Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Friday, March 29, 2024
Please specify the group
Home > Featured > 50 காசுகள் to லட்சங்களை புரட்டும் சங்கிலி தொடர் உணவகங்கள் – ஒரு மெழுகுவர்த்தியின் பயணம்!

50 காசுகள் to லட்சங்களை புரட்டும் சங்கிலி தொடர் உணவகங்கள் – ஒரு மெழுகுவர்த்தியின் பயணம்!

print
பொதுவாக பதிவு எழுதுவதைவிட அதற்கு முன்னுரை கொடுப்பது மிகவும் சவாலான விஷயம். முன்னுரை சரியாக அமையவில்லை என்றால் உள்ளே நாம் என்னதான் நல்ல CONTENT கொடுத்திருந்தாலும் அது எடுபடாது. பேட்ரீசியா அவர்களுடனான நமது சந்திப்பை விளக்கும் இந்த பதிவை பொறுத்தவரை முன்னுரை கொடுப்பது எனக்கு மிக மிக கடினமாக இருந்தது.

காரணம்………. என்ன சொல்லி, எதைச் சொல்லி, முன்னுரை அளிப்பது?

* இப்படியும் கூட நம்மிடையே ஒரு சாதனையாளர் இருக்கிறார் நடமாடுகிறார் என்று சொல்வதா?

* எவ்வளாவு ஒருவர் அடிமட்டத்திலிருந்தாலும் அவர்களாலும் ஒரு நாள் மேல வரமுடியும் என்று நிரூபித்த இவர் விடாமுயற்சியை பற்றி சொல்வதா?

* அல்லது ‘காதல்’ என்ற பெயரில் புரிதல் எதுவுமின்றி வெறும் ஈர்ப்பின் பால் சென்று தங்களுக்கு தாங்களே குழி வெட்டிக்கொள்பவர்களுக்கு இவர் வாழ்க்கை தரும் எச்சரிக்கையை பற்றி சொல்வதா?

* அல்லது இத்தனை கஷ்டத்திற்கு பிறகும் இன்னும் இப்படி ஒருவர் சிரித்துக்கொண்டிருக்கிறார் என்று சொல்வதா?

* அல்லது தனக்கு ஏற்பட்ட துன்பத்திற்கு இடையிலும் பிறர் நலனை நினைத்த இவரின் பெருந்தன்மையை பற்றி சொல்வதா?

* அல்லது பட்ட காலிலே படும் ஆனால் அதை தாங்கிக்கொண்டு மேலும் மேலும் முன்னேறுவதைத் தவிர வேறு வழியில்லை ஒருவருக்கு என்று விதி இவரைவிடாமல் துரத்திய கதையை சொல்வதா?

என்ன சொல்வது????????????

பொதுவாக சாதனையாளர்களின் வாழ்க்கை நமக்கு பாடமாக அமைவது இயல்பு தான். ஆனால் வாழ்க்கையின் ஒவ்வொரு கணமும் நமக்கு பாடமாக இருக்கும்படி இவர் வாழ்க்கை அமைந்தது இயல்பான விஷயம் அல்ல.

====================================================

திருமதி. பேட்ரீசியா அவர்களை அவர் இல்லத்தில் சந்தித்த தருணங்கள்

ஜூலை 7, ஞாயிறு மாலை 5.00 மணி.

வேளச்சேரியில் ஒரு பிரதான இடத்தில் உள்ள திருமதி.பேட்ரீசியா அவர்களின் DUPLEX BUNGALOW வில் வரவேற்பறையில் நாம் காத்திருந்தோம்.

மாடியிலிருந்து திருமதி. பேட்ரீசியா சிரித்த முகத்துடன் வர, எழுந்து நின்று வரவேற்றோம். நமக்கு வணக்கம் கூறி வரவேற்றவர் நம்மை அமரவைத்தார்.

நண்பர்களை அறிமுகம் செய்து வைத்தேன். தளம் சார்பாக அவருக்கு பூங்கொத்து தரப்பட்டது. சால்வை போர்த்தி கௌரவித்தோம். அடுத்தடுத்து பூங்கொத்து, சால்வை என நாங்கள் மரியாதை செய்ய, “எதுக்கு இதெல்லாம்????” சற்று கூச்சப்பட்டார் பேட்ரீசியா.

“உங்கள் சாதனைக்கு எங்களால் முடிந்த ஒரு சிறு மரியாதை இது. மேலும் எங்கள் அன்பின் வெளிப்பாடு!” என்றோம்.

அடுத்து இது போன்ற சந்திப்புக்களில் நாம் பரிசளிக்கும் பாரதியின் ‘புதிய ஆத்திசூடி’ நூலை அவருக்கு பரிசளித்தோம்.

“பாரதி கண்ட புதுமைப் பெண் நீங்கள். ஆகவே பாரதியன் ‘புதிய ஆத்திசூடி’ பரிசு உங்களுக்கு!” நாம் கூற, மகிழ்ச்சியோடு அதை பெற்றுக்கொண்டார்கள். ஆர்வத்தின் காரணமாக சில பக்கங்களை புரட்டினார். “அப்புறமா படிக்கிறேன்” என்றார்.

நம் தளம் சார்பாக நம் தளத்தின் ஷீல்டு ஒன்று நினைவுப் பரிசாக வழங்கப்பட்டது.

தொடர்ந்து பொதுவான உரையாடல். தளம் பற்றியும் நமது பணிகள் பற்றியும், கடந்த ஆண்டு நம் தளம் சார்பாக பாரதி பிறந்தநாள் விழா நடத்தப்பட்டது பற்றியும் கூறினேன்.

இளங்கோ அவர்களை பற்றி கூறியபோது ஆர்வமுடன் கேட்டுக்கொண்டார். கூடவே அவரது மகன் திரு.பிரவீன் ராஜ்குமார் உடனே தனது மொபைலில் நம் தளத்தை பிரவுஸ் செய்து பார்த்துக்கொண்டிருந்தார்.

பேட்டியின் போது உதவியாக இருக்கும் என்று ஏற்கனவே நான் சேகரித்து வைத்திருந்த தகவல்களை பற்றி குறிப்பிட்டு அது தொடர்பாக கேட்டுக்கொண்டே வந்தோம்.

பேச்சினிடையே நாங்கள் சாப்பிடுவதற்கு கேக்கும், காபியும் வந்தது.

இங்கு காணும் சந்திப்பு புகைப்படங்களை நானும் நண்பர் மனோகரனும் மாறி மாறி எடுக்க “நீங்க நில்லுங்க… நான் எடுக்குறேன்” என்று கூறி திரு.பிரவீன் ராஜ்குமார் சில புகைப்படங்களை எடுத்து தந்து உதவினார்.

நம் தளம் சார்பாக நடத்தப்படும் விழா ஏதாவது ஒன்றில் கலந்துகொண்டு எங்களை கௌரவிக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டேன். “நிச்சயம்” என்றார். டிசம்பரில் வரும் பாரதி விழாவுக்கு இவரை அழைக்க எண்ணியிருக்கிறேன்.

