Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Thursday, March 28, 2024
Please specify the group
Home > Featured > ‘கார்த்திகை தீபத்தை எப்படி கொண்டாடவேண்டும்?’ வழி(ஒளி)காட்டும் மகா பெரியவா!

‘கார்த்திகை தீபத்தை எப்படி கொண்டாடவேண்டும்?’ வழி(ஒளி)காட்டும் மகா பெரியவா!

print
நாளை 25/11/2015 புதன்கிழமை… கார்த்திகை தீபத் திருநாள். ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை தீபத்தன்று நாம் குன்றத்தூர் சென்று ஜோதி தரிசனம் செய்து, புகைப்படங்களுடன் விரிவான அப்டேட் அளிப்பது நீங்கள் அறிந்ததே. இந்த ஆண்டு ஜோதி தரிசனத்திற்கும் முருகனருளால் நாளை செல்லவிருக்கிறோம். நமது ஜோதி தரிசன அனுபவம் பற்றிய பதிவு விசேஷ புகைப்படங்களுடன் பின்னர் அளிக்கப்படும். தற்சமயம் வேறொரு முக்கிய பதிவை தயாரித்து வருவதால் தீபத்தை பற்றி விசேஷ பதிவை அளிக்க இயலவில்லை. எனவே சென்ற ஆண்டு அளித்த பதிவை மறுபடியும் அளிக்கிறோம்.  பழமைக்கும் பழமை புதுமைக்கும் புதுமை மஹா பெரியவா தொடர்புடைய பதிவுகள் என்பது நீங்கள் அறிந்ததே.

அனைவரின் இல்லத்திலும் ஒளி பெருகட்டும். அண்ணாமலையாருக்கு அரோகரா! குன்றத்தூர் முருகனுக்கு அரோகரா!!

=============================================================

ந்த தீபத்தைப் பார்க்கிறார்களோ இல்லையோ கார்த்திகை தீபத்தைப் பார்த்தாலே எல்லா வகையிலும் சிறப்பு உ‌ண்டாகு‌ம். எங்கு பார்த்தாலும் இருட்டாக இருக்கிறது. ஒளியை உள்ளுக்குள் அனுப்பினால், இதயத்திற்குள் ஒளி ஆற்றலை கொண்டு சென்றால், எல்லா வகையிலுமே நமக்கு நன்மை உண்டாகும். தவிர, ஒரு தெளிவு நிலை, தீர்க்க நிலை உண்டாகும். அதனால் கார்த்திகை தீபத்தை மட்டும் அனைவரும் கண்டு தரிசிக்க வேண்டும். அது எல்லா வகையிலும் சிறப்புதரும்.

Karthikai
சென்னையை அடுத்து அமைந்துள்ள குன்றத்தூர் மலையில் சென்ற ஆண்டு ஏற்றப்பட்ட கார்த்திகை தீபம்

சிவபெருமானின் ‘அக்னி நேத்ரம்’ எனப்படும் நெற்றிக் கண்ணிலிருந்து தீச்சுடர்கள் போன்ற தெய்வீகப் பொலிவோடு அவதரித்தவர் ஆறுமுகக் கடவுள்! கார்த்திகைப் பெண்களால் வளர்க்கப்பட்டவர்! இதனால் தீபத்திருவிழாவுக்கும், தெய்வக் குமரனுக்கும் நெருங்கிய தொடர்புண்டு.

சிவபெருமானோ, “ஆதியும், அந்தமும் இல்லா அரும் பெரும் ஜோதி’யாக – எவராலும் அடி, முடி காணா வண்ணம் நின்றவர். எனவே அவரும் கார்த்திகை தீபவிழாவின் முக்கியத் தெய்வமாகிறார். மொத்தத்தில் சிவபெருமான், பராசக்தி, முருகப் பெருமான், திருமால், திருமகள் ஆகிய அன்புத் தெய்வங்களுடன் அருள் தொடர்புடைய பண்டிகையாக “தீபத் திருநாள்’ விளங்குகிறது.

நமது ஒவ்வொரு பண்டிகையும் அர்த்தம் மிக்கது. மகா பெரியவா போன்ற மகான்கள் ஸ்தூல சரீரத்தோடு தாங்கள் வாழ்ந்த காலத்தில் மேற்படி பண்டிகைகளை எப்படி அணுகினார்கள், அன்று என்ன செய்தார்கள் என்று பார்த்தோமானால் நமக்கு உண்மை விளங்கும்.

பண்டிகையின் உண்மையான தாத்பரியத்தை உணர்ந்து மற்றவர்களுக்கு அதை சொன்னவர் மகா பெரியவா. சொன்னதோடு தானும் கடைப்பிடித்து காட்டியவர். ஆன்மிகம் என்பதே மிக பிஸினஸ் போல ஆகிவிட்ட இன்றைய சூழலில், எளிமையிலும் எளிமையாக வாழ்ந்தவர் நம் ஸ்வாமிகள். அமர்வதற்கு சௌகரியமான இடங்களை கூட எதிர்பார்ப்பார்த்தவர் அல்ல அவர். பசுகொட்டைகையில் அமர்ந்தும், கட்டாந்தரையில் படுத்தும், தனது கடமைகளை செய்திருக்கிறார்.

தூக்கம் வந்து விட்டால், உட்கார்ந்திருந்த இடத்தில் அப்படியே படுத்து விடுவார் நம் ஸ்வாமிகள் என்று கேள்விப்பட்டிருக்கிறோம். அது மரத்தடியோ, மணல்மேடோ, புல்தரையோ… எல்லா இடமும் அவருக்கு ஒன்றுதான்! சுமார் இரண்டு மணி நேரம்தான் படுத்திருப்பார். அதன் பின் அவருக்கு விழிப்பு வந்து விடும். பெரியவாவை பற்றியும் அவரது எளிமையை பற்றியும் இப்படி பேசிக்கொண்டே செல்லலாம். கார்த்திகை விஷயத்திற்கு வருகிறோம்.

நாளை 25/11/2015 புதன்கிழமை கார்த்திகை தீபத்தன்று நாம் அனைவரும் என்ன செய்யவேண்டும் என்று ஸ்வாமிகள் விளக்கியிருப்பதை பாருங்கள்.

இக்கட்டுரையில் கூறியபடி கார்த்திகையை கொண்டாடுவோம். நலன்களை பெறுவோம்.

=============================================================

அறிவிப்பு : சென்ற ஆண்டு (2014) நாம் குன்றத்தூர் மலையில் கார்த்திகை ஜோதியை தரிசித்தது நினைவிருக்கலாம். இந்த ஆண்டும் நம்முடன் குன்றத்தூர் கார்த்திகை ஜோதி தரிசனத்திற்கு வரவிரும்பும் வாசகர்கள் நம்மை தொடர்புகொள்ளவும். 25/11/2014 மாலை 5.30 மணிக்கு குன்றத்தூரில் இருக்கவேண்டும்.

=============================================================

Maha periyava anushtanamஇலுப்பை எண்ணையும் மட்டைத் தேங்காயும்!

காஞ்சி மகா பெரியவர் காலத்தில் , காஞ்சிபுரம் திருமடத்தில் கார்த்திகை திருவிழா மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. இரண்டு நாட்கள் முன்னதாகவே மடத்தைச் சுத்தப்படுத்தும் பணி துவங்கிவிடும். வாழை மரங்கள், தோரணங்கள் கட்டி அலங்காரம் செய்வார்கள்.

திருக்கார்த்திகை அன்று அதிகாலை மகா பெரியவர் ஆத்ம ஸ்நானம் செய்து, பூஜை செய்வார். மடத்திலுள்ள சந்திர மௌலீஸ்வரருக்கு அன்று சிறப்பு பூஜை நடத்தப்படும். பெரிய அகல் விளக்குகள் ஏராளமாக மடத்துக்கு கொண்டு வரப்படும். விளக்கேற்றும் நேரத்திற்கு முன்னதாகவே , அதில் திரி இட்டு இலுப்ப எண்ணை ஊற்றி தயார் நிலையில் வைக்கப்படும்.

மாலையில், பெரியவர் ஸ்நானம் செய்வார். பின் ஆத்ம பூஜை செய்வார். அதன் பின் தீப்பந்தத்தில் ‘குங்குளயம்” என்னும் தீபம் ஏற்றப்படும். அவ்வாறு ஏற்றும் போது மந்திரங்கள் ஒலிக்கும். சிவ சகஸ்ரநாமம், லிங்காஷ்டகம், சிவா அஷ்டோத்திர பாராயணம் ஆகியவை செய்யப்பட்டவுடன் , அவல், நெல் பொறி போன்றவற்றுடன் வெள்ளம் கலந்து உருண்டைகளாகச் செய்து சுவாமிக்கு நைவேத்யம் செய்வார்கள். பிறகு தீபங்கள் வரிசையாக ஏற்றப்படும்.

அப்போது ஏராளமான பெண்கள் மடத்திற்கு வருவார்கள். அவர்கள் அனைவருக்கும் மஞ்சள்,குங்குமம், வெற்றிலை, பாக்கு , மட்டைத் தேங்காய் ஆகியவற்றைப் பலரும் தானமாகக் கொடுக்கும்படி மகா சுவாமிகள் சொல்வார். பலரும் அவ்வாறு தானம் செய்வர்.

அப்போது பக்தர்களிடம் பெரியவர், ”மட்டைத் தேங்காயைத் தானமாகக் கொடுப்பதால் பூர்ண பலன் ஏற்படும். தேக ஆரோக்கியம் நிலைக்கும். நீண்ட நாள் கோரிக்கை நிறைவேறும் (இஷ்ட காம்யாத்த பூர்த்தி”) என்று அறிவுரை சொல்வார்.

அது மட்டுமல்ல சகோதரிகளுக்கு பூ, பழம் , வெற்றிலை, பாக்கு, மட்டைத் தேங்காய் ஆகியவற்றை கார்த்திகை அன்று அவசியம் கொடுங்கள். இதைக் கொடுத்த சகோதரர்களும், பெற்றுக்க் கொண்ட சகோதரிகளும் ஆயுள் விருத்தியுடன் திகழ்வார். அவர்களிடையே உறவு பலப்படும். கார்த்திகை மாத ஞாயிற்றுக் கிழமைகளில் எல்லாரும் மடத்தின் அருகிலுள்ள ஸ்ரீ கச்சபேஸ்வரர் கோயிலுக்குச் செல்லுங்கள் . அங்கு கொடி மரம் அருகிலுள்ள சூரியனை வணங்குங்கள்.

அத்துடன் கார்த்திகை பௌர்ணமி அன்று தோன்றும் சந்திரனையும் வணங்க வேண்டும்.

கார்த்திகை விளக்கேற்றுவதற்கு மடத்தில் இலுப்ப எண்ணெய் பயன்படுத்துவதற்குரிய காரணத்தையும் பெரியவர் சொல்லியுள்ளார் . வீடுகளிலும் கார்த்திகை அன்று இலுப்ப எண்ணெய் ஊற்றி விளக்கு ஏற்றுங்கள். காரணம், இந்த எண்ணெய் முருகப் பெருமானுக்கு விருப்பமானது. மேலும் எதிரிகளின் தொல்லை, கடன் தீர்த்தல், ஆயுள் விருத்தி, சகோதர உறவு வலுப்படுத்தல் ஆகிய நற்பலன்கள் கிடைக்கும் என்று அருளாசி வழங்குவார்.

மொத்தத்தில் கார்த்திகை தீபம் என்பதே சகோதர பாசத்தை வளர்க்கும் திருவிழா என்பார் பெரியவர்.

எல்லாருக்கும் கார்த்திகை அப்பம் உள்ளிட்ட பிரசாதம் வழங்கப்படும், ஆனால் பெரியவர் மட்டும் அரை பழம், சிறிது பால் பிக்ஷையாக ஏற்று உண்பார்.

சகோதர பாசத்தை வளர்க்கும் கார்த்திகை திருவிழாவில் மகாபெரியவரின் அருளாசி நம் எல்லாருக்கும் கிடைக்கட்டும்,

(நன்றி : தினமலர் ஆன்மிக மலர் | தட்டச்சு : www.rightmantra.com)

=============================================================

சென்ற ஆண்டு (2014) கார்த்திகை தீப தரிசன அனுபவத்திற்கு :

ஒரு மாலைக்கு கிடைத்த மரியாதை!

2013 ஆண்டு கார்த்திகை தீப தரிசன அனுபவத்திற்கு :

கார்த்திகையன்று ஏற்றப்பட்ட மூன்று விளக்குகள் – ஒரு நேரடி அனுபவம்!

=============================================================

Also check :

கார்த்திகை மாதத்தின் சிறப்பும் திருவண்ணாமலை மகிமையும்!

=============================================================

[END]

2 thoughts on “‘கார்த்திகை தீபத்தை எப்படி கொண்டாடவேண்டும்?’ வழி(ஒளி)காட்டும் மகா பெரியவா!

  1. வணக்கம் சுந்தர் சார்

    அனைவருக்கும் தீப ஓளி திரு நாள் நல்வாழ்த்துக்கள்

    நன்றி

  2. அருமை நண்பரே. மஹா பெரியவளின் அருளசிக்கு இணங்க, இன்று இலுபென்னை ஊற்றி தீபம் ஏற்றுவோம். என்றும் நம் இறை பணியில் நம்மை முடிந்த அளவு இந்த குழுவிற்கும் உதவியாக இருப்போம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *