Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Friday, March 29, 2024
Please specify the group
Home > Featured > குருபகவான் & தட்சிணாமூர்த்தி – குரு பெயர்ச்சிக்கு யாருக்கு பரிகாரம் செய்வது?

குருபகவான் & தட்சிணாமூர்த்தி – குரு பெயர்ச்சிக்கு யாருக்கு பரிகாரம் செய்வது?

print
சென்ற குருபெயர்ச்சியை முன்னிட்டு நாம் அளித்த இந்த பதிவு தான் தற்போது முகநூல் முழுக்க சுற்றிக்கொண்டிருக்கிறது. ஏதோ தாங்களே எழுதியது போல பலர் பதிவிட்டு வருகிறார்கள். சிவ சிவ! நம் நண்பர்கள் சிலரும் வழக்கம் போல, நமக்கே அனுப்பி சிலாகிக்கின்றனர். எனவே மீள்பதிவு செய்கிறோம். உபயோகமாக இருக்கும்.

வக்கிரகங்களில் ஒருவரான குருபகவானையும் (வியாழன்), ஞான குருவான தட்சிணாமூர்த்தியையும் போட்டு குழப்பிக்கொள்ளும் வழக்கம் அண்மைக்காலமாக அதிகரித்து வருகிறது. குருபகவானுக்கு செய்யவேண்டிய அனைத்து பரிகாரங்களையும் மோன நிலையில் உள்ள தட்சிணாமூர்த்திக்கு செய்வது எந்த வகையில் சரி? “அந்த குரு தான் இந்த குரு!” என்று சொன்னது எந்த மகானுபாவர் என்று தெரியவில்லை. கோவில்களில் வியாழக்கிழமைகளில் குரு பரிகாரத்துக்காக கூடும் கூட்டத்தை மனதில் கொண்டும் அதன் மூலம் பல்வேறு விதங்களில் கிடைக்கும் வருவாயை மனதில் கொண்டும், இந்த தவறு அனுமதிக்கப்படுகிறது. பல கோவில்களில் இதை வழக்கமாகவே ஆக்கிவிட்டார்கள்.

Guru Bhagawan

நமக்கும் இந்த அறியாமை இருந்ததுண்டு. சொற்பொழிவு ஒன்றில் ஒரு பெரியவர் இது குறித்து விளக்கியபோது தான் உண்மையை உணர்ந்துகொண்டோம்.

தக்ஷிணாமூர்த்தி ஞானகுரு என பெயர் பெற்றவர். அப்படியிருக்கையில் கிரகங்களில் வியாழனுக்கு ‘குரு’ என பெயர் வந்தது எப்படி தெரியுமா? ‘குரு’ என்றாலே பெரிய என்று தான் பொருள். கிரகங்களில் மிகப் பெரிய கிரகம் வியாழன். எனவே இதற்கு குரு என பெயர் ஏற்பட்டது. அப்படியிருக்கும் மோனா நிலையில் ஞானப் பிழம்பாக அமர்ந்திருக்கும் குருவிற்கு கொண்டைக் கடலை மாலை சாத்துவது என்ன வகையில் நியாயம்?

நம் வாசகர்களுக்கு இந்த அறியாமை இருக்கக்கூடாது என்று கருதி, ஆதாரப்பூர்வமாக ஒரு பதிவு வெளியிட நீண்ட நாட்களாகவே முயன்றுவந்தோம். அண்மையில் இது குறித்து இரண்டு விஷயங்கள் கண்ணில் பட்டது. ஒரு அற்புதமான கட்டுரையை தினகரன் நாளிதழில் படிக்க நேர்ந்தது. அது தொடர்பாக இதோ உங்கள் கவனத்திற்கு அந்த கட்டுரை. படியுங்கள். குருபகவானுக்கும் தட்சிணாமூர்த்திக்கும் உள்ள வேறுபாட்டை புரிந்துகொள்ளுங்கள். குருபகவானுக்கு செய்ய வேண்டிய பரிகாரங்களை தவறாது செய்யுங்கள். குருபகவானின் நல்லருளை பெறுங்கள்.

========================================================

குரு பெயர்ச்சி காலத்தில் யாரைப் பணிவது? நவக்கிரக குருவையா, ஞான குருவையா?

மீப காலமாக கோயில்களில், வியாழக்கிழமைகளில் தட்சிணாமூர்த்தி சந்நதியில் பக்தர்களின் கூட்டம் அதிகரித்து வருகிறது. இவர் களில் 99  சதவீதம் பேர் குருவுக்குப் பரிகாரம் செய்வதற்காக வருபவர்கள். அதே நேரத்தில் நவகிரகங்களில் ஒருவரான குரு பக வானை வழிபடுவோரின்  எண்ணிக்கை மிகக் குறைவு. குரு பகவானுக்கு செய்ய வேண்டிய பரிகாரத்தை தட்சிணாமூர்த்திக்கு செய்வது  சரிதானா?இவர்கள் இருவருக்கும் உள்ள  வித்தியாசம் என்ன? தட்சிணாமூர்த்தி என்பதற்கு தென்முகக் கடவுள் என்று பொருள்.  அதாவது, தெற்கு நோக்கி வீற்றிருப்பவர். நவகிரகங்களில்  ஒருவரான வியாழ (குரு) பகவானின் திசை வடக்கு. திசையின் அடிப்படை யிலேயே இருவரும் வேறுபடுகின்றனர்.

அதே போல வியாழனுக்கு உரிய நிறம், மஞ்சள். இவருக்கு உரிய தானியம், கொண்டைக் கடலை. தட்சிணாமூர்த்தியோ வெண்ணிற  ஆடையை  உடுத்தியிருப்பவர். (‘ஸ்வேதாம்பரதரம் ஸ்வேதம்…’ என்று உரைக்கிறது வேதம். ஸ்வேதம் என்றால் வெள்ளை நிறம் என்று  பொருள்.) உண்மை  நிலை இவ்வாறு இருக்க வியாழனுக்கு பரிகாரம் செய்ய நினைப்பவர்கள், ஞான குருவாய் அருள்பாலிக்கும் தட்சிணாமூர்த்திக்கு மஞ்சள் நிற வஸ்திரமும், கொண்டைக்கடலை மாலைகளும் சாற்றுகிறார்கள். இது,  தியானத்தில் ஆழ்ந்திருக்கும் தட்சிணாமூர்த்திக்கு தொல்லை கொடுப்பது போல் அமைகிறது. ஞானம் வேண்டி தட்சிணாமூர்த்தியை வழிபடுபவர்களுக்கு கிழமை  முக்கியமில்லை.  வியாழன் அன்றுதான் வழிபட வேண்டும் என்ற அவசியமும் இல்லை. தெளிவாகச் சொல்வதானால், வியாழக் கிழமைக்கும் தட்சிணாமூர்த்திக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

DSC03636

சிவபெருமான் ஞானத்தை போதிக்கும் குருவாக ஸநகாதி முனிவர்களுக்கு வேத ஆகமங்களின் பொருளை உபதேசிக்கும் திருவுருவமே   தட்சிணாமூர்த்தி. கல்லால மரத்தின் கீழ் அமர்ந்திருப்பவராக இவர் காட்சியளிக்கிறார். இவர் ஆதிகுரு அல்லது ஞானகுரு என்று  போற்றப்படுகிறார்.  அதே நேரத்தில் தேவர்களின் சபையில் ஆச்சாரியனாக, தேவர்களுக்கு ஆசிரியராக பணி செய்பவர் வியாழன்  என்று அழைக்கப்படும் ப்ருஹஸ்பதி.  ஆசிரியர் தொழில் செய்வதால் இவரை குரு என்று அழைக்கின்றனர்.

ஞானகுரு வேறு, நவகிரக குரு வேறு என்பதைப் புரிந்து கொள்வது நல்லது. வியாழ பகவானுக்கு உரிய அதிதேவதை மருத்வந்தன்  என்றும், ப்ரத்யதி  தேவதை பிரம்மா என்றும் தெளிவாகச் சொல்கிறது வேதம். எந்த விதத்திலும் தட்சிணாமூர்த்தியோடு வியாழ (குரு) பகவானை சம்பந்தப்படுத்தி  வேதத்திலோ, புராணங்களிலோ சொல்லப்படவில்லை. இந்த நிலையில் வியாழனுக்கு உரிய பரிகார த்தை தட்சிணாமூர்த்திக்கு செய்ய வேண்டிய  அவசியம் என்ன?  இந்தக்குழப்பத்திற்கு என்ன காரணம்? ஞானகுருவாம் தட்சிணா மூர்த்தியை வழிபடும் வகையில் பள்ளிக் குழந்தைகளும் இந்த  ஸ்லோகத்தினை எளிதாகச் சொல்கிறார்கள்:

குருப்ரஹ்மா: குருர்விஷ்ணு: குரு தேவோ மஹேஸ்வர:
குரு சாக்ஷாத் பரப்ரஹ்ம தஸ்மைஸ்ரீ
குருவே நம:

– இந்த ஸ்லோகத்தில் இடம்பெறும் ‘குரு’ என்ற வார்த்தையை வைத்து குரு பகவானும் இவரும் ஒன்று என நினைத்திருக்கலாம். குரு  பகவானுக்கு  உரிய பரிகாரத் தலமாக ஆலங்குடி தட்சிணாமூர்த்தி ஸ்வாமி பிரபலம் அடைந்திருப்பதும் கூட காரணமாக இருக்கலாம். இறைவன் இட்ட பணியைச்  செய்பவர்களே நவக்கிரகங்கள். ஒன்பது கோள்களுக்கும் ஒவ்வொரு காரகத்துவம் உண்டு. இவர் களில் சுபகிரகமாகவும், வேண்டுகின்ற நன்மையைச்  செய்பவராகவும் விளங்குபவர் வியாழ (குரு) பகவான். குரு பார்க்க கோடி நன்மை என்பது பழமொழி. ஜென்ம ராசியை குரு பார்த்தால் நினைத்த  காரியம் கைகூடும்.

இந்த உலகத்தில் நாம் ஆனந்தமாய் வாழ்ந்திடத் தேவையான அனைத்து சுகங்களையும் அருள்பவர் குரு பகவான். குரு பலம் இருந் தால் திருமணம்  நடைபெறும். குருவின் அனுக்ரகம் இருந்தால் பிள்ளைப்பேறு கிட்டும்.  திருமணத்தடை நீங்கவும், புத்திரபாக்கியம்  கிட்டவும், உயர் கல்வியில் இடம்  பிடிக்கவும் குருவின் அருள் வேண்டி பரிகாரம் செய்ய விழைகின்றனர். அவ்வாறு பரிகாரம் செய்ய  விரும்புபவர்கள் இந்த குரு பெயர்ச்சி நாளிலும்,  இனி வரும் வியாழக்கிழமைகளிலும் நவகிரகங்களில் வடக்கு நோக்கி அருள்பாலிக்கும்  வியாழ பகவானுக்கு மஞ்சள் நிற வஸ்திரம் சாற்றியும்,  கொண்டைக் கடலை மாலை அணிவித்தும் வழிபடலாம்.

கொண்டைக் கடலை சுண்டல் நைவேத்யம் செய்து, வரும் பக்தர்களுக்கு விநியோகம் செய்யலாம். வியாழன்தோறும் விரதம் இருந்து  வடக்கு முகமாய்  நெய் விளக்கு ஏற்றியும் வழிபடலாம்.அதே நேரத்தில் ஞானமார்க்கத்தை நாடும் அன்பர்கள் தட்சிணாமூர்த்தியை  வழிபடலாம். வியாழக்கிழமைதான்  என்றில்லை, எந்த நாளிலும் அவரை வழிபடலாம். மனம் சஞ்சலத்திற்கு உள்ளாகும் எந்த நேரத்தி லும் தட்சிணாமூர்த்தியின் சந்நதியில் அவருக்கு  முன்பாக அமைதியாக அமர்ந்து தியானத்தில் ஈடுபடுங்கள். குழப்பங்கள் அகன்று  மனம் தெளிவடையும். இந்த குரு பெயர்ச்சி நாளன்று ஞான குரு  வேறு, நவகிரக குரு வேறு என்ற உண்மையைப் புரிந்துகொள் வோம். அந்தந்த தேவதைகளுக்கு உரிய பரிகாரத்தைச் சரியாக செய்து முழுமையான  பலனை அடைவோம்.

ஆக்கத்தில் உதவி : திருக்கோவிலூர் ஹரிபிரசாத் சர்மா | தினகரன்

========================================================

ரைட்மந்த்ரா தொய்வின்றி தொடர உதவிடுங்கள்!

We need your SUPPORT. Help Rightmantra in its functioning. Click here!

========================================================

பரிகாரங்கள் பலனளிக்காமல் போவது ஏன்? MUST READ

பரிகாரத் தலங்கள் என்பவை உண்மையா? MUST READ

சாபம் என்றால் என்ன, தோஷம் என்றால் என்ன? MUST READ

ஒரு பாவமும் அறியாத எனக்கு மட்டும் ஏன் இப்படி? கேள்வியும் பதிலும்

வாழ்க்கை வளம் பெற வறண்ட பிள்ளையாரை தேடி ஒரு பயணம்!

கிரக லட்சணம், கோ சம்ரட்சணம்!

‘சாகுற நேரத்தில சங்கரா’ – பழமொழியின் பொருள் என்ன? சிவபுண்ணியக் கதைகள் (10)

விதியை மாற்றி எழுதிய சிவபுண்ணியம் – கர்மா Vs கடவுள் (4)

========================================================

[END]

2 thoughts on “குருபகவான் & தட்சிணாமூர்த்தி – குரு பெயர்ச்சிக்கு யாருக்கு பரிகாரம் செய்வது?

  1. தங்களின் இணையதளம் ஒரு பொக்கிஷம். உங்கள் பனி தொடரவும், மேலும் மேலும் தங்கள் காரியங்கள் அனைத்தும் சிந்திக்கவும் எமது வாழ்த்துக்கள். குருவருளும், திருவருளும் தங்களுக்கு நிறைய உண்டு போலும். அதனால் தான் பல நட்காரியங்கள் செய்யும் மிக மிக புண்ணிய வாய்ப்பை இறைவன் தந்திருக்கிறார். எல்லோருக்கும் இப்படி அமைவது இல்லை. வாழ்க வளமுடன்.

  2. நவகிரஹ குருவிற்கும் ஞான குருவிற்கும் உள்ள வேறுபாட்டை எளிமையாக விளக்கியமைக்கு மிக்க நன்றி
    குரு என்றால் எல்லாம் ஒன்று தான் என்று நினைத்தவர்களில் நானும் ஒருவன்
    மனம் தெளிவு பெற்றது
    இந்த குரு பெயர்ச்சி எல்லாருக்கும் எல்லா நன்மைகளும் கிடைக்கப்பெற்று நல் ஆரோக்கியத்தோடும் வளத்தோடும் மகிழ்ச்சியோடும் வாழ எல்லாம் வல்ல குரு பகவான் அனைவருக்கும் அருள் புரியட்டும்

    ஓம் குருவே நமஹ

Leave a Reply to murugan Cancel reply

Your email address will not be published. Required fields are marked *