Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Friday, March 29, 2024
Please specify the group
Home > Featured > குளத்தில் கண்டெடுக்கப்பட்ட வரப் பிரசாதி போரூர் ஸ்ரீ சிவவீர ஆஞ்சநேயர்

குளத்தில் கண்டெடுக்கப்பட்ட வரப் பிரசாதி போரூர் ஸ்ரீ சிவவீர ஆஞ்சநேயர்

print
னுமத் ஜெயந்தியை முன்னிட்டு நம் தளவாசகர்களுக்கு ஏதாவது ஒரு ஆஞ்சநேயர் ஆலயத்தை அறிமுகம் செய்து வைக்கவேண்டும் என்று கருதினேன். மிகவும் தொன்மை வாய்ந்த, அதே சமயம் அதிகம் அறியப்படாத ஆலயமாக இருந்தால் உங்களுக்கு பயனாக இருக்குமே என்று கருதி அது தொடர்பான தேடலில் ஈடுப்பட்டபோது, ‘வந்தாரை வாழ வைக்கும் வைணவத் தலங்கள்’, ‘பாடல் பெற்ற சைவ ஸ்தலங்கள்’ போன்ற பல நூல்களை எழுதியிருக்கும் நண்பர் சாய்குமாரை தொடர்பு கொண்ட போது  (இவர் அறிமுகம் கிடைத்தது தனிக் கதை. அதை இன்னொரு நாள் சொல்கிறேன். ஒ.கே.?) அவர் இந்த ஆலயம் பற்றி நம்மிடம் கூறினார்.

ஸ்ரீ சிவ ஆஞ்சநேயர் திருக்கோவில் சென்னை, கிண்டி பூந்தமல்லி சாலையில் போரூர் காரம்பாக்கத்தில் அமைந்துள்ளது. சைவ, வைணவ சங்கமமாய் விளங்கும் இத்தலத்தின் வரலாறு கேட்போரை மெய்சிலிரிர்க வைக்கிறது.

நானும் நண்பர் ராஜாவும் கடந்த ஞாயிறு மாலை இந்தக் கோவில் சென்றிருந்தோம். நாம் வந்திருக்கும் விபரம் அறிந்ததும், கோவிலின் டிரஸ்டி திரு.ராஜூ அங்கு வந்திருந்து வரவேற்று கோவிலின் ஒவ்வொரு பகுதியையும் சுற்றி காண்பித்தார். கோவிலை மெருகேற்றுவதன் பொருட்டு தற்போது பரமாரிப்பு மற்றும் கட்டிட வேலைகள் நடைபெற்று வருகின்றன. கோவிலின் பிரதான வாயிலுக்கு மேல் பிரம்மாண்ட அனுமன் சிலை ஒன்று வரவுள்ளது. தவிர தியான மண்டபமும் வரவுள்ளது.

கோவிலை பற்றிய காலண்டர்கள் மற்றும் குறிப்பேடுகளை நமக்கு அளித்த திரு.ராஜூ நமக்கு விசேஷ தரிசனம் செய்வித்தார்.

தலத்தின் வரலாற்றை நமக்கு விரிவாக எடுத்துக் கூறினார். கோவில் குளம் பராமரிப்பின்றி குப்பை கூளங்களால் சீரழிந்து கிடப்பதாக கூறி வேதனை தெரிவித்தார். குளத்தை சீரமைக்கும் பனி, கட்டிட பனிக முடிந்தவுடன் விரைவில் துவங்கவிருப்பதாக கூறினார். மக்கள் தொகை பெருக்கத்தால் விளையும் இது போன்ற சீர்கேடுகளை எப்படி நாம் களையப்போகிறோம்? நமது பாரம்பரிய சின்னங்களை எப்படி பாதுகாக்கப்போகிறோம்?

கோவிலின் வரலாற்றுக்கு செல்வோம்….

மந்திராலய மகான் ஸ்ரீ ராகவேந்திர சுவாமிகளின் முந்தைய அவதாரமான ஸ்ரீ வியாசராஜ தீர்த்தரால் சென்னையில் போரூரில் பிரதிஷ்டை செய்யப்பட்ட ஆஞ்சநேயர் இருக்கிறார் என்பது தெரியுமா?

ராகவேந்திரர் 16 ஆம் நூற்றாண்டை சேர்ந்தவர். வியாசராஜர் 14 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியை சேர்ந்தவர். தலைக்கோட்டை யுத்தத்தில் விஜய நகர சாமராஜ்ஜியம் தோற்கடிக்கப்பட்ட பிறகு ஹம்பி ஷேத்ரத்திலிருந்து ஸ்ரீ வியாசராஜ தீர்த்தர் கால்நடையாகவே பாரதமெங்கும் புனிதப்பயணம் மேற்கொண்டார். அப்படி அவர் பயணம் செய்த பொது 600 க்கும் மேற்ப்பட்ட ஆஞ்சநேயர் சிலைகளை நாடு முழுவதும் பிரதிஷ்டை செய்தார் என்பது வரலாறு. ஸ்ரீ ராகவேந்திர மகிமை நூலின் பல பாகங்களில் இது குறித்த தகவல்களை அறியலாம்.

அடுத்தடுத்து நிகழ்ந்த படை எடுப்புக்களினால் அவர் பிரதிஷ்டை செய்த பல விக்ரகங்கள் காணாமல் போய்விட்டன. நூற்றுக்கும் குறைவான விக்ரகங்களே தப்பித்துள்ளன.

வியாசராஜ தீர்த்தர் அப்படி ஒவ்வொரு ஊராக வந்தபோது, போரூர் என்ற இடத்திற்கு வந்தார். அக்காலத்தில் இது ஒரு சிற்றூர். சிற்றூரானால் என்ன ராமன் ஓரிரவு தங்கிய இடமாயிற்றே. அது போதாதா?

ஸ்ரீ ராமர் வாரப் படையோடு சீதையை தேடி வந்தபோது தென்னிந்தியாவில் உள்ள தாருகாவனத்தில் (அன்றைய போரூர்) முகாமிட்டார். மாலை வேளையில் சிவ பூஜை செய்வது ராமரின் வழக்கம். அப்படி அவர் பூஜை செய்த லிங்கம் தான் இங்குள்ள இராமநாதீஸ்வரர். இராமரே பூஜை செய்ததால் இந்த இடம் ராமேஸ்வரத்துக்கு இணையாக கருதப்படுகிறது. வட இராமேஸ்வரம் என்று அழைக்கப்படுகிறது. இராமேஸ்வரம் செல்ல இயலாதவர்கள் போரூர் இராமனாதீஸ்வரர் ஆலயம் சென்று வணங்கினால், இராமேஸ்வரம் சென்ற பலன் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

தனது ஞான திருஷ்டியால் இதை உணர்ந்த வியாசராஜ தீர்த்தர் தான் நினைத்திருந்த ஆஞ்சநேய சுவாமியை பிரதிஷ்டை செய்ய போரூரை இட பொருத்தமான இடம் இருக்க முடியாது என்று கருதி, இங்கு ஒரு குளக்கரையில் அனுமனை பிரதிஷ்டை செய்தார். அப்படி ஸ்ரீ வியாசராஜர் பிரதிஷ்டை செய்த அழகான அளவற்ற சக்தி வாய்ந்த மூர்த்தம் தான் இந்த ஸ்ரீ சிவவீர ஆஞ்சநேயர்.

(எல்லா நன்மைகளும் கிட்ட, அனுமனின் திருவருள் பெற…)

தருணாருணமுககமலம் கருணாரஸபூர பூரிதாபாங்கம்
ஸஞ்ஜீவனமாஸாஸே மஞ்சுல மஹிமானமஞ்ஜனாபாக்யம்
ஸம்பரவைரிஸராதிக மம்புஜதள விபுலலோசனோதாரம்
கம்புகளமநிலதிஷ்டம் பிம்பஜ்வலிதோஷ்ட மேகமவலம்பே

– ஆதிசங்கரர் அருளிய ஹனுமத் பஞ்சரத்னம்

(இத்துதியை இன்று துதிக்க, எல்லா நன்மைகளும், அனுமனின் திருவருளால் கிட்டும்.)

பொருள் :  சூரியனைப் போல ஒளிமிகுந்த, அழகிய முகம் கொண்டவரே, கருணை மழைபொழியும் கண்களை உடையவரே, ஆஞ்சநேயா,  நமஸ்காரம். யுத்தத்தில் மூர்ச்சித்தும் இறந்தும் விழுந்தவர்களை, சஞ்சீவி மலை கொண்டுவந்து பிழைக்கச் செய்தவரே, அனைவரும் புகழத்தக்க  மகிமை பொருந்தியவரே, அஞ்சனாதேவியின் புதல்வரே, ஆஞ்சநேயா நமஸ்காரம். மன்மத பாணத்தைக் கடந்தவரே, தாமரை இதழ் போன்ற அகண்ட  அழகிய கண்களைக் கொண்டவரே, சங்கு போன்ற கழுத்தை உடையவரே, வாயுதேவனின் பாக்ய புதல்வரே, ஆஞ்சநேயா, நமஸ்காரம்.

வியாசராஜர் பிரதிஷ்டை செய்யும் அனுமனுக்கு மட்டும் தனிச் சிறப்புக்கள் உண்டு.

1) வலது கரம் பக்தர்களுக்கு “அஞ்சவேண்டாம்…. நான் இருக்கிறேன் காப்பதற்கு” எனும்படி அபய ஹஸ்தம்.

2) இடது கரத்தில் சௌகந்திகா மலர்

3) வாலில் மணி. பகைவர்கள் தீண்ட முடியாத படி அதர்வண வேத மதிரப் பிரயோகம் செய்யப்பட்டுள்ளது.

இவை மூன்றும் வியாசராஜர் பிரதிஷ்டை செய்த ஆஞ்சனேயரிடம் மட்டுமே பார்க்கமுடியும். (திருவள்ளூர் அருகே உள்ள காக்களூரில் உள்ள ஆஞ்சநேயரும் இப்படித் தான் இருப்பார். அதை பிரதிஷ்டை செய்ததும் ஸ்ரீ வியாசராஜரே).

அந்நியர்களின் படையெடுப்பின் பொது பாதிக்கப்பட்ட ஊர்களில் போரூரும் ஒன்று. தங்கள் உயிரையும் உடைமைகளையும் காப்பாற்றிக்கொல்வதர்க்காக ஊர் மக்கள் ஊரை விட்டு காடுகளிலும் மலைகளிலும் தஞ்சம் புகுந்தார்கள். (அருகே திரிசூலம் மலை உள்ளது).

இப்படி படையெடுப்பினால் பல ஊர்களும் சிதைந்து போயின. அனுமன் புஷ்கரிணி மட்டும் தப்புமா? நல்ல வேலை வியாசராஜர் பிரதிஷ்டை செய்த விகரகத்துக்கு மட்டும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. அனுமன் எவருக்கும் தெரியாது அதற்குள் மறைந்து நிஷ்டையில் ஆழ்ந்துவிட்டார். விகரகத்தை காணாது திகைத்த ஊர்மக்கள், படையெடுப்பினால் சேதப்படுத்தப்பட்டு அப்புரப்படுத்தப்பட்டிருக்கும் என்று முடிவுக்குவந்துவிட்டனர். ஆனால் அனுமன் இருந்ததோ குளத்தினுள்.

பல நூற்றாண்டுகளுக்கு முன்பு,. குளத்தை தூர் வார முற்பட்டபோது, இந்த விக்ரகம் வெளியே வர… ஊர் மக்களுக்கு எல்லையில்லா ஆனந்தம். இதை மண்டக்குளம் என்று அழைக்கிறார்கள். இதிலிருந்து நீர் எடுத்து தான் ராமர் சிவா பூஜை செய்தார் என்று கூறப்படுகிறது. கண்டெஉட்த்த அனுமன் சிலையை அருகிலிருந்த ஆல மரத்தடியில் வைத்து வழிபட்டார்கள். பிறகு சிறிய மண்டபம் அமைத்தார்கள். நூறு ஆண்டுகாலம் மண்டபத்தில் இருந்த அனுமனுக்கு அழகிய ஆலயம் அமைத்து 2008 ஆம் ஆண்டு குடுமுழக்கு செய்தார்கள்.

போரூர் கண்டெடுத்த பெறற்கரிய பொக்கிஷம் என்ற தலைப்பில் திரு.ஏ.எம்.ராஜகோபாலன் இந்த கோவிலைப் பற்றி குமுதம் ஜோதிடத்தில் 2009 ஆம் ஆண்டு எழுதியுள்ளார்.

அண்டியோர் துயரை அந்தக் கணமே தீர்த்துவைத்ததால் அனுமனின் புகழ் பரவ தொடங்கியது. எவரைக் கொண்டு எதனைப் பூர்த்தி செய்வது என்று அவனுக்கு தெரியாதா?

தங்களுக்கு நல்வாழ்வளைத்டு தங்களையும் தங்கள் குடும்பத்தையும் உயர்த்திவைத்து அழகு பார்க்கும் அனுமனை இப்படி குளக்கரையில் மரத்தடியில் வைத்து பூஜை செய்வது… ஊர் மக்களுக்கு வருத்தத்தை தந்தது.

ஆதாலால் அனுமனின் திருவுள்ளப்படி அனைவரும் ஒன்று சேர்ந்து ஸ்ரீ மாறுது பக்த சமாஜம் என்ற சத்சங்கத்தினை அமைத்து அனுமனுக்கு அழகான திருக்கோவில் அமைத்தனர்.

இந்த சிவவீர ஆஞ்சநேய சுவாமிக்கு மற்றொரு சிறப்பும் உண்டு. ஆஞ்சநேயரைத் தவிர மேலும் பல விக்ரகங்கள் இங்கு உண்டு.

செல்வ விநாயகரை வணங்கி ஆலயத்தை வலம்  வரும் நமக்கு உற்சவ மூர்த்திகளான சீதா, லக்ஷ்மண சமேத இராமரும், அருகில் அனுமனும், காட்சி தந்து பரவசப்படுத்துகிரார்கள். பக்தர்கள் தங்கள் கரங்களாலேயே வெண்ணெய் சாற்றி வழிபடுவதற்கு ஸ்ரீ திவ்ய நாம சங்கீர்த்தன அனுமாரை நிர்மாணித்துள்ளனர். அருகிலேயே புக் ஸ்டாலும் உண்டு. வேண்டும் புத்தகங்களை வாங்கிக்கொள்ளலாம்.

கோவில் அமைந்துள்ள இடம் சிறியது தான் என்றாலும், சுற்றுப் புற பிரகாரத்தில் லக்ஷ்மி ஹயக்க்ரீவர், தன்வந்திரி பகவான், பள்ளி கொண்ட சிவன், பைரவர் ஆகியோர் தனித் தனியாக அருள் புரிகிறார்கள். மேலும் நிருத்ய விநாயகர், தம்பதி சமேத தக்ஷிணாமூர்த்தி, பள்ளி கொண்ட ரங்கநாதர், காயத்ரி தேவி, அஷ்ட பூஜை துர்க்கை, முருகன் ஆகியோரும் இங்கே உண்டு.

இத்தலத்தில்  மட்டைத் தேங்காய் பிரார்த்தனை மிகவும் பிரசித்தம். நமது கோரிக்கையை வேண்டுகோளாக்கி மட்டைத் தேங்காயை வாங்கி வந்து கோவிலில் கொடுத்தால் சுவாமியிடம் வைத்து அதற்க்கு நம்பர் போட்டு தருவார்கள்  அதை கோவிலிலேயே வைத்துவிடவேண்டும். வேண்டுதல் நிறைவேறியவுடன் மட்டையை உரித்து தேங்காயை உடைத்து சுவாமிக்கு நைவேத்தியம் செய்கிறார்கள். நியாயமான வேண்டுதல்கள் ஒரு மண்டலத்திற்குள் நிறைவேரிவிடுவதாக ஆலயத்தில் சொல்கிறார்கள்.

பிரகாரங்களில் உள்ள சன்னதிகளில் குங்குமம் மற்றும் விபூதியை பிரசாதமாக தருகிறார்கள். பிரதான சன்னதியில், அவர்களே சிந்தூரம் இட்டு விடுகிறார்கள். கோவில் வளாகம் மிகவும் தூய்மையாக வைக்கப்பட்டுள்ளது. பக்தர்களை அன்புடன் வரவேற்று தரிசனம் செய்விக்கிறார்கள். அனைவருக்கும் தொன்னையில் பிரசாதம் தருகிறார்கள். காலை மாலை என இரு வேலைகளும் இங்கு பிரசாதம் உண்டு. சனிக்கிழமைகளில்  விளக்கேற்றுவதர்க்கு அகல், திரி தரப்படுகிறது.

பரிகார சக்தி

திருமணத் தடை, புத்திர பாக்கியமின்மை, கடன் தொல்லை, செய்வினை தோஷங்கள், குடும்பத்தில் ஒற்றுமையின்மை, உத்தியோகப் பிரச்னை ஆகியவற்றை தன்னின் தரிசிப்பவர்களுக்கு இந்த  சிவவீர ஆஞ்சநேயர் தீர்த்துவைக்கிறார்.

திறந்திருக்கும் நேரம் : காலை 7.30 முதல் 10.30 வரை. மாலை 5.30 முதலோ 8.30 வரை.

முகவரி : ஸ்ரீ சிவ வீர ஆஞ்சநேயர் திருக்கோவில், ஆஞ்சநேயர் கோவில் தெரு, மாருதி நகர், போரூர், சென்னை 600 116. தொலைபேசி : 98842 40679, 92834 40557

போரூர் காவல் நிலையம் அருகே மவுண்ட் பூந்தமலை சாலையில் கோபாலகிருஷ்ணா தியேட்டர் ஸ்டாப்பில் இறங்கவேண்டும்.
(or) வடபழனி – போரூர் ஸ்டாப்பில் போரூர் ஜன்க்ஷனுக்கு முன்பாக காரம்பாக்கத்தில் இறங்கவேண்டும். அங்கிருந்து 5 நிமிட நடை தூரத்தில் கோவிலை அடைந்துவிடலாம்.

[END]

4 thoughts on “குளத்தில் கண்டெடுக்கப்பட்ட வரப் பிரசாதி போரூர் ஸ்ரீ சிவவீர ஆஞ்சநேயர்

  1. மிக அருமையான கோவில்.

    அதே போல் இந்த ஆஞ்சநேயர் இடுப்பில் கத்தியோடு உள்ளார். போர் நடைபெற்ற காலத்தில் ராமரோடு இருந்ததால் கத்தியோடு இருந்ததாக கூறுகிறார்கள். அடுத்து நான் பார்த்த ஆஞ்சநேயர்களில் பாதி வழுக்கை தலையாக, குடுமியோடு இருப்பவர் இவர் தான்.

    சிறந்த தரிசனம். காலை மாலை இருவேளையும் பிரசாதம் கண்டிப்பாக உண்டு,இவரை பார்த்த நேரம் நான் நேற்று ஒரு நண்பருக்கு உதவியாக மேற்கு மாம்பலத்தில் உள்ள ஸ்ரீ சத்யநாராயணா கோவிலுக்கு சென்றேன் அங்கே அர்ச்சகருக்கு நண்பர் பழக்கம். அதனால் எதிர்பாராமல் திடீர் அர்ச்சனை அதோடு அவர் நாளை (11.01.2013) வாருங்கள் வடைமாலையோடு சஞ்சீவி அஞ்சிநேயர் காட்சி தருவார் என்று கூறினார் ,காலை சென்று அவரை வணங்கி வந்தேன் ,காலையிலே சுட சுட சர்க்கரைப் பொங்கல் கொடுத்து வழியனுப்பி வைத்தார்

    அனுமனின் அன்பே அன்பு.

  2. சுந்தர்ஜி ,
    நல்ல தகவல் .ஜெய் ராம் ஸ்ரீ ராம் .

    மனோகரன் .

  3. நான் சென்னையில் இருந்தபோது (2006 – 2007ல்) முகலிவாக்கத்தில் தான் தங்கி இருந்தேன். எவ்வளவோ விடுமுறை நாட்களை அந்த கோபாலகிருஷ்ணா திரையரங்கத்தில் நண்பர்களுடன் படம் பார்த்துள்ளேன். அப்போதெல்லாம் இப்படி ஒரு கோவில் இருப்பது பற்றி தெரியாது. எல்லாவற்றுக்கும் ஒரு நேரம் வர வேண்டும். அடுத்த முறை சென்னை வரும்போது இந்த கோவிலுக்கு செல்வேன். இந்த அனுமன் ஜெயந்தி நாளில் இப்படி ஒரு முக்கிய கோவில் பற்றி விரிவான தகவல் அளித்தமைக்கு நன்றி.

  4. இது ஒரு பார்க்க வேண்டிய ஹனுமான் கோயில் நன்றி சுந்தர் சார் ஒரு தகவல் … மற்றும் ஒரு ஹனுமான்கோயில் ஐயப்பன்தாங்கல் பேருந்து நிலையம் எதிரில் உள்ளது.. எனது ஆஸ்தான கோயில் … துபாய் ல் எனக்கு அக்கோயிலின் சுவாமி ஜி மேடம் அறிமுகபடுத்திய சக்தி வாய்ந்த தெய்வம் நன்றி

Leave a Reply to manoharan Cancel reply

Your email address will not be published. Required fields are marked *