Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Friday, March 29, 2024
Please specify the group
Home > Featured > அன்று பரிசாக ஏற்க மறுத்த நிலம் இன்று தக்க நேரத்தில் பன்மடங்கு திரும்பி வந்த அதிசய நிகழ்வு!

அன்று பரிசாக ஏற்க மறுத்த நிலம் இன்று தக்க நேரத்தில் பன்மடங்கு திரும்பி வந்த அதிசய நிகழ்வு!

print
இந்த ஒரு பதிவு உணர்த்தும் நீதி, வாழ்வியல் உண்மைகள், திருக்குறள்கள் ஏராளம் ஏராளம் ஏராளம். தவிர நம் தளத்தின் முன்னேற்றத்திலும் வளர்ச்சியிலும் அக்கறை கொண்டுள்ள உங்கள் அனைவரையும் நிச்சயம் மகிழ்ச்சியில் மூழ்கடிக்ககூடிய விஷயமும் இதில் உள்ளது.  நம் மாநிலம் மீதும் தமிழ் மொழி மீது உண்மையான அக்கறை கொண்டவர்களுக்கு இந்த பதிவு ஒரு இனிப்பான செய்தி. எனவே பொறுமையாக – முழுமையாக – இந்த பதிவை படிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.

நன்றி!

………………………………………………………………………………………………………………..
ருவருக்கு அவரது துறை சார்ந்த கல்வி, அறிவு மற்றும் அனுபவம் அவரது வசதிக்கும் வாழ்வுக்கும் (அதாவது சுயநலத்துக்கு) மட்டுமே பயன்படவேண்டும் என்பது எழுதப்படாத விதியாகிவிட்டது. அதையும் தாண்டி அவற்றை பொது நலனுக்காக பயன்படுத்துவது என்பது அறவே போய்விட்டது.

உலகமே இப்படி சுயநலத்தின் பிடியில் சிக்கி தவிக்கும் இன்றைய காலகட்டத்தில் இதோ ஒருவர் நாளைய உலகின் அறிவுப் பசியை நினைத்து, நம் பிள்ளைகளின் கல்வி தேவைகளை, (KNOWLEDGE NEEDS) நினைத்து, அதற்கு ஒரு தீர்வு காணவேண்டி இன்று, தள்ளாத வயதிலும் அயராது உழைத்துக் கொண்டிருக்கிறார்.

அவர் வேறு யாருமல்ல நூலகராக தன் வாழ்க்கையை துவங்கி ‘சிறந்த நூலகர்’ உள்ளிட்ட பல்வேறு விருதுகளை பெற்று, பணியிலிருந்து ஒய்வு பெற்று, அந்த ஓய்வூதியத்தில் கிடைத்த 11 லட்ச ரூபாயையும் குழந்தைகள் நலனுக்காக ஒப்படைத்து தற்போது முழுக்க முழுக்க தம்மை சமூக சேவைக்கு அற்பணித்துகொண்டுள்ள பாலம் திரு.கலியாணசுந்தரம் ஐயா அவர்கள் தான்.

ஆதிகாலத்தில் மனிதன் களிமண்ணில் நெருப்பை சுட்டு, எழுத்துக்களை பொறித்தான். பிறகு ஓலைச்சுவடியில் எழுதும் முறை வந்தது. அதன் பிறகு செப்பேடு, தகடு, உலோகம் இவற்றில் எழுத்துக்களை பொறித்தான். காகிதம் கண்டுபிடிக்கப்பட்ட பின்னர் காகிதத்தில் எழுத ஆரம்பித்தான். அதன் பிறகு காகிதத்தில் அச்சிடும் முறை கண்டுபிடிக்கப்பட்டு ‘பிரிண்டிங்’ தொழில்நுட்பம் வந்தது. அதற்கு பிறகு ஆடியோ, வீடியோ….! இவை தான் புத்தகங்களின் பரிணாம வளர்ச்சி. இந்த வளர்ச்சியின் அடுத்த கட்டம் தான் ‘DIGITAL LIBRARY.’ அதாவது மின்னணு நூலகம்.

டிஜிட்டல் நூலகம் ஏற்கனவே மேல்நாடுகளிலும், ஐரோப்பாவின் சில நாடுகளிலும் வந்துவிட்டன.

இங்கு நம் தமிழ்நாட்டிலும் ஒரு டிஜிட்டல் நூலகம் அமைக்கப்படவேண்டும் என்று விரும்பி அதற்காக ஒரு தனி மனிதனாக உழைக்க ஆரம்பித்து அதில் பல்துறை நிபுணர்கள் தற்போது கரம் கோர்த்திருக்கிறார்கள்.

ஏழு ஆண்டுகளுக்கு முன்னர் அண்ணா பல்கலைக்கழகத்தில் ஒரு மாநாட்டில் பேசிய அப்போதைய ஜனாதிபதி திரு.அப்துல் கலாம் அவர்கள் தமிழ் மொழியை உலகளாவிய மொழியாக மாற்றுவதற்கு என்ன செய்ய வேண்டும் என்று சில ஆக்கப் பூர்வமான யோசனைகளை கூறினார். அதில் அவர் கூறியது தான் இந்த டிஜிட்டல் நூலகம். பன்னாட்டு மொழியாக தமிழை உயர்த்த வேண்டுமென்றால் அதற்கு தமிழ் மொழியில் டிஜிட்டல் நூலகம் ஒன்று இருக்கவேண்டும் என்றும் சம்பந்தப்பட்டவர்கள் உடனடியாக அது பற்றி பரிசீலித்து அதற்குரிய பணிகளை துவக்க வேண்டும் என்றும் கூறினார்.

