Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Thursday, April 18, 2024
Please specify the group
Home > Featured > இறைவனின் தரிசனம் கிடைக்குமென்றால் எத்தனை ஆண்டுகள் உங்களால் காத்திருக்க முடியும்?

இறைவனின் தரிசனம் கிடைக்குமென்றால் எத்தனை ஆண்டுகள் உங்களால் காத்திருக்க முடியும்?

print
ரண்டு பெரிய சிவபக்தர்கள் சிவனருள் வேண்டி ஒரு பெரிய மரத்தின் கீழ் அடிக்கடி தியானத்தில் ஈடுபட்டு வந்தனர். ஒரு நாள் அவ்வழியே ஒரு ரிஷி செல்வதை கண்டனர். மிகப் பெரிய தவசீலரான அவர் கயிலைக்கு சிவபெருமானை தரிசிக்க  செல்கிறார் என்று தெரிந்து கொள்கின்றனர்.

அவரின் கால்களில் வீழ்ந்து நமஸ்கரித்து, “முனி சிரேஷ்டரே எங்களுக்காக நீங்கள் ஒரு உபகாரம் செய்யவேண்டும்” என்று அவரிடம் விண்ணப்பித்துக்கொண்டனர்.

“நாங்கள் இருவரும் பல ஆண்டுகளாக சிவபெருமானை நோக்கி தியானம் செய்துவருகிறோம். எங்களுக்கு எப்போது அவரது தரிசனம் கிடைக்கும் என்று மட்டும் அவரிடம் கேட்டு வந்து சொன்னால் போதும்…. நாங்கள் மகிழ்ச்சியடைவோம்…..” என்கின்றனர் இருவரும்.

“அப்படியே ஆகட்டும். நான் கயிலை சென்று திரும்பும்போது உங்களை வந்து பார்ப்பேன். எப்போது திரும்புவேன் என்று சொல்ல இயலாது. மாதங்களோ அல்லது ஆண்டுகளோ கூட ஆகலாம்” என்கிறார் ரிஷி.

“நீங்கள் வரும்வரையில் நாங்கள் காத்திருப்போம்” என்று இருவரும் கூற, ரிஷி சென்றுவிடுகிறார்.

சிவபெருமானிடம் இவர்களது கேள்விக்கான பதிலை பெற்றுக்கொண்ட பிறகு, பல்வேறு இடங்களுக்கு சஞ்சாரம் செய்யும் ரிஷி பல ஆண்டுகள் கழித்து மீண்டும் இவர்கள் தியானம் செய்துகொண்டிருந்த மரத்தடிக்கு வந்தார்.

ரிஷி என்ன சொல்லப்போகிறார் என்று இருவரும் ஆவலுடன் அவரை பார்க்க, முதலாமவனிடம், “இன்னும் பத்து ஆண்டுகள் நீ தியானம் செய்தால் சிவபெருமான் உனக்கு காட்சி கொடுப்பாராம்” என்று கூற… அதிர்ந்து போன அவன்…. “என்ன இன்னும் பத்தாண்டுகளா? ஏற்கனவே இந்த தியானத்தில் பல வருடங்கள் போய்விட்டது… இன்னும் பத்தாண்டுகள் வேறு காத்திருக்கவேண்டுமா? என்னால் இனி ஒரு கணம் கூட காத்திருக்க முடியாது” என்று அதிருப்தியுடன் கூறி துண்டை உதறி தோளில் போட்டுக்கொண்டு போய்விடுகிறான்.

இரண்டாமவனிடம் ரிஷி, “அவனுக்காவது பத்து ஆண்டுகள் என்று சொன்னார். ஆனால் உனக்கு இந்த மரத்தில் எத்தனை இலைகள்  இருக்கின்றனவோ இன்னும் அத்தனை ஆண்டுகள் நீ காத்திருந்தால் சிவபெருமான் உனக்கு காட்சி கொடுப்பதாக சொல்லியிருக்கிறார்!” என்று கூற, இரண்டாமவன் மகிழ்ச்சியில் ஆனந்தக் கூத்தாடுகிறான்.

இதைக் காணும் அந்த ரிஷிக்கு சற்றே குழப்படமடைகிறார். “நான் சொன்னதை நீ சரியாக புரிந்துகொள்ளவில்லை என்று நினைக்கிறேன். இந்த மரத்தில் ஆயிரக்கணக்கான இலைகள் உள்ளன. நீ இன்னும் அத்தனை ஆண்டுகள் பொறுத்திருந்தால் தான் சிவனை தரிசிக்க முடியும். சொல்லப் போனால் உன் ஆயுள் அதற்கு போதுமா அல்லது இன்னும் பல பிறவிகள் எடுத்தால் கூட போதுமா என்று எனக்கு தெரியாது…. அதை புரிந்துகொள்” என்று கூறுகிறார்.

“ஒ…ரிஷியே நீங்கள் சொல்வது எனக்கு புரிகிறது. சிவபெருமான் எனக்கு காட்சி தர எத்தனை ஆண்டுகள் ஆகும் என்பது பற்றி எனக்கு கவலையில்லை. என் மீது கருணை கொண்டு ஒரு நாள் எனக்கு காட்சி கொடுப்பேன் என்று சொன்னாரல்லவா… எனக்கு அதுவே போதும்!” என்றான் மகிழ்ச்சியுடன.

இந்த உரையாடலை கயிலையில் இருந்து கவனித்துக்கொண்டிருந்த சிவபெருமான் அடுத்த நொடி பார்வதி சமேதராய் இந்த பக்தனுக்கு காட்சி தந்து “எமது அருளை பெற விரும்புகிறவருக்கு முதலில் தேவை பொறுமை அடுத்தது நம்பிக்கை. உன்னிடம் இரண்டுமே நாம் மெச்சும்படி  உள்ளபடியால் உமக்கு உடனடியாக தரிசனம் தந்தோம்!” என்று கூறி நல்லருள் புரிந்தார். அவன் வேண்டிய வரங்களையும் தந்தார்.

பொறுமையின் காய் மிக மிக கசப்பானது. ஆனால் அதன் கனியோ இனிப்பானது.

நண்பர்களே…. பிரார்த்தனைகளை சமர்ப்பித்த பிறகு உங்கள் பொறுமையையும் நம்பிக்கையையும் இறைவன் நிச்சயம் சோதித்து பார்ப்பான். நம்பிக்கையுடனும் விழிப்புடனும் இருந்து அந்த சோதனையை வெல்லுங்கள். எந்த சூழ்நிலையிலும் அவநம்பிக்கை தலை தூக்க விடக்கூடாது.

“ஏற்கனவே நிறைய சோதனைகளை சந்திச்சாச்சு… இன்னும் சோதனைன்னா நான் என்ன சார் பண்ணுவேன்?” என்று எண்ண வேண்டாம். இறைவன் தன் பக்தர்களுக்கு தரும் சோதனைகளுக்கும் தீயவர்களுக்கு தரும் சோதனைகளுக்கும் நிறைய வேறுபாடு உள்ளது. அவன் உங்களுக்கு தரும் சோதனைகள் நிச்சயம் நன்மைக்கே. அத்தனையும் உங்களை புடம் போட்ட தங்கமாக மாற்றி ஒளிரச் செய்யத் தான். அது உங்களுக்கு இப்போது புரியாது.

முன்னே ஒரு பிரார்த்தனை பதிவுல சொன்னதுபோல, பாரத்தை அவன் மேல வெச்சாச்சு… நாம் ஏன் இன்னும் அதை சுமந்துகிட்டு அவஸ்தை படனும்? ரிலாக்ஸா இருங்க இறுதியாக உறுதியாக நல்லதே நடக்கும்!

இந்த வார பிரார்த்தனைக்கான கோரிக்கைகளை பார்ப்போமா?

முதல் கோரிக்கையை அனுப்பியுள்ள ராஜேஸ்வரி அவர்கள் நம்மிடம் பேசும்போதே அழுதுவிட்டார். நான் தான் மாற்றுத் திறனாளியாக பிறந்து கஷ்டப்படுகிறேன் என்றால் என் குழந்தையும் இப்படி பிறக்கவேண்டுமா என்று கதறுகிறார். அவருக்காக உள்ளம் உருக பிரார்த்தனை செய்வதை தவிர வேறு என்ன நாம் செய்ய முடியும்?

