Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Thursday, March 28, 2024
Please specify the group
Home > Featured > குல தெய்வ வழிபாடு குறித்து மகா பெரியவா சொல்வது என்ன?

குல தெய்வ வழிபாடு குறித்து மகா பெரியவா சொல்வது என்ன?

print
ன்மீகத்தில் மகா பெரியவா அவர்கள் ஒரு என்சைக்ளோபீடியா என்பது நாம் அறிந்ததே. அவருக்கு தெரியாத விஷயங்களே இல்லை. அவர் விளக்கம் தராத சந்தேகங்களே இல்லை. குல தெய்வ வழிபாட்டின் அவசியம் குறித்து மகா பெரியவா கூறியதாக திரு.இந்திரா சௌந்தர்ராஜன் ‘தீபம்’ ஆன்மீக இதழில் கூறியதை நண்பர் பால்ஹனுமானின் தளம் வாயிலாக அறிந்துகொண்டதை  இங்கு தருகிறேன்.

நிச்சயம் இதை அனைவரும் படிக்கவேண்டும். பகிர்ந்துகொள்ளவேண்டும் பயனடையவேண்டும்.

அவரவர் குல தெய்வத்தையும் பித்ருக்களையும் ஆராதிப்போம். நலம் பெறுவோம்.

=========================================

குல தெய்வ வழிபாடு குறித்து மகா பெரியவா சொல்வது என்ன?

சந்திரசேகரம்

– இந்திரா செளந்தர்ராஜன்

ன்று ஏதாவது ஒரு சிக்கல் என்றால், நாம் நம் ஜாதகத்தை எடுத்துக்கொண்டு முதலில் போய்ப் பார்ப்பது நல்ல ஒரு ஜோசியரைத்தான்! ஜோசியரில் நல்ல ஜோசியர் கெட்ட ஜோசியர் என்று இருக்கிறார்களா என்ன என்று கேட்கலாம். சந்தேகமே வேண்டாம்! இருக்கிறார்கள் என்பதே என் பதிலாகும். எப்படி?

நமக்கு நேரம் நன்றாக இருந்து விதியும் இருந்தால், நன்றாக சரியான ஜோசியரிடம்தான் நாம் போய் நிற்போம். அவரும் நம் கட்டங்களைப் பார்த்து, சரியாக கணக்குப் போட்டு பின்னர் பிசகு எதுவுமில்லாமல் நமக்குத் தீர்வைச் சொல்லுவார்.

நம் நேரத்தில் பிசகு இருக்கும் பட்சத்தில், ஒரு அரைகுறை ஜோசியரிடம்தான் போய் மாட்டுவோம். அவரும் அவர் அறிந்ததைக் கூறி, நம்மைத் தவறாக வழிநடத்தி விடுவார். இந்த உலகத்தில் எல்லாமே இரண்டாக இருக்கிறது. இனிப்பென்றால் கசப்பு, நெருப்பென்றால் குளிர், அதேபோல நல்லவிதமாய் ஒருவர் என்றால், தீயவிதமாய் ஒருவர்…

இவர்கள் எப்படி இருக்கலாம் என்றெல்லாம் கேட்க முடியாது. மனித இனம் தோன்றிய நாளில் இருந்தே இதுதான் நிலைப்பாடு. இனியும் அது இருந்தே தீரும். ஜோதிடர்களுக்கும் இது பொருந்தும்.

சரி, இந்த ஜோதிடர் எப்படிப்பட்டவராக இருந்தாலும் தவறாமல் ஒரு கேள்வியை நம்மிடம் கேட்பார். அதுதான் குலதெய்வம் பற்றியது. ‘உங்கள் குலதெய்வம் எது? அதை நீங்கள் முறையாக வணங்கி வருகிறீர்களா?’ என்பதுதான் அந்தக் கேள்வி. கடவுள் ஒருவரே என்பதுதான் சர்வமத சித்தாந்தம். நம் இந்து மதம்தான், அந்த ஒருவரைப் பலவாக ஆக்கி நாம் பக்தி செய்திட பகிர்ந்து அளித்திருக்கிறது. இது அந்தக் கடவுளை எளிதாக உணரவும், நெருங்கவும் நமக்கும் மிக வசதியாக உள்ளது. நமது தெய்வங்கள் அலங்காரமாக, ஆயுதங்களோடு இருப்பதன் பின்புலம், நம் உளவியல் நிமித்தமே என்பதுதான் நம் கடவுளர்களின் சிறப்பே!

இதனால்தான் கடவுளோடு நாம் மிகவும் நெருங்க முடிகிறது. ‘வாடா போடா’ எனலாம்… அப்பா அம்மா எனலாம்… நண்பன் எனலாம்… குருவாகவும் கொள்ளலாம். நம் குழந்தையாகவும் கருதி தூக்கி வைத்துக் கொஞ்சலாம்.

அன்பும் பக்தியும் இருந்துவிட்டால் போதும்… யோகியரும் ஞானியரும் காட்டிலும் மேட்டிலும் காலம் காலமாக தவம் செய்தும் அடைய முடியாமல் தவிக்கின்ற அந்தக் கடவுளை, நாம் மிக இலகுவாக நம் அன்றாட வாழ்வில் அடைந்து விடலாம். இதற்காகவே நமக்கே நமக்கு என்று நம் முன்னோர்கள் வீடு வாசல் என்று சொத்து சுகங்களை விட்டுச் செல்வது போல் ஒரு தெய்வத்தையும் விட்டுவிட்டுப் போயிருக்கிறார்கள். அதுதான் குலதெய்வம்!

எந்த தெய்வத்தை வணங்காவிட்டாலும், இந்த தெய்வத்திடம் ஒரு வணக்கம் இருந்தே தீர வேண்டும் என்பதுதான் நம் முன்னோர்களுக்கும் எண்ணம். குலதெய்வம் என்று ஒன்று இருந்தாலே, சில சடங்கு சம்பிரதாயங்கள் இருந்தே தீரும். குழந்தை பிறந்தால் அதன் முதல் முடியை காணிக்கையாகத் தருவது. அது போக, பிள்ளைப் பேற்றுக்கும் அறிவு விழிப்புக்கும் தூண்டுதலான காது குத்துதல் போன்ற நிகழ்வுகள் குலதெய்வ வழிபாட்டுச் சடங்கை ஒட்டியே இருக்கும்.

சில குடும்பங்களில், குலதெய்வ வழிபாடு என்பதே மறந்து, குலதெய்வம் எதுவென்றே தெரியாத அமைப்பெல்லாம் உண்டு. இதெல்லாமே நம் ஜாதகக் கட்டத்தைப் பார்த்தால் கணக்குப் போட்டு உணர முடியும். ஜாதகத்தில் பூர்வ புண்ணிய ஸ்தானம் என்று ஒரு இடம் உண்டு. அதில் நம் பக்தி, சாபம், திமிர், வியாதி, தரித்திரம் என்று எல்லாம் பளிச்சென்று தெரியும் விதமாக டேரா போட்டிருக்கும். இதை வைத்துத்தான் ஜோதிடரும் கேட்பார்!

என்றால், குலதெய்வ வழிபாட்டோடு பிறதெய்வ வழிபாடுகளை குறைவின்றிச் செய்பவர்கள் எல்லோருமே ஆனந்த வாழ்க்கை வாழ்கிறார்களா? அவர்களுக்கு துன்பமே இல்லையா என்று குயுக்தியாகக் கேட்கக் கூடாது.

ஆக, குலதெய்வத்தை மறவாமல் போற்றி வருபவர்கள் குடும்பங்களில் பெரிய துன்பங்களுக்கு இடமில்லை. பெரிதாக ஏதாவது வந்தாலும், அது நிச்சயம் நீங்கி அந்தக் குடும்பம் ஒரு நல்ல வாழ்க்கையை இந்த மண்ணில் வாழ்ந்து காட்டுகிறது என்பது தான் அடிப்படைச் சிறப்பாகும்.

வீடு, வாசல், நிலம், நீச்சு, நகை, நட்டு இவையெல்லாம் காசிருந்தால் வாங்க முடிந்தவை. கல்வி, பிள்ளைப் பேறு, ஆரோக்கியம், நீண்ட ஆயுள் இவை எல்லாம் அருள் இருந்தால் மட்டுமே பெற முடிந்தவை ஆகும்.

இந்த பூமியில் ஒரு நல்ல வாழ்வு வாழ்ந்திட இரண்டும்தான் தேவைப்படுகிறது. இதில் பின்னதான அருள் சார்ந்த விஷயம் வந்துவிட்டால், முன்னதாக உள்ள பொருள் சார்ந்த விஷயங்களை நாம் சுலபமாக அடைந்து விடலாம். எனவே, பிரதான தேவையே அருள்தான்! இந்தக் குலதெய்வத்தின் சிறப்பை பெரியவர் உணரச்செய்த சம்பவம் ஒன்று உண்டு.

பெரியவர் ஊர் ஊராகச் சென்று சாதுர்மாஸ்ய விரதம் இருந்துவந்த ஒருநாள் அது. அப்படி ஒரு கிராமத்தில் அவர் தங்கியிருந்தபோது, ஒரு விவசாயி பெரியவரை மிகவும் பிரயாசைப்பட்டு வந்து சந்தித்தார். அவரிடம் துளியும் உற்சாகமில்லை. முகமும் இருளடைந்து போயிருந்தது. வாயைத் திறந்து தன் துன்பங்களைக் கூற அவசியமே இல்லாதபடி, பார்த்த மாத்திரத்தில் அவரின் துன்பம் பெரியவருக்கு விளங்கி விட்டது. இருந்தும் அந்த விவசாயி,

சாமி… ஏண்டா உயிரோட இருக்கோம்னு இருக்கு. பேசாம குடும்பத்தோட தற்கொலை பண்ணிக்கலா மான்னுகூட தோணுது. ஒரு மனுஷனுக்கு வாழ்க்கைல போராட்டம் இருக்கும். ஆனா, என் வரைல போராட்டமே வாழ்க்கையா இருக்கு” என்று துயரத்தைச் சொல்லி அழுதார்.

பெரியவர் அவரிடம், குலதெய்வத்துக்கு ஒழுங்கா பூஜை செய்யறியா?” என்று கேட்டார்.

குலதெய்வமா… அப்படின்னா?” – திருப்பிக் கேட்டார் அவர்.

சரிதான்… உங்க குலதெய்வம் எதுன்னே தெரியாதா?”

ஆமாம் சாமி… வியாபார விஷயமா எங்க முன்னோர்கள் பர்மா போயிட்டாங்க. பல காலம் அங்க இருந்துட்டு திரும்பிவந்த குடும்பம் எங்க குடும்பம். என் பாட்டன்ல ஒருத்தருக்கு கடவுள் நம்பிக்கை இல்லாததால, அவர் பிள்ளைகளும் அவரைப் பார்த்து அப்படியே வந்துட்டாங்க. நாங்கள்ளாம் அந்த வழில வந்தவங்கதான்” என்றார்.

உன் முன்னோர்கள் யாராவது இப்ப உயிரோட இருக்காங்களா?”

ஒருத்தர் கிராமத்துல இருக்கார். என் அப்பா வழி பாட்டனார் அவர்.”

அவர்கிட்ட போய் உங்க குலதெய்வத்தைப் பத்தி கொஞ்சம் கேட்டுண்டு வா.”

ஏன் சாமி… அந்த சாமி எதுன்னு தெரிஞ்சு கும்பிட்டாதான் என் பிரச்னை தீருமா?”

அப்படித்தான் வெச்சுக்கோயேன்…”

என்ன சாமி நீங்க… ஊர்ல எவ்வளவோ கோயில் இருக்கு. அங்க எல்லாமும் சாமிங்கதான் இருக்கு. அப்ப அதுக்கெல்லாம் சக்தி இல்லையா?”

நான் அப்படிச் சொல்லவே இல்லையே!”

அப்ப இந்த சாமில ஒண்ண கும்பிடச் சொல்லாம, குலதெய்வத்த தெரிஞ்சுக்கிட்டு வரச் சொல்றீங்களே!”

காரணமாத்தான் சொல்றேன். ஓட்டைப் பாத்திரத்துல எவ்வளவு தண்ணி பிடிச்சாலும் நிக்காது. நீ, என்ன மாதிரி எதுவும் வேண்டாம்கற சன்னியாசி இல்லை. வாழ்வாங்கு வாழ விரும்பற குடும்பம்தான். எனக்கு, பாத்திரமே கூட தேவையில்லை. ஆனா, உனக்கு பாத்திரம்தான் பிரதான தேவை. பாத்திரம் இருந்தாத் தானே எதையும் அதுல போட்டு வெக்க முடியும்? அப்படிப்பட்ட பாத்திரம் ஓட்டையா இருந்தா, அதுல எதைப் போட்டாலும் அந்த ஓட்டை வழியா வெளிய போகுமா போகாதா?”

அப்ப குலதெய்வம்தான் பாத்திரமா… அது தெரியாததால ஓட்டைப் பாத்திரமாயிடிச்சுங்கறீங்களா?”

நீ, கேள்வி கேட்காம உன் குலதெய்வம் எதுங்கறத தெரிஞ்சு அந்தக் குலதெய்வத்தைத் தேடிப்போய் சாஷ்டாங்கமா உடம்பு தரைலபட நமஸ்காரம் பண்ணிட்டு வா. உனக்கு அப்புறமா விளக்கமா சொல்றேன்” என்று அவரை அனுப்பி வைத்தார்.

அவரும் ஒரு பத்து நாள் கழித்து, சாமி! நீங்க சொன்னதைச் செய்துட்டேன். எங்க குலதெய்வம் பேச்சாயிங்கற ஒரு அம்மன். அதோட கோயில் ஒரு மலை அடிவாரத்துல இடிஞ்சுபோய் கிடந்துச்சு. யாருமே போகாம விட்டதால, கோயிலை புதர் மூடிடுச்சு. நானும் என் மக்களும் போய் புதரை எல்லாம் வெட்டி எறிஞ்சோம். அங்க, ஒரு நடு கல்தான் பேச்சாயி! ஏதோ எங்களால முடிஞ்ச அளவுக்கு அதுமேல பால ஊத்தி அபிஷேகம் செஞ்சு, கற்பூரம் காட்டி கும்பிட்டுட்டு வரேன்” என்றார்.

சபாஷ்… அந்தக் கோயிலை நல்லபடியா எடுத்துக்கட்டு. தினசரி அங்க விளக்கு எரியும்படியா பார்த்துக்கோ! உன் கஷ்டங்கள் தானா நீங்கிவிடும். பேச்சாயி பூவும் பொட்டுமா ஜொலிச்சா, உன் குடும்பமும் ஜொலிக்கும்” என்றார் பெரியவர்!

சாமி! நிறைய விளக்கமெல்லாம் சொல்றதா சொன்னீங்களே… எதுவுமே சொல்லலியே?”

அடுத்த வருஷம் இதே தேதிக்கு வா! அப்ப சொல்றேன். நான் சொன்னதை மறந்துடாதே… பேச்சாயியை விட்டுடாதே!”

அவரும் அவ்வாறே செய்தார். ஒரு வருடமும் ஓடியது. அவரும் பெரியவரைக் காண திரும்ப வந்தார். இந்த முறை அவரிடம் ஒரு செல்வச் செழிப்பு தெரிந்தது. பெரியவரை ஒன்றும் சும்மா பார்க்க வரவில்லை. தட்டு நிறைய பூ, பழம் இவற்றோடு கொஞ்சம் பணம் என்று தான் முன்னால் வந்து நின்றார். பெரியவரும் ஏறிட்டார்.

சாமி… நான் இப்ப நல்லா இருக்கேன். பேச்சாயி புண்ணியத்துல பிள்ளைகளும் நல்லா இருக்காங்க. இதுக்கு வழிகாட்டின பெரியசாமி நீங்கதான்! ஆனா, எனக்கு விளக்கத்த மட்டும் இன்னும் தராமலே இருக்கீங்க… இந்த அதிசயம் எப்படி நடந்தது?” – என்று திரும்ப அவர் கேட்டார். பெரியவரும் திருவாய் மலரத் தொடங்கினார். அது…?

xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx

(தொடர்ச்சி….)

ரு வருடம் கழித்து திரும்ப வந்த பர்மாக்காரரிடம் ‘குலதெய்வம்’ என்பது குறித்து பெரியவா சொன்னது மிகவும் கவனமாய் அனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய ஒன்றாகும்.

நம் முன்னோர்கள் வணங்கி வந்த தெய்வம்தான் குலதெய்வமாகும். முன்னோர்கள் என்றால், நமக்கு முன்பிறந்த எல்லோருமே முன்னோர்கள்தான். ஆனால் இங்கே முன்னோர்கள் என்றால், நாம் நம் தந்தைவழி பாட்டன் பாட்டிமார்களைக் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும். இந்தத் தந்தைவழி பாட்டன்மார் வரிசையில், மிகப்பெரிய ஒழுங்கு ஒன்று இருப்பதை கூர்ந்து கவனித்தால் உணரலாம். அதுதான் ‘கோத்திரம்’ என்னும் ஒரு ரிஷியின் வழிவழிப் பாதை.

பிற கோத்திரத்தில் இருந்து பெண்கள் வந்து இந்த வழிவழிப் பாதையில் நம் தாத்தாக்களின் வாழ்க்கைத் துணையாகக் கை பிடித்திருப்பார்கள். எக்காரணம் கொண்டும் ஒரே கோத்திரத்தில் பெண் சம்பந்தம் ஏற்பட்டிருக்காது. இதனால், ரிஷி பரம்பரையானது சங்கிலிக் கண்ணி போல அறுபடாமல், ஒரே சகோதரத்துவத்தோடு வந்த வண்ணம் இருக்கும். இது ஒரு முக்கியமான ஒழுங்கு சார்ந்த விஷயமாகும்.

அடுத்து, இவர்கள் அவ்வளவு பேருக்குமே நட்சத்திரம் வேறாக, உடலமைப்பு வேறாக, குணப்பாடுகள் வேறாகவும் இருக்கும். அதுதான் இயற்கையும்கூட! ஆனால், கோத்திர வழி மாறாதபடி இவர்கள் நம் குலதெய்வம் என்னும் தெய்வ சான்னித்தியத்தில் கைகூப்பி நின்றிருப்பார்கள். தலைமுடி கொடுத்திருப்பார்கள். காது குத்துவது போன்ற வழிவழிச் செயல்பாடுகளும் நடந்துமிருக்கும்.

இந்த உலகத்தில் ஆயிரம் கோயில்கள் இருக்கின்றன. அந்தக் கோயில்களுக்கு அவர்கள் போயிருக்கலாம்; போகாமலும் இருக்கலாம். அதற்கு உத்தரவாதமில்லை. ஆனால், குலதெய்வக் கோயிலுக்கு, நாம் பக்தி என்கிற ஒன்றை அறிவதற்கு முன்பே, நம் தாய் தந்தையரால் அங்கு கொண்டு செல்லப்பட்டு, வணங்க வைக்கவும் படுகிறோம். இதன்படி பார்த்தால், குலதெய்வ சன்னிதியில் சென்று நாம் நிற்கும் போது, நம் பரம்பரை வரிசையில் போய் நிற்கிறோம். இந்த வரிசைத் தொடர்பை வேறு எங்காவது, எந்த விதத்திலாவது உருவாக்க முடியுமா?”

– பெரியவர் சொல்லச் சொல்ல, பர்மாக்காரரிடம் பரவசம்!

அது மட்டுமல்ல. ஒரு மனிதனின் பிறப்புக்குப் பின்னே இப்படியொரு பரம்பரை வரிசை இருப்பதை நினைக்கக்கூட தெரியாமல், அதிகபட்சம் இரு பாட்டன் பாட்டி பேருக்கு மேல் தெரியாமல் அல்லவா நம் வாழ்க்கைப் போக்கு உள்ளது?

ஒரு குடும்பத்தைப் பொருத்தவரையில் அந்த இறைசக்தி குலதெய்வமாக, அவர்களுக்கான ஒரு பெயரில் வெளிப்படுகிறது. இப்படிச் சொல்வதுகூட தவறு. வெளிப்பட, வழிவகை செய்யப்பட்டது! அதுவும் யாரால்? நம் முன்னோர்களால்! அவர்கள் யார்? நம்முடைய தொடக்கங்கள்… நாம் யார்? அந்தத் தொடக்கத்தின் தொடர்ச்சி! மொத்தத்தில், நாம் வேறு அவர்கள் வேறு இல்லை.

இந்த வழிவழிப் போக்கில் ஒருவர் மூட்டை மூட்டையாகப் புண்ணியத்தைக் கட்டியிருக்கலாம். இன்னொருவர் பாவமேகூட பண்ணியிருக்கட்டுமே! நாம் அங்கே போய் நின்று நம் பொருட்டு பிரத்யேகமாக வெளிப்படும் அந்த இறைசக்தியைத் தொழும் போது, அவர்களும் பித்ருக்களாக விண்ணில் இருந்து பார்க்கிறார்கள். நாமும் ஆசீர்வதிக்கப்படுகிறோம். இது எத்தனை தூரப் பார்வையோடு, வடிவமைக்கப்பட்ட ஒரு விஷயம்?”

– பெரியவர் விளக்கி முடிக்க, வந்திருந்த கூட்டம் சிலிர்த்துப் போனது. இந்தக் குலதெய்வ வழிபாட்டில் மிகப்பெரிய நல்ல சமாச்சாரம் ஒன்றும் அடங்கியுள்ளது. சந்தர்ப்ப சூழல்களால் அல்லது பூர்வ கர்மத்தால், அதுவுமல்லாது பல்வேறு காரணங்களால் ஒருவருக்கு பக்தி உணர்வு இல்லாமல் போகிறது என்று வையுங்கள். அதாவது, கண்ணுக்குப் புலப்படாத இந்தக் கடவுளை நாம் நம்பத் தயாரில்லை.

நான் ஒன்றும் முட்டாளில்லை என்று அவர் வீராப்பா பேசி, நாத்திகத்தில் நம்பிக்கை ஏற்பட்டு அதிலேயே அவர் போகும் நிலை வந்தாலும் பெரிதாய் தோஷமில்லை. ஏனென்றால், அவர் இவ்வாறு ஒரு நாத்திக நிலைப்பாடு கொள்ளும் முன்பே, இந்தப் பரம்பரை வரிசையில் பெற்றோர்களால் வணங்க வைக்கப்பட்டு ஆசீர்வதிக்கவும் பட்டிருப்பதால், அவர் ஒருநாள் நிச்சயம் மனம் மாறி அருள் தொடர்புக்கு ஆட்படுவார் என்பது தான் இதிலுள்ள மிகச்சிறந்த ஒரு விஷயமாகும்.

இப்படி நம்பிக்கையற்றுப் போனவர், தன் பிள்ளைகளை அழைத்துவர மாட்டாரே! அவர்கள், இதனால் இந்தப் பரம்பரை தொடர்புக்கு ஆட்படாமல் போய் விடுவார்களே என்று ஒரு கேள்வி எழலாம். பெரும்பாலும் ஒரு வழியில், ஒரே கோத்திரத்தில் திருமணங்கள் புரிந்து கொள்ளாமல், முன்னோர் காட்டிய வழியில் போகும் பட்சத்தில், வாழ்வில் நமக்கு பெரிய கஷ்டங்கள் வருவது இல்லை என்பதுதான் இம்மட்டில் புரிந்து கொள்ள வேண்டிய விஷயமாகும். உடம்புக்கு உணவுப் பொருளால் சக்தி ஏற்படுவது போல், மனதுக்கு இறை அருளால் சக்தி ஏற்படுகிறது.

ஒரு குலதெய்வத்தின் பின்னால், இப்படியான பிரத்யேக சிறப்புகள் நிறையவே உள்ளது. குல தெய்வத்தைப் பக்தியோடு கொண்டாடும்போது, பெரிய தோஷங்களுக்கு இடமில்லாமல் போய் நம் வாழ்வும் சிறப்பாகிறது. பர்மாக்காரர் வரையிலும் அதுதான் நிகழ்ந்தது.

எனக்கும் இந்தக் குலதெய்வ விஷயம் மனசுக்குள் பெரும் உற்சாகத்தைத் தந்தது. நான் எங்கள் குலதெய்வக் கோயிலுக்குப் போனபோது என் பார்வையே மாறிப்போனது. அந்தக் கோயிலில் உள்ள ஒவ்வொரு தூண்களையும் தொடும்போது, என் தாத்தன் தொட்ட தூண்.. என் தாத்தன் நின்று மூச்சுவிட்ட இடம்.. என் முப்பாட்டன், அதற்கும் முற்பட்ட பாட்டன் நடந்து திரிந்த தரைப் பரப்பு.. அவர்களைப் பார்த்த பெருமாள் என்னையும் பார்க்கிறார் என்பதா? இல்லை, அவர்கள் பார்த்த பெருமாளை நான் பார்க்கிறேன் என்பதா?

ஒன்று உறுதி. அந்தப் பெருமாளை வணங்கிய வம்சம் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. இதுவே எத்தனை பெரிய அனுக்ரகம்! இந்தக் குலதெய்வ விளக்கமும், இதன் பின்புலமும் எனக்குள் நம் முன்னோர்கள் மேல் பெரும் மரியாதையை ஏற்படுத்திற்று.

(நன்றி : தீபம் (கல்கி வழங்கும் ஆன்மீக இதழ்) & balhanuman.wordpress.com)

22 thoughts on “குல தெய்வ வழிபாடு குறித்து மகா பெரியவா சொல்வது என்ன?

  1. இந்த பதிவை படிக்கும் போது,எனக்கு ஏர்பட்டிருக்கும் சோதனைகல்
    குலதெய்வ வழிபாட்டை மரந்ததால்தான் என நினைக்கின்றேன்.
    இப்பவே போய் பார்கின்றேன் எங்கல் குல தெய்வத்தை.

    இப்பதிவை இட்டு நினைவு படுத்தியதுர்க்கு நன்றீ..

  2. சுந்தர்ஜி,

    குல தெய்வத்திற்கு நாம் உள்ளன்போடு செய்யும் ஒவ்வொன்றும் நம்மை மேன்மை அடைய செய்யும்.
    என்னமோ தெரியவில்லை. மஹா பெரியவா பத்தி எப்ப படிச்சாலும் கண்களில் நீர் வருகின்றது. அந்த பேசும் தெய்வம் சன்னதிக்கு
    நம் தளம் சார்பாக நம் தள வாசககர்கள் ஒரு முறை காஞ்சிபுரம் சென்று வர வேண்டும்.

    1. இதை படித்ததும் எனக்கு மகா பெரியவரை நேரில் வந்து பேசியது போல் உள்ளது எனவே இனிமேல் வருட வருடம் எங்கள் குலதெய்வ வழிபாட்டிற்கு என் குடும்பத்தோடு கட்டாயம் தரிசித்து வர என் குடும்ப கஷ்டங்கள் தீர சென்று வருவேன் அதற்கு அருள் புரயுங்கள் periavaa

  3. குல தெய்வத்தை வழிபடனும்னு பெரியவங்க சொல்லி இருக்காங்க. ஆனா, இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்ததுன்னு இப்ப தான் தெரிஞ்சுட்டோம். மிக்க நன்றி.

  4. நமது குடும்பத்தில் முதன் முதலில் யார் சென்று குல தெய்வத்தை தரிசித்தாலும் .எல்லோரும் வந்திருக்கிறர்களா என்று அனைவரையும் தேடுவாரம் .எல்லாரும் வந்து நமக்கிட்ட ஆசிர்வாதம் வாங்கியாச்சி .இந்த பெரியபையனக்கணோமே ? அவன்தான் ரொம்ப கஷ்டப்படுறன் ? அவங்கப்பன் இவனுக்கு மேல ?சதா என்கிட்டே பொலம்பிக்கிட்டே இருக்கான்?இந்த பையன் வந்த தானே? அவனுக்குன்னு என்னென்னமோ குடுக்கனும்முன்னு எடுத்து வச்சிருக்கேன் .

    இது போலத்தான் எல்லா குலதெய்வமும் ஏங்குகிறது என்பது தான் உண்மை .

    நான் குடும்பத்தோட கிளம்பிட்டேன் .

    1. “அவனுக்குன்னு என்னென்னமோ குடுக்கனும்முன்னு எடுத்து வச்சிருக்கேன் “.

  5. நல்ல பதிவு, எந்த நேரத்திலும் நமக்கு துணை இருப்பது நம் முன்னோர்களாகிய நம் குலதெய்வங்கள் மட்டும்தான், கண்கண்ட தெய்வம் நம் பெரியவாளே அதை வலியுறுத்தும்போது அதன் சிறப்பு இன்னும் புரிகிறது, என் அத்தை வீட்டில்கூட அவர்கள் குலதெய்வம் அறிய விரதம் இருந்து வேண்டினார்கள், நாற்பது நாள் அசைவம் தொடாமல், அந்த நாற்பது நாளும் தினமும் இரவு படுக்க போகும் முன்பு வாசலில் குலதெய்வத்தை எண்ணி கற்பூரம் ஏற்றி வழிபட வேண்டும், இதை முதல் நாள் ஒன்று இரண்டாம் நாள் இரண்டு என நாற்பதாவது நாள் நாற்பது கற்பூரம் ஏற்ற வேண்டும், நடுவே வெளியூர் செல்ல நேரிட்டாலும் வீட்டில் யாரேனும் ஒருவராவது தங்கி இருந்து இதை முடிக்க வேண்டும், தடங்கல் ஏற்பட்டால் முதலில் இருந்து ஆரம்பிக்க வேண்டும், எங்களுக்கு 28வது நாளே எங்கள் குலதெய்வம் யாரென்று யாரோ ஒரு மூன்றாவது மனிதர் மூலம் தெரியவந்தது நெகிழ்ச்சியான அனுபவம். பதிவுக்கு நன்றி சுந்தர் சார்,

  6. சிந்திக்க தூண்டும் உன்னதமான கட்டுரை !!!

    குலதெய்வ வழிபாட்டை பற்றி இவ்வளவு ஆழமாகவும் தீர்க்கமாகவும் அதே சமயம் எளிமையாகவும் மஹா பெரியவர் விளக்கிய விதம் பிரமிப்பூட்டுகிறது !!!

    பலருடைய வாழ்கையில் சரியான நேரத்தில் இந்த குலதெய்வ வழிபாட்டு கட்டுரை சென்று சேர்ந்திருக்கும் என்பதில் ஐயமில்லை !!!

    குல தெய்வத்தை வணங்குவோம் !!!
    குறைகள் இன்றி வாழுவோம் !!!

  7. சுந்தர் சார், மிக அருமையான கட்டுரை. மிக்க நன்றி. பெரியவாளின் ஆசிர்வாதமே. இந்த தெளிவான கட்டுரை. நன்றி

  8. கூடிய வரைக்கும் எங்கள் வீட்டில் வருஷம் ஒரு முறையாவது சென்று குலதெய்வத்தை வழிபடுவோம். நிச்சயம் அனைத்து நன்மையையும் நடக்கும்.

    கைலாஸ்.

  9. குலதெய்வ வழிபாடு பற்றி படித்தேன். சரியான நேரத்தில் இந்த கட்டுரை நான் படிக்க செய்த பெரியவாளுக்கு அனந்த கோடி நமஸ்காரம். We do not know anything about our kula theivam , except the name, “AGORA VEERA BATHIRAR.” And our ancestors belong to the village “THANNI KULAM SAATHANUR”, near Mannargudi. We know the name of our fore fathers. My father-in-law’s father name was RAMACHANDRAN, his father name was ANANTHARAMAN.Our grand father Ramachandran had a elder brother by name SUBBU SAASTRIGAL, ( incidentally we heard that, he was the one who went to “kula dheiva aaradhanai every year) and an elder sister by name alamu. Our grand father had a cousin ( chithappa/periyappa son) by name GOPALAN. I know this information is like searching a needle in haystack, but other than this we dont know anything. Our grandfather later migrated to Thiruvaarur and then to thirunaangur. This information was given by my father-in-law and mother-in-law,and they said they themselves dont know anything more. Lots of problem in the family, and all astrologers say ” WORSHIP KULA DEIVAM “. Will any body shed light ? Praying to MAHAPERIYAVAA, and our KULA DHEIVAM.

      1. All i can say is what my in laws have told us, as far as my knowledge goes our periya thaathaa ( subbu saastrigal ) did not have any children, and by default my in-laws did not learn from him or thaatha, any thing about kuladeivam. Only hope is Sri. Gopalan iyer’s descendants, about whom we dont know anything.

  10. வணக்கம்.

    குலதெய்வம் வழிபாடு தொடர்ந்து வருகிறது வாழ்க்கையும் தொடர்கிறது.

    இன்னொரு சமூகத்தின் குலதெய்வம் ஸ்ரீ அருள்மிகு ஆண்டிச்சி-பொன்னுத்தாய் அம்மன் ஆலயம் – இரண்டும் சொல்லான் கிராமம் – அழகியபாண்டியபுரம் போஸ்ட் – திருநெல்வேலி மாவட்டம் கட்ட உத்திரவானதால் அதற்கான பணிகள் நடைபெற்றுக் கொண்டு இருக்கின்றன. இருந்தாலும் கோயில் கட்டுவது என்பது எவ்வளவு கடினமான பணி என்பதை அனுபவத்தில் கண்டு கொண்டேன். நமது முன்னோர்களை எவ்வளவு வணங்கினாலும் பத்தாது. கற்பனைக்கு எட்டாத கோயில்களை கட்டி உள்ளனர். அதை பார்க்கின்ற பாக்கியமாவது நமக்கு கிடைத்தது நாம் செய்த புண்ணியம். ஆன்மீகம் தொடர்கிறது. அக்கிரமங்களும் தொடர்ந்து வருகிறது. எது சரி எது தவறு என்று கணிக்ககூட நம்மால் இயலவில்லை.

  11. மஹா பெரியவரின் அருமையான விளக்கம். மிக்க நன்றி.

  12. We also have a similar problem In finding kuladeivam. My husband’s Gothram is moudhgalya. His grandfather (sivaramakrishna sastrigal) hails from panduthagudi somewhere near mannargudi /thiruthiraipoondi /thiruvarur.later on he moved to thiruthiraipoondi and during in my father in law ‘s time he moved to chennai. For the past 15 to 20 years we have been visiting a templ in royapuram near mannargudi where the deity Is pethapurumal (don’t know if this is siva or vishnu amsa.).in the same temple kamakshi Amman is also there. Since my husband’s grandfather ‘s time no body has been visiting kuladeivam temple and only 20 years back we started visiting thie above temple in Royapuram basis information given by one of the family person. We want to know whether this is correct or not. We appreciate help in this regard. Thanks in advance.

Leave a Reply to Dheepa Cancel reply

Your email address will not be published. Required fields are marked *