Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Thursday, March 28, 2024
Please specify the group
Home > Featured > விநாயகருக்கு அர்ச்சித்த அருகம்புல்லுக்கு ஈடு இணை இந்த உலகில் உண்டா? விநாயகர் சதுர்த்தி SPL

விநாயகருக்கு அர்ச்சித்த அருகம்புல்லுக்கு ஈடு இணை இந்த உலகில் உண்டா? விநாயகர் சதுர்த்தி SPL

print
ந்த விநாயகர் சதுர்த்தியோடு நம் தளம் துவங்கி ஒரு வருடம் ஆகிறது. மக்களின் ரசனைகளும் ஆர்வங்களும் தரமற்ற விஷயங்களில் விரயமாகிக்கொண்டிருக்கும் இன்றைய காலகட்டங்களில், வாழ்வில் வெற்றி பெறுவதற்கும் சாதிப்பதற்கும் குறுக்கு வழிகளை தேடி அனைவரும் ஓடிக்கொண்டிருக்கும் ஒரு சூழ்நிலையில் ஆன்மீகத்திற்கும் சுயமுன்னேற்றத்திற்கும் என பிரத்யேகமாக ஒரு தளத்தை துவக்கி, அதில் தினசரி பதிவை அளித்து அதை நடத்துவது என்பது சாதாரண காரியமல்ல. திருவருள் துணையிருந்தால் மட்டுமே அது சாத்தியம்.

உங்கள் பலரின் தினசரி முகம் பார்க்கும் கண்ணாடியாக நம் தளம் விளங்கி வருகிறது என்றால் அதற்கு காரணம் எல்லாம் வல்ல இறைவனின் கருணைதான்.

நான் பட்ட துன்பங்களும், எனக்கு கிடைத்த அனுபவங்களும், அதன் மூலம் எனக்கு ஏற்பட்ட பக்குவமும் பின்னர் அதன் மூலம் வளர்த்துக்கொண்ட எழுத்தாற்றலும்,  என்னுடனே மண்ணோடு மண்ணாகிவிடக்கூடாது, இந்த வையத்திற்கு அவை ஒரு துளியாவது பயன்படவேண்டும் என்றே இறைவன் இப்படி ஒரு முயற்சிக்கு ஆளாக்கினான் என்று கருதுகிறேன். ஏனெனில் இப்படி ஒரு தளத்தை துவக்கி நடத்திட வேண்டும் என்பது என் திட்டமாக இருக்கவில்லை.

‘ரைட்மந்த்ரா’ பிறக்க விநாயகப் பெருமானே காரணம்!

சென்ற ஆண்டு இதே நேரம் கைக்கோளை இழந்த குருடன் கருந்தேளை பற்றியது போன்ற ஒரு சூழ்நிலையில் இருந்தேன். அப்போது ஒரு நாள்…. (அதாவது சென்ற ஆண்டு  விநாயகர் சதுர்த்திக்கு முன்பு) என் வீட்டருகே உள்ள பிள்ளையார் கோவில் ஒன்றுக்கு எதேச்சையாக தரிசனம் செய்ய சென்றபோது விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ஏதாவது தேவையுள்ளதா என்று விசாரிக்க, அப்போது அவர்கள் சில பழுதடைந்துள்ள மின்சார பல்புகளுக்கு பதிலாக புதிய பல்புகள் சில வாங்கித் தந்தால் நன்றாக இருக்கும் என்று கூற உடனே விநாயகர் ஆலயத்திற்கு சில பல்புகள் வாங்கித் தந்து ஒரு பெரிய கைங்கரியத்தில் என்னை ஈடுபடுத்திக்கொண்டேன்.

நாம் ஒரு அடி எடுத்துவைத்தால் இறைவன் பத்து எடுத்து வைப்பான் அல்லவா? ஆனால் ஆறுமுகனின் அண்ணனோ நூறடி எடுத்துவைத்துவிட்டான். தொடர்ந்து பேரம்பாக்கம் நரசிம்மரும், யானைமுகனும் எனக்குள் ஏற்படுத்திய மனமாற்றத்தின் விளைவாக ‘ரைட்மந்த்ரா’ பிறந்தது.

