Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Friday, March 29, 2024
Please specify the group
Home > All in One > குருராஜர் இருக்க கவலை எதற்கு? நெகிழ்ச்சியூட்டும் நிஜ அனுபவங்கள்!

குருராஜர் இருக்க கவலை எதற்கு? நெகிழ்ச்சியூட்டும் நிஜ அனுபவங்கள்!

print
சில ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற சம்பவம் இது. அந்த தம்பதிகள் இருவரும் புதிதாக மணமானவர்கள். கணவன் அடுத்த நாள் சபரிமலைக்கு புறப்படவிருக்கிறார். இந்த நேரம் பார்த்து அவரது புது மனைவிக்கு கைகள் இரண்டிலும் – தோள்பட்டையிலிருந்து கீழே விரல்கள் வரை – ஏதோ அலர்ஜி ஏற்பட்டு எரிச்சல் ஏற்பட ஆரம்பித்துவிடுகிறது. அதாவது காயத்தில் மிளகாய்த் தூளை தடவியது போன்ற ஒரு எரிச்சல். காரணம் என்ன ஏது என்று தெரியவில்லை.

உடனே மருத்துவமனைக்கு ஓடுகிறார்கள். எரிச்சலுக்கு என்ன காரணம் என்று மருத்துவர்களுக்கே விளங்கவில்லை. ஏதேதோ மருந்து, ஆயின்மெண்ட் கொடுக்கிறார்கள். அப்போதும் எரிச்சல் அடங்கவில்லை. நேரம் செல்ல செல்ல எரிச்சல் அதிகமாகிறது.

அந்த பெண்ணோ எரிச்சலால் துடிக்கிறார். கட்டிய மனைவி இப்படி தவிக்க இவர் எப்படி சபரிமலை கிளம்புவதாம்?

இவர் நிலையை பார்த்து பரிதாபப்பட்ட ஒருவர் “மானாமதுரை சேதுராமன் சார் பக்கத்துல வந்திருக்கார். அங்கே கோவிலுக்கு பக்கத்துல தான் தங்கியிருக்கிறார். அவரை போய் பாரு. உன் பிரச்னை நிச்சயம் தீர்ந்துடும்.” என்கிறார்.

இவர் மறுப்பேதும் சொல்லாமல் நம்பிக்கையுடன் “சரி… உடனே போறோம் ஐயா!” என்று கூறிவிட்டு கோவிலுக்கு மனைவியை அழைத்து செல்கிறார்.

அங்கே தங்கியிருந்த திரு.சேதுராமனிடம், நடந்ததை விவரிக்கிறார். அவர் “நான் பூஜை முடிக்கிற வரைக்கும் இரு” என்று கூறிவிட்டு தனது நித்ய பூஜையில் மூழ்கிவிடுகிறார்.

பூஜைகள் அனைத்தும் முடித்து, தீபாராதனை காட்டிய பின்னர்…. “ஸ்ரீ போர்ணபோத குருதீர்த்த” என்ற அப்பண்ணாச்சாரியார் இயற்றிய ஸ்ரீ ராகவேந்திரர் ஸ்தோத்திரத்தை சொல்லி முடித்து…. கையில் உத்தரணியில் சிறிது ஜலம் எடுத்து “ஓம் ஸ்ரீ ராகவேந்திராய நம” என்று ஜெபித்து அந்த இரு கைகளிலும் மேலிருந்து கீழ் வரை ப்ரோக்ஷனம் செய்கிறார்.

“இப்போ கையை உதறு” என்கிறார். அந்த பெண்ண கைகளை உதற…. அடுத்த நொடி அந்த எரிச்சல் மறைந்துவிடுகிறது. பார்த்துகொண்டிருப்பவர்கள் அனைவருக்கும் ஒரே பரவசம். இந்த தம்பதிகளுக்கோ கண்களில் ஆனந்தக் கண்ணீர்.

உடனே இவர் கால்களில் விழுகிறார்கள்.

“ஐயா…. நான் சபரமலைக்கு காலைல கிளம்புற மாதிரி திட்டம். இந்த நேரத்துல இவளுக்கு இப்படி ஆகவே எனக்கு என்ன பண்றதுன்னே தெரியலே… நல்ல வேளை உங்களால இது குணமாச்சி…” என்று நன்றிப் பெருக்குடன் கூற அதற்கு திரு.சேதுராமன் சிரித்துக்கொண்டே… “என்னால இல்லே… அவரால” என்று கூறி கைகளை காட்டுகிறார்.

அங்கே… சுவாமி ராகவேந்திரரின் படம். மலர்களால் அலங்கரிக்கப்பட்டு, கைகளில் வீணையுடன் மின்னுகிறார் ஸ்ரீ ராகவேந்திரர்.

********************************************************************

கருவே உருவாகாது என்று சொல்லப்பட்ட பெண் கருத்தரித்த அதிசயம்

சுமார் பத்து வருடங்களுக்கு முன்பு ஸ்ரீவில்லிப்புத்தூரில் நடைபெற்ற சம்பவம் இது.

அங்குள்ள பிரத்தியங்கிரா தேவி கோவிலின் எதிர்புறம் இருக்கும் ஒரு வீட்டில் வசித்து வரும் காளி உபாசகர் அவர். காளிதேவியின் அருள் பெற்றவர். வீட்டில் ஒரு பெரிய காளி படத்தை வைத்து பூஜித்து வருகிறார்.

அவருக்கு ஒரே தங்கை. திருமணமாகி ஐந்து வருடங்களாக புத்திரப் பேறு இல்லை. செய்யாத வைத்தியமில்லை. போகாத கோவிலில்லை. வேண்டாத தெய்வமில்லை.

தங்கைக்கு இப்படி ஒரு பிரச்னை இருக்க எந்த சகோதரனால் நிம்மதியாக இருக்க முடியும்? தினமும் மனமுருகி காளி தேவியிடம் வேண்டுகிறார். ஒரு நாள் இவருக்கு சொப்பனம் வருகிறது.

“சென்னையிலிருந்து இரு தம்பதிகள் கோவில் திருவிழாவுக்கு வருவார்கள். அவர்களை உபசரித்து உன் வீட்டில் தங்கவைத்துக்கொள். வேண்டிய அனைத்து சௌகரியங்களையும் செய்துகொடு” என்று காளி உத்தரவிடுகிறாள்.

காலை எழுந்தவுடன் கனவு நினைவுக்கு வருகிறது. கனவில் அருள் தந்தமைக்கு அன்னைக்கு நன்றி கூறுகிறார். ஆனால்… அந்த தம்பதிகளை எங்கே போய் தேடுவது என்று தவிக்கிறார்.

இந்த நேரம் பார்த்து ஊர் மக்களுக்கு விநியோகிக்கப்பட்டுக்கொண்டிருக்கும் கோவில் திருவிழா நோட்டீஸ் இவர் கைகளுக்கு வருகிறது. அதில், சென்னையிலிருந்து திரு.சேதுராமன் என்பவர் தனது துணைவியாருடன் வந்து ஸ்ரீவில்லிப்புத்தூரில் ஒரு மாதம் தங்கியிருந்து பிரத்தியங்கிரா தேவி கோவிலில் தொடர் சொற்பொழிவு செய்யவிருப்பதாகவும் அனைவரும் கலந்து கொள்ளவேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்திருந்தார்கள்.

“ஒருவேளை அன்னை காளி சொல்லும் தம்பதி இவர்கள் தானோ?” என்று உடனே இவருக்கு சந்தேகம் வந்துவிட்டது.

அடுத்த நாள் கோவிலுக்கு வந்த திரு.சேதுராமனை அந்த கோவிலின் டிரஸ்டி ஒருவர் முன்னிலையில் சென்று சந்தித்தார். பார்த்தவுடனேயே தெரிந்துவிட்டது. அன்னை சொன்னது இவர்களைத் தான் இருக்கும் என்று. தன் வீட்டில் தான் தம்பதிகள் தங்கவேண்டும் என்றும் கூறி அவர்களிடம் தனது விருப்பத்தை தெரிவித்தார் நம் காளி பக்தர். (காளி கனவில் வந்து உத்தரவிட்ட விஷயத்தை அவர்களிடம் சொல்லவில்லை. தேவைப்பட்டால் சொல்லலாம் என்று விட்டுவிட்டார்.)

எந்தக் கோவிலில் சொற்பொழிவு செய்யப்போகிறோமோ அந்த கோவிலுக்கு எதிரிலேயே தங்குவதற்கு வீடு சகல சௌகரியங்களுடன் கிடைக்கிற மகிழ்ச்சியில் “எல்லாம் ஸ்ரீ ராகவேந்திரரின் கருணை – பிரத்தியங்கிரா தேவி அன்னையின் அருள்” என்று கூறி மகிழ்ச்சியுடன் தம்பதிகள் சம்மதிக்கிறார்கள்.

தம்பதிகள் தங்குவதன் பொருட்டு தன் தங்கையும் தங்கை கணவரும் தங்கியிருந்த அறையை காலி செய்து அவர்களை அதே தெருவில் உள்ள உறவினர் ஒருவரின் இல்லத்தில் தற்காலிகமாக தங்கச்செய்கிறார் இவர். பரம பக்தர்கள் இருவருக்கு நம்மால் இடம் கிடைக்கட்டும் என்று தங்கையும் மகிழ்ச்சியுடன் செல்கிறாள்.

இங்கே தம்பதிகள் இருவரும் அந்த அறையில் தங்குகிறார்கள். அங்கேயே ஒரு மாதம் தங்கியிருந்து கோவில் நிகழ்ச்சிகளில் சொற்பொழிவுகளில் பூஜைகளில் கலந்துகொள்கிறார்கள். அவர்களுக்கு வேண்டிய அனைத்து சௌகரியங்களையும் செய்து கொடுக்கிரார் இவர்.

ஒரு மாதம் கழித்து அனைத்தும் முடிந்து திரு.சேதுராமன் தன துணைவியுடன் சென்னைக்கு திரும்பிவிடுகிறார். இங்கே உறவினர் வீட்டிற்கு தற்காலிகமாக தங்கச் சென்ற தங்கை கணவருடன் மீண்டும் இதே அறைக்கு திரும்பிவிடுகிறார்.

என்ன ஆச்சரியம்…. அடுத்த சில வாரங்களில் அந்த பெண் கருத்தரிக்கிறாள். காளி பக்தருக்கு ஒரே ஆனந்தம். திரு.சேதுராமனுக்கு தகவல் பறக்கிறது.