அந்த நிகழ்ச்சிக்கு சென்றிருந்த கலியாணசுந்தரம் ஐயா அடிப்படையில் ஒரு நூலகர் என்பதால் அதை கேட்டுக்கொண்டிருந்த அவருக்கு அதன் முக்கியத்துவமும் அவசியமும் புரிந்தது. நிச்சயம் தமிழ்நாட்டில் தமிழ் மொழிக்கென்று ஒரு டிஜிட்டல் நூலக துவக்கப்படவேண்டும் என்று முடிவு செய்தார்.

பலரை ஆலோசித்து இரவுபகலாக உழைத்து அதற்கு ஒரு திட்ட முன் மாதிரியை தானே உருவாக்கினார். அதை திரு.அப்துல் கலாமிடம் கொடுத்தபோது அவர் நெகிழ்ந்துவிட்டார்.

“நான் மேடையில் பேசும்போது எல்லாரும் பாராட்டுவார்கள். கைதட்டுவார்கள். ஆனால் நான் சொன்னதை இந்த காதில் வாங்கி அந்த காதில் விட்டுவிட்டு போய்விடுவார்கள். ஆனால் நீங்கள் ஒருவர் தான் அதற்கு செயல் திட்டம் கொடுத்திருக்கிறீர்கள்….” என்றவர் இந்த திட்டத்திற்கு தாமே தலைமை ஆலோசகராக செயல்படுவதாக கூறினார்.

தொடர்ந்து அந்த திட்ட முன்மாதிரி 2005 ஆண்டு தமிழக அரசிடம் ஒப்படைக்கப்பட்டது. அப்போது அ.தி.மு.க. ஆட்சி நடைபெற்று வந்தது. பாலம் ஐயா வழங்கிய டிஜிட்டல் நூலகத்தின் திட்ட முன்மாதிரியை ஏற்றுக்கொண்ட முதல்வர் ஜெயலலிதா ‘தமிழகத்தில் டிஜிட்டல் நூலகம்’ அமைக்கப்படும் என்று சட்டசபையில் அறிவிப்பும் வெளியிட்டார். அது தொடர்பாக அனைத்து ஏற்பாடுகளையும் செய்துகொண்டிருந்த நிலையில், தொடர்ந்து 2006 ஆம் ஆண்டு மே மாதம் வந்த சட்டசபை தேர்தலில் தி.மு.க. ஆட்சியை கைப்பற்றியது.

“நான் மேடையில் பேசும்போது எல்லாரும் பாராட்டுவார்கள். கைதட்டுவார்கள். ஆனால் நான் சொன்னதை இந்த காதில் வாங்கி அந்த காதில் விட்டுவிட்டு போய்விடுவார்கள். ஆனால் நீங்கள் ஒருவர் தான் அதற்கு செயல் திட்டம் கொடுத்திருக்கிறீர்கள்….”

அதற்கு பிறகு வந்த தி.மு.க. அரசு, அத்திட்டத்தை கண்டுகொள்ளாது கைவிட்டது. (அண்ணா நூற்றாண்டு நூலகத்தை அதற்கு பதில் கொண்டு வந்தது.) இது நல்ல விஷயம் தான். ஆனால்  டிஜிட்டல் நூலகம் இதை விட பன்மடங்கு சிறப்பு மிக்கத்து. உலகில் எங்கிருந்து வேண்டுமானாலும் டிஜிட்டல் நூலகத்தை பயன்படுத்தலாம். மற்ற நூலகங்கள் அப்படி அல்ல. நாமே நேரில் செல்லவேண்டும்.

இடைப்பட்ட இந்த ஐந்து ஆண்டுகளில் டிஜிட்டல் நூலக திட்டத்திற்கு உயிர் கொடுக்க பாலம் ஐயா எவ்வளவோ போராடியும் அனைத்தும் தோல்வியில் தான் முடிந்தன.

பின்னர் 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் அ.தி.மு.க. ஆட்சியை கைப்பற்றியதை அடுத்து, மீண்டும் அது தொடர்பான முயற்சிகளில் பாலம் ஐயா இறங்கினார்.

இடையறாத முயற்சிகள், அவமானங்கள், புறக்கணிப்புகள் என்று ஐயா எத்தனையோ சந்தித்து கடைசியில் வரும் சட்டசபை கூட்டத் தொடரில் கல்வி மானியக் கோரிக்கையில் இதற்கான அறிவிப்பு வெளியாகும் என்று தெரிகிறது.

தமிழர்க்கு பெருமை !

தமிழை தரணியாளச் செய்யும் பாலம் ஐயாவின் இந்த டிஜிட்டல் நூலகத்திற்கு அப்துல் கலாம் தலைமை ஆலோசகராக செயல்படவிருக்கிறார். மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் VICE PRESIDENT திரு.சோமசேகர் மைக்ரோசாப்ட் சார்பாக இலவச மென்பொருள் வழங்குகிறார். அமெரிக்க அதிபரின் பொருளாதார ஆலோசகர் திரு. பாலா பாலச்சந்திரன் என்பவர் இத்திட்டத்திற்க்கு நிதி மேலாண்மை ஆலோசகராக செயல்பட இசைந்துள்ளார். எச்.சி.எல். குழுமத்தின் நிறுவனர் திரு. சிவநாடார் OPERATIONAL COST வழங்கவுள்ளார். இப்படி தமிழர்கள் அனைவரும் கரம் கோர்த்து செயல்படுத்தும் திட்டம் இது என்பதால் நாம் அனைவரும் காலரை தூக்கிவிட்டுக்கொள்ளலாம்.

இந்த டிஜிட்டல் நூலகம் அமையபெற்றால் அதில் கோயம்பேடு காய்கறி மார்கெட்டில் அன்றைய காய்கறி விலை நிலவரம் முதல் மிகப் பெரிய ஆய்வு நூல்கள் வரை அனைத்தையும் நொடிப்பொழுதில் தெரிந்துகொள்ளலாம். தகவல்கள் எழுத்து வடிவில் மட்டுமல்லாமல் ஆடியோ மற்றும் வீடியோ வடிவிலும் கிடைக்கும் என்பதால் எழுதப் படிக்க தெரியாதவர்கள் கூட இந்த நூலகத்தை பயன்படுத்தலாம் என்பது தான் இதன் சிறப்பு.

இவ்வளவு காலமாக ஷெல்ப்ஃகளிலும் பீரோக்களிலும் முடங்கி கிடந்த தலைசிறந்த படைப்புக்கள் நூல்கள் தற்போது டிஜிட்டல் வடிவில் கணிப்பொறிக்குள் நுழையவிருக்கின்றன.

இந்த திட்ட முன்மாதிரியை தமிழக அரசிடம் கொடுத்தபோது, இதற்கான இடத்தையும் நன்கொடையாக பெற்றுத் தந்தால் உடனே நூலகம் அமைக்கும் பணிகளை துவக்கி விடுவதாக அரசு தரப்பில் சொன்னதையடுத்து, பாலம் ஐயா அதற்க்கான முயற்சிகளில் இறங்கினார்.

தங்கம் வேண்டுமென்றால் தங்க வியாபாரியை அணுகவேண்டும். அரிசி வேண்டும் என்றால் அரிசி வியாபாரியை அணுகவேண்டும். இடம் வேண்டுமென்றால்? எனவே நகரில் உள்ள அவருக்கு தெரிந்த முக்கிய ரியல் எஸ்டேட் அதிபர்களின் பெயர் பட்டியலை தயார் செய்தார். அந்த பட்டியலில் முதலில் இருந்தவர் ‘லியோ ஹவுசிங்’ குழுமத்தின் சேர்மன் திரு.அரிமா லியோமுத்து அவர்கள். லியோமுத்து அவர்கள் சாய்ராம் கல்வி குழுமங்களின் தலைவரும் கூட. எண்ணற்ற கல்வி நிறுவனங்களும் குழுமங்கள் இவருக்கு சொந்தம்.

இரண்டு மாதங்களுக்கு முன்பு அவரை இந்த டிஜிட்டல் நூலக தொடர்பாக பாலம் ஐயா அவர்கள் சந்தித்து, “என்னை தெரிகிறதா?” என்று கேட்க….

“உங்களையும் மறக்க முடியாது. உங்களோட கீச்சு கீச்சு குரலையும் மறக்கமுடியாது. நீங்க செஞ்ச தியாகத்தையும் மறுக்க முடியாது!” என்று கூறினாராம் லியோமுத்து அவர்கள்.

தொடர்ந்து அவரிடம் நூலக அமையும் இடத்தின் தேவை பற்றி கூறியபோது லியோமுத்து அவர்கள் கொஞ்சம் கூட யோசிக்காமல் செய்தது என்ன தெரியுமா?

உடனடியாக சென்னையில் ஒரு பிரதான இடத்தில் ஐந்து ஏக்கர் நிலமும் ஐம்பது லட்சம் நன்கொடையும் தந்தது தான். பாலம் ஐயாவே இதை எதிர்பார்க்கவில்லை. சென்னையில் ஒரு முக்கியப் பகுதியில் ஐந்து ஏக்கர் நிலம் என்றால் அதன் மதிப்பு இன்றைய நிலவரத்திற்கு என்ன தெரியுமா? மேலும் இந்த திட்டத்திற்கு உடனடியாக ரூ.50 லட்சம் நன்கொடையும் தந்தது சாதாரண விஷயம் அல்ல.

நிற்க இனிமே தான் விஷயமே இருக்கு….

தமிழை உலக அரங்கில் தலை நிமிரச் செய்யும் இந்த திட்டத்திற்கு உயிர் கொடுப்பதற்கு ஒப்பாக உடனடியாக DATA CENTRE அமைய இடமும் கூடவே 50 லட்சம் பணமும் கொடுத்தபடியால் பாலம் ஐயா நெகிழ்ந்து போய், லியோ முத்து அவர்களிடம் நன்றி கூற, இல்லை… இல்லை… “நன்றி சொல்லாதீங்க. உங்களோட நிலத்தை தான் நான் உங்களுக்கு தந்திருக்கேன்” என்றாராம்.

இவருக்கு ஒன்னும் புரியவில்லை.

“என்னோட நிலமா? நான் தான் என் வாழ்நாள் முழுதும் என் பெயரில் ஒரு ஒலைகுடிசையோ அல்லது ஒரு சென்ட் நிலமோ கூட வைத்திருக்கபோவதில்லை என்று உறுதி ஏற்றிருக்கிறேனே??” என்று கூற…..

“இல்லை இல்லை இது உங்கள் நிலம் தான்.” என்றாராம் லியோமுத்து அவர்கள்.

நடந்தது இது தான்.

சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு (1993) பாலம் ஐயாவின் பொன்விழா கொண்டாட்டம் ஹோட்டல் சவேராவில் நடைபெற்றது. அதில் சிறப்பு விருந்தினராக அப்போது திரு.லியோ முத்து அவர்கள் கலந்துகொண்டார்.

அவர் அந்த நிகழ்ச்சியில் பேசுகையில், “கலியாண சுந்தரம் ஐயாவுக்கு இது போன்ற ஆடம்பரமான சூழலில் கொண்டாட்டங்களோ இல்லை விழாக்களோ நடத்துவதோ பிடிக்காது. நாங்கள் இது பற்றி அவரிடம் சொல்லாமல் மறைத்துவிட்டோம். இப்போது தான் தெரிந்துகொண்டார். இருந்தாலும் அவரோட என்னை போன்ற நண்பர்கள் & நலம்விரும்பிகள் ஆகியோர் மகிழ்ச்சிக்காக இதை அவர் பெரிய மனதுடன் ஒப்புக்கொண்டார்.