நல்லவிஷயத்தை நோக்கி புத்தி செல்லவேண்டும் என்றால் அதற்கும் ஒரு  ப்ராப்தம் வேண்டும் அல்லவா? அதை எனக்கு தந்தது சிவராத்திரி விரதம்.

இதோ ரைட்மந்த்ரா தனது லட்சிய பயணத்தை துவக்கி ஒரு வருடம் நிறைவடையப்போகிறது. எனவே தும்பிக்கை கடவுளுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே நமது ஆண்டு விழா இம்மாத இறுதியில் நடைபெறுகிறது.

விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல் பதிவாக இந்த பதிவை அளிக்கிறேன்.

விநாயகருக்கு மிகவும் உகந்தது அருகம்புல் என்று அனைவருக்கும் தெரியும். ஆனால் அது எப்பேற்பட்ட மகத்துவம் மிக்கது என்பது தெரியுமா?

மிகுந்த பொருட்செலவில் எண்ணற்ற வேதியர்களை கொண்டு செய்யப்படும் வேள்வியோ, ஹோமமோ, அல்லது அபிஷேக ஆராதனைகளோ சாதிக்காததை எளிய அருகம்புல் கொண்டு விநாயகருக்கு செய்யப்படும் ஒரு சிறு அர்ச்சனை சாதித்துவிடும் தெரியுமா?

அருகம்புல்லின் மகத்துவத்தை விவரிக்கும் கீழ்கண்ட இந்த கதை விநாயகர் புராணத்தில் வருகிறது.

அருகம்புல்லுக்கு ஈடாக பொண்ணா? ஏளனம் செய்த இந்திரன் கடைசியில் மண்டியிட்ட கதை !

ரிஷிகளில் கௌண்டின்ய மகரிஷி விநாயகப் பெருமானின் தீவிர உபாசகர். தினசரி விநாயகருக்கு பூஜை செய்யாமல் தனது நாளை தொடங்க  மாட்டார். கௌண்டின்யரின் பத்தினியின் பெயர் ஆசிரியை.

மற்ற ரிஷிகள் எல்லாம் அரசர்களையும் சக்கரவர்த்திகளையும் நாடிச் சென்று பொருளீட்டி வர, தன் கணவர் இப்படி விநாயகருக்கு அருகினால் அர்ச்சனை செய்வதே போதும் என்று கருதுகிறாரே என்று வாட்டம் ஏற்பட்டது ஆசிரியைக்கு. போதாக்குறைக்கு அக்கம்பக்கத்திலுள்ள பெண்கள் எல்லாம் தங்கள் கணவன்மார்கள் அரசர்களை நாடிச் சென்று பெற்று வந்த பொருட்களை இவளிடம் காட்டி இவளது இயலாமை குறித்து பரிகசித்து வந்தனர்.

இதனால் மிகவும் மனவாட்டத்துடன் இருந்தாள் ஆசிரியை. மனைவியின் மனவாட்டத்தை கண்ட கௌண்டின்யர் யாதென வினவ, ஆசிரியை “ஒன்றும் இல்லை!” என்று கூறி மழுப்பிவிடுகிறாள்.

பெண்கள் ஒன்றுமில்லை என்றால் அதில் ஓராயிரம் விஷயம் இருப்பது ரிஷிகளுக்கு தெரியாதா என்ன? கௌண்டின்யர் தனது பத்தினியின் மன வாட்டத்தின் காரணத்தை புரிந்துகொள்கிறார்.

உள்ளே சென்று விநாயகருக்கு தாம் அர்ச்சித்த ஒரு அருகம்புல்லை கையில் எடுத்துக்கொண்டு அவளை அழைத்து, “தேவி, எனக்கொரு உதவி செய்யவேண்டும். செய்வாயா?” கேட்க….. “சொல்லுங்கள் சுவாமி” என்கிறாள்.

“இந்த அருகை கொண்டு சென்று தேவேந்திரனிடம் தந்து இதற்கு ஈடான பொன்னை பெற்று வா” என்கிறார்.

கணவரின் கட்டளையை நிறைவேற்ற திருவுளம் கொள்ளும் ஆசிரியை, கொடுப்பது தான் கொடுக்கிறார்…. ஒரு அருகம்புல் கட்டை கொடுத்தாலாவாது அதன் எடைக்கு ஒரு பொன் கிடைக்கும்…. இந்த ஒரு அருகிற்கு என்ன கிடைத்துவிடப் போகிறது என்று பலவாறாக எண்ணி இந்திரலோகம் சென்றாள்.

அழகாபுரி பட்டணத்தில் அஷ்டதிக் பாலகர்களும் சபையில் அமர்ந்திருக்க, அவர்கள் மத்தியில் தனது சிம்மாசனத்தில் மனைவி இந்திராணியுடன் வீற்றிருக்கிறான் தேவேந்திரன்.

தேவலோகத்தின் காவலர்கள் ஓடிவந்து ரிஷி பத்தினி ஒருவர் வந்திருப்பதாக கூற, அவரை உள்ள அழைக்கிறான் தேவேந்திரன்.

தேவேந்திரனை வணங்கும் ஆசிரியை, “தேவேந்திரா… கௌண்டின்ய மகரிஷியின் தர்மபத்தினி நான். இந்த அருகை  உன்னிடம் தந்து இதற்கு ஈடான பொருளை பெற்று வருமாறு என் கணவர் கட்டளையிட்டிருக்கிறார்” என்று கூறுகிறார்.

அதே கேட்டு பலமாக சிரித்தான் தேவேந்திரன்.

“கற்பக விருட்சமும், காமதேனுவும், நவ நிதியமும், இதர பலவகை செல்வங்களும் மலை போல பெற்று செல்வச் செழிப்போடு இருக்கும் என்னிடத்தில் ஒரு அருகம்புல்லுக்கு ஈடான பொருளை பெற்று வரும்படி அனுப்பி உன் கணவன் எங்களை ஏளனம் செய்கிறானா?”

தனக்கும் தனது கணவருக்கும் இப்படி ஒரு அவமதிப்பு நடப்பதை கண்டு கலங்கும் ஆசிரியை, “தேவேந்திரா அவர் நோக்கம் நான் அறியேன். என் கணவர் இட்ட கட்டளையை நிறைவேற்ற வேண்டியே இங்கு வந்துள்ளேன். முடிந்தால் இந்த அருகிற்கு ஈடான பொன்னை கொடு அல்லது இல்லை என்று சொல்லிவிடு” என்கிறாள்.

“என்ன… இந்திரலோகத்திற்கு யாசகம் பெற வந்த ஒருவர் பொருளை வாங்காது திரும்ப செல்வதா? அது எனக்கு பெரும் இழுக்கல்லவா? இதோ ஒரு நொடியில் நீ கேட்டதை தருகிறேன்!” என்று கூறி இந்திரலோகத்தின் கருவூலத்திற்கு அதிபதியான குபேரனை அழைக்கிறான்.

“இவர்கள் கேட்டதை போல இந்த அருகம்புல்லிற்கு ஈடான பொன்னை உடனே கொடு” என்று கட்டளையிடுகிறான்.

கையில் ஒரு சிறிய தராசை வைத்து அருகம்புல்லை அதன் ஒரு தட்டிலும் மறுபக்கம் ஒரு தங்கக் காசையும் வைக்கிறான் குபேரன். அனைவரும் வியக்கும் வண்ணம் அருகம்புல் இருந்த தட்டு கீழே தாழ்ந்து சென்றது. பொற்காசு வைக்கப்பட்ட தட்டு மேலே எழுந்து நின்றது.

இந்த பக்கம் மேலும் ஒரு தங்கக் காசை வைத்தான் குபேரன். அப்போதும் அருகம்புல் இருந்த தட்டு அசைந்துகொடுக்கவில்லை.

காசுகளை அப்படியே கூட்டிக்கொண்டே போனான். ஒரு கட்டத்தில் வேறு ஒரு பெரிய துலாபாரத்தை கொண்டு வரச் செய்து ஒரு பொற்காசுகள் அடங்கிய மூட்டையையே வைத்தான். அப்போதும் அப்படியே தான் இருந்தது அருகு வைக்கப்பட்டிருந்த பக்கம்.

