Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Thursday, March 28, 2024
Please specify the group
Home > Featured > பல்வேறு தானங்களும் அவற்றின் பலன்களும் – A COMPLETE GUIDE

பல்வேறு தானங்களும் அவற்றின் பலன்களும் – A COMPLETE GUIDE

print
மது கர்மாவை உடைப்பதில் தானங்களுக்கு தனியிடம் உண்டு. இந்த தானத்தை செய்தால் இந்த பலன், அந்த தானத்தை செய்தால் அந்த பலன் என்று ஏன் சொல்லியிருக்கிறார்கள் என்றால் எல்லாராலும் எல்லா தானத்தையும் செய்ய இயலாது. அவரவர் சக்திக்கு ஏற்ப தான் தானங்களை செய்ய இயலும். மேலும் வகைப்படுத்தி பலன்களை சொல்லும்போது, தானத்தின் மீது ஒரு ஆர்வமும் பிடிப்பும் தன்னாலே வரும்.

பல்வேறு பாபங்களை தெரிந்தோ தெரியாமலோ செய்யும் மனிதன், ஒரு கட்டத்தில் திருந்தும் போது, அவன் முன்னர் செய்த பாபங்களை அவற்றின் தன்மைக்கேற்ப மன்னித்து அருள் செய்ய அவன்  ஊழ்வினையை மாற்ற தானங்கள் உதவுகின்றன. ஆரம்பத்தில் பலன் கருதி செய்யும் தானம், நாளடைவில் பலன் கருதாமல் செய்யக்கூடிய உன்னத நிலைக்கு சென்றுவிடும்.

"

ஒருவர் கஷ்டத்தில் இருக்கிறார் என்று தெரிந்தால் அவர் என்ன ஜாதி, என்ன மதம், நல்லவரா – கெட்டவரா என்றெல்லாம் ஆராய்ச்சி பண்ணிக் கொண்டிருக்காமல், யாராயிருந்தாலும், எப்படிப் பட்டவராயிருந்தாலும் நம்மாலான உதவியை செய்து அவர்கள் கஷ்டம் தீர்க்க முயற்சிக்க வேண்டும் என்று சாஸ்திரம் சொல்கிறது.

இதை உணர்த்தும் விதமாக போஜராஜன் தொடர்புடைய கதை ஒன்று உண்டு.

காலணி தானமும் யானை சவாரியும்!

போஜராஜன் பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள். கலையார்வமும் ரசனையும் மிக்க அவன் தன் தலைநகரான தாரா நகரை கலைகளின் சிகரமாகவே வைத்திருந்தான். கவிஞர்கள், தத்துவ மேதைகள் அவன் ஆட்சியில் பெரு மதிப்பு பெற்று சிறந்து விளங்கினர். ஒரு நாள் அவன் அவையிலிருந்த அரசவைப் புலவர்களில் ஒருவர் அரண்மனை நோக்கி நடந்து சென்று கொண்டிருந்தார்.

Elephant Rideசூரியன் சுட்டெரிக்கும் பகல் அது. தான் செல்லும் வழியில் ஒரு பாரமிழுக்கும் வயதான தொழிலாளி செருப்பு அணியாத காலுடன் நெல் மூட்டைகள் அடங்கிய வண்டியை இழுத்து செல்வதை பார்த்தார். அதை கண்டு மனம் பொறுக்காத புலவர், தனது காலனியை கழற்றி அந்த தொழிலாளிக்கு கொடுத்தார்.

“ஐயா… எனக்கு காலணியை கொடுத்துவிட்டு நீங்கள் எவ்வாறு நடந்து போவீர்கள்? வெயில் உங்களை மட்டும் வருத்தாதா  என்ன? எனக்கு காலணி வேண்டாம். உங்கள் இரக்க குணத்துக்கு நன்றி!” என்றார் அந்த முதியவர்.

“ஐயா பெரியவரே நான் சும்மா தான் நடந்து செல்கிறேன். என்னால் இந்த வெயிலை தாங்கிக்கொள்ள முடியும். ஆனால் இந்த முதுமையிலும் பாரமிழுக்கும் உங்களால் முடியுமா? எனவே ஏற்றுக்கொள்ளுங்கள்” என்று கூறி காலணியை அவரிடம் கொடுத்துவிட்டு பதிலை கூட எதிர்பார்க்காமல் உடனே அங்கிருந்து அகன்று சென்றுவிட்டார்.

அப்போது பட்டத்து யானையுடன் வந்த அரண்மனை பாகன், ஆஸ்தான புலவர் ஒருவர் செருப்பின்றி வெறுங்காலுடன் நடந்து வருவதை பார்த்து அவரை யானை மீது ஏற்றிக்கொண்டு அரண்மனை நோக்கி சவாரியை தொடர்ந்தான்.

அது சமயம் எதிரே ரதத்தில் வந்த போஜராஜன், “என்ன புலவரே… உங்களுக்கு எப்படி யானை சவாரி கிடைத்தது?” என்றான் ஆச்சரியத்துடன்.

“எல்லாம் தானத்தின் மகிமை தான் மன்னா” என்றார் புலவர் பதிலுக்கு.

“அப்படி என்ன தானம் செய்தீர்கள்?”

“என் பழைய காலணியை வெயிலில் நடக்க சிரம்மப்பட்ட ஒரு முதியவருக்கு தானமளித்தேன். அதன் பலனாக எனக்கு பட்டத்து யானை மேல் அமர்ந்து சவாரி செய்யும் பாக்கியம் கிடைத்தது மன்னா!” என்றார்.

போஜனும் தானத்தின் பலனை உணர்ந்து ஆச்சரியப்பட்டான்.

32 வகையான அறங்கள்

சாஸ்திரம் மொத்தம் 32 வகையான அறங்களை சொல்லியிருக்கிறது. இவை அனைத்தையும் அம்பாளே காஞ்சிபுரத்தில் தான் செய்து காட்டி அனைவருக்கும் முன்மாதிரியாக திகழ்ந்ததாக கூறுவார்கள். அன்னைக்கு ‘தர்மசம்வர்த்தினி’ என்று பெயர் உண்டு. தூய தமிழில் : அறம் வளர்த்த நாயகி.

இந்த 32 வகை அறங்களில் மக்கள் அனைவரும் அவரவர் பொருளாதார நிலைக்கு ஏற்ப செய்யக்கூடிய அறங்கள் அனைத்தும் விளக்கப்பட்டுள்ளது. பொருள் அதிகம் தேவைப்படும் அறம் முதல் அதிகம் செலவில்லாத குடிக்க நீர் கொடுக்கும் தண்ணீர் தானம் வரை பல அறங்கள் இதில் சொல்லப்பட்டுள்ளன. ஒவ்வொரு தானத்திற்கு ஒரு சிறப்பு உண்டு. ஒரு பலன் உண்டு.

Annadhanam

பல்வேறு தானங்களும் அவற்றின் பலன்களும்

அன்னதானம்

அன்னதானம் செய்தால் பூர்வ  ஜென்ம  கர்மவினைகள் தீரும் . பித்ருக்களின்  ஆசிர்வாதம்  கிடைக்கும்.

பல்வேறு தானங்களில் தனிச் சிறப்பு மிக்கது அன்னதானம். தானங்களில் மிக உயர்ந்த சிறப்பான ஒரு இடம் அன்னதானத்திற்கு உண்டு. காரணம், ஒரு மனிதன் உணவை மட்டுமே போதும் என்று சொல்வான். “உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே” என்று புறனாநூற்றுப் பாடலும் கூறுவது இதைத் தான்.

ஆற்றுவார் ஆற்றல் பசிஆற்றல் அப்பசியை
மாற்றுவார் ஆற்றலின் பின். (குறள் 225)

என்கிறார் திருவள்ளுவர்.

அதாவது பசியை பொறுத்துக்கொண்டு தவமியற்றுபவர்களின் ஆற்றலைவிட அப்பசியை தணிப்பவர்களின் ஆற்றல் மிகப்பெரிது என்கிறார் வள்ளுவர். எத்தனை சத்தியமான வார்த்தைகள் இவை. அன்னதான அருந்தொண்டை இதைவிட யாராவது சிறப்பித்து கூறமுடியுமா?

வடலூர் சத்திய தருமச் சாலையில் அன்னதானம் நடைபெறுகிறது...
வடலூர் சத்திய தருமச் சாலையில் அன்னதானம் நடைபெறுகிறது…

திருமூலர் தன் பங்கிற்கு

ஆர்க்கும் இடுமின் அவரிவர் என்னன்மின்
பார்த்திருந் துண்மின் பழம்பொருள் போற்றன்மின்
வேட்கை யுடையீர் விரைந்தொல்லை உண்ணன்மின்
காக்கை கரைந்துண்ணும் காலம் அறிமினே.

என்கிறார். அதாவது, “அறம் செய்தலில் விருப்பம் உடையவர்களே, அறம் வேண்டுமாயின், இரப்பாரை அவரது தகுதி வேறுபாடுகளை ஆராயாது யாவர்க்கும் இடுங்கள். உண்ணும் காலத்தில் விரையச் சென்று உண்ணாது, விருந்தினர் வருகையை எதிர் நோக்கியிருந்து பின்பு உண்ணுங்கள். காக்கைகள் தமக்குக் கிடைத்த உணவை உண்ணும்பொழுது, தம் இனத்தையும் அழைத்துக்கொண்டு உண்ணுதலைக் காணுங்கள்; கண்டீராயின், முன்னோர் தேடிவைத்தனவும், நீவிரே முன்னே தேடிவைத்தனவும் ஆகிய பொருளைப் பொன்காக்கும் பூதம்போல வறிதே காத்திராது சுற்றத்தார் பலர்க்கும் உதவுங்கள்” என்கிறார்.

அன்னதானம் எங்கும் எப்போதும் செய்யலாம். அதற்கு நம் சமூகத்தில் எண்ணற்ற வாய்ப்புக்கள் கொட்டிக்கிடகின்றன. தற்போது ஆடி மாதம், உங்கள் வீட்டு அருகில் உள்ள அம்மன் கோவில்களில் கூழ் வார்க்க அரிசி வாங்கிக்கொடுக்கலாம்.

"

ஆடை தானம்

மானத்தை மறைக்க உதவும் ஆடைதானம்  செய்தால் தகாத உறவுக்  குற்றங்கள் நீங்கும். பெண்களின்  கற்பிற்கு  ரட்சையாக  இருக்கும்.

Ekambareswarar kalyanam 3

ராமகிருஷ்ண மிஷன் இல்லங்கள் மற்றும் தேர்நெதெடுக்கப்பட்ட சில முதியோர் இல்லங்கள் மற்றும் ஆதரவற்றோர் இல்லங்களில் இதை செய்யலாம். அரசுப் பள்ளிகளில் படிக்கும் ஏழை பிள்ளைகளை கணக்கெடுத்து அவர்களுக்கு சீருடை வாங்கித் தரலாம்.

தெய்வத் திருக்கல்யாணங்கள் நடைபெறும்போதும் ஆடை தானம் (வஸ்திர தானம்) முக்கிய பங்கு வகிக்கிறது.

"

காலணி   தானம்

காலணி   தானம்  செய்தால்  பெரியோர்களை  நிந்தித்த பாவம் விலகும். தீர்த்த யாத்திரை  செய்த பலன் கிடைக்கும்.

நம்மை சுற்றி நாம் தினசரிக் காணக்கூடிய பலருக்கு இந்த உதவியை செய்யலாம். காய்கறி விற்கும் பெண், கூலியாட்கள். கட்டிட வேலை செய்பவர்கள், வயது முதிர்ந்த யாசகம் பெறுபவர்கள் இவர்களெல்லாம் காலில் செருப்பு இல்லாமல் இருப்பதை கண்டால் அவர்களுக்கு காலணிகள் வாங்கித் தரலாம். கிராமப்புற அரசு பள்ளி மாணவர்களுக்கும் இதை வாங்கி தரலாம்.

மாங்கல்ய சரடு  தானம்

மாங்கல்ய சரடு  தானம் செய்தால் காமக் குற்றங்கள் அகலும். தீர்க்க மாங்கல்ய பாக்யம்  உண்டாகும்.

Thamboola set

ஆடி மாதம் என்பதால் அம்மன் கோவில்களில் பெண்கள் கூட்டம் அலைமோதுகிறது. மாங்கல்ய சரடு + வளையல் + கண்ணாடி } மஞ்சள் + குங்குமம் அடங்கிய கிப்ட் பேக் கடைகளில் கிடைக்கிறது. நல்ல தரமானதாக, அவரவர் சக்திக்கேற்ப 54 அல்லது 108 வாங்கி அம்மன் கோவில்களில் கொடுத்து வெள்ளிக்கிழமை அம்மனை தரிசிக்க வரும் பெண்களுக்கு கொடுக்கலாம். அல்லது அர்ச்சகரிடம் கொடுத்து கொடுக்கச் சொல்லலாம்.

பொன் மாங்கல்யம் தானம்

பொன் மாங்கல்யம் தானம்  செய்தால்  மாங்கல்ய தோஷங்கள்  நீங்கும். திருமண  தடங்கல்கள்  நீங்கும்.

ஏழை எளியோரின் திருமணத்திற்கு பொன் மாங்கல்யம் தானம் செய்யலாம். இதற்கு பயனாளிகளை தேடி அலையவேண்டியதில்லை. நமது உற்றார் உறவினர்களிலேயே சற்று சல்லடை போட்டு தேடினால் யாரேனும் பயனாளிகள் கிடைக்கக்கூடும்.

குடை தானம்

குடை தானம்  செய்தால்  தவறான  வழியில் சேர்த்த செல்வத்தினால்  ஏற்பட்ட பாவம் விலகும் . குழந்தைகளுக்கு  சிறப்பான  எதிர்காலம்  உண்டாகும்.

Umbrella Danam

குடை தானம் என்பது நேரடியாகவும் செய்யலாம். சற்று மாறுபட்டும் செய்யலாம்.

இந்த காலங்களில் நமக்கு பலவிதங்களில் சேவையாற்ற வருபவர்கள் உண்டு. உதாரணத்துக்கு தபால்காரர், கூரியர் பாய், பால்காரர், சிலிண்டர் கொண்டு வந்து போடும் ஊழியர்…. இவர்கள் எல்லாம் வெயில் மழை பாராமல் பணியாற்றுபவர்கள். இவர்களுக்கு நல்ல ரெயின் கோட் ஒரு செட் வாங்கித் தரலாம்.

நீங்கள் நன்றாக கவனித்தீர்கள் என்றால் புரியும், மழைக்காலங்களில் இவர்கள் மழையில் நனைந்தபடி தான் சேவை செய்வார்கள். இவர்களுக்கு ரெயின் கோட் வாங்கி கொடுத்து பாருங்கள். இவர்களின் சேவையின் தரமே உயர்ந்துவிடும். உங்களுக்கு மட்டுமல்ல… சமூகத்துக்கே அது பயனளிக்கும்.

"

பாய்  தானம்

பாய்  தானம் செய்வதால்  பெற்றவர்களை  பெரியவர்களை புறக்கணித்ததால்  வந்த சாபங்கள்  தீரும். கடும் நோய்களுக்கு  நிவாரணம்  கிட்டும் . அமைதியான  மரணம்  ஏற்படும் .

கோரைப் புற்களால் வேய்ந்த பாயை வாங்கித் தருவது விசேஷம். முதியோர் இல்லங்கள், ஆதரவற்றோர் இல்லங்கள் ஆகியவற்றில் இதை செய்யலாம்.

பாய் தேவையில்லையெனில் நல்ல பெட்ஷீட் அல்லது போர்வை நிச்சயம் தேவையிருக்கும். இந்த தேவையுடையோர் சமூகத்தில் கீழ்மட்டத்தில் பலர் உண்டு. தேவை சற்று விசாலமான கருணையான பார்வை மட்டுமே.

பசு  தானம்

பசு  தானம்  செய்தால் இல்லத்தின்  தோஷங்கள்  விலகும். பலவித  பூஜைகளின்  பலன்கள்  கிடைக்கும்.

இந்த காலத்தில் பசு தானம் செய்வது எளிதல்ல. அதை வாங்குபவர்கள் சரியாக பராமரிக்காமல் போகும் அபாயம் உண்டு. ஏற்கனே பல கோவில்களில் கோ-சாலைகளில் பசுக்களை வைத்து பராமரிக்க முடியாமல் அவதிப்படுகிறார்கள்.

சமீபத்தில் பூவிருந்தவல்லி வரதராஜப் பெருமாள் கோவிலில் நடைபெற்ற கோ சமரட்சணத்தின்போது..
சமீபத்தில் பூவிருந்தவல்லி வரதராஜப் பெருமாள் கோவிலில் நடைபெற்ற கோ சமரட்சணத்தின்போது..

அறுப்புக்கு போகும் பசுக்களை காப்பாற்றி கொண்டு வந்து ரட்சிக்கும் கோ-சாலைகளுக்கு தீவனம், வைக்கோல் முதலியவற்றை வாங்கித் தரலாம். நிச்சயம் அது கோ தானத்தின் பலனை கொடுக்கும்.

சாஸ்திர ரீதியாக உங்களுக்கு கோ தானம் செய்யவேண்டும் என்று யாராவது பரிகாரம் சொன்னால் கூட, அதற்கு பதில் பசுக்களுக்கு தீவனம் வாங்கித் தர முயற்சி செய்யுங்கள். பசுக்களை தானமளிப்பதோடு உங்கள் வேலை முடிந்து போய்விடுவீர்கள். ஆனால் சென்னை போன்ற நகரங்களில் அதை பராமரிப்பது கஷ்டம். எனவே கோ தானத்திற்கு பதில், கோ சம்ரட்சணம் செய்யுங்கள்.

* சென்னை ஸ்ரீபெரும்புதூர் அருகே சுங்குவார்சத்திரத்தில் ஒரு மிகப் பெரிய கோ-சாலை உள்ளது. அங்கு விரைவில் இதன் பொருட்டு  செல்லவிருக்கிறோம்.

பழங்கள் தானம்

பழங்கள் தானம்  செய்தால்  பல ஜீவன்களை  வதைத்த சாபம் தீரும். ஆயுள் விருத்தியாகும்.

Ekambareswarar kalyanam 2

பழங்களை யாருக்கு எங்கு வேண்டுமானாலும் தானம் செய்யலாம். ஏதேனும் ஒரு அரசு மருத்துவமனைக்கு சென்று, நோயாளிகளை சந்தித்து, அவர்களுக்கு ஆப்பிள், மாதுளை போன்ற விலை அதிகமுள்ள அவர்களால் வாங்க இயலாத பழங்களை வாங்கிக் கொடுக்கலாம்.

காய்கறிகள்  தானம்

காய்கறிகள்  தானம்  செய்தால்  பித்ரு சாபங்கள் விலகும். குழந்தைகளின்  ஆரோக்யம்  வளரும்.

கோவில்களில் தெய்வத் திருமணங்கள் நடைபெறும் போது அன்னம் பாலிப்புக்கு காய்கறிகளை வாங்கித் தந்துவிடலாம். இதெல்லாம் பணமாக இல்லாமல் நீங்கள் பொருளாகவே வாங்கித் தரலாம்.

அரிசி  தானம்

அரிசி  தானம் செய்தால்  பிறருக்கு  ஒன்றுமே தராமல் தனித்து  வாழ்ந்த  சாபம்  தீரும்.  வறுமை  தீரும்.

Vadalur Sathiya Dharumach Salai 2

வேத பாடசாலைகள், முதியோர் இல்லங்கள், ஆதரவற்றோர் இல்லங்கள் ஆகியவற்றுக்கு அரிசி வாங்கித் தரலாம். தற்போது ஆடி மாதம் கூழ் வார்த்தளுக்கு அரிசி வாங்கித் தரலாம்.

எண்ணெய் தானம்

எண்ணெய் தானம் செய்தால்  நாம்  அறிந்தும்  அறியாமலும் செய்த கர்ம வினைகள்  அகலும். கடன்கள் குறையும்.

ஆலயங்களுக்கு விளக்கெரிக்க எண்ணெய், மற்றும் தர்ம சாலைகளுக்கு சமையலுக்கு எண்ணை இப்படி வாங்கித் தரலாம்.

Murugan thirukkalyanam

பூ தானம்

பூ தானம்  செய்தால்  அந்தஸ்து  காரணமாக பிறரை  அவமதித்ததால்  ஏற்படும் தீவினைகள்  நீங்கும். குடும்ப வாழ்க்கை  சுகமாகவும் , சாந்தமாகவும்  அமையும்.

கோவில்களுக்கு பூக்களை 30 முழம் 40 முழம் வாங்கித் தந்து வரும் பெண்களுக்கு கொடுக்கச் சொல்லலாம். குறைந்தது அரை முழமாவது கொடுக்கச் சொல்லுங்கள். (நீங்களே அரை அரை முழமாக கத்திரித்து கத்தரித்து கொடுத்துவிடலாம்.).

ஒரு நிமிடம் யோசித்துப் பாருங்கள்… ஏதோ ஒரு ஆலயத்துக்கு செல்கிறீர்கள்… அரை முழம் மல்லிகை பூவை உங்களிடம் சூடிக்கொள்ள கொடுத்தால் உங்களுக்கு எத்தனை சந்தோஷமாக இருக்கும்?

மேலே கூறியவற்றிலிருந்து என்ன தெரிகிறது?

மனமிருந்தால் மார்க்கமுண்டு!

ஆம்! தானம் செய்யவேண்டும் என்கிற மனம் இருந்தால் போதும். அவற்றிற்கான சரியான வழிமுறைகள் பயனாளிகள் கண்களுக்கு புலப்படுவர். இவற்றை செய்யும்போது ஒரு சில கசப்பான அனுபவங்கள் உங்களுக்கு கிடைக்கலாம். சில இடங்களில் ஏமாற்றப்பட்டதாக கூட உணரலாம். ஆனால், அது உங்கள் சேவையை மேலும் செம்மைப்படுத்திக்கொள்ளவே என்று கருதி செயலாற்ற வேண்டும். சுணங்கி விடக்கூடாது.

Vadalur Sathiya Dharumach Salai

* அரிசி, பருப்பு, எண்ணை முதலான உணவு வகை மளிகை பொருட்களை தானம் செய்ய தமிழகத்திலேயே சரியான இடம் வடலூர் சத்திய தருமச் சாலை தான். நாம் சென்ற ஆண்டு நமது வாசகர்களுடன் வடலூர் சென்று சத்திய தருமச் சாலையை பார்வையிட்டு அங்கு உணவருந்திய தருணம் மறக்க முடியாத ஒன்று.  அந்த அருந்தொண்டை அங்கு நடப்பதை, சமைப்பதை, காய்கறிகளை நறுக்குவதை எல்லாம் நேரடியாக பார்த்தோம். அது பற்றி புகைப்படங்களுடன் விரைவில் பதிவிடுகிறோம். இங்கு குறைந்தது ஒரு நாளைக்கு 10,000 ஏழைகள் மூன்று வேளையும் பசியாறுகின்றனர்.

ஒரு கைப்பிடி அரிசி முதல் மூட்டை மூட்டையாக அங்கு தானம் செய்ய வாய்ப்பு உங்களுக்கு கிடைக்கும்.

அரிசி போடுவதற்கென்றே உண்டியல் உள்ள ஒரே இடம் இதுவாகத் தான் இருக்கும். (மேலே புகைப்படத்தை பார்க்கவும்.)

Rightmantra Team
வடலூர் சத்திய தருமச் சாலையில் நம் ரைட்மந்த்ரா வாசகர் குழுவினரின் ஒரு பகுதி…

* சத்திய தருமச் சாலை தவிர, சித்தி வளாகம் என்கிற இடத்தில் தீஞ்சுவை நீரோடை அருகே ஒரு அன்னசாலை உள்ளது. இங்கும் குறைந்தது 2000 பேருக்கு மேல் மதியம்பசியாறுகின்றனர்.

நீங்கள் வாழ்க்கையில் அவசியம் செல்ல வேண்டிய இடங்களில் ஒன்று வடலூர். ஆம்… கட்டாயம்! உங்கள் பிள்ளைகளுடன்!!

================================================================

இந்த பதிவில் நீங்கள் பார்க்கும் தாம்பூலம் மற்றும் சீர் புகைப்படங்கள் மயிலை திருவள்ளுவர் திருக்கோவிலில் நடைபெற்ற பல்வேறு தெய்வத் திருமணங்களில் எடுக்கப்பட்டவை. இது போன்ற தெய்வத் திருமணங்களில் அனைத்து தேவைகளும் இருக்கும்.

================================================================

உங்களை நம்பி உங்களுக்காக ஒரு தளம்!

Rightmantra.com is a website that focuses on Spirituality, Self-development and True values without any commercial interest. We are running full-time. Give us your hand. Help us to serve you better. Join our ‘Voluntary Subscription’ scheme or Donate us liberally. Ask your near and dear ones to help us in our mission. We are striving to make this world a better place to live. Little Drops of Water Make the Mighty Ocean. If you don’t who else will?

Our A/c Details:

Name : Rightmantra Soul Solutions
A/c No. : 9120 2005 8482 135
Account type : Current Account
Bank : Axis Bank, Poonamallee Branch, Chennai – 600 056.
IFSC Code : UTIB0001182

இந்த மாத விருப்ப சந்தா செலுத்திவிட்டீர்களா?? ரைட்மந்த்ரா தொய்வின்றி தொடர உதவிடுங்கள்!

================================================================

நல்வாழ்வுக்கு ஒரு டிப்ஸ் – 2

வைத்தியம் செய்யக்கூடாத நாட்கள்

ஜோதிட சாஸ்திரத்தில் வைத்தியத்துக்கு ஆகாத நாட்கள் என்று சில உள்ளன. இந்த நாட்களை தவிர்த்து வைத்தியம் செய்துகொண்டால் சிகிச்சை மேற்கொள்ளும் நபர் நோய் நீங்கி நலமோடு வாழலாம். சிகிச்சையும் பலனளிக்கும்.

ஞாயிறன்று வரக்கூடிய பரணி நட்சத்திரம், திங்கள் மற்றும் செவ்வாயில் வரக்கூடிய சித்திரை நட்சத்திரம், புதன் மற்றும் வியாழனில் வரும் கேட்டை நட்சத்திரம், வெள்ளி மற்றும் சனிக்கிழமை அன்று வரக்கூடிய ரேவதி நட்சத்திரம் ஆகியவை வைத்தியத்துக்கு ஆகாது. அன்று பெரிய அறுவை சிகிச்சைகள் செய்யக்கூடாது.

டிப்ஸ் தொடரும்…

================================================================

Also check similar articles….

இளநீர் வியாபாரி செய்த தானம்!

எது உண்மையான தர்மம்?

புண்ணியத்திலும் பெரிய புண்ணியம் !

மனித குலம் அவசியம் செய்ய வேண்டிய அறங்கள்!

மனமிருந்தால் மார்க்கமுண்டு!

“எனக்கு வசதியில்லே. வசதியிருந்தா நான் நிறைய தர்ம காரியங்கள் செய்வேன்” என்று சொல்பவரா நீங்கள்?- MUST READ

ஆற்றுவார் ஆற்றல் பசி ஆற்றல்….

இறைவனுக்கு மிக அருகில் நம்மை கொண்டு செல்வது எது ?

அவிசொரிந் தாயிரம் வேட்டலின்…

“எல்லாம் அவ பாத்துப்பா!”

================================================================

[END]

5 thoughts on “பல்வேறு தானங்களும் அவற்றின் பலன்களும் – A COMPLETE GUIDE

  1. அடேங்கப்பா! தானம் செய்வதில் இத்தனை விஷயங்கள் அடங்கி உள்ளதா? என்ன செய்வது, இன்றைய வேகமான உலகில் இதையெல்லாம் பற்றி பேசவே ஆளில்லை. அப்புறம்தானே செய்வது.

    ஆனால் நம் சுந்தரின் புண்ணியத்தில் தானத்தின் பலன்களை தெரிந்துகொண்டதில் மிக்க மகிழ்ச்சி. நம் முன்னோர்கள் தானத்திற்கு ஏன் அதிக முக்கியத்துவம் கொடுத்தார்கள் என்று இப்போது புரிகிறது. நம் தளத்திற்கும் நமக்கும் பெருமை சேர்க்கும் மற்றுமோர் உன்னதமான பதிவிற்கு நன்றி சுந்தர்.

  2. வணக்கம்………. தானங்களும் அவற்றின் பலன்களும் அருமையோ அருமை…….. மனமிருந்தால் மார்க்கமுண்டு என்பதைப் புரிந்து கொண்டோம்…….. நன்றிகள் பல………..

  3. செருப்பு தானம் செய்ததால் பட்டத்து யானையில் செல்லும் யோகம் கிடைத்தது. பல்வேறு வகையான தானங்களைப் பட்டியியலிட்டு படத்துடன் விளக்கிய விதம் அருமை. இந்த பதிவை படிக்கும் அனைவருக்கும் தானம் செய்ய வேண்டும் என்ற அவா கண்டிப்பாக இருக்கும்.

    அழகிய பதிவிற்கு நன்றி.

    நல வாழ்விற்கு ஒரு டிப்ஸ் அனைவருக்கும் பயனுள்ள தகவல்கள். தாங்கள் தலைப்பை இன்று ஒரு தகவல் என்று போட்டால் நன்றாக இருக்கும்

    அட்வான்ஸ் சுதந்திர தின வாழ்த்துக்கள்.

    நான் நாளை காலை பெங்களூர் செல்கிறேன் . திங்கள் காலை தான் நம் தளத்தின் பதிவுகளை பார்ப்பேன் . பெங்களூர் இல் வேல்மாரல் எந்திரம் பிரதிஷ்டை செய்த அல்சூர் முருகன் கோவிலுக்கு செல்வேன் .

    வாழ்க .. வளமுடன்

    நன்றி
    உமா வெங்கட்

  4. வணக்கம் சுந்தர். மிக மிக அருமையான,அரிதான .நிறைய விஷயங்களை உள்ளடக்கிய பதிவுக்கு நன்றி.எதிர்பாராத பதிவுகளை கொடுப்பது தான் உங்கள் ஸ்டைல். இதில் சிலதயாவது செய்யும் பாகியத்தை அன்னை எனக்கு அருளவேண்டும் என பிராத்திக்கிறேன்.நன்றி

Leave a Reply to Baba Ram Cancel reply

Your email address will not be published. Required fields are marked *