சுமார் அரைமணிநேர சந்திப்புக்கு பின்னர் விடைபெற்றோம். சந்திப்பு நிறைவடையும் நேரம் அவரின் கால்களில் விழுந்து ஆசி பெற விரும்பினேன்.

“நோ… நோ… அதெல்லாம் வேண்டாம்” என்றார் சங்கடத்துடன்.

அடுத்த சில நிமிடங்களில் என் சட்டைப் பையிலிருந்து ஏதோ நான் எடுக்க முயல, அப்போது ஒரு சிறிய காகிதம் காற்றில் பறந்து போய் அவரின் கால்களுக்கருகே விழுந்தது. அவர் அதை குனிந்து எடுப்பதற்கு முன்பு, நாம் எடுக்க….. அப்படியே அவர் கால்களை   தொட்டுவிட்டேன்.

“எப்படியோ சுந்தர்ஜி நினைச்சபடியே சாதிச்சிட்டார்” என்று நண்பர் மனோகரன் கமெண்ட் அடிக்க அனைவரும் சிரித்தார்கள்.

வாசல் வரை வந்து வழியனுப்பிவைத்தார் திரு.ராஜ்குமார்.

==============================================================

மேற்படி சந்திப்பு நடந்து முடிந்து அதன் பாதிப்பபிலிருந்து நாங்கள் வெளியே வர சில நாட்கள் பிடித்தது.

இவர் சாதனை சரித்திரத்தின் ஒரு அங்குலத்தை கூட நீங்கள் விட்டுவிடக்கூடாது என்பதால் அவர் நம்மிடம் பேசியது, மற்றும் தி ஹிந்து, REDIFF உள்ளிட்ட தளங்களில் இருந்து நாம் திரட்டி வைத்திருந்த தகவல் என அனைத்தையும் சேர்த்து இதை உருவாக்கியிருக்கிறேன்.

நிச்சயம் இது உங்கள் கண்களை திறக்கும் ஒரு பதிவாக அமையும் என்று நம்புகிறேன்!

==============================================================

தோல்வியின்றி வரலாறா? துக்கம் என்ன என் தோழா?

பெரும்பாலானவர்களை – கனவுகளை சுமக்கும் டீன்-ஏஜ் பருவத்தில் – பேட்ரீசியாவுக்கும் காதல் வந்தது. இவர் காதலித்தது தன்னைவிட 13 வயது மூத்தவரான நாராயண் என்கிற இளைஞரை. நாரயணின் குடும்பத்தார் மெரினாவில் சாலை ஓரத்தில் ஒரு சிறிய உணவகம் வைத்திருந்தனர். கல்லூரியில் படிக்கும்போது அடிக்கடி அந்த உணவகத்துக்கு சென்ற பேட்ரீசியா அங்கு பூரி உள்ளிட்ட உணவு வகைகள் தயார் செய்யப்படுவதை ஆர்வத்தோடு பார்ப்பார். அப்போது தான் அவர் நாரயணின் மீது காதல் கொண்டார்.

சென்னை  ஒட்டியுள்ள சாந்தோமை சேர்ந்த இவரது குடும்பம் ஒரு சராசரி நடுத்தர கத்தோலிக்க கிறிஸ்தவ குடும்பம். அப்பா தபால் & தந்தி அலுவலகத்திலும் அம்மா சென்னை தொலைபேசியிலும் பணிபுரிந்து வந்தனர்.

தோல்வியில் முடிந்த திருமண வாழ்க்கை

தான் காதலித்த நபர் வேறு மதம் என்பதால் நிச்சயம் வீட்டில் இவரது காதலை ஏற்கமாட்டார்கள் என்பதால் இருவரும் 1977 ஆம் ஆண்டு நண்பர்கள் முன்னிலையில் பதிவுத் திருமணம் செய்துகொண்டனர். அப்போது இவர் 18 வயதை எட்டியிருக்கவில்லை. நண்பர்கள் சர்டிபிகேட்களில் ஏதேதோ தில்லுமுல்லு செய்து திருமணம் செய்து வைத்தனர்.

‘இப்போதைக்கு ரகசியத் திருமணம் செய்துகொள்வோம். கல்லூரி படிப்பு முடித்ததும் பெற்றோரிடம் சொல்லிக்கொள்ளலாம்’ என்பது தான் இவரது எண்ணம். ஆனால் அது தான், தான் வாழ்க்கையில் செய்த மிகப் பெரும் தவறு என்று இப்போதும் வருத்தப்படுகிறார் பேட்ரீசியா.

‘நீயா உன் வீட்ல சொல்லிடு இல்லே… நான் சொல்லவேண்டி வரும்’

“முதலில் இந்த உடன்படிக்கைக்கு ஒப்புக்கொண்ட என் கணவர், பின்னர் வீட்டை விட்டு வெளியே வா” என்று தொந்தரவு செய்ய  ஆரம்பித்தார். ‘நீயா உன் வீட்ல சொல்லிடு இல்லே… நான் சொல்லவேண்டி வரும்’ என்று அவர் என்னை பிளாக் மெயில் வேறு வழியின்றி என் ரகசியத் திருமணத்தை பற்றி பெற்றோரிடம் சொல்லவேண்டியதாயிற்று.”

இவரின் காதல் + ரகசியத் திருமணம் பற்றிய செய்தி உறவினர்களிடம் பரவியபோது, அவர்கள் இவர் அப்பாவிடம் “நிலைமை கை மீறி போய்விட்டது. பேசாமல் ஊரறிய அவர்களுக்கு திருமணம் செய்து வைத்துவிடு. அது தான் நல்லது!” என்று ஆலோசனை கூறினார்கள்.

கணவர் மூலம் ஏற்பட்ட அதிர்ச்சி + ஏமாற்றம்

இதையடுத்து புரசைவாக்கம் சர்ச்சில் ஊரறிய ஒரு முறை பேட்ரீசியாவுக்கும் நாராயணுக்கும் திருமணம் நடந்தது. பாதிரியார் முன்னிலையில் திருமணத்திற்கான உறுதி மொழியை மணமக்கள் இருவரும் ஏற்றனர்.

“இனி நீ என் மகளே அல்ல!” என்று அத்தோடு இவர் அப்பா சொல்லிவிட்டு போய்விட்டார்.

இதையடுத்து அண்ணாநகரில் கணவருடன் தனிக்குடித்தனம் புகுந்தார். இவர் ஒரு கணக்கு போட்டால் விதி ஒரு கணக்கு போட்டது. அடுத்தடுத்து சில விஷயங்களை உணர்ந்துகொண்டார். “தான் மூன்று மாதம் கர்ப்பம், இவர் ஆசையோடு கரம் பிடித்த காதல் கணவர் ஒரு குடிகாரன் + போதை பழக்கத்திற்கு அடிமை” என்று. எல்லாவற்றுக்கும் மேலாக வாழ்க்கை நடத்த இவர்களிடம் சல்லிக்காசு கூட இல்லை. ஆசை அறுபது நாள், மோகம் முப்பது நாள் என்று சும்மாவா சொன்னார்கள் பெரியோர்கள்?

வாழ்க்கையை நகர்த்தவேண்டுமே… ? சுவற்றில் அடித்த பந்துபோல பெற்றோர் வீட்டுக்கு கணவருடன் திரும்பினார் பேட்ரீசியா. ஜாம் ஊறுகாய்கள் இவைகளை செய்து விற்க ஆரம்பித்தார். அவர் அம்மா அதை தனது அலுவலகம் கொண்டு சென்று விற்றுவந்தார்.

மகளும் அம்மாவும் இப்படி வாழ்க்கைக்கு வழி தேடிய நேரம், காதல் கணவர் பகல் முழுதும் சும்மா இருப்பார். ஆனால் இரவானால் வெறிநாயாக மாறிவிடுவார். குடிப்பதற்கு பணம் தரவில்லை என்றால் இவருக்கு அடி உதை தான். தினமும் இரவு இது தொடர்கதையானது.

மகளும் அம்மாவும் இப்படி வாழ்க்கைக்கு வழி தேடிய நேரம், காதல் கணவர் பகல் முழுதும் சும்மா இருப்பார். ஆனால் இரவானால் வெறிநாயாக மாறிவிடுவார். குடிப்பதற்கு பணம் தரவில்லை என்றால் இவருக்கு அடி உதை தான்.

“என் குழந்தைகளுக்காக வாழ்ந்தே ஆகவேண்டும்…”

அதிர்ஷ்டவசமாக பேட்ரீசியாவின் அப்பாவுக்கு தனது மருமகனின் இந்த கொடூர முகம் தெரியாது. ஏனெனில் பெரும்பாலும் இரவு நேரங்களில் அவர் நைட் ஷிப்ட் சென்றுவிடுவார்.

“இரண்டு குழந்தைகளுடன் நடுத்தெருவில் நின்றேன். வாழ்வா சாவா என்கிற கேள்வி என் முன்னே எழுந்தது. எனக்காக இல்லையென்றாலும் என் குழந்தைகளுக்காக வாழ்ந்தே ஆகவேண்டும் என்று முடிவெடுத்தேன்… அதே நேரம் என் பெற்றோருக்கு பாரமாக இருக்க நான் விரும்பவில்லை. எனவே பொருளாதார ரீதியாக யாரையும் சார்ந்திராமல் வாழ்வதற்கு எனக்கு தெரிந்த எதையாவது தான் நான் செய்யவேண்டிய நிர்பந்தத்துக்கு தள்ளப்பட்டேன். எனவே ஊறுகாய், ஜாம், பழச்சாறு இவற்றை செய்து அக்கம்பக்கத்து வீடுகளில் தினசரி விற்பனை செய்தேன். அம்மாவிடம் இதற்காக சில நூறு ரூபாய்கள் வாங்கியதோடு சரி. இதில் ஓரளவு லாபம் கிடைத்தது. பத்து ரூபாய் கூட எனக்கு அப்போது மிகப் பெரிய வரப்பிரசாதம் போன்று இருந்தது.”

“இரண்டு குழந்தைகளுடன் நடுத்தெருவில் நின்றேன். வாழ்வா சாவா என்கிற கேள்வி என் முன்னே எழுந்தது. எனக்காக இல்லையென்றாலும் என் குழந்தைகளுக்காக வாழ்ந்தே ஆகவேண்டும் என்று முடிவெடுத்தேன்…”

“ஊனமுற்றோரின் மறுவாழ்வு மையம் ஒன்றை நடத்தி வந்த என் தந்தையின்நண்பர் ஒருவர், ஊனமுற்றோருக்காக தள்ளுவண்டி, பெட்டிக்கடை செட், இவற்றை தயார் செய்து விற்பனை செய்து வந்தார். என்னை பற்றி கேள்விப்பட்டு எனக்கு தள்ளுவண்டி ஒன்றை இலவசமாக கொடுத்தார். மெரீனா பீச் அருகே என் வீடு இருந்ததால் மெரினாவில் என் தள்ளுவண்டி வியாபாரத்தை ஆரம்பிக்க முடிவுசெய்தேன்.”

கையில் குழந்தையுடன் ஒரு வருடம் அலைச்சல்

ஒருவழியாக போராட்டத்திற்கு இடையே பாறையில் வேரைப் போல 1982 ல் மகனுக்கு இரண்டு வயதானபோது மெரினாவில் ஒரு கடை வைத்தார் பேட்ரீசியா.

அது பற்றி கூறும்போது…”எனக்கு சமைப்பதில் என்றுமே ஆர்வம் உண்டு. புதுப் புது உணவு வகைகளை சமைத்து பார்ப்பேன். ஆனால் வியாபாரம் செய்யவேண்டும் என்கிற எண்ணம் எனக்கு ஏற்பட்டதில்லை. காரணம் வியாபாரக் குடும்பத்திலிருந்து (I AM NOT FROM BUSINESS FAMILY) வந்தவளல்ல நான். என் பெற்றோர்கள் அரசு ஊழியர்கள். ஆனால் விதி என்கிற ஒன்று இருக்கிறதே…? என்னுடைய குழந்தையின் எதிர்காலத்திற்காக வியாபாரத்தில் இறங்க வேண்டியிருந்தது. கிட்டத்தட்ட ஒரு வருடம் அதாவது 365 நாட்களும் ஓயாமல் PWD அலுவலகத்துக்கு என் மகனை தூக்கிக்கொண்டு இதற்காக அனுமதி பெற நடந்தேன்” என்கிறார் பேட்ரீசியா.

மெரீனா தான் பிசினஸ் ஸ்கூல்

கடை ஆரம்பித்த முதல் நாள் 50 பைசாவுக்கு காபி விற்ற இவர் தற்போது சென்னையில் 14 இடங்களில் உள்ள தனது குழுமத்தின் ரெஸ்டாரன்ட்கள் மூலம் தினசரி பல லட்சங்களை டர்ன் ஓவர் செய்கிறார்.

“மெரீனா தான் என்னுடைய பிசினஸ் ஸ்கூல். எம்.பி.ஏ. எல்லாம்” என்கிறார் சிரித்துக்கொண்டே.

“ஜூன் 21, 1982 என் வாழ்க்கையில் மறக்க முடியாத நாள். ஆம் அன்று தான் முதன் முதலாக நான் தள்ளுவண்டியில் என் பொருட்களை வைத்துக்கொண்டு மெரினாவுக்குள் நுழைந்தேன். மிகவும் திரில்லிங்கான அனுபவம் அது.”

“அப்போதெல்லாம் இது போன்ற தள்ளிவண்டிகளில் சிகரெட்டும், டீயும் தான் விற்பார்கள். நான் கட்லெட்டுகள், சமோசா, பஜ்ஜி, பழச் சாறு, காபி, டீ என அனைத்தையும் விற்றேன்.”

முதல் நாள் கிடைத்த வருவாய் = 50 காசுகள்

“முதல் நாள் எனது விற்பனை என்ன தெரியுமா? ஒரே ஒரு காபி! அதுவும் 50 காசுகள் தான் அதில் கிடைத்தது. இதனால் மனமுடைந்த நான் அழுதபடியே வீட்டுக்கு வந்தேன்.வியாபாரத்தை தொடரவேண்டாம் என்று முடிவு செய்தேன். “ஒரே ஒரு காபியையாவது விற்க முடிந்ததே. அதுவே நல்ல அறிகுறி தான்” என்று அம்மா தான் எனக்கு ஆறுதல் கூறி வற்புறுத்தி என்னை மீண்டும் மெரினாவுக்கு போகச் சொன்னார்கள்.”