நடப்பதையெல்லாம் வியர்க்க விறுவிறுக்க பார்த்துக்கொண்டிருந்த தேவேந்திரனுக்கு கலக்கம் ஏற்பட்டது. அழகாபுரியில் உள்ள அனைத்து செல்வங்களையும் வைத்தால் கூட அருகம்புல் இருக்கும் தட்டு மேலே எழாது போலிருக்கிறதே… என்று கருதியவன் காமதேனு, கற்பக விருட்சம் என தேவலோகத்துக்கு செல்வங்களை எல்லாம் அதில் அடுக்கினான். அப்போதும், அருகு இருந்த தட்டு அசைந்துகூட கொடுக்கவில்லை.

கடைசியில், மொத்த தேவலோகத்தையும் வைப்பதற்கு ஒப்பாக தனது கிரீடத்தை தராசில் வைத்தான். அப்போதும் தட்டு அசைந்துகொடுக்கவில்லை.

நிலைமை கைமீறிச் செல்வதை உணர்ந்த இந்திரன், அஷ்டதிக்பாலகர்கள் உள்ளிட்ட இந்திராதி தேவர்கள் அனைவருடனும் தானும் தராசில் ஏறி நின்றான்… அப்போதும் ஒரு பயனும் ஏற்படவில்லை.

அடுத்து மும்மூர்த்திகளையும் உதவிக்கு அழைத்தான். அவர்களும் உடனே வர, பிரம்மா, சிவன், விஷ்ணு ஆகிய மும்மூர்த்திகளும் தங்களது மனைவிமார்களுடன் ஏறி நின்றனர். அப்போதும் அருகு இருந்த தட்டு மேலே எழவில்லை.

கடைசியில் ஞானதிருஷ்டியை கொண்டு, நடந்த அனைத்தையும் அறிந்துகொள்கிறான் இந்திரன். (ஞான திருஷ்டியை தேவையின்றி பயன்படுத்தினால் தவவலிமை குறையும். எனவே அவசியமான சூழலில் மட்டுமே அதை பயன்படுத்துவர்!) விநாயகப் பெருமானுக்கு அர்ச்சனை செய்யப்பட்டு  அந்த அருகு மேன்மை பெற்றிருக்கிறது என்றும், அதற்கு ஈடாக இந்த உலகில் ஒன்றும் இல்லை என்றும் புரிந்துகொள்கிறான்.

உடனே மும்மூர்த்திகள் புடைசூழ இந்திராதி தேவர்களும் பூலோகத்தில் உள்ள கௌண்டின்யரின் ஆஸ்ரமத்தை அடைகின்றனர். முப்பத்துமுக்கோடி தேவர்களும் அருந்தவம் செய்தாலும் காண முடியாத மும்மூர்த்திகள் புடைசூழ தமது ஆஸ்ரமத்தில் எழுந்தருளியிருப்ப்பதை கண்டு கண்கலங்கினார் கௌண்டின்யர்.

அவர்கள் முன்பாக அப்படியே நிலத்தில் நெடுஞ்சாண்கிடையாக வீழ்ந்து வணங்கி…. விநாயகரை நோக்கி இவ்விதம் கூறலானார்…. “முழுமுதற் கடவுளே… உன்னை அனுதினமும் அருகைக்கொண்டு அர்ச்சித்து வரும் அடியேனின் அருமை பெருமைகளை இவ்வுலகிற்கு உணர்த்தவே இவர்களை என் வீட்டிற்கு அனுப்பினாயோ?” உன் திருவிளையாடல் தான் என்ன….” என்று பலவாறாக உருகினார்.

சிவபெருமான் அவரை நோக்கி : “கௌண்டின்ய மகரிஷியே… அருகம் புல்லிற்கு இருக்கும் மகத்துவத்தை அனைவரும் அறிந்துகொள்ளவேண்டும் என்று தான் நீங்கள் உங்கள் பத்தினியிடம் ஒரு அருகை கொடுத்து அதற்கு ஈடான பொன்னை பெற்றும் வரும்படி கூறினீர்கள். அண்டசராசரத்தில் உள்ள உள்ள அனைத்து செல்வங்களையும் சேர்த்து கொடுத்தாலும் கூட முழுமுதற்கடவுள் விநாயகப் பெருமானுக்கு அர்ச்சித்த ஒரு அருகம்புல்லிற்கு அவை ஈடாகாது. அப்படியிருக்க தினமும் அவரை எண்ணற்ற அருகம்புற்களால் அர்ச்சித்து வரும் நீங்கள் செய்த பேற்றை நாம் விளக்கவும் வேண்டுமா?” என்று கூறிவிட்டு அவருக்கு வேண்டிய வரங்களை தந்து மகிழ்ந்தார். தொடர்ந்து பிரம்மா, விஷ்ணு ஆகியோரும் அவருக்கு வரங்களை தந்து மகிழ்ந்தனர்.

