Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Friday, March 29, 2024
Please specify the group
Home > Featured > மஹாளய நாட்களில் செய்ய வேண்டியதும் செய்யக் கூடாததும்! மஹாளய SPL 4

மஹாளய நாட்களில் செய்ய வேண்டியதும் செய்யக் கூடாததும்! மஹாளய SPL 4

print
ஹாளயத்தின் சிறப்பை அறிந்து கொண்ட பின்னர், இதற்கு முன்பு தவறவிட்ட மஹாளய நாட்கள் நினைவுக்கு வருகிறது. இத்தனை ஆண்டுகளாய் இத்தனை சிறப்பு பெற்ற நாட்களை பற்றி தெரியாமல் கண்ணிருந்தும் குருடனாய் தவறவிட்டுவிட்டோமே… என்று மனம் தவிக்கிறது.

பெற்றோர் இருப்பதால் மஹாளய கடமைகள் பற்றி நான் மிகவும் கவலைப்பட வேண்டியதில்லை என்றாலும், மஹாளய நாட்களில் செய்யக்கூடாதவற்றையும் செய்யக்கூடியவற்றையுமாவது குறைந்த பட்சம் அனுஷ்டித்திருக்கலாமே என்று தான் வருத்தப்படுகிறேன். மேலும் காக்கைகளுக்கு எள் கலந்த அன்னமிடுவது, ஊனமுற்றவர்களுக்கு அன்னதானம் செய்வது, பசுக்களுக்கு உணவு அளிப்பது உள்ளிட்டவற்றை யார் வேண்டுமானாலும் செய்யலாமே… மேலும் நம்மை அறியாமல் நமது முன்னோர்களில் எவருக்கேனும் அவர்களுக்குரிய பித்ருக்கடன்  வழங்கப்படாமல் இருந்திருந்தால் அது தீர்க்கப்பட்டுவிடுமே…!

எப்படியோ… நாம் செய்த புண்ணியம் தான் இந்த ஆண்டு மஹாளயம் குறித்த தகவல்கள் சரியான நேரத்தில் ரமண மகரிஷியின் தொண்டர் திரு.பாலசுப்ரமணியம் அவர்கள் மூலம் நம்மை வந்து அடைந்துள்ளது. அவர் இதை பற்றி சொல்லியிருக்காவிட்டாலும் நான் ஒன்றிரண்டு பதிவுகள் அளித்திருப்பேன். ஆனால் இப்படி அதன் மகிமைகளை அங்குலம் அங்குலமாக உணர்ந்து – உணர்வுப்பூர்வமாக – தொடர் பதிவுகள் அளித்திருப்பேனா என்பது சந்தேகமே. இந்த மஹாளய தொடரில் இடம் பெரும் தகவல்கள் உண்மையில் அரிதினும் அரிது. படித்து, பகிர்ந்து, பயன்பெறுங்கள்.

பித்ரு தேவதைகளின் நல்லாசிகள் உங்களுக்கு பரிபூரணமாக கிடைக்கட்டும்.

நாம் முன்பே கூறியபடி நண்பர்கள் ஒரிருவருடன் சேர்ந்து ஒரு சிறப்பான கோ பூஜையை ஏற்பாடு செய்துவருகிறேன். இந்த மஹாளயத்தில் எப்படியும் செய்து முடிக்கப்பட்டுவிடும்.

‘குமுதம் ஜோதிடம்’ இதழில் சில ஆண்டுகளுக்கு முன்னர் திரு.ஏ.எம்.ஆர். அவர்கள் மஹாளயத்தின் சிறப்பு குறித்து எழுதிய கட்டுரையை அப்படியே தருகிறேன். பொள்ளாச்சியிலிருந்து அருணாச்சல அக்ஷர மணமாலை நிறுவனர் நண்பர் பாலசுப்ரமணியம் இதை அனுப்பியிருந்தார். அவருக்கு என் நன்றி!

==================================================

நம்மை தேடி வரும் முன்னோர்களின் ஆசி !

இந்த ஆண்டு, செப்டம்பர் 20 முதல் அக்டோபர் 4 வரை மகாளய பட்சம் நடக்கிறது. இது ஓர் அரிய மகத்தான புண்ணிய புனித காலமாகும். தெய்வத்திற்கு சமமாண நமது முன்னோர்கள் நம்மீது அவர்கள் தொடர்ந்து கொண்டிருக்கும் அன்பு காரணமாக நம் வீடு தேடிவருவதோடு மட்டுமல்லாமல் நம்முடன் சுமார் 15 நாட்கள் தங்கியிருக்கும் பரமபவித்திரமான காலமும் நேரமும் ஆகும் இது.

இதன் மகத்துவத்தையும் தெய்வீக பெருமையும் மிகப்பழைமையான நூல்கள் அற்புதமாக விளக்கியுள்ளன. ஒவ்வொரு ஆண்டும் சூரிய பகவான் அவரது சொந்த ராசியான சிம்மத்தில் சஞ்சரிக்கும் போது தேய்பிறையில் ஆரம்பமாகும் மகாளய பட்சம் ( மகாளய காலம் ) ஆரம்பமான தினத்திலிருந்து பதினைந்து நாட்கள் வரை நீடித்து அமாவாசை அன்று முடிவடைகிறது.