“முதல் நாள் எனது விற்பனை என்ன தெரியுமா? ஒரே ஒரு காபி! அதுவும் 50 காசுகள் தான் அதில் கிடைத்தது. இதனால் மனமுடைந்த நான் அழுதபடியே வீட்டுக்கு வந்தேன்.

“அடுத்த நாள் நம்பமாட்டீர்கள் ரூ.600 க்கு என்னால் வியாபாரம் செய்ய முடிந்தது. அது எனக்கு மிகப் பெரிய தொகை. அதற்கு பிறகு ஐஸ்க்ரீம், சான்ட்விச், ப்ரெஞ்ச் ப்ரைஸ், இப்படி நான் விற்கும் ஐட்டங்களின் எண்ணிக்கையை கூட்டிக்கொண்டே போனேன்.”

“இப்படி தள்ளுவண்டியிலேயே பல ஆண்டுகள் கடை நடத்தினேன். அதிகபட்சம் ரூ.25,000/- வரை நான் விற்பனை செய்திருக்கிறேன். அன்று பந்த் தினம். ஆகையால் விற்பனை களைகட்டியது.”

பீச்சில் தனியாக வியாபாரம் செய்வதற்கு நான் அச்சப்பட்டதில்லை

“தினமும் எனது கடை பிற்பகல் 3 மணி முதல் இரவு 11 மணி வரை இருக்கும். பின்னர் அதிகாலையில் வாக்கிங் செல்பவர்களுக்காக காலை 5.00 முதல் 9.00 வரை வியாபாரம் செய்தேன். நானே நேரடியாக கடையில் இருந்து தான் விற்பனை செய்வேன். இரவு நேரங்களில் பீச்சில் தனியாளாக நின்று வியாபாரம் செய்திருக்கிறேன். ஆனால் அது குறித்து நான் பயந்ததில்லை.”

“என் லட்சியமெல்லாம் என்னை நான் நிரூபித்து மேலும் மேலும் முன்னேற வேண்டும் என்பது தான். தோல்வியை நான் விரும்பவே இல்லை. நினைத்துப் பார்க்கவும் இல்லை. யாருடைய துணையும் இல்லாமல் என்னால் வெற்றி பெறமுடியும் என்கிற தீ எனக்குள் எரிந்துகொண்டிருந்தது. அதே போன்ற ஒரு நெருப்பு உங்களுக்குள்ளும் இருந்தால் நீங்கள் வெற்றிபெறுவதை இந்த உலகத்தில் தடுக்க எவராலும் முடியாது.”

எண்ணிய எண்ணியாங்கு எய்து எண்ணியார்
திண்ணியர் ஆகப் பெறின். (குறள் 666)

(பொருள் : ஒன்றைச் செய்ய எண்ணியவர் அதைச் செய்து முடிப்பதற்கு ஏற்ற மனஉறுதியை உடையவராக இருந்தால், அடைய நினைத்தவற்றை எல்லாம் அவர் எண்ணப்படியே அடைவார்.)

வாக்கிங் வந்தவர் கொடுத்த வாய்ப்பு

“பீச்சில் எனது பணியை பார்த்த ‘குடிசை மாற்று வாரியம்’ அவர்கள் அலுவலகத்தில் எனக்கு கேண்டீன் வைக்க அனுமதியும் இடவசதியும் செய்து தந்தார்கள். குடிசை மாற்று வாரிய இயக்குனர் ஒரு நாள் காலை நடைபயிற்சி செய்யும்போது என்னை கவனித்திருக்கிறார். அதைத் தொடர்ந்து தான் அந்த அரிய வாய்ப்பு எனக்கு கிடைத்தது.”

குடிசை மாற்று வாரிய இயக்குனர் ஒரு நாள் காலை நடைபயிற்சி செய்யும்போது என்னை கவனித்திருக்கிறார். அதைத் தொடர்ந்து தான் அந்த அரிய வாய்ப்பு எனக்கு கிடைத்தது.

“குடிசை மாற்று அலுவலகத்தில் புதன் கிழமை தோறும் குறைதீர்ப்பு முகாம் நடைபெறும். அப்போது கிட்டத்தட்ட 3000 பேருக்கும் குறையாமல் வருவார்கள். அதனால் புதன்கிழமை தோறும் எனக்கு ஜாக்பாட் தான்.”

“தினமும் காலை 5.00 மணிக்கு எழுந்து, இட்லி வார்த்து பீச்சுக்கு எடுத்துச் செல்வேன். அங்கு அதை விற்றுவிட்டு, 9.00 am கேண்டீனுக்கு வருவேன். பின்னர் மறுபடியும் 3.30க்கு பீச்சுக்கு செல்வேன். அந்த நேரத்தில் தான் சமைப்பதற்கு, பாத்திரம் துலக்குவதற்கு, என்று என் பணிகளில் துணை செய்ய ஆட்களை சம்பளத்திற்கு  அமர்த்தினேன். இந்த காலகட்டங்களில் என்னுடைய வருவாய் ரூ.20,000/- ஆக இருந்தது. அதற்கு பிறகு மதுரா வங்கியில் கேண்டீன் வைக்கும் வாய்ப்பு கிடைத்தது. தினசரி 300 பேர் என் கேண்டீனில் சாப்பிட்டார்கள்.”

கணவருடன் ஏற்பட்ட சண்டை பெற்று தந்த வாய்ப்பு

“ஒரு நாள் என் கணவருடன் சண்டை ஏற்பட்டு (அவர் அடிக்கடி எனக்கு ஏதாவது தொல்லை கொடுப்பார்) கோபித்துக்கொண்டு ஒரு பஸ் ஏறி, பேசாமல் அமர்ந்துவிட்டேன். அந்த பஸ் கடைசீயாக எங்கு நின்றதோ அங்கு தான் இறங்கினேன்.”

“நான் இறங்கிய  துறைமுக மேலாண்மை கழக (National Port Management training school) அலுவலகம் இருந்தது. நீராக செக்யூரிட்டியிடம் சென்று உங்கள் மேலாளரை சந்திக்கவேண்டும் என்றேன். கடும்போராட்டத்திற்கு பிறகு எனக்கு அனுமதி கிடைத்தது. அவரை சந்தித்து நான் கேட்டரிங் செய்து வரும் விஷயத்தை கூறி, எனக்கு வாய்ப்பு கொடுக்குமாறு கேட்டேன். அவரும், இதே போன்று தற்போது கேட்டரிங் செய்து வரும் நபருடன் பிரச்னை என்பதால் தாங்களும் கேட்டரிங் செய்ய வேறு ஒரு நபரை எதிர்பார்த்துக்கொண்டிருப்பதாக கூறியபோது எனக்கு ஆச்சரியம்.”