அப்போது தான் நடந்தது அனைத்தையும் – அன்னை காளி சொப்பனத்தில் வந்து உத்தரவிட்டது முதல் தன் தங்கைக்கு குழந்தையே பிறக்காது என்று கூறப்பட்டது பின்னர் கருவுற்றது வரை – ஒன்று விடாமல் சொல்லி முடிக்கிறார்.

அதற்கு சேதுராமன் அவர்கள் சொன்னது என்ன தெரியுமா?

பூஜ்யாய ராகவேந்திராய சத்யதர்ம ரதாயச
பஜதாம் கல்பவ்ருக்ஷாய நமதாம் காமதேனவே!

என்னும் ஸ்லோகத்தை தான்.

அந்த பெண் தங்கியிருந்த அறையில் ஏதோ தீய சக்தி இருந்திருக்கிறது. ஆகவே தான் அன்னை அன்னை அதை விரட்ட இந்த திருவிளையாடலை ஒரு ராகவேந்திரரின் பக்தர் மூலம் தீர்த்திருக்கிறாள்.

இறைவனின் பெருமையை ஊர் ஊராக சென்று சொல்லுவதையே தன் கடமையாக கருதும் பக்தர் ஒருவர் தம்பதி சமேதமாக ஒரு மாதம் தங்கியதால் புனிதம் பெற்ற அந்த அறையில் இவர்கள் மறுபடியும் சென்று தாம்பத்தியம் நடத்தியதில் – தோஷங்கள் அனைத்தும்  நிவர்த்தி பெற்று – குழந்தையே பிறக்காது என்று கருதப்பட்ட ஒரு பெண்ணின் வயிற்றில் கரு உண்டாகிவிட்டதென்றால் அந்த அறை எத்தனை சான்னித்யம் பெற்றிருக்கவேண்டும்? சற்று நினைத்து பாருங்கள்….

நல்லாரைக் காண்பதுவும் நன்றே நலமிக்க
நல்லார்சொல் கேட்பதுவும் நன்றே – நல்லார்
குணங்கள் உரைப்பதுவும் நன்றே; அவரோடு
இணங்கி இருப்பதுவும் நன்று

ஒளவை சொன்னது எவ்வளவு அர்த்தம் மிக்கது தெரியுமா?

நல்லவங்க மூச்சு காத்துக்கு கூட மகத்துவம் இருக்குங்க. அதுக்கு தான் நல்லவங்களோட & சான்றோர்களோட பழகனும் என்பது.

அதற்கு பிறகு அந்த பெண் அழகான ஆண் குழந்தை ஒன்றை பெற்றெடுத்தாள். குழந்தைக்கு தற்போது பத்து வயதிற்கும் மேல் இருக்கும்.

********************************************************************

யார் இந்த சேதுராமன்? இவர் என்ன சாமியாரா? அல்லது ஏதாவது அடிகளாரா? அல்லது குறி சொல்பவரா?

இதெல்லாம் ஒன்னுமில்லீங்க…

ஸ்ரீ ராகவேந்திரரின் பெருமைகளை ஊரா ஊராக சென்று பல சொற்பொழிவுகளில் கூறிய பரம பக்தர் இவர். வயது 65 இருக்கும்.

மானாமதுரை Dr.சேதுராமன் M.A., Ph.D., என்பது இவர் பெயர். தமிழ்நாட்டில் இவர் ராகவேந்திரரின் பெருமையை பேசாத இடங்களே இல்லை என்னும் அளவிற்கு ஊர் ஊராக சென்று குருராஜரின் மகிமையை பேசி வந்தவர்.

ஸ்ரீ ராகவேந்திரர் பால் ஈர்க்கப்பட்டு அவரை பற்றி அவருடைய பெருமைகளை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டி கிடைப்பதர்க்கரிய மத்திய அரசு பணியையே தூக்கியெறிந்து விட்டு (மத்திய அரசின் DEFENCE ACCOUNTS ல் உயர் பதவி வகித்து வந்தவர் இவர்) இறை சேவைக்கு தம்மை அர்பணித்துகொண்ட  உத்தமர் இவர்.

எனக்கு இன்றைக்கு ஏற்பட்டுள்ள இறைபக்திக்கு வித்திட்டவர் இவரே.

********************************************************************

1990 ஆம் வருடம் என்று நினைக்கிறேன் – அரக்கோணம் ஹவுஸிங் போர்டில் நாங்கள் குடியிருந்த சமயம். ஹவுஸிங் போர்ட் சார்பாக புதிதாக பிள்ளையார் கோவில் ஒன்று கட்டப்பட்டு வெகு விமரிசையாக கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து பல நாட்கள் கோவிலில் உபன்யாசம், கச்சேரி என ஹவுஸிங்  போர்டே அதகளப்பட்டது. நான் அந்த கோவிலுக்கு அடிக்கடி செல்வதுண்டு. (அங்கு தினமும் கிடைக்கும் சுண்டலுக்கும் சர்க்கரைப் பொங்கலுக்கும் சேர்த்து ஆசைப்பட்டு தான்!). ஒரு நாள் நான் அப்படி போயிருந்த சமயம்…. திரு.மானாமதுரை சேதுராமன் அவர்கள் ஸ்ரீ ராகவேந்திர மகாத்மியம் என்ற தலைப்பில் சொற்பொழிவாற்றிக் கொண்டிருந்தார். அந்த குரலில் இருந்த கம்பீரமும் அவரின் தேஜஸும் என்னை கவர்ந்திழுக்க அப்படியே அமர்ந்து கேட்க ஆரம்பித்துவிட்டேன்.

அமர்ந்தவனுக்கு நேரம் போனதே தெரியவில்லை. இரண்டு மணிநேரங்கள் என்னை கட்டிப் போட்டுவிட்டார்.

அதன் பிறகு அவரத சொற்பொழிவு ஆடியோ காஸெட் ஒன்றை அவரிடம் வாங்கி வந்து வியாழன் தோறும் கேட்க ஆரம்பித்தேன். எப்போதெல்லாம் பிரச்சனைகள் என்னை சூழுமோ அப்போதெல்லாம் அதை கேட்பதை வழக்கமாக வைத்திருந்தேன். வருடங்கள் ஓடிவிட்டன.  காஸெட்டும் தேய்ந்துபோய் ஒரு கட்டத்துக்கு மேல் வேலை செய்யவில்லை. டேப் ரெக்கார்டரும் வழக்கொழிந்துவிட்டது. அதற்கு பிறகு அவரை மறந்தே போனேன்.

2011 ஆம் ஆண்டு…..

அம்பத்தூரில்  ராகவா லாரன்ஸ் கட்டியிருக்கும் ராகவேந்திர சுவாமிகளின் பிருந்தாவனத்துக்கு ஒரு முறை சென்றிருந்தபோது, அங்கே ஜெயா தொலைகாட்சிக்காக ராகவேந்திர விஜயம் என்னும் தொடரை ஷூட்  செய்துகொண்டிருந்தார்கள்.

அந்த தொடரின் டெக்னீசியன் ஒருவர் நடிகர் லாரன்ஸிடம் ஒரு விசிடிங் கார்டை காண்பித்து ஏதோ பேசிக்கொண்டிருக்க, ‘சேதுராமன்’ என்று என் காதில் விழுந்தது. உடனே அருகில் சென்றேன். அவர் கூறுவது மானாமதுரை திரு.சேதுராமன் அவர்களைப் பற்றி தான் என்பதை தெரிந்துகொண்டு, அப்புறம் அவரிடம் அவரது மொபைல் நம்பரை வாங்கிவிட்டேன். எப்படியாவது அவரை சந்தித்து ஆசிபெற்றுவிடவேண்டும். அடுத்து அவர் சொற்பொழிவு எங்கு நடந்தாலும் நேரே சென்றுவிடவேண்டும் என்று உறுதிபூண்டேன்.

ஆனால் பரபரப்பான (?!) வாழ்க்கையில் எனக்கு இது போன்ற விஷயங்களுக்கு நேரமிருக்கவில்லை. மறுபடியும் மறந்தே போனேன். அடிக்கடி நினைவுக்கு வரும்… ‘இன்னொரு நாள் சென்று பார்த்துக்கொள்ளலாம் இன்னொரு நாள் சென்று பார்த்துக்கொள்ளலாம்…’ என்று ஒத்திப்போட்டுவந்தேன்.

இடையில் ஆண்டவன் கட்டளைப்படி RIGHTMANTRA.COM உதயமானது. கடந்த டிசம்பர்  மாதம் வெற்றிகரமாக பாரதி பிறந்தநாள் விழா நடைபெற்றது. அதற்கு பின்னர் நம் தள  வாசகர்களுக்காக திரு.மானாமதுரை சேதுராமன் அவர்களை அழைத்து வந்து ராகவேந்திர மகாத்மியத்தை கேட்க செய்யவேண்டும் என்று விரும்பி, சென்ற மாதம் ஒரு நாள் அவர் மொபைல் எண்ணுக்கு அழைத்தேன்.

எதிர்முனையில் ஒரு பெண்மணி எடுக்க, அவரது மனைவியாக இருக்கவேண்டும் என்று யூகித்தேன். நம்மை அறிமுகம் செய்துகொண்டு, திரு.சேதுராமன் அவர்களிடம் நாம் பேச விரும்பும் விஷயத்தை கூறினேன்.

“அவரை ராகவேந்திரர் தன்கிட்டே அழைச்சுண்டு ஒரு வருஷம் ஆயிடுத்தேப்பா..” என்று அந்த அம்மா சொல்ல… அதிர்ச்சியில் நொறுங்கிப்போனேன்.

“ஐயா… உங்களை தொடர்பு கொள்ள மார்க்கம் கிடைத்திருந்தும் அதை பயன்படுத்திக்கொள்ள தவறிய பாவியாகிவிட்டேன். என்னை மன்னியுங்கள்..” என்று உள்ளம் கதறியது.

என்னை சமாதானப்படுத்திக்கொண்டு, “அம்மா… நான் ஐயாவின் சொற்பொழிவை 22 வருடங்களுக்கு முன்பு அரக்கோணத்தில் வசித்தபோது கேட்டிருக்கிறேன். அது இன்னும் என் காதுகளில் ஒலித்துக்கொண்டிருக்கிறது. மறுபடியும் அவரைப் பற்றிய விபரம் இரண்டாண்டுகளுக்கு முன்பு தான் கிடைத்தது. அவரை பார்க்க விரும்பி காத்திருந்தேன். அதற்குள் இப்படி நடக்கும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. என்ன நடந்தது? எப்படி ?”

“ஒரு நாள் சொற்பொழிவுக்கு போய்ட்டு வந்தார்… நெஞ்சு வலின்னு சொன்னார்…. அவ்ளோ தான்…”

ராகவேந்திரர் எந்தவித சிரமத்தையும் அவருக்கு கொடுக்காமல் தன்னுடன் அழைத்துக் கொண்டதை புரிந்துகொண்டேன்.

“ஐயாவை தான் பார்க்கமுடியலே… உங்களையாவது பார்க்கவிரும்புகிறேன். அவரது சொற்பொழிவு சி.டி. ஏதாவது கிடைக்குமா?” என்று கேட்டேன்.

தனது பெரிய மகன் வீட்டில் கோயம்புத்தூரில் வசிப்பதாகவும்,… ஜனவரி 21க்கு பிறகு சென்னை ராமாபுரத்தில் உள்ள இன்னொரு மகன் வீட்டிற்கு வரவிருப்பதாகவும் அங்கு வந்து தன்னை பார்க்கும்படியும் தான் சி.டி. தருவதாகவும் அந்த அம்மா சொல்ல, எனக்கு ஒரே மகிழ்ச்சி.

சொன்னபடி ஜனவரி 21 வரை காத்திருந்து பின்னர் ஃபோன் செய்தேன். “சரி… மாலை வாருங்கள்” என்றார்கள். ஆனால் என்னால் போகமுடியாதபடி அலுவலகத்தில் எதிர்பாராத வேலை ஒன்றில் மாட்டிக்கொண்டேன். மறுநாளும் இப்படி தான் ஆனது. ஏதேனும் ஒரு தடை வந்துகொண்டே இருந்தது.  என் பணியை நான் என் உயிரினும் மேலாக நேசிக்கிறேன். ஆனால் முதல் முறையாக… இப்படி வேலை பார்த்துக்கொண்டே தளத்துக்காக இது போன்ற அழைப்புக்களுக்கு உரிய நேரத்தில் செல்வது சிரமமாக இருக்கிறதே என்று என்னை நொந்துகொண்டேன்.

கடைசியில் நேற்று மாலை (24 ஜனவரி) என்று தான் அவர்களை சந்திக்க முடிந்தது. குருவாரம் – வியாக்கிழமை அன்று அது அமைந்ததில் எனக்கு மிக்க மகிழ்ச்சி. ராகவேந்திரர் ஏன்  இரண்டு நாட்கள் தடைகள் ஏற்படுத்தினார் என்று பின்னர் தான் புரிந்தது. (தன்னோட பக்தனுக்கு வியாழக்கிழமை அன்னைக்கு அருள் புரியணும்னு நினைச்சார் போல….! அடுத்த பாகத்துல தான் இதுக்கு உங்களுக்கு அர்த்தம் புரியும்!)

“பெரியவாளுக்கு சேதுராமன் சாரை தெரியுமோ?”

அங்கே வீட்டில் சுவற்றில்  லேமினேட் செய்யப்பட்ட காஞ்சி மகா பெரியவா புகைப்படம் ஒன்று மாட்டப்பட்டிருந்தது. மகா பெரியவா படத்தை பார்த்தவுடனேயே எனக்கு முகம் பளிச் என்று ஆகிவிட்டது.

“மகா பெரியவாளுக்கு சேதுராமன் சாரை தெரியுமோ?” சற்று சந்தேகத்துடன் கேட்டேன்.

“தெரியுமாவா….?”

அடுத்து அவர்கள் சொன்ன சம்பவம்…. சிலிர்க்க வைக்கும் ஒன்று……!

காஞ்சி மடத்தில் ஒரு நாள் மகா பெரியவா பக்தர்களோட பேசிக்கிட்டுருக்கார். பேசிக்கொண்டிருக்கும்போதே திடீரென்று ஏதோ சிந்தனையில் ஆழ்ந்துவிடுகிறார்.

ஆனால்…. அது புரியாமல் அவருடன் பேசிக்கொண்டிருந்த பக்தர்களில் ஒருவர் தான் பாட்டுக்கு பேசிக்கொண்டே போக… “நிறுத்து…  நிறுத்து….உன் பேச்சை சித்த நேரம் நிறுத்து…. அங்கே சேதுராமன் ராகவேந்திரரோட பிருந்தாவனப் பிரவேசம் சொல்லிக்கிட்டுருக்கார்…. அதை கேட்டுட்டு வர்றேன்….” என்று கூறி மறுபடியும் நிஷ்டையில் ஆழ்ந்துவிடுகிறார்.

சுற்றியிருந்த அத்தனை பேருக்கும் ஒரு கணம் சிலிர்ப்பு. பெரியவா மானசீகமா ஏதோ உபன்யாசம் கேட்டுகிட்டு இருக்கார் போல என்று பக்தர்கள் நினைத்துக்கொண்டனர்.

இதை திருமதி.சேதுராமன் என்னிடம் கூறியவுடன் எனக்கு உடம்பெங்கும் மின்சாரம் பாய்ந்தது போலிருந்தது.

திரு.சேதுராமன் அவர்களின் ராகவேந்திர மகிமை உபன்யாசத்தில் பிருந்தாவனப் பிரவேசம் அனைவரும் கேட்க வேண்டிய ஒன்று. ஸ்ரீ ராகவேந்திரர் பிருந்தாவனப் பிரவேசம் செய்த அந்த காலகட்டத்துக்கே நம்மை உண்மையாக அழைத்து சென்றுவிடுவார். ஊனை உருக்கும் தன்மை கொண்டது அது. கருணைக் கடலாம் பரமசிவனின் சொரூபம் மகா பெரியவா அதை கேட்க விரும்புவதில் என்ன ஆச்சரியம் இருக்க முடியும்?

(அப்போது திருமதி.சேதுராமன் நம்மிடம் பகிர்ந்துகொண்ட விஷயங்கள் தான் நீங்கள் மேலே படித்த ஸ்ரீ ராகவேந்திரரின் மகிமையை உணர்த்தும் இரண்டு சம்பவங்கள்.)

மேலும் பக்தர்கள் பலரின் வாழ்வில் ராகவேந்திர சுவாமிகள் நிகழ்த்திய அற்புதங்கள் உள்ளிட்ட நெகிழ வைக்கும் விபரங்கள் அடுத்த பதிவில்!

==========================================================

Support Rightmantra for functioning smoothly

Rightmantra.com is a website that focuses on Spirituality, Self-development and True values without any commercial interest. Help us to sustain. Donate us.

Our A/c Details: Rightmantra Soul Solutions | A/c No. : 9120 2005 8482 135  | Account type : Current Account  | Bank : Axis Bank, Poonamallee, Chennai – 600 056.
IFSC Code : UTIB0001182

ரைட்மந்த்ரா தொய்வின்றி தொடர உதவிடுங்கள்!

For more information click here!

=========================================================

Also check :

ஸ்ரீராகவேந்திரர் குடிகொண்டுள்ள மந்த்ராலய மண்ணின் மகிமை!

முதல் மாணவன், முதல் வேலை, முதல் சம்பளம்…!! – ஸ்ரீ ராகவேந்திர தரிசனம் (6)

புதுவை பிருந்தாவனத்தில் காட்சி தந்த ராகவேந்திரர் – உண்மை சம்பவம் – ஸ்ரீ ராகவேந்திர தரிசனம் (5)

பட்ட மரம் துளிர்த்தது; வேத சக்தி புரிந்தது – ஸ்ரீ ராகவேந்திர தரிசனம் 4

கேட்பதை தருவார், கேட்டதும் தருவார் குருராஜர் – ஸ்ரீ ராகவேந்திர தரிசனம் 3

“அழைத்தால் போதும் அடுத்த கணமே நினைத்தது நடக்கும்!” – ஸ்ரீ ராகவேந்திர தரிசனம் 2

திருவருளும் குருவருளும் – ஸ்ரீ ராகவேந்திர தரிசனம் (1)

எது வந்த போதும் துணை நீயே குருராஜா – உண்மை சம்பவம் – Rightmantra Prayer Club

குருராஜர் இருக்க கவலை எதற்கு? நெகிழ்ச்சியூட்டும் நிஜ அனுபவங்கள்!

நம் தளத்திற்கு கிடைத்த ஸ்ரீ ராகவேந்திர சுவாமிகளின் பரிபூரண ஆசி! எங்கே… எப்படி?

ஆங்கில கவர்னருக்கு ராகவேந்திரர் காட்சியளித்த அற்புதம் – கஜெட் ஆதாரத்துடன்!

யாருக்கு தேவை தண்ணீர்?

உச்சரிப்பை விட உன்னத பக்தியே சிறந்தது!

இறைவா… பிறர் நிறைவில் பெருமிதமே தினம் காணும் குணம் வேண்டும்!

எது வந்த போதும் துணை நீயே குருராஜா – உண்மை சம்பவம்

முக்காலமும் நீ அறிவாய் குருராஜா – நம் தள வாசகரிடம் ஸ்ரீ ராகவேந்திரர் நிகழ்த்திய அற்புதம்!

=========================================================

[END]

 

19 thoughts on “குருராஜர் இருக்க கவலை எதற்கு? நெகிழ்ச்சியூட்டும் நிஜ அனுபவங்கள்!

  1. மந்திராலயம் செல்ல வேண்டும் என்று நீண்ட நாள் ஆசை ..நேரம் கை கூடவில்லை ..அந்த மகான் ராகவேந்திரர் எனக்கு அந்த அருள் புரிய வேண்டும்

  2. I am really impressed to see this article.
    ***
    And to know his (sethuraman sir) phenomenal work and fame, the above said incident with Maha periyava itself is far more than enough.
    ***
    You really have the gift of writing and how to pen this kinda articles. Keep it up.
    ***
    And I’m very happy with his article and getting to know about this great person. And more eagerly waiting for the next continuation articles.
    ***
    Thanks so much..
    ***
    **Chitti**.
    – devotee of Sri Ragavendra.

  3. Dear Mr.Sundar sir,

    I am the second son of Mr.S.Sethuraman and proud to applaud the excellent work of yours and i will be very greatful for the work done. Keep going and i bless you will reach the heights you want to go.

    regards

    s.l.narasimhan

    ————————————————
    Thank you very much sir for visiting this website.
    I am indeed blessed by Gururayar and your father.
    My readers are more blessed.
    – Sundar

  4. கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களுக்கும் கூட இதை படிக்கும் போது நம்பிக்கை வரும்,நமக்கு மேல் ஏதோ ஒரு சக்தி இருக்கிறது என்பதை புரிந்து கொள்வார்கள்.அவர்களை பார்க்க போகும் போது என்னை அழைக்காமல் சென்று விடீர்களே சுந்தர் ஜி

  5. இப்படி ஒரு பதிவை படிக்கும்போதே மனம் பரவசமடைகிறது….

    இன்று தான் மகா பெரியவா புத்தகத்தை படிக்க தொடங்கி உள்ளேன்

    முதல் நான்கு பக்கம் படித்தவுடன் புத்தகத்தை வைக்க மனமில்லை..

    மிகவும் அருமையான புத்தகத்தை அடையாளம் காட்டியதற்கு மிகவும் நன்றி சுந்தர்…

    மேலே கூறியுள்ள 2 சம்பவங்களுமே அதிசயமான உண்மை என்று நினைக்கும்போது நம்முடைய பிரார்த்தனைகளும் கடவுள் நம்பிக்கையும் மிக சிறியதாகவே எனக்கு படுகிறது..

    சேது ராமர் ஐயா அவர்களை நாம் பார்க்க தவறியதை நினைத்து மனம் மிகவும் வேதனை படுகிறது…

    எது எப்படியோ எல்லாம் அவன் செயல்.. அவனின்றி இவ்வுலகில் எதுவும் அசையாது…

    PVIJAYSJEC

  6. Thank you for sharing the history of great soul.I am hearing first time about this mahaan.
    Eagerly waiting for next part.

  7. குருஜி ராகவேந்திரரின் பக்தன் நான்!! இந்த பதிவை படிக்க நான் கண்டிப்பாக பாக்கியம் செய்தேன்!! எதனை பேருக்கு இதை படிக்கும் பாக்கியம் கிடைக்கும்! நேரம் பொன் போன்றது என்பார்கள்!! அதை வலைத்தளத்தில் எத்தனை பேர் தேவையற்ற செயல்களை செய்கிறார்கள்!! இந்த மாதிரி ஒரு பெரியவர்களை பற்றியும், குருவை பற்றியும் சொல்ல எத்தனை பேர் உள்ளார்கள்!! உங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள் பல!! அடுத்த பதிவிற்காக காத்திருக்கிறேன்!! ஓம்!!

    —————————————————
    ‘நான் ராகவேந்திர பக்தன்’ என்று ஒருவர் கூறுவதால் மட்டும் அவர் பக்தனாகிவிடமுடியாது. அவர் விரும்பும்படி நமது செயல்பாடுகள் இருக்கிறதா என்பதை சீர்தூக்கி பார்க்கவேண்டும்.

    இன்னும் புரியுற மாதிரி சொல்லனும்னா… ஆண்டவனை நாம ஏற்றுக்கொள்கிறோமா இல்லையா என்பது ஒரு விஷயமேயில்லை. அவன் ஏற்றுகொள்கிற நிலையில் நம் வாழ்க்கைமுறை இருக்கிறதா என்று சுயபரிசோதனை செய்துகொள்ளவேண்டும்.

    அதுவே உண்மையான பக்தி.

    நான் இதை பொதுவா தான் சொல்றேன்.

    – சுந்தர்

  8. உங்களின் இந்த ஆன்மீக சேவைக்கு என் மனமார்ந்த நன்றிகள். தங்களின் இவ்வான்மீக பணியினால் பலரது வாழ்க்கையில் ஒளி பிறந்திருக்கும். பலரது வாழ்கையை நெறிப்படுத்திய உங்களுக்கு மீண்டும் என் நன்றிகள்.

    B.சருபன்

  9. இனிய அனுபவத்தை தந்தமைக்கு மிக்க நன்றி !!!
    திரு சேதுராமன் அவர்களின் சொற்பொழிவை கேட்க ஆவலாக இருக்கிறேன் !!!

  10. சுந்தர் ஜி

    நெகிழ்ச்சியான அனுபவத்தை தந்தமைக்கு மிக்க நன்றி !!!

    மேலும் ஆவலுடன் என்றும்

    மனோகரன்

  11. நீங்கள் கூறுவது உண்மை தான் சுந்தர் ஜி!! நாம் ஆண்டவனை ஏற்று கொள்கிறோமா இல்லையா என்பது முக்கியமல்ல, ஆண்டவன் நம்மை ஏற்று கொள்கிறார இல்லையா என்பது தான் முக்கியம்!! என்னை பொறுத்த வரை என் செயல்கள் யாருக்கும் எந்த தீங்கும் விளைப்பது போல் இல்லை, அலுவலகத்தில் நான் நேரத்தை வீண் அடிப்பது இல்லை!! வேலை செய்யும் நேரத்தில் வேலையும்! வீட்டில் இருக்கும் சமயம் எனக்கு பிடித்தார் போல் பொழுதுபோக்கும் கொண்டுள்ளேன்!! இந்த வயதில் என் தாய்க்கு நல்ல மகனாக, தங்கைக்கு அண்ணனாக, நண்பர்களுக்கு நல்ல நண்பனாக இருக்கிறேன்!! இதுவே என் வாழ்க்கைமுறை!! மற்ற படி சுயபரிசோதனை செய்யும் அளவுக்கு நான் ஆன்மீகத்தில் வளரவில்லை, எனக்கு அது இப்போதைக்கு வேண்டாம்!!

    நன்றி!!!

    ——————————————————
    பயிரிடும் காலத்தில் பட்டுமெத்தையில் தூங்குவது போலத் தான் இது. உங்கள் படுக்கை நீங்கள் தூங்குகிறீர்கள். யாருக்கும் எந்தவித தொந்தரவும் செய்வதில்லை. அது சரியா தவறா என்பதை உங்களிடமே விட்டுவிடுகிறேன்.

    அதே சமயம் நீங்கள் உங்களைப் பற்றி குறிப்பிடும் விஷயங்கள் எந்தளவு உண்மை என்று எனக்கு தெரியாது. அது உங்களுக்கும் உங்கள் மனசாட்சிக்கும் மட்டுமே தெரியும். உங்கள் கண் முன் நிற்கும் முழுமுதற்க் கடமை எப்போதும் நினைவிருக்கட்டும்.

    நன்றி….!

    மற்றபடி வீட்டிற்கும் நாட்டிற்கும் பெருமை சேர்க்கும் ஒரு நல்ல பிள்ளையாக உயர வாழ்த்துக்கள்!

    – சுந்தர்

  12. வணக்கம் .
    உண்மையில் மெய்சிலிர்க்க வைக்கும் சம்பவம்.
    பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி.

  13. பிரமாதம். மானாமதுரை சேதுராமன் குறித்து பல தகவல்கள் அறிந்து கொண்டேன். வாழ்த்துக்கள் சுந்தர்.

    ———————————————————-
    சார்… இந்த எளிய தளத்திற்கு வந்து பார்வையிட்டு தங்கள் கருத்துக்களை பதிவு செய்தமைக்கு நன்றி. நன்றி.

    – சுந்தர்

    (நண்பர்களே…. திரு.சுவாமிநாதன் யார் தெரியுமா? கலியுக தெய்வம் மகா பெரியவாளைப் பற்றி ‘மகா பெரியவா’ என்னும் அற்புத நூலை எழுதியிருக்கும் அன்பர். மிகப் பெரிய ஆன்மீக எழுத்தாளர். இணையத்தில் மகா பெரியவாளை பற்றி தேடிய போது நமது தளத்தின் லிங்க் கிடைத்ததாக கூறினார்.)

    நூலின் முகப்புக்கு கீழ்கண்ட லிங்கை செக் செய்யவும்

    http://rightmantra.com/wp-content/uploads/2013/01/Maha-Periyavaa-2.jpg

  14. இத்தகைய விஷையங்களை படிக்கும்போது மெய் சிலிர்க்க வைக்கிறது. நானும் படித்து விட்டு வேலை கிடைக்காமல் தவித்தபோது, ஸ்ரீ ரங்கத்தில் உள்ள குரு ராகவேந்த்ரர் பிருந்தாவனத்துக்கு தினமும் சென்று 12 முறை சுற்றி வந்தேன். பகவான் அருளால் 3 வங்கிகளில் இருந்து ஒரே நேரத்தில் வேலை வாய்ப்பு வந்தது.

    குரு ரகாவேந்த்ரரையும், ஹனுமானையும் பூஜிப்பவர்களுக்கு எந்த குறையும் வராது. சிவகுமார்

  15. This article was going good, but during the course of Dr.Sethuraman, those conversation about you and his wife really shocked me. It’s really tough to understand about the so called god.

  16. சுந்தர்ஜி இதைப் படித்ததும் மெய் சிலிர்த்துவிட்டது கலியுகத்தில் இப்படித்தான் நாம் தெய்வங்களைக காண இயலும் எனது நண்பர் இதைப்படித்துவிட்டு இந்த சீடி எங்கே கிடைக்குமென கேட்டுள்ளார் அயல் நாடு வாழ் நண்பராகையால் கோரிக்கையைத் தட்ட இயலவில்லை தயவு செய்து தெரிவிக்கவும் நன்றி

  17. பதிவை படிக்கும் பொழுதே மெய் சிலிர்கிறது. பதிவை பாதி படித்துக் கொண்டு இருக்கும் பொழுதே தாங்கள் திரு சேது ராமன் அவர்களை சந்தித்து ஆசி வாங்கி இருப்பீர்கள் என்று நினைத்தோம். தாங்கள் அவரை சந்திக்க சென்றது late ஆனாலும் அவர் மனைவியிடம் ஆசிர்வாதம் வாங்கி விட்டீர்கள். தாங்கள் எங்கு சென்றாலும் மகா பெரியவா தங்களுடன் பயனிக்கிறார்கள்.. சிறு வயதில் தங்கள் மனதில் பதிந்த ஆன்மிகம் என்னும் விதை இப்பொழுது விருக்க்ஷமாக ரைட் மந்திர வாக வளர்ந்து வருகிறது. ரைட் மந்த்ராவால் தங்களுக்கு பல பெரியவர்களின் நட்பு கிடைத்திருக்கிறது.ராகவேந்திரர் தங்களை வழி நடத்துவார்.

    நன்றி
    உமா

  18. சார் என்னால முடியலை ஆனந்த வெள்ளத்தில் வாசகர்களை ஆழ்த்துகிறீர்கள் இது மாதிரி குருவருளும் திருவருளும் கிடைக்க வேண்டும் என்று கடவுளை பிரார்த்திக்கிறேன்…. உங்கள் பணி மேலும் தொடர்ந்து வெற்றி பெற என் குரு மார்கள் ஆண ஷீரடி சாய் பாபாவையும் காஞ்சி மகா பெரியவாளையும் மனமார வணங்குகிறேன்….

    நன்றி
    கார்த்திக்

Leave a Reply to raja Cancel reply

Your email address will not be published. Required fields are marked *