Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Thursday, March 28, 2024
Please specify the group
Home > Featured > பிரேமவாசம் – கடவுளின் இல்லத்தில் ஒரு நாள்…!

பிரேமவாசம் – கடவுளின் இல்லத்தில் ஒரு நாள்…!

print
ந்த உலகில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கு ஒரு தாயின் அரவணைப்பும் அன்பும் எப்படி 24 மணிநேரமும்  தேவைப்படும் என்பதை குழந்தை பெற்ற தாய்மார்கள் அறிவார்கள். அருகே இருந்து பார்க்கும் தந்தைமார்கள் அதை விட அதிகம் அறிவார்கள். கைக்குழந்தைகளை பொறுத்தவரை தாய் தந்தை இருவரின் அரவணைப்பு கூட சில சமயம் போதாமல் போவதுண்டு. காரணம்… குழந்தைகளின் தேவைகள் அப்படி. 24 மணி நேரமும் அவர்களை கவனித்துக்கொண்டே இருக்க வேண்டும்.

“குழந்தை ஏன் அழுகிறதோ தெரியவில்லையே?” என்று பெற்ற தாய் கூட சமயங்களில் அழும் குழந்தையின் தேவையை அறிந்துகொள்ளமுடியாமல் கலங்கித் தவிப்பது உண்டு.

பெற்றோர்கள் இருக்கும் குழந்தைகளுக்கே இப்படி என்றால்… சாலையில் அனாதையாக வீசப்படும் குழந்தைகளின் நிலையை எண்ணிப் பாருங்கள்… அதுவும் உடல் ஊனம் காரணமாக அனாதையாக வீசப்படும் குழந்தைகளின் நிலைமை?

முறை தவறிய உறவுகளால், தவறான தொடர்புகளால், யாரோ இருவரின் இச்சை காரணமாகவும் பிறக்கும் குழந்தைகளை கொஞ்சமும் மனிதாபிமானம் இல்லாமல் சாலைகளில், பேருந்து நிலையங்களில், குப்பைத் தொட்டிகளில் வீசிவிட்டு செல்லும் கொடுமை அதிகரித்து வருகிறது.

(சராசரியாக இது போன்ற சம்பவங்களை வாரம் இருமுறையாவது செய்தித் தாள்களில் படிக்க நேர்வதுண்டு…!)

குழலினிது யாழினிது  என்ப தம் மக்கள்
மழலைச்சொற் கேளா தவர்

என்று கூறியிருக்கிறார் வள்ளுவர்.

ஆனால் முறையான திருமண வாழ்க்கையில் கூட ஊனமுற்ற ஒரு குழந்தை பிறந்தால் வளர்ப்பதற்குரிய சிரமங்களை நினைத்து அக்குழந்தையை அனாதையாக போட்டுவிட்டு போய்விடும் கொடுமையும் நடந்து வருகிறது.

சென்ற வாரம் ஒரு நாள், செய்தித் தாளில் திருச்சியில் இதே போன்று ஒரு குழந்தையை அனாதையாக போட்டுவிட்டு சென்ற சம்பவம் ஒன்றை படித்தேன். மனம் அந்தக் குழந்தையை எண்ணி பரிதவித்தது.

ஒரே வித்தியாசம் போடப்பட்டது குப்பைத் தொட்டியில் அல்ல… அந்த சமயபுரம் மாரியம்மன் கோவில் வாசலில்.

அந்த குழந்தையை இனி யார் பார்த்து கொள்வார்கள்?

எப்படி பராமரிப்பார்கள்?

யார் உடனிருந்து தேவைகளை கவனித்துக்கொள்வார்ககளா?

அழும்போது யாராவது பால்கொடுப்பார்களா?

பெற்றோர் இருந்தாலே பராமரிப்பது கஷ்டமாயிற்றே…

மனம் பலவாறாக சிந்தித்தது.

நிச்சயம் உங்களில் ஒரு சிலருக்கேனும் மேற்படி சம்பவத்தை படித்த பின்னர் இவ்வாறாக தோன்றியிருக்கும்.

இதற்கு என்ன காரணம்? இந்த குழந்தைக்கு மட்டும் ஏன் இப்படி ஒரு துரதிர்ஷ்டம்? (இது பற்றி மகா பெரியவா அவர்கள் கூறியிருக்கும் பதிலை வேறு ஒரு பதிவில் தருகிறேன்.)

இதோ அதே போன்று சென்னையில் அனாதரவாக விடப்பட்ட ஒரு குழந்தை எங்கே எப்படி இருக்கிறாள் என்று பார்ப்போமா ?

……………………………………………….

ரண்டு வாரத்திற்கு முன்னர்…. நமது பிரார்த்தனை கிளப் தொடர்பான பதிவை ஒரு நாள் காலை டைப் செய்துகொண்டிருந்தேன். சென்னை போரூர்-குன்றத்தூர் சாலையில் உள்ள கெருகம்பாக்கத்தில் இயங்கி வரும் ‘பிரேமவாசம்’ என்கிற காப்பகத்தில் இருந்து மின்னஞ்சல் ஒன்று வந்தது.

எலும்புச் சிதைவு நோயால் (Lobstein Syndrome) பாதிக்கப்பட்டுள்ள பரணிகா என்கிற ஆதரவற்ற 6 மாத குழந்தை ஒன்று புதிதாக அங்கு சேர்க்கப்பட்டிருப்பதாகவும் அக்குழந்தைக்காக நம்மை பிரார்த்தனை செய்யும்படியும் கூறியிருந்தார்கள். ஒவ்வொரு முறையும் புதிதாக குழந்தைகள் சேரும்போதோ அல்லது முக்கிய நிகழ்ச்சிகளின்போதோ மறக்காமல் எனக்கு மின்னஞ்சல் அனுப்புவார்கள். இம்முறையும் அப்படியே.

பிரார்த்தனை கிளப் தொடர்பான பதிவை தயாரிக்கும்போது மின்னஞ்சல் வந்ததால் அதையும் இணைத்து உங்கள் அனைவரையும் பிரார்த்திக்கும்படி கூறியிருந்தேன்.

சமயபுரம் கோவில் வாசலில் விடப்பட்ட குழந்தையின் கதை நினைவுக்கு வரவே, அதே போன்ற பிரச்னையினால் பெற்றோரால் கைவிடப்பட்டுள்ள பரணிகாவை பார்க்கவேண்டும் என்று தோன்றியது.

‘திருச்சியாவது எங்கேயோ இருக்கு. கெருகம்பாக்கம் இங்கே பக்கத்துல தானே இருக்கு’ எனவே அந்த குழந்தை தற்போது எப்படி இருக்கிறாள் என்று நேரில் சென்று பார்த்து வந்தால் சற்று மகிழ்ச்சியாக இருக்கும் என்று தோன்றியது.

மேலும் நம் பிரார்த்தனை பதிவின் மூலம் ‘பிரேமவாசம்’ பற்றி கேள்விப்பட்டு நண்பர்கள் ஒரு சிலர் “நாம் அவசியம் ஒரு முறை அங்கு செல்லவேண்டும் சுந்தர்” என்று கூறினார்கள்.

“நிச்சயம்… அதுக்கு முன்னே நான் ஒரு முறை போய் பார்த்துவிட்டு வந்துவிடுகிறேன்” என்று அவர்களிடம் கூறியிருந்தேன்.

பிரேமவாசத்தின் ஒருங்கிணைப்பாளர் மும்தாஜ் அவர்களை தொலைபேசியில் தொடர்புகொண்டு, நம்மை அறிமுகம் செய்துகொண்டு நம் தளத்தை பற்றி எடுத்துக்கூறி நம் பிரார்த்தனை கிளப்பில் பரணிகா உள்ளிட்ட இரு குழந்தைகள் நலன் தொடர்பாக பிரார்த்தனை இடம்பெற்றதாக கூறினேன். அவர்களுக்கு ஒரே மகிழ்ச்சி. நமக்கு நன்றி தெரிவித்தார்கள்.

பிரேமவாசத்தை நேரில் ஒரு முறை பார்க்க விரும்புவதாக கூறினேன்…. “தாரளமாக எப்போ வேணும்னாலும் வாங்க சார்…” என்றார்கள்.

இதற்கிடையே 14/04/2013 ஞாயிறு வந்தது. அன்று தமிழ் புத்தாண்டு வேறு. தமிழ் புத்தாண்டு அன்று நாம் செய்ய வேண்டியது என்ன என்று மகா பெரியவா கூறியிருப்பது பற்றிய பதிவை நாம் அளித்தது நினைவிருக்கலாம்.  அதில் அவர் கூறியவற்றில் ஒரு சிலவற்றையேனும் செய்யவேண்டும் என்று தோன்றியது.

இடையில் திடீரென்று பிரேமவாசம் ஞாபகம் வந்தது. ‘இன்றைக்கு பிரேமவாசத்தில் உள்ள குழந்தைகளுக்கு இனிப்புக்கள் கொடுத்து கொஞ்ச நேரம் அவர்களோடு செலவிட்டால் என்ன….  தமிழ் புத்தாண்டு அன்று ஒரு நல்ல செயலோடு துவங்கியது போலிருக்குமே… அவர்கள் கூட எப்போது வேண்டுமானாலும் வாருங்கள் என்று சொல்லியிருப்பதால் பேசாமல் இன்றைக்கு போய்விடலாம்’ என்று எண்ணி ஞாயிறு காலை கோவில்களுக்கு செல்வதற்கு பதில் கெருகம்பாக்கம் கிளம்பிவிட்டேன். (கெருகம்பாக்கம், போரூர்-குன்றத்தூர் சாலையில் உள்ளது).

வழியில் குழந்தைகளுக்கு கொடுக்க சாக்லேட் ஒரு பாக்கெட் வாங்கிக்கொண்டேன்.

நாம் சென்ற நேரம் பிரேமவாசம் அலுவலகத்தில் மும்தாஜ் அவர்கள் இல்லை. வெளியே எங்கோ சென்றிருந்தார்கள். நிறுவனர் திரு.செல்வின் ராய் வெளியூர் சென்றிருந்தார். அலுவலக ஊழியர்கள் மற்றும் VOLUNTEERS தான் இருந்தனர். சுற்றிலும் தோட்டங்கள் பூக்கள் என அவ்விடம் கோடை வெயிலிலும் குளுமையாக இருந்தது.

‘அன்புள்ள ரஜினிகாந்த்’ படத்தில் வரும் கருணை இல்லம் போன்று இருந்தது. அன்பும் அமைதியும் தவழும் சூழல். இறைவனே எங்கு இருக்கிறானோ இல்லையே இங்கு நிச்சயம் இருக்கிறான் என்பது மட்டும் எனக்கு உறுதியாக புரிந்தது.

……………………………………………….

இது ஒரு தனி உலகம்.

இங்கு போட்டி இல்லை. பொறாமை இல்லை.

இந்த உலகில் இருப்பவர்களுக்கு பொய் சொல்லத் தெரியாது.
சூது வாது தெரியாது.

இவர்களுக்கு எதிர்பார்ப்புகளும் கிடையாது. அதன் மூலம் எழும் ஏமாற்றங்களும் கிடையாது.

இவர்களுக்கு நம் மொழியில் பேசினால் புரியாது.

இவர்களிடம் பேசவேண்டிய ஒரே மொழி ‘கருணை’ என்னும் மொழி தான்.

இவர்களை பற்றி படிக்கும்போது உங்கள் விழியோரம் ஒரு சில நீர்த் துளிகளாவது அரும்பினால் நிச்சயம் இவர்களுடன் பேச உங்களால் முடியும்.

இவர்களுக்கு தேவையெல்லாம் இவர்களை அரவணைக்க உங்கள் கைகள் மட்டுமே.
……………………………………………….

குழந்தைகளுக்கு புத்தாண்டு வாழ்த்து கூறி இனிப்பு தர வந்திருப்பதாக கூறினேன்… ஏற்கனவே அலுவலகத்தில் பேசிய விபரத்தையும் கூறினேன்.

என்னுடன் அங்கு அன்று இருந்த VOLUNTEERS களில் ஒருவரான கலைச்செல்வி என்னும் கல்லூரி மாணவியை உடன் அனுப்பி வைத்தனர்.

“பரணிகா குழந்தை எங்கே இருக்கா? அவளை முதல்ல பார்க்கணும்” என்றேன்.

“பரணிகா மேலே பர்ஸ்ட் ஃப்ளோரில் இருக்கா. அதுக்கு முன்னே கீழே ரூம்ஸ்ல இருக்குறவங்களை பார்த்து சாக்லேட் கொடுங்க” என்று என்னை கீழே இருந்த ஒரு DORMITORY களுக்கு அழைத்து சென்றார்.

கலைச்செல்வி பற்றி அவரிடம் விசாரித்தேன். குடும்ப சூழல் காரணமாக இங்கு நான்கைந்து வருடங்களுக்கு முன்பு இங்கு சேர்ந்தவர், தற்போது பட்டப்படிப்பு முடித்துவிட்டு சென்னையில் உள்ள பிரபல கல்லூரி ஒன்றில் M.Sc. IT படித்துவருகிறார். இவரது படிப்பிற்கான முழு செலவையும் ஏற்றிருப்பது பிரேமவாசம் தான். தன்னை வளர்த்து ஆளாக்கும் பிரேமவாசத்தின் அன்றாட பணிகளில் – (குழந்தைகள் பராமரிப்பில்) – அவர்களுக்கு பெருமளவு உதவிவருகிறார்.

முதல் அறைக்குள் நுழைய…. இரு பக்கமும் வரிசையாக தொட்டில்கள்…. சற்று பெரிய தொட்டில்கள்…. தொட்டில்களில் 5 முதல் 10 வயதுடைய மாற்றுத் திறன் வாய்ந்த மன வளம் குன்றிய குழந்தைகள் படுத்திருந்தார்கள்.

(இதற்கு முன்பு இதே போன்று அண்ணா நகரில் உள்ள மாற்றுத் திறன் வாய்ந்த ஆதரவற்ற குழந்தைகள் காப்பகத்திற்கு – Guild of Service – நண்பர்களுடன் பல முறை சென்று அக்குழந்தைகளுடன் நேரத்தை செலவிட்டிருக்கிறேன். ஆனால், இவர்கள் மாற்றுத்திறன் வாய்ந்த – மனவளம் குன்றிய – ஆதரவற்ற ஏழை குழந்தைகள்.)

ஒவ்வொரு குழந்தையையும் பார்க்கும்போது கண்கள் ஒரு நிமிடம் குளமாகிப் போனது. (குழந்தைகள் அங்கஹீனம் காரணமாக வெவ்வேறு தோற்றத்தில் இருந்தார்கள்.)

மனவளர்ச்சி இல்லையென்றாலும் அக்குழந்தைகள் அன்புக்காகவும் ஆதரவிற்காகவும் ஏங்குவது அவர்கள் பார்வையிலேயே புரிந்தது.

ஒரு சில குழந்தைகள் என்னிடம் இருந்த சாக்லேட் பாக்கெட்டை பார்த்ததும் ஓடிவந்து என்னை கட்டிக்கொள்ள, சாக்லேட்டை அவர்களிடம் நீட்டினேன். சில குழந்தைகள் பாக்கெட்டில் கையைவிட்டு அவர்களாகவே எடுத்துக்கொண்டார்கள். ஆனால் அவர்களுக்கு அதை என்ன செய்வது எப்படி சாப்பிடுவது என்று தெரியவில்லை.

“அவங்களுக்கு நீங்களே பிரித்து கொடுங்க” என்று உடன் வந்த கலைச்செல்வி கூற, சாக்லேட்டை பிரித்து அக்குழந்தைகளுக்கு ஊட்டினேன். ஊட்டும்போது அவர்களில் சிலரது எச்சில் என் கைகளில் பட…. கங்கையிலேயே மூழ்கிக்கிடந்தாலும் போகாத என் கர்மாக்கள் அந்தக் கணம் அகன்றதாக உணரந்தேன்.

அனைத்து குழந்தைகளிடமும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் கூறி சாக்லேட் கொடுத்துக்கொண்டே வந்தேன்.

ஒரு சில குழந்தைகளுக்கு கொடுக்க முற்படும்போது “அவங்களுக்கு சாப்பிட தெரியாது… கொடுக்கவேண்டாம்… தொண்டையில் சிக்கிவிடும்” என்று கூறினார்கள். அவர்களுக்கு மட்டும் கொடுக்கவில்லை. அதற்கு பதில், அவர்கள் கைகளை பற்றி குலுக்கி அன்பாக கன்னத்தில் தட்டி கொடுத்தேன்.

அந்த அறையை விட்டு போகும்போது திரும்பவும் அந்த அறையை ஒரு பார்த்தேன். “அங்கிள் இன்னும் கொஞ்ச நேரம் எங்க கூட இருங்களேன்” என்று அக்குழந்தைகள் என்னிடம் கேட்பது போல இருந்தது.

அடுத்த அறை… அங்கு 5 லிருந்து 12 வயதுடைய குழந்தைகள். இங்கும் அதே போன்ற நெகிழ வைக்கும் காட்சி. ஒவ்வொருக்கும் ஒரு குறைபாடு இருந்தது.

ஆதரவற்றோர், தாயையோ தந்தையையோ இழந்தவர்கள், வசதியற்றவர்கள் என பலரின் குழந்தைகளாம் இவர்கள்.

அனைவரும் பளிச் என்று சுத்தமாக இருந்தார்கள். உடைகள் நன்கு வெளுக்கப்பட்டு சுத்தமாக காணப்பட்டது. ஆதரவற்ற குழந்தைகள் தானே எப்படி டிரஸ் போட்டிருந்தா என்ன என்று நினைக்காமல் அவர்கள் ஒவ்வொரு விஷயத்திலும் அக்கறையுடன் கவனித்துகொள்ளப்படுவது புரிந்தது.

“பரணிகா எங்கே இருக்கா? அவளை பார்க்கணுமே…” என்றேன்.

அடுத்த அறைக்குள் நுழைந்தால்…. அங்கு நம்ம வி.ஐ.பி. பரணிகா. உடல் ஊனத்துடன் பிறந்ததால் பெற்றோரால் தெருவில் வீசப்பட்ட இந்த குழந்தை இங்கு ஒரு இளவரசி ரேஞ்சுக்கு கவனித்துக்கொள்ளப்படுவது கண்டு மனம் சற்று நிம்மதி அடைந்தது.

யார் யாருக்கு என்ன தேவை… அவங்களை எப்படி காப்பாத்தணும் என்பது அந்த ஆண்டவனுக்கு தெரியாதா?

“ஹாய் செல்லம்… எப்படி இருக்கே….. என்ன சொல்லுது பரணிகா குட்டி…. ” பலவாறாக அக்குழந்தையை கொஞ்சி மகிழ்ந்தேன். என்னையே உற்று பார்த்தாள் பரணிகா. தொட்டு தூக்க ஆசை… ஆனால் குழந்தையின் எலும்புகள் நொறுங்கி பாதிப்பு உள்ளபடியால் தூக்க பயம்.

உடன் வந்த கலைச்செல்வியும் குழந்தையை சற்று கொஞ்ச… பரணிகாவை சுற்றி நான்கைந்து குழந்தைகள் ஆர்வத்துடன் நின்று பார்த்துக்கொண்டிருந்தார்கள். ஆனால் எவரும் அவளை தொடமுடியாதபடி தொட்டிலை சற்று உயரமாக பாதுகாப்பாக அமைத்திருந்தார்கள்.

மற்ற குழந்தைகளுக்கும் ஒவ்வொருவராக பார்த்து தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் கூறி சாக்லேட்டை கொடுத்தேன்.

குழந்தைகள் பயன்படுத்தும் கழிவறையும், குளியலறையும் அந்த ஹாலின் ஓரமாக இருந்தது. கழிவறைகள் சுத்தமாக இருந்தது பார்க்கும்போதே தெரிந்தது.

“குழந்தைகள் கழிவறையை பயன்படுத்தியபின் கிளீன் செய்றது யார்? சுயநினைவோட இருக்குற நல்லா படிச்ச, வளரந்தவங்களுக்கே கழிவறை சுத்தமாக யூஸ் பண்றது எப்படின்னு தெரியாது. ஆனா இங்கே நீட்டா சுத்தமா இருக்கே… அதனால கேக்குறேன்” என்றேன்.

அந்த அறையில் ஓரமாக இருந்த ஒரு அம்மாவை காட்டி “அவங்க தான் இந்த ரூமோட CARE-TAKER. இங்கே இவங்க தான் சார் எல்லாத்தையும் பார்த்துக்கறாங்க….” என்றார் கலைச்செல்வி.

அவர்களை கையெடுத்து கும்பிட்டபடி “நீங்க செய்றது மிக பெரிய வேலையம்மா…. குழந்தைகள் சார்பாக என்னோட நன்றி” என்றேன்.

அடுத்து வேறொரு அறை… அங்கும் இப்படியே…. வித விதமாக குறைபாடுகளுடன் உள்ள குழந்தைகள்.

அடுத்து மாடியில் உள்ள வெராண்டாவில் சில குழந்தைகள் காரம் போர்டு விளையாடிக் கொண்டிருந்தார்கள். அவர்களிடம் அவர்கள் படிப்பு உள்ளிட்ட இதர விஷயங்களை விசாரித்து விட்டு பின்னர் புத்தாண்டு வாழ்த்து கூறி சாக்லேட் கொடுத்தேன்.

இந்த பக்கம் சில குழந்தைகள் செஸ் விளையாடிக்கொண்டிருந்தனர். ஒரு சிறுவன் மட்டும் ஆர்வத்துடன் என்னை வந்து பார்க்க, அவனுக்கு சாக்லேட்டை பிரித்து ஊட்டினேன்.

இதோ எந்தன் தெய்வம் முன்னாலே… நான் ஒரே ஒரு புன்னகையில் கண்டேனே….

எல்லா குழந்தைகளிடமும் விடைபெற்று கீழே அலுவலக அறைக்கு வந்தேன். பொறுப்பாளர் மும்தாஜ் வந்திருந்தார்கள். அவரிடம் நம்மை அறிமுகம் செய்துகொண்டேன். அவர்கள் பணியை பாராட்டி சில நிமிடங்கள் பேசிக்கொண்டிருந்தேன். குழந்தைகளுக்கு என்ன மாதிரியான சிகிச்சை அளிக்கப்படுகிறது என்று கேட்டபோது, “பதிவுபெற டாக்டரிடம் குழந்தைகள் ரெகுலராக அழைத்து செல்லப்பட்டு காண்பிக்கப்படுகிறார்கள். தவிர இக்குழந்தைகளுக்க்கு சிகிச்சை அளிக்க PHYSIOTHERAPISTS ரெகுலராக இங்கு வருகிறார்கள்” என்று சொன்னார்கள்.

பேச்சினூடே என்ன மாதிரி உதவிகள் இவர்களுக்கு இங்கு தேவைப்படுகிறது என்பதை கேட்டு தெரிந்துகொண்டேன்.

உடனடி தேவை ஒரு வாஷிங் மெஷின் என்பது புரிந்தது. இருக்கும் ஒரு மெஷின் பழுதடைந்து இனி ரிப்பேர் செய்ய முடியாத அளவிற்கு முடங்கியுள்ளது. எனவே குழந்தைகளின் துணிகளை துவைக்க வாசிங் மெஷின் ஒன்று தேவைப்படுகிறது.

மேலும் என்ன மாதிரியான உதவிகள் தேவைப்படும் என்று அவர்கள் நம்மிடம் சொன்னதை ஒரு பட்டியலாக தந்திருக்கிறேன். பொருளதவி மட்டுமின்றி உங்கள் நேரத்தை விடுமுறையை இக்குழந்தைகளுடன் செலவிடுவதும் ஒரு வகையில் உதவியே. உங்கள் விடுமுறை நாட்களில் உங்கள் குழந்தைகளுடன் இங்கு வந்து  விளையாடி செலவிடலாம். இக்குழந்தைகளுக்கு நீதிக்கதைகள், பக்தி கதைகள் சொல்லலாம்.

இங்கு பணியாற்றும் தன்னார்வலர்களுக்கும் பணியாளர்களுக்கும் ஏதாவது செய்ய விரும்பினால் செய்யலாம்.

இது போன்ற குழந்தைகளை குளிப்பாட்டி, உணவளித்து, பராமரிப்பதற்கு, அசாத்திய பொறுமையும் சகிப்புத் தன்மையும் வேண்டும். எனவே அந்த பணியை செவ்வனே செய்யும் இந்த பணியாளர்களை உற்சாகப்படுத்தி அவர்களக்கு ஊக்கம் கொடுப்பது நம் கடமை.  இங்கு பணியாற்றும் சுமார் 20 க்கும் மேற்ப்பட்ட CARE TAKER களுக்கு துணி மணி எடுத்துக்கொடுத்து கையில் கொஞ்சம் பணமும் கொடுக்க உத்தேசித்திருக்கிறேன். இறைவன் அருளிருந்தால் பார்க்கலாம்.

காப்பகத்தை நடத்துவதற்கு நிதியுதவி தவிர… கீழே கண்டவைகள் தேவைப்படுவதாக தெரிகிறது.

1) உணவு சமைக்க தேவையான மளிகை பொருட்கள்

2) குளியல் சோப்

3) குழந்தைகளுக்கான விளையாட்டு சாமான்கள்

4) கிரிக்கெட் பேட் மற்றும் பால்

5) பேட்மிண்டன் / டென்னிஸ் செட்

6) குழந்தைகள் படுக்க ரப்பர் ஷீட்

7) RESOURCE எனப்படும் ஊட்டச் சத்து பானம். (இக்குழந்தைகளை உணவை சாப்பிட வைப்பது  அத்துணை சுலபமல்ல. அப்படி உணவு சாப்பிட அவர்கள் மறுக்கும் நேரத்திலோ அல்லது அதை சொல்லத் தெரியாத நேரத்திலோ இந்த ஊட்ட சத்து பானத்தை கொடுப்பார்கள்.)

8) பூஸ்ட், ஹார்லிக்ஸ் உள்ளிட்ட ஊட்டச் சத்து பானங்கள்.

9) மருந்துகள்

10) குழந்தைகளுக்கு தேவையான துணிமணிகள்

etc.etc.etc.,

உங்கள் பிறந்த நாள், திருமண நாள் உள்ளிட்ட விசேட நாட்களை இங்கு கொண்டாடலாம். பண்டிகை நாட்களில் நீங்கள் வயிறார சாப்பிடும் போது இங்குள்ள குழந்தைகளும் சாப்பிடும் வண்ணம் அன்றைய உணவை ஸ்பான்ஸர் செய்யலாம்.

‘அன்பு’ என்னும் ஒரே ஒரு மதம் தான்

இன்னொரு முக்கிய விஷயம். இங்குள்ள குழந்தைகளுக்கு அவர்கள் விரும்பும் தெய்வத்தை வழிபட மத ரீதியிலான சுதந்திரம் உண்டு. எந்த ஒரு மதமும் இவர்கள் மீது திணிக்கப்படுவது கிடையாது. இங்கிருப்பது ‘அன்பு’ என்னும் ஒரே ஒரு மதம் தான்.

 

* இவை தவிர இக்குழந்தைகளுக்கு உங்கள் பிறந்த நாள் மற்றும் இதர விசேஷ நாட்களின்போது உணவை ஸ்பான்சர் செய்யலாம்.

இன்னும் சில வாரங்களில் நண்பர்களுடன் பிரேமவாசத்திற்கு மீண்டும் செல்லவிருக்கிறேன். அப்போது இக்குழந்தைகளுக்கு என் தனிப்பட்ட செலவில் காரம் போர்ட் ஒன்று வாங்கி தரவுள்ளேன். நண்பர் பிரேம் கண்ணன் என்பவர், குழந்தைகளுக்கு தேவையான வேறு சில பொருட்கள் வாங்கித் தருவதாக கூறியிருக்கிறார்.

=========================================
சேவை மனப்பான்மை கொண்ட மருத்துவர்கள் எவரேனும் தெரியுமா?

* நம் வாசகர்களில் மருத்துவம் படித்த டாக்டர்கள் எவரேனும் இருந்தால் அடிக்கடி நேரில் சென்று இவர்களுக்கு கன்சல்டிங் செய்யலாம். இவர்களுக்கு அது மிகப் பெரும் உதவியாக இருக்கும். (உங்கள் நட்பு வட்டத்திலோ அல்லது உறவினர்கள் மத்தியிலோ சேவை மனப்பான்மை மிக்க மருத்துவர் எவரேனும் இருந்தால் உடனடியாக அவர்களிடம் என் மொபைல் நம்பரை கொடுத்து என்னை தொடர்புகொள்ளச் சொல்லுங்கள். பிரேமவாசத்திற்கு அவர்களது சேவையை கிடைக்கச் செய்கிறேன்! அவர்களுக்கு மட்டுமல்ல நல்ல விஷயத்தில் கருவியாக இருந்த புண்ணியம் உங்களுக்கும் கிடைக்கும்.)
=========================================

நீங்களும் உங்கள் பங்கிற்கு ஏதேனும் இவர்களுக்கு வாங்கி தர விரும்பினால், அதே நீங்களே வாங்கி  உங்கள் கைகளாலேயே அக்குழந்தைகளுக்கு கொடுக்கலாம். இது தொடர்பாக நம்மை தொடர்புகொண்டு ஆலோசித்து பின்னர் வாங்க விரும்புகிறவற்றை வாங்கவும். (ஒரே பொருளை பலர்  வாங்குவதை தவிர்க்கவே இதை சொல்கிறேன்.)

இந்த மாபெரும் முயற்சியின் முழுமுதற் காரணகர்த்தா இக்காப்பகத்தின் நிறுவனர் திரு.செல்வின் ராய் அவர்களை சந்தித்து விரிவான பேட்டி ஒன்று எடுக்க திட்டமிட்டுள்ளேன். அதில் மேலும் பல தகவல்கள் இடம்பெறும்.

விடுமுறை நாளில்…. நடன வகுப்பு

கடைசியாக ஒன்று…

இந்த உலகம் மிகப் பெரிது. அதன் ஓரத்தில் இப்படியும் சிலர் உங்கள் உதவிக்காகவும் அன்புக்காகவும் அரவணைப்புக்காகவும் காத்திருக்கிறார்கள்!

நல்லவற்றை தேடி செல்லவே இறைவன் கால்களை படைத்திருக்கிறான். துயருற்றோர் கண்ணீரை துடைக்கவே கைகளை படைத்திருக்கிறான். இவற்றுக்காக பயன்படாத கைகளும் கால்களும் இருந்தும் இல்லாதவையே….!

விடைபெற்று கிளம்பும்போது மும்தாஜ் அவர்களிடம் சொன்னேன்…. “எங்கள் வாசகர்கள் நிச்சயம் உங்களுக்கு தேவையான உதவிகளை – அது சிறியதோ பெரியதோ – அவரவர் சக்திக்கு ஏற்றவாறு மனமுவந்து செய்வார்கள். அவர்கள் முற்றிலும் வித்தியாசமானவர்கள். ஏனெனில் அவர்களுக்கு தெரியும் SERVING HANDS ARE HOLIER THAN PRAYING LIPS” என்றேன்.

என்ன சரி தானே நண்பர்களே?

பிரேமவாசத்திலிருந்து திரும்பும் போது தமிழ் புத்தாண்டு அன்று மிகப் பெரிய கோவில் ஒன்றிற்கு சென்று வந்த உணர்வு ஏற்பட்டது. என்ன… ஒவ்வொரு முறையும் கடவுளை பார்க்கமுடியாது திரும்புவேன். ஆனால் இங்கு நான் தேடும் கடவுளை பார்த்துவிட்டு வந்தேன்!!!!

பிரேமவாசத்தின் முகவரி :
Prema Vasam,
Thiru V.K.A. Road,
Gerugambakkam,
Chennai – 600 122.
Telephone No. : 044-23820771, 23820330
Fax No.: +91 44 23820771
www.premavasam.org

—————————————–
அடுத்த பதிவில்….

பிரேமவாசத்தில் சேர்ந்து படித்து 10, +2 என அனைத்து தேர்வுகளிலும் நல்ல மார்க்குகள் பெற்று பாஸ் செய்து இறுதியில் அண்ணா பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்று  ஐ.டி. துறையில் நல்ல வேலை கிடைத்தும் அதை உதறிவிட்டு தன்னை ஆளாக்கிய இவர்களுடன் இருந்து சேவை செய்து வரும் சாதனை பெண் இந்திராவை உங்களுக்கு அறிமுகம் செய்கிறேன். (போலியாவால் பாதிக்கப்பட்டவர் இந்திரா).

எத்தனையோ சிரமங்களுக்கு இடையே கனவுகளுக்கு இடையே பெற்றோர் கஷ்டப்பட்டு படிக்கவைத்தால் – சரியாக படிக்காமல் – பெற்றோரின் எதிர்பார்ப்புக்களை பொய்த்துவிட்டு – தேவையற்ற விஷயங்களில் ஈடுபட்டு நேரத்தை வீணடித்துவரும் அரியர்ஸ் புகழ் கல்லூரி மாணவர்கள் அவசியம் இவரை தெரிந்துகொள்ளவேண்டும்.

—————————————–

கடவுள் உள்ளமே ஓர் கருணை இல்லமே…. பாடல் & வீடியோ

22 thoughts on “பிரேமவாசம் – கடவுளின் இல்லத்தில் ஒரு நாள்…!

  1. உண்மையில் மனதை தொடும் பதிவு.
    ***
    நமக்கு இது இல்லை, அது இல்லை என்று எப்போதும் புலம்புவர்களுக்கு சரியான சாட்டையடி போல் உள்ளது இந்த பதிவு.

    அரிது அரிது மானிடராய் பிறத்தல் அரிது.
    அப்படி பிறந்தாலும், கூன் செவிடு, குருடு, (மற்றும் இதர ஊனங்கள்) இன்றி பிறத்தல் அரிது
    ***
    அப்படி பிறந்தாலும், தயாள குணம், அன்பு, இரக்கம், மனிதம் ஆகிவற்றோடு இவ்வுலகில் வாழ்வது மிகவும் அரிது.

    உங்களை கண்டு பெருமிதம் கொள்கிறேன். வாழ்க உமது தொண்டு! வளர்க உமது வாழ்க்கை!
    ***
    **சிட்டி**.

  2. கண்கள் துளிரும் கண்ணீரை கட்டுபடுதமுடியவில்லை….காரணம் தெரியவில்லை….நாமல் உதவ முடியாவிட்டாலும் உதவி செய்பவர்களுக்கு இந்த பதிவை நிச்சயம் பார்க்க வசதி செய்யவேண்டும்…நம் நாட்டில் இதுபோன்ற எண்ணற்ற காப்பகங்கள் இருக்கின்றன….நாமல் முடிந்தை நிச்சயமாக செய்யவேண்டும்..செய்வேன்….காத்திருக்கிறோம் சுந்தர்….தேதியை சொல்லுங்கள்…

  3. amazing effort anna..u r great:)..got no words to say when i saw d article..surely as u said we will do our best to help dem..after al they are our sibilings..

    our website is reaching great heights:)proud of it:)..

    and pl do let us know when we are going..i am sure we will make a consideable difference ..

    keep rocking..amazing energy u have got:)…

    way to go..:)

  4. இந்த பதிவை பர்க்கும்போது உன்மையில் நெகிய வைக்கிரது சுந்தர் சார்…

    பணம் படைத்த மனிதர்கல் எல்லம் உதவி செய்வதில்லை
    உதவி செய்ய நினைப்பவர்க்கு பணம் இருப்பதில்லை…என்ற சந்தரபாபு பாடல்கல் நினைவுக்கு வருகிரது….

    இன்ரய ஒரு சில அரசியல்வாதிகல் கையில் புரலும் கருப்பு பனங்கள்
    கரயான் அரித்து கிடக்கின்ரது..அனைத்தையும் தன் சுயனலத்துக்காக
    பயன்படுத்துகின்ரனர்..
    அதிலிருந்து ஒரு துலி கிடைத்தால் போதும் இதுபோன்ர இல்லங்கல் இன்பமாக வாழும்..

    உங்கலை போன்ரவர்க்கு அந்த ஆண்டவன் கருனை வைக்கவ வேண்டும்..
    தொடருங்கல் உங்கல் சேவையை… பதியுங்கல் உங்கல் நல்ல பதிவை

  5. Dear Sir,

    I would like to contribute for the washing machine.Kindly let me know the procedure to donate the amount.

    Thanks,
    Kamesh

    1. Thank you very much Kamesh.

      Will speak to them and let you know.

      Expect my mail in a day or two in this regard.

      – Sundar

  6. சொல்ல வார்த்தை இல்லை சுந்தர். உண்மையிலேயே உங்கள நினைச்ச ரொம்ப பெருமையா இருக்கு. உங்கள எனக்கு தெரியும்னு சொல்றதுல எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு. நாம நமக்கு மட்டும் தான் கஷ்டம். கடவுள் நம்மள மட்டும் தான் இப்படி கஷ்டப்படுத்துறார், ரொம்ப சோதிக்குரார்னு நினைச்சுட்டு இருக்கோம். ஆனால், இவங்கள பார்க்கும் போது தான் கடவுள் நம்மள எவ்வளவு நல்ல நிலையிலே வச்சிருக்கார்னு நமக்கு புரியுது. இந்த பதிவு படிக்கும் போது கண்ணுல தண்ணீர் தான் வருது. “உனக்கும் கீழே இருப்பவர் கோடி. நினைத்து பார்த்து நிம்மதி நாடு”. அந்த குழந்தைகளுக்கு நம்மால் ஆன உதவிகளை நிச்சயமாக செய்வோம். பணம் இருக்குறவனுக்கு செய்ய மனசு இருக்காது. மனசு இருக்குறவனுக்கு செய்ய பணம் இருக்காது. என்ன செய்ய? கடவுள் எல்லோரையும் ஒரே மாதிரி படைத்திருந்தால், நாம் கடவுளை நினைக்க மாட்டோமே. ராமருக்கு அணில் உதவினா மாதிரி, என்னால ஆன உதவியை நானும் உங்க கூட சேர்ந்து செய்யுறேன்.

  7. முதலில் உங்கள் முயற்சிக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்…என்னைப் பொறுத்த வரையில் உங்கள் இந்தச் செயலும் ஆலயத் திருப்பணி தான்…!

    ( பிரேமம் = அன்பு; வாசம் = மணம் / வசித்தல்.) அன்பு மணம் தவழும் இந்த பிரேமவாசத்தில் வசிக்கும் ஒவ்வொருவரும் கடவுளின் குழந்தைகள் தான்…இவர்களுக்கு செய்யும் உதவி கடவுளுக்கு செய்யும் உதவி போல் ஆகும்…!

    நான் இந்தப் பதிவை என் நண்பர்களுடன் பகிர்ந்து கொண்டுள்ளேன்…நாங்கள் கூட்டாக சேர்ந்து அவர்களின் ஏதேனும் ஒரு தேவையை பூர்த்தி செய்யலாம் என்று எண்ணி இருக்கிறோம்..! ஆலோசித்துவிட்டு உங்களுக்குத் தெரியப்படுத்துகிறேன்…!

    “கடமையச் செய்; பலனை எதிர்பார்”

    விஜய் ஆனந்த்

  8. நண்பர் மாரிஸ்,ஹரிஹரன், சகோதரி தீபாஅவர்கள் எழுதியது போல் கண்கள் துளிரும் கண்ணீரை கட்டுபடுதமுடியவில்லை….காரணம் தெரியவில்லை?
    அந்த குழந்தைகளுக்கு நம்மால் ஆன உதவிகளை நிச்சயமாக செய்வோம்.

    அந்த சிவன் அமர்ந்து கொண்டு உங்க டீம் நல்லது செய்ய நானும் உடன் இருந்து வழி நடத்துவேன் என்று சொல்கிறரர் போல் உள்ளது.

    நான் சிவனிடம் வேண்டுவது இந்த பதிவு அணைத்து நல்ல உள்ளங்களுக்கும் சென்றடைய வேண்டுகிறேன் .

    இதில் பங்கு கொண்டு அவர்களுக்கு உதவிகள் செய்ய நாமும் பாக்கியவான்கள் ஆவோம் .

  9. எனக்கு சொல்ல வார்த்தை இல்லை சுந்தர் சார் . கண்ணீர் மட்டுமே வருது ………. என்னால ஆன உதவியை நானும் உங்க கூட சேர்ந்து செய்யுறேன்.

    நன்றி

  10. Premavasam – Most apt name for this home. I am very proud to see such information in our site, which is not merely concentrating on spirituality and self-development. In fact the day we started the Prayer Club, I knew this site will go a long way in serving the society also. I am sure we can definitely do our bit for such children, who need love and affection only apart from their daily needs. If we visit such homes and do our might, then God will be very pleased with us.

    Service to humankind is service to God!

    Sundar, we need your guidance and never ending bubbling enthusiasm in taking Rightmantra to greater heights. I am sure Maha Periyavaa’s blessings is always there for you and our site!

    – Baba Ram

  11. கண்டிப்பாக நம் தளம் மூலமாக நல்லது செய்வோம் ஜி…

    ப.சங்கரநாராயணன்

  12. சுந்தர்ஜி,

    நான் நேற்றைக்கே பதிவை பார்த்து விட்டேன். என்னால் கண்ணீரை அடக்க முடியவில்லை (அலுவலகம் வேறு) யாராவது பார்கின்றர்களா என்று திரும்பி பார்த்து கொண்டேன். என்னால் கமென்ட் கொடுக்க கூட முடியவில்லை.you are really very great sundarji . என்னால் முடிந்த உதவியை கண்டிப்பாக செய்வேன்.

  13. Hi Sundar Ji,

    It should reach all the people who are willing to help.

    I share with my friends and help them.

  14. அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்
    என்பும் உரியர் பிறர்க்கு

    இந்த உண்மையை மீண்டும் நினைவூட்டிய உமக்கு வாழ்த்துக்கள் சொல்ல வார்த்தையில்லை. நீர் நீடூழி வாழ்க. உமது தொண்டில் பங்காற்ற எங்களுக்கும் ஒரு வாய்ப்பை தாரும்.
    அன்பே சிவம்

  15. “நீ எப்போது யாருமற்ற ஏழை எளியவர்களுக்கு உதவுகிறாயோ அப்போது ஆண்டவன் உன்னிடம் கடன்காரன் ஆகின்றான்.”

    —– அருமை சுந்தர். நன்றி.

  16. படித்து முடித்து நீண்ட நேரம் சிலை என உட்கார்து இருந்தேன். கண்ணில் நீர் அது பாட்டுக்கு வலிந்து கொண்டு இருந்தது. இன்னமும் என்னால் மனம் சமாதானம் பண்ண முடியவில்லை.

    “எங்கள் வாசகர்கள் நிச்சயம் உங்களுக்கு தேவையான உதவிகளை – அது சிறியதோ பெரியதோ – அவரவர் சக்திக்கு ஏற்றவாறு மனமுவந்து செய்வார்கள். அவர்கள் முற்றிலும் வித்தியாசமானவர்கள். ஏனெனில் அவர்களுக்கு தெரியும் SERVING HANDS ARE HOLIER THAN PRAYING LIPS”

    மிக சரியாக புரிந்து கொண்டு உள்ளீர்கள். சிறிதோ பெரிதோ நிச்சயம் அவரவர் சக்திக்கு ஏற்றபடி நாங்கள் செய்வோம். இந்த மாபெரும் கைங்கரியத்தில் எங்கள் பங்கு நிச்சயம் இருக்கும்.

  17. சொல்ல வார்த்தை இல்லை சுந்தர்ஜி. உண்மையிலேயே உங்கள நினைச்ச ரொம்ப பெருமையா இருக்கு.

  18. ivargal anaivarume kadavulin pillaigal ivargalukku seiyum sevai kadavullu noru muai seitha palanai tharum ,kandipaaga ethaavathu seivom sundar

  19. கடவுளின் செல்லக்குழந்தைகளை காண நம்மை அழைத்துசென்று வாழ்க்கையின் மற்றுமொரு முக்கியமான பகுதியை இன்னும் சொல்லப்போனால் முக்கியமான பணியை நமக்கு நினைவூட்டிய சுந்தர் அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள் !!!

    நிச்சயம் நமது வாசகர்கள் இந்த சேவையில் தமது பங்கை ஆட்ருவார்கள்!!!

    பிரேமவாசத்தில் உள்ள அனைத்து குழந்தைகளும் விரைவில் நலம் பெறவும், அவர்களை பராமரிக்கும் உன்னதமான பணியை மேற்கொண்டுள்ள அனைவரும் வாழ்வில் எல்லா வளமும் பெற்று வாழ்ந்திட எல்லாம் வல்ல இறைவன் அவர்கள் மேல் கருணை மழை பொழிந்து என்றென்றும் அவர்களுக்கு துணை இருந்து காத்திட மனமுருகி வேண்டுவோம் !!!

  20. இந்த பதிவை மிஸ் பண்ணியதிற்கு மிகவும் வருத்த படுகிறேன் ….

  21. Dear Sundar sir,
    Best wishes from Prema Vasam!
    Thank you so much for your kind visit to our home, many thanks for spending your precious time with our children, thank you indeed. A big thanks for the inspiring words about our children and activities of our home, it has turned out to be a source of inspiration for your friends and for others too.
    Many thanks for fulfilling our urgent need of washing machine. Please express our thanks to our good friend Mr.Kamesh, he deserves our sincere thanks too.
    Lovingly Mumtaj.
    Co-ordinator
    Prema Vasam

Leave a Reply to **Chitti** Cancel reply

Your email address will not be published. Required fields are marked *