Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Friday, March 29, 2024
Please specify the group
Home > All in One > “அன்னயாவினும் புண்ணியங்கோடி…” — கலைமகள் மனம் குளிர எங்களின் எளிய முயற்சி!!

“அன்னயாவினும் புண்ணியங்கோடி…” — கலைமகள் மனம் குளிர எங்களின் எளிய முயற்சி!!

print
சாஸ்திரங்கள் சம்பிரதாயங்கள் கூறியுள்ளபடி கல்விக்கடவுள் அன்னை சரஸ்வதியின் பூஜையை இன்றைக்கு நாம் கொண்டாடுவது ஒரு பக்கம் இருக்க, அன்னை சரஸ்வதிக்கு உண்மையில் மகிழ்ச்சி தரக்கூடிய விஷயம் எதையாவது செய்யவேண்டும் என்று உள்ளுணர்வு சொல்லிக்கொண்டே இருந்தது. கருவறையில் மட்டும் கடவுளை தேடுபவன் அல்ல என்றுமே நான்.

சரஸ்வதி பூஜை திருநாளான இன்று யாராவது ஒரு ஏழை மாணவனுக்கு அவன் கல்வி சம்பந்தப்பட்ட ஏதாவது ஒரு சிறிய உதவி செய்யவேண்டும் என்று இரண்டு நாட்களுக்கு முன்பே முடிவு செய்துவிட்டேன். பயனாளிகளாக யாரை தேர்ந்தெடுப்பது அவர்களை எங்கே தேடுவது ஒன்றும் புரியவில்லை. பரபரப்பான சென்னையில் நமது வேலைகளை குறைவின்றி செய்யவே நமக்கு நேரம் கிடைப்பது அரிதாக இருக்கிறது. இருப்பினும் தொடர்ந்து அதே சிந்தனையில் மனம் இருந்ததன் பயனாக சில மாதங்களுக்கு முன்பு நண்பர் ரிஷி, தனது LIVINGEXTRA.COM தளத்தில், புதிய தலைமுறை இதழில் வந்த கட்டுரை ஒன்றை பதிவிட்டிருந்தது நினைவுக்கு வந்தது. (http://www.livingextra.com/2012/03/must-read-article.html)

அக்கட்டுரையில் கோவை மாவட்டத்த்தில் இராமம்பாளையம் என்னும் கிராமதை சேர்ந்த ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஒன்று, அந்த பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் உதவி ஆசிரியர் இருவரின் முயற்சியால் தனியார் பள்ளிகளுக்கு சவால் விடும் அளவிற்கு – ஏன் அதை விட பல படிகள் அதிகமாக – நவீன வசதிகளுடன் ஒரு மாதிரி பள்ளியாக மாறியிருந்ததை படங்களுடன் அழகாக அளிக்கப்பட்டிருந்தது. அந்த கட்டுரையையை (மார்ச் மாதம்) படித்தபோதே அந்த ஆசிரியர்களை  தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்ததோடு மட்டுமல்லாமல், அவர்களின் முயற்சிகளுக்கு உறுதுணையாக “என்னால் இயன்றதை வருங்காலத்தில் செய்வேன்!” என்றும் கூறியிருந்தேன்.

நேற்று மறுபடியும் அவர்களை தொடர்பு கொண்டு, RIGHTMANTRA.COM நாம் துவக்கியிருப்பதை பற்றி கூறி, சரஸ்வதி பூஜை திருநாள் அன்று அவர்களின் முயற்சிகளுக்கு ஏதாவது ஒரு வகையில் உதவிடும் என் எண்ணத்தை வெளிப்படுத்தினேன். “என்ன செய்ய விரும்புகிறீர்கள்?” என்று கேட்டார்கள். அப்பள்ளியில் படிக்கும் மாணவர்களில் கல்வியில் சிறந்து விளங்கக்கூடிய ஆனால் ஏழ்மை நிலையில் உள்ள மாணவர் எவருக்கேனும் ஏதேனும் ஒரு வகையில் உதவிட விரும்புவதாக கூறினேன். அவர்களால் அடையாளம் காட்டப்படும் மாணவனுக்கோ அல்லது மாணவிக்கோ சீருடை, நோட்டு புஸ்தகம், ஸ்கூல் பேக் உள்ளிட்டவற்றை வாங்கித் தருவதோடு மட்டுமல்லாமல், அவர்கள் கல்வி பயிலும் ஒவ்வொரு நிலையிலும் அவர்களின் தேவைகளை என்னால் முடிந்த அளவிற்கு கவனித்துக்கொள்ள விரும்புவதாகவும் கூறினேன்.

நமது எண்ணத்தையும் ஆர்வத்தையும் பெரிதும் பாராட்டிய தலைமை ஆசிரியர் திருமதி.சரஸ்வதியும், உதவி ஆசிரியர் திரு.பிராங்க்ளினும் இது அரசு பள்ளி என்பதால் கல்வி முற்றிலும் இலவசம் என்றும் நோட்டு புஸ்தகம், சீருடை உள்ளிட்ட மாணாக்கரின் தேவைகளை அரசே தந்துவிடுவதாகவும் கூறினார். ஆனால் நான் மாணவர்கள் எவருக்கேனும் ஏதாவது செய்யவேண்டும் என்பதில் உறுதியாக இருந்தேன்.

அப்போது தான் எனக்கு அந்த யோசனை தோன்றியது. தமிழகம் முழுதும் மின்வெட்டு படாதபாடு படுத்தி வரும் காலமாயிற்றே இது. நகர்ப்புறங்களிலேயே இப்படி என்றால் கிராமப்புறங்களில் கேட்கவே வேண்டாம். எனவே, அப்பள்ளியில் சிறந்த மாணவர்கள் ஒரு சிலருக்கு, ரீ-சார்ஜ் செய்யக்கூடிய நல்ல தரமான எமர்ஜென்சி லைட்டுகள் வாங்கித் தருவதாகவும் அது மாலையில் வீட்டுக்கு சென்றவுடன், கரண்ட் இல்லையென்றாலும் அம்மாணவர்கள் படிப்பதற்கு மிகவும் உபயோகமாய் இருக்கும் என்றும் கூறினேன். அதற்குரிய இரு பயனாளிகளை அடையாளம் காட்டினால் போதும் என்றும் கூறினேன்.

மாவட்ட ஆட்சியர் திரு.எம்.கருணாகரன் பள்ளிக்கு விஜயம் செய்த போது…

அந்த யோசனை அவர்களை வெகுவாக கவர்ந்துவிட்டது. பக்கத்திலுள்ள வெண்மணி என்னும் பின்தங்கிய கிராமத்திலிருந்து சுமார் 50 க்கும் மேற்பட்ட மாணவர்கள் இந்த பள்ளியில் படிக்க வருவதாகவும், அவர்கள் வீடு திரும்பியவுடன் அந்த மாணவர்கள் கூட்டாக ஒரே இடத்தில் அமர்ந்து மாலை வேளைகளில் படிக்கும் விதமாக இரண்டு அல்லது மூன்று எமர்ஜென்சி லைட்டுகள் வாங்கித் தந்தால் போதுமானது என்றும் கூறினார் திரு.பிராங்க்ளின். அவரே ஒரு யோசனையையும் கூறினார். கோவை மாவட்டத்தில் அனைத்து  தபால் அலுவலகங்களிலும் சோலார் வசதியில் இயங்கக்கூடிய எமர்ஜென்சி லைட்டுகள் விற்கப்படுவதாகவும், அதையே வாங்கித் தரும்படியும் கேட்டுக்கொண்டார். (சரிதானே… ரீ-சார்ஜபிள் லைட் வாங்கித் தந்தா அதை சார்ஜ் பண்றதுக்கு கரண்ட் வேணுமே?)

உடனே, கோவை மாவட்டத்தில் உள்ள என் நண்பர் & தளவாசகர் திரு.சக்திவேலை தொடர்புகொண்டு, விஷயத்தை கூறி அவரின் அக்கவுண்ட்டுக்கு பணத்தை ட்ரான்ஸ்ஃபர் செய்து, திரு.பிராங்க்ளினுடன் CO-ORDINATE செய்து மேற்படி பணியை எப்படியாவது முடிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டேன். அவரும் மிகவும் மகிழ்ச்சியுடன் ஒப்புக்கொண்டதோடு மட்டுமல்லாமல் அவரும் தன் பங்கிற்கு ஒரு லைட் வாங்கித் தந்து, நம் பணியில் இணைவதாகவும் கூறினார். மேலும் பயனாளிகளிடம் அதை நேரடியாக கொண்டு சேர்க்கும் பணியை பார்த்துக்கொள்வதாகவும் கூறியிருக்கிறார். அவருக்கு என் நன்றி. இந்த பணியை பற்றி நண்பர் ரிஷியிடம் கூறியபோது, அவரும் மிகவும் மகிழ்ச்சியுடன் நம் பணியில் இணைந்துவிட்டார். மேலும் “இந்த மாதிரி விஷயத்துக்கெல்லாம் நீங்க என்னை கேட்பதே தவறு. என்னை சேர்த்துக்கொள்வது உங்கள் உரிமை” என்றார். நண்பர்கள் மாரீஸ் கண்ணன், ஹரி சிவாஜி ஆகியோரும் இணைந்துவிட்டனர். ஆக ஒரு விளக்கு இப்போ எத்தனை விளக்காகிவிட்டது பார்த்தீர்களா?

இந்த உதாரண ஆசிரியர்களிடம் நமது இந்த மேற்படி உதவி ஒரு ஆரம்பம் தான் என்றும், இவர்களின் சீரிய பணிக்கு என்னால் இயன்றவரையில் இனி உதவியாக இருப்பேன் என்றும் அவர்களின் தேவைகளை தயங்காது எங்களிடம் பகிர்ந்து கொள்ளவேண்டும் எங்களால் இயன்றதை செய்வோம் என்றும் உறுதி கூறியிருக்கிறேன்.

நாம் செய்வது மிக மிக சிறிய ஒரு உதவி தான். அதே சமயம் இது ஒரு தொடக்கம் தான் என்றும் உங்களிடம் தெளிவுபடுத்த விரும்புகிறேன். சரஸ்வதி பூஜை அன்று ஏதாவது நிச்சயம் செய்யவேண்டும்… அட்லீஸ்ட் அதற்குரிய முயற்சியையாவது செய்துவிடவேண்டும் என்று கருதியே இதை செய்தேன். வரும் காலங்களில் பெரிய அளவில் செய்ய விரும்புகிறேன். இறைவன், அதற்குரிய சூழ்நிலையை தருவான் என்றும் நம்புகிறேன்.

ஒரு விஷயம் கவனிச்சீங்களா… “கிராமப்புற மாணவர்கள் பலருக்கு வசந்தத்தை அளித்திருக்கும் இந்த பள்ளியின் தலைமை ஆசிரியையின் பேர் தெரியுமா……? சரஸ்வதி!!!!”

(அதான் நான் சொன்னேனே, ஆண்டவனை நோக்கி நீங்க ஒரு அடி எடுத்து வெச்சீங்கன்னா அவன் உங்களை நோக்கி பத்து அடி எடுத்து வைப்பான்னு. இப்போ புரியுதா?)

நான்  உங்கள் அனைவரிடமும் கேட்டுக் கொள்வதெல்லாம், ஒன்று தான். உங்களில் எத்தனையோ பேர், கிராமப்புற பள்ளிகளில் படித்து, இன்றைக்கு ஓரளவு நல்ல நிலையில் இருப்பீர்கள். பலர் வெளிநாடுகளில் செட்டில் ஆகியிருக்கலாம். இத்தகையோர், தாங்கள் படித்த அந்த பள்ளிக்கு ஏதாது ஒரு வகையில் உதவிட வேண்டும் என்பதே. மனமிருந்தால் மார்க்கமுண்டு. அடுத்த முறை நீங்கள் தாயகம் வரும்போது மறக்காமல் நீங்கள் படித்த பள்ளிக்கு சென்று இதற்க்கான முயற்சியை மேற்கொள்ளவும்.

அடுத்து, வசதிமிக்கவர்களை நான் கேட்டுக்கொள்வதெல்லாம் ஒன்றே ஒன்று தான்.

நீங்கள் ஒவ்வொருவரும் உங்கள் பகுதிகளில் உள்ள, திறமை மிகுந்த ஏழை மாணவர் எவரையேனும் தத்தெடுத்து அவர்கள் கல்விக்கு உங்களால் முடிந்ததை செய்யுங்கள் என்பதே. அது கல்விக்கட்டணமாக இருக்கலாம், சீருடை, நோட்டு புஸ்தகம், ஸ்கூல் பேக் உள்ளிட்ட அவர்கள் தேவைகளை பூர்த்தி செய்வதாக இருக்கலாம்… பெரிதோ சிறிதோ எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். அவரவர் சௌகரியத்தையும் வசதியையும் பொறுத்து செய்யுங்கள். ஆனால் நிச்சயம் செய்யுங்கள்.

“அன்னசத்திரம் ஆயிரம் வைத்தல்
ஆலயம் பதினாயிரம் நட்டல்,
அன்னயாவினும் புண்ணியங்கோடி
ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்”

என்று மகாகவி பாரதி கூறியபடி புண்ணியத்திலேயே மிகப் பெரிய புண்ணியம் ஒரு ஏழையின் கல்விக்கு உதவுவது தான்.

இந்த வருடம் ஒரு மாணவர், அடுத்த வருடம் இரண்டு பேர்… இப்படி உங்கள் உதவியை நீட்டித்துக்கொண்டே செல்லவும். தலைமுறை தாண்டி உங்கள் வம்சத்துக்கு பொருளை விட பெரிதான புண்ணியத்தை சேர்க்க இது உதவும்.

நான் முன்பே ஒரு பதிவில் கூறியிருந்தேன்…. நாமெல்லாம் ஒரு வகையில் கொடுத்து வைத்தவர்கள். உதவிட வேண்டும் என்று நினைத்தால் அதற்கு தகுதியானவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள் இங்கே. அப்புறம் என்ன?

[END]

6 thoughts on ““அன்னயாவினும் புண்ணியங்கோடி…” — கலைமகள் மனம் குளிர எங்களின் எளிய முயற்சி!!

  1. Dear Sundar,

    I am a regular visitor of your posts in both onlysuperstar and rightmantra. Currently I am in Chennai and I would like to touchbase with you. Kindly share your contact number to my email Id.

    Thanks

  2. “அன்னசத்திரம் ஆயிரம் வைத்தல்
    ஆலயம் பதினாயிரம் நட்டல்,
    அன்னயாவினும் புண்ணியங்கோடி
    ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்”

    என்ன ஒரு பொருள் நிறைந்த வார்த்தைகள்…

    உங்களின் அரும்பணியில் ஒரு அணிலின் உதவி போல என்னையும் இணைத்துகொண்டதற்க்கு நன்றி சுந்தர். இந்த தள வாசகர் என்பதிலும் உங்கள் நண்பர் என்பதிலும் பெருமிதம் கொள்கிறேன்.

  3. Hi, Can you forward me how much it costed for the solar light. I would like to contribute one. Let me know if they need any other items, i will be able to involve my friend too in this noble cause.

    You can send the details to my email id mentioned about.

    Thanks and regards,
    B. Sudhakar.

    ———————————————-
    My friend will get the quote today.

    Regarding this emergency light – presently we don’t want to collect any funds from others for some reasons. If you want to contribute ro that school, i will tell a direct way where you can transfer you fund directly to the school ac itself. I don’t want to hold your helping intention as it is an act of denying assistance to some needy. Just wait for a day. Will give complete details. thanks.

    – Sundar

  4. congrats dear friends… u people need laurels for this noble effort. i will try helping others at the most possible way(to the needy).

    Dear Sundar Sir, U are so human. Its difficult to find people like u in today’s world.

    God bless. inspired.

    ———————————————-
    படைத்தவனுக்கே பெருமைகள் அனைத்தும் உரித்தாகுக! நான் ஓர் கருவி மட்டுமே!!
    – சுந்தர்

Leave a Reply to raajesh Cancel reply

Your email address will not be published. Required fields are marked *