மரணம் என்பது நமது வாழ்வின் முடிவல்ல என்பதையும் இப்பிறவிக்கும் மறுபிறவிக்கும் இடையே உள்ள ஒரு நிலையே அது என்பதையும் ஏற்கனவே விளக்கியுள்ளோம். ஆதலால் நமது முன்னோர்களின் மரணத்திற்கு பிறகும் நமக்கும் அவர்களுக்கும் உள்ள உறவும்  பிணைப்பும் நீடிக்கவே செய்கின்றன. ஆதலால் அவர்களது மரணத்திற்கு பிறகு பித்ரு லோகத்திற்கும் இதர உலகங்களுக்கும் செல்லும் நீண்ட பயணத்தின் போதும் கூட நாம் நன்றாக இருக்க வேண்டுமே என்று கவலைப்படுகிறார்ககள். நாமும் அவர்களுக்கு திதி தரப்பணம் ஆகியவற்றின் மூலம் நமது நன்றியை காட்டி வருகிறோம்.

இந்த திதி தரப்பணம் ஆகியவற்றில் நாம் அளிக்கும் பிண்டம் (சாதம் ) சூரியன் மூலம் சென்று பித்ரு தேவதைகளின் சக்தியினால் அமுதமாக மாறி நமது முன்னோர்கள் எந்த உலகத்தில் இருந்தாலும் அவர்களுக்கு அன்னமாக ( உணவாக) அளிக்கப்பட்டு வருகிறது. இவ்விதம் நாம் அளிக்கும் அன்னத்தை அமுதமாக ஏற்று உண்ட பிறகு அவர்கள் நம்மை மகிழ்ச்சியுடன் ஆசீர்வதிக்கின்றனர். அவர்களது ஆசி பித்ரு தேவதைகளின் மூலம் அவர்ககளிடமிருந்து சூரிய பகவான் மூலம் நமக்கு திரும்ப கிடைக்கின்றது. அவர்களது இந்த ஆசி நம் குடும்பத்திலும் பல நன்மைகளை உடனுக்குடன் அளிக்கின்றது. முக்கியமாக குல விருத்தி சந்தான பாக்கியம் குடும்பத்தில் மகிழ்ச்சி ஒற்றுமை ஆரோக்கியம் ஆகியவற்றை தருகிறது.

மகாளய பட்சம் என்ற 15 நாட்கள் நமது பித்ருக்களை சூரியனின் கிரணங்களின் மூலம் பித்ரு தேவதைகள் நம்மிடம் அனுப்பி வைக்கிறார்கள். அவர்கள் நமது வீட்டிற்கு வந்து நம்முடன் 15 நாட்கள் தங்கியிருந்து நாம் செய்யும் பூஜைகளை பெற்றுக்கொண்டு மனமகிழ்ந்து அவர்களது உலகங்களுக்கு செல்கிறார்கள். நமது பித்ருக்கள் தங்கியிருக்கும் இந்த 15 நாட்களும் மகத்தான புனிதம் பெற்றவையாகும்.

மகா புருஷர்களான நமது முன்னோர்கள் நம்முடன் தங்கி இருப்பதால் இந்த 15 நாட்களும் வீட்டை சுத்தமாக வைத்திருப்பது மிகவும் அவசியம். அசைவ உணவு கண்டிப்பாக கூடாது. கிருத திரேதா யுகங்களில் பித்ருக்கள் தங்கியிருக்கும் இந்த மகாளய பட்சம் 15 நாட்களும் பித்ருக்களுக்கு தினமும் திதி கொடுத்து வந்திருக்கிறார்கள். அந்த வழக்கம் நின்று போய் தற்போது இந்த 15 நாட்களில் ஒரு நாள் தான் பலரும் திதி கொடுக்கிறார்கள். அந்த ஒருநாள் திதி கூட கொடுக்காமல் இருந்தால் நமது அறியாமையினால் நாம் நமது முன்னோர்களின் நல்லாசியை பெறத்தவறி விடுவோம்.

இந்த 15 நாட்களும் நமது பித்ருக்களை பூஜிப்பதால் குடும்பத்தில் கிரக தோஷங்களினால் ஏற்படும் அனைத்து தோஷங்களும் விலகும். இதன் மகத்துவம் மிகவும் சூட்சமமானது. தற்கொலை செய்து கொண்டவர்கள், விபத்தினால் துர்மரணம் அடைந்தவர்கள், ஆயுதங்களினால் கொல்லப்பட்டவர்கள், ஆகியோருக்கு மகாளய பட்சத்தில் குறிப்பிட்ட தினங்களில் தான் திதி கொடுக்க வேண்டும் என்ற நிபந்தனை உள்ளது. மகாளய பட்சம் எத்தகைய முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை இதனாலேயே தெரிந்து கொள்ளலாம்.

இறைவனே நமது வீட்டை தேடி வருவது போல் பித்ருக்கள் நமது வீட்டை தேடி வருவதுடன் நம்முடன் தங்கியிருந்து அளவற்ற தங்கள் சக்தியினால் நமது துன்பங்களை இந்த மகாலய பட்சத்தில் தீர்த்து வைக்கின்றனர். இதனால் துர்மரணம் அடைந்த முன்னோர்கள் கூட திருப்தியும் மன சாந்தியும் அடைகிறார்கள்.

மகாலய அமாவாசை அன்று தர்ப்பணம் மற்றும் பூஜைகள் செய்து நமது முன்னோர்களை மரியாதையுடனும் பக்தியுடனும் வழியனுப்பி வைக்கிறோம். ஆதலால் மகாளய பட்சமாகிய இந்த 15 நாட்களில் நாம் காலையும் நீராடி மனம் வாக்கு சரீரம் ஆகியவற்றில் தூய்மையாக இருந்து பூசிப்பது அளவற்ற நற்பலன்களை தரும்.

மகாளய பட்சத்தின் பித்ரு பூஜை அளிக்கும் நன்மைகளை பற்றி ‘நைமி சாரண்யம்’ என்ற பரம பவித்திரமான பாட்டில் மகரிஷிகள் கூடி விவாதித்து அதன் பெறுமையை தங்கள் திருவாக்கினால் கூறியுள்ளனர். நமது முன்னோர்களான பித்ருக்களை நாம் தேடிச் செல்ல வேண்டியதில்லை. அவர்களே நம்மை தேடி வரும் இத்தருணத்தை இழக்கலாகாது. ஆதலால் இந்த 15 நாட்களும் உடலாலும் உள்ளத்தாலும் தூய்மையாக இருந்து பித்ருக்களை பூஜித்து வாருங்கள். அதன் பலன் கைமேல்!

(நன்றி : குமுதம் ஜோதிடம்)

[END]

7 thoughts on “மஹாளய நாட்களில் செய்ய வேண்டியதும் செய்யக் கூடாததும்! மஹாளய SPL 4

  1. சுந்தர் சார்

    நீங்கள் சொல்வது நூற்றுக்கு நூறு உண்மை சார்..

    நன்றி

  2. ///மகாளய பட்சமாகிய இந்த 15 நாட்களில் நாம் காலையும் நீராடி மனம் வாக்கு சரீரம் ஆகியவற்றில் தூய்மையாக இருந்து பூசிப்பது அளவற்ற நற்பலன்களை தரும். ///

    செய்கிறேன் சுந்தர் சார் …

  3. நன்றி சுந்தர் சார்,

    நான் ஏற்கனவே திரு A M R அவர்களையும் அவர் செய்து வரும் பணிகளையும் நன்கு அறிந்து இருக்கிறேன் மேலும் மகாலய சிறப்பு பற்றி என்னால் முடிந்த அளவுக்கு மற்றவர்களுக்கும் சொல்லி இருக்கிறேன்
    ஆனால் இன்று தங்கள் தளத்தின் மூலம் அது குறைந்த பட்சம் ஒரு லட்சம் பேருக்காவது சென்று சேர்ந்திருக்கும் என்று நினைக்கிறேன் நீங்கள் செய்த இந்த புண்ணியமே தங்களை காக்கும் என நம்புகிறேன் தங்கள் பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள் மேலும் தங்களை ஒரு முறை நேரில் சந்திக்க விரும்புகிறேன் நன்றி

    1. ///////ஆனால் இன்று தங்கள் தளத்தின் மூலம் அது குறைந்த பட்சம் ஒரு லட்சம் பேருக்காவது சென்று சேர்ந்திருக்கும் என்று நினைக்கிறேன்///////

      நம் தளம் இன்னும் அத்தனை தூரம் வளரவில்லை. தற்போது தான் முதல் ஆண்டை பூர்த்தி செய்திருக்கிறது. இருப்பினும் திருவருளால் விரைவில் அந்நிலையை எட்டுவோம் என்று நம்புகிறேன்.

      நன்றி.

      – சுந்தர்

  4. சுந்தர் அய்யா.
    தெய்வம் மனுஷ்ய ரூப்ஹென !!!!!!!
    இறைவன் செய்ய நினைக்கும் வேலையை உம்மைகொண்டு நிறைவேற்றிகொள்கிறார்.
    நீர் செய்யும் இத்தொண்டு உம் சந்ததியை காக்கும். எல்லாம் வல்ல இறைவன் உம்மோடு இருந்து நல்வழி படுத்தும் இவ்வேளையில் அணில் போல் எம்மையும் சேர்த்துக்கொள்ள இறைவனை பிரார்த்தித்து கொள்கிறேன்.

    நன்றியுடன்
    குருமூர்த்தி .என்

    1. நான் அத்தனை பெரியவன் அல்ல. உங்களை போன்றவர்கள் என்னை தம்பி என்று அழைத்தாலே போதுமானது.

      நெகிழ்ச்சி கலந்த நன்றியுடன்…
      – சுந்தர்

  5. மிகவும் பயனுள்ள மஹாலயம் குறித்த தகவல்களுக்கு நன்றி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *