Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Thursday, March 28, 2024
Please specify the group
Home > Featured > எதிர்பாராமல் கிடைத்த ஒத்துழைப்பும் உதவியும்!

எதிர்பாராமல் கிடைத்த ஒத்துழைப்பும் உதவியும்!

print
“நீ சந்திக்கும் ஒவ்வொரு மனிதனும் உனக்கு ஆசான்” என்று கூறுவார்கள். பல சமயங்களில் பிரமிக்கத்தக்க பாடங்களை எதிர்பார்க்காத கோணங்களில் எதிர்பார்க்காத நபர்களிடமிருந்து நாம் கற்றுக்கொள்வது உண்டு.

பொதுவாக மனிதர்களை சரியாக எடைபோடுவதில் நாம் தவறுவதில்லை. காரணம், கடந்து வந்த பாதையில் நாம் கற்றுக்கொண்ட பாடங்கள், சந்தித்த நபர்கள்! நமது கணிப்பு பெரும்பாலும் தவறுவதில்லை. ஆனால் அரிதினும் அரிதாக சில சமயம் நமது கணிப்புக்கள் உல்டாவாகி போவதுண்டு. அப்படிப்பட்ட ஒன்றை பார்ப்போம்.

http://rightmantra.com/wp-content/uploads/2014/02/IMG_5763.jpg

முக்கியப் பிரமுகர்களின் தேதி கிடைத்து நூல் வெளியீட்டு விழா தேதி முடிவானதும் அடுத்து பல இடங்கள் ஆலோசிக்கப்பட்டன. ஆனால் ஒரு முடிவுக்கு வர முடியவில்லை. காரணம், வாடகை மற்றும் இதர அடிப்படை வசதிகள். நம்மால் நிறைய செலவு செய்யமுடியாது. இந்த விழாவே கூட இது நமது முதல் முயற்சி என்பதாலும் ஒரு விளம்பரம் தேவை என்பதாலும் தான்.

இது பற்றி குன்றத்தூர் மாணவர்களின் தேவார ஆசிரியர் திரு.சங்கர் அவர்களிடம் பேசியபோது, திருமுறை தொண்டை நாம் ஏற்கனவே செய்து வருவதாலும் திருமுறை பாடசாலை மாணவர்களுக்கு நாம் ஏற்கனவே பல உதவிகள் செய்திருப்பதாலும், நாகேஸ்வரர் கோவில் அருகே உள்ள திருக்குறள்-தேவார பாடசாலையின் ஹாலை கேட்கலாம் என்றும், செந்தமிழரசு திரு.கி.சிவக்குமார், உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக வருவதால் நமக்கு நிச்சயம் சலுகை வாடகையில் இடம் வாய்ப்புள்ளது என்றும் கூறினார்.

இதையடுத்து அந்த பாடசாலையை நிர்வகிக்கும் திருநாகேஸ்வரம் சிவனடியார்கள் திருக்கூட்ட சபை நிர்வாகிகளிடம் பேசி சலுகை விலையில் இடத்தை புக் செய்தோம்.

தொடர்ந்து விழா ஏற்பாடுகள் மிக மிக வேகமாக நடைபெற்றது. மதிய உணவாக முதலில் ‘சாப்பாடு’ போடலாம் என்று தான் தீர்மானித்திருந்தோம். ஆனால், அந்த செலவில் இன்னும் ஒரு நூலே அச்சிட்டு வெளியீட்டு விழா நடத்திவிடலாம் என்பதால், இறுதியில் புளியோதரையும் தயிர்சாதமும் மட்டும் போதும் என்று முடிவானது.

அனைத்து செலவுகளும் மிக மிக சிக்கனமாகவே செய்யப்பட்டது. தேவையற்ற செலவு என்று நாம் கருதுவது (அதுவும் பர்சனலாக நாம் செய்தது) நமது புதிய பட்டு வேட்டி சட்டைக்கான செலவு  தான்.

Rightmantra Book Release 18

நம் தளம் செய்யும் பணிகளை அறிந்தவர்கள் – வீடியோ கவரேஜ் (சிங்கிள் காமிரா) முதல் கேட்டரிங் காண்டிராக்டர் வரை அனைவரும் தத்தங்கள் ரெகுலர் கட்டணத்தை குறைத்துக்கொண்டு நமக்கு உதவினர்.

எந்தவொரு விழாவுக்கும் சவுண்ட் சர்வீஸ் மிக மிக முக்கியம். அதுவும் இது நம்மைப் பொறுத்தவரை மிக மிக முக்கியமான விழா. நமக்கு வழக்காக சவுண்ட் சர்வீஸ் செய்பவர் கே.கே.நகர் சக்தி விநாயகர் பிள்ளையார் கோவிலில்  உள்ளவர். ஆனால் இதுவோ புது இடம். இந்த இடத்திற்கு ரெகுலராக சவுண்ட் சர்வீஸ் செய்பவர் தான்  சரிப்படுவார். அவருக்கு தான் இந்த இடத்தின் நெளிவு சுளிவு தெரியும். சரியாகவும் செய்ய முடியும்.

எனவே இந்த இடத்தில் நடைபெறும் நிகழ்ச்சிக்கு ரெகுலராக ஒலி அமைப்பு செய்யும் ரவி என்பவரை கோவிலுக்கு அருகே உள்ள அவரது சவுண்ட் சர்வீஸ் கடையில் சந்தித்து எஸ்டிமேட் கேட்டோம்.