“எனக்கு உடனடி ஆஃபர் கிடைத்தது. சுமார் 700 மாணவர்களுக்கு தினசரி மூன்று வேலையும் உணவு சப்ளை செய்யும் பொன்னான வாய்ப்பு அது. நாங்கள் தங்குவதற்கு எனக்கு குடியிருப்பு ஒன்றை ஒதுக்கி தந்தார்கள். (STAFF QUARTERS).  எனக்கு அது ஒரு புது வாழ்வு. ஆரம்பித்த நாள் முதல் அது வெற்றிகரமாக செயல்பட தொடங்கியது.”

“எனக்கு வாரந்திர பேமென்ட் எவ்வளவு தெரியுமா? சுமார் ரூ.80,000/-. நூறுகளையும் சில ஆயிரங்களையும் மட்டுமே பார்த்து வந்த நான் சந்தோஷத்தில் வானில் பறந்தேன். ஒவ்வொரு வாரமும் சராசரியாக லட்ச ரூபாய் வருவாய் வந்தது.”

“எனக்கு வாரந்திர பேமென்ட் எவ்வளவு தெரியுமா? சுமார் ரூ.80,000/-. நூறுகளையும் சில ஆயிரங்களையும் மட்டுமே பார்த்து வந்த நான் சந்தோஷத்தில் வானில் பறந்தேன். ஒவ்வொரு வாரமும் சராசரியாக லட்ச ரூபாய் வருவாய் வந்தது.”

அப்போதெல்லாம் எல்லாவற்றையும் நாமே செஞ்சால் தான் எல்லாம் நல்லபடியா நடக்கும் என்று நினைப்பேன். இப்போது, பணியாட்களுக்கு உரிய பயிற்சி கொடுத்தால் அவர்கள் வெகு சிறப்பாக செய்வார்கள் என்பதை புரிந்துகொண்டு பொறுப்புக்களை பிரித்து கொடுத்துள்ளேன்.

மோசமடைந்த கணவரின் நடத்தை

விரைவில் சென்னையில் பல இடங்களில் அலுவலகங்களில் கேண்டீன் வைக்க ஏலம் எடுத்தார். 1998 ஆம் நெல்சன் மாணிக்கம் சாலையில் உள்ள சங்கீதா குழுமத்தின் இயக்குனர்களில் ஒருவரானார். வருவாயும் பெருகியது. குழந்தைகளும் வளர்ந்தார்கள்.

ஆனால் கணவரின் நடத்தை மோசமடைந்துகொண்டே சென்றது. இவர் குடிக்க பணம் தரவில்லை என்றால் அடிப்பது,  உதைப்பது, சிகரெட்டில் சூடு வைப்பது என்று இவருக்கு டார்ச்சர் அதிகமானது. பணம் தரவில்லை என்றால் “நான் வீட்டை விட்டு போறேன்” என்று கூறி எங்காவது சென்று தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்துவிட்டு இரண்டு மூன்று மாதம் கழித்து வருவாராம். அடிக்கடி இது போல நடக்க, ஒரு முறை இவ்வாறு சென்றவர் சென்ற இடத்தில் நோய்வாய்ப்பட்டு இறந்துவிட்டார்.

மகளை பறித்த விதி

அனைத்தும் முடிந்து போய், பேட்ரீசியா வாழ்க்கை மீண்டும் துவங்கிய நேரம் –  மகள் பிரதீபா சான்ட்ரா – (கல்லூரிப் படிப்பை அப்போது தான் முடித்து புதிதாக திருமணமாகியிருந்தார்) காரில் பயணம் செய்யும்போது கார் விபத்துக்குள்ளாகி கணவருடன் ஸ்பாட்டிலேயே இறந்துவிட்டார். ஆசை மகளும் மருமகனும் ஒரே நேரத்தில் இவரை விட்டு பிரிந்துவிட்டனர். விபத்தில் இவரது மருமகனின் சகோதரி மற்றும் அவர் கணவரும் பலியாகிவிட்டனர். நொறுங்கிப் போனார் பேட்ரீசியா.

ஆசை மகளும் மருமகனும் ஒரே நேரத்தில் இவரை விட்டு பிரிந்துவிட்டனர். விபத்தில் இவரது மருமகனின் சகோதரி மற்றும் அவர் கணவரும் பலியாகிவிட்டனர். நொறுங்கிப் போனார் பேட்ரீசியா.

“விபத்து நடப்பதற்கு கொஞ்ச நேரம் முன்னர் தான் அவள் என்னை தொலைபேசியில் கூப்பிட்டாள். ‘அம்மா பிரியாணியும் பாயசமும் பண்ணி வைம்மா. செங்கல்பட்டு கிட்டே வந்துக்கிட்டுருக்கோம்’ என்று சொன்னாள். மேற்கொண்டு பேச முடியாது கண்களில் நீர் அரும்புகிறது. (நமக்கும்).

“மனதளவில் நொறுங்கிப்போன நான் அதுவரை செய்துகொண்டிருந்த அனைத்தையும் நிறுத்தினேன். நான் இயல்பு நிலைக்கு திரும்ப சில காலம் பிடித்தது.”

“அதற்கு பிறகு என் மகன் பிரவீன் பொறுப்புக்களை ஏற்றுக்கொள்ள என் மகள் நினைவாக ‘சந்தீபா’ ரெஸ்டாரன்ட் துவக்கப்பட்டது. இப்போது நான் முழுக்க முழுக்க பிசினஸில் கவனம் செலுத்தி வருகிறேன். மறுபடியும் வெற்றிபெறவேண்டும் என்கிற தீ கனன்று எரிய ஆரம்பித்துவிட்டது.”

“என்னுடைய மகளின் பிரிவிலிருந்து இன்னும் நான் மீண்டு வரவில்லை. காரணம் என்னுடைய குழந்தைகளுக்காகவே நான் வாழ்ந்தேன். அவர்களை வளர்த்து ஆளாக்கி அழகு பார்க்கும் நேரத்தில் விதி விளையாடிவிட்டது.”

“என்னை மிகவும் பாதித்தது என்னவென்றால் ஆம்புலன்ஸ் ஓட்டுனர்கள் அந்த நேரத்தில் நடந்துகொண்ட விதம். காரில் உள்ள நான்கு பேரும் இறந்துவிட்டதை கண்ட அவர்கள், சடலங்களை நாங்கள் தூக்க மாட்டோம் என்று மறுத்துவிட்டனர். கடைசீயில் யாரோ ஒருவர் கார் டிக்கியில் நான்கு பேரின் உடல்களையும் அள்ளிப்போட்டுக்கொண்டு வந்தார். டிக்கியிலிருந்து உடல்களை ஒவ்வொன்றாக உருவி போடுவதை பார்த்து நான் நொறுங்கிப் போய்விட்டேன்.”

“எந்த தாயால் இப்படி ஒரு துயரத்தை தாங்கிக்கொள்ளமுடியும்? எனவே தான் விபத்து நடந்த இடத்தில் ஆம்புலன்ஸ் ஒன்றை வாங்கி நிறுத்தியிருக்கிறேன். பாதிக்கப்பட்டவர்கள் உயிரோடு இருந்தாலோ அல்லது இல்லை என்றாலோ அவர்களுக்கு நிச்சயம் அது உதவியாக இருக்கும். என் மகளின் நினைவாக இதை செய்திருக்கிறேன்.”

“மெரினாவில் கடையை நான் விட்டிருக்க கூடாது. 2003 இல் நான் அதை விற்றபிறகு தான் என்னை துரதிர்ஷ்டம் பிடித்து உலுக்க ஆரம்பித்தது!” என்கிறார்.

“இரண்டு இரண்டு பேரோடு இந்த தொழிலில் நான் இறங்கினேன். இன்று எனது ரெஸ்டாரன்ட்களில் 200 பேர் பணிபுரிகின்றனர். என்னுடைய வாழ்க்கைத் தரமும் மாறிவிட்டது. சைக்கிள் ரிக்ஷாவில் சென்ற நான் பின்னர் ஆட்டோவில் சென்றேன். தற்போது என்னக்கு சொந்தமாக கார் இருக்கிறது. 50 காசு வருமானம் தற்போது நாளொன்றுக்கு பல லட்ச ரூபாயாக உயர்ந்திருக்கிறது.”

“இத்தனை ஆண்டுகள் நான் உழைத்த உழைப்புக்கு கிடைத்த பரிசு தான் இந்த FICCI – Federation of Indian Chambers of Commerce and Industry வழங்கிய BEST WOMAN ENTREPRENEUR “சிறந்த பெண் தொழில் முனைவோர்” விருது”.

சைக்கிள் ரிக்ஷாவில் சென்ற நான் பின்னர் ஆட்டோவில் சென்றேன். தற்போது என்னக்கு சொந்தமாக கார் இருக்கிறது. 50 காசு வருமானம் தற்போது நாளொன்றுக்கு பல லட்ச ரூபாயாக உயர்ந்திருக்கிறது.

“இந்த விருதை பெற்ற நேரம்  கடந்து வந்த பாதையை ஒரு முறை திரும்பி பார்க்கிறேன். தற்போது சந்தீபா என்ற பெயரை ஒரு மிகப் பெரிய பிராண்டாக மாற்ற முயற்சித்துவருகிறேன்.”

========================================================

பேட்ரீசியா அவர்களின் வாழ்க்கை நமக்கு உணர்த்தும் பாடம் என்ன?

வெற்றி என்பது ஒரு உங்கள வாழ்நாள் முழுதும் உங்களிடம்  தங்கியிருக்கும்,உங்கள் அந்தஸ்த்தோ அல்லது சொத்தோ அல்ல. ஒரு மகத்தான சாதனையின் உச்சமும் அல்ல.

வெற்றி என்பது ஒரு தொடர் பயணம். நம் ஆற்றும் செயலில் நமது பயணத்தில் நம் முழு பலம், நம் POTENTIAL, DETERMINATION, அற்பணிப்பு, இவை அனைத்தையும் செலுத்தி எந்த சூழ்நிலையிலும் கலங்காது எந்த பொருட்படுத்தாது மேலும் மேலும் முன்னேறி செல்வது. இது தான் வெற்றி. செல்லும் பாதையில் நமது போராட்டம் தான் நமது வெற்றியை நீண்ட காலம் தக்கவைத்திருக்கும்.

அதே போல வலி அதாவது துன்பம் என்பது வாழ்க்கையில் தவிர்க்க இயலாதது. நமக்கு தனிப்பட்ட வாழ்க்கையில் ஏற்படும் சோகங்களும் வலிகளும் நமது பயணத்தை தடுக்கக்கூடாது.

ஏனினில், வாழ்க்கை என்பதே ‘நகர்தல்’ தான். அதில் முடங்குதல் என்பது தான் உண்மையான ‘மரணம்’. எனவே எந்த சூழ்நிலையிலும் நீங்கள் முடங்கவே முடங்காதீர்கள்.

பேட்ரீசியா அவர்களை பொறுத்தவரை அவரின் மகளின் மரணம் அவரது பயணத்தை தற்காலிகமாக நிறுத்தியதே தவிர முடக்கிவிடவில்லை. அங்கே தான் அவர் வெற்றி பெறுகிறார்.

அதே போல, வெற்றிகரமான ஒரு தொழில் முனைவோர் ஆகவேண்டும் என்றால் (Successful Entrepreneur) நீங்கள் அதிகம்  படித்திருக்க வேண்டியதில்லை. உங்களுக்கு தேவையெல்லாம் எந்த சூழ்நிலையிலும் உங்கள் லட்சியத்தின் உங்கள் மீது கனவின் மீது நீங்கள் வைக்கும் அசையாத நம்பிக்கையும், சோதனையை கூட சாதனையாக மாற்றும் பக்குவமும், இறுதி வெற்றியை  பொறுமையும் தான்! விதி நீங்கள் அழுவதற்கு 10 காரணங்களை பட்டியலிட்டால், பதிலுக்கு சிரிப்பதற்கு நீங்கள் 100 காரணங்களை பட்டியலிடுங்கள்.

அடுக்கி வரினும் அழிவிலான் உற்ற
இடுக்கண் இடுக்கட் படும். (குறள் 625)

பொருள் : விடாமல் மேன் மேலும் துன்பம் வந்தபோதிலும் கலங்காமலிருக்கும் ஆற்றலுடையவன் அடைந்த துன்பமே துன்பப்பட்டு போகும்.

பேட்ரீசியா நாராயணின் சாதனை சரித்திரம் லட்சக்கணக்கான பெண்களுக்கு ஒரு கலங்கரை விளக்கம் என்றால் மிகையாகாது. தங்களை சொல்லொண்ணா கொடுமைக்கு உட்படுத்தும் குடும்ப உறவுகளின் விலங்குகளை தகர்த்தெறிந்து அவர்கள் தங்களின் முன்னேற்றப்பாதையில் அடியெடுத்து வைக்க நிச்சயம் அவர் கதை ஒரு உந்துதலாய் இருக்கும்!!

வாழ்க்க பெண்மை! வளர்க தியாகம்!! எழுக பாரதம்!!!

(பேட்ரீசியா அவர்களின் பிற புகைப்படங்கள் உதவி : The Hindu, Rediff.com)

========================================================

என்ன நண்பர்களே… பேட்ரீசியா அவர்களின் வெற்றி சரித்திரத்தை படித்தீர்களா?

சரி… இதன் மூலம் நீங்கள் கற்றுக்கொண்டது என்ன?

வாழ்க்கை குறித்தும் உங்கள் லட்சியப் பயணம் நீங்கள் தற்போது எடுத்துக்கொள்ளும் உறுதி மொழி என்ன?

தயவு கூர்ந்து இங்கு தெரியப்படுத்துங்கள்!!

[END]

13 thoughts on “50 காசுகள் to லட்சங்களை புரட்டும் சங்கிலி தொடர் உணவகங்கள் – ஒரு மெழுகுவர்த்தியின் பயணம்!

  1. என்ன சொல்லி முன்னுரை கொடுப்பது.
    நீங்கள் பட்டியல் போட்ட எல்லா பாயிண்டுமே அவர்களுக்கு பொருந்தும்.
    எனக்கு மட்டுமே ஏன் கடவுள் சோகத்தை கொடுக்கிறான் என்று அடிக்கடி நினைக்கும் பல பேருக்கு பாடம் சொல்லி கொடுத்துள்ளிர்கள்.
    நிறைய இடங்களில் கண் கலங்கி விட்டது.
    கடந்த கால சோகமும் வருங்காலத்தை பற்றிய பயமும் சேர்த்து மனதை நிரப்பிடுசின்னா நிகழ்காலம் நாம் உணரதுக்குளே கரைந்து போய் விடும்.
    அதனால் நிகழ்காலத்தை மட்டுமே நினைத்து ஒரு ஒரு படியாக ஏறி சிகரம் தொட்டுள்ளார்
    தாக்கிய சோகத்தை தடை என எண்ணாமல் தகர்த்து எறிந்த அவரின் மனோதைரியம் பாராட்ட தக்கது.
    மலை அளவு கஷ்டம் இருப்பவர்களுக்கு கூட இவரின் வாழ்க்கை கதை நிமிர்ந்து நிற்க செய்யும்
    நிறைய பெண்களுக்கு இவர் ஒரு ரோல் மாடல்

  2. சுந்தர் சார் வணக்கம்

    ரைட்மந்த்ரா.காம்க்கு ஒரு SALUTE.

    தங்களின் பதிவை எதிர்பார்த்து இருந்தன் சார்..

    யாருடைய துணையும் இல்லாமல் தன்னால் வெற்றி பெறமுடியும்.. (யாருடைய துணை இல்லாமல் மேல வரும்போது அவர்கள் அடைந்த வேதனை அவர்கள் மட்டுமே தெரியம்). என்ற நம்பிக்கை மட்டுமே அவர்களை சிகரத்தில் அமத்தியிருக்கு சார்.

    அவர்களுடைய வாழ்க்கைப்பாடம் நம்ம எல்லோர்க்கும் போதி மரம் சார்..

    நம்முடைய பிரச்னைகள் மட்டுமே பெரியது என்று நினைபவர்கள் இவர்களை பார்த்து கற்றுக் கொள்ள வேண்டும் வேண்டும் சார்..

    தங்களின் மூலம் இவர்களை பற்றி அறிந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தமைக்கு எப்படி நன்றி சொல்வது என்றை தெரியல சார்

    வாழ்க்கை என்பதே ‘நகர்தல்’ தான். அதில் முடங்குதல் என்பது தான் உண்மையான ‘மரணம்’.

    அருமையான வாசகம் ஒவ்வொருவரும் இதை பின் பற்ற வேண்டும்..

    நன்றி..

  3. சுந்தர்ஜி ,

    “வாழ்க்கை என்பதே ‘நகர்தல்’ தான். அதில் முடங்குதல் என்பது தான் உண்மையான ‘மரணம்’. எனவே எந்த சூழ்நிலையிலும் நீங்கள் முடங்கவே முடங்காதீர்கள். விதி நீங்கள் அழுவதற்கு 10 காரணங்களை பட்டியலிட்டால், பதிலுக்கு சிரிப்பதற்கு நீங்கள் 100 காரணங்களை பட்டியலிடுங்கள். ” க்ரேட் சுந்தர்ஜி. திருமதி பேட்ரீசியா நாராயணின் கதையை படித்ததும் தன்னம்பிக்கையும் கண்ணீரும் சேர்ந்து வந்துவிட்டது. பதிவை பாராட்ட வார்த்தைகளை தேட வேண்டியது ஆயிற்று. எப்பேர்பட்ட எதிர்ப்பு வந்தாலும் நேர்மையும் தன்னம்பிக்கையும் தளராத முயற்சியும் வெற்றிக்கு சரியான ஊன்றுகோல் என்பதை திருமதி பேட்ரீசியா நாராயணின் வெற்றி நம் எல்லோருக்கும் புரிய வைத்துவிட்டது. கூடவே புரிதல் இல்லாத காதலின் விளைவு மக்களுக்கு புரியவும் அவரது வாழ்வு ஒரு பாடம் . மிக சரியான நபரை நமக்கு தேடித்தர சுந்தர்ஜி பட்ட பாட்டுக்கும் அவர்க்கு துணை புரிந்த நண்பர்களுக்கும் என் மனமுவந்த பாராட்டுகளும் நன்றிகளும்.

  4. சுந்தர் சார்,

    ‘தெய்வத்தான் ஆகாதெனினும் முயற்சி தன் மெய் வருத்தக் கூலி தரும்’

    திருமதி பேட்ரீசியா அவர்கள் அவருடைய முயற்சி விடாமல் மேன் மேலும் செய்த விடா முயற்சிதான் பலன் தந்துள்ளது.

    இப்படி பல இன்னல்களுக்கு பின்னல் வாழ்கையில் இன்பம் கிடைப்பதும் அல்லது இன்பமான வாழ்க்கை பெறுவதற்கு கஷ்ட படுவதும் விதியின் விலைவா அல்லது காலத்தின் கட்டளையா அல்லது தெய்வத்தின் விளையாட்டா … !

    இவற்றில் திருமதி பேட்ரீசியா அவர்கள் எல்லாம் கடந்து விட்டார் இனி எந்த துன்பம் வருவதற்கும் இனி தயங்கும்.

    அவர்கள் சந்தித்த சில துளி இன்னல்கள் தான் உங்களையும் அவரை சந்திக்க விடாமல் தடுத்தது என்று நினைகிறேன். அந்த வெற்றி தான் நாங்கள் இந்த தளம் மூலம் பகிர்ந்து கொள்கிறோம்.

    இந்த பதிவு, கூட்டில் இருக்கும் குட்டிகளுக்கு இறை கொடுக்கும் அதன் தாய் பறவையாய் நீங்கள் இருப்பதாக நான் நினைக்கிறன்.

    இதைவிடா என்னால் சொல்ல வார்த்தை இல்லை.

    நன்றியுடன் அருண்

  5. ஒரு மனிதன் வெற்றியாலனாக மாறவேண்டும் என்றால் முதலில் இந்த உலகத்தை நன்றாக புரிந்துகொள்ள வேண்டும்,அப்படி புரிந்துகொள்ள தேவை, ஒவ்வொரு மனிதனுக்கும் பயங்கர சோதனைகள், அதன் மூலம் அவன் தன்னை தான் அறிதல் வேண்டும்,

    இதைத்தான் ஆண்டவன் நல்லவர்களை சோதிப்பான் ஆனால் கைவிடமாட்டான் என சூப்பர்ஸ்டார் ரஜினி சொலியுள்ளார். ஆனால் சோதனைகளை தாங்க முடியாமல் சிலர் தற்கொலைக்கு முயல்கின்றனர் இது தவறு.. அதை எப்படி சாதனையாக மாற்றுவது என புரிதல் வேண்டும்..இதைத்தான் திருமதி பேட்ரீசியா அவர்கள் நிரூபித்துள்ளார்கள்

    வாழ்க்கையின் அடிமட்ட சோதனைக்கு சென்ற ஒருவனுக்கு ,மானம்,அவமானம்,இரவு பகல் என ஒன்றுமே தெரியாது. அவனுக்கு தெரிந்த ஒன்றே ஒன்று வெற்றி மட்டும் தான் இருக்கவேண்டும் அந்த வெற்றி எப்படிப்பட்ட வெற்றியகவும் இருக்கலாம் ஆனால் அது நேர்மையாக இருக்கவெண்டும்.

    இந்த எண்ணம் வந்துவிட்டால் அதை செயலில் காட்ட தொடங்கிவிட்டால், இதுதான் அவனுக்கு வெற்றி கோட்டையின் முதல் படி. இதே நிலையில் அவன் தொடர்ந்து இருந்தால் அந்த கோட்டையின் உச்சிக்கு செல்வது மிக சுலபம் …

    நல்லதொரு பதிவை கொடுத்தமைக்கு நன்றி!

  6. //விதி நீங்கள் அழுவதற்கு 10 காரணங்களை பட்டியலிட்டால், பதிலுக்கு சிரிப்பதற்கு நீங்கள் 100 காரணங்களை பட்டியலிடுங்கள்// – அழகான மற்றும் ஆழமான வரிகள் சுந்தர் அண்ணா …

    -ஜி.உதய்..

  7. தங்கள் முன்னுரை எழுத பயந்ததை போல, முன்னேற முயற்சிக்கும், புதுவழி அமைக்க எண்ணும் எவர்க்கும் …. நன்றி என மட்டும் தங்களுக்கு சொல்ல பயம் வரும், புது ஊக்க மருந்து உண்ட நன்றியுடன்… நாம்.

  8. படிக்கும் போது கண்களில் கண்ணீரும் வருகிறது ,அதே போல் மனதில் தன்னம்பிக்கையும் பிறக்கிறது.

    குடிகார கணவன் அவரையும் சகித்து கொண்டு ,இன்று இந்த அளவு சாதித்து உள்ளார்கள் திருமதி. பேட்ரீசியா அவர்கள் ,இவர் பல பெண்களுக்கு மிக பெரிய முன்னுதாரணம்

  9. சாதனையாளர்களை சந்திப்பது என்பது மிகப்பெரிய சாதனை, இதில் அவர் மேலும் பல பல சாதனைகள் படைப்பார் என்பதில் ஐயம் இல்லை.
    பேட்டி நேரத்தில் rightmanthra .com சார்பாக வாரவாரம் பிரார்த்தனை கிளப் மூலம் அனைவருக்காகவும் பிரார்த்தனை செய்வதாகவும் தெரிவித்தார் .
    இது சுந்தர் அவர்களின் தன் நலம் இல்லாத சேவையை காட்டுகிறது.
    எங்கள் தளத்தில் புனித வெள்ளிக்கு சிறப்பு பதிவிட்டமை பெருமைடன் பகிர்ந்து கொண்டு, JESAS அவர்களை நினைவு படுத்தினார் .
    திருமதி பேட்ரீசியா அவர்களை JESAS வழிநடத்துகிறார் என்பது, சுந்தர்ஜி எடுத்துள்ள புகைப்படத்தில் JESUS ஆசிர்வதிப்பது போல் அமைந்துள்ளது .
    சுந்தர் ஜி ,அம்மையாரிடம் ஆசிபெற பேப்பர் ஒன்றை போட்டு விட்டு எடுப்பது போல் ஆசி பெற்றது அவரின் பணிவு என்னை நெகிழவைத்தது.
    அவர்களின் அனுபவங்களை நேரில் கேட்கும் போது , மிகுந்த அதிர்வுகள் நான் உணர்ந்தேன் .
    அன்று முதல் என்னுடைய NAGATIVE எண்ணங்கள் என்னிடம் வராமல் பார்த்து கொள்கிறேன் .

    \\\அதே போல வலி அதாவது துன்பம் என்பது வாழ்க்கையில் தவிர்க்க இயலாதது. நமக்கு தனிப்பட்ட வாழ்க்கையில் ஏற்படும் சோகங்களும் வலிகளும் நமது பயணத்தை தடுக்கக்கூடாது.\\\

    -படிக்க படிக்க FULL RECHAGE தான்..

    நன்றியுடன் மனோகர் .

  10. பேச்சினிடையே நாங்கள் சாப்பிடுவதற்கு கேக்கும், காபியும் வந்தது. கேக்கில் BIRTHDAY எழுத்துக்கள் காணப்பட்டது . ஆம் அன்று தான் அவர்கள் பர்த்டே என்று சொன்னார்கள் .ஹப்பி BIRTH DAY வாழ்த்து சொல்லிவிட்டு, அவரின் சாதனைகளை மலைப்புடன் சுமந்துவந்தோம் .

  11. சோதனைகளை சாதனைகளாக்கும் யுக்தி சில பேருக்கு தான் கைவரப்பெறும் – விடா முயற்சியோடும் மன உறுதியோடும் தொடர்ந்து முயன்றால் வெற்றி நிச்சியம் இது வேத சத்தியம் – இன்று சமூகத்தில் உயர்ந்த நிலையில் இருக்கும் ஒவ்வொருவருக்கு பின்னால் பல்வேறு வலி வேதனை அவமானங்கள் புதைந்து கிடக்கின்றன – எவரொருவர் வாழ்கையில் எவ்வளவு உயரத்துக்கு சென்ற பின்பு கூட தாம் கடந்து வந்த கடினமான பாதையினை மறக்காமல் தன்னை அறிந்து தன் நிலை உணர்ந்து தமக்கு நேர்ந்த துன்பங்கள் இனி எவர் ஒருவர்க்கும் நேரக்கூடாது என்று கருதுகிறாரோ அவரே மக்கள் மனம் என்னும் சிம்மாசனத்தில் என்றென்றும் வீற்றிருப்பார் – ஆரம்பத்தில் ஒரு சிறு தள்ளு வண்டியில் ஆரம்பித்து இன்று பல பேருக்கு வேலைவாப்பை அளிக்கும் மாபெரும் உணவகங்களுக்கு தலைமை பொறுப்பு ஏற்று அதனை சீரோடும் சிறப்போடும் நடத்தி சோதனைகளை சந்திக்கும் துவண்டு தவறான முடிவெடுக்கும் பலருக்கும் ஒரு அருமையான முன் உதாரணமாக விளங்கும் திருமதி பேட்ரீசியா அவர்களின் வாழ்க்கை அனைவருக்கும் ஒரு நல்ல பாடமாக விளங்குகிறது !!!

    விதியோடும் வாழ்க்கையோடும் போராடிய ஒரு போராளியை நமக்கு அடையலாம் காட்டியமைக்கு மிக்க நன்றி !!!

  12. Inspiring and realistic. Salutes n hats off to this Bold Lady. Shocked to hear her History. 

    Ini Thaan Aarambam! Nalladhey nadakum! Vetri Nichayam !! _/\_

  13. சுந்தர் சார்
    வாழ்க்கை என்பதே “நகர்தல்” தான். அதில் முடங்குவது என்பது தான் உண்மையான மரணம் என்ற உங்கள் வார்த்தைகள் மிக மிக வலிமை. மிக மிக உண்மை.

Leave a Reply to ARUNOTHAYAKUMAR Cancel reply

Your email address will not be published. Required fields are marked *