Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Friday, March 29, 2024
Please specify the group
Home > Featured > திருப்பதி முருகனுக்கு அரோகரா… தீபாவளி கொண்டாட்டம் (1)

திருப்பதி முருகனுக்கு அரோகரா… தீபாவளி கொண்டாட்டம் (1)

print
மது சமீபத்திய மத்தூர் உழவாரப்பணியின்போது நடந்த ஒரு நெகிழ வைக்கும் சம்பவம் பற்றிய பதிவு இது. மத்தூர் உழவாரப்பணி பற்றிய பதிவில் பல புகைப்படங்களுக்கு நடுவே இதை அளித்தால் ஒருவேளை உங்கள் கவனத்தை ஈர்க்காமல் போய்விட இருக்கிறது. எனவே தனிப்பதிவாக அளிக்கிறோம்.

Tirupathi Murugan 2

நமது உழவாரப்பணிகளின் போது நாம் செய்யும் மிக முக்கியமான ஒன்று, கோவில் அர்ச்சகர்கள் மற்றும் துப்புரவு பணியாளர்களை கௌரவிப்பது. ஒவ்வொரு உழவாரப்பணியின் போதும் சம்பந்தப்பட்ட கோவிலின் அர்ச்சகர்கள், மங்கள வாத்தியக்காரர்கள், துப்புரவு பணியாளர்கள், அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றும் இதர ஆலய அலுவலக ஊழியர்கள் என அனைவரையும் கௌரவிப்பது நமது வழக்கம். இதற்குரியவர்கள் பெயர்களை, உழவாரப்பணிக்கான சர்வே செய்ய முன்னதாக சம்பந்தப்பட்ட ஆலயத்திற்கு செல்லும்போது குறித்துக்கொண்டு வருவோம்.

உழவாரப்பணி நடைபெறும் தினத்தன்று பணி நிறைவடைந்தவுடன் வஸ்திரம், ரெடிமேட் ஷர்ட், புடவை, ரவிக்கை பிட், இனிப்பு, ரொக்கம், வெற்றிலை-பாக்கு, பூ, பழம் (தாம்பூலம்) என அனைத்தையும் ஒரு தட்டில் வைத்து சம்பந்தப்பட்டவர்களுக்கு சால்வை அணிவித்து அவர்களை பற்றியும் அவர்கள் ஆற்றிவரும் சேவைகளை பற்றியும் கூறி, (சற்று மிகைப்படுத்தியே!) அனைவர் முன்னிலையிலும் அவர்களை கௌரவிப்போம். இதன்மூலம், அவர்களுக்கு பணியில் ஒரு பிடிப்பு ஏற்படுவதோடு, அதற்கு பிறகு பணிகளை இன்னும் சரியாக ஆத்மார்த்தமாக செய்ய ஆரம்பிப்பார்கள். இது ஒரு உளவியல் ரீதியிலான அணுகுமுறை.

ஒரு ஆலயத்தில் உழவாரப்பணி செய்ய சென்றபோது, தர்மகர்த்தாவுக்கும் அர்ச்சகரின் மகனுக்கும் (அவரும் அர்ச்சகர் தான்) ஏதோ கருத்து வேறுபாடு ஏற்பட்டு எங்கள் முன்னிலையில் தகராறு ஏற்பட்டது. பணிக்கு சென்ற நாங்கள் அதை பார்த்து வேதனையடைந்தோம்.

பணி நிறைவடைந்தபோது, இந்த கௌரவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றபோது, தர்மகர்த்தா, அர்ச்சகர், மற்றும் இதர் பணியாளர்களை பரஸ்பரம் ஒருவரை கொண்டு மற்றவரை கௌரவித்தோம். அப்போது, இவரின் அருமை பெருமைகளை அவரும் அவரின் அருமை பெருமைகளை இவரும் கூறும்படி நேர்ந்தது. இதனால் அவர்களுக்குள் ஏற்பட்டிருந்த பிணக்கு நீங்கி, சுமூக நிலை ஏற்பட்டது. இதை அந்த பணிக்கு வந்தவர்கள் அனைவரும் அறிவார்கள்.

எனவே நமது செயல்பாடு ஒவ்வொன்றுக்கும் ஆழ்ந்த காரணம் இருக்கும். காரணமின்றி எதையும் எப்போதும் நாம் செய்வதில்லை.