சிறு குழந்தைக்கு அதன் முதல் பிறந்த நாள் அன்றோ அல்லது இரண்டாம் மூன்றாம் பிறந்தநாள் அன்றோ சீவி சிங்காரித்து பட்டு பாவாடை சட்டை போட்டு, அலங்காரம் செய்து, ஊரை கூட்டி மகிழ்ந்து விருந்து உபசாரம் செய்கிறோமே? அது யாருடைய சந்தோஷத்திற்காக? நம்முடைய சந்தோஷத்திற்கு தானே. அந்த குழந்தைக்கு அதை நினைத்து சந்தோஷப்பட தெரியுமா? அது போலத் தான் பாலம் ஐயாவிற்கு நாங்கள் நடத்தும் இந்த விழாவும். சமுதாயத்திற்காக தன்னலம் கருதாது உழைக்கும் ஒரு மனிதனுக்கு விழா எடுப்பதன் மூலம் நாங்கள் மகிழ்ச்சியியாடைகிறோம் ஆனால் ஐயாவுக்கு இதெல்லாம் ஒரு தூசி என்பது எனக்கு தெரியும். குழந்தை இல்லாதவங்க பொதுவா எல்லாரும் குழந்தையை தத்தெடுப்பாங்க. எனக்கு அண்ணன் இல்லை. பாலம் ஐயாவையே நான் என் அண்ணனா இன்னைக்கு தத்தெடுத்துகுறேன். அண்ணனோட சிறந்த வாழ்க்கைக்கு உதவுவது தம்பி என்னோட கடமை இல்லையா? அதுனால தி.நகர்ல ஒரு முக்கிய இடத்தில ஐயாவுக்கு ஐந்து கிரவுண்டு நிலம் நன்கொடையா தர்றேன். அதுல ஒரு கிரவுண்டை ஐயா வித்தாலே போதும் கோடிக்கணக்கில் பணம் வரும். அதை வைத்து ஒரு கிரவுண்டில் ஒரு பெரிய வீட்டை கட்டிடலாம். அடுத்து இன்னொரு கிரவுண்டுல பாலம் நிறுவனத்தையும் மற்றொரு கிரவுண்டில் ஒரு கட்டிடத்தை கட்டி அதை வாடகைக்கு விட்டாலே போதும்… தன்னோட நிறுவனம் நடத்த போதிய வருவாய் அவருக்கு வர ஆரம்பிச்சிடும். மீதி இரண்டு கிரவுண்டை ஐயா அப்படியே வெச்சிருந்து எதிர்கால தேவைகளை மனதி கொண்டு அப்போ எப்படி பயன்படுத்த விரும்புகிறாரோ அப்படி பயன்படுத்திக்கொள்ளலாம். இதோ இந்த மேடையிலேயே அதற்கான பத்திரங்களை ஐயாவிடம் ஒப்படைக்கிறேன். பெரிய மனது பண்ணி அவர் இதை ஏத்துக்கணும்” என்று கூற, அப்போது எழுந்த கரவொலி அடங்க வெகு நேரமானது.

அடுத்து மைக்கை பிடித்த ஐயா சொன்னது என்ன தெரியுமா?

“என் மீது இவ்வளவு அன்பையும், நான் செய்யும் பணியின் மீது இவ்வளவு மதிப்பையும் வெச்சிருக்கிறதுக்கு முதல்ல என்னோட நன்றியை தெரிவிச்சுக்குறேன். தி.நகர்ல முக்கிய இடத்துல அரை கிரவுண்டு நிலமே கோடிக்கணக்கான ரூபாய்க்கு விற்பனையாகுதுன்னா ஐந்து கிரவுண்டு நிலத்தோட மதிப்பு என்னன்னு என்னால யூகிக்க கூட முடியலே. அப்படியிருக்கும்போது அதை நன்கொடையா தருவதாக சொல்லி, கையோடு பத்திரமும் தயார் செய்து கொண்டு வந்திருக்கும் லியோமுத்து அவர்களுக்கு எப்படி நன்றி சொல்வது என்று எனக்கு தெரியலே.

ஆனால், வாழ்நாள் முதுழும் என் பேர்ல ஒரு ஓலைக் குடிசையோ அல்லது ஒரு சென்ட் நிலமோ கூட வைத்துகொள்வதில்லை என்று நான் உறுதிமொழி ஏற்றிருக்கிறேன். என் உழைப்பில் வரும் வருமானத்தில் கூட அது எனக்கு இருக்கக்கூடாது. ஆகையால் லியோ முத்து அவர்கள் பரிசாக தருவதாக சொன்ன இந்த இடம் எனக்கு வேண்டாம். அது வேறு யாருக்கேனும் பயன்படட்டும். என் மீது வைத்துள்ள அன்புக்கு நன்றி” என்று கூறிவிட்டு மேடையைவிட்டு இறங்கிவிட்டார்.

இந்த சம்பவத்தை தற்போது பாலம் ஐயாவிடம் நினைவு கூர்ந்த திரு.லியோமுத்து, “அன்று உங்கள் இடத்தில் வேறு யாராவது இருந்திருந்தால் “நான் நிலமெல்லாம் வெச்சிக்கிறது இல்லேன்னு பாலிஸி வெச்சிருக்கேன். இருந்தாலும் என் மேல இவ்ளோ அன்பு வெச்சு, அதை பரிசா தர்றவங்க மனசு – நான் வாங்க மறுத்தா – புண்படுமேன்னு தான் வாங்கிக்கிறேன்” அப்படி இப்படின்னு எதையாவது சொல்லி அந்த ஐந்து கிரவுண்டு நிலத்தை பேசாம வாங்கிட்டு போயிருப்பாங்க. ஏன்னா கோடி மேல கொடிகளை கொட்டி கொடுத்தா கூட தி.நகர்ல ஐந்து கிரவுண்டு நிலம் கிடைக்காது. அன்னைக்கு நான் உங்களுக்கு தர்றதா சொன்னது உங்களுக்கு தனிப்பட்ட முறையில. அதை கூட நீங்க வேண்டாம்னு உறுதியா சொல்லிட்டீங்க. ஆனா இப்போ கேட்கிறது உங்களுக்காக இல்லை. பொதுநோக்கத்துக்காக. அதுவும் தமிழை உலகறிய செய்யும் ஒரு உன்னதமான விஷயத்திற்காக. அதனால தான் நீங்க கேட்ட உடனேயே ஐந்து ஏக்கர் நிலம், ஐம்பது லட்ச ரூபாய் நன்கொடையும் தந்துவிட்டேன்” என்றார்.

தன்னுடைய கனவு திட்டமான டிஜிட்டல் நூலகத்திற்கு இவ்ளோ பெரிய உதவியை செய்திருக்கும் திரு.லியோமுத்து அவர்களை கௌரவிப்பது தன்னுடைய உடனடி கடமையா நினைத்த பாலம் ஐயா, அடுத்து வரவிருக்கும் (நாளை மறுநாள் அதாவது மே 10 அன்று) தன்னுடைய பிறந்த நாளன்று ஒரு விழா ஏற்பாடு செய்து, அதில் திரு.லியோமுத்து அவர்களை தனது ‘பாலம் நிறுவனம்’ சார்பாக பாராட்டும் பதக்கமும் அளித்து கௌரவிக்க உள்ளார்.

மேலும் தகுதியுடையோர்க்கு கல்வி உதவி, மருத்துவ உதவி உள்ளிட்டைவைகளை வழங்கும் நலத்திட்ட விழாவும் நடைபெறவுள்ளது. மேலும் கல்விப் பணியில் சிறந்து விளங்கும் மூன்று பேரை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு பாராட்டும் பணமுடிப்பும் தரபடவுள்ள்ளது.

நம்புங்கள்… தமிழகத்தில் ஒரு மிகவும் பின் தங்கிய கிராமத்தில் உள்ள இது ஒரு அரசு ஆரம்பப் பள்ளி!

(இதில் ஒருவர் நாம் பரிந்துரைத்திருக்கும் திருமதி.சரஸ்வதி அவர்கள். இவர் செய்திருக்கும் சாதனை என்ன என்று தெரிந்துகொள்ள இந்த லிங்கை செக் செய்யவும். http://rightmantra.com/?p=895 )

இது தவிர அவரது 73 வது பிறந்த நாள் என்பதால் ரூ.73,000/- திற்கு நலத்திட்ட உதவிகளும் வழங்கப்படவுள்ளன.

இந்த விழா இது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் கடந்த நான்கைந்து வாரங்களாக ஒவ்வொரு ஞாயிறும் மதியம் நடைபெற்று வந்தது. கடந்த மாதம் – முதல் ஆலோசனைக் கூட்டத்திற்கு – நாம் சென்றபோது, நிகழ்ச்சி நிரல் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் விபரம் படித்து காண்பிக்கப்பட்டது. அப்போது தான் வரவேற்புரையில் நமது பெயர் இடம் பெற்றிருப்பது எனக்கு தெரியும்.

எதிர்பாராத இந்த அறிவிப்பினால் நான் ஒரு புறம் திக்குமாக்காடி போனேன். சான்றோர் சபையில் அதுவும் மிகப் பெரிய முக்கியஸ்தர்கள் கலந்துகொள்ளும் விழாவில் வரவேற்புரை என்பது எத்தனை முக்கியத்துவம் வாய்ந்தது? எனவே இந்த பொறுப்பை ஏற்க ஆரம்பத்தில் சற்று தயங்கினேன். இருப்பினும், “உங்களால் முடியும்… உங்கள் மீது நம்பிக்கை இருக்கிறது” என்று எனக்கு தைரியமளித்து இந்த பொறுப்பை ஐயா எனக்கு கொடுத்துள்ளார்கள்.

ஐயா என் மீது வைத்திருக்கும் நம்பிக்கைக்கும், நல்லெண்ணத்திற்கும் நன்றி கூறி, இயன்றவரை சிறப்பான ஒரு வரவேற்புரை வழங்குவதாக கூறியிருக்கிறேன்.

இதற்கு முன்பு ஒரு சில மேடைகளில் நாம் பேசியிருந்தாலும் அதெல்லாம் நான் ஏற்பாடு செய்த நிகழ்ச்சிகள். ஆனால் மற்றவர் ஏற்பாடு செய்யும் நிகழ்ச்சியில் அதுவும் இதோ போன்ற வி.வி.ஐ.பி.க்கள் கலந்துகொள்ளும் ஒரு நிகழ்ச்சியில் வரவேற்புரை நிகழ்த்த நமக்கு கிடைத்த வாய்ப்பை என்னவென்று சொல்வது? இறைவனுக்கு முதல் நன்றி. அடுத்து பாலம் ஐயாவிற்கு நன்றி. அடுத்து எனக்கு ஊக்கமும் உற்சாகமும் என்றென்றும் அள்ளி வழங்கி வரும் என் நண்பர்கள் மற்றும் வாசகர்கள் உங்கள் அனைவருக்கும் நன்றி.

எடுத்துக்காட்டு நீதிபதியாக திகழ்ந்து நீதிபதி பதவிக்கே கௌரவம் சேர்த்த நீதியரசர் திரு.சந்துரு, சென்னை மேயர் திரு.சைதை துரைசாமி போன்றோர் பங்கேற்கும் இந்த விழாவில் நம் தளம் சார்பாக வரவேற்புரை நிகழ்த்த கிடைத்த இந்த வாய்ப்பு உண்மையில் நமது தளத்திற்கும் உங்கள் அனைவருக்கும் கிடைத்த மிகப் பெரிய கௌரவம் மற்றும் அங்கீகாரம் என்றால் மிகையாகாது.

விழா சிறப்பாக நடைபெறவும் நமது உரையும் சிறப்பான ஒன்றாக அமைய திருவருள் வேண்டி அனைவரையும் இறைவனிடம் பிரார்த்திக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.

நிகழ்ச்சி நடைபெறும் இடம், தேதி, கலந்துகொள்ளும் சிறப்பு விருந்தினர்கள் விபரம் உள்ளிட்டவைகள் இணைக்கப்பட்டுள்ள அழைப்பிதழில் உள்ளது. 4.00 மணிக்கு பரத நாட்டியத்துடன் நிகழ்ச்சிகள் துவங்கி ஒரு மணி நேரம் கலை நிகழ்ச்சிகள் நடைபெறும். பின்னர் 5.30 மணியளவில் விழா துவங்குகிறது.

நம் தள வாசகர்கள் தங்கள் குடும்பத்தோடு இந்த நிகழ்ச்சிக்கு வந்திருந்து சிறப்பிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன். ஏனெனில் இது உங்கள் விழா.

[END]

17 thoughts on “அன்று பரிசாக ஏற்க மறுத்த நிலம் இன்று தக்க நேரத்தில் பன்மடங்கு திரும்பி வந்த அதிசய நிகழ்வு!

  1. இந்த பதிவை படிக்கும் போதே ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கு சுந்தர். தங்களின் வரவேற்புரையும், நமது அய்யா அவர்களின் 73- வது பிறந்த நாள் விழாவும் இனிதே நடைபெற நாம் அனைவரும் இறைவனை வேண்டுவோம். நமது அய்யா அவர்களை வாழ்த்தும் அளவுக்கு வயதில்லை என்றாலும், வணங்குகிறேன். அய்யா அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். நான் கோவையில் இருந்தாலும் கலந்துகொள்ள முயற்சிக்கிறேன்.

  2. முதலில் உங்களுக்கு என் வாழ்த்துகள் ! உங்கள் உழைப்பு அதன் பலனை உங்களுக்குத் தந்து கொண்டிருக்கிறது..உங்கள் உரை கண்டிப்பாய் அனைவரின் கவனத்தையும் ஈர்க்கும் என்பதில் எனக்கு முழு நம்பிக்கை இருக்கிறது…! வாழ்த்துகள்…!

    பாலம் ஐயா அவர்களின் முயற்சி அவர் தமிழுக்கு செய்துள்ள பெரும் தொண்டு…இனி தமிழ் உள்ள காலம் வரையும் பாலம் ஐயா பெயர் நிலைத்திருக்கும்,..இந்த யோசனையை பாலம் ஐயா மனதில் விதைத்த ஐயா அப்துல் கலாம் அவர்களுக்கும், ஐயா லியோமுத்து அவர்களுக்கும் என் சிரம் தாழ்ந்த நன்றிகள்…! எப்போதும் மேன்மக்கள் மேன்மக்களே !

    முகநூலில் என் நண்பர் ஒருவர் இதைப் பகிர்ந்திருந்தார்: ” ஆங்கிலம் பேசும் பொழுது தவறி ஒரு சொல் கூட தமிழ் கலவாமல் கவனமாகப் பேசும் நாம் ஏன் தமிழ் பேசும் போது மட்டும் ஆங்கிலம் கலந்து பேசுகின்றோம் ” …தமிழ் பேசுவதை நாகரிகம் (!!?!!) கருதி பலர் தவிர்த்து வரும் நிலையில், இது போன்ற முயற்சிகள் தமிழின் பெருமையை உலக அளவில் கொண்டு செல்லும் என்பதில் ஐயமில்லை…!

    “யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல்
    இனிதாவது எங்கும் காணோம்.
    பாமரராய், விலங்குகளாய், உலகனைத்தும்
    இகழ்ச்சி சொலப் பான்மை கெட்டு
    நாமமது தமிழரெனக் கொண்டிங்கு
    வாழ்ந்திடுதல் நன்றோ? சொல்லீர்!
    தேமதுரத் தமிழோசை உலகமெலாம்
    பரவும்வகை செய்தல் வேண்டும்.

    யாமறிந்த புலவரிலே கம்பனைப்போல்,
    வள்ளுவர்போல், இளங்கோ வைப்போல்
    பூமிதனில் யாங்கணுமே பிறந்ததில்லை,
    உண்மை, வெறும் புகழ்ச்சியில்லை;
    ஊமையராய்ச் செவிடர்களாய்க் குருடர்களாய்
    வாழ்கின்றோம்; ஒருசொற் கேளீர்!
    சேமமுற வேண்டுமெனில் தெருவெல்லாம்
    தமிழ் முழக்கம் செழிக்கச் செய்வீர்!

    பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள்
    தமிழ்மொழியிற் பெயர்த்தல் வேண்டும்;
    இறவாத புகழுடைய புதுநூல்கள்
    தமிழ்மொழியில் இயற்றல் வேண்டும்;
    மறைவாக நமக்குள்ளே பழங்கதைகள்
    சொல்வதிலோர் மகிமை இல்லை;
    திறமான புலமையெனில் வெளிநாட்டோர்
    அதைவணக்கஞ் செய்தல் வேண்டும்.

    உள்ளத்தில் உண்மையொளி யுண்டாயின்
    வாக்கினிலே ஒளி யுண்டாகும்;
    வெள்ளத்தின் பெருக்கைப்போல் கலைப்பெருக்கும்
    கவிப்பெருக்கும் மேவு மாயின்
    பள்ளத்தில் வீழ்ந்திருக்கும் குருடரெல்லாம்
    விழிபெற்றுப் பதவி கொள்வார்;
    தெள்ளுற்ற தமிழமுதின் சுவைகண்டார்
    இங்கமரர் சிறப்புக் கண்டார். ”


    அன்று பாரதி கண்ட கனவு இன்று உயிர்பெற்றுக் கொண்டிருக்கிறது …! வாழ்க தமிழ்…!

    “கடமையைச் செய்; பலனை எதிர்பார்”

    விஜய் ஆனந்த்

    1. விஜய ஆனந்த்,

      பாரதியின் கவிதை வரிகளை பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி. படிக்கும்போதே ஒரு வித சிலிர்ப்பு எழுகிறது. பேனாவில் மைக்கு பதிலாக நெருப்பை ஊற்றி எழுதினாரோ?

      பாரதி ஒரு தீர்க்கதரிசி. அந்த கலைவாணியின் அருளை பரிபூரணமாக பெற்றவர். எனவே தான் அவரின் தீர்க்கதரிசனங்கள் அனைத்தும் ஒவ்வொன்றாக நடந்து வருகிறது.

      – சுந்தர்

  3. சக மனிதரைப்பற்றி ஒரு நொடி யோசிக்ககூட நேரமில்லாத இந்த எந்திர உலகில் திரு பாலம் ஐயா போல் ஒருவரை பார்ப்பது மிகவும் அபூர்வம் !!!

    அவர் வாழும் காலத்தில் நாமும் வாழ்கிறோம் என்பதும் , ராமபிரானுக்கு அணில் உதவியதை போல நம்மால் இயன்ற சிறு உதவியை மற்றவருக்கு செய்து அவர் தம் உள்ளத்தில் மகிழ்ச்சியையும் நிம்மதியையும் காண்பது ஒன்றே போகும் வழிக்கு புண்ணியம் சேர்க்கும் !!!

    சுந்தர் அவர்களே உங்களுக்கு கிடைத்திருக்கும் இந்த வாய்ப்பும் அங்கீகாரமும் இறைவன் சித்தம் !!!

    விழா செய்வனே சிறப்புடன் நடக்கவும்
    தொண்டுகள் மென்மேலும் பெருகிடவும்
    எமது பிரார்த்தனைகள் மற்றும் வாழ்த்துக்கள் !!!

    வாழ்க வளமுடன் !!!

  4. சுந்தர்ஜி,

    எனக்கு மிகவும் சந்தோஷமாக உள்ளது.
    தங்களுக்கு கிடைத்து இருக்கும் இந்த வாய்ப்பு தன்னலமின்றி தாங்கள் உழைத்ததின் பலன். கடவுளின் சித்தமும் அதுவே. கடவுளை நோக்கி ஓரடி வைத்ததின் பலன் அவன் உங்களை நோக்கி நூறு அடி வைக்கின்றான். தாங்கள் வாழ்கையில் மேலும் மேலும் உயர வாழ்த்துக்கள்.

    73- ம் பிறந்த நல காண விருக்கும் திரு பாலம் அய்யா அவர்களுக்கு எனது சிரம் தாழ்ந்த வணக்கத்தை தெரிவித்து கொள்கின்றேன். மற்றும் இந்த விழா சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்.

  5. அண்ணா, ரொம்ப சந்தோசமா இருக்கு.
    என்னை பொருத்தவரையில் இந்த வாய்ப்புக்கு நீங்கள் தகுதியானவர் தான். உங்கள் உரை சிறக்க என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

    மேலும்,வருகிற நாட்களில் பல பல பொன்னான வாய்ப்புகளை பெற்று, அதன் மூலம் நீங்களும், இந்த தளமும் நல்ல முன்னேற்றமடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.

    லியோ.

  6. இவ்வளவு பெரிய சபையில் சுந்தர் சார் அவர்களுக்கு வரவேற்புரைக்கு
    வாய்ப்பு கிடைத்ததர்க்கு பராட்டுக்கல்..

    உண்மையில் தமிழ் பேசுபவர்கள் எல்லாம் தமிழர் அல்லர்
    தமிழுக்காக தன்னையே அற்பணிக்கும் திரு பாலம் ஐயா தான் உண்மையில் தமிழர்,அவரின் சேவை நெஞ்சை நெகிய வைக்கிறது.

    விழா சிறப்பாக நடைபெறவும் நமது உரையும் சிறப்பான ஒன்றாக அமைய வேண்டி இறைவனிடம் பிரார்த்திக்கின்ரேன்.

    நன்றி ..

  7. அரசியல்வாதிகளால் ஒரு மனிதன் இந்த சமூகத்திற்கு ஒரு நல்ல விஷயம் செய்ய எத்துனை கஷ்டபடுகிறான் என்பதை இந்த பதிவின் மூலம் நன்றாக தெரிந்துகொள்ள முடிகிறது.
    .
    திரு.பாலம் கலியாணசுந்தரம் ஐயா அவர்களின் விடா முயற்சியின் காரணமாக இது சாத்தியமாகப்போகிறது ……ஐயா அவர்கள் மனிதருள் மாணிக்கம்…..அவரை சந்தித்து அவருடன் உரையாடியதை என்னால் நம்ப முடியவில்லை…. அதற்கு சந்தர்பம் ஏற்படுத்தி கொடுத்த இந்த தளத்திற்கு நன்றி என்று ஒரு வார்த்தையில் கூறிவிட முடியாது….
    .
    இம்மண்ணில் இன்னமும் ஈரம் உள்ளதற்கு ஐயா லியோமுத்து போன்றர்கள்தான் காரணம்….கடவுள் சில நேரம் தானாக செய்கிறார் சில நேரம் நம்போன்ற மனிதர்கள் வாயிலாக செய்கிறார் என்று ‘நான் சிவப்பு மனிதன்’ படத்தில் ரஜினி ஒரு வசனம் பேசுவார்….அது எவ்ளோ உண்மை என்று தொடர்ந்து நம் தலத்தில் வரும் கட்டுரைகள் சான்று….
    .
    இந்த அற்புத விழவில் நீங்கள் வரவேற்புரை ஆற்றுகிறீர்கள் என்பது பெருமையான விஷயம் என்றாலும் இந்த நிலைக்கு நீங்கள் உயர உங்கள் உழைப்பு தான் காரணம்என்றால் மிகையாகாது. இது தாமதமாக கிடைத்த அங்கீகாரம்…..இருப்பினும் இறைவனின் திருவிளையாடலில் இது எல்லாம் சர்வசாதாரணம்….
    .
    இந்த தளத்தின் வாசகன் என்ற முறையுலும் உங்களின் நண்பன் என்ற முறையுலும் இந்த அழைப்பிதழை பார்க்கும் பொழுது என்னுள் எழும் உணர்சிகளை வார்த்தைகளை விவரிக்க முடியவில்லை.
    .
    நீங்கள் அடிக்கடி சொல்லும் வார்த்தை…..”””நீங்கள் கடவுளை நோக்கி ஒரு அடி எடுத்துவைத்தால் அவன் உங்களை நோக்கி பத்து அடி எடுத்து வைப்பான் என்று… “””” அது எந்தளவு உண்மை என்பது இந்த பதிவின் மூலம் நன்றாக தெரிகிறது….

    இதே போல் எனக்கும் ஒரு சந்தர்பத்தை நான் சார்ந்த துறையில் என் பணியில் அந்த ஆண்டவன் ஏற்படுத்தியுள்ளான்…அது என்ன என்பதை கூடிய விரைவில் பகிர்ந்து கொள்கிறேன்…
    .
    மாரீஸ்வரன்

  8. Dear Sundar,

    My respectful salutations to Palam Kalyanasundaram Iyya on the eve of his 73rd birthday and to Mr. Leo Muthu for his great gesture.

    It is true that such people are living among us and inspiring us to do our bit to the society. It is because of your selflessness and relentless efforts with God’s grace that you have the opportunity to address the gathering on this occasion.

    It is a good beginning for Rightmantra and all of us.

    May God bless this occasion to be a fruitful one

    – Baba Ram

  9. இந்த பதிவை படிக்கும் போதே ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கு சார் . தங்களின் வரவேற்புரையும், நமது அய்யா அவர்களின் 73- வது பிறந்த நாள் விழாவும் இனிதே நடைபெற வாழ்த்துக்கள்……

  10. “வரவேற்புரை – ரைட்மந்திரா சுந்தர்…” (சூப்பர்)
    வாழ்த்துக்கள் சுந்தர்ஜி…

  11. VAAZHTHUKKAL SUNDAR ANNA.
    UNMAYAVE ITHU THAMIZHUKKUM, THAMIZHARKUM PERUMAI THAN.
    THAMIZH MOZHIYA VALAKUREN SOLRAVANGA THAMIZH MOZHIKKU MAANAADU NADATHI KODI KODIYA SELAVU PANNURAANGA.
    ANA UNMAIYA THAMIZH MOZHIYA VALAKKA NENAKIRAVANGA ORU CHINNA VIZHA KOODA VENDAM NENAKIRANGA.

  12. அய்யா அவர்களின் 73- வது பிறந்த நாள் விழாவும் கூட நற்பணி விழாவாக தமிழர்களின் எதிர்கால தேவையை ஒட்டியே நடைபெறுவது மிக்க மகிழ்ச்சியை தருகிறது.

    உங்களின் வரவேற்ப்பு உரை எழுச்சி மிக்கதாக அமையட்டும்.

    வாழ்த்துக்கள் ஜி.

  13. Awesome Sundar anna
    It’s the perfect result for ur never ending efforts and never say die attitude!
    God knows how to use his instruments(we all are nothing but his mere puppets)..he s giving u a great role!!
    Ur getting closer to where u wanna be!!..
    Don know how u have acquired dis sheer amount of will power and persistence…please tell us also THE SECRET
    Proud to know you..and I am very much sure that THIS IS JUST THE BEGINNING OF ALL THE GREAT THINGS THAT UR GONNA DO..!

    Note—Please don’t burn out urself! dis society and country needs ur service for a long time!

    Regards
    R.HariHaraSudan
    “HE WHO KNOWS THE SELF KNOWS ALL”

  14. இன்று தான் இந்த அறிவிப்பை படித்தேன். நிகழ்ச்சி பற்றிய பதிவினை கூடிய சீக்கிரம் எதிர்பார்க்கிறேன். வாழ்த்துக்கள்.

  15. வாழ்த்துக்கள் ஜி.
    இன்று தான் இந்த அறிவிப்பை படித்தேன். நிகழ்ச்சி பற்றிய பதிவினை கூடிய சீக்கிரம் எதிர்பார்க்கிறேன்.

Leave a Reply to Venky Cancel reply

Your email address will not be published. Required fields are marked *