அன்று முதல் காமதேனு, கற்பக விருட்சம் முதலியன கௌண்டின்யரின் ஆஸ்ரமத்திற்கு வந்து தங்கியிருந்து அவருக்கு பணிவிடைகள் செய்துவந்தன. கௌண்டின்யரின் பத்தினியான ஆசிரியையும் விநாயகருக்கு அர்ச்சித்த அருகம்புல்லிற்கு உள்ள மகத்துவத்தை தெரிந்துகொண்டு தனது கணவருக்கு அவரது பூஜைகளில் பணிவிடை செய்து வாழ்ந்து வந்தார்.

இனி வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் தும்பிக்கையானுக்கு அருகம்புல்லை கொண்டு அர்ச்சனை செய்துவாருங்கள்.  பிள்ளையார்  கோவிலுக்கு செல்லும்போது அருகை கொண்டு அர்ச்சனை செய்யுங்கள். பசுவிற்கு அருகம்புல்லை வாங்கி கொடுங்கள். உங்கள் எண்ணங்கள் யாவும் ஈடேறி உங்கள் துன்பத்தில் இருந்து நீங்கள் விடுதலை பெறுவீர்கள் என்பது திண்ணம். உங்கள் பக்தி எளிமையோடும் உள்ளன்போடும் இருந்தால்  போதுமானது.

=================================================

முருகனுக்கு அறுபடைவீடு இருப்பது போல பிள்ளையாருக்கும் அறுபடை வீடு உண்டு தெரியுமா?

பிள்ளையார் அறுபடை வீடு

முதல் படைவீடு – திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோயில்
இரண்டாம் படைவீடு – கடலூர் விருத்தாச்சலம் விருத்தகிரீஸ்வரர் திருக்கோயில்
மூன்றாம் படை வீடு – நாகப்பட்டினம் திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோயில்
நான்காம் படைவீடு – மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில்
ஐந்தாம் படைவீடு – காசி துண்டிவிநாயகர் திருக்கோயில்
ஆறாம் படைவீடு – கடலூர் திருநாரையூர் சித்தநாதேஸ்வரர் திருக்கோயில்

அருகம்புல் வழிபாடு

விநாயகருக்கு எல்லா நாளிலும் அருகம் புல் அணிவித்து வழிபடலாம் என்றாலும், கிழமைகளில் திங்கள் கிழமையும், நட்சத்திரங்களில் உத்திராடமும் மிகவும் உயர்ந்தது. விநாயகர் உத்திராட நட்சத்திரத்தின் அதிதேவதை ஆவார். இதுதவிர, அசுவதி, ரோகிணி, மிருகசீரிஷம், திருவாதிரை. புனர்பூசம், பூசம்,  ஆயில்யம், மகம், உத்திரம், கேட்டை, மூலம், பூராடம், திருவோணம், பூரட்டாதி, ரேவதி, ஆகிய 16 நட்சத்திர நாட்களில் அருகம்புல் மாலை அணிவித்து வணங்கினால் பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழலாம் என்பது நம்பிக்கை.

=================================================

திருவள்ளுவர் குருகுல குழந்தைகளுடன் நம் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம்

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நாளை மாலை (செப்டம்பர் 09, திங்கள்) 6.00 மணியளவில் சென்னை சைதையில் உள்ள ஆதரவற்ற மற்றும் பிற்படுத்தப்பட்ட நரிக்குறவ மாணவ மாணவிகள் படிக்கும் திருவள்ளுவர் குருகுலத்தில் விநாயகர் சதுர்த்தி சிறப்பு பூஜையும் தொடர்ந்து அன்னதானமும் நம் தளம் சார்பாக நடைபெறவிருக்கிறது.

=================================================

[END]

17 thoughts on “விநாயகருக்கு அர்ச்சித்த அருகம்புல்லுக்கு ஈடு இணை இந்த உலகில் உண்டா? விநாயகர் சதுர்த்தி SPL

  1. \\\“முழுமுதற் கடவுளே… உன்னை அனுதினமும் அருகைக்கொண்டு அர்ச்சித்து வரும் அடியேனின் அருமை பெருமைகளை இவ்வுலகிற்கு உணர்த்தவே இவர்களை என் வீட்டிற்கு அனுப்பினாயோ?” உன் திருவிளையாடல் தான் என்ன….” என்று பலவாறாக உருகினார்\\

    படிக்கும் போது மெய்சிலிர்க்கின்றது.
    அருகம்புல் வழிபாடு எவ்வளவு முக்கியம் வாய்ந்தது தெரிந்து கொண்டேன் .பிள்ளையார் அறுபடை வீடு தகவல் அருமை .
    பிள்ளையார் படம் அருமையாக போருந்திள்ளது .

    விநாயகர் சதுர்த்தி நன்னாளில் http://rightmantra.com/ வாசகர்கள் சார்பாக சுந்தர் ஜிக்கு வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொண்டு, அருகம்புல் பறிக்க சென்று கொண்டுள்ளேன் .
    -மனோகர்

  2. முழு முதற்கடவுள் விநாயகர்.

    அவரை பற்றி சொல்ல வார்த்தைகளும் வேண்டுமா? எந்த ஒரு காரியத்தையும் அவர் துணை இல்லாமல் செய்ய முடியாது.
    எல்லா காரியத்தையும் எந்தஒரு தடங்கலும் இல்லாமல் முடித்து தருபவர்.

    அருகம்புல்லால் அர்ச்சித்து மூன்று உலகத்தை சேர்ந்த அனைவரயும் ஒரு தராசு தட்டில் நிற்க வைத்த பெருமைக்கு உரியவர் கௌடின்ய மகரிஷி.
    இந்த கதை மூலம் அருகம்புல்லின் பெருமை அறிந்து கொண்டோம்.

    தினம் மஞ்சள் தூள் பிள்ளையார் பிடித்து பூஜையில் வைத்து குங்குமம் பூ மூலம் அலங்கரித்து முக்கியமாக வெற்றிலை பாக்கு பழம் வைத்து அருகம்புல் கொண்டு கணபதி அஷ்டோத்த்திரத்தை 27 நாட்கள் படித்து பூஜை செய்து 28ம் நாள் பாயசம் படைத்து பூஜையை நிறைவு செய்தால் கண்டிப்பாக நாம் எண்ணியது நடக்கும். முதன்முதல் ஆரம்பிக்கும் போது விநாயகர் சதுர்த்தி or அமாவாசையில் ஆரம்பிக்கவேண்டும்.
    என் அனுபவம் இது.

  3. I’m very very happy to see this site completing its phenomenal first year and the site had achieved its motive already – which is giving peace and happiness to loads of people – which is evident from the comments here over several posts and people who help by participating and generously giving their self and the money in good things like doing something for temples, children, etc.

    And I sincerely wish Mr. Sundar and this rightmantra go a long way​ to achieve more and more in the upcoming years.

    ​Most of us would talk about doing good things only – including me but you did what you talked and walked.

    Thanks so much for giving peace and happiness and inspiration to loads of people.

    Be happy always whatever comes since whatever things happen – its for our good only – like you said in one of your earlier posts.

    And make others happy always till you enjoy doing that.

    Thanks again and All the best. Live life with love and spirituality.
    **
    **Chitti **.
    ​Thoughts Becomes Things .

  4. அருகம்புல்லின் அருமைகளை புரிந்துகொண்டோம்… ரைட்மந்த்ரா ஒராண்டு முடிவுற்ற இந்நேரத்தில் நம் வாசகர்கள் அனைவருக்கும் என் வாழ்த்துக்களை தெரிவித்துகொள்கின்றேன். குறிப்பாக இத்தலத்தை வெற்றிகரமாக வழி நடத்திச்செல்லும் சுந்தர் சார் அவர்களுக்கு மேலும் பலப்பல ஆண்டுவிழாக்களை கொண்டாட என்னுடைய வாழ்த்துக்கள்..

    அனைவருக்கும் என் இனிய பிள்ளையார் சதுர்த்தி நல்வாழ்த்துக்களையும் இந்நேரத்தில் தெரிவித்து கொள்கின்றேன்…

  5. சுந்தர்ஜி,
    அற்புத கீர்த்தி வேண்டின்
    ஆனந்த வாழ்க்கை வேண்டின்
    நற்பொருள் குவிதல் வேண்டின்
    நலமெலாம் பெருகவேண்டின்
    கற்பக மூர்த்தி தெய்வக்
    களஞ்சியத் திருக்கை சென்று
    பொற்பதம் பணிந்து பாரீர்!
    பொய்யில்லை கண்ட உண்மை. – கவிஞர் கண்ணதாசன் அவர்கள் எழுதிய இந்த பாடல் நீங்கள் மேலே வெளியிட்ட பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர்க்கு பொருத்தமானது. கற்பக விநாயகர் நவகிரகங்களை தன்னுள் வைத்துள்ளார். இவரை வணங்கினால் நவகிரகங்களின் அருள் கிட்டும் என்பார்கள்.

    விநாயகர்க்கு பூஜிக்கபட்ட அருகம்புல்லின் பெருமையை போலவே நம் தளத்தின் பெருமையும் மென்மேலும் ஓங்கட்டும் என இந்நாளில் விநாயகரை வேண்டிகொள்வோம். நன்றி

  6. நம் தளம் 2வது வருடம் அடிஎடுத்து வைக்கிறது. அதற்கு நம் வாசகர்கள் சார்பாக உங்களுக்கு எங்கள் எல்லோரது வாழ்த்துக்களை தெரிவித்துகொள்கிறோம்.
    இந்த ஒரு வருட முழுவதும் பல பல விஷயங்கள் & கருத்துக்கள் & கட்டுரைகள் மேலும்
    உழவாரப்பணி என்று எங்களை எல்லாம் ஒரே குடும்பத்தில் சேர்த்து உள்ளீர்கள்.
    உங்கள் வாசகர்கள் பல பேர் இன்று நிம்மதியுடன் & குறிப்பாக மன அமைதியுடன் இருக்க உங்கள் எழுத்தும், நீங்கள் எங்களுடன் பழகும் விதமும் தான் காரணம். இதற்கு உங்களுக்கு எத்தனை முறை நன்றி சொன்னாலும் தகும்.
    வளர்க உங்கள் பணி. வாழ்க உங்கள் தொண்டு.
    எல்லாம் அப்பா செயல்

  7. நம் அனைவரின் முயற்சிகளும் செயல்களும் வென்றிட, ஆறுமுகன் அண்ணனின் ஆசிர் நமக்கெல்லாம் கிடைக்கட்டும்.

  8. சுந்தர் சார் வணக்கம்

    விநாயகர்க்கு பூஜிக்கபட்ட அருகம்புல்லின் பெருமையை போலவே நம் தளத்தின் பெருமையும் மென்மேலும் ஓங்கட்டும்

    நன்றி

  9. ஆனை முகனின் ஐந்தாம் படை வீடு – பிள்ளையார் பட்டி (நன்றி – தினமலர் )

  10. “ஐந்து கரத்தனை ஆனை முகத்தனை
    இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை
    நந்தி மகன் தனை ஞாநக்கொழுந்தினை
    புந்தியில் வைத்து அடி போற்றுகின்றேனே!”

    மூல முதற் கடவுள். அவரின்றி எந்த செயலையும் தொடங்க முடியாது.

    அருகம்புல்லின் அருமைகளை புரிந்துகொண்டோம மற்றும் பிள்ளையார் அறுபடை வீடு தகவல் தெரிந்து கொண்டோம்.

    ரைட்மந்த்ரா ஒராண்டு முடிவுற்ற இந்நேரத்தில் சுந்தர் அண்ணா அவர்களுக்கு நம் வாசகர்கள் சார்பில் என் வாழ்த்துக்களை தெரிவித்துகொள்கின்றேன்.

  11. டியர் சுந்தர் ,

    நல்ல பயனுள்ள தகவல். ரைட் மந்த்ரா மேலும் மேலும் பல செய்திகள் தர வேணும் .

    அன்புடன்
    ராஜு

  12. பகுத்து அறிவு என்ற பெயரில் நமது நல்ல பண்புகளை ,மரபுகளையும் உடைத்து எரித்து விட்டோம். விஞ்ஞானம் அசுர வேகத்தில் வளர்கிறது.இவற்றை எல்லாம் பயன் படுத்த இயலாதவர்கள் தான் வேறு சக்தி பற்றி பேசுகிறார்கள் என பண்பு, பணிவு எல்லலாவற்றையும் தூ க்கி எறிந்து விட்டோம். . வாழ்கையின் பண்புகள் சரிந்து வருகின்றன. உண்மை, நேர்மை என்ற வார்த்தைகளை எல்லாம் தம்மை நேர்மையானவர்களாக காட்டிக்கொள்ளத்தான் பயன்படுத்குகிரார்கள். கூ ட்டம் சேர்த்துவிட்டால் யாருக்கும் நெருக்கடி உண்டாக்கலாம் ,காரியம் சாதிக்கலாம், வன்முறை கலவரம் செய்து அதற்கு போராட்டம் என்று பேர் சூட்டி விட்டோம்..உழைக்காமலே ஊதியம் மிகுதியாக பெற வேண்டும் என்ற தன்னைத்தானே ஏமாற்றிக்கொளும் வழியை எந்த பள்ளியிலும் படிக்காமலே மனதில் பதித்து விட்டோம். இன்றைய இளையதலைமுறைஎர் ,வயதுக்கு வரும் சமயத்தில் சினிமா, தொலைக்காட்சி வாயிலாக தவறுகள் செய்கின்ற தீய குணங்களை அவர்கள் அறியாமலேயே பெறுகிறார்கள். எல்லாவற்றிற்கும் காரணம் இறைவனை மையமாக வித்து வாழ வேண்டிய அவசியம் புகட்டப்பாடாததால் தான்.. எனவேதான் சமீபகாலமாக பாலியில் கொடுமை அதிகரித்து இருக்கிண்டது.. இளையதலைமுறைஎர் நல்லதை சாதிக்க பிறந்தவர்கள். அவர்கள் அன்பும், அறிவும் வளர்த்து நல்லவை நாடி அல்லவை மறையும் என்பதை உணர்த்தி நாடு, வீடு நலம் பெற பிராத்தனை செய்வோம்.

  13. முதலில் ஓராண்டை வெற்றிகரமாக நிறைவுசெய்த நமது தளத்திற்கும் அதனை மிகுந்த சிரமங்களுக்கு இடையில் செவ்வனே நடத்தி நம் அனைவருக்கும் நம்மை அறிமுகம் செய்து வைத்த சுந்தர் அவர்களுக்கு எங்களின் மனமார்ந்த நன்றிகளும் பாராட்டுதல்களும்

    முழுமுதர்கடவுளின் அருளோடும் ஆசியோடும் துவங்கப்பட்ட இந்த தளம் மென்மேலும் வளர்ந்து இளையசமுதாயத்தினரிடமும் ஒரு மிகப்பெரிய மாற்றத்தை உண்டாக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது

    அருகம்புல்லின் மகத்துவத்தை உணர்த்த இதை விட வேறு என்ன உதாரண சம்பவம் இருக்க முடியும் ?

    தும்பிக்கையானை நம்பிக்கையுடன் துதிப்போம்
    என்றென்றும் அவர் நம்மை துணை இருந்து காத்து ரட்சித்திட மனமார தொழுதிடுவோம் !!!

  14. அருகம்புல்லின் மகத்துவத்தை அறிந்து கொண்டோம். ரைட் மந்த்ரா பிறப்பதற்கு பிள்ளையார் முழு முதற் காரணம். முதன் முதலாக தாங்கள் பிளையார் கோவிலிலேயே தங்கள் உழவார பணியை துவக்கி விட்டீர்கள். இந்த இரண்டு வருடங்களில் தங்கள் தளம் எவ்வளவு அபரிமிதமான வளர்ச்சி அடைந்திருக்கிறது. வாசகர்களாகிய நாங்கள் மிகவும் பெருமைப் படுகிறோம். நம் தள ஆண்டு விழாவை ஆவலுடன் எதிர் பார்க்கிறோம்

    நன்றி
    உமா

Leave a Reply to Sundarapandy Cancel reply

Your email address will not be published. Required fields are marked *