“உங்களை மகா பெரியவா தடுத்தாட்கொண்டிருக்கிறார். நிச்சயம் உங்கள் குழந்தையின் பிரச்னைக்கு நல்லதொரு வழி பிறக்கும்…” என்று அவருக்கு ஆறுதல் கூறி உடனடியாக அவர் செய்ய வேண்டிய எனக்கு தெரிந்த ஒரு பரிகாரத்தை சொல்லியிருக்கிறேன். மேலும் நேற்று தான் நமது தளத்தை முதலில் பார்த்திருக்கிறார். எனவே இதற்கு முன்பு பிரார்த்தனை பதிவுகளில் இடம்பெற்றுள்ள கதைகளை படித்து அதில் கூறப்பட்டுள்ள கருத்துக்களை மனதில் பதியவைத்துக்கொள்ளும்படி அவர்களிடம் கேட்டுக்கொண்டிருக்கிறேன். சுபமஸ்து!

===================================================
வணக்கம் சார்.

என் பெயர் ராஜேஸ்வரி. கரூரில் வசிக்கிறேன். என்னோட ரெண்டாவது குழந்தை ‘சாய் அக்ஷதா ஜெய ஸ்ரீ’. பிறக்கும் பொதே பிரச்சனையோட தான் அவ பிறந்தாள். தண்டுவட எலும்பு பாதிலயே நின்று விட்டது. காலோட சேர்கிற எலும்பு பிறக்கும் போதே, இல்லாம தான் பிறந்தாள.

இப்போ 1 yr and 3 month ஆகுது. இன்னும் நடக்கல. ரொம்ப கஷ்டமா இருக்கு.

வாழ்க்கையே வெறுத்து போன மாதிரி இருக்கு. அவ நடக்க எனக்காக பிரார்த்தனை பண்ணுங்க. கூகுளில் குழந்தை நடக்க ஸ்லோகம் தேடிட்டு இருந்தேன். அப்போ தான் இந்த WEBSITE பார்த்தேன். நான் பார்த்த முதல் வரியே “நடக்க முடியாது இருந்த குழந்தையை நடக்க வைத்த தெய்வம்!”  இது தான். எனவே நம்பிக்கையோட மெயில் பண்றேன். பாப்பா இடுப்புக்கு பலம் பெற, அவ காலுக்கு பலம் பெற, பாதத்துக்கு பலம் பெற வேண்டும். நானும் ஒரு மாற்று திறனாளி. என் பொண்ணூக்கும் அந்த நிலைமை வராமல் இருக்க போராடிட்டு இருக்கேன். எனக்காக பிரார்த்தனை பண்ணுங்க. முதல் பொண்ணு மதுமிதா எந்த குறையும் இல்லாம பிறந்தா. இப்போ அவ நான்காம் வகுப்பு படிக்கிறா. ரெண்டாவது குழந்தைக்கு மட்டும் இப்படி ஆயிடிச்சு. எனவே அவளுக்காக பிரார்த்தனை பண்ணுங்க.

நன்றி

ராஜேஸ்வரி & பன்னீர்செல்வம், கரூர்

=================================================
சுந்தர் மற்றும் ரைட் மந்த்ரா வாசகர்களுக்கு வணக்கம்….

நான் இந்த தளம் துவங்கியதிலிருந்து இந்த தளத்தின் வாசகன்.

எனக்கு அலுவலகத்தில் எனக்கு மேல் பணியில் இருப்பவர்களால் கடும் பிரச்னை மற்றும் மன உளைச்சல் ஏற்பட்டு தவித்து வருகிறேன். மேலும் எனது திறமைக்கும் தகுதிக்கும் குறைவான ஒரு வேலை பார்த்து வருகிறேன். உள்ளுக்குள் புழுங்கிக்கொண்டு என்னால் வேலை செய்ய முடியவில்லை. ஆகையால் வேறு ஒரு நல்ல நிறுவனத்தில் வேலைக்கு அப்ளை செய்திருக்கிறேன். அனைத்தும் நல்லபடியாக முடிந்து நான் விரும்பிய படி நல்லதொரு வேலை கிடைக்க எனக்காக பிரார்த்திக்கும்படி உங்களை கேட்டுக்கொள்கிறேன்.

பெயர் வெளியிட விரும்பாத வாசகன்.
=================================================

கரூர் ராஜேஸ்வரி & பன்னீர்செல்வம் தம்பதியினரின் குழந்தை சாய் அக்ஷதா ஜெய ஸ்ரீக்கு ஏற்பட்டுள்ள குறைபாடு நீங்கி அவள் நல்ல முறையில் நடக்கவும், பெயர் வெளியிடவிரும்பாத நம் நண்பருக்கு அவர் விண்ணப்பித்துள்ள நிறுவனத்தில் நல்ல முறையில் வேலை கிடைத்து அவர் சௌக்கியத்துடனும் சந்தோஷத்துடனும் வாழ இறைவனை பிரார்த்திப்போம்.

http://rightmantra.com/wp-content/uploads/2013/04/Mahaperiyava-36.jpgநமது பிரார்த்தனைகளை இறைவனிடம் கொண்டு சேர்த்து பலன் பெற்று தரவேண்டிய பொறுப்பு நாம் என்றும் வணங்கும் மகா பெரியவா அவர்களையே சாரும். அவரது திருவடிகளில் இந்த பிரார்த்தனைகளை சமர்ப்பிக்கின்றோம்.

கூட்டுப் பிரார்த்தனை அவருக்கு மிகவும் பிடித்த ஒன்று என்பதால் நிச்சயம் மகா பெரியவா அவர்கள் இந்த விஷயத்தில் சீக்கிரமே தமது அனுக்ரஹத்தை நல்குவார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது.

இதற்க்கு முன்பு, பிரார்த்தனை கிளப்பில் நாம் பிரார்த்தனை செய்தவர்களுக்காகவும் ஒரு சில வினாடிகள் பிரார்த்திப்போம்.

================================================================

பிரார்த்தனையை துவக்கும் முன் மூன்று முறை ராம…ராம….ராம… என்று உச்சரித்துவிட்டு பிரார்த்தனையை ஆரம்பிக்கவும். ராம நாமத்தை மூன்று முறை உச்சரித்தால் விஷ்ணு சஹஸ்ர நாமத்தை முழுமையாக உச்சரித்த பலன் கிடைக்கும்.

அதே போன்று முடிக்கும்போது ‘ஓம் சிவ சிவ ஓம்’ என்ற மந்திரத்தை மூன்று முறை உச்சரிக்கவும்.

(பிற மதத்தவர்கள் இந்த பிரார்த்தனையில் பங்கேற்றால் அவரவர் வழிபாட்டு தெய்வத்தை நினைத்து பிரார்த்தனை செய்யும்படி கேட்டுக்கொள்கிறோம். பிரார்த்தனைக்கு மதம், இனம் மொழி கிடையாது என்பது நீங்கள் அறிந்ததே.)

பிரார்த்தனை நாள் : மே 19, 2013 ஞாயிறு

நேரம் : மாலை 5.30 – 5.45

இடம் : அவரவர் இருப்பிடங்கள்

=============================================================

உங்கள் கோரிக்கை பிரார்த்தனை கிளப்பில் இடம் பெற…

உங்கள் கோரிக்கைகள் இந்த பகுதியில் வெளியிடப்பட்டு பிரார்த்தனை செய்யப்படவேண்டும் என்று நீங்கள் விரும்பினால் அதை எங்களுக்கு மின்னஞ்சல் செய்யவும்.

உங்கள் வேண்டுதல்கள் குடும்பப் பிரச்னை, நோயிலிருந்து விடுதலை, நல்வாழ்வு, அறுவை சிகிச்சையில் வெற்றி, வழக்குகளில் நல்ல தீர்ப்பு (நியாயம் உங்கள் பக்கம் இருப்பின்), வேலைவாய்ப்பு மற்றும் இதர நியாயமான கோரிக்கைகளை அடிப்படையாக வைத்து இருக்கலாம். பிரார்த்தனையால் தீர்க்க முடியாத பிரச்சனைகளே இல்லை!

உங்கள் பெயரையும் சூழ்நிலையும் வெளியிட விரும்பாவிட்டால் வேறு ஒரு பெயரை நீங்களே குறிப்பிட்டு நமக்கு மின்னஞ்சல் அனுப்பவும். பொதுவாக உங்கள் பிரச்னை நீங்க குறிப்பிடும் புனைப் பெயருடன் அறிவிக்கப்பட்டு பிரார்த்தனை நடைபெறும்.

E-mail : simplesundar@gmail.com    Mobile : 9840169215

=============================================================

9 thoughts on “இறைவனின் தரிசனம் கிடைக்குமென்றால் எத்தனை ஆண்டுகள் உங்களால் காத்திருக்க முடியும்?

  1. ராஜேஸ்வரி & பன்னீர்செல்வம், அவர்களின் கடிதத்தை படிக்கும்போது நெஞ்சு கனக்கிறது. கடவுள் அவருக்காகவும் அவரின் குடும்பத்திற்காகவும் இனி நல்லது மட்டும் செய்யவேண்டும் என பிரார்த்திப்போம்…

  2. கூட்டு பிரார்தனை என்றுமே வலிமையானது. அனைவரது கோரிக்கைகளும் நிறைவேற இணைந்து பிரார்த்திப்போம். நல்லவற்றை கேட்ப்போம். நல்லதனையே பெறுவோம்.

    ப.சங்கரநாராயணன்

  3. ராஜேஸ்வரி மேடம், கண்டிப்பாக உங்கள் குழந்தை நடந்து விடுவாள் . கடவுளும் , மற்றும் உங்கள் முயிற்சி இருக்கவேண்டும் . நம்பிகையுடன் கடவுளை பிரார்த்திப்போம் . நிச்சயம் நடந்து விடுவாள்.

  4. ராஜேஸ்வரி மேடம், நம்பிக்கை தான் வாழ்க்கை. கடவுளிடம் முழு மனதுடன் சரணாகதி அடையுங்கள்.அவர் உங்களுக்கு நல்லதே செய்வார். உங்கள் பாப்பா கண்டிப்பாக நடப்பாள். ரைட் மந்திரா பிரார்த்தனை கிளப் எல்லா வாசகர்களும் உங்களுக்காக கடவுளிடம் வேண்டுவோம்.

  5. ராஜேஸ்வரி மேடம், உங்கள் நம்பிக்கை வீண் போகாது. கூடிய விரைவில் உங்கள் குழந்தை நடப்பாள். முடிந்தால் பாம்பன் ஸ்வாமிகள் அருளிய ஷண்முக கவசத்தை உங்கள் மகளின் பெயரை சொல்லிவிட்டு பராயணம் செய்து வாருங்கள்.மனதை தளர விடாதீர்கள்.

    1. ரொம்ப நன்றி மேடம்,

      என்னோட பொண்ணுக்காக நீங்க பிரார்த்தனை பண்ணினதுக்கு. உங்களோட பிரார்த்தனை முலமா என் பொண்ணு நடந்துருவனு நம்பிக்கை வந்து இருக்கு . சண்முக கவசம் படிக்க அரம்பிகறேன் மேடம்.

  6. அருமையான கதை !!!

    கதை உணர்த்தும் பாடம் – பொறுமையே பெருமை !!!

    சோதனைகளை சாதனைகலாக்கும் அந்த சர்வேஸ்வரன் திருவடிகளை சரணடைவோம் !!!
    இனி நம்மை தடுத்தாட்கொள்வது அவர் பொறுப்பு !!!

    நாம் நமது கடமையை செவ்வனே செய்து நாமும் நம்மை சுற்றியுல்லோரையும் மகிழ்ச்சியுடன் வைத்திருக்க மனமுருக வேண்டி பிரார்த்திப்போம் !!!

  7. கூட்டு பிரார்தனை என்றுமே வலிமையானது. நல்லதனையே பெறுவோம்

  8. சகோதரி அவர்களுக்கு வணக்கம்.
    தங்கள் குழந்தை “சாய் அக்ஷதா ஜெய ஸ்ரீ “க்கு மகா பெரியவாவின் அற்புதங்கள் சீக்கிரம் நகழும் .நம்பிக்கையே நமது மிகப்பெரிய பலம்.
    நம்பிக்கையோடு சிகிச்சை மேற்கொள்ளுங்கள் .விரைவான பலன் நிச்சயம் உண்டு .மனம் தளராதீர்கள்.
    உங்களுக்காக பிரார்த்தனை நாங்கள் தொடர்ந்து செய்கிறோம் .

    முதல் பொண்ணு மதுமிதா நன்றாக படித்து ஆரோக்யமாக வளர வாழ்த்துகிறோம் .
    ==============================================================பெயர் சொல்லா நண்பர் “அலுவலகத்தில் பணியில் இருப்பவர்களால் கடும் பிரச்னை மற்றும் மன உளைச்சல் ஏற்பட்டு தவித்து வரும் “தங்களின் பிரச்னை சீக்கிரமே சரியாகிவிடும் . சுந்தர் ஜி மேற்சொன்ன கதை எல்லோருக்கும் பொருந்தும் .நீங்கள் நம்பிக்கையுடன் உங்கள் பணிகளை செயுங்கள் ,உங்கள் திறமை கண்டிப்பாக வெளிப்படும் .

    “காத்து உள்ள பந்தினை தண்ணீரில் அமுக்கி வைக்கமுடியாது “

Leave a Reply to manoharan Cancel reply

Your email address will not be published. Required fields are marked *