அவரோ நம்மிடம் நின்று சில வினாடிகள் கூட பேசமுடியாத நிலையில் இருந்தார். சக்கரம் கட்டிக்கொண்டு சுற்றாத நிலை தான். “நான் அப்புறம் உங்கே கிட்டே பேசுறேன். இப்போது பிஸியாக இருக்கேன்!” என்று கூறிவிட்டு நமது பதிலுக்கு கூட காத்திராமல் தனது மொபட்டில் பறந்தே விட்டார்.

Rightmantra Book Release 20
மங்கள இசைக்கலைஞர்கள் கௌரவிக்கப்படுகிறார்கள்…

“உருவு கண்டு எள்ளாமை வேண்டும்”. தோற்றத்தை வைத்து யாரையும் எடைப் போடக்கூடாது. இருந்தாலும் அவரைப் பார்த்தபோது ஆள் சற்று ROUGH & TOUGH ஆக இருந்தார். நிச்சயம் இவரை நாம் ஒப்பந்தம் செய்தாலும் இவரிடம் நமக்கு போதிய ஒத்துழைப்பு கிடைக்காது என்று மட்டும் புரிந்தது. இது நமக்கு சரிப்படாது. நமக்கு வழக்கமாக சவுண்ட் சர்வீஸ் செய்யும் கே.கே. நகர் நபரை அலைபேசியில் அழைத்து நமது நிகழ்ச்சி பற்றி சொல்லி, ஞாயிறு 20 என்று தேதியை சொன்னபோது அவர் “அவ்வளவு தூரம்லாம்  வரமுடியாது சுந்தர் சார். வண்டி கூலியே ஏங்கேயோ போய்டும். இது சீசன் வேற. என்னிடமும் செட் இல்லை. எல்லாம் பிள்ளையார் சதுர்த்தி  பிள்ளையார்களுக்கு போய்விட்டது. பேசாமல் நீங்கள் அங்கேயே பார்த்துக்கொள்ளுங்கள்… அது தான் பெஸ்ட்” என்றார்.

Rightmantra Book Release 21
மங்கள இசைக்கலைஞர்களில் ஒருவர் கௌரவிக்கப்படுகிறார்…

நமக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. வேறு வழியில்லை. மறுபடியும் ரவி அவர்களிடமே சென்று நிற்கவேண்டும். நமக்கோ நம்மிடம் பேசக் கூட தயாராக இல்லாத நபரிடம் போய் எப்படி மறுபடி பேசுவது என்கிற  தயக்கம். மேலும் நாம் பிஸினஸ் வேறு தருகிறோம். எனவே நாம் ஏன் இறங்கிப் போகவேண்டும் என்று ஒரு இறுமாப்பு.

Rightmantra Book Release 19

குன்றத்தூரில் வேறு இடங்களில் விசாரித்துப் பார்த்தபோது, பிள்ளையார் சதுர்த்தியையொட்டி ஒலி பெருக்கி சர்வீஸ்கள் கடும் டிமாண்ட்டில் இருப்பது புரிந்தது.

சரி… வேறு வழியில்லை… சில இடங்களில் நாம் இறங்கித் தான் போகவேண்டும். அது தானே வாழ்க்கை… இதனால் நமக்கு என்ன நஷ்டம் வந்துவிடப்போகிறது என்று மீண்டும் அந்த நபரையே தொடர்புகொண்டோம்.

“என்ன சார்… ஞாயித்துக்கிழமை பங்க்ஷனை பத்தி உங்ககிட்டே பேசலாம்னா உங்களை பிடிக்கவே முடியலியே” என்றோம்.

“சார்… மன்னிக்கணும் இது சீசன் டயம். முஹூர்த்தங்கள் வேற… இங்கே ரெண்டு மூணு மண்டபத்துக்கு நான் தான் பண்ணனும்… அதான். நீங்க நாளைக்கு சாயந்திரம்  நான் சொல்ற இடத்துக்கு வாங்க. பேசலாம்…” என்று கூறி ஒரு மண்டபத்தை குறிப்பிட்டு அங்கு வரச் சொன்னார்.

அங்கு சென்று அவரிடம், நமது நிகழ்ச்சி என்ன, நமது தேவைகள் என்ன என்பது உள்ளிட்ட அனைத்தையும்  கூறிய பின்னர், ஒரு லிஸ்ட் போட்டு இவ்வளவு ஆகும் என்றார்.

நாம் நம் தளத்தை பற்றி குறிப்பிட்டு, “ஐயா… இது வணிக ரீதியாக இயங்கும் தளம் இல்லை. ஏதோ வாசகர்கள் கொடுக்கும் நன்கொடையை வைத்து நடந்துகொண்டிருக்கிறது. நூல்கள் கூட என் படைப்புக்கள் திருடுபோவதை அடுத்து தான்  வெளியிடுகிறேன். இதை வைத்து சம்பாதிக்க அல்ல. சம்பாதிக்கவும் முடியாது. கொஞ்சம் குறைத்துக் கொள்ளுங்களேன்…” என்றோம்.

“இது சீசன் டயம் ஆச்சே சார்… எதுவுமே முடியாதே…” என்றார்.

உடனே நமது  சென்ற ஆண்டு பாரதி விழா மற்றும் ரைட்மந்த்ரா விருது விழா அழைப்பிதழை காண்பித்து நமது பணிகளை விளக்கினோம். சிறிய சிந்தனையில் ஆழ்ந்தார். அதில் நாம் ஆற்றக்கூடிய பணிகளை பார்த்தவுடன் “இதெல்லாம் இந்தக் காலத்துல பண்றதுக்கு யார் சார் இருக்காங்க…” என்று நெகிழ்ந்தவர், கடைசியில் ஒரு கணிசமான தொகையை குறைத்துக்கொண்டார்.

ஒரு சிறு தொகையை அட்வான்ஸாக கொடுத்து அவரை இறுதி செய்தோம்.

ஹப்பாடா…. ஒரு பெரிய வேலை முடிஞ்சுது….  நிம்மதி பெருமூச்சு விட்டோம். ஏனெனில் எந்த ஒரு விழாவுக்கும் சவுண்ட் அமைப்பு மிக மிக முக்கியம். இது மட்டும் சரியில்லை என்றால் எவ்வளவு பெரிய விழாவாக இருந்தாலும் எடுபடாது.

இதற்கிடையே முந்தைய நாள் சனிக்கிழமை இரவு நமது இல்லத்தில் விழா தொடர்பான ஏற்பாடுகளில் நாமும் நம்முடன் நமது இல்லத்தில் தங்கியிருந்த நண்பர் சிட்டியும் ஈடுபட்டிருந்தோம்.

சுமார் இரவு 11.00 மணியளவில் வீட்டு வாசலில் அதிர்வேட்டு சத்தம். கூடவே மங்கள இசை வேறு.

நாம் இருப்பதோ ஒரு அமைதியான புறநகர்ப் பகுதியின் உள்புறம். இங்கே இந்த நேரத்தில் என்ன சத்தம் என்று கதவைத் திறந்து பார்த்தால், வீட்டு வாசலில் பிள்ளையார்!

எங்கள் பகுதியில் விநாயகர் சதுர்த்தியையொட்டி பிரதிஷ்டை செய்திருந்த பிள்ளையார் ஒரு பெரிய வாகனத்தில் ஊர்வலம் வந்துகொண்டிருந்தார்.

Pillaiyar

அடடா…. வீடு தேடியே வந்துவிட்டானே விக்னேஸ்வரன்… ஓடோடிச் சென்று அலுவலகத்தில் இருந்து கொண்டு வந்திருந்த புத்தக பண்டல்களில் ஒன்றை பிரித்து முதல் நூல்களை முழுமுதற் கடவுளிடம் வைத்து ஆசி பெற்றோம். ஏனெனில், அச்சகத்தில் இருந்து வந்து இறங்கிய புத்தகங்கள் சனிக்கிழமை இரவு தான் நமக்கு கிடைத்தது. எனவே நாம் திட்டமிட்டபடி சுவாமி பாதத்தில் வைத்து பூஜிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை. மறுநாள், நாகேஸ்வரர் கோவிலில் பார்த்துக்கொள்ளலாம் என்று விட்டுவிட்டோம்.

கணேசனின் ஆசி
கணேசனின் ஆசி

ஆனால் முழுமுதற் கடவுளே வீடு தேடி வந்த நிலையில் அவரிடம் ஆசி பெறுவதை விட முக்கியமா வேறு என்ன இருக்கமுடியும்?  (*கணேசனிடம் ஆசிபெற்ற காரணமோ என்னவோ, அரங்கிற்கு கொண்டு சென்ற முதல் தவணை புத்தகங்கள் கிட்டத்தட்ட 90% விற்றுவிட்டது!)

ஆனைமுகன் வீடு தேடி வந்த பின்னர், வேறு ஒரு யோசனை மனதில் உதித்தது. இணையத்திலிருந்து சீர்காழி கோவிந்தராஜனின் பிரபல கணபதி கானங்கள் சிலவற்றை டவுன்லோட் செய்து, நமது பென்-டிரைவ் ஒன்றை எடுத்து அதில் காப்பி செய்துகொண்டோம். காலை விழா அரங்கிற்கு சென்றவுடன் சவுண்ட் சர்வீஸ் நபரிடம் கொடுத்து முதலில் கணபதி கானங்களை ஸ்பீக்கரில் ஒலிக்கவிட வேண்டும் என்பது தான் நமது திட்டம்.

காலை 6.30க்கு புத்தக பண்டல்கள் மற்றும் இதர பொருட்கள், சாமான்கள் அனைத்தையும் வேனில் ஏற்றி விழா நடைபெறும் ஊரான குன்றத்தூர் புறப்பட்டோம். பாதி வழியில் சென்ற பின்னர் தான் நினைவுக்கு வந்தது பாடல்களை காப்பி செய்த பென்-டிரைவை வீட்டிலேயே மறந்து வைத்துவிட்டது.

சரி… முதலில் அரங்கிற்கு செல்வோம்… அங்கிருந்து நண்பர்கள் யாரையேனும் வீட்டுக்கு பைக்கில் அனுப்பி கொண்டு வரச் சொல்லலாம் என்று சமாதானப்படுத்திக்கொண்டோம்.

7.00 மணிக்கு நண்பர்களுடன் நிகழ்ச்சி நடைபெறும் ஹாலுக்கு சென்றோம். ஆனால் நமக்கு முன்பே திரு.ரவி, அதான் சவுண்ட் சர்வீஸ் நபர், தனது அஸிஸ்டெண்ட்டுடன் வந்து அவர் வேலைகளை கரெக்ட்டாக துவக்கி  செய்துகொண்டிருந்தார்.

மேடை மீது மேட் (விரிப்பு) போடுவது முதல், மைக்குகள் செட் செய்து ஒலிப் பெருக்கி பாக்ஸ் இணைப்பு கொடுப்பது வரை அவரின் பணிகள் கச்சிதமாக முடிக்கப்பட்டிருந்தன.  மேலும் குளித்து முடித்து திருநீறும் சந்தனமும் வைத்துக்கொண்டு ப்ரெஷ்ஷாக வந்திருந்தார் மனிதர்.

அதுபோன்று யாரையேனும் பார்த்தாலே மனதில் ஒருவித பாஸிடிவ் அலைகள் தோன்றும்.

சேர் போடுவது, பொருட்களை பிரித்து தனித் தனியாக வைப்பது, வருபவர்களை வரவேற்க ஏற்பாடு செய்வது என பல வேலைகள் இருந்தன. நண்பர்களுடன் இணைந்து செய்ய ஆரம்பித்தோம்.

ரவி அவர்கள் ஆம்ப்ளிஃபயரில் ஸ்பீக்கர் கனக்ஷன் கொடுத்த பின்னர் முதலில் ஒலித்தது என்ன தெரியுமா? சீர்காழியின் கணீர் குரலில் “சுழி போட்டு செயல் எதையும் தொடங்கு… பிள்ளையார் சுழி போட்டு சுழி போட்டு செயல் எதையும் தொடங்கு..” என்கிற பாடல் தான்.

"

ஓடிச் சென்று, அவரின் கைகளை பற்றி கைகுலுக்கி நன்றி தெரிவித்தோம். “சார்…நான் பென்-டிரைவ்ல காப்பி செஞ்சி வெச்சிருந்தேன். ஆனா வரும்போது எடுத்துட்டு வர மறந்துட்டேன். இப்போ வீட்டுக்கு ஆளனுப்பி அரைமணி நேரத்துல எடுத்துட்டு வரச் சொல்லலாம்னு நினைச்ச்க்கிட்டுருந்த நேரம், நீங்களே பிள்ளையார் பாட்டு போட்டுடீங்க” என்றோம்.

“என்கிட்டே இந்த சி.டி. ஒண்ணு எப்பவுமே இருக்கும்” என்றார்.

Rightmantra Book Release 22
Shivatemples.com திரு.நாராயணசாமி அவர்கள் கௌரவிக்கப்படும்போது…

யார் ஒத்துழைக்க மாட்டார்கள் என்று கணித்தோமோ அவரிடமிருந்தே ஒரு நல்ல துவக்கம் கிடைத்தது நாம் எதிர்பார்க்காதது.

அதுமட்டுமல்ல… அன்று நம்முடன் இருந்தவர்களுக்கு தெரியும்…. நிகழ்ச்சி துவங்கிய காலை 9.00 முதல் மதியம் 2.00 வரை அவர் ஹாலைவிட்டு எங்கும் செல்லவில்லை. எதாவது தொழில்நுட்ப பிரச்சனை ஏற்பட்டால் சரி செய்ய அங்கேயே தான் இருந்தார். அவரிடமிருந்து பரிபூரண ஒத்துழைப்பு கிடைத்தது. ஒலி, ஒளி அமைப்பும் சிறப்பாக  இருந்தது.

அவரது சைடில் ஒரு சிறு தவறு கூட வராமல் பார்த்துக்கொண்டார். நாம் கூப்பிடும்போது அவசரத்துக்கு ஓடிவந்தார். இதுவும் நாம் சற்றும் எதிர்பார்க்காத ஒன்று.

நிகழ்ச்சி நிரல் தயாரிக்கும்போதே ஒரு முக்கிய விஷயம் சேர்க்கப்பட்டது. குன்றத்தூரில் உள்ள சில சிவனடியார்கள் குறிப்பாக விழா நடைபெறும் அந்த திருக்குறள்-தேவார பாடசாலையுடன் தொடர்புடைய சிவனடியார்கள் சிலரை சிறப்பு விருந்தினர்கள் மூலம் சபையில் கௌரவிக்கவேண்டும் என்பதே.

பல்வேறு சிரமங்களுக்கிடையே இந்த விழாவை நாம் ஏற்பாடு செய்து வருவதை திரு.சங்கர் அறிந்திருந்தார். சிவனடியார் திருக்கூட்ட சபைக்கு சொந்தமான இந்த இடத்தை நமக்கு சலுகை வாடகையில் அவர்கள் தந்திருப்பதால் ஒரு ஃபார்மாலிட்டிக்காக இந்த கௌரவம் செய்வது இருந்தால் போதும் என்றும் இதற்காக பெரிதும் செலவு செய்யவேண்டாம் என்றும் நம்மிடம் அறிவுறுத்தினார்.

சால்வை போன்றவற்றை தவிர்த்து அதற்கு பதில் டவல் கொடுத்தால் போதும் என்றும் கூறினார். (தம்மிடம் எண்ணற்ற சால்வைகள் இருக்கின்றன என்றும் அவற்றால் எந்த பயனும் இல்லை என்பது அவர் கருத்து!) எனவே நாம் நண்பர்களுடன் ஆலோசித்தபோது சிவனடியார்களுக்கு சால்வைக்கு பதில் துண்டு அணிவிப்பது என்றும், கூடவே அவர்களுக்கு உபயோகமுள்ள வகையில் வேறு ஏதேனும் செய்யவேண்டும் என்றும் அதே நேரம் செலவும் கைமீறி போய்விடக்கூடாது என்றும் முடிவு செய்தோம்.

ஆனால் என்ன யோசித்தும் ஒரு முடிவுக்கு வர இயலவில்லை.

அதே போல, சுமார் 40 தேவார பாடசாலை மாணவர்கள் நமது நிகழ்ச்சிக்கு கடவுள் வாழ்த்து பாட வருகிறார்கள். அவர்களுக்கு நிச்சயம் ஏதேனும் செய்யவேண்டும். சமீபத்தில் தான் (ஆகஸ்ட் 2) அகத்தியர் தேவார திரட்டு முற்றோதலில் அவர்களுக்கு தேவையான ஸ்டேஷனரி பொருட்களை வாங்கித் தந்தோம் என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் மிகவும் பிரபலமான சிறப்பு விருந்தினர்கள் வருகை தரும் நிகழ்ச்சியில் அவர்கள் கலந்துகொண்டு தங்கள் பங்கை செய்வதால் அவர்களை ஊக்குவிப்பது நமது கடமை அல்லவா?

திரு.ஹுசேன் கூட பத்திரிகை வைக்க சென்றபோது இது பற்றி நம்மிடம் அறிவுறுத்தினார். “தேவாரம் பாடும் மாணவர்களுக்கு உங்கள் சக்திக்குட்டுப்பட்டு நிச்சயம் விழா மேடையில் ஏதேனும் செய்யுங்கள் சுந்தர்” என்று.

நண்பர்களுடன் ஆலோசித்ததில் ஒரு முடிவுக்கு வந்தோம். சிவனடியார்களுக்கு நல்ல உயர் ரக துண்டு ஒன்றும், சிறிய RE-CHARGEBLE TORCH LIGHT ம் தருவது என்றும், மாணவர்கள் அனைவருக்கும் தலா ஒரு நோட்டு புத்தகமும், பென்சில் ரப்பரும் தருவது என்று தீர்மானிக்கப்பட்டது. இது ஒன்று தான் அப்போதிருந்த நிலையில் செய்யக்கூடிய ஒன்று. ஆனால் பட்ஜெட் இடித்தது. இது நூல் வெளியீட்டு விழா என்பதால் பெரிதாக செலவு செய்யமுடியாது. இந்த விழாவில் நிச்சயம் இந்த பயனுள்ள அம்சம் எப்படியேனும் இடம்பெறவேண்டும். இல்லையேல் விழாவிற்கு அர்த்தமே இருக்காது என்று உணர்ந்தோம்.

Rightmantra Book Release 10

நமது பணிகளில் தோள் கொடுக்கக்கூடிய அனைவரும் ஏறத்தாழ உதவிவிட்டர்கள். யாரிடம் போய் கேட்பது. நமக்கோ சங்கடம். நேரமோ ஓடிக்கொண்டிருக்கிறது.

வேறு வழியின்றி நமது பர்சனல் வங்கிக் கணக்கில் மினிமம் பாலன்ஸ் தொகைக்கும் கீழே சென்று பணத்தை வித்டிரா செய்து, மேற்கூறியவற்றை வாங்க ஏற்பாடு செய்தோம். அதாவது கணக்கில் பணத்தை துடைத்துவிட்டோம்.

நண்பர் குட்டி சந்திரனும் விஜய் ஆனந்தும் பாரிமுனை சென்று அலைந்து திரிந்து டவல், நோட்புக், டார்ச் லைட் உள்ளிட்ட அனைத்தையும் டிஸ்கவுன்ட் ரேட்டில் வாங்கி வந்தார்கள்.

நாம் பாட்டுக்கு இருந்த கொஞ்சம் தொகையையும் வழித்து கொடுத்துவிட்டோமே…. விழாவில் திடீரென்று எதிர்பாராத செலவு ஏதேனும் வந்துவிட்டால் என்ன செய்வது? ஒன்றும் புரியவில்லை. ஏனெனில் ரைட்மந்த்ரா கணக்கில் செட்டில் செய்யவேண்டிய தொகைக்கு மட்டுமே பணம் இருந்தது.

உங்களை நம்பி உங்களுக்காக ஒரு தளம்!

Rightmantra.com is a website that focuses on Spirituality, Self-development and True values without any commercial interest. We are running full-time. Give us your hand. Help us to serve you better. Join our ‘Voluntary Subscription’ scheme or Donate us liberally. Ask your near and dear ones to help us in our mission. We are striving to make this world a better place to live. Little Drops of Water Make the Mighty Ocean. If you don’t who else will?

Our A/c Details:

Name : Rightmantra Soul Solutions
A/c No. : 9120 2005 8482 135
Account type : Current Account
Bank : Axis Bank, Poonamallee Branch, Chennai – 600 056.
IFSC Code : UTIB0001182

இந்த மாத விருப்ப சந்தா செலுத்திவிட்டீர்களா?? ரைட்மந்த்ரா தொய்வின்றி தொடர உதவிடுங்கள்!

You can also Cheques / DD  drawn in favour of ‘Rightmantra Soul Solutions’ and send it to our office address mentioned below through courier or registered post.

Rightmantra Soul Solutions
Room No.64, II Floor, Murugan Complex,
(Opp.to Data Udupi Hotel), 82, Brindavan Street,
West Mambalam, Chennai-600033.
Phone : 044-43536170 | Mobile : 9840169215

நம்பினால் நம்புங்கள், அன்று இரவு வெளியீட்டு விழாவுக்கு உதவ வேண்டி நமது கணக்கிற்கு பணம் அனுப்பிய வாசகர் ஒருவர் சரியாக நாம் மேற்கூறிய விஷயங்களுக்கு எவ்வளவு தொகை செலவு செய்தோமோ அந்த தொகையை டிரான்ஸ்பர் செய்திருந்தார். அதுவும் நமது பர்சனல் கணக்கிற்கு. நமக்கு ஒரே வியப்பு. இத்தனைக்கும் அவரிடம் நாம் எதுவும் கேட்கவில்லை. வழக்கமாக நமது பணிகளில் உதவுபவர் அவர். அவ்வளவே. அவரிடம் மறுநாள் விழா முடிந்து விஷயத்தை கேட்டபோது, “ரைட்மந்த்ரா அக்கவுண்டிற்கு பணம் அனுப்பும் NEFT TIMING முடிந்துவிட்டதால், ஏற்கனவே முன்பு ஒருமுறை ADD செய்து வைத்திருந்த உங்கள் பர்சனல் கணக்கிற்கு அனுப்பினேன். என் வங்கியும் உங்கள் பர்சனல் வங்கியும் (ICICI BANK) ஒன்று என்பதால் இது சாத்தியமானது” என்றார்.

விழாவில் சிவனடியார்களை கௌரவிக்கும்போது, இது பற்றி குறிப்பிட்டோம். “குன்றத்தூரை சேர்ந்த சில சிவனடியார்கள் இங்கே கௌரவிக்கப்படவிருக்கிறார்கள். சிறப்பு விருந்தினர் செந்தமிழரசு சிவக்குமார் அவர்களை அடியார்களை கௌரவிக்கும்படி கேட்டுக்கொள்கிறோம்” என்று கூறி ஒவ்வொருவரின்  பெயராக மைக்கில் அறிவித்தோம்.

Rightmantra Book Release 11

Rightmantra Book Release 12மேலும் பொன்னாடைக்கு பதில், அவர்களுக்கு பயன்படும் வகையில் துண்டும் சிறிய டார்ச் லைட்டும் வழங்க நாம் தீர்மானித்த கதையை கூறியபோது, நம்மை பார்த்த திரு.சிவக்குமார், “பேசாம எங்களுக்கும் இதையே கொடுத்திருக்கலாம். உபயோகமா இருந்திருக்கும் சுந்தர்…” என்றார் சிரித்துக்கொண்டே.

இது போன்ற விஷயங்கள் தான் (அதாவது கௌரவிக்க வேண்டியவர்களை கௌரவிப்பது) ஒரு நிகழ்ச்சியில் மிக மிக முக்கியம். ஆனால் இதற்கு தான் நேரம் இருக்காது. நல்லவேளை நாம் அத்தனை பரபரப்புக்கிடையிலும் இந்த பகுதியை சிறப்பாக செய்துமுடித்தோம்.  அப்போது மறக்காமல் நமது ஒலிபெருக்கி அமைப்பாளரையும் அழைத்து கௌரவித்தோம்.

சவுண்ட் சர்வீஸ் செய்த திரு.ரவி கௌரவிக்கப்படுகிறார்
சவுண்ட் சர்வீஸ் செய்த திரு.ரவி கௌரவிக்கப்படுகிறார்

சிவனடியார்களை சிவக்குமார் அவர்கள் கௌரவிக்க, மாணவர்களை டாக்டர்.திரு.எம்.ஏ.ஹுசேன் அவர்களைக் கொண்டு கௌரவித்தோம். மாணவர்களுக்கு உபயோகமான ஒன்று, அதுவும் திரு.ஹுசேன் அவர்களின் கைகளால் கொடுத்தது நமக்கு மகிழ்ச்சி. மனநிறைவு.

Rightmantra Book Release 15
கடவுள் வாழ்த்து பாடிய மாணவர்கள் பரிசு பெறும்போது….
Rightmantra Book Release 14
மாணவர்கள் முகத்தில் மகிழ்ச்சியை பாருங்கள்…

அடுத்து நடைபெற்ற மற்றொரு நெகிழ வைக்கும் நிகழ்வு….

இந்த விழா ஹாலில், துப்புரவு பணி செய்துவரும் ஒரு அம்மா இருந்தார்கள். பெயர் கல்யாணி. வயது 65. காலை அரங்கிற்கு வந்து துப்புரவு பணி செய்தவர், டைனிங் ஹாலில் சிற்றுண்டி முடிந்த பின் அந்த இடத்தை கிளீன் செய்துவிட்டு வெளியே ஓரமாக நின்றுகொண்டிருந்தார். கண்களில் ஒரு வித ஏக்கம்.

அந்த பரபரப்பிலும் அவரிடம் பேச்சு கொடுத்து அவரை பற்றி விசாரித்தோம். பிள்ளைகள் இருந்தும் அவர்களால் எந்த பயனும் இன்றி, தன் வயிற்றுப்பாடுக்கு இங்கு வந்து பணி செய்துகொண்டிருக்கிறார்கள் என்பது புரிந்தது.

“அம்மா… இங்கேயே இருங்க. எங்கேயும் போய்டாதீங்க…” என்று கேட்டுக்கொண்டோம். காரணம் விழா முடிவடையும் நேரம், இவருக்கு ஏதேனும் மரியாதை செய்யவேண்டும் என்பது நம் திட்டம். அதை அவரிடம் முன்பே சொல்லவேண்டாம். அவரது சின்சியாரிட்டியை செக் செய்வோம் என்று  கருதினோம்.

அதே போல, விழா முழுதும் முடியும் வரை அவர் அங்கேயே இருந்தார். இடையே மாணவர்களுக்கு மட்டும் அவர்கள் பசி தாங்கமாட்டார்கள் என்பதால் 12.30 க்கெல்லாம் உணவு பரிமாறப்பட்டது. அவர்கள் சாப்பிட்ட பின்னர் அந்த இடத்தை சுத்தம் செய்தார் கல்யாணி அம்மா.

அனைத்தையும் நாம் கவனித்தபடி இருந்தோம்.

இறுதியில் மைக்கில் இவரது பெயரை சொல்லி, அவர் இந்த வளாகத்தில் பல ஆண்டுகளாக துப்புரவு பணி செய்துவருவதை குறிப்பிட்டு, எந்த சூழ்நிலைக்கிடையே அவர் இந்த பணியை செய்து வருகிறார் என்றும் குறிப்பிட்டு சிறப்பு விருந்தினர்களில் ஒருவரான திருமதி.தேவகி பிரபாகரமூர்த்தி அவர்களைக் கொண்டு இவருக்கு துண்டும் டார்ச் லைட்டும் கொடுத்து, கையோடு புடவை ரவிக்கையும் கொடுத்தோம்.

Rightmantra Book Release 16

அவரது கண்களில் தெரியும் அந்த நெகிழ்ச்சியை பாருங்கள். இது இது ஒன்றே நமக்கு போதும். இந்த விழாவுக்கு மிகப் பெரிய ஒரு அர்த்தத்தை கொடுத்துவிட்டது இந்த ஒரு சிறு நிகழ்வு.

Rightmantra Book Release 17

நமது நிகழ்ச்சிகளுக்கு அரிதாகவே வரும் நம் நண்பர் ஒருவர் நாமே வியக்கும் விதமாக இந்த விழாவுக்கு வருகை தந்து (அவரது மனைவிக்கு நிறைமாதம்) முழுதும் இருந்து ரசித்துவிட்டு சென்றார்.

மறுநாள் இது பற்றி குறிப்பிட்டு சொன்னார். “சுந்தர், அந்த பெருக்குற அம்மாவுக்கு நீங்கள் செய்த அந்த கௌரவம் என்னை நெகிழவைத்துவிட்டது. ரொம்ப சந்தோஷம்!” என்று.

ஒரு விஷயம் என்னவென்றால் மூன்றாண்டுகளுக்கு முன்னர் நாம் ஈடுபட்டுக்கொண்டிருந்த வேறொரு விஷயத்தை நிறுத்திவிட்டு நேரத்தை பயனுள்ள வகையில் செலவழிக்கவேண்டும் என்று முடிவு செய்து ரைட்மந்த்ரா துவக்கியபோது, “ரைட்மந்த்ரா வேண்டாமே… மறுபரிசீலனை செய்யுங்கள்” என்று நம்மிடம் கூறி நமது வேகத்திற்கு அணை போட முயன்றவர் அவர்.

ஆனால்…. தற்போது அவர் விருப்ப சந்தாதாரர்களில் ஒருவர் ! அதுமட்டுமல்ல… நமது பணிகளில் துணை நிற்பவர்!!

இது தான் உண்மையான வெற்றி! சரி தானே?

விழாவின் இதர நிகழ்வுகள் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் நமது விழாவில் என்ன பேசினார்கள் என்பதை அறிய அனைவரும் ஆவலாக இருப்பீர்கள். அவர்கள் பேசியதையும் இதர விஷயங்களையும் வரிக்கு வரி நம்மால் எழுத இயலவில்லை. காரணம் நாம் அங்கும் இங்கும் ஓடிக்கொண்டிருந்தோம். எனவே விழாவின் முழு காணொளி டி.வி.டி. கிடைத்ததும், அதை எடிட் செய்து, யூ-ட்யூப்பில் மூன்று அல்லது நான்கு பாகங்களாக அப்லோட் செய்கிறோம். பின்னர் அந்த லிங்கை இங்கு அளிக்கிறோம். அதுவரை சற்று பொறுத்திருக்கவும். நன்றி.

==============================================================

விழா தொடர்பான பதிவுகள் ஓரளவு நிறைவுபெற்றுவிட்டன. வரும் ஞாயிறு குடியாத்தம் நகரில் நாம் ஆற்றவுள்ள பௌர்ணமி சிறப்பு சொற்பொழிவுக்காக நாம் நம்மை தயார் செய்துகொள்ள வேண்டியுள்ளது.  நம் தளத்தின் வழக்கமான பணிகள் தொய்வின்றி நடக்க வேண்டும் எனில் புத்தக விற்பனையை நாம் கவனிக்க இயலாது. நம்மிடம் அந்த  அளவிற்கு ஆள் பலமோ இட வசதியோ இல்லை என்பது நீங்கள் அறிந்ததே. வாசகர்கள் நூல்களை பெறுவதற்கு உரிய மாற்று ஏற்பாடு செய்யப்பட்ட பிறகு அது குறித்த ஒரு பதிவு வெளியாகும் என்று தெரிவித்துக்கொள்கிறோம். நன்றி…!

==============================================================

Also check :

சீப்பை ஒளித்து வைத்துவிட்டால் கல்யாணம் நின்றுவிடுமா?

இன்று கண்ட அவமானம் வென்று தரும் வெகுமானம்!

உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்!

அது என்ன ‘அனுபவ வாஸ்து’ ?

நான் புதைக்கப்படவில்லை… விதைக்கப்பட்டேன்!

நம்பிக்கை வைத்து கல்லையும் பார்த்தால் தெய்வத்தின் காட்சியம்மா…

ஒரு கனவின் பயணம்!

வெற்றி நிச்சயம், இது வேத சத்தியம்!

‘நாளை’ என்பதில்லை நரசிம்மனிடத்தில்!

வாழ்க்கையில் நிச்சயம் ஜெயிக்க வேண்டுமா? MONDAY MORNING SPL 78

சுழன்றும் ஏர்ப் பின்னது உலகம் – நம் நரசிம்ம ஜெயந்தி அனுபவம்!

பேரெழில் கொஞ்சும் பேரம்பாக்கம் ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மர் – நரசிம்ம ஜெயந்தி ஸ்பெஷல்!

==============================================================

[END]

6 thoughts on “எதிர்பாராமல் கிடைத்த ஒத்துழைப்பும் உதவியும்!

  1. ஆனை முகனின் அருளால் விழா சிறப்பாக நடைபெற்றதில் மிக்க மகிழ்ச்சி. விழாவில் நானும் கலந்து கொண்டதில் பெருமையாக உள்ளது

    புத்தகம் இன்னும் பல பதிப்புகளைக் கடந்து சாதனை பெற வாழ்த்துக்கள்

    வாழ்க .. வளமுடன்

    நன்றி
    உமா வெங்கட்

  2. வணக்கம்……. விழா இனிதே நடைபெற்றது குறித்து மிக்க மகிழ்ச்சி…….. பதிவின் அனைத்து புகைப்படங்களிலும் மகிழ்ச்சி, நெகிழ்ச்சி, நிறைவு ஆகியவற்றைக் காண முடிகிறது………… விநாயகர் வீடு தேடி வந்து தங்களை ஆசிர்வதித்து அருளியுள்ளார்……. இது புத்தக வெளியீட்டு விழாவாக இருந்தாலும், அனைவரையும் கவுரவிக்கும்படியும், மகிழவைக்கும்படியும் இருந்தது…………

    விழாவில் எண்ணற்ற சான்றோர், ஆன்றோர்களை தரிசித்ததில் எங்களுக்கு மகிழ்ச்சி……… ஆகமொத்தம் இது ஒரு மகிழ்ச்சி வெளியீட்டு விழாவாக நடந்தது எனலாம்………நன்றி………….

  3. வாழ்த்துகள் ஐயா, நிகழ்ச்சியின் நிகழ்வுகள் மனதை நெகிழ வைத்தது. சால்வை அணிவிப்பதை மாற்றி, துண்டு அணிவித்தது சிறப்பு. இதை அணைவரும் பின்பற்றினால் நலம். நமது தளத்தின் ஆண்ராய்டு ஆப் தந்தமைக்கு மிக்க நன்றி.

  4. வணக்கம்,

    எவ்வளவோ கஷ்டங்களுக்கு நடுவே இந்த விழாவை நடத்தும்போது எப்படி சார் உங்களுக்குமட்டும் கடைகோடி
    யில் இருக்கும் அந்த அம்மா முகம் தெரிய முத்தாந காரியம் செய்தீர்கள்

    படிக்கும் போதே கண்ணில் நீர் கொட்டுது சார்,

    என்னால் முடிந்த உதவி செய்வேன் சார்.

    தங்கள்

    சோ. ரவிச்சந்திரன்
    கைகா, கர்நாடகா

  5. Best seller… More than 1 million copies என்ற பெயரோடு உங்கள் படைப்புகள் வெளி வரும் நாள் வெகு தூரத்தில் இல்லை. இறைவன் அற்புதம் பல புரிபவர். இது கண்டிப்பாக நடக்கும் சுந்தர் அண்ணா. தமிழ் தெரிந்த அனைவரது வீட்டிலும் உங்கள் படைப்புகள் அலங்கரிக்க பிரார்த்தனை செய்கிறேன்.

  6. நிகழ்சிகள் நல்ல முறையில் நடந்ததை அறிந்தோம். மிக்க மகிழ்ச்சி.
    இதை ஒட்டி ஒரு ஆங்கில மேற்கோள் :-

    “God will Grant what you deserve and not what you desire”

    உங்களுக்கு பொருத்தமானதுதான் இறைவனால் அள்ளிக்கப்பட்டது.

    சென்னை வரும்போது உங்களை சந்திக்க முயலுகிறேன்.

    வாழ்த்துக்களுடன்

    வாசுதேவன் நெ வீ
    கைகா

Leave a Reply to தமிழ்ச்செல்வி ஞானப்பிரகாசம் Cancel reply

Your email address will not be published. Required fields are marked *