Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Tuesday, March 19, 2024
Please specify the group
Home > Featured > கார்த்திகை மாதத்தின் சிறப்பும் திருவண்ணாமலை மகிமையும்!

கார்த்திகை மாதத்தின் சிறப்பும் திருவண்ணாமலை மகிமையும்!

print
நாளை (17/11/2013) முதல் கார்த்திகை மாதம் துவங்குகிறது. மார்கழி மாதத்துக்கு எத்தனை சிறப்பு உள்ளதோ அதே அளவு கார்த்திகை மாதத்துக்கும் உள்ளது. கார்த்திகை மாதம் என்றாலே நமக்கு நினைவுக்கு வருவது திருவண்ணாமலை மகாதீபம் தான். ஆனால், இக்கார்த்திகை மாதத்திற்கு வேறு பல சிறப்புகளும் உண்டு. அதைப் பற்றி இங்கே தெரிந்து கொள்வோம். மாதங்களில் கார்த்திகை மாதம் மன உறுதி தரும் என்பது ஜதீகம்.  அதே போன்று நினைத்தாலே முக்தியளிக்க கூடியது திருவண்ணாமலை. திருவண்ணாமலை மகாதீபத்தை தரிசிக்க செல்ல முடியாதவர்கள் இங்கு கூறப்பட்டிருக்கும் திருவண்ணாமலையின் சிறப்பை படித்து பயன்பெறலாம். பண்டிகைகளின் சிறப்பு, தல வரலாறு, மாதங்களின் மகத்துவம் இவற்றை படிப்பது மிக மிக புண்ணியம் தரக்கூடியது.

யாமறிந்த தகவல்களையும் இணையத்தில் திரட்டிய தகவல்களையும் சேர்த்து தந்திருக்கிறேன். படித்து முடிக்கும்போது மனம் ஒருவித அமைதி பெறுவதை நிச்சயம் உணர்வீர்கள்!

Balamuruganதிருமண மாதம்

விருச்சிக ராசியில் சூரியன் சஞ்சரிக்கும் இம்மாதத்தில் மனசேர்க்கை, உடல் சேர்க்கை, கர்ப்பதானம் ஆகிய இவற்றில் பிரச்சினைகள் வராது. எனவே, கார்த்திகை மாதத்தைத் திருமண மாதம் என்று இந்து சாஸ்திரம் கூறுகிறது.

கார்த்திகை மாத மகிமை

கார்த்திகை மாததத்தில் நாள்தோறும் சூரிய உதயத்தின் போது நீராடுபவர்கள். சகல புண்ணிய தீர்த்தங்களிலும் நீராடிய புண்ணிய பலனை அடைவார்கள். விஷ்ணு பகவானை கார்த்திகை மாதத்தில் புஷ்பங்களால் அர்ச்சித்து பூஜை செய்பவர்கள் தேவர்களும் அடைய அரிதான மோட்ச நிலையை அடைவார்கள்.

கார்த்திகை மாதத்தில் விஷ்ணு பகவானை துளசி இலையால் அர்ச்சனை செய்பவர்கள் பகவானுக்கு சமர்ப்பிக்கும் ஒவ்வொரு துளசி இலைகளுக்கும் ஒவ்வொரு அசுவமேதயாகம் செய்த பலனை அடைவார்கள்.

கார்த்திகை மாதத்தில் விளக்கு தானம் செய்பவர்கள் பிரம்ம ஹத்தி முதலான தோஷங்களிலிருந்தும் விடுபடுவார்கள். கார்த்திகை மாதத்தில் நாள்தோறும் இல்லங்களில் தீபங்களை ஏற்றி வழிபடுபவர்கள் புண்ணிய பலனை அடைவர்.

கார்த்திகை மாதத்தில் மது மாமிசம் முதலானவைகளை ஒழித்து விரதம் அனுஷ்டிப்பவர் சகல பாவங்களிலிருந்தும் விடுபட்டு விஷ்ணு பாதத்தை அடைவார்கள். கார்த்திகை மாதத்தில் மாமிச ஆகாரத்தைக் கைவிடாதவர்கள் புழுப் பூச்சிகளாய் பிறவி எடுப்பார்கள் என்று பத்மபுராணம் கூறுகிறது.

கார்த்திகைக் கடவுள்

தெய்வங்களுக்குரிவையாக ஒவ்வொரு நட்சத்திரங்கள் திகழும் ஆனால் முருகப் பெருமானுக்கு மட்டும் இரண்டு நட்சத்திரங்கள் உகந்தவையாகும். விசாக நட்சத்திரமும் கார்த்திகை நட்சத்திரமும்தான். அந்த இரு நட்சத்திரங்கள் வைகாசி மாதம் விசாக நட்சத்திரத்தன்று பிறந்தவர் ஆகையால் விசாக நட்சத்திரம் முருகக் கடவுளுக்குரியதாயிற்று.

சிவபெருமானின் நெற்றிக் கண்ணிலிருந்து ஆறு தீப்பொறிகளாகத் தோன்றிய சரவணப் பொய்கையில் குழந்தையாய் தவழ்ந்த முருகனை கார்த்திகைப் பெண்கள் எடுத்து வளர்த்ததால் கார்த்திகையும் முருகனுக்குரிய நட்சத்திரமாயிற்று.

அதிலும் விருச்சிக மாதமாகிய கார்த்திகைத் திங்களில் பெளர்ணமியோடு கூடி வரும் கார்த்திகை நட்சத்திரம் முருக வழிபாட்டிற்கேற்ற ஒன்றாகும். கார்த்திகைத் தீபத் திருநாளன்று தீபங்கள் ஏற்றி முருகனை வழிபடுவது சிறந்தது. எனவே கார்த்திகை நட்சத்திரத்தில் முருகப்பெருமானை விரதமிருந்து கார்த்திகையனாக வழிபட நற்பேறுகள் யாவும் கிடைக்கப் பெறுவர்

சபரிமலை மாலை அணிதல்

கார்த்திகை மாதம் பிறந்தவுடன் மாலை அணி விழா நடத்தப்படுகிறது. சபரிமலை ஸ்ரீ ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜைக்காக நடை திறக்கப்பட்டு மண்டல பூஜை தொடங்கப்படுகிறது. சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து 41 நாட்கள் விரதம் மேற்கொள்வர். இதனால் இம்மாதம் ஸ்ரீ ஐய்யப்பனுக்கு உரிய மாதமாகவும் ஐயப்ப பக்தர்களுக்கு உரிய மாதமாகவும் ஐயப்ப பக்தர்களுக்கு உரிய மாதமாகவும் கருதப்படுகிறது.

கார்த்திகை பெளர்ணமி

கார்த்திகை பெளர்ணமியன்று பூமிக்கு மிக அருகில் சந்திரன் வருகிறது. ஆகவே அன்றைய தினம் மற்ற பெளர்ணமி தினத்தை விட நிலவின் ஒளி மிகப் பிரகாசமாக இருக்கும். அன்றைய தினம் சிவசக்தி சமேதராய், பூமிக்கு மிக அருகே வந்து இறைவனும் இறைவியும் அருள்பாலிக்கின்றனர்.

கார்த்திகை பெளர்ணமி தினத்தன்று பெரும்பாலும் கார்த்திகை நட்சத்திரமும் இணைந்து வரக் காணலாம். கார்த்திகை, திருவோணம் ஆகிய இரு நட்சத்திரங்களும் நல்ல நட்சத்திர சக்தி தருவதால் இந்த நட்சத்திரம் வரும் நாட்களில் விரதங்கள் இருக்க வேண்டும் என்று இந்து மதம் கூறுகிறது.

சுபமான கார்த்திகை மாதத்தில், பிரகாசமான பெளர்ணமியில், நல்ல நட்சத்திர சக்தி கொண்ட கார்த்திகை நட்சத்திரம் இணைந்து வருவதால் இது ‘பெரிய கார்த்திகை’ எனப்படுகிறது. எனவே இவ்வளவு சிறப்புப் பெற்ற கார்த்திகை மாதத்தில் உள்ள விரத முறைகளை அனுஷ்டித்து வாழ்வில் வளம் பல பெறுவோமாக.

deepamகார்த்திகை மாதம் விளக்கேற்றும் முறை

எல்லா நாளுமே தீபம் ஏற்றி வழிபடுவது உயர்வான பலன் தரும் என்றாலும், கார்த்திகை மாதத்தில் ஆலயங்களில் தீபம் ஏற்றி வைப்பதும், இல்லத்தில் இருவேளைகளில் விளக்கேற்றுவதும் எல்லா மங்களங்களையும் தந்து வாழ்வை ஒளிமயமாக்கும். விளக்கினை ஏற்றி வைப்பதோடு இதோ இங்கே தரப்பட்டுள்ள துதியினையும் சொல்லுங்கள். தீப லட்சுமியின் அருளால் உங்கள் வாழ்வில் அஷ்டலட்சுமி கடாட்சம் சேரும்.

கார்த்திகை மாதம் முழுதும் தினமும் மாலையில் வீடுகளிலும் ஆலயங்களிலும் விளக்கேற்றி  வழிபடுவது, அக்கினியின் வாயிலாக ஆண்டவனுக்கு அவிர்பாகம் அளிக்கும் பெரும் யாகத்திற்கு நிகரான பலன் தரக்கூடியது. தினமும் விளக்கேற்ற இயலாதவர்கள் துவாதசி, சதுர்த்தசி, பவுர்ணமி ஆகிய மூன்று தினங்களில் மட்டுமாவது கண்டிப்பாக தீபம் ஏற்ற வேண்டும். கார்த்திகை மாதத்தின் தொடக்கத்திலும் முடிவிலுமாக இரு நாட்களில் கார்த்திகை நட்சத்திரம் வருமாயின், இரண்டாவதாக வரும் நாளில் கொண்டாடுவது மரபு.

எந்த நேரத்தில் விளக்கேற்றலாம்?

ஊருக்கு முன் விளக்கேற்றினால் உயர்ந்த குடியாகும் என்று ஒரு பழமொழியே உள்ளது.

சூரியோதயத்திற்கு முன்னதான பிரம்ம முகூர்த்த வேளையில் (காலை4.30- 6மணி) விளக்கேற்றினால் பெரும் புண்ணியம் உண்டாகும். முன்வினைப் பாவம் விலகும். மாலை 4.30-6க்கு இடையே உள்ள பிரதோஷ வேளை சிவபெருமானுக்கும், நரசிம்ம மூர்த்திக்கும் மிகவும் உகந்தவை. இவ்வேளையில் தீபமேற்றினால் திருமணத்தடை, கல்வித்தடை நீங்கும் என்பது ஐதீகம். ஒரு வீட்டில் எந்த நேரத்தில் விளக்கேற்றினாலும், கருக்கல் நேரமான மாலை 6.30 மணிக்கு அவசியம் விளக்கேற்ற வேண்டும். இது அனைவருக்கும் பொதுவான நேரம். விளக்கை குளிர்விக்கும் போது, கைகளை உயர்த்தி அணைக்கக்கூடாது. பூவால் குளிர்விக்கலாம். தூண்டும் குச்சியால் லேசாக அழுத்தலாம். இதற்கென பித்தளை குச்சிகள் கடைகளில் கிடைக்கின்றன.

கார்த்திகை தீபங்கள் ஏற்றும் போது இந்த மந்திரத்தை கூற வேண்டும்

கீடா: பதங்கா மசகாச்ச வ்ருக்ஷா ஜலே
ஸ்தலயே நிவஸந்தி ஜீவா த்ருஷ்ட்வா
ப்ரதீபம் ந ச ஜந்ம பாஜா பவந்தி
நித்யம் ச்வபசா ஹிவிப்ரா.

பொருள்:

புழு, பட்சி, கொசு உள்ளிட்ட சகல உயிரினங்கள், தாவரங்கள், மனிதர்களில் முதல் பிறவியில் இருந்து முக்தி பிறவி வரையில் உள்ளவர்கள் இப்படி யார் யார் பார்வையில் எல்லாம் இந்த துப ஒளி படுகிறதோ அவரெல்லாம் இன்னொரு பிறவி என்ற துன்பம் இன்றி நிதமும ஆனந்தம் பெறட்டும் என்பது இந்த மந்திரத்தின் பொருள்.

கார்த்திகை தீபத்தன்று வீட்டில் பெண்கள் பாட வேண்டிய பாடல் இது

விளக்கே திருவிளக்கே: வேந்தன் உடன்பிறப்பே!

சோதி மணிவிளக்கே: சீதேவி பொன்மணியே!

அந்தி விளக்கே: அலங்கார நாயகியே!

காந்தி விளக்கே: காமாட்சித் தாயாரே!

பசும்பொன் விளக்குவைத்துப் பஞ்சுத் திரிபோட்டு

குளம்போல எண்ணெய் விட்டு

கோலமுடன் ஏற்றி வைத்தேன்.

ஏற்றினேன் நெய்விளக்கு: எந்தன் குடிவிளங்க

வைத்தேன் திருவிளக்கு: மாளிகையும் தான் விளங்க

மாளிகையில் சோதியுள்ள

மாதாவைக் கண்டு மகிழ்ந்தேன் யான்!

மாங்கல்யப் பிச்சை மடிப்பிச்சை தாரும் அம்மா

சந்தான பாக்கியத்துடன் தனங்களும் தாரும் அம்மா

பெட்டி நிறையப் பூஷணங்கள் தாரும் அம்மா

பட்டி நிறையப் பால் பசுவைத் தாரும் அம்மா

கொட்டகை நிறையக் குதிரைகளைத் தாரும் அம்மா

புகழுடம்பைத் தாரும் அம்மா: பக்கத்தில் நில்லும் அம்மா

அல்லும் பகலும் எந்தன் அண்டையிலே நில்லும் அம்மா

சேவித்து எழுந்திருந்தேன்: தேவி வடிவம் கண்டேன்

வஜ்ரக் கிரீடம் கண்டேன்: வைடூரிய மாலை கண்டேன்

முத்துக் கொண்டை கண்டேன்: முழுப்பச்சைமாலை கண்டேன்

உரிமுடி கண்டேன்: தாழைமடல் சூடக் கண்டேன்

பின்னழகு கண்டேன்: பிறை போல நெற்றி கண்டேன்

சாந்துடன் நெற்றி கண்டேன்: தாயார் வடிவம் கண்டேன்

கமலத் திருமுகத்தில் கஸ்தூரிப் பொட்டும் கண்டேன்

மார்பில் பதக்கம் மின்ன மாலையசையக் கண்டேன்

கைவளையல் கலகலவென கணையாழி மின்னக் கண்டேன்

தங்க ஒட்டியாணம் தகதகவென ஜொலிக்கக் கண்டேன்

காலில் சிலம்பு கண்டேன்: காலாழி பீலி கண்டேன்

மங்கள நாயகியை மனங்குளிர

கண்டு மகிழ்ந்தேன் அடியாள் நான்!

அன்னையே அருந்துணையே

அருகிருந்து காரும் அம்மா

வந்த வினை அகற்றி மகாபாக்கியம் தாரும் அம்மா

தாயாரும் உந்தன் தாளடியில் சரணம் என்றேன்

மாதாவே! உந்தன் மலரடியில் நான் பணிந்தேன்!!

===========================================================

திருவண்ணாமலையின் பெருமை

காந்தமாய் ஈர்க்கும் மலை

இந்தியாவில் உள்ள சிவத்தலங்களில் 68 தலங்கள் மிக முக்கியமானதாக கருதப்படுகின்றன. அவற்றில் காசி, ராமேஸ்வரம், காஞ்சிபுரம், மதுரை, திருவண்ணாமலை ஆகியவை அடங்கும். ஆனால், மற்ற தலங்களுக்கு சென்று வந்தால்தான் புண்ணியம். அண்ணாமலையை நினைத்தாலே போதும்.. முக்தி கிடைத்துவிடும் என்பது ஐதீகம். ஒருவர் ஒருமுறை இந்த தலத்திற்கு சென்றுவிட்டால், அவர் மீண்டும் மீண்டும் இந்த தலம் நோக்கி வருவார் என்று சொல்வர். அப்படி ஒரு காந்த சக்தி இந்த மலைக்கு உண்டு. அதனால் இந்த மலையை “காந்தமலை’ என்றும் “அருள்சக்தி மலை’ என்றும் அழைப்பார்கள்.

Thiruvannamalai Maha Deepamதிருவண்ணாமலையின் உயரம்

திருவண்ணாமலை 2665 அடி உயரம் கொண்டது என்பது பழைய தகவல். அரசு தகவலின்படி இது 2748 அடி உயரம் இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது. இங்குள்ள கோயில் மிகவும் பழமையானது. கிளிக் கோபுரம் 1191ம் ஆண்டு உருவானது. இதன் அருகில் உள்ள தீப தரிசன மண்டபம் 1202ம் ஆண்டில் கட்டப்பட்டது. 1230ல் இங்குள்ள பிரம்ம தீர்த்தம் தோன்றியிருக்கிறது. இதை ஒரு காலத்தில் பெருமாள் தடாகம் என்று அழைத்தனர். மதுரையை ஆண்ட மங்கையர்க்கரசி இந்த ஊருக்கு ஒரு ஏரியை வெட்டித்தந்தார். திருவண்ணாமலைக்கு குடிநீர் தரும் இந்த ஏரியை “சமுத்திரம் ஏரி’ என்பார்கள்.

திருவண்ணாமலையின் வயது

திருவண்ணாமலை மிகப்பழமையான மலை. இதன் தற்போதைய வயது 260 கோடி ஆண்டுகள். இது, உலகிலேயே மிகப்பழமையான மலை என்பதற்கு விஞ்ஞான சான்றும் இருக்கிறது . 1949, ஜனவரியில் இந்திய விஞ்ஞானிகள் மாநாட்டில், டாக்டர் பீர்பால் சகானி என்பவர் இந்த தகவலைத் தெரிவித்தார். மற்ற தலங்களில் மலைமேல் கடவுள் இருப்பார். ஆனால், இங்கு மலையே கடவுளாக வணங்கப்படுகிறது. திருவண்ணாமலை மூலவரின் பெயரும் “அருணாசலேஸ்வரர்’ என இருக்கிறது. “சலம்’ என்றால் “மலை’.

பழமையான கார்த்திகை தீப விழா

கார்த்திகை தீப விழா மிகவும் பழமையானதாகும். தொல்காப்பியத்தில் “வேலினொக்கிய விளக்கு நிலையும்’ என்று இந்தத் திருவிழா பற்றி கூறப்பட்டுள்ளது. கார்த்திகை மாதம், கார்த்திகை நட்சத்திரத்தன்று இந்த விளக்கு ஏற்றப்பட்டதாக நச்சினார்க்கினியர் என்னும் புலவர் உரை எழுதி இருக்கிறார். சமண மத நூல்களிலும் கார்த்திகை தீப விழா பற்றி கூறப்பட்டுள்ளது. தமிழ் இலக்கியமான முத்தொள்ளாயிரத்தில் இந்தத் திருவிழா பற்றி கூறப்பட்டுள்ளதிலிருந்து இதன் பழமை தெரியவருகிறது.

ஆறுவிரல் ரகசியம்

திருவண்ணாமலையில் பிறந்த அருணகிரிநாதர் முருகபக்தர் ஆவார். அவருக்கு கையில் ஆறு விரல்கள் இருந்தன. முருகப்பெருமானின் ஆறு தலைகளையும் அவருக்குரிய சரவணபவ என்னும் ஆறெழுத்து மந்திரத்தையும் நினைவுறுத்துவதுபோல் இந்த அமைப்பு இருந்தது. அருணகிரிநாதர் கால்களை சற்று உயர்த்தி நடப்பார். இது மயிலின் நடைபோல இருக்கும். முருகப்பெருமானின் வாகனம் மயில். தன்னை முருகனின் சுமை தாங்கியாக கருதிக்கொண்டதால் தான் அருணகிரியாருக்கு, இம்மாதிரியான நடை அமைந்ததாக சொல்வதுண்டு.

Thiruvannamalai Arunachalaeswarar

அண்ணாமலையின் சிறப்பு

திருவண்ணாமலை திருத்தலம் எண்கோண வடிவில் அமைந்துள்ளது. மலையின் சுற்றளவு 14 கி.மீ. உத்தேசமாக 8 மைல். மலைவழிப் பாதையில் உள்ள லிங்கங்களும் 8. பொதுவாக மலை என்றால் கொடிய விலங்குகளும் செடி கொடிகளுமாகக் காட்சியளிக்கும். இப்படி இங்கே எதுவும் இல்லை. இங்கே தீர்த்தங்களும், சுனைகளும், குகைகளுமே உள்ளன. அவற்றில் விருப்பாட்சி குகை, நமச்சிவாய குகை, பவளக்குகை ஆகியவை முக்கியமானவை. பீமதீர்த்தம், பாத தீர்த்தம் ஆகியவை புனிதமானவை. மயிலாடும்பாறை, ஆமைப்பாறை, வழுக்குப்பாறை ஆகிய பாறைகளும் இங்குள்ளன. அல்லிச்சுனை, அரளிச்சுனை, அத்திமரச்சுனை ஆகியவற்றில் நல்ல நீர் உள்ளது. நோய் போக்கும் மூலிகைகளும் நிறைந்துள்ளன. மலையின்மேல் குகை நமச்சிவாயர் கோயில், பச்சையப்பன் கோயில், அரவன் கோயில் ஆகியவையும் உண்டு. இதனால்தான் ஏராளமான சித்தர்களும் முனிவர்களும் இந்த மலையில் வசித்தனர். இப்போதும் பல சித்தர்கள் வசிப்பதாக நம்பிக்கை உள்ளது.

லிங்கமே மலையாக அமைந்த மலை, தென்னிந்தியாவின் மிகச் சிறந்த சிவதலமாக திகழும் சிவ தலம், பஞ்சபூத தலங்களில் முக்கியமான அக்னி தலம் இது ஆகும். நினைத்தாலே முக்தி தரும் திருஅண்ணாமலை என சிறப்பு பெற்ற தலம். நான் என்ற அகந்தை அழிந்த தலம் இது. உண்ணாமுலையம்மன் சிவபெருமானிடம் இடப்பாகம் பெற கிரிவலம் வந்து தவம் செய்த தலம் இது.

பார்வதிக்கு சிவபெருமான் தன் உடம்பில் சரிபாதியாக இடப்பாகம் தந்து ஜோதி சொரூபமாய் காட்சி தந்த தலம். அருணகிரிநாதர் பிறந்து வளர்ந்து வாழ்ந்து முக்தி அடைந்த தலம்.அருணகிரிநாதர் வாழ்க்கை வெறுப்புற்று தற்கொலை செய்து கொள்ள முயன்றபோது முருகனே வந்து காப்பாற்றி திருப்புகழ் பாட உத்தரவிட்ட தலம் திருவண்ணாமலை.

கார்த்திகை தீபத்தன்று திருவண்ணாமலை
கார்த்திகை தீபத்தன்று திருவண்ணாமலை

கிரிவலம்

மலைமேல் இருந்து அருணாசலர் ஆலயம் கார்த்திகை தீபப் திரு நாள் அன்று தான் திருவண்ணாமலை திருத்தலத்தில் இறைவன்இறைவிக்கு இடப்பாகம் அளித்து அர்த்தநாரீஸ்வரர் ஆகக் காட்சி அளித்தான். இந்த நன்னாளில் மலைவலம் வருவது மகத்தான மிகுந்த புண்ணியத்தைத் தரும். குறிப்பாக திருவண்ணாமலை கிரிவலம் அனைத்துப் பாவங்களையும் போக்கி மகத்தான புண்ணிய பலனைத் தரவல்லது.
 
மலையின் பெருமை

இம்மலை பிறப்பு, இறப்பினை நீக்க கூடியது. ஆதலால் மலைமருந்து என்றும், சிகப்பு நிறம் உடையதால் அருணாகிரி என்றும் அழைக்கப்படுகிறது. இங்கு மலையே இலிங்க வடிவாக இருப்பதால் இம்மலையைச் சுற்றுவது இறைவனையே சுற்றி வருவதற்கு சமாகக் கருதப்படுகிறது. .

ராஜ கோபுரம்

கிருதயுகத்தில் நெருப்பு மலையாகவும், திரேதாயுகத்தில் மாணிக்க மலையாகவும், துவாபரயுகத்தில் பொன்மலையாகவும், கலியுகத்தில் கல் மலையாகவும் திருவுருவம் கொண்டுள்ளது அண்ணாமலை. இத்தலத்தைச் சுற்றி 1008 லிங்கங்கள் புதைந்திருப்பதாகச் சொல்லப்படுகிறது.

(ஆக்கத்தில் பெரிதும் உதவிய தளங்கள் : தினமலர்.காம், தினகரன்.காம்)

===========================================================

[END]

13 thoughts on “கார்த்திகை மாதத்தின் சிறப்பும் திருவண்ணாமலை மகிமையும்!

  1. கார்த்திகை மாதத்தின் சிறப்பையும், திருவண்ணாமலையின் மகிமையை பற்றியும் இதை விட ஒரு சிறப்பான பதிவை வேறு எங்கும் காணமுடியாது.

    மிக்க நன்றி.

  2. டியர் sundarij

    Happy Morning and advance karhigai தீபம் wishes to everybody

    தங்களின் பதிவு மிகவும் அருமை. படித்து முடித்தவுடன் மனம் ஒருவித அமைதி பெற்றதை நான் உணர்ந்தேன். காலையில் ஆபிசிற்கு வரும் பொழுதே என் future பற்றி ஒரே கவலையுடன் வந்தேன்.ஏற்கனவே உங்கள் முந்திய பதிவில் (குழந்தைகளிடம் கற்றுக்கொள்ள வேண்டிய விஷயங்களில் படித்து விட்டு future பற்றி நினைக்க கூடாது என்று நினைத்தேன். ஆனால் என் மனதில் ஒருவித பய உணர்வால் இவ்வாறு சிந்திக்க தோன்றுகிறது)

    இந்த பதிவை படித்தவுடன் அண்ணாமலையாரிடம் என் கவலையை ஒப்படைத்துவிட்டேன்.

    thank you for your wonderful போஸ்ட்.

    நன்றி
    உமா

    1. நம் தளத்தின் வாசகராய் இருந்துகொண்டு எதிர்காலம் குறித்து பயப்படலாமா?

      – சுந்தர்

  3. சுந்தர்ஜி

    திருவண்ணாமலை மகாதீபம், ஏற்றுபவர்கள் பக்கத்தில் இருந்து பார்க்கும் பாக்கியம் பெற்ற தீப தரிசனம் உங்கள் படத்தின் மூலம் எங்களுக்கு இன்றே கிடைத்துவிட்டது. பெண்களுக்குரிய தீபப்பாடலுக்கும் நன்றி. கார்த்திகை மாதம் திருமண மாதம் என்பது புது தகவல். மொத்தத்தில் “கார்த்திகை மகிமை” பதிவு தீபம் போல் ஜொலிக்கிறது.

  4. கார்த்திகை மாதத்தின் சிறப்பும் திருவண்ணாமலை மகிமையும் அருமையான தொகுப்பு .அனைவருக்கும் பயன் தரும் தகவல்கள் .திருவண்ணாமலையை நினைத்தாலே முக்தி கிடக்கும் அருமையான திருத்தலம் .

    “”திருவண்ணமலைக்கு நீங்கள் நினைத்தால் மட்டும் செல்ல முடியாது”” .அவனருள் இல்லாமல் யாரும் அங்கு செல்ல முடியாது .

    நான் இன்று தங்களுடனும் ,நல்லோர்களுடனும் சேர்ந்து இருப்பதற்கு என் அப்பன் அண்ணாமலையார் தான் காரணம்.

    ஒரு முறை அண்ணாமலையாரை தரிசனம் செய்து ,ஜோதி லிங்க கிரிவலம் வந்தால் இந்த பிறவிப்பயனை நாம் அடைந்துவிடலாம் .

    திருவண்ணமலைக்கு அரோகரா…
    அண்ணாமலையாருக்கு அரோகரா…
    உண்ணாமுலையம்மனுக்கு அரோகரா ..

    -வாழ்த்துக்களுடன்
    -மனோகர்

  5. ஆஹா!. என்ன அழகு எத்தனை அழகு என்று பாட தோன்றியது முருகன் வாயில் விரல் வைத்து சிரிக்கும் அழகு.
    தீபம் ஏற்றி பாட வேண்டிய பாடல் பாட பாட மனம் அமைதிபெறும்.
    திருவண்ணாமலை தீபம் அருகில் இருந்து பார்த்தது போல இருந்தது.
    திருவண்ணாமலையின் சிறப்பும் பெருமையும் அருமை.
    அண்ணாமலையின் சிறப்பு படிக்க படிக்க இன்பம் தரும்.
    எல்லோருக்கும் பலன் அளிக்க கூடிய பதிவை அளித்த உங்களுக்கு நன்றிகள்.

  6. சுந்தர்ஜி
    எத்தனை,எத்தனை உங்கள் கைவண்ணத்தில். எத்தனை பார்த்தாலும், எத்தனை படித்தாலும் அதை எழுதும் உங்கள் கை வண்ணம் மிகவும்
    அருமை. அண்ணாமலையாரை எழுத ஒரு நூல் வேண்டும். யான் பெற்ற இன்பம் அனைவரும் பெற வேண்டும் என்று நினைக்கும் உங்கள் உள்ளம் பெரிது. அருணாச்சலேச்வர் அண்ணாமலையாரை
    அவர் பெருமை அனைவரும் படித்து அவர் அருள் பெற வேண்டும்.
    மேலும் கார்த்திகை மாதத்தில் உள்ள விரத முறைகளை அனுஷ்டித்து வாழ்வில் வளம் பல பெறுவோம்.கார்த்திகை தீபத்தன்று வீட்டில் பெண்கள் பாட வேண்டிய பாடல் – அருமை.

  7. சுந்தர்ஜி

    அஷ்டலட்சுமி வருகை பாடல்

    எட்டுவகை லெட்சுமியால் ஏராளமான செல்வம்
    கொட்டுவகை நானறிந்தேன் கோலமயி லானவளே
    வெற்றியுடன் நான் வாழ வேணும் ஆதி லெட்சுமி
    வட்டமலர் மீதிருந்து வருவாய் இதுசமயம்

    சிந்தைனைக்குச் செவிசாய்த்துச் சீக்கிரமென் னில்லம்வந்து
    உந்தனருள் தந்திருந்தால் உலகமெனைப் பாராட்டும்
    வந்தமர்ந்து உறவாடி வரங்கள்பல தருவதற்கே
    சந்தான லெட்சுமியே தான் வருவாய் இதுசமயம்

    யானையிரு புறமும் நிற்கும் ஆரணங்கே உனைத்தொழுதால்
    காணுமொருபோ கமெலாம் காசினியில் கிடைக்குமென்பார்
    தேனிருக்கும் கவியுரைத்தேன் தேர்ந்தகஜ லெட்சுமியே
    வானிருக்கும் நிலவாகி வருவாய் இதுசமயம்

    அன்றாட வாழ்க்கையினில் அனுபவிக்கும் துன்பமெல்லாம்
    உன்றனருள் பெற்றுவிட்டால் ஓடுவதும் உண்மையன்றோ
    இன்றோடு துயர்விலக இனியதன லெட்சுமியே
    மன்றாடிக் கேட்கிறேன் வருவாய் இதுசமயம்

    எங்கள்பசி தீர்ப்பதற்கு இனியவயல் அத்தனையும்
    தங்கநிறக் கதிராகித் தழைத்துச் சிரிப்பவளே
    பங்குபெறும் வாழ்க்கையினைப் பார்தான்ய லெட்சுமியே
    மங்களமாய் என்னில்லம் வருவாய் இதுசமயம்

    கற்றுநான் புகழடைந்து காசியினில் எந்நாளும்
    வெற்றியின்மேல் வெற்றிபெற வேணுமென்று கேட்கிறேன்
    பற்றுவைத்தேன் உன்னிடத்தில் பார்விஜய லெட்சுமியே
    வற்றாத அருட்கடலே வருவாய் இதுசமயம்

    நெஞ்சிற் கவலையெல்லாம் நிழல்போல் தொடர்ந்ததனால்
    தஞ்சமென உனையடைந்தேன் தாமரைபோல் நிற்பவளே
    அஞ்சாது வரம் கொடுக்கும் அழகுமகா லெட்சுமியே
    வஞ்சமில்லா தெனக்கருள வருவாய் இதுசமயம்

    ஏழுவித லெட்சுமிகள் என்னில்லம் வந்தாலும்
    சூழுகிற பகையொழிக்கும் தூயவளும் நீதானே
    வாழும் வழிகாட்டிடவே வாவீர லெட்சுமியே
    மாலையிட்டு போற்றுகிறேன் வருவாய் இதுசமயம்

    1. அற்புதமான பாடலை பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி!
      கார்த்திகை தீப வாழ்த்துக்கள்!

      – சுந்தர்

  8. சுந்தர்ஜி
    நன்றி.
    நான் தேடிய லக்ஷ்மி மந்திரம் தமிழில் எல்லோரும் பயன் பெற வேண்டும் என வேறு தளத்தில் இருந்து பிரதி எடுத்த லக்ஷ்மி மந்திரம் தமிழில்.
    நன்றி
    அலைமீது வாசம் செய்யும் அலைமகள், ஓரிடத்தில் நிலையாக நில்லாமல் அலைபவள். அவள் நிலைத்து நின்றாலே செல்வம் நிலைக்கும். அப்படி நிலைத்திட்ட செல்வம் வேண்டுமானால், அகலகில்லேன் என்று அலர்மேல் மங்கையாக நேசம்மிக்க திருமாலின் திருமார்பில் வாசம் செய்யும் வடிவில் அவளை வணங்க வேண்டும் என்கிறது, திருமலைப் புராணம்.
    திருமகளை, திருயாவும் தர வேண்டித் துதிக்கும் இப்பாடல்கள், குபேரனின் வாசற்கதவினைத் திறக்கச் செய்து, அங்குள்ள செல்வம், பக்தர்தம் இல்லம் வந்து சேரச் செய்திடும். குபேர வாசல் எனும் இந்தத் துதியினை. அலர்மேல் மங்கையை அகத்தினில் இருத்தி, அகல் விளக்கினை அவள் முன் ஏற்றிவைத்துச் சொல்லி வர, அவள் அருளால், செல்வம் செழிக்கும், சந்தோஷம் நிலைக்கும்.

    1.பொன்மகள் கடைக்கண் பார்வை
    புன்னகை புலர்ந்து கண்டால்
    நன்மைகள் யாவும் தேடி
    நயம்படக் கதவைத் தட்டும் !
    மன்பதை போற்றும் செல்வம்
    மழையெனப் பொழியும்; வாழ்த்தும்!
    அன்னையே அலர்மேல் தேவி!
    அடியேனைக் காண்பா ரம்மா!

    2. தேவியே கமல வல்லி;
    செந்திரு மாலின் கண்ணே!
    நாவினால் நின்னை யன்றி
    நயத்தகு நயத்தைக் காணேன்!
    காவியம் காணாச் செய்யுள்
    கற்பகத் திருவே! நின்றன்
    ஓவியம் நெஞ்சில் வைத்தே
    ஓதுவேன்; கடைக்கண் பாராய்!

    3. நாரணன் தவத்தின் தேவி!
    ஞாலத்துப் பெண்கள் போற்றும்
    பூரணி! பூவில் வாழும்
    புன்னகை அரசி! எல்லாக்
    காரண காரி யங்கள்
    கணக்கிடல் யாரே? இந்தத்
    தாரணி தன்னில் வாழத்
    தனயனைக் கடைக்கண் பாராய்!

    4. தாமரை நினது பீடம்;
    தரிசனம் திருமால் மார்பு;
    ஏமமே இதழின் வாசம்
    இளநகை புரிந்தால், அந்தச்
    சேமமே எனக்குப் போதும்
    தேவியே அருள்வா யம்மா!
    சாமரம் வீசிப் போற்றிச்
    சரிதத்தைப் பாடி வைப்பேன்

    5. பூவினுள் சிறந்த பூவே
    தாமரைப் புனிதப் பூவே!
    காவினில் பூக்கும் பூக்கள்
    கண்டிடில் நாணும் என்னே!
    யாவினும் உயர்ந்த உன்னை
    யாசிப்பேன் தூது செல்வாய்!
    பாவினால் பாடும் என்னை
    இலக்குமி பார்க்கச் சொல்வாய்!

    6. மலர்களின் அரசி வண்ண
    மாப்புகழ் கமலம்; அந்த
    மலரினும் மென்மை கொண்ட
    மங்கையர்க்கரசி ! நீயோ
    மலர்புகழ் கமலம் மீது
    மார்பினை நிமிர்த்தி நின்றாய்!
    மலர்மணம் சற்றே வீசி
    வருவயோ மனையைத் தேடி

    7. சகலமும் உணர்ந்த நீயே
    சஞ்சலம் போக்க வல்லாள்!
    அகலமாய் விரிந்த பூமி
    அளப்பவள் நீயே தாயே!
    இகபரம் காணாத் தெய்வம்!
    இமைத்திடில் செல்வத் தோட்டம்!
    மகனைநீ கடைக்கண் பாராய்
    மாதாவே அலர்மேல் போற்றி!

    8. வண்ணமா மலரில் வீற்று
    வையத்தை வாழ வைக்கும்
    சொர்ணமாம் பொன்னின் தேவி,
    சுகங்களின் மகிழ்ச்சி நீயே!
    எண்ணமே நின்றன் தோற்றம்
    ஏந்திநல் தவமே செய்தால்,
    கண்ணினைத் திறப்பாய்; ஆங்கே
    காட்சியோ குபேர வாசல்!

    9. சீரடி பணிந்து கேட்பேன்;
    தேவிநான் ஏழைப் பக்தன்;
    ஓரடி எடுத்து வைத்தால்
    ஈரடிச் சறுக்கல்; பூமி
    நீரடிக் குறையின் வானம்
    நிலைமையைச் சமனே செய்யும்!
    யார் கொலோ என்னைக் காப்பார்?
    அலர்மேலு மங்கைத் தாயே!

    10. முகிலதன் நிறமே கொண்டு
    மும்மூர்த்தி உருவாய்த் தோன்றி
    அகிலமே தன்னுள் ளாக்கி
    ஆண்டிடும் திருமால் தேவி!
    மகிமைகள் அறிவேன்; நின்றன்
    மாட்சிமை புரிவேன்; சற்றே
    மகிழ்வுடன் என்னைப் பாராய்
    மண்ணிலே செல்வன் ஆவேன்!

    11. என்னதான் வழியோ சொல்வாய்
    ஏழுமா மலையின் வல்லி !
    முன்னம்நான் செய்த பாவம்
    மூண்டதோ? அறிகி லேனே!
    சின்னவன் குற்றம் ஏதும்
    செய்திடில் பொறுப்பாய் தேவி!
    அன்னையே அலர்மேல் தாயே
    அடியேனை ஆசி செய்வாய்!

    12. திருமலை கீழே நின்றன்
    திருவாட்சி செல்வக் காவல்!
    வருபவர் இனிய நெஞ்சம்
    மாதாவே நின்றன் வாசம்!
    அருமைகள் அறிந்தா ரைநீ
    அணைத்திட மறந்ததில்லை!
    மருவிலான் மலைவாழ் ஐயன்
    மனைவியே ! அலர்மேல் தாயே!

    13. கண்ணிலே நின்னை வைத்தேன்
    கருத்திலே ஒளியைத் தந்தாய்!
    பண்ணிலே நின்னைப் பாடப்
    பாவினில் கவிதை செய்தேன்!
    தண்ணிய நெஞ்ச மோடு
    தாயேநீ தயவு செய்வாய் !
    மண்ணிலே நீயே தெய்வம்
    மறக்கிலேன் கடைக்கண் பாராய்!

    14. வள்ளலாம் திருமால் நின்றன்
    மாபெரும் அழகில் சொக்கிப்
    பள்ளிவிட் டெழுந்து வந்து
    பவித்திரம் கண்டான்; நின்னை
    அள்ளியே அணைத்தான்; மார்பில்
    ஆனந்தம் கொண்டான்; பின்னர்
    தெள்ளிய மகிழ்வைக் காட்டத்
    திருமலை சென்றான் என்னே!

    15. சென்றவன் உச்சி ஏறிச்
    செம்மைசேர் மலைகள் ஏழை
    நின்றவன் சுற்றிப் பார்த்தான்;
    நெஞ்சிலே அமைதி; அந்த
    நன்றுரை ஏழு குன்றம்
    ஞாலத்தில் யாங்கும் இல்லை !
    நின்றவன் மேலும் நின்றான்
    திருமலை நெடுமால் பீடம்!

    16. பீடமோ அண்ணல் வாசம்!
    பெருமைகள் குவிய வாழ்த்தி
    ஆடகப் பொன்னே, தாயே!
    அலர்மேலு அமர்ந்தாய் கீழே!
    மாடமா ளிகைகள் எல்லாம்
    மணாளனே சொந்தம் என்று
    சாடையாய் மகிழ்ந்தாய்; இந்தச்
    சகத்தினில் தலைவி நீயே!

    17. நின்னிலும் கருணை மிக்கார்
    நிலங்களில் யாரே உள்ளார்?
    நன்னயத் தோடு வேண்டில்
    நலம்பலத் தரவே செய்வாய்!
    சென்னியைப் பாதம் வைத்துச்
    செப்புவேன்; நானோர் ஏழை!
    பொன்னையும் பொருளும் தந்து
    பூரிக்கச் செய்வாய் தாயே!

    18. ஐயனாம் வேங்கடத்தான்
    அழகுறு பார்வை தன்னில்
    மெய்தனை உருகச் செய்து
    மேன்மையை மேலும் கொண்டாய்!
    வையமே நீதான் என்று
    வணங்கியே தவமாய் நின்றேன்;
    உய்யவே வழியைக் காட்டி
    ஓங்கிய செல்வம் தாராய்!

    19. வண்டுகள் நாணும் கண்கள்!
    வாயெல்லாம் பவளக் கூத்து!
    பண்டுநின் அருமை கண்டு
    தேவர்கள் பாதம் தொட்டார்!
    எண்டிசை செலினும் மாதர்
    ஏற்றியே போற்றி நிற்பார்!
    கண்டுநான் கொண்டேன் தேவி
    கவலைகள் இனிமேல் இல்லை!

    20. கார்நிற வண்ண அண்ணல்
    கருணையை முழுதாய்ப் பெற்ற
    சீர்நிறை கமலச் செல்வி
    சிறப்புடைக் கனக வல்லி!
    ஏர்முனை முதலாய்க் கொண்ட
    எல்லாமே நீதான்! இந்தப்
    பார்தனில் நின்னை யன்றிப்
    பார்த்திலேன் சரணம் தாயே!

    21. கிளிகளோ வரிசை கட்டிக்
    கீழ்வானத் தோரணம்போல்
    வெளிகளில் பறந்து செல்லும்
    வேடிக்கை என்ன சொல்வேன்!
    ஒளிமய வேங்கடத்தின்
    உன்னத அழகுக் கோலத்
    தெளிவினைக் காட்டி நிற்கும்
    தெய்வீகம் திருவின் சோதி !

    22. தேவர்கள் நின்றன் பாதத்
    திருமலர் தாங்கிப் பின்னர்
    ஆவலாய்ப் பணிந்து காண்பர்;
    அன்னையே மகியை என்னே!
    நாவலர் பாடும் தாயே!
    நாயகி திருமால் தேவி!
    ஆவன செய்வாய்; இந்த
    அடியேனின் துயரைத் தீர்ப்பாய்!

    23. கருணைமா வள்ளல் அண்ணல்
    காத்திடும் வேங்க டத்தில்
    பெருமையாய் பக்தர் கூடிப்
    பேரின்பம் அடைவார்! நீயோ
    அருமையாய் பெருமாள் மார்பில்
    ஆனந்தக் கோலம் பூண்டாய்!
    மருவிலா அலர்மேல் மங்கை
    மாதாவே கடைக்கண் பாராய் !

    24. சுதர்சனன் தேவி நின்றன்
    சுந்தரம் யாரே அறிவர்!
    அதர்களாய் ஆடும் மக்கள்
    அறியாமை என்ன சொல்வேன்!
    புதர்தனில் புதையல் தேடிப்
    புழங்குவோர் பல்லோர் உண்டு;
    நிதர்சனம் நீயே என்று
    நின்னைநான் சரணம் கண்டேன்!

    25. மதுவெனும் அரக்கன் தன்னை
    மாளவே செய்த மாலை
    வதுவைநீ செய்து கொண்டாய்;
    வையமே பெற்ற பேறாம்!
    பதுமமேல் நின்றாய்; இந்தப்
    பாரினைச் செழிக்கச் செய்தாய்!
    இதுவரை ஏழை என்மேல்
    ஏனம்மா இரக்கம் இல்லை?

    26. கண்ணிலே நின்னை யன்றிக்
    காண்பதோ ஏதும் இல்லை!
    பண்ணிலே தோடி ராகம்
    நீயன்றோ பக்தன் கண்டேன்;
    எண்ணிலே அடங்காச் செல்வம்
    எல்லாமே நினது வாசம்!
    மண்ணிலே வாடும் என்னை
    மாதாவே கடைக்கண் பாராய்!

    27. அழகிய தோற்றம் முன்னே
    அனைத்துமே சரணம் தாயே!
    கிழமையில் வெள்ளி நின்றன்
    கீர்த்தியைப்பேசும் நாளாம்!
    பழமையும் புதுமை சேர்ந்து
    பகுத்திடும் அறிவு யாவும்
    சுழலுமிவ் வுலகை நோக்கிச்
    சுந்தரக் கவிதை பாடும்!

    28. அலைகடல் துயிலும் அண்ணல்!
    ஆழ்மனத் தாம ரையில்
    நிலையுடன் அமர்த்தி ருக்கும்
    நிம்பையே! அலர்மேல் தாயே!
    கலைபயில் கழகம் நீந்திக்
    கவிதையைக் கற்றேன்; சொன்னேன்!
    தலைமகள் நீயே என்று
    தரிசித்தேன்; செல்வம் தாராய்!

    29. பங்கயச் செல்வி பார்வை
    பட்டிடில் நிறைகள் யாவும்!
    அங்கயற் கண்ணி; மற்றும்
    அருங்கலை வாணி அன்னாள்!
    எங்குமே அவளின் ஆட்சி
    இதனைநாம் அறிந்து கொண்டால்
    தங்குமே செல்வம்; நன்மை
    தரணியில் அடைவோம் காண்டி!

    30. கார்முகில் வண்ணன் இல்லாள்
    கமலத்தின் அரசி போற்றி!
    சீர்மிகு ஈசன் தங்காய்
    சிவந்தமா பாதம் போற்றி!
    நீர்கடல் வாசம் தன்னில்
    நிறைந்தநின் அமுதம் போற்றி!
    பார்தனில் செல்வம் காக்கும்
    பரந்தாமன் திருவே போற்றி!

    31. திருமலை வேங்க டேசன்
    திருவடி நெஞ்சில் கொண்ட
    பெருமிகு அலர்மேல் தாயே,
    பேரின்பம் பெற்று மார்பில்
    உருவினைப் பதித்தாய்! உண்மை
    உலகிற்கே எடுத்துச் சொன்னாய்!
    திருமிகு செல்வச் சோதி!
    திருவருள் கிடைக்கண் பாராய்!

    32. விழிமலர் மலர்ந்து வாசம்
    வீசிடப் பாராய் தாயே!
    பழியிலாப் பக்தன்; நின்றேன்
    பதமலர் பணிந்து நின்றேன்!
    வழிகளை அறியா வண்ணம்
    வாழ்கிறேன்; எளியேன்; நானோ
    சுழிமுனை நின்னைக் கொண்டேன்;
    சுகங்களைத் தருவாய் என்றும்!

    33. அகிலமே நின்றன் பார்வை!
    அனைத்துமே நின்றன் செல்வம்!
    முகிலதன் வண்ண மாலன்
    மூலமே நின்றன் கோலம்!
    மகிழ்வுடன் அறிந்து மக்கள்
    மகிமைகள் கண்டு கொண்டேன்
    மாதாவே கடைக்கண் பாராய்!

    34. வான்மலர் மீன்கள் எல்லாம்
    வையத்துள் சொல்லும் செய்தி:
    தேன்மலர் பூக்கள் கொண்டு
    தினம்தினம் தியானம் செய்து
    கோன்மலர்க் கமலத் தாயைக்
    கோடித்தே இசைப்போ மானால்
    ஊன்மலர் புனித மாகி
    உலகத்துச் செல்வம் காண்போம்!

    35. பிருகுவின் வமிசத் தேவி
    பீடுடை அலர்மேல் தாயே!
    குருமகன் சங்க ரர்தம்
    குரலுக்குக் காட்சி தந்தோய்!
    உருகிடும் கவிஞன் நானோ
    நின்னையே உபாசிக் கின்றேன்!
    திருமகள் நாமம் பெற்றோய்
    திருவடி தொழுதேன் வாராய்!

    36. அன்னையே திருச்சா னூரின்
    அலங்காரத் திருவே போற்றி!
    மன்னனாம் வேங்க டத்தான்
    மனைவியே மார்பில் வீற்றோய்!
    பொன்னையும் மணியும் கொண்டோய்!
    பூலோகச் செல்வ மாரி!
    என்னையும் சற்றே நோக்கி
    எழிலார்ந்த பார்வை பாராய்!

    37. தூய்மையின் துளசிப் பூவே!
    தூதுநீ சென்று வாராய்!
    ஆய்கையில் அருகில் வாழும்
    அழகான தோழி நீயே!
    வாய்மணம் கமழப் பாடும்
    வார்த்தைகள் எடுத்துச் செல்வாய்!
    தாய்மனம் கனியச் செய்வாய்!
    தனயனைப் பார்க்கச் சொல்வாய்!

    38. நீலமா விழிகள் என்றன்
    நெஞ்சிலே பதிய வைத்தாய்!
    கோலமா காட்சி என்னே!
    குவலயம் வியக்கும் தோற்றம்!
    காலமே நின்றன் ஆட்சி;
    கனிந்தது புவனம்; ஏனை
    சாலமா இயற்கை நீயே!
    சரணமே அலர்மேல் தாயே!

    39. திருமலை எம்பி ரானின்
    திருத்தேவி பாதம் போற்றி!
    அருமலை ஏழின் வண்ணம்
    ஆராய்ந்தால் இவளே மூலம்!
    பெருமலை இமயம் ஒத்த
    பேரின்பம் இங்கே உண்டு!
    தருமலை, செல்வம் வேண்டின்
    தரிசித்தால் பெறுவோம் நாமே!

    40. மண்டலம் பாடி வைத்தேன்
    மாதாவே கடைக்கண் பாராய்!
    குண்டலம் அணிந்த கோலம்
    குவலயம் ஒளிரும் காட்சி!
    எண்டிசை வணங்கும் மக்கள்
    எல்லார்க்கும் நீயே செல்வம்!
    தொண்டினைச் செய்து வாழ்வேன்;
    தொடரட்டும் குபேர வாசல்!

    41. வணங்குவோம் அலர்மேல் பாதம்!
    வாழ்த்துவோம் நல்லோர் நெஞ்சை!
    வணங்குவோம் கதிர்நி லாவை!
    வாழ்த்துவோம் பஞ்ச பூதம்!
    வணங்குவோம் ஒன்பான் கோளை!
    வாழ்த்துவோம் எட்டுத் திக்கை!
    வணங்குவோம் உலகை; மேலும்
    வாழ்த்துவோம் திருவை யாவும் !

    (மங்களம் நிறைக)

    ஸ்ரீ தேவி ஸ்தோத்திரம்
    கமலநாபன் மார்பில் வாசம் செய்யும் கமலமகளை வேண்டினால், கவலை யாவும் தீரும்படி கனக (கருணை) மழை பெய்விப்பாள் என்பது ஆன்றோர் வாக்கு. செந்தாமரையாளின் அருளாள் செல்வம் யாவும் பெற வகை செய்யும் துதிகள் பல உண்டு. அவற்றுள் ஓர் உயர்வான துதி தேவி ஸ்தோத்திரம் எனும் இந்தத் தமிழ்த் துதி. செல்வமகள் கருணையினால் செல்வம் சேர்ந்து வாழ்வில் செழிப்பு ஓங்கிட, கஞ்சமலர்த் தாயவளை நெஞ்சில் வைத்து, இத்துதியைச் சொல்லுங்கள் நிச்சயம் அருள்வாள். நிமலையாம் ஸ்ரீதேவி
    தாமரை திகழும் திருக்கரமும்
    தளிர்நகை பொழியும் ஒளிமுகமும்
    ÷க்ஷமம் அளிக்கும் நல்லருளும்
    சேவிப் பார்க்கு நிறைவரமும்
    மூவர் போற்றும் பெருமையுடன்
    முன்னே சங்க பதும நிதி
    காவல் செய்ய, காட்சிதரும்
    கமல மாதே! வணங்கு கிறேன்!
    தாமரை வடிவாய்த் திருக்கண்கள்!
    தாமரை மென்மை தளிர்க்கைகள்!
    தூய மங்கல வெண்மை உடை!
    துலங்கு சந்தனம்! மணிமாலை!
    ஞானம், சத்தி, பலம் செல்வம்
    நயத்தகு வீரம், பொலி வென்னும்
    ஆறும் பெற்று மூவுலகும்
    ஆட்சி புரிபவளே! அருள்க!
    இயற்கை, செயற்கை இயற்றுவிப்பாய்!
    எல்லா உயிர்க்கும் நலஞ் செய்வாய்!
    அனைத்துக் கலைக்கும் அடிப்படையாய்!
    அரிய செல்வத் திருப்பிடமாய்
    நினைத்த தளிக்கும் சுரபியென
    நிலவும் மேலாம் வடிவம் நீ!
    விளங்கும் தெய்வ இலக்குமியே!
    விஷ்ணுவின் இதய இலச்சினையே!
    செந்தாமரைதான் உன் வீடு!
    திகழும் தூய்மை உன் ஏடு!
    அமுதம் தோற்க இனிப்பவள் நீ!
    அனைத்திலும் அணுவாய் அமைந்தவள் நீ!
    அக்கினி பத்தினி ஸ்வாஹா நீ!
    அரிய ஸ்வதாவும் ஆனவள் நீ!
    எங்கும் எதிலும் எந்நாளும்
    இலங்கிச் சிறப்பவளே சரணம்!
    அரிய வடிவும் நற் குணமும்
    அற்புதப் புகழும் பெற்றவளே!
    அசுர மாதா துதியைத்தன்
    அதிகா ரத்தில் கொண்டவளே!
    அமுதப் பாற்கடல் ஈன்றவளே!
    அறிவே உருவம் ஆனவள் நீ!
    அருளைப் பொழியும் வானவள் நீ!
    சிறிதும் குற்றம் அற்றவள் நீ!
    ஸ்ரீநா ராயணர் சிந்தை நீ!
    உலகின் துயர இருள் நீக்கும்
    ஒளியே! பகவான் உட்கொள்ளும்
    அமுதே! உன்றன் கடைக்கண்ணால்
    அடியேன் இடுக்கண் போக்கிடுக!
    தருமம் அனைத்தும் ஒன்றான
    தாயே! உன்னைப் போற்றுகிறேன்!
    இருப்பிடம் உனக்குப் பங்கயம்தான்!
    இருப்பதும் கையில் கமலம்தான்!
    இருவிழி அதுவும் தாமரைதான்!
    இலங்கும் அழகும் அம்மலர்தான்!
    கருணை வடிவே! காசினியைக்
    காக்கும் தாயே! வணங்குகிறேன்!
    மலரில் தோன்றிய மலர்முகமே!
    மகிழ்வாய் முகுந்தன் அரவணைக்கும்
    அலைமகளே! இவ் வகிலத்தில்
    ஆனந்தத்தின் அடிப்படை நீ!
    பூவிற் சிறந்த கமலத்தில்
    பொலியும் மாலை அணிந்தபடி
    பூவையர் விரும்பக் காட்சிதரும்
    தேவதையே! உனைத் துதிகின்றேன்!
    வந்திப் பவர்க்கு வாழ்வளிக்கும்
    வாசம் நிறைந்த வரலக்ஷ்மி!
    சந்திப்பவர்க்கு மகிழ்வுதர
    தருணம் பார்த்தே இருப்பவளே
    சந்திர னோடு நீ பிறந்தாய்!
    சந்திர வதனம் நீ பெற்றாய்!
    செங்கதி ரோடு ஒளி போன்றே
    திருமா லோடு திகழ்பவள் நீ!
    புயங்கள் நான்கு கொண்டவளே!
    புதிய நிலவின் வடிவினளே!
    பயன்படு செல்வம் தருபவளே!
    பக்தர்க் கருளைப் பொழிபவளே!
    நயந்த அன்பர் வாழ்வினிலே!
    நல் இன்பத்தைத் தருபவளே!
    வியக்கும் மங்கள வடிவம் நீ!
    வித்தகியே! உனைப் பணிகின்றேன்!
    தூயவளே! நீ உலகன்னை!
    துலங்க சக்தியின் முதற் பண்ணை!
    மாயச் செய் என் வறுமையினை!
    மலர்ப் பொய்கையிலே வாழ்பவளே!
    ஆய்ந்த வெண்மணி ஆடையுடன்
    அமைதி துலங்க விளங்குகிறாய்!
    தோய்ந்த அன்பில் துதிப்போர்க்குச்
    சுடரும் பொன்முடி சூட்டுகிறாய்!
    விளங்கும் வெளிச்ச உருவோடு
    வில்வக் காட்டில் விளையாடி
    இலங்கும் திருமால் மார்பினிலே
    இடமும் பெற்ற இலக்குமியே!
    நலமார் செல்வக் களஞ்சியமே!
    நல்ல வாழ்வின் இலக்கியமே!
    நலமார் செல்வக் களஞ்சியமே!
    நல்ல வாழ்வின் இலக்கியமே!
    கலங்கும் பாவ வினை போக்கி
    கனக மழையைப் பெய்விப்பாய்!
    அன்னை வடிவே! உன்னாலே
    அரிய தனமும் தானியமும்
    நன்மை பலவும் வருவனவே!
    நங்கையர்க்குள்ளே சிறந்தவளே!
    பொன்னின் அரண்மனைப் பொலிவினிலே
    புண்ணிய வடிவாய் நிறைந்தவளே!
    தன்னை பூஜை செய்வோர்க்கு
    சகல வரம்தரும் சந்நிதி நீ!
    திருப்பாற் கடலில் உதித்தவளே!
    திருமால் மார்பிடை பதித்தவளே!
    விருப்போ டணுகும் பக்தர்க்கே
    வெற்றியை வாழ்வில் தருபவளே!
    செறித்த கனகச் சூழலுடன்
    சுடரும் மகிழ்ச்சி மண்டபத்தில்
    பொருத்த முடனே பொலிகின்ற
    பூவே! உன்னைப் போற்றுகிறேன்!
    தேசம் போற்றும் உத்தமியே
    ஸ்ரீமகா விஷ்ணுவின் பத்தினியே!
    பூசை மலராய்ப் பொலிகண்கள்!
    பொன்னைப் பொழியும் திருக்கைகள்!
    மோசம் செய்யும் வறுமையினை
    முற்றும் அழிக்கும் அருட்பார்வை!
    ஆசை யாவும் நிறைவேற்றும்
    அன்னை உன்னைப் புவிபோற்றும்!
    நவ துர்க்கைக்கும் மலரென நீ
    நாயகியே நீ விளங்குகிறாய்!
    சிவன் அயன் திருமால் மூவருமே
    சேர்ந்த சங்கம வடிவம் நீ!
    அவரவர் தொழிற்கும் நீ மூலம்!
    அன்னை நீயே முக்காலம்!
    அவனி சுழன்றிடக் காரணமே!
    அனைத்தும் நிறைந்த பூரணமே!
    தேவ மாதர் பணி செய்ய
    திகழும் தலைவி! வையத்தின்
    மேவும் சுடர் நீ! மேன்மை நீ!
    மேலாம் பாற்கடல் உதித்தவள் நீ!
    மூவர் போற்றும் முதல்வி நீ!
    ஆவ தனைத்தும் உன்னாலே!
    ஆசி அளிப்பாய் கண்ணாலே! நாரா
    யணரின் நெஞ்சமெனும்
    நற்றா மரப்பூ நடுவினிலே
    சீராய் அமர்ந்த ஸ்ரீமகளே!
    திசைகள் எட்டும் உன் புகழே!
    ஆரா திப்பர் இல்லத்தை
    அரண்மனை ஆக்கும் பெற்றியளே!
    பூரணக் கருணை பொழிந்திடுவாய்!
    பொன்மகளே! உன் அடி சரணம்!

  9. அருமையான பதிவு.முருகன் படம் மிக அழகு.அருமையான பாடல் தந்த சுந்தரி மற்றும் சுந்தர் அவர்களுக்கு ம் மிக்க நன்றி.

Leave a Reply to manoharan Cancel reply

Your email address will not be published. Required fields are marked *