Tirupathi Murugan 3

Tirupathi Murugan 4மத்தூர் கோவிலில் உழவாரப்பணி தொடங்கி நடைபெற்று வந்தபோது, நமது குழுவினர் பம்பரமாக சுழன்று பணிகளை செய்த வண்ணமிருந்தனர். நாம் பணிகளை சூப்பர்வைஸ் செய்ய, தேவையானவற்றை தருவித்து தர, அங்கும் இங்கும் சுற்றிக்கொண்டிருந்தோம்.

அப்போது ஆலய வளாகத்தில் உள்ள பிச்சைக்காரர்களில் ஒரு வயதான கூன் விழுந்த மூதாட்டி வருபவர்கள் அனைவரையும் எமோஷனல் பிளாக்மெயில் செய்து விரட்டி விரட்டி பிச்சையெடுப்பதை பார்த்தோம். அவரது உடலில் தான் முதுமையே தவிர புலன்களில் இல்லை. புதிதாக யார் ஆலயத்திற்குள் வந்தாலும் அவர்களை தொந்தரவு செய்து பணம் பறிப்பதில் அவர் எக்ஸ்பர்ட் என்பதை உணர்ந்துகொண்டோம். நாம் முதல் முறை மத்தூர் வந்தபோதே இவரை கவனித்தோம். ஆனால் பிச்சையிடவில்லை. இது தவிர வாசலில் உடல் ஊனமுற்ற பிச்சைக்காரகள் இருவர் இருந்தனர். அவர்களும் அந்த பக்கம் வருபவர்களை “ஐயா… அம்மா…. சார்” என்று விடாமல் கூப்பிட்டு பிச்சை கேட்பதில் தேர்ந்தவர்களாயிருன்தனர். எழுந்து வந்து துரத்தி கேட்கவில்லை. அவ்வளவு தான் வித்தியாசம். (பிச்சை கேட்பதிலேயே அவர்கள் வாழ வழியின்றி பிச்சை எடுப்பவர்களா அல்லது உழைப்பே இன்றி கிடைக்கும் பணத்தின் ருசி அறிந்து பிச்சை எடுப்பவர்களா என்பதை கண்டுபிடித்துவிடலாம்!)

மேற் கூறிய யாவரையும் நீங்கள் பிச்சையிடாமல் தாண்டி வருவது சாத்தியமேயில்லை. (நேரில் சென்றால் புரிந்துகொள்வீர்கள்!)

பணி நடைபெற்ற தினத்தன்று நாம் போகும்போதும் வரும்போதும் இவர்கள் நம்மையும் நமது குழுவினரையும் தொந்தரவு செய்த வண்ணமிருந்தனர். இவர்கள் யாருக்கும் நாம் பிச்சை அளிக்கவில்லை.

இவர்கள் யாரையும் நாம் பொருட்படுத்தவேயில்லை. உழவாரப்பணி பாட்டுக்கு ஒரு பக்கத்தில் நடந்துகொண்டிருந்தது. அதே நேரம், ஒரு முதியவர் கோவிலின் கேட் அருகே உட்புறம் அமர்ந்துகொண்டிருந்தார். அவர் யாரையும் எதுவும் கேட்கவில்லை. அவர் பாட்டுக்கு அமர்ந்துகொண்டிருந்தார். இரண்டு கண்களிலும் புரை விழுந்து பார்வையும் பாதிக்கப்பட்டிருப்பது தெளிவாக புரிந்தது.

நாங்கள் பணி முடிந்து அன்னதானக் கூடத்தில் மதிய உணவு அருந்த சென்றபோது, இவர் அன்னதானக் கூடத்தின் அருகே ஒரு சிறிய தூக்கு சட்டியுடன் வந்து நின்றார்.

வெளியே வந்த ஒரு சமையற்கூடத்தின் பணியாள், “பெரியவரே ஒரு அஞ்சு நிமிஷம் இருங்க. எல்லாரும் சாப்பிட்டு முடிக்கட்டும்” என்றார்.

பணியாளரிடம் நாம் விசாரித்தோம்.

“இவருக்கு நாங்க தான் மதிய சாப்பாடு தருவோம். எல்லாரும் சாப்பிட்டு முடிச்சதும் மீதி இருக்குறதை அப்படியே ஒரு கலவையாக்கி இவர் தூக்குல கொடுப்போம். அவர் ஓரமாப் போய் உட்கார்ந்து சாப்பிடுவார். யாரையும் எதுவும் கேட்கமாட்டார். கண்ணு சரியா தெரியாது. காதும் கேட்காது” என்று பதில் வந்தது.

=========================================================

Check a similar article : மனதில் ஏற்பட்ட திடீர் குழப்பம் – கற்பகாம்பாளுடன் தோன்றி விடை சொன்ன கபாலீஸ்வரர்!

=========================================================

“சிவ…சிவ…” உச்சரித்துக்கொண்டே உணவருந்த சென்றோம்.

இதற்கிடையே பணி நிறைவடைந்து அனைவரையும் கௌரவிக்கும் நேரம் வந்தது.

மத்தூர் கோவிலை பொருத்தவரை அர்ச்சகர் மற்றும் உதவி அர்ச்சகர், மூன்று பெண்கள் உட்பட நான்கு துப்புரவு பணியாளர்கள், நாதஸ்வர வித்துவான்கள் என சுமார் எட்டு பேருக்கு மேல் மரியாதை செய்யவேண்டியிருந்தது. நாம் கணக்கெடுத்துக்கொண்டு வந்ததைவிட அதிகம் பேருக்கு மரியாதை செய்யவேண்டிய சூழல். எதையும் சமாளிக்கும் விதம் நம்மிடம் சம்பந்தப்பட்ட பொருட்கள் கூடுதலாகவே இருக்கும்.

இவர்கள் அனைவருக்கும் மேலே சொன்ன COMPLETE SET ஒன்று (வஸ்திரம், துண்டு, ரெடிமேட் ஷர்ட், புடவை, ரவிக்கை பிட், இனிப்பு, ரொக்கம், தாம்பூலம்) வைத்துக் கொடுத்தோம். அனைவரையும் கௌரவித்து முடிக்கிறோம். அப்போது தான் அந்த பெரியவர் ஞாபகம் வந்தது. நாம் நின்றுகொண்டிருந்த இடத்தில் இருந்தபடி கொஞ்சம் எட்டிப் பார்த்தோம். பெரியவர் அவர் பாட்டுக்கு அமர்ந்துகொண்டிருந்தார்.

மணிகண்ட குருக்களிடம் அவரைப் பற்றி விசாரித்தோம். “அவர் இந்த கோவில்லே ரொம்ப வருஷமா இருக்கார். யாரையும் எதுவும் கேட்க மாட்டார். யாரையும் தொந்தரவும் செய்யமாட்டார். கண்ணு சரியா தெரியாது. காதும் அவருக்கு கேட்காது. நாங்க கொடுக்குறதை வாங்கி சாப்பிடுவார்!” என்றார்.

முதுமையையும், ஊனத்தையும் சாக்காக வைத்து நம்மை சங்கடப்படுத்தி யாசிப்பவர்கள் நடுவில் ஏனோ அந்த பெரியவர் உயர்வாக தெரிந்தார்.

அவருக்கு ஒரு பெட்ஷீட் வாங்கித் தரலாம்… மிகவும் உபயோகமாக இருக்கும் என்று கருதி கோவில் பணியாளார் ஒருவரிடம் பைக் வாங்கி மத்தூர் டவுனுக்கு நண்பர்கள் இருவரை அனுப்பினோம். ஆனால் அந்த ஊரில் ஒரு டவல் கூட கிடைக்கவில்லை.

என்ன செய்வது? நாம் கொண்டு வந்த அனைத்தும் காலியாகிவிட்டது. இத்தனைக்கும் கடைசி நேர தேவைகளை சமாளிக்க நாம் கொண்டு வந்த எக்ஸ்ட்ரா துண்டுகள் (சால்வை) கூட காலி. இந்தப் பெரியவருக்கு ஏதாவது செய்யவேண்டுமே…. அதுவும் இவருக்கு உபயோகம் அளிக்கக் கூடிய வகையில் இருக்கவேண்டும் என்று மூளையை கசக்கியபோது, ஒரே ஒரு ரெடிமேட் ஷர்ட் மீதியிருப்பது நினைவுக்கு வந்தது. குட்டி சந்திரனை அனுப்பி அதை தேடி எடுத்துக்கொண்டு வரச் சொன்னோம். வேனுக்கு சென்று தேடி ஒரு பையை கொண்டுவந்தார். அதில், நாம் கூறிய ஷர்ட் இருந்தது. கூடவே போனஸாக ஒரு புத்தம் புதிய லுங்கியும்.

லுங்கி? நமக்கு லுங்கி வாங்கும் வழக்கம் இல்லையே. இதுவரை அனைத்து அனைத்து கோவில்களிலும் வஸ்திரம் தானே வைத்துக் கொடுத்துவருகிறோம். மீதியிருந்தால் வஸ்திரம் தானே இருக்கவேண்டும்? லுங்கி எப்படி வந்தது?

நன்றாக யோசித்து பார்த்தபோது, சென்ற ஆண்டு வடலூர் சிவப்பிரகாச ஸ்வாமிகள் நடத்தி வரும் ஆதரவற்றோர் மற்றும் முதியோர் இல்லத்துக்கு சென்றபோது லுங்கிகள் சில வாங்கியது நினைவுக்கு வந்தது. கொண்டு போன அனைத்தும் ஒன்று கூட மீதியில்லாமல் அங்கேயே நாங்கள் விநியோகித்துவிட்டோம். ஆனால், அதில் ஒரே ஒரு லுங்கி மட்டும் மிகுதியாகிவிட்டது போல. ஒன்றரை வருடம் கழித்து சரியாக அது வெளியே வந்து, உரிய நேரத்தில் நமது கண்களில் படுகிறது என்றால்… அது தான் தெய்வ சங்கல்பம். நமக்கு ஒரே சந்தோஷம்.

கொடுக்கவேண்டும் என்கிற எண்ணம் ஏற்பட்டால் அதற்குரிய சந்தர்ப்ப சூழ்நிலைகள் தானாகவே அமையும்! நமது மேற்கூறிய செயலை மையப்படுத்தி இதை சொல்லவில்லை. உங்களுக்கும் இது பொருந்தும். உதவும் எண்ணம் ஆத்மார்த்தமாக இருக்கவேண்டும். சரியான பயனாளியை நமது உதவிகள் சென்று சேரவேண்டும் என்கிற அந்த எண்ணம் ஒரு வேள்வியாக இருக்கவேண்டும்! அவ்வளவே!!

குழந்தைகளை ஆசீர்வதித்த போது...
குழந்தைகளை ஆசீர்வதித்த போது…

சட்டை மற்றும் லுங்கி… இதைவிட பிரமாதமான ஒன்றை அவருக்கு இப்போது இங்கே கொடுத்துவிட முடியுமா என்ன?

நண்பர் ராகேஷை அழைத்து, சட்டையை பேக்கிங்கில் இருந்து பிரித்து அட்டை, குண்டூசி முதலானவற்றை அப்புறப்படுத்தும்படி சொன்னோம். அவர் அப்புறப்படுத்திவிட்டு சட்டையை பட்டன்கள் கழற்றிவிட்டு தந்தார். அதை அப்படியே மீண்டும் மடித்து ஒரு தட்டில் அந்த சட்டை மற்றும் தாம்பூலம் ஆகியவற்றை வைத்து எடுத்துக்கொண்டு நம் உழவாரப் பணிக்குழு உறுப்பினர்கள் சிலரின் பிள்ளைகளை அழைத்துக் கொண்டு அவரை நோக்கி சென்றோம்.

“வணக்கம் ஐயா… இங்கே நாங்க உழவாரப்பணிக்கு வந்தோம். வந்த இடத்துல உங்களை பார்த்தோம். உங்க உங்களுக்கு ஏதாவது செய்யணும்னு ஆசைப்படுறோம். இதோ இந்த சட்டையை எங்க அன்பளிப்பா ஏத்துக்கணும்!” என்றோம்.

நாம் சொன்னது அவருக்கு காதில் விழவில்லை. அதற்குள், தவில்காரர் கோவில் வாசலில் இருந்தபடி உரக்கக் கூறினார்… “அவருக்கு காது கேட்காது. பக்கத்துல போய் சத்தமா சொல்லுங்க”

உடனே அருகே சென்று மேலே கூறியதை ரிப்பீட் செய்தோம்.

அப்போது தான் அவருக்கு அருகே நாங்கள் சிலர் நின்று கொண்டிருப்பதையே அவர் உணர்ந்தார்.

“அப்படியா? ரொம்ப நன்றி… ரொம்ப நன்றி…” என்றார்.

அருகே நின்றுகொண்டிருந்த குழந்தைகளிடம் சைகை காட்ட அவர்கள் தட்டை அவரிடம் கொடுத்தனர்.

“ஐயா… எங்களோட எளிய அன்பளிப்பை ஏத்துக்கணும்”

Lord Muruga

கைகளால் தடவிப் பார்த்தவர் தட்டையும் சேர்த்து அவரிடம் கொடுப்பதாக நினைத்து, “எனக்கு சட்டை மட்டும் போதும்… தட்டு எதுக்கு? தட்டு வேண்டாம்….” என்றார்.

“ஐயா.. சட்டை, வெத்தலை, பாக்கு இதெல்லாம் எடுத்துக்கோங்க. தட்டுல வெச்சு உங்களுக்கு தர்றோம். வேற ஒண்ணுமில்லே….”

“அப்படியா… சந்தோஷம்… சந்தோஷம்…” என்று கூறியவர், குழந்தைகளை கைகளை அவர்கள் தலைமீது வைத்து அவராகவே “நம பார்வதி பதயே! ஹர ஹர மஹா தேவா!” என்று கூறி ஆசீர்வதித்தார். (நெஞ்சை உருக்கும் காட்சி அது!)

“உங்க பேர் என்ன?”

“என் பேர் திருப்பதி முருகன். 25 வருஷமா இந்த கோவில்ல இருக்கேன்!” என்றார்.

மேற்கூறிய அந்த மஹா மந்திரத்தை அவர் உச்சரித்தபோது அவரது குரல் வேறொரு லெவலுக்கு சென்றது. அற்புதமான மாடுலேஷன் அது. இப்போது நினைத்தாலும் சிலிர்க்கிறது.

அவரிடம் அனைவரும் ஆசி பெற்றோம்.

Tirupathi Murugan 8
நமது பரிசை கண்களால் ஒற்றிக்கொள்கிறார்…

அவரிடம் விரிவாக பேச ஆசை. ஆனால் அங்கு நமக்காக அனைவரும் காத்துக்கொண்டிருந்தபடியால் அடுத்த முறை பார்த்துக்கொள்ளலாம் என்று விட்டுவிட்டோம்.

“ஐயா… உங்களுக்கு வேற ஏதாச்சும் வேணுமா? நான் அடுத்த முறை வர்றப்போ வாங்கிட்டு வர்றேன்”

“எனக்கு பேண்ட் (PANT) மட்டும் ஒண்ணு வேணும். இருந்தா கொண்டு வாங்கய்யா… அது போதும்”

=========================================================

Check a similar article : அழுக்கு உடையில் ஜவ்வாது வாசனை!

=========================================================

“நிச்சயம் அடுத்த முறை வரும்போது கொண்டு வர்றேன்” என்று கூறி விடைபெற்றோம்.

“ஐயா… இந்த சட்டையை நீங்க அவசியம் போட்டுக்கணும்… நாங்க ரொம்ப சந்தோஷப்படுவோம்” என்றோம்.

அவரிடம் விடைபெற்றுக்கொண்டு திரும்பினோம்.

இவருக்கு நாம் ஏதோ தட்டில்வைத்து தந்துவிட்டதை பார்த்துவிட்ட அந்த கூன் பாட்டி, நம்மை நோக்கி… “ஐயா… சாமி…” என்று வேகமாக வர ஆரம்பித்தார். அவரிடமிருந்து தப்பித்தால் போதும் என்று வேகமாக அந்த இடத்தைவிட்டு நகர்ந்தோம்.

அப்படியும் அவர் நம்மை விடவில்லை. நமது நண்பர்கள் கோவிலின் வாசலில் ஓய்வெடுத்துக்கொண்டிருந்த இடத்திற்கு சென்று அங்கு அவர்களை பணம் கேட்டுக்கொண்டிருந்தாள்.

ஆனால், பெரியவர் திருப்பதி முருகன் அவர்கள் நம்மிடம் ஒரு வார்த்தை கூட “காசு, பணம் கொடுங்க” என்று கேட்கவில்லை. அவரை பொருத்தவரை பணம் அவருக்கு கலர் காகிதம். ஏனெனில் அவரது பிறவி ஏதோ ஒரு கணக்கு… அன்னையின் திருக்கோவிலில் தனது நாட்களை (யுகங்களை!) கழித்துகொண்டிருக்கிறார்.

அனைத்தும் முடிந்து விடைபெற்றுக் கொண்டு திரும்பினோம்.

இதற்கு ஒரு அரைமணி நேரம் கழித்து பணிகள் நிறைவடைந்து வேனில் ஏறப்போகும்போது பார்க்கிறோம்… திருப்பதி முருகன் நாம் கொடுத்த சட்டையை அருகே எங்கோ சென்று அணிந்துகொண்டு சிங்க நடை போட்டு வந்துகொண்டிருந்தார்.

Tirupathi Murugan 6

நமது உதவி தகுதியுடைய ஒருவருக்கு சென்று சேர்ந்து அவர் அதை துய்ப்பதை பார்க்கும்போது கிடைக்கும் சந்தோஷத்திற்கு ஈடு இணை ஏதேனும் உண்டா என்ன?

பெரியவரிடம் ஓடிப்போய் அவரது கைகளை பற்றி, நாம் விடைபெறுவதாக கூறினோம். நாம் என்ன சொன்னோம் என்று அவர் காதில் சரியாக விழவில்லை.

இது நடந்து ஒரு வாரம் கழித்து கொலு பொம்மைகள் வாங்கிக்கொண்டு மீண்டும் மத்தூர் செல்ல வேண்டியிருந்தது. அப்போது மறக்காமல் பெரியவருக்கு புதிய பெட்ஷீட் ஒன்று, துண்டு ஒன்று, அரிதாகவே பயன்படுத்திய நமது பேண்ட் இரண்டு ஆகியவற்றை எடுத்து சென்றோம்.

Tirupathi Murugan 7

நாம் சென்ற நேரம் இரவு நேரம் என்பதால், பெரியவரை காணமுடியவில்லை. “அவர் பஸ் ஸ்டாப் அருகே தூங்கச் சென்றிருப்பார்… என்னிடம் கொடுங்கள்… நான் கொடுத்துவிடுகிறேன்” என்று மணிகண்ட குருக்கள் கூறியதை அடுத்து அவரிடம் அனைத்தையும் ஒப்படைத்தோம். மறுநாள் மணிகண்ட குருக்களிடம் பேசும்போது பெரியவரிடம் அதை நாம் கொடுத்ததாக சொல்லி கொடுத்துவிட்டதாகவும் கூறினார்.

இது வரை எத்தனையோ அறப்பணிகள் தளம் சார்பாக செய்திருக்கிறோம். நாமும் தனிப்பட்ட முறையில் அவ்வப்போது கடுகளவு கடுகளவு செய்துவருகிறோம். ஆனால் இதில் கிடைத்த மனநிறைவு வேறு எங்கும் கிடைத்ததில்லை.

அடுத்த முறை மத்தூர் செல்லும்போது, மறக்காமல் திருப்பதி முருகனையும் சந்தித்து வாழ்த்து பெறுங்கள்.

இது ஏன் தீபாவளி கொண்டாட்டங்களில் இடம்பெற்றது?

நமது தீபாவளி கொண்டாட்டங்கள் எப்படி இருக்கவேண்டும் என்று நமக்கு மீண்டும் நினைவுபடுத்திய நிகழ்வு அல்லவா!

Lord Siva1

சங்கநிதி பதுமநிதி யிரண்டுந் தந்து
தரணியொடு வானாளத் தருவ ரேனும்
மங்குவார் அவர்செல்வம் மதிப்போ மல்லோம்
மாதேவர்க் கேகாந்த ரல்லா ராகில்
அங்கமெலாங் குறைந்தழுகு தொழுநோ யராய்
ஆவுரித்துத் தின்றுழலும் புலையரேனும்
கங்கைவார் சடைக்கரந்தார்க் கன்பராகில்
அவர்கண்டீர் நாம்வணங்கும் கடவுளாரே
– திருநாவுக்கரசர்

பொருள் : சங்கநிதி பதுமநிதி ஆகிய நிதிகள் இரண்டையும் தந்து, ஆட்சி செய்யப் பூமியொடு வானுலகையும், தருவாராயினும் சிவபெருமானிடத்தே ஒரு தலையாய அன்பில்லாராய் நிலையின்றி அழிவாராகிய அவரது செல்வத்தை யாம் ஒருபொருளாக மதிக்க மாட்டோம். உறுப்புக்கள் எல்லாம் அழுகிக் குறையுந் தொழுநோயராய்ப் பசுவை உரித்துத் தின்று திரியும் புலையராயினும் கங்கையை நீண்ட சடையில் கரந்த சிவபெருமானுக்கு அன்பராயின் அவரே நாம் வணங்கும் கடவுள் ஆவார்.

==========================================================

* தீபாவளி அன்று என்ன செய்யவேண்டும்?

* உண்மையான தீபாவளி எது?

* அர்த்தமுள்ள வகையில் தீபாவளியை கொண்டாடுவது எப்படி?

போன்றவற்றுக்கு விடை சொல்லும் பதிவுகளை இதற்கு முன்னர் அளித்திருக்கிறோம். அதன் சுட்டிகளை இறுதியில் இணைத்துள்ளோம். வாசகர்கள் அதை படிக்கவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

==========================================================

வேத பாடசாலையில் நமது தீபாவளி கொண்டாட்டம்!

சென்னை மேற்கு மாம்பலம் சுப்பிரமணி தெருவில் உள்ள ஸத்குரு சபா வேத பாடசாலையில் நாளை மாலை (06/11/2015) நமது வஸ்திர தான நிகழ்ச்சி நடைபெறவிருக்கிறது. மாணவர்கள், வாத்தியார் மற்றும் பணியாளர்கள் அத்தனை பேருக்கும் வேஷ்டி, சட்டை மற்றும் துண்டு, பட்டாசு கிப்ட் பாக்ஸ், இனிப்புக்கள் வழங்கப்படவிருக்கிறது. முன்னதாக கோ-பூஜையும் நடைபெறவிருக்கிறது.

==========================================================

Support Rightmantra in its mission!

Rightmantra.com is a website that focuses on Spirituality, Self-development and True values without any commercial interest. We are running full-time. Give us your hand. Help us to serve you better. Donate us liberally. Ask your near and dear ones to help us in our mission. We are striving to make this world a better place to live. Little Drops of Water Make the Mighty Ocean. If you don’t who else will ?

Our A/c Details:

Name : Rightmantra Soul Solutions
A/c No. : 9120 2005 8482 135
Account type : Current Account
Bank : Axis Bank, Poonamallee Branch, Chennai – 600 056.
IFSC Code : UTIB0001182

You can also Cheques / DD  drawn in favour of ‘Rightmantra Soul Solutions’ and send it to our office address mentioned below through courier or registered post.

Rightmantra Soul Solutions
Room No.64, II Floor, Murugan Complex,
(Opp.to Data Udupi Hotel), 82, Brindavan Street,
West Mambalam, Chennai-600033.
Phone : 044-43536170 | Mobile : 9840169215

ரைட்மந்த்ரா தொய்வின்றி தொடர உதவிடுங்கள்!

=========================================================

Also check…

அர்த்தமுள்ள, ஆத்மார்த்தமான தீபாவளியை கொண்டாடலாம் வாருங்கள்!

உண்மையான தீபாவளியை கொண்டாடலாமா?

பாதம் செல்லும் பாதை காட்டிடும் தலைவா எம் தலைவா…

Our 2014 Deepavali Celebrations

பாக்கு விற்பவன் கூட ஊக்குவித்தால் தேக்கு விற்பான் !

இன்பம் எங்கே, மகிழ்ச்சி எங்கே என்று தேடுகிறீர்களா ?

ஜகத்குரு தரிசனத்துடன் தொடங்கிய நம் தீபாவளி கொண்டாட்டங்கள் – Part 1

Our 2013 Deepavali Celebrations

கோ சேவை செய்பவர்களுக்கு ஒரு கௌரவம் – ரைட்மந்த்ரா தீபாவளி கொண்டாட்டம் 2

வண்ணத்து பூச்சிகளுக்கு பட்டாடை – ரைட்மந்த்ரா தீபாவளி கொண்டாட்டம் 1

=========================================================

[END]

7 thoughts on “திருப்பதி முருகனுக்கு அரோகரா… தீபாவளி கொண்டாட்டம் (1)

  1. இன்று குரு வாரம்…. , குருவை பற்றிய பதிவை ஆவலுடன் எதிர்பார்த்தேன், தளத்தை ஓபன் செய்தால் தீபாவளி கொண்டாட்டத்தின் முதல் பதிவு. வாவ் … அசத்தலோ அசத்தல். மிகவும் நன்றாக உள்ளது. உழவாரப் பணியில் கலந்து கொண்ட நாங்களும் அங்கு நடந்த நிகழ்வுகளை மிகவும் ஆச்சரியத்துடன் பார்த்து கொண்டு இருந்தோம். ஒரு அருமையான எதையும் எதிர்பாராத ஒரு நல்லவருக்கு தங்களின் உதவி சென்று இருக்கிறது.

    தாங்கள் கொடுத்த ஒரு உன்னதமான சட்டையை உடனே அணிந்து கொண்டு தங்களை மகிழ்ச்சி கடலில் திக்கு முக்காட வைத்து விட்டார். இதனால் கொடுத்தவருக்கும் ஆனந்தம் … பெற்றுக் கொண்டவருக்கும் ஆனந்தம்..

    ஞானந்த கிரி சுவாமிகளின் தாரக மந்திரம் “மகிழ்வித்து மகிழ்”. ஏழைகளின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்.தங்களின் தீபாவளி கொண்டாட்டம் மேலும் மேலும் சிறக்க வாழ்த்துக்கள்

    வாழ்க .. வளமுடன்
    நன்றி
    உமா வெங்கட்

  2. ஏழையின் சிரிப்பில் இறைவனை காண்பது என்பது இதுதான் சார். அன்று செய்த உழவார பணிகளில் மிக மிக சிறந்த பணி இது தான் உண்மையில் கண்கள் குளமாகிவிடது.//

    உங்கள் பணிகள் சிறக்க எனது வாழ்த்துக்கள்.

    தீபாவளி வாழ்த்துக்கள் நம் வாசகர்கள் எல்லோருக்கும் .

    தங்களின்

    ரவிச்சந்திரன்

  3. மத்தூர் உலவாரபணியில் பங்கு கொண்ட எங்களை விட பங்கு கொள்ள வைத்த உங்களுக்கு எங்கள் குழுவின் சார்பில் நன்றிகள் பல.
    புலன்கள் சரியாக வேலை செய்யாதபோதும் அவர் குழந்தைகளை ஆசீர்வாதம் பண்ணிய காட்சி எங்களையும் நெகிழ வைத்து விட்டது.
    இப்பிறவி கடனை தீர்க்க அவர் அன்னையின் காலடியில் தன் காலங்களை கழிக்க வைக்கும் கடவுளின் கணக்கை யாரால் அறியமுடியும்.
    மேலும் மேலும் தங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்.

  4. ‘திருப்பதி முருகனுக்கு அரோகரா’ – தலைப்பை பார்த்தவுடனேயே ஒருவித ஆவலில் தான் பதிவை ஒப்பன் செய்தேன்.

    என்னையும் மத்தூருக்கே அழைத்து சென்றுவிட்டீர்கள். நம் தளத்தின் பதிவுகளை படிக்க படிக்க நான் செல்லவேண்டிய கோவில்கள் கூடிக்கொண்டே போகிறது.

    திருப்பதி முருகனுக்கு அளிக்க அந்த நேரத்தில் லுங்கியும் சட்டையும் கிடைத்தது தெய்வச் செயல் தான் என்பதில் சந்தேகமில்லை. கடைச்யில் இடம்பெற்றுள்ள அவர் புகைப்படம் உண்மையில் ஏதோ ஒரு சித்தர் நடந்து வருவது போல உள்ளது.

    திருநாவுக்கரசர் பாடல் அற்புதம். முருகன் படமும், இறுதியில் அளிக்கப்பட்டுள்ள சிவலிங்கத்தின் படமும் அழகோ அழகு.

    மொத்தத்தில் இந்த பதிவு தலைசிறந்த பதிவுகளுள் ஒன்று என்றால் மிகையல்ல.

    அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்.

    – பிரேமலதா மணிகண்டன்,
    மேட்டூர்

  5. முதற்கண் நம் குடும்பத்தினர் அனைவருக்கும் உள்ளம் கனிந்த தீபாவளி வாழ்த்துக்கள். தங்களின் செய்கை ஒவ்வொன்றும் எப்படி மனிதன் (நிஜ மனிதன்) வாழவேண்டும் என்பதற்குரிய எடுத்துகாட்டாக இருப்பதே எங்களுக்குள் மாற்றம் ஏற்படுத்தி விட்டது. மாற்றம் முன்னேற்றம் என்று ஒரு பக்கம் மக்களை எமற்றுபவர்களியே பார்த்து பார்த்து சலித்துவிட்ட எங்களுக்கு தங்கள் பொது வாழ்வே ஒரு இடுத்து காட்டு. நான் இரு தடவை மத்தூர் சென்ற போதும், எனக்கு சித்தரின் காட்சி கிடைக்க வில்லை. அனால் நான் அதற்க்கு எல்லாம் வருத்தபடாத வாலிபர் சங்கத்தை சேர்த்தவன். எனக்கு தெரியும் தலைவர் என்னிடம் கண்ணாமூச்சி தான் அடுகிரானே தவிர தவிக்க விடவில்லை. என்றென்றும் எங்களை (நம்மை) காப்பது அவன் கடமை. அவனிருக்க நான் ஏன் கலங்க வேண்டும். பதிவுகள் அழகாகி கொண்டே போகின்றன. கமெண்ட் தான் சமயத்தில் எழுத முடியவில்லை. ஏன் சார், RECORDING COMMENT OPTION இல்லையா???

  6. என் கண்களில் லேசாக கண்ணீர் வந்தது. மனமும் உருகியது. தெய்வீகத்தை உணர்ந்த சந்தோசம். நானும் உதவ முயல்கிறேன்

    ஓம் சிவ சிவ ஓம்

  7. ஒரு நல்ல பதிப்பை படித்ததில் ஒரு த்ரிப்தி . தொடரட்டும் உங்கள் சிறப்பான தொண்டு.

    ராம்

Leave a Reply to பிரேமலதா Cancel reply

Your email address will not be published. Required fields are marked *