Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Tuesday, March 19, 2024
Please specify the group
Home > Featured > பாயாசம் சாப்பிட்டதற்கு பாராட்டு கிடைத்த அதிசயம்! — சிவராத்திரி SPL (5)

பாயாசம் சாப்பிட்டதற்கு பாராட்டு கிடைத்த அதிசயம்! — சிவராத்திரி SPL (5)

print
டந்த ஞாயிறு பிப்ரவரி 23 அன்று, நமது தளம் சார்பாக பூண்டி மின்னொளி அம்பாள் சமேத ஊன்றீஸ்வரர் திருக்கோவிலில் நடைபெற்ற சிவராத்திரி சிறப்பு உழவாரப்பணி மிக மிக சிறப்பாக நடந்தேறியது. நமது உழவாரப்பணிக்கு வழக்கமாக வரும் சில அன்பர்கள் வரவில்லையென்றாலும் வேறு சிலரை இறைவன் அனுப்பி வைத்து பணியை சிறப்பாக நடத்திக்கொண்டான்.

நாம் திட்டமிட்டபடி, ஒட்டடை அடிப்பது, தரையை பெருக்கி அலம்பி விடுவது, பழுதடைந்த பல்புகளை மாற்றி புதிய பிட்டிங்குகளை நிறுவுவது, பாத்திரங்கள், விளக்குகள் தேய்ப்பது, இறைவன் மற்றும் இறைவியின் வஸ்திரங்கள் மற்றும் புடவைகளை துவைப்பது என்று அனைத்தையும் சிறப்பாக செய்துமுடித்தோம்.

DSC00693

ஞாயிறு காலை 6.30க்கு ஐயப்பன்தாங்கலில் இருந்து கிளம்பி, வழியில் மனோகரன் அவர்களின் குடும்பத்தினரையும் நண்பர் சந்திரசேகரனையும் ஏற்றிக்கொண்டு, திருவள்ளூரை கடந்து ஊத்துக்கோட்டை சாலையில் பூண்டிக்கு பயணித்தோம்.

DSC00692

நண்பர் அருண் வேப்பம்பட்டிலிருந்து குடும்பத்தினருடன் காரில் வந்திருந்தார். அவருடைய 6 வயது மகள் உட்பட 10 மாத பெண் குழந்தையும் தனது அம்மாவோடு வந்திருந்தாள். பத்தே மாதங்களில் சிவாலய உழவாரப்பணியில் கலந்துகொள்ளும் பாக்கியம் அக்குழந்தைக்கு கிடைத்தது என்றால் அது என்ன தவம் செய்திருக்க வேண்டும்?

DSC00691

பூண்டி நெருங்கும் முன், சற்று நிழலான இடத்தில், நீர் வசதி மிக்க வாய்க்காலுக்கு அருகில் வேன் நிறுத்தப்பட்டு அனைவரும் காலை டிபனை சாப்பிட்டோம்.

DSCN1726

நம் வீட்டில் இருந்து அரிசி உப்புமா + கத்திரிக்காய் கொத்சு தயார் செய்து கொண்டுவந்திருந்தோம். அப்பா அம்மாவுக்கு தான் சரியான வேலை. ஆனால் உழவாரப்பணியில் மறைமுகமாக பங்கு கொண்ட திருப்தி அவர்களுக்கு. (எங்க பாட்டி… அவங்களுக்கு வயசு 80க்கும் மேல. அவங்க, பணிக்கு தேவையான குடம், பக்கெட், சமையல் பாத்திரம் எல்லாவற்றையும் அலம்பித் தந்து ஏற்பாடுகளில் உதவினார்கள்.)

DSCN1730

முன்னதாக நாம் டிபன் சாப்பிடுவதற்கு முன்னர் பசு மாட்டுக்கு அளித்துவிட்டு சாப்பிடலாம் என்று பசுவை தேடினால் அந்நேரம் அந்த பகுதியில் பசு எதுவும் தென்படவில்லை. சரி, கோவிலுக்கு சென்று அங்கு கொடுத்துக்கொள்ளலாம் என்று விட்டுவிட்டோம்.

எதிரே வயலில் விவசாயிகள் வேலை செய்துகொண்டிருந்தனர். வயலில் விவாசாயிகள் வேலை செய்வதை பார்ப்பதே அரிதான காட்சியாகிவிட்டதால் பார்க்கவே கண்களுக்கு குளிர்ச்சியாக இருந்தது. நாற்று நடுபவர்களில் எவரேனும் வயதான விவசாயி தென்படுகிறாரா என்று பார்க்கலாம் என்று அங்கு சென்று நிலத்தின் உரிமையாளரிடம் பேச்சு கொடுத்தோம். (ஒரு ஏழை விவசாயியின் குடும்பத்தை தத்தெடுப்பது பற்றி கூறியது நினைவிருக்கலாம்!).

விவசாய தொழிலில் உள்ள கஷ்டங்களை அவர் பட்டியலிட்ட போது, நமக்கு பகீரென்றது. அரசுகளின் விவசாயம் குறித்த அலட்சியன போக்கு, பாராமுகம் விவசாயத்தை எதிர்காலத்தில் அடியோடு ஒழித்துவிடும் அபாயம் இருக்கிறது.

அவர் பேசியதில் இருந்து, இந்த விவசாயத் தொழிலில் இந்த கஷ்டங்கள் நீடித்தால் இன்னும் சில ஆண்டுகளில் அவர் மொத்த நிலத்தையும் விற்றுவிட்டு எங்காவது நகருக்குள் போய் செட்டிலாகிவிடுவார் போல இருந்தது.

பணம் சம்பாதிக்க ஆயிரம் தொழில் இருக்கு. ஆனால் உணவை சம்பாதிக்க விவசாயம் மட்டும் தானே இருக்கிறது?

DSCN1732

அவரிடம் நமது கார்டை கொடுத்துவிட்டு சீக்கிரம் ஒரு பயனாளியை அடையாளம்  காண்பித்து உதவுமாறு கூறிவிட்டு வந்துள்ளோம். சரி என்று கூறியிருக்கிறார்.

இங்கு நண்பர்கள் உப்புமாவையும் கொத்சுவையும் ஒரு பிடி பிடிக்க, மீண்டும் பயணம் தொடர்ந்தது.

நண்பர் அருண், நமது பணியில் ஏதாவது ஒரு பங்களிப்பை தரவேண்டும் என்று உறுதியாக இருந்தார். “நான் வேண்டுமானால் டிபன் தயார் செய்து கொண்டு வரட்டுமா?” என்று கேட்டார்.

ஆனால் நாம் தான் மறுத்துவிட்டோம். “டிபன் நான் ஏற்பாடு செய்துவிடுவேன். அதுக்கு பதில் பணமா கொடுத்தீங்கன்னா நல்லாயிருக்கும். ஏன்னா… எப்போ எதுக்கு பணம் தேவைப்படும்னு சொல்ல முடியாது” என்றோம்.

“சரி.. உங்கள் சௌகரியம்!” என்றார் மகிழ்ச்சியுடன். சொன்னதை போலவே நேரில் சந்தித்தபோது அவரால் இயன்ற தொகையை கொடுத்தார். வேனுக்கு கொடுக்க அது உபயோகமாக இருந்தது.

இம்முறை பொள்ளாச்சியில் இருந்து ரகுராமன் என்பவர் பணிக்கு வந்திருந்தார். சென்னைக்கு ஒரு அலுவல் காரணமாக வந்ததாகவும், பணி பற்றி தளத்தில் பார்த்துவிட்டு, சரி… நம்மால் முடிந்ததை செய்துவிட்டு போகலாமே என்று வந்ததாகவும் கூறினார்.

DSC00708

சற்று நேரத்தில் கோவிலை அடைந்தவுடன் வேனை உள்ளே ஒரு ஓரத்தில் பார்க் செய்துவிட்டு, அனைத்து சாமான்களையும் இறக்கி வைத்தோம்.

ஊன்றீஸ்வரருக்கு தினசரி பூஜை செய்யும் பாக்கியம் பெற்ற சுப்ரமணிய குருக்கள் எதிர்கொண்டு நமது குழுவினரை வரவேற்றார்.

DSC00743

முன்னதாக நமது தளம் சார்பாக ஊன்றீஸ்வரருக்கு அபிஷேகமும் அர்ச்சனையும் நடைபெற்றது. நண்பர் முத்துக்குமாருக்கு ஞாயிறன்று  பிறந்த நாள். வழக்கமாக உழவாரப்பணிகளில் பங்கேற்க பெங்களூரில் இருந்து வரும் அவர் தற்போது பணியின் நிமித்தம் அயல்நாடு ஒன்றுக்கு தற்காலிகமாக சென்றிருக்கிறார். அவர் பெயரிலும் மற்றும் நமது பணியில் என்றும் துணை நிற்கும் இதர நண்பர்கள் பெயரிலும் அர்ச்சனை செய்யப்பட்டது.

குருக்கள் குரல் வளம் மிகவும் அருமை. அவர் மந்திரங்கள் உச்சரிப்பது நன்கு ஸ்பஷ்டமாக இருந்தது.

“சுவாமி… உங்கள் குரல் பிரமாதம். முடிந்தால் எங்களுக்காக ஏதேனும் தேவாரப்பாடல் பாடுங்களேன்”

“எனக்கு அதெல்லாம் தெரியாது….. அதெல்லாம் தெரியாது” என்று கூறிக்கொண்டே பிரமாதமான பாடல்களை பாடி அசத்திவிட்டார். அடுத்த முறை நீங்கள் இந்த கோவிலுக்கு சென்றால் அவரை பாடச் சொல்லி அதை கேட்டு இன்புறுங்கள்.

DSC00749

சுவாமிக்கு அபிஷேகம் நடைபெற்ற பின்னர் தீபாராதனை காட்டப்பட்டது. பின்னர் மின்னொளி அம்பாளையும் தரிசித்தோம்.

DSCN1869

இடையே கோவிலுக்குள் பசுமாடு ஒன்று தனது கன்றுகளுடன் வர, அதற்கு மிகுதியாக இருந்த உப்புமாவை கொடுக்க, அது ஒரு பிடி பிடித்தது. அப்போது தான் எங்களுக்கு திருப்தியாக இருந்தது. அவள் சாப்பிட்டால், அகிலமே சாப்பிட்ட மாதிரியாயிற்றே!

DSC00755

அடுத்து எங்கள் பணி துவங்கியது.

ஆண் வாசகர்கள் கோவிலை ஒட்டடை அடிப்பது, பெருக்குவது, அலம்பிவிடுவது, போன்ற பணிகளை பார்த்துக்கொள்ள, மகளிர் அணியினர் பாத்திரங்கள் மற்றும் விளக்குகளை தேய்ப்பது என்று பார்த்துக்கொண்டார்கள்.

DSC00769

வழக்கம் போல இந்த முறையும் மகளிர் அணியினருக்கு தான் பணி அதிகம். எக்கச்சக்க பூஜை பாத்திரங்கள்,  மற்றும் விளக்குகள் ஆகியவற்றை தேய்க்க வேண்டியிருந்தது. துணிமணிகளும் நூற்றுக்கணக்கில் குவிந்திருந்தன. ஆனால் கொஞ்சம் கூட அசராமல் அடித்து தூள் கிளப்பிவிட்டார்கள்.

DSC00764

DSC00766

உழவாரப்பணியை பொருத்தவரை எவ்வளவுக்கெவ்வளவு பணி இருக்கிறதோ அவ்வளவுக்கவ்வளவு திருப்தி இருக்கும். அவனுக்கு பணி செய்வது எவருக்காவது கசக்குமா என்ன?

இந்த உழவாரப்பனியின் ஹைலைட் என்று நாங்கள கருதுவது சில விஷயங்கள். அவற்றை பட்டியலிடுகிறோம்.

DSCN1735

DSCN1739ஒன்று

இதுவரை நாம் மேற்கொண்ட உழவாரப்பணிகள் அனைத்திலும் தவறாமல் கலந்து கொண்டுவரும் நண்பர் மனோகரனுக்கு அவரே எதிர்பார்க்காமல் ஒரு இன்ப அதிர்ச்சி கொடுக்க விரும்பினோம். திரு.மனோகரன் அவர்கள் தமது குடும்பத்தினருடன் கௌரவிக்கப்பட்டார். அவருக்கு கோவில் அர்ச்சகர் சுப்ரமணிய குருக்கள் மற்றும் நம் வாசகர்கள் மூலம் பொன்னாடை அணிவித்து நமது தளத்தின் சார்பாக சிறப்பு பரிசுகளும் கைதட்டல்கள் மத்தியில் அளிக்கப்பட்டது. தொடர்ந்து அவருக்கு நாம் சாதனையாளர் சந்திப்பிலும், திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்சிகளிலும் பரிசளிக்கும் லேமினேட் செய்யப்பட்ட நமது தளத்தின் ‘தினசரி பிரார்த்தனை’ படத்தை பரிசளித்தோம்.

அது மட்டுமா வேளுக்குடி கிருஷ்ணன் அவர்கள் வடிவமைத்து City Union Bank மூலம் வெளியிட்ட ‘இராமனின் பாதையில்’ ஆன்மீக காலண்டர் மற்றும் சொற்பொழிவு டி.வி.டி.யும் நமது சொந்த செலவில் பரிசளிக்கப்பட்டது.

DSC00723இரண்டு

அது தவிர இன்றைய உழவாரப்பணியில் பங்கேற்ற அனைவருக்கும் நன்றி தெரிவிக்கும் விதமாக சகல தோஷங்களையும் விலக்கக்கூடிய ஸ்ரீ ராமர் ஜாதகத்துடன் கூடிய எளிமையான இனிமையான சுந்தரகாண்டம் நூல் – PHOTO BROCHURE (பெரிய சைஸ் ஆனால் நான்கே பக்கங்களில்) – + அறுபத்து மூவர் வரலாற்றை விளக்கும் நம்பி ஆரூரன் நற்றமிழ் பாட்டு என்ற நூலும் பரிசாக அளிக்கப்பட்டது. (நாம் சுந்தரகாண்டம் அனுப்புகிறவர்களுக்கு இனி இந்த இராமர் ஜாதகத்துடன் கூடிய சுந்தரகாண்டமும் அனுப்பப்படும்!  மீண்டும் வேண்டுபவர்கள் தொடர்புகொள்ளவும்!)

DSC00832DSC00836

மூன்று

அடுத்து இந்த ஆலயத்தில் வழக்கமாக துப்புரவு பணியை செய்து வரும் இரு பெண்கள் கௌரவிக்கப்பட்டது தான். (இதை ஒவ்வொரு உழவாரப்பணியின் போதும் நாம் செய்யத் தவறுவதில்லை) அவர்கள் இருவருக்கும் பிளவுஸ் பிட்டுடன் கூடிய புடவையும் இனிப்புக்களும் வழங்கப்பட்டது. அவர்களது பணியின் மேன்மை எடுத்துக்கூறப்பட்டு அவர்கள் கௌரவிக்கப்பட்டனர்.

DSC00845

நான்கு

அதே போல அர்ச்சகர் திரு.சுப்ரமணிய குருக்கள் அவர்களுக்கு வேஷ்டி, துண்டு மற்றும் இனிப்பு வழங்கப்பட்டது. அவரின் மகன் செல்வன். சனத்குமாரன் என்பவர் வேதம் படித்து வருகிறார். வேதம் என்றால் ஏதோ ஒப்புக்கு அல்ல… வேத ஆகமங்கள் தொடர்பான ஐந்தாண்டு படிப்பு படித்து வருகிறார். விடுமுறை நாட்களில் தந்தையின் பணிகளில் உதவியாக இருக்கிறார். அது பற்றி கேள்விப்பட்டவுடன், எலக்ட்ரிகல் பொருட்கள் வாங்க திருவள்ளூர் சென்ற பொது அவருக்கும் சேர்த்து வேஷ்டி மற்றும் சட்டை மற்றும் இனிப்பு ஆகியவை வாங்கி வந்து தந்து கௌரவித்தோம்.

DSC00841
நண்பர் செந்தில், வேதம் படிக்கும் சனத்குமாரனுக்கு மரியாதை செய்கிறார்

எதிர்காலத்தில் அந்த இளைஞனுக்கு என்ன உதவிகள் தேவைப்பட்டாலும் கூறும்படியும் இயன்றதை செய்ய நமது தளம் செய்ய காத்திருக்கிறது என்றும் சொல்லியிருக்கிறோம்.

DSC00789
ஆலயத்தின் INSIDE முகப்பில் FOCUS LIGHT பொருத்தப்படுகிறது

 

DSC00800ஐந்து

ஆலயம் முழுக்க எலக்ட்ரிகல் பிட்டிங்குகளை பழுது பார்த்து, ப்யூஸ் போல பல்புகளை மாற்றி புதிய பல்புகளை பொருத்தியது.

DSC00747

ஆறு

மற்றொரு சிறப்பு என்னவென்றால், எதிர்பாராமல் கடைசி நேரத்தில் நம் உழவாரப்பணியில் பங்குகொண்ட நண்பர் செந்தில் என்பவர் தான். (இவர் நம் நண்பர் பாலுமகேந்திரனின் நண்பர். அவரது அறிமுகம் மூலம் நம் தளத்தை பார்த்து வருகிறார்.) பெரம்பூரிலிருந்து வந்த இவர், தனது காரை கொண்டு வந்திருந்தார். அதன் மூலம் திருவள்ளூர் சென்று ட்யூப் லைட் உள்ளிட்ட எலக்ட்ரிகல் சாமான்கள், மற்றும் இதர பொருட்களை வாங்கி, அவற்றை எடுத்து வர மிக மிக சௌகரியமாக இருந்தது. இவர் மட்டும் இன்று வரவில்லை என்றால் எங்கள் மிக மிக பாடு திண்டாட்டமாகி இருக்கும்.

DSC00772

இந்த எலக்ட்ரிகல் பணிகள் செய்து முடிப்பதற்குள் தான் தான் படாத பாடு பட்டுவிட்டோம். நாம் ஏற்கனவே பேசி வைத்திருந்த உள்ளூர் எலக்ட்ரீசியன் தன் உறவினர் ஒருவரின் இல்லத்தில் ஏற்பட்ட எதிர்பாராத துக்கத்திற்கு சென்றுவிட்டபடியால் அவரால் வரமுடியாத ஒரு சூழ்நிலை.

DSC00776

“வேண்டுமானால் இன்னொரு நாள் வந்து செய்து தருகிறேன்!” என்று நம்மிடம் கூறினார்.

“இல்லை… எங்களக்கு வேறு ஒரு நாள் வருவது கஷ்டம். மேலும் சிவராத்திரி இன்னும் இரண்டொரு நாட்களில் வருகிறது. அதற்குள் இந்த பணியை செய்து முடிக்க வேண்டும் என்று தான் இத்தனை பாடு படுகிறோம்” என்றோம்,

“வேண்டுமானால் நீங்கள் சாமான்களை வாங்கிக் கொடுத்துவிட்டு போங்கள். நான் பிறகு வந்து செய்துகொள்கிறேன்” என்றார்.

DSCN1767

அதற்கு நாம் மறுத்துவிட்டோம். “எங்கள் முன்னிலையில் தான் இவற்றை செய்யவேண்டும்!” என்று உறுதியாக கூறிவிட்டோம்.

அவர் சங்கடத்தில் நெளிய ஆரம்பித்தார். “சரி… நீங்கள் போங்கள். நாங்கள் பார்த்துக்கொள்கிறோம்” என்று அவரை அனுப்பிவிட்டோம்.

DSC00804

ஞாயிறு என்பதால் அந்த பகுதியில் வேறு எலக்ட்ரீசியன் யாரும் கிடைக்கவில்லை. சரி அருகே திருவள்ளூர் சென்று, ஏதாவது எலக்ட்ரிகல் கடையில் சாமான்கள் வாங்கிக்கொண்டு அவர்களிடமே நிலைமையை விளக்கி எலக்ட்ரீசியன் யாராவது இருந்தால் அனுப்ப சொல்வோம் என்று தீர்மானித்தோம்.

DSCN1807

நாம் ஒருவர் செல்வதற்க்காகவும், பிட்டிங்குகளை எடுத்து வருவதற்கும் வேனை எடுக்க முடியாதே? நண்பர் செந்தில், உதவ முன்வந்தார். “இன்றைக்கு முழுவதும் காரை எப்படி வேண்டுமானாலும் பயன்படுத்திக்கொள்ளுங்கள். டிரைவ் செய்ய நான் தயார். வாருங்கள்” என்றார்.

அவருக்கு நன்றி கூறி, காரில் திருவள்ளூர் சென்று அங்கு ஓரிரு எலக்ட்ரிகல்ஸ் கடையில் ஏறி இறங்கினோம். ஞாயிறு என்பதால் எலக்ட்ரீசியன் யாரும் கிடைக்கவில்லை. கடைசியில் துளசி தியேட்டர் அருகே உள்ள ஒரு கடையில் விசாரித்தபோது எலக்ட்ரீசியன் ஒருவர் இருப்பதாகவும் கேட்டுவிட்டு சொல்கிறோம் என்றும் கூறினார்கள்.

DSC00815

எலக்ட்ரீசியன் வந்ததும், “இப்போதைக்கு தேவையானது என்று நீங்கள் நினைப்பதை வாங்கிக்கொள்வோம். அங்கு கோவிலை வந்து பார்த்தால் தான் என்னால் ஆக்சுவலாக என்ன தேவை என்று சொல்ல முடியும். ஏதாவது விடுபட்டிருந்தால் இங்கு வந்து வாங்கிக்கொள்ளலாம்” என்றார்.

DSC00818

சரி என்றோம். “பொருட்கள் ஏதாவது மிகுதியானால் அவற்றை ரிட்டர்ன் எடுத்துக்கொள்ளவேண்டும்” என்கிற கண்டிஷனில் அங்கேயே சாமான்கள் வாங்கி காரில் ஏற்றிக்கொண்டு வந்தோம். (CFL பல்புகள் சுமார் பத்து, ட்யூப் லைட்டுகள், மற்றும் இதர பிட்டிங்குகள் என அனைத்தும் சேர்த்து ரூ.6000/-வரை சாமான்களுக்கு மட்டுமே ஆயிற்று.)

DSC00777

இங்கு வந்து எலக்ட்ரீசியனை வைத்து கோவிலை செக் செய்த போது மேலும் சில சாமான்கள் தேவையிருந்தது. அதை நோட் செய்துகொண்டு மீண்டும் திருவள்ளூர் புறப்பட்டோம்.

DSCN1877

அப்படியே குருக்கள் மற்றும் துப்புரவு செய்யும் பணிப்பெண்களுக்கு மரியாதை செய்வதற்கு வேஷ்டி, சட்டை, புடவை மற்றும் இனிப்புக்களை வாங்கிக்கொள்வது என்று தீர்மானித்தோம். DSCN1842

அங்கே திருவள்ளூரில் காதி கிராப்ட் இருக்கிறதா என்று தேடித் பார்த்தோம். நல்லவேளை, மெயின்ரோட்டில் சிக்னல் அருகிலேயே ஒரு காதி கிராப்ட் ஷோரூம் இருந்தது. நாம் வாங்கும் பொருட்களின் மூலம் ஏழை நெசவாளிகள் பயன் பெறட்டுமே.

அங்கு, வேஷ்டி, துண்டு புடவை என அனைத்தையும் வாங்கிக்கொண்டோம்.அருகில் இருந்த ஒரு சூப்பர் மார்கெட்டில் இனிப்புகள் வாங்கிக்கொண்டு புறப்பட்டோம்.

DSCN1852

பொதுவாக இவற்றையெல்லாம் நாம் முன்தினமே வாங்கி வைத்துக்கொள்வது  வழக்கம். ஆனால் இம்முறை வழக்கமாக முன்தினம் உதவிக்கு வரும் நண்பர்கள் எவரும் எதிர்பாராதவிதமாக வரவில்லை.

எண்ணை டின்னை மட்டும் நாம் சனிக்கிழமை மாலை அலுவலகம் முடிந்து வீடு திரும்பும்போது வாங்கிவந்துவிட்டோம். ஆக்டிவா கிடைக்காததால் பைக்கில் டின்னை வீட்டுக்கு கொண்டு வர மிகவும் சிரமப்பட்டுவிட்டொம். திருவள்ளூரில் வாங்கிக்கொள்ளலாம் என்றால் ஞாயிறு காலை எண்ணெய் டின்னை தேடி வேனில் எங்கு அலைவது?

DSCN1835

மேலும் வடபழனியில் உள்ள இந்த கடையில் நாம் கோவிலுக்கு தருகிறோம் என்பதால் டிஸ்கவுன்ட் ரேட் உண்டு. மற்ற கடைகளில் நிச்சயம் நூறு இருநூறு கூடுதல். அந்த பணம் இருந்தால் மேலும் ஒரு லிட்டர் எண்ணை வாங்கிவிடலாமே?

(உழவாரப்பணிக்கு முந்தைய தினம் நமக்கு சரீர ரீதியாக உதவிட நண்பர்கள் எவரேனும் முன்வந்தால் நன்றாக இருக்கும். ஒற்றை ஆளாக அனைத்து ஏற்பாடுகளையும் செய்து, சாமான்களை வாங்கிக்கொண்டு செல்வது மிக மிக சிரமமாக உள்ளது. இதில் உழவாரப்பணிக்கு வரும்படி நண்பர்களுக்கு மறக்காமல் பல விதங்களில் அழைப்பு வேறு விடுக்கவேண்டியிருக்கிறது. நாம் இங்கு அனைத்து ஏற்பாடுகளும் செய்த பிறகு, ரொம்ப சிம்பிளா, ‘அப்படியா? எனக்கு தெரியாதே… நான் நம்ம சைட்டை பார்த்தே பல நாள் ஆகுது” என்று கூலாக சொல்லிவிடுகின்றனர்.)

எப்படியோ நாம் திட்டமிட்டபடி, தரமான அக்மார்க் நல்லெண்ணெய் கோவிலுக்கு எண்ணை காப்பு இடவும், விளக்கேற்றவும் வாங்கித் தந்துவிட்டோம்.

மீண்டும் ஆலயத்திற்கு வந்து, எஞ்சியிருந்த அனைத்து பணிகளையும் முடித்தோம்.

DSCN1801

நண்பர்கள் அனைத்து வேலைகளையும் கச்சிதமாக முடித்துவிட்டு தயாராக இருந்தனர்.

DSCN1886

குருக்களிடம் எண்ணை வழங்கப்பட்டது. தொடர்ந்து கோவில் பணிப்பெண்கள் கௌரவிக்கப்பட்டனர். நம்மொடதெல்லாம் ஒரு நாள் உழைப்பு தான். ஆனால் ஆலயத்தை ரெகுலராக  அவர்கள் தானே.

DSCN1904

அடுத்து குருக்களும் வேதம் படித்து வரும் அவர் மகனும் கௌரவிக்கப்பட்டனர்.

DSCN1875

பணியை முடித்த பின்னர் மீண்டும் ஒரு முறை சுவாமிக்கும் அம்பாளுக்கும் தீபாராதனை காட்டப்பட்டது.

மீண்டும் ஒரு முறை அர்ச்சனை செய்யப்பட்டது. தொடர்ந்து சற்றும் எதிர்பாராமல் நமக்கு ஒரு மிகப் பெரிய மாலை ஒன்றை அணிவித்தார். தொடர்ந்து உழவாரப்பணியில் தவறாமல் பங்கேற்று வந்த நண்பர் மனோகரனுக்கும் மிக பெரிய மாலை ஒன்றை அணிவித்தார். இது குருக்கள் அவர்கள் நமக்கு எதிர்பாராமல் வழங்கிய சர்ப்ரைஸ்.

 

அவனுக்கு தொண்டு செய்பவர்களுக்கு மாலையும் மரியாதையும் தேடி வருவதில் வியப்பென்ன?

 

நம்மை பொருத்தவரை நாம் எத்தனையோ மனவருத்தங்கள் மற்றும் சிரமங்களுக்கு இடையே தான் இந்த பணியை செய்து வருகிறோம். நமக்கு மிகவும் நெருங்கிய நண்பர்கள் அதை அறிவார்கள். ஆனால் நமக்கு தனிப்பட்ட முறையில் ஏற்படும் கஷ்ட நஷ்டங்களை விட அவனுக்கு பணி செய்வதும், அந்த புண்ணியத்தை மற்றவர்களுக்கு பெற்றுத் தரும் ஆனந்தமுமே பெரிது.

அனைத்தும் முடிந்த பின்னர் அங்கேயே மதிய உணவு சாப்பிட்டோம். குருக்களிடம் சென்ற வாரம் வந்த போதே இந்த ஏற்பாடுகளை செய்துவிட்டு தான் வந்தோம்.

DSC00853

சுவாமிக்கு நிவேதனம் செய்யப்பட்ட புளிசாதமும், தயிர் சாதமும் பரிமாறப்பட்டது.  நண்பர்கள் இதுவரை இப்படி ஒரு புளியோதரையும் தயிரன்னமும் சாப்பிட்டிருக்க மாட்டார்கள். வேலை செய்த படியால் ஏற்பட்ட பசி வேறு… சும்மா வெளுத்து வாங்கிவிட்டார்கள்.

நாங்கள், கோவில் துப்புரவு பணிப்பெண்கள், மற்றும் அவர்களின் குழந்தைகள் என சமபந்தி போஜனமாக இதை சாப்பிட்டது மறக்க முடியாத அனுபவம்.

கோவில் ஊழியருக்கு பரிசு வழகப்படுகிறது...
கோவில் ஊழியருக்கு பரிசு வழகப்படுகிறது…

சாமான்கள் அனைத்தையும் வேனில் ஏற்றிவிட்ட பிறகு குருக்களிடம் விடைபெற்றோம். முன்னதாக பிரகாரத்தில் அவரின் கால்களில் வீழ்ந்து ஆசிபெற்றோம். (சன்னிதானத்துக்குள் எவர் காலிலும் விழக்கூடாது!)

நமது புகைப்படங்களை பதிவில் நாம் அளிக்க விரும்புவதில்லை. அது சரியல்ல. இருப்பினும் நிச்சயம் நமது புகைப்படங்கள் ஒன்றிரண்டாவது வெளியிட வேண்டும். இல்லையெனில் எங்கள் புகைப்படத்தை வெளியிடக்கூடாது என்று நண்பர்கள் அன்பான மிரட்டல் விடுத்ததால் அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து நமது ஓரிரண்டு புகைப்படங்களை வெளியிட்டிருக்கிறோம். இந்த கைங்கரியத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் உண்மையில் நமக்கு பெருமை தான்.  (நாங்க….பெரிய வீட்டு வேலைக்காரங்களாக்கும்!)

கடைசீயாக புறப்படும் போது, குருக்கள் சற்று தயங்கி தயங்கி, “கூட்டம் அதிகம் வரும் விஷேட நாட்களில் மட்டும் போடுவதற்கு கோவிலின் கொடிமரம் அருகில் DOOM LIGHT ஒன்றை நிறுவமுடியுமா?” என்று கேட்டார். வரும் வியாழன் காலை அதை செய்து தருவதாக சொல்லியிருக்கிறோம். நண்பர் ஒருவரிடம் பேசியபோது அதற்கு ஸ்பான்சர் செய்வதாக சொல்லிவிட்டார். பணி முடித்த பின்னர்  புகைப்படங்கள் அளிக்கிறோம்!

“சிவராத்திரிக்கு நீங்கள் அவசியம் வந்திருந்து பூஜைகளில் எனக்கு ஒத்தாசையாக இருக்கவேண்டும். நீங்கள் எதையும் வாங்கிவரவேண்டும் என்கிற அவசியமில்லை. நீங்கள் வந்தால் போதும்!” என்று நம்மிடம் கூறினார்.

DSC00850

ஆனால் நாம் மாலைகள், வஸ்திரங்கள், புடவை உள்ளிட்ட பல பொருட்களை வாங்கிக்கொண்டு தான் செல்லவிருக்கிறோம். நண்பர் ஒருவர் சிவராத்திரி அன்று நமது பூஜைக்குரிய அபிஷேக பொருட்கள் மற்றும் மாலைகள், மலர்கள் இவை அனைத்திற்குமான செலவை ஏற்றுகொள்வதாக  கூறியிருக்கிறார்.

DSCN1910

வீட்டுக்கு வந்து 5.30 மணிக்கு நமது பிரார்த்தனை கிளப்பின் பிரார்த்தனையை முடித்துவிட்டு, இதை டைப் செய்ய கணினியில் உட்காருகிறோம்… கோவிலில் இருந்து குருக்கள் ஃபோன் செய்தார்.

“பிராமாதப்படுத்திடீங்க போங்க தம்பி… கோவிலே ஜெகஜோதியா இருக்கு. எல்லாருக்கும் இங்கே ரொம்ப திருப்தி. மனசு நிறைஞ்சு சொல்றேன்… எல்லாவித சௌபாக்கியங்களும் உங்களுக்கு கிடைக்கும். உங்கள் குழுவினர் எல்லாரும் எல்லாரும் நல்லா இருப்பாங்க!” என்றார்.

திரும்பி வரும் வழியில் திருமழிசை ஒத்தாண்டீஸ்வரர் கோவில் அருகே...
திரும்பி வரும் வழியில் திருமழிசை ஒத்தாண்டீஸ்வரர் கோவில் அருகே…

அவனுக்கு பணி செய்வதே எங்களுக்கு பாயாசம் சாப்பிடுவது போல… பாயாசம் சாப்பிட்டதற்கு பாராட்டு வேறு என்றால்? இதற்கு மேல் என்னவேண்டும்!!

அனைத்து பாராட்டுக்களும் இந்த பணியில் உறுதுணையாய் இருந்த நல்லுள்ளங்களுக்கு போய் சேரட்டும். வாழ்க வளமுடன்!!!!

================================================================
குறிப்பு : நமது முந்தைய பேரம்பாக்கம் நரசிம்மர், இலம்பையங்கோட்டூர், திருநின்றவூர் பக்தவத்சல பெருமாள் கோவில் உழவாரப்பணிகள் குறித்த பதிவு விரைவில் இடம்பெறும். நண்பர்கள் தயை கூர்ந்து பொருத்தருள வேண்டுகிறோம்.
================================================================

[END]

 

14 thoughts on “பாயாசம் சாப்பிட்டதற்கு பாராட்டு கிடைத்த அதிசயம்! — சிவராத்திரி SPL (5)

  1. டியர் சுந்தர்ஜி

    தங்கள் உழவாரபணி article மிக அருமை. நாங்கள் இதில் பங்கு பெற்றது எங்களுக்கு மிக பெரிய பாக்கியம், இறைவனுக்கு தொண்டு செய்ய அவன் அழைத்தால் தானே செல்ல முடியும். இது எனக்கு இரண்டாவது உழவாரபணி.

    நாங்கள் பாத்திரம் தேய்ப்பது, வஸ்திர ங்கள் துவைப்பது போன்றவற்றை மிகவும் மகிழ்ச்சியுடன் செய்தோம். மிகவும் கஷ்டமான வேலை, சவாலான வேலை என்று முதலில் தோன்றியது, செய்து முடித்தவுடன் பயங்கர ஆத்ம திருப்தி ஏற்பட்டது.

    கோவிலில் அபிஷேக ஆராதனைகளை குருக்கள் மிகவும் அருமையாக செய்தார். அவருக்கு எனது பணிவான வணக்கங்கள். .

    இந்த சான்ஸ் ஏற்படுத்தி கொடுத்த ரைட் mantra சுந்தர் அவர்களுக்கு எங்களது மனமார்ந்த நன்றிகள்

    அடுத்த உழவார பணியை ஆவலுடன் எதிர் பார்க்கிறோம்

    நன்றி
    உமா

  2. சிவனருளால் பங்குகொண்ட எங்கள் எல்லோருக்கும் மிகவும் சந்தோசம்.
    பாயசம் ரெடி பண்ணிகொடுத்த உங்களுக்கு கோடிபுண்ணியம்.
    அதை பகிர்ந்து கொண்ட எங்களுக்கு வார்த்தையில் சொல்ல முடியாத உணர்வுகள். இந்த வாய்ப்பை கொடுத்த இறைவனுக்கு நன்றி.
    சிவராத்திரி உழவரபணி எப்போதும் விசேஷமான உழவரபணி தான்.
    திருவேற்காடு திருப்தி எனக்கு கிடைத்தது. நன்றி சார்.

  3. I’m very happy to see this news. You said that it’s your duty.But
    சுடர் விளக்காயினும் தூண்டு கோல் வேண்டும். அதனால் உங்களை கட்டாயம் பாராட்ட வேண்டும். பண ரீதியாக முடிந்தால் பணமாகவும் , உடல் ரீதியாக முடிந்தால் உழைப்பாகவும் நாம் கடவுளுக்கு தொண்டு செய்ய வேண்டும் .
    It’s easy to say. But difficult to implement.
    So வாழ்க உமது பணி.

  4. வணக்கம் சுந்தர் சார். நீங்கள் மற்றும் நமது உழவார பணிக்குழுவினர் மற்றும் நமது வாசகர்கள் அனைவருமே மிகவும் கொடுத்து வைத்தவர்கள். கண்டிப்பாக சிவபெருமானின் அருளாசி அனைவருக்கும் கிடைக்கும். அடுத்த சிவராத்திரியில் அனைவரது கோரிக்கைகளும் நிறைவேறி அடுத்த உழவாரபணி மிகவும் சிறப்பாக நடைபெறும் என்பது நிச்சயம். ஓம் நமசிவாயா . நன்றி.

  5. சுந்தர் சார்,

    பாயாசம் சாப்பிட்டதற்கு பாராட்டு கிடைத்த அதிசயம் எல்லாம் உங்களின் துண்டுதளால் தான்.

    இது எங்களின் முதல் உழவாரப்பணி ஆனால் அது சிவராத்திரியின் சிறப்பு உழவாரப்பணியாக இருப்பது எங்களுக்கு இருட்டிப்பு மகிழ்ச்சியாக உள்ளது. இதை நாங்கள் மிக உயர்வாகவும் மற்றும் சிறந்த பாக்கியமாக கருதுகிறோம்.

    எங்களுடன் இருந்த நண்பர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி.

    நன்றியுடன் அருண்

  6. வழக்கமாக வரும் சில நண்பர்கள் இந்த முறை கலந்துகொள்ளவில்லை என்றாலும் அனைத்து வேலைகளையும் சிறப்பாக செய்து முடித்தோம் என்பதில் சந்தேகம் இல்லை. அனைத்திற்கும் மேலாக சிகரம் வைத்தாற்போல் உங்களுக்கும் திரு.மனோகரன் சார் அவர்களுக்கும் மாலை அணிவிக்கப்பட்டது நமது குழுவிற்கே கிடைத்த மகுடமாக ஈசன் கொடுத்த..வாழ்த்தாக அமைந்தது…

  7. நமது உழவார பணிக்குழுவினர் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.நமது பணி குழுவினர் எந்த வேலையென்றாலும் ,அதில் மனமுவந்து தங்களை அர்பணித்து கொண்டு வேலைசெய்கிறார்கள் .சுந்தர்ஜி பம்பரமாக சுற்றி வேலை ,மின்விளக்கு அமைத்து மகிழ்ந்தார் .மகளீர் அணிக்குழு இந்த உழவரப்பனிக்கு சிறப்பாக செயல்பட்டார்கள் .

    -நன்றிகளுடன்
    மனோகர்

  8. சுந்தர் சார்,

    இது எனக்கு முதல் உழவாரப்பணி. எனக்கு இந்த வாய்ப்பு கொடுத்த உங்களுக்கு நன்றி சார். அந்த சிவனுக்கு தெரியாதா யார எங்க எப்பிடி வரவைகனும்னு. இறைவனுக்கு தொண்டு செய்ய அவன் அழைத்தால் தானே செல்ல முடியும். இதில் பங்கு பெற்றது அனைவருக்கும் மிக பெரிய பாக்கியம். தொடரட்டும் உங்கள் பணி.
    ஹர ஹர சங்கர சிவ சிவ சங்கர…..

  9. சுந்தர் சார் வணக்கம் …… தங்கள் உழவாரபணி மிக அருமை…… நமது உழவார பணிக்குழுவினர் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன் …… உங்கள் பணி தொடர வாழ்த்துகிறேன் …. நன்றி தனலட்சுமி ……

  10. சிவ பிரபாகரன் . அ. ச

    ayya , vanakkam, namasivaaya vazga, eraivan thiru arulal thangal உழவாரப்பணி menmelum serappura eraivanai vendukiren. ayya thangalukku oru vendugol arcot valaja arukil kudimallur endra uril sumar 1000 andu pazhamaiyana siva peruman kovil ( arulmegu poominathar thirukkovil ) paramaippu eillamal erukkirathu thangalal ethai srramaikka mudiyum entru thangal triruvadikalai vanakki kettukolkiren. [valaja to kudimallur 2km]
    குடிமல்லூர் வாலாஜா அருகில் அத்திரி முனிவர் பூஜித்த தளம் பூமீநாதர் திருக்கோவில்

  11. ஐயா தங்களது பணி மென்மேலும் சிறப்படைய இறைவனது பெருங்கருணை இருக்கும் என்பதில் ஐயமில்லை ….
    நாங்கெல்லாம் பெரிய வீட்டு வேலைக்காரங்கலாக்கும்……
    அசத்திட்டீங்க…….
    அடியேனுக்கும் பெரிய வீட்டுல வேலை கிடைக்குமா…..

Leave a Reply to Senthilkumar K Cancel reply

Your email address will not be published. Required fields are marked *