட்ட ஒரு சில ஓதுவார்களுக்கு மாதம் 30 ரூபாய் முதல் 100 ரூபாய் வரை சம்பளமும், தினமும் ஒரு பட்டைச்சாதப் பொட்டலமும் வழங்கப்படுகிறது.

முதல்வர் கருணாநிதியின் சொந்த ஊரான திருக்குவளை ஈஸ்வரன் கோவிலில் ஓதுவார் சேவை செய்பவருக்கு மாதம் 70 ரூபாய் சம்பளம் வழங்கப்படுகிறது.

ஆனால், சிதம்பரம் கோவிலில் போராட்டம் நடத்திய ஆறுமுகசாமிக்கு அரசு 3,000 ரூபாய் சம்பளம் வழங்கிறது. ஏன் இந்த பாரபட்சம்?

தமிழில் பெயர் வைக்கும் சினிமாவுக்கு அரசு வரிச்சலுகை வழங்குகிறது. ஆனால், கோவில்களில் தமிழில் பாடுபவர்களுக்கு சம்பளமும் குறைவு; சலுகைகளும் இல்லை.

தர்மபுரம் சுவாமிநாதன் என்ற ஓதுவாரைத் தனது ஆட்சிக்காலத்தில் அரசவைக் கவிஞர் ஆக்கி அழகு பார்த்தார் எம்.ஜி.ஆர்., அவர்களுக்கு கலைமாமணி விருது வழங்கியும் கவுரவித்தார்.

இப்போது அரசு முன்னுரிமை தராததால் யாரும் சமய இலக்கியங்களை படிக்க முன்வருவதில்லை. படித்தவர்கள் உதவியின்றி வறுமையில் உள்ளனர். தஞ்சையில் உலகத்தமிழ் மாநாடு நடந்த போது, 108 ஓதுவார்கள், அரையர்களைக் கொண்டு பாசுரம், தேவாரம் பாடி, மாநாடு துவங்கப்பட்டது.

தற்போதைய செம்மொழி மாநாட்டில் ஓதுவார்களுக்கு அழைப்பும் இல்லை; மரியாதையும் இல்லை. ஓதுவார்கள், அரையர்களுக்கு அடிப்படை சம்பளம் 3,000 ரூபாய் வழங்க வேண்டும். அனைத்து கோவில்களிலும் இந்த பணியிடங்களை நிரப்ப வேண்டும். இவ்வாறு அர்ஜுன் கூறினார்.

தேவாரம், திருவாசகம், நாலாயிர திவ்விய பிரபந்தம், ஆண்டாள் பாடல்கள், கம்ப ராமாயணம், வில்லிபுத்தூரார் பாரதம், பெரியபுராணம், குற்றால குறவஞ்சி, குமரகுருபரர் பாடல்கள், பாரதியார் பாடல்கள், பதிகங்கள், திருப்புகழ்.

அந்தந்தத் திருத்தலத்திற்கு உரிய பாடல்கள், அவ்வையார், கபிலர், இரட்டைப் புலவர்கள் எனப் பல்வேறு காலக்கட்டங்களில் வாழ்ந்த அருந்தமிழ் புலவர்களின் பாடல்களை கோவில்கள் முழுவதும் ஒலிக்கச் செய்ய வேண்டும்.

இதற்கான வகுப்புகளை தினமும், காலை, மாலை வேளைகளிலும், விடுமுறை நாட்களிலும் நடத்த வேண்டும். ஏற்கனவே, பல கோவில்களில் சமய வகுப்புகள் நடத்தப்படுகின்றன.

அனைத்துக் கோவில்களிலும் ஓதுவார்கள் நியமிக்கப்பட்டு, அவர்களுக்கு முறையான சம்பளம் வழங்கி, பக்தி இலக்கிய வகுப்புகள் நடத்த வேண்டும். பல நூறு கோடிகளை செலவு செய்து செம்மொழியை சிறப்பிக்க மாநாடு கண்ட தமிழக அரசு, சமயத்தமிழையும், பக்தி இலக்கியங்களையும் காக்க நடவடிக்கை எடுக்குமா?

(நன்றி : Dinamalar.com (via) rssairam.blogspot.in)

8 thoughts on “இன்னும் பொறுப்புள்ள மனிதரின் தூக்கத்தினால் பல பொன்னான வேலையெல்லாம் தூங்குதப்பா!

  1. பணம் தான் பலரை இது போன்ற அரிய நம் அடையாளங்களை அலட்சிய செய்ய வைக்கிறது…நம் நாட்டில் அறநிலையத்துறை என்ற அமைப்பு செய்யல படுகிறாதா என்பதே தெரியவில்லை
    சிறுவயதில் எனக்கு ஒரு சிறிய ஆசை இது போல் நம் வரலாற்று மகத்துவத்தை ஆராயிச்சி செய்யும் பணியில் அமர வேண்டும் என்று …அனால் அதற்க்கு வாய்பின்ரீ போய்விட்டது …அப்போ அதற்கான முயற்சி செய்யும் தெளிவில்லை

  2. நெஞ்சு பொறுக்குதில்லையே. இன்று தினமும் எத்தனை புதிய கோவில்கள் பகட்டான முறையில் உருவாகி பிரபலமடைகிறது. ஆனால் தென்னிந்தியாவில் குறிப்பாக தஞ்சை மாவட்டத்தில் எத்தனையோ பழமையான கோவில்களில் தினசரி பூஜை செய்யக்கூட அர்ச்சகர்கள் இல்லாத நிலைமை. பூஜை செய்ய முன் வருவோர்க்கு சரியான ஊதியம் இல்லை. நாம் எங்கே போகிறோம் தெரியவில்லை.

    1. மிகச் சரியாக சொன்னீர்கள். இருக்கின்ற கோவில் போதாதா? புது புது கோவில்கள் எதற்கு? மேலும் ஆன்மீகத்தை வளர்க்க எவரும் இப்போது கோவில் கட்டுவதில்லை. நன்கு கல்லா கட்டவே கோவில் கட்டுகின்றனர்.

      லட்சங்கள் செலவு செய்து புது கோவில் கட்டுவதை விட பழைய சிதிலமடைந்த கோவில்களை தத்தெடுத்து செப்பனிட்டு தரலாம்.

      – சுந்தர்

      1. நானும் இப்படிதான் நினைத்திருந்தேன் …ஆனால் எந்த வேலையை செய்தாலும் அது இறையருள் இன்றி நடவாதெனும் போது புதிய கோவில்கள் உருவாவதும் அவன் செயலாகவே இருக்க முடியும் அல்லவா ?

        1. சார் அது அப்படி அல்ல. சில விஷயங்களை மனிதர்கள் தாங்களாகவே உணர்ந்து செய்யவேண்டும் என்று இறைவன் விரும்புவான்.

          உடம்பு சரியில்லாம ஹாஸ்பிட்டல்ல இருக்குற ஒருத்தரை பார்க்கிறதை கூட அவர் கூப்பிட்டாத் தான் போய் பார்ப்பேன்னு சொல்வோமா? அது போலத் தான் இதுவும்.

          எல்லாவற்றையும் தனது இறைசக்தியால் செய்துவிட முடியும் என்றால் மனிதர்களை அவன் படைத்ததற்கே அர்த்தமில்லாமல் போய்விடுமே.

          – சுந்தர்

  3. In Mayavaram “Mayuranathaswami temple” is a classic example for negligence.
    It is a big & grand temple with so many Oduvars.
    But now a days there is nobody.
    Even the god needs protection inside the temple.
    Painful to see such a wondeful temple in poor state.

  4. உங்கள் கருத்துக்கள் எல்லாமே மிக மிக அருமை வாழ்க உமது தொண்டு, வளர்க உமது ஆன்மீக பயணம் .

    அன்புடன்,

    சிறியவன் பாபு .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *