Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Tuesday, March 19, 2024
Please specify the group
Home > Featured > பக்திக்கும் பாசத்திற்கும் வளைந்த பூர்ணா நதி – காலடி நோக்கி ஒரு பயணம் (1)

பக்திக்கும் பாசத்திற்கும் வளைந்த பூர்ணா நதி – காலடி நோக்கி ஒரு பயணம் (1)

print
கி.பி. 7 ம் நூற்றாண்டு வாக்கில் இந்தியாவில் கிட்டத்தட்ட 72 வெவ்வேறு மதங்கள் இருந்தன. அனைவரும் தங்கள் மதம் தான் உசத்தி என்று கூறிக்கொண்டு தங்களுக்குள் சண்டையிட்டுக்கொண்டிருந்தனர். சைவத்தையும் வைணவத்தையும் காத்து இந்து தர்மத்திற்கு புத்துயிர் ஊட்ட ஒரு அவதாரம் தேவைப்பட்டது.

கேரள மாநிலம் எர்ணாகுளம் அருகே உள்ள காலடியில் மிகுந்த ஆச்சாரமும் பக்தியும் கொண்ட சிவகுரு, ஆர்யாம்பாள் என்ற தம்பதியினர் வசித்து வந்தனர். அவர்கள் தங்களது புத்திர பாக்கியத்திற்காக திருச்சூர் வடக்குநாதரை வேண்டி ஸ்வாமிக்கு ப்ரார்த்தனை செய்துகொண்டு பஜனம் இருக்கலானார்கள்.

திருச்சூர் வடக்குநாதன்
திருச்சூர் வடக்குநாதன் திருக்கோவில்

பஜனம் என்றால் ஸேவை செய்வது. குறிப்பிட்ட ஒரு உத்தேசத்தை வேண்டி ஒரு புண்ய க்ஷேத்ரத்திற்குப் போய் ஒரு மண்டலம், இரண்டு மண்டலம் அங்கே இருந்து கொண்டு ஜபம் – பாராயணம் செய்வது, ப்ரம்மசர்யம் முதலிய நியமங்களோடு தினமும் புண்ய தீர்த்தத்தில் ஸ்நானம் செய்து ஸ்வாமி தர்சனம் பண்ணுவது, அநுமதிக்கப்பட்ட ஆலயங்களில் ஸந்நிதியிலேயே நித்திரை பண்ணுவது என்று அர்த்தம். உத்தேசப் பூர்த்தி பற்றி ஸ்வப்னத்திலே ஸ்வாமியின் ஆஜ்ஞை கிடைக்கும். நம்பிக்கையிருந்தால் ஸங்கேதமாகவாவது கிடைக்கும். இவர்கள் வ்ருஷாசலத்தில் புத்ரனை உத்தேசித்து பஜனமிருந்தார்கள். பக்தி ச்ரத்தையுடன் வேண்டியபடி இருந்தார்கள்.

(இன்றும் இது மந்த்ராலயத்தில் மிகவும் பிரசித்தம்!!)

ஒருநாள் சிவகுருவின் கனவில் தோன்றிய ஈஸ்வரன், “குறைந்த ஆயுளுடன் எல்லா நற்குணங்களும் ஞானமும் கொண்ட புத்திசாலிப் பிள்ளை வேண்டுமா அல்லது நீண்ட ஆயுளை உடைய சாதாரண மகன் வேண்டுமா?” என்று கேட்டார். அதற்கு சிவகுரு, புத்திசாலி குழந்தைதான் வேண்டும் என்றார். சிவகுருவின் கனவைக் கேட்ட ஆர்யாம்பாள் மனமகிழ்ந்து ஒரு ஞானக்குழந்தை தன் மகனாகப் பிறப்பான் என்று எண்ணி ஆனந்தம் அடைந்தாள்.

பஜனத்தை சுபமாக முடிக்க ஸமாராதனை பண்ணுவது வழக்கம். இவர்களும் அப்படிப் பண்ணினார்கள். பிராம்மண சேஷத்தை ஆர்யாம்பாள் புசிக்கும்போது ஈச்வரமான தேஜஸ் அவளுடைய வயிற்றில் புகுந்தது. அது கர்ப்பமாக ஆகி ஆசார்யாளின் அவதாரம் ஏற்பட்டது.

சங்கரின் அவதார காலத்தை பற்றி மகா பெரியவ தெய்வத்தின் குரலில் கூறுவதாவது:

“பரம புண்யமான அந்த அவதார காலம் ஒரு நந்தன வருஷத்தில் வைசாக சுத்த பஞ்சமியில் அபிஜித் முஹ¨ர்த்தத்தில் ஏற்பட்டது. வைசாக சுத்த பஞ்சமி என்றால் வைகாசி மாஸத்து வளர்பிறைப் பஞ்சமி. அதாவது சித்திரை மாஸ அமாவாஸ்யை ஆனவுடன் வரும் பஞ்சமி. அபிஜித் முஹ¨ர்த்தம் என்பது ஸ¨ர்யன் நடு உச்சியிலிருக்கும் மத்யான வேளை. ஜயப்ரதமான (வெற்றி வழங்கவல்ல) முஹ¨ர்த்தம். அன்றைக்குத் திருவாதிரை நக்ஷத்ரம்-பரம சிவனை அதி தேவதையாகக் கொண்ட நக்ஷத்ரம். ராமசந்த்ர மூர்த்தியைப்போலவே ஐந்து க்ரஹங்கள் உச்சமாக இருக்கும் அபூர்வமான காலத்தில் ஆசார்யாள் அவதாரம் பண்ணினார். (ராமர் மாதிரியே ஆசார்யாளும் புனர்வஸு நக்ஷத்ரம் என்றும் அபிப்ராயமிருக்கிறது. வைசாக சுத்த பஞ்சமி திருவாதிரை அல்லது புனர்வஸு என்ற இரண்டிலொரு நக்ஷத்திரத்தில்தான் வருவதைப் பார்க்கிறோம்.). ஸ்ரீ சங்கர ஜயந்திப் புண்ய காலத்துக்கு ஸமமாக எதுவுமில்லை.”

சிவகுரு-ஆர்யாம்பாள் தம்பதிக்கு பிறந்த ஆதிசங்கரர் சாதாரண குழந்தை அல்ல. அந்த ஈஸ்வரனின் அம்சமாக தோன்றிய ஞானக்குழந்தை. சங்கரரின் வாழ்க்கை முழுதும் எண்ணற்ற அதிசயங்கள் புதைந்து கிடக்கின்றது என்றால் அவரது பால்ய காலம் அதைவிட அதிகமாக அதிசயங்களை தன்னகத்தே கொண்டுள்ளது.

அதில் ஒன்றிரண்டை தற்போது பார்க்கலாம்.

சங்கரனிடம் பால் பெற்றுக்கொண்ட காத்யாயனி தேவி
சங்கரனிடம் பால் பெற்றுக்கொண்ட காத்யாயனி தேவி

குழந்தை சங்கரன் தந்த பாலை அருந்திய காத்யாயனி தேவி!

சிவகுரு, காலடியில் இருந்து 2 கி.மீ. தூரத்தில் உள்ள மாணிக்கமங்களம் என்னும் ஊரில் உள்ள காத்யாயினி தேவி கோவிலில் அர்ச்சகராக இருந்தார். ஒரு நாள், உடல்நலம் குன்றிய காரணத்தால் தன்னால் கோவிலை திறந்து பூஜை செய்ய முடியாது என கருதி, தனது மகன் பால சங்கரனை அனுப்பினார். குழந்தை சங்கரன், நிவேத்தியத்துக்கு தந்தை ஒரு கிண்ணத்தில் கொடுத்தனுப்பிய பாலை, கொண்டு போய் காத்யாயினி தேவி முன்னர் நீட்ட, எதுவுமே நடக்காதது கண்டு அழுதான். உடனே உள்ளே ஒளிப்பிழம்புடேன் கூடிய கரங்கள் ஒன்று தோன்றி பாலை வாங்கி அருந்தி, வெறும் கிண்ணத்தை தந்தது.

நிவேதனம் செய்த பாலை வீட்டிற்கு கொஞ்சம் கூட எடுத்து போகமுடியாமல் அனைத்து பாலையும் காத்யாயினி தேவி அருந்திவிட்டதால், பாலை தந்தை கேட்டால் என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் சங்கரன் மீண்டும் அழ, தேவி இரக்கங்கொண்டு மீண்டும் கிண்ணத்தில் பாதி பாலை தந்தாள்.

அந்த சம்பந்தனுக்கு பாலை தந்து ஆட்கொண்டவள், இங்கு சங்கரனிடம் பாலை பெற்று ஆட்கொண்டாள். என்ன ஒரு அதிசய ஒற்றுமை!

அடுத்த சில வருடங்களில் சங்கரனின் தந்தை இறைவனடி சேர்ந்துவிட, செய்வதறியாது தவித்த ஆர்யாம்பாள் சங்கரனை கண்ணும் கருத்துமாக வளர்ப்பதில் கவனம் செலுத்தினால். சங்கரனுக்கு ஐந்து வயது இருக்கும்போது உறவினர்கள் துணையுடன் அவனுக்கு உபநயனம் நடைபெற்றது.

வளைந்த பூர்ணா நதி!

கணவர் சிவகுரு மறைந்த நிலையிலும், வடக்குநாதரிடம் ஆர்யாம்பாள் கொண்டிருந்த பக்தி மாறவேயில்லை. விரத மற்றும் நித்திய அனுஷ்டானங்களில் இருந்தும் அவர் பின்வாங்கவில்லை. தினமும் பூர்ணா நதிக்கு சென்று நீராடிவிட்டு வடக்குநாதருக்கு பூஜை செயதுவரலானாள். இருப்பினும் முதுமை ஒரு கட்டத்தில் பாடாய்படுத்தியது. தினமும் நதிதீரத்துக்கு நடந்து சென்று நீராடிவிட்டு வருவது ஆர்யாம்பாளுக்கு சிரமமாக இருந்தது. ஒரு நாள் அப்படி நீராட செல்லும்போது மயங்கி விழுந்துவிட்டாள்.

Kalady Secret 2

ஆற்றுக்கு குளிக்க சென்ற தாய் இன்னும் காணவில்லையே என பரித்தவித்து போன பாலன் சங்கரன் ஆர்யாம்பாளை தேடிச் சென்றான். பூர்ணா நதிக்கு செல்லும் பாதையில் தன் தாய் மயங்கி திருப்பதை பார்த்து, “அம்ம்மா….” என்று கத்திக்கொண்டே ஓடிச்சென்று அவளை வாரி மடியில் வைத்து கிடத்தி கதறினான். “அம்மா… கண் திறந்து பாரும்மா… என்னம்மா ஆச்சு உனக்கு?” என்று துடித்தான்.

Kalady Miracle 2

நடக்கமுடியாமல் தான் வழியில் மயங்கிவிழுந்துவிட்டதாக தெரிவித்த ஆர்யாம்பாள், முதுமையால் தன்னால் இனி தினமும் ஆற்றுக்கு சென்று நீராட்முடியுமா என்று தெரியவில்லையே சங்கரா என்று  வேதனையுடன் கூற, பூர்ணா நதி தேவியை சங்கரன் மனமுருக பிரார்த்தித்தான்.

“பூர்ணா தேவி… என் தாயின் உடல்நிலையை கருத்தில் கொண்டு, என் வீட்டுக்கு அருகிலேயே நீ பாயவேண்டும்!!” என்று வேண்டிக்கொண்டான்.

தாயை தேற்றி வீட்டுக்கு அழைத்து சென்றான்.

Kalady Miracle 4

சங்கரர் கோவிலிலிருந்து பூர்ணா ஆற்றின் ரம்மியமான தோற்றம்.. அதாவது சங்கரனின் வீட்டு கொல்லைப்புறம்
சங்கரர் கோவிலிலிருந்து பூர்ணா ஆற்றின் ரம்மியமான தோற்றம்.. அதாவது சங்கரனின் வீட்டு கொல்லைப்புறம்

மறுநாள் காலை கண்விழித்த போது என்ன அதிசயம்…. பூர்ணா நதி சங்கரன் வீட்டின் கொல்லைப்புறத்தின் வழியே பாய்ந்து சென்றுகொண்டிருந்தது. ஆம்… சங்கரனின் தாய்ப்பாசத்திற்கு இயற்கையே வளைந்து கொடுத்தது.

இன்றும் நீங்கள் காலடி சென்றால், நேராக சென்றுகொண்டிருக்கும் பூர்ணா நதி, திடீரென்று ஒரு குறிப்பிட்ட பகுதியில் வளைந்து செல்வதை பார்க்கலாம்.

கிருஷ்ணன் கோவில் அருகே உள்ள வேத பாட சாலை
கிருஷ்ணன் கோவில் அருகே உள்ள வேத பாட சாலை

காலடியில் எங்கு பார்த்தாலும் வேத பாடசாலைகளும், அத்வைத பள்ளிகளும் காணப்படுகின்றன. திரும்பிய பக்கமெல்லாம் ஏதேனும் ஒரு ஆலயம் தென்படுகிறது. காலடிக்கு சும்மா ஒரு நாள் போய்விட்டு வந்து அந்த புண்ணிய பூமியை பற்றி ஒரு தொடர் எழுதுவதெல்லாம் நடக்காத காரியம். சமுத்திரத்தின் ஒரு சில துளிகளே நம் கைகளில் உள்ளது. அதை உங்கள் மீது தெளிக்கிறோம். குருவருள் உண்டாகட்டும். சந்தர்ப்பம் அமைந்தால் மீண்டும் ஒரு முறை காலடிக்கு பயணம் செய்து மேலும் பல தகவல்களை திரட்ட ஆசைப்படுகிறோம். பார்க்கலாம்.

=====================================================================

* நாம் காலடி சென்ற நேரம் அங்கு சரியான மழை. அடித்து துவைத்து வெளுத்து வாங்கிக்கொண்டிருந்தது. புகைப்படங்களை எடுக்க மிகவும் சிரமமாக இருந்தது.

* காலடி புறப்பட்ட திங்களன்று மதியம் வரை காமிரா வாங்க தேவையான தொகை சேரவில்லை. கிட்டத்தட்ட மொத்த தொகையில் 65% மட்டுமே சேர்ந்திருந்தது. அப்படியே வாங்கினாலும் பாட்டரியை முதல்முறை எட்டு மணிநேரம் சார்ஜ் செய்யவேண்டும். சரி வந்து வாங்கிக்கொள்ளலாம் என புறப்பட்டுவிட்டோம். நண்பர் ராஜாவிடம் விஷயத்தைக் கூறி அவரின் ஒரே காமிராவை இரவல் பெற்றுச் சென்றோம். பொதுவாக எலக்ட்ரானிக் பொருட்கள் இரவல் வாங்கக்கூடாது. ஏதேனும் பழுது ஏற்பட்டால் நட்புக்கு சங்கடமாகிவிடும். ஆனாலும் அவர் நமது சூழ்நிலையை புரிந்துகொண்டு நமக்கு உதவினார். அவருக்கு நம் நன்றி.

* மேலும் சில வாசகர்கள் உதவிக்கரம் நீட்டியுள்ளதை தொடர்ந்து புதிய காமிரா இரண்டொரு நாளில் வாங்கப்பட்டுவிடும். ஒருவேளை மீதித் தொகை இருந்தால் எஞ்சியுள்ள தேவைகளான லேசர் பிரிண்டர் மற்றும் வாய்ஸ் ரெக்கார்டரை வாங்க அவற்றை கொஞ்சம் கொஞ்சமாக சேர்க்கலாம் என்று இருக்கிறோம். இவற்றை வாங்க பிரத்யேகமாக உதவுபவர்கள், மறக்காமல் அதை குறிப்பிடவும்.

=====================================================================

அடுத்து :

காலடி பயணத்திற்கான வித்து ஊன்றப்பட்டது எங்கே? எப்படி ?

சங்கரன் முதலையிடம் சிக்கிய முதலைக்கடவு – ஒரு நேரடி தொகுப்பு!

புண்ணியனை ஈன்றெடுத்த புனிதத் தாய் ஆர்யாம்பாளின் சமாதி தரிசனம்!

=====================================================================

Also Check :

ஜகத்குரு ஆதிசங்கரர் வாழ்க்கை வரலாறு – ஒரு (வி)சித்திர அனுபவம்!

அறியாமை இருளை அகற்றிய ஞான சூரியன் ஜகத் குரு ஆதிசங்கரர் ஜெயந்தி சிறப்பு பதிவு!

காலத்தால் அழியா ‘ஜனனி ஜனனி’ பாடலுக்கு ஆதிசங்கரர் தந்த ஆசி! சிலிர்க்க வைக்கும் உண்மை!!

=====================================================================

[END]

6 thoughts on “பக்திக்கும் பாசத்திற்கும் வளைந்த பூர்ணா நதி – காலடி நோக்கி ஒரு பயணம் (1)

  1. சுந்தர் அண்ணா.

    தங்களின் காலடி பயணம் பற்றிய கட்டுரை – முதல் தொகுப்பு. மிகவும் முத்தான தொகுப்பு என்றே சொல்ல வேண்டும் அண்ணா..

    ஆதி சங்கர் என்று பெயர் அளவில் மட்டும் தெரிந்த மகானை பற்றியும்,அவர் தம் வரலாறு பற்றி தெரிந்து கொண்டேன்.

    சங்கரரின் பக்திக்கும்,பாசத்திற்கும் எடுத்துகாட்டாய் அமைந்த சம்பவம் – அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய ஒன்று.புண்ணிய பூர்ணா நதியை தங்களின் படம் மூலம் பார்த்தது மிகவும் அருமை அண்ணா.

    புண்ணிய பூமியாம் காலடி செல்ல மனம் ஏங்குகிறது அண்ணா.

    குருவருளும்,இறை அருளும் துணை புரிய வேண்டுகிறேன்.

    குருவே சரணம்

  2. அருமையான தொடரை ஆரம்பித்தற்கு நன்றி. ஆதி சங்கரர் முதல் எண்ணற்ற மகான்களின் (காலடி)கள் பட்ட இடத்திற்கு நம் கால்கள் எப்போது செல்லும் என்ற எண்ணம் இப்போதே வந்து விட்டது.

    ஸ்ரீ ஆதி சங்கர பகவத்பாதாளின் அத்வைத சிந்தாந்தின்படி ஜகத் முழுவதையும் பிரம்மமாகப் பார்த்தால், தானும் மற்றவரும் வேறு வேறு என்ற எண்ணம் உண்டாகாது; அந்த அனுபவம் வாய்க்கப் பெற்றால் இந்த உலகத்தில் வீணான பிரச்சனைகள் எதுவும் இருக்காது. மாயத்தைத் தாண்டி ஆனந்த ஞானத்தை அடைய இரு சங்கரர்களாக, இரு சமயத்தில் வந்த ஒரே பிரம்மமாகிய மகா பெரியவாளைப் பிரார்த்திப்போம்.

    நன்றி,
    கே.எஸ். வெங்கட்
    முகலிவாக்கம்.

  3. சுந்தர் சார்
    மகான் பற்றிய பதிவு படிக்கும்போது மெய் சிலிர்க்கின்றது . உங்களின் இந்த பதிவை படிக்கும்போதே நமக்கும் இந்த புண்ணிய பூமியை தரிசிக்க வேண்டும் என எண்ணம் தோன்றுகின்றது .அருமையான பதிவு
    நன்றி
    பிரியதர்சினி

  4. என்னைப் போன்ற இன்றைய தலைமுறையினருக்கு மிகவும் அதிகமாக பரிச்சியம் இல்லாத , அல்லது குறைவாகவே அறியப்பட்ட மகான்கள், தெய்வங்கள், அவர்களது வரலாறு, புகைப்படங்கள் என்று நாளும் எங்களுக்கு அறிமுகப்படுத்தும் உங்கள் பணி பிரமிக்க வைக்கிறது. தொடரட்டும் உங்கள் பயணம்.

    நீங்கள் எடுக்கும் புகைப்படங்கள் மிகவும் அருமையாக உள்ளது. புகைப்படங்களுக்காகவே பதிவுகளை மீண்டும் மீண்டும் படிக்கத் தோன்றுகிறது. குறிப்பாக முந்தைய பதிவு.

    “கடமையைச் செய்; பலனை எதிர்பார்”

    விஜய் ஆனந்த்

  5. மிகவும் அருமையான பதிவு.
    மகான்களின் கட்டுரை படிக்க படிக்க மீண்டும் படிக்க தோன்றும்.
    சுந்தர காண்டம் எந்தனை முறை படித்தாலும் மீண்டும் மீண்டும் படிக்க தூண்டுமோ அதே மாதிரி மகான்களின் வரலாறு பலமுறை படிக்கும்
    தோன்றும்
    நன்றி

  6. சமுத்திரத்தின் ஒரு துளி பதிவே எங்களுக்கு மா மருந்தாக உள்ளது. முழு பதிவையும் தாங்கள் எழுதினால் ….?

    ஒவ்வொரு படங்களும் மிளிர்கிறது

    நன்றி
    உமா வெங்கட்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *