மேலும் இயேசு உணவு பழக்கத்தில் சைவம் என்பதால் அவர் மீதான என் அன்பு பள்ளிக் காலத்துக்கும் பிறகும் சிறிதும் குறையவில்லை. (http://www.jesusveg.com)
இன்று புனித வெள்ளி. ஏசு பிரான் நம் பாவங்களை தீர்க்கும் பொருட்டு அவர் சிலுவையில் அறையப்பட்ட நாள்.
இந்த புனித நாளில், ஏசுபிரானின் பொன்மொழிகள் சிலவற்றை பார்ப்போம். இயன்றவற்றை கடைபிடிப்போம். பொதுவாக நமது இந்து மதத்தில் வேதங்களில் கூறப்பட்டுள்ள பல விஷயங்கள் ஏசு பிரான் கூறியுள்ளதுடன் ஒத்துபோவதை கவனியுங்கள். இவற்றை இயேசு சொன்னது என்று நான் சொல்லாமல் ஒரு வேளை நீங்கள் படித்தால் திருக்குறளையும் கீதையையும் படித்தது போல இருக்கும் என்பது என் கருத்து.
பேதம் மனிதர்களிடையே தானே…கடவுளிடம் இல்லையே….!!
இயேசு கிறிஸ்துவை விசுவாசிப்பதும் எந்த அளவு முக்கியமானதோ, அதே போல் மற்றவர்களுக்காக மன்றாடி ஜெபிப்பதும் முக்கியமானது
ஆண்ட்ரு முரே என்பவர் சொல்வதைக் கேளுங்கள். “மற்றவர்களுக்காக நாம் ஜெபம் செய்வதை நிறுத்திக் கொள்வோமானால், நாம் தேவனுக்கு விரோதமாகப் பாவம் செய்கிறோம். கிறிஸ்தவ வாழ்க்கையில் தேவனில் அன்பு கூர்வதும், இயேசு கிறிஸ்துவை விசுவாசிப்பதும் எந்த அளவு முக்கியமானதோ, அதே போல் மற்றவர்களுக்காக மன்றாடி ஜெபிப்பதும் முக்கியமானது. இதை அறிந்தும், இந்தக் கடமையிலிருந்து நாம் தவறுமோமானால், பெரும்பாவத்தை செய்கிறவர்கள் ஆவோம். மற்றவர்களுக்காக மன்றாட, தேவனிடத்தில் அவர் அருளும் கிருபையைக் கேட்டுப் பெறுவோம்.”
ஒவ்வொரு வீண் வார்த்தைக்கும் தீர்ப்பு நாளில் கணக்குக் கொடுக்க வேண்டும்
இயேசுபிரான் கூறிய மகத்தான் பொன்மொழிகள் – ஒரு சிறு தொகுப்பு!
* மனிதர் அப்பத்தினால் மட்டுமல்ல, மாறாக கடவுளின் வாய்ச்சொல் ஒவ்வொன்றிலும் வாழ்வர்.
* உன் கடவுளாகிய ஆண்டவரை சோதிக்க வேண்டாம்.
* தம் சகோதரர் சகோதரிகளிடம் சினங்கொள்கிறவர் தண்டனைத் தீர்ப்புக்கு ஆளாவார்.
* ஆணையிடவே வேண்டாம். நீங்கள் பேசும் போது ‘ஆம்’ என்றால் ‘ஆம்’ எனவும் ‘இல்லை’ என்றால் ‘இல்லை’ எனவும் சொல்லுங்கள். இதைவிட மிகுதியாக சொல்வது எதுவும் தீயோனிடத்திலிருந்து வருகிறது.
* உங்களை வலக் கன்னத்தில் அறைபவருக்கு மறுகன்னத்தையும் திருப்பிக் காட்டுங்கள்.
* உங்கள் அங்கியை எடுத்துக் கொள்ள விரும்பினால் உங்கள் மேலுடையையும் அவர் எடுத்துக் கொள்ள விட்டுவிடுங்கள்.
* உங்கள் பகைவரிடமும் அன்பு கூருங்கள்.
* உங்களை துன்புறுத்துவோருக்காக இறைவனிடம் வேண்டுங்கள்.
* மக்கள் பார்க்க வேண்டுமென்று அவர்கள் முன் உங்கள் அறச்செயல்களைச் செய்யாதீர்கள்.
* மற்ற மனிதர் செய்யும் குற்றங்களை நீங்கள் மன்னிப்பீர்களானால் உங்கள் விண்ணகத் தந்தையும் உங்களை மன்னிப்பார்.
* மண்ணுலகில் உங்களுக்கெனச் செல்வத்தைச் சேமித்து வைக்க வேண்டாம். இங்கே பூச்சியும் துருவும் அழித்து விடும்; திருடரும் அதைக் கன்னமிட்டுத் திருடுவர்.
* எவரும் இரு தலைவர்களுக்கு பணிவிடை செய்ய முடியாது. நீங்கள் கடவுளுக்கும் செல்வத்துக்கும் பணிவிடை செய்ய முடியாது.
* கவலைப்படுவதால் உங்களில் எவர் தமது உயரத்தோடு ஒரு முழம் கூட்ட முடியும்.
* நீங்கள் அளிக்கும் தீர்ப்பையே நீங்களும் பெறுவீர்கள்.
* நீங்கள் எந்த அளவையால் அளக்கிறீர்களோ, அதே அளவையாலே உங்களுக்கும் அளக்கப்படும்.
* முத்துக்களைப் பன்றிகள் முன் எறிய வேண்டாம். எறிந்தால் அவை தங்கள் கால்களால் அவற்றை மிதித்துவிடும்.
* பிறர் உங்களுக்குச் செய்ய வேண்டும் என்ன விரும்புகிறவற்றை எல்லாம் நீங்களும் அவர்களுக்குச் செய்யுங்கள்.
* அழிவுக்கு செல்லும் வாயில் அகன்றது; வழியும் விரிவானது; அதன் வழியே செல்வோர் பலர்.
* வாழ்வுக்குச் செல்லும் வாயில் மிகவும் இடுக்கமானது; வழியும் மிகக் குறுகலானது; இதைக் கண்டுபிடிப்போர் சிலரே.
* என்னை நோக்கி, ‘ஆண்டவரே, ஆண்டவரே’ எனச் சொல்பவரெல்லாம் விண்ணரசுக்குள் செல்வதில்லை. மாறாக, விண்ணுலகிலுள்ள என் தந்தையின் திருவுளத்தின்படி செயல்படுபவரே செல்வர்.
* ஆன்மாவைக் கொல்ல இயலாமல், உடலை மட்டும் கொல்பவர்களுக்கு அஞ்சவேண்டாம். ஆன்மாவையும் உடலையும் நரகத்தில் அழிக்க வல்லவருக்கே அஞ்சுங்கள்.
* உங்களுள் எவரும் தம் ஒரே ஆடு ஓய்வு நாளில் குழியில் விழுந்து விட்டால் அதைப் பிடித்துத் தூக்கி விடாமல் இருப்பாரா? ஆட்டை விட மனிதர் எவ்வளவோ மேலானவர். ஆகவே ஓய்வுநாளில் மனிதருக்கு நன்மை செய்வதே முறை.
* மனிதர் பேசும் ஒவ்வொரு வீண் வார்த்தைக்கும் தீர்ப்பு நாளில் கணக்குக் கொடுக்க வேண்டும்.
* உங்களுக்கு கடுகளவு நம்பிக்கை இருந்தால் நீங்கள் இம்மலையைப் பார்த்து ‘இங்கிருந்து பெயர்ந்து அங்கு போ’ என்று கூறினால் அது பெயர்ந்து போகும்.
* இரண்டு அல்லது மூன்று பேர் என் பெயரின் பொருட்டு எங்கே ஒன்றாக கூடியிருக்கிறார்களோ அங்கே அவர்களிடையே நான் இருக்கிறேன்.
* கொலை செய்யாதே; விபச்சாரம் செய்யாதே; களவு செய்யாதே; பொய்சான்று சொல்லாதே; தாய் தந்தையை மதித்து நட. மேலும் உன் மீது நீ அன்பு கூர்வது போல் உனக்கு அடுத்திருப்பவர் மீதும் அன்பு கூர்வாயாக.
* செல்வர் விண்ணரசில் புகுவது கடினம். செல்வர் இறையாட்சிக்கு உட்படுவதைவிட ஊசியின் காதில் ஒட்டகம் நுழைவது எளிது.
* என் பெயரின் பொருட்டு வீடுகளையோ, சகோதரர்களையோ, சகோதரிகளையோ, தாயையோ, பிள்ளைகளையோ, நிலப்புலன்களையோ விட்டுவிட்ட எவரும் நூறு மடங்காகப் பெறுவர்.
* நீங்கள் இறைவனிடம் வேண்டும் போது நம்பிக்கையுடன் கேட்பதை எல்லாம் பெற்றுக் கொள்வீர்கள்.
* கேளுங்கள், உங்களுக்கு கொடுக்கப்படும். தேடுங்கள், நீங்கள் கண்டடைவீர்கள். தட்டுங்கள், உங்களுக்குத் திறக்கப்படும்.
* நான் விரும்புகிறேன், உமது நோய் நீங்குக.
* துணிவோடிரு உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டன.
* நீங்கள் நம்பியபடியே உங்களுக்கு நிகழட்டும்.
* ஏழுமுறை மட்டுமல்ல; எழுபது தடவை ஏழுமுறை (மன்னிக்கலாம்).
* வாளை எடுப்போர் அனைவரும் வாளால் அழிந்து போவர்.
* நீர் நலமடைந்துள்ளீர்; இதை விடக் கேடானது எதுவும் உமக்கு நிகழாதிருக்க இனி பாவம் செய்யாதீர்.
[END]
புனித வெள்ளி அன்று புனிதரின் பொன்மொழிகளை பதிவிட்டதற்கு நன்றி. கிருஸ்துவ நண்பர்கள் அனைவருக்கும் ஈஸ்டர் தின வாழ்த்துக்கள்.
நன்றி ஜி
இயேசு கிறிஸ்து , புத்தர் , நபிகள் நாயகம், சங்கரர் , ராமானுஜர் , ராமகிருஷ்ணபரமஹம்சர் மற்றும் ஏனைய மத குருமார்கள் யாவரும் “மனிதன் நல்ல வண்ணம் வாழலாம்” என்பதற்காக மட்டுமே சொன்ன நல்ல விஷயங்களை பின்பற்றுவதை விட்டு விட்டு தாங்கள் யாரை பின் பற்று கிறார் களோ அவரே சிறந்தவர் அவர் மதமே உயர்ந்தது என்று மனிதர்கள் சண்டையிடுவதே துன்பங்களுக்கெல்லாம் அடிப்படை காரணம் .
தங்களது மிகச்சிறந்த பதிவுக்கு நன்றி
சிவகுமாரன் C V ஆத்ம தர்ஷன சேவா சமிதி
வெரி குட் ப்ரின்சிப்லஸ். Let me practise அட்லீஸ்ட் some ஒப் திஸ் இன் my லைப்.
ஒவ்வொரு வீண் வார்த்தைக்கும் கணக்கு கொடுக்கவேண்டும் – சாட்டையடி! அப்படியென்றால் நான் இன்னும் எதனை ஜென்மத்திற்கு கணக்கு கொடுக்கவேண்டுமோ தெரியவில்லை. இப்போதாவது விழித்துக்கொண்டேனே என்று சந்தோஷபடுகிறேன்.
really very nice