Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Friday, March 29, 2024
Please specify the group
Home > Featured > அட்சய திரிதியை – புனித நன்னாளில் என்ன செய்ய வேண்டும்? A COMPLETE GUIDE!

அட்சய திரிதியை – புனித நன்னாளில் என்ன செய்ய வேண்டும்? A COMPLETE GUIDE!

print
அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன்
பெற்றான் பொருள்வைப் புழி (குறள் 226)

‘அக்ஷய’ என்றால் வளர்வது, குறைவில்லாதது என பொருள். உன்னதமான வாழ்வின் வளர்ச்சிக்கு தக்க வழிகாட்டுவது இந்த அட்சய திரிதியை திருநாள். அட்சய திரிதியைக்கு என்ன சிறப்பு அந்நாளில் என்னென்ன நடைபெற்றது என்பது இறுதியில் தரப்பட்டுள்ளது. அதே சமயம் நம் வாசகர்கள் இந்த நாளை பற்றி சரியான புரிதலை கொள்ளவேண்டும் என்று கருதி ஏற்கனவே ஒரு முறை அளித்த இந்த பதிவில் பல புதிய விஷயங்களை சேர்த்து முற்றிலும் மெருகேற்றி தருகிறோம்.

அட்சய திரிதியை என்றாலே பெரும்பாலானோர் அன்று கடனோ உடனோ வாங்கி நகைகளை வாங்கி குவிப்பதற்கு தான் என்று நினைக்கிறார்கள். அல்ல… பணத்திற்கும் மேலான புண்ணியத்தை குவிப்பதற்கான நாள் அது.

அன்று எதை செய்தாலும் அது பன்மடங்கு விருத்தியடையும் என்பதால் நல்ல செயல்களை புண்ணியங்களை அன்று அதிகம் செய்யவேண்டும். செல்வத்தை தேடிக்கொள்வது போல புண்ணியத்தையும் இந்த நாளில் தேடிக்கொள்ளுங்கள். நீங்கள் மனம் உவந்து ஏழைகளுக்கு செய்யும் தான, தர்மம், பல மடங்காக வளர்ந்து, அதன் புண்ணியத்தை உங்களுக்கு கொடுக்கும்.

சுருக்கமாக சொல்ல வேண்டுமானால் அட்சய திரிதியை தினத்தன்று நீங்கள் 10 % தர்மம் செய்தாலே, அது பல்கி பெருகி உங்களுக்கு 100 % புண்ணியத்தைத் தேடித் தரும். இத்தகைய சிறப்பான தினத்தன்று, செல்வத்துக்கு அதிபதியான லட்சுமி பூஜையை ஒவ்வொருவரும் செய்ய வேண்டும்.

கரூர் பசுபதீஸ்வரர் ஆலய கோ-சாலை
கரூர் பசுபதீஸ்வரர் ஆலய கோ-சாலை

இதனால் செல்வம் பெருகும். லட்சுமி கடாட்சம் உண்டாகும். மகாலட்சுமி படம் முன்பு நெய் தீபம் ஏற்றி லட்சுமி துதியை மனம் உருக சொல்ல வேண்டும். நிச்சயம் அலைமகள் உங்கள் வீட்டில் எழுந்தருளுவாள்.

பசுக்களுக்கு கீரைகள் பழங்கள் முதலியவற்றை வாங்கி தருவது மிகவும் நன்று.

அட்சய திருதியை அன்றைக்கு முனை முறியாத பச்சரிசி வாங்குவது நல்லது. (கைக்குத்தல் அரிசி தான் முனை முறியாத அரிசி) அந்த முனை முறியாத அரிசியை புடைத்து எடுத்து, பணப் பெட்டியில், பீரோவில் கொஞ்சம் வைப்பது நல்லது. அதற்கடுத்து மஞ்சள். இதில் தான் மகிமையும் உள்ளது. மஞ்சள் தான் எல்லா வகையிலும் நல்லது தரக்கூடியது. மஞ்சள் பொடியாகவும் வாங்கலாம்.

மஞ்சள் கிழங்காகவும் வாங்கலாம். இதில் கஸ்தூரி மஞ்சள் என்று ஒன்று இருக்கிறது. அதற்கு தனி சக்தி உண்டு. அடுத்தது, அட்சய திருதியை விரதம் இருப்பது பற்றி பலருக்கு பலவிதமான சந்தேகம் உள்ளது. அட்சய திருதியை தினத்தன்று விரதம் இருக்க விருப்பம் உள்ளவர்கள் இருக்கலாம். ஆனால் கண்டிப்பாக தானம் செய்ய வேண்டும் என்று சொல்லப்பட்டுள்ளது.

Maha Lakshmi

வீட்டில் செல்வ வளம் கொழிக்க வேண்டும் என்பதற்காக லட்சுமியின் அம்சமான பொன்பொருள், ஆபரணங்கள், மஞ்சள், குங்குமம் மற்றும் வீட்டுத் தேவைக்கான அனைத்து பொருட்களையும் வாங்க நல்ல நாளாகக் கருதப்படுகிறது. நீங்கள் உங்கள் வசதிக்கும் தேவைக்கும் பொருட்களை வாங்கு அதே நேரம் வறியோர்க்கும் ஏதாவது வாங்கி கொடுங்கள்.

அன்னதானம் செய்யுங்கள். வஸ்திர தானம் துணி தானம் கொடுங்கள். அதாவது அடுத்தவர்கள் பயன்படுத்தக்கூடிய பொருட்களை கொடுக்க வேண்டும்.

பணம் கொடுப்பதை தவிர்த்து அவர்களுடைய தேவை என்னவோ அதை பூர்த்தி செய்யக்கூடிய பொருட்களை வாங்கிக் கொடுக்க வேண்டும். இவை தவிர, அட்சய திரிதியை அன்றைக்கு திதி கொடுக்க வேண்டும். முன்னோர்களை நினைத்து மந்திரங்கள் சொல்லி திதி கொடுக்க வேண்டும்.

அப்படி திதி கொடுக்கும் போது வாழைக்காய், பச்சரிசி, துணி, பணம் கொடுத்து தானே திதி கொடுக்கிறோம். அதுவும் ஒரு வகையான தானம் தான். எல்லாவற்றையும் தாண்டி மனதார, வாயார, வயிறார யாராவது வாழ்த்தினால் தான் அட்சய திருதியை அன்று நமக்கு நல்லது நடக்கும். அதற்கு தானம் செய்யுங்கள்.

அட்சய திரிதியை அன்று என்ன செய்ய வேண்டும்?

அன்றைய தினம் அதிகாலையிலேயே எழுந்து நீராடிவிட்டு, பூஜை அறையில் கோலமிடுங்கள். அதன்மேல் ஒரு மனைப் பலகையைப் போட்டு மேலே வாழையிலை ஒன்றினை இடுங்கள். இலையின் நடுவே கொஞ்சம் பச்சரியைப் பரப்பி அதன்மேல் ஒரு செம்பில் நீர் நிரப்பி மாவிலை, மஞ்சள் தடவிய தேங்காய் வைத்து கலசமாக்குங்கள். கலசத்தின் அருகே ஒரு படி, ஆழாக்கு அல்லது ஒரு டம்ளரில் நெல் நிறைத்து வையுங்கள். கலசத்திற்குப் பொட்டு, பூ வையுங்கள். லட்சுமி நாராயணர் படம் இருந்தால் அதனையும் வைத்து அலங்கரியுங்கள். பின்னர் குத்துவிளக்கினை ஏற்றி வையுங்கள். மஞ்சள் பிள்ளையார் பிடித்து வாழையிலையில் வலப்பக்கமாக வையுங்கள். நீங்கள் புதிதாக வாங்கிய பொருளை கலசத்தின் முன்பாக வையுங்கள். விலை உயர்ந்த பொருளாகத்தான் இருக்க வேண்டும் என்பதில்லை. அட்சய திருதியை நாளில் எல்லோராலும் வாங்க முடிந்த பொருளான உப்பை வாங்கி வைத்தாலே போதும். அஷ்டலட்சுமி கடாட்சம் உங்கள் வீடு தேடிவந்துவிடும். முதலில் விநாயகரை வேண்டிக் கொள்ளுங்கள். பின்னர் கலசத்தில் மகாலட்சுமியை எழுந்தருளும்படி பிரார்த்தியுங்கள். உங்களுக்குத் தெரிந்த விஷ்ணுலட்சுமி, சிவன்பார்வதி, குபேரன், துதிகளைச் சொல்லுங்கள். அல்லது கேளுங்கள். குசேலரின் கதையைப் படிப்பது, கேட்பது, சொல்வதும் சிறந்தது. பின்னர் அவரவர் வழக்கப்படி தூப தீப ஆராதனைகள் செய்யுங்கள். இந்த பூஜையில் பாயசம் அல்லது சர்க்கரை கலந்த பால் நிவேதிப்பது சிறப்பானது. அன்றைய தினம் மாலையில் சிவாலயம், பெருமாள் கோயில் என்று உங்களால் இயன்ற தலத்திற்குச் சென்று தரிசியுங்கள். அதன் பின்னர் மீண்டும் தூப தீப ஆராதனையை கலசத்துக்குச் செய்துவிட்டு, கலசத்தினை வடக்குப் பக்கமாக நகர்த்தி வையுங்கள். உண்ணாவிரதம் இருப்பது, எளிய திரவ ஆகாரம் மட்டும் உண்பது எல்லாம் அவரவர் வசதி, உடல்நலத்தைப் பொறுத்தது. கலசத்தினை நகர்த்துவது விரதத்தினை நிறைவு செய்துவிட்டதாக அர்த்தம். பயன்படுத்திய அரிசி, கலசத் தேங்காய், மற்ற பொருட்களை வீட்டு உபயோகத்திற்கு பயன்படுத்திக் கொள்ளலாம்.

அட்சயதிரிதியை நாளில் தானம் செய்வது சிறந்தது. ஏழைகளுக்கு அன்னதானம் அளித்தால் செல்வவளம் பெருகும். பழவகைகளை அளித்தால் உயர்பதவி கிடைக்கும். வெயில் வெம்மை தீர குடை, விசிறி, காலணி வழங்கினால் இன்பவாழ்வு உண்டாகும்.ஆடை தானம் செய்ய ஆரோக்கியம் கூடும். தாகம் தணிக்க தண்ணீர், மோர் வழங்கினால் கல்வி வளர்ச்சி பெருகும். தயிர் தானம் அளித்தால் பாவவிமோசனம் உண்டாகும். தானியங்களை வழங்கிட விபத்து, அகாலமரணம் நேராது. அன்று, பசுவிற்கு உணவளித்தால் சகலபாவமும் நீங்கி நல்வாழ்வு உண்டாகும். அட்சய திரிதியையன்று வீட்டின் நான்கு மூலைகளிலும் சோழிகளைப் போட்டு வைப்பது மரபு. இது செல்வத்தைக் கொண்டு வரும் அம்சமாகும். இது சத்ருசாந்தி பூஜைக்கு ஏற்ற தினமாகும். இதனால் எதிரிகளின் தொல்லை ஒழியும்.

கோ-பூஜையில் பங்கேற்கும் கரூர் பசுபதீஸ்வரர் ஆலய பசுவும் கன்றும்!
கோ-பூஜையில் பங்கேற்கும் கரூர் பசுபதீஸ்வரர் ஆலய பசுவும் கன்றும்!

அட்சய திரிதியை அன்று ஆல இலையில் மிருத்யுஞ்ஜய மந்திரத்தை ஜெபித்து கடையில் வைத்தால் வியாபாரம் பெருகும். எதிரிகள் தொல்லை நீங்கும். அட்சய திரிதியை தினத்தன்று மிருத்யுஞ்ஜய மந்திரத்தை எழுதி குழந்தைகளின் தலையணை அடியில் வைத்தால் கண் திருஷ்டி கழியும்.அன்றைய தினம் மிருத சஞ்ஜீவினி மந்திரம் ஜெபித்தால் நோய்களின் வீரியம் குறையும். அட்சய திரிதியை தினத்தன்று சிவனே அன்னபூணியிடம் உணவு பெற்றதால், நமசிவாய மந்திரத்தை அன்று முதல் சொல்லத் தொடங்கலாம். பிறகு நாள்தோறும் 108 முறை சொல்லிவந்தால் பார்வதி பரமேஸ்வரரின் பூரண அருள் கிட்டும்.

Turmeric2அட்சய திருதியை அன்று தானம், தர்மம் செய்வதால் மிகவும் புண்ணியம் கிட்டும், மேலும் அன்று பொன், பொருள், நிலம் வாங்க மிகவும் உகந்த நாளாகும்.

அட்சய திருதியை அன்று காலையில் துவரம் பருப்பு, மொச்சை, அரிசி ஆகிய தானியங்கள், சிவப்பு புடவை, வெள்ளை வேஷ்டி ஆகிய துணிகள் ஆகியவற்றை ஆதரவற்றோர், ஏழை விவசாயிகள், நடைபாதை வாசிகளுக்கு தானம் செய்வது மிகவும் பலன் தரும்.

அட்சய திரிதியை நாளில் வீட்டுக்குத் தேவையான பொருட்களை வாங்குவது சிறப்பு. குழந்தைகளைப் பள்ளியில் சேர்க்கவும், புதிதாக தொழில் தொடங்கவும், புது முயற்சிகளில் ஈடுபடவும், கட்டடப்பணி துவங்கவும் இந்நாள் உகந்ததாகும். தங்க ஆபரணங்களை அட்சய திரிதியை நாளில் விருப்பத்துடன் வாங்குவர். மஞ்சள், உப்பு, பலசரக்கு சாமான்கள்,வழிபாட்டுக்குரிய பூஜை சாமான்கள், புத்தாடை, புத்தகம், டி.வி., வாஷிங்மிஷின், ஏ.சி., போன்ற மின் சாதனங்கள், டூவீலர், கார் போன்ற வாகனங்கள், கட்டுமான பொருட்கள், இப்படி எதையும் வாங்கலாம்.

Akshaya 3

அட்சய திருதியை நாளில், பூஜையறையில் குலதெய்வ இஷ்ட தெய்வங்களை வணங்கி வழிபடும் போது, பூஜையில் தொழில் ஆவணங்கள், பணம் இவற்றையெல்லாம் வைத்து அவர்களுக்குரிய மந்திரங்களையும் உச்சரித்து, வலம்புரிச் சங்கில் தீர்த்தம், பால் போன்றவை வைத்து சாமிக்கு நிவேதனம் செய்ய வேண்டும். இத்துடன் அருகம்புல், வில்வம், துளசி, மரிக்கொழுந்து, மல்லிகை, செந்தாமரை மலர்களாலும் வீட்டிலும் வியாபார ஸ்தலங்களிலும் வழிபட்டால், தொழில் முன்னேற்றமும் குடும்ப விருத்தியும் ஏற்படும்.

உடல் ஊனமுற்றவர்கள் மற்றும் குண்டாக இருப்பவர்களுக்கு அட்சய திருதியை பூஜை சிறப்பு. ஸ்ரீ சனீஸ்வரர் மானுட ரூபத்தில் விளங்குளத்தில் அட்சய திருதியை அன்று பிட்சை ஏற்று. அன்னதானம் அளித்துத் தனக்கு ஏற்பட்ட ஊனக் குற்றங்களைப் போக்கிக் கொண்டார். எனவே, உடல் ஊனமுற்றவர்கள், மிகவும் குண்டாக இருப்பவர்கள் திருதியைத் திதி நாட்களில், ஸ்ரீ சனீஸ்வரருக்கு நவதானியங்களும் ஏனைய பருப்பு வகைகளும் பதித்த சந்தன அட்சயக் காப்பும் சார்த்தி முழு முந்திரி பாதாம் பருப்புகளால் சகஸ்ரநாம அர்ச்சனை செய்து வழிபட்டு வந்தால் உடல் வகைத் துன்பங்கள் தணியும். வழிபாட்டிற்குப் பிறகு தான்யங்களையும் முந்திரிகளையும் தானமாக ஏழைகளுக்கு அளிக்க வேண்டும்.

வணங்க வேண்டிய தெய்வங்கள்

அஸ்வினி, மகம், மூலம் : விநாயகர்

பரணி, பூரம், பூராடம் : ரங்கநாதர்

ரோகிணி, அஸ்தம், திருவோணம் : சிவன்

மிருகசீரிஷம், சித்திரை, அவிட்டம் : துர்க்கை

திருவாதிரை, சுவாதி, சதயம் : பைரவர்

புனர்பூசம், விசாகம், பூராட்டாதி : ராகவேந்திரர்

பூசம், அனுஷம், உத்திரட்டாதி : சிவன்

ஆயில்யம், கேட்டை, ரேவதி : பெருமாள்

உத்திரம், உத்திராடம், கார்த்திகை : முருகன்

அட்சய திரிதியை நாளின் சிறப்புக்கள்

* வனவாசத்தின் போது பாண்டவர்களாகிய தங்களுக்கும் தம் குடில் நாடி வருவோருக்கும் உணவளிக்க, அட்சய த்ரிதியை நாளில் தான் சூரியனிடமிருந்து பெற்ற அட்சய பாத்திரத்தை திரௌபதிக்கு அளித்தார் தருமர்.

* பராசக்தி எடுத்த பல வடிவங்களுள் காய், கறி, பழங்கள், மூலிகைகளோடு சாகம்பரீ தேவியாக ஆவிர்ப்பவித்த பொன்நாள் அட்சய த்ரிதியை.

* நான்முகன் கிருதயுகத்தில் படைப்புத் தொழிலைத் தொடங்கிய நாளாக அட்சய த்ரிதியை கருதப்படுகிறது.

* நவநிதிகளுக்கும் அதிபதியான குபேரன் ஈசனை வேண்டி வரம் பெற்று அந்நிதிகளுக்கெல்லாம் அதிபதியானது அட்சய த்ரிதியை நாளிலேதான்.

* கௌரவர் சபையிலே திரௌபதியின் மானம் காக்க சேலையை ‘அட்சய…’ என கிருஷ்ணன் வளர்த்து லீலை புரிந்ததும் இந்நாளிலேயே.

* அஷ்டலட்சுமிகளுள் தான்ய லட்சுமியும் தனலட்சுமியும் தோன்றிய திருநாள் இது.

* சனீஸ்வர பகவான் திருமணம் செய்துகொள்ள ஈசன் அருள்புரிந்த நாள் அட்சய த்ரிதியை.

* அட்சய த்ரிதியை அன்று கும்பகோணத்தில் நடைபெறும் 16 கருடசேவை தரிசனம் புகழ் பெற்றது.

* திருவானைக்காவல் கிழக்கு கோபுரத்தில் அருளும் குபேரலிங்கம், அட்சய த்ரிதியை அன்று விசேஷமாக வழிபடப்படுகிறது.

* சென்னை-ரத்னமங்கலம் லக்ஷ்மி குபேரருக்கு அட்சய த்ரிதியை அன்று சிறப்பு அபிஷேக, அலங்காரங்கள் செய்யப்பட்டு வழிபாடுகள் நடைபெறுகின்றன.

* நாகை மாவட்டம், சீர்காழி பேருந்து நிலையத்திற்கருகே உள்ள கோதண்டராமர் ஆலயத்தில் அட்சய த்ரிதியை அன்று உதய கருடசேவையின் போது ஸ்ரீநிவாசரையும் ராமரையும் ஒன்றாக தரிசிக்கலாம்.

* தஞ்சாவூரில் உள்ள விளாங்குளத்தில் உள்ள அட்சயபுரீஸ்வரரையும் அபிவிருத்தி நாயகியையும் அட்சய த்ரிதியை அன்று வணங்க சகல வளங்களும் கிட்டும்.

* அட்சய த்ரிதியை அன்று கும்பகோணம்-பட்டீஸ்வரம் அருகே உள்ள முழையூர் பரசுநாதர் ஆலயத்தில் விசேஷ வழிபாடுகள் நடத்தப்படுகின்றன.

* அட்சய த்ரிதியை அன்று அன்னதானம் அளித்தால் ஆயுள் விருத்தியாகும் என்பது நம்பிக்கை.

* மஹாளய அமாவாசை போன்றே பித்ரு தர்ப்பணங்கள் செய்ய உகந்த நாளாக அட்சய த்ரிதியை கருதப்படுகிறது.

* ஏழைக் குசேலனை குபேரனாக கிருஷ்ண பரமாத்மா மாற்றியருளியது ஒரு அட்சய த்ரிதியை நாளன்றே.

* அட்சயம் எனும் பொருளுக்கு அள்ள அள்ளக் குறையாதது என்று பொருள். அதனால் இன்று செய்யும் நற்காரியங்கள் பொங்கிப் பெருகும் என்பது பொதுவான நம்பிக்கை.

* வட இந்தியாவில் இந்நாள் அகதீஜ் என்ற பெயரில் கொண்டாடப்படுகிறது.

* அட்சய த்ரிதியை தினத்தில் விரதமிருந்து தானம் செய்த மகிமையாலேயே தேவேந்திரன் மகாபலிச் சக்ரவர்த்தியை திருமாலின் துணை கொண்டு வென்றான்.

* இந்திராணி ஜெயந்தனைப் பெற்றதும், அருந்ததி வசிஷ்டருடன் சப்தரிஷி மண்டலத்தில் இடம்பெற்றதும், ரோகிணி சந்திரனை மணந்ததும் அட்சய த்ரிதியை அன்று தானம் செய்து விரதம் இருந்த மகிமையாலேயேதான்.

* ஈசன் கையில் ஒட்டிய பிரம்ம கபாலத்தை நிரப்ப திருமகள் அவருக்கு அன்னம் பாலித்த நாள் அட்சய த்ரிதியை. அன்னபூரணி தேவி ஈசனுக்கு படியளந்த பொன்நாளும் இதுவே.

ஆக்கத்தில் உதவி : தினமலர்.காம் & தினகரன்.காம்

=============================================================

அட்சய திரிதியை ஏற்பாடுகள்!

* இன்று மாலை காலடி (ஆதிசங்கரர் அவதரித்த புண்ணிய பூமி) புறப்படுகிறோம். பின்னர் அங்கிருந்து கனகதார ஸ்தோத்திரம் பிறந்த சொர்ணத்து மனைக்கு பயணம். அங்கிருந்து மதுரை. வியாழன் அல்லது வெள்ளி காலை தான் இறைவன் அருளால் சென்னை திரும்புகிறோம்.

ஓரிரண்டு பதிவுகளை தயார் செய்து வைத்திருக்கிறோம். கையில் லேப்டாப் கொண்டு செல்வதால் அவற்றை நாளையும் நாளை மறுநாளும் பதிவிடுகிறோம்.

* அட்சய திரிதியை முன்னிட்டு நம் தளம் சார்பாக பல அறப்பணிகளை ஏற்கனவே செய்துவிட்டோம். மேலும் சில பணிகளை நாளை ஏற்பாடு செய்துள்ளோம். இன்று மாலை 6.00 மணிக்கு காலடி புறப்படுவதால், கோ-சம்ரக்ஷணம் உள்ளிட்ட பல, நாளை நடைபெறுமாறு ஏற்பாடு செய்திருக்கிறோம். அம்பத்தூரை அடுத்துள்ள கள்ளிக்குப்பத்தில் உள்ள வேதபாட சாலை ஒன்றுக்கு விஜயம் செய்து, அங்குள்ள கோ-சாலைக்கு தீவனம் ஏற்பாடு செய்திருக்கிறோம். கிளிகளின் தந்தை சேகர் அவர்களை இன்று மதியம் அவர் வீட்டில் சந்திக்கவிருக்கிறோம். மேற்கு மாம்பலம் காசி விஸ்வநாதர் கோவில் கோசாலைக்கு நாளை நம் தளம் சார்பாக தீவனம் இரண்டு மூட்டைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதற்கு இன்று பணம் கட்டியாகிவிட்டது. (இது வழக்கமாக செய்வது தான். இந்த மாத கோட்டாவை நாளை ஏற்பாடு செய்திருக்கிறோம். அவ்வளவே.) இது தவிர நூம்பல் சிவாலயத்திற்கு இரண்டு நாட்கள் முன்பே தீவனம் ஏற்பாடு செய்தாயிற்று. அட்சய திரிதியை அன்று தான் அங்கு செய்ய நினைத்திருந்தோம். ஆனால் அதற்குள் அங்கு வைக்கோல் மற்றும் தீவனத்திற்கான தேவை வந்துவிட்டது. தேவைக்கு உதவுவது தான் தர்மம். (தேவைக்கு உதவாமல் புண்ணியம் கிடைக்கும் என்று காத்திருந்து நாள் பார்த்து செய்வதில் என்ன பயன்?) அதுவும் பசுக்களுக்கு எனும்போது தாமதம் செய்வது பாவமல்லவா?

* நாளை அட்சய திரிதியை அன்று இறைவன் அருளால் காலடியில் இருப்போம். என்ன மாதிரியான அறப்பணிகளை அங்கு செய்ய வாய்ப்பு கிடைக்கும் என்று தெரியவில்லை. அங்கு அன்னதானம் செய்ய வாய்ப்பு கிடைக்குமா என்று தெரியவில்லை. எதுவுமே முடியவில்லை என்றால், காத்திருந்து அங்கு நடக்கும் போஜனத்தில் பக்தர்கள் சாப்பிட்ட பின்பு அவர்கள் சாப்பிட்ட எச்சில் இலையை உங்கள் அனைவரின் சார்பாகவும் எடுக்க உறுதி மேற்கொண்டிருக்கிறோம். இது மிகச் சிறந்த புண்ணிய காரியம் மட்டுமல்ல பரிகாரமும் கூட. ‘சர்வம் கிருஷ்ணார்ப்பணம்’ என்று இதை உங்கள் சார்பாக செய்யப்போவதால் உங்களுக்குத் தான் அதன் பலன். நமக்கல்ல!

* Check : உன்னை தொழுவதொன்றே இங்கு யான் பெற்ற இன்பம்!

(காலடி பயணம் முடிந்து திரும்பிய பிறகு உடனடியாக காலடி பயணம் குறித்தும் அட்சய திரிதியை முன்னிட்டு நாம் செய்த பல்வேறு பணிகள் குறித்தும் பதிவுகள் உடனடியாக இடம்பெறும்.)

* நாம் சென்னை திரும்புவதற்கு எப்படியும் வியாழன் அல்லது வெள்ளியாகிவிடும் என்பதால் வரும் வாரம் பிரார்த்தனை பதிவை அளிக்க இயலாது. எனவே இந்த வாரத்தின் பிரார்த்தனையையே ரிப்பீட் செய்துவிடலாம். மேலும் வேலைவாய்ப்பு பரிகாரத் தலம் குறித்த பதிவு இன்னும் நிறைவு பெறவில்லை. அந்த பதிவை அளித்த பிறகு வேலைவாய்ப்பு சிறப்பு பிரார்த்தனை பதிவு அளிக்கப்படும். இதற்கிடையே வேலையில் பிரச்சனை, மற்றும் வேலை கிடைக்காதது, தேக்கநிலை உள்ளவர்கள் தங்கள் கோரிக்கைகளை மின்னஞ்சல் செய்யவும். அடுத்த வாரம் நிச்சயம் சிறப்பு பிரார்த்தனை பதிவு அளிக்கப்பட்டுவிடும்.

* MONDAY MORNING SPECIAL பதிவுகள் தொடர்ந்து நம் தளத்திலிருந்து திருடப்படுவதால், அவற்றை தற்காலிகமாக நிறுத்தியிருக்கிறோம். அவற்றை புத்தகங்களாக்க முயற்சி செய்துவருகிறோம். விரைவில் அம்முயற்சி இறைவனருளால் கைகூடும் என நம்புகிறோம். அதன் பிறகு புதிய MONDAY MORNING SPECIAL பதிவுகள் அளிக்கப்படும். சில பதிப்பகங்களிடம் அது தொடர்பாக பேசி வருகிறோம். பதிப்பகம் வைத்துள்ள நண்பர்கள் எவரேனும் அவற்றை புத்தகங்களாக வெளியிட (PUBLISH) விரும்பினால் நம்மை தொடர்புகொள்ளவும்.

* சிறிய காமிரா (Sony DSC-WX200/B – Price Rs.12,500/-​) ஒன்றின் உடனடி தேவை குறித்து சனிக்கிழமை பதிவிட்டிருந்தோம். அதை பார்த்துவிட்டு சில வாசகர்கள் உதவிக்கரம் நீட்டியிருக்கிறார்கள். இதுவரை 60% தொகை சேர்ந்துள்ளது. உதவிய வாசகர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி. மீதமுள்ள தொகை சேர்ந்த பிறகே வாங்க இயலும். மேலும் ஒரு சிலர் உதவிக்கரம் நீட்டுவார்கள் என்று நம்புகிறோம். இன்று மாலை  புறப்படுவதற்குள் அதை வாங்க முயற்சிக்கிறோம்.

‘ரைட்மந்த்ரா’ சுந்தர்,
ஆசிரியர், Rightmantra.com
E-mail : editor@rightmantra.com | Mobile : 9840169215

=============================================================

Also check :

பாதம் செல்லும் பாதை காட்டிடும் தலைவா எம் தலைவா…

அட்சய திரிதியை – வேண்டும் ஓர் சரியான புரிதல்!

புண்ணியத்திலும் பெரிய புண்ணியம் !

உங்கள் இல்லங்களில் ‘லக்ஷ்மி கடாக்ஷம்’ என்றும் தழைத்தோங்க சில எளிய வழிகள்!

பேரெழில் கொஞ்சும் பேரம்பாக்கம் ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மர் – நரசிம்ம ஜெயந்தி ஸ்பெஷல்!

‘நாளை’ என்பதில்லை நரசிம்மனிடத்தில்!

=============================================================

[END]

 

12 thoughts on “அட்சய திரிதியை – புனித நன்னாளில் என்ன செய்ய வேண்டும்? A COMPLETE GUIDE!

  1. வணக்கம் சுந்தர். அப்பாடி எவ்வளவு வேலைகளை முடித்துவிட்டு காலடி கிளம்புகிறீர்கள். நல்லபடியாக சென்று வாருங்கள் .பயணம் சிறப்பொடு அமைய வாழ்த்துகள். கனகதாரா மந்திரம் கோயிலில் அமர்ந்து சொல்லிவிட்டு வாருங்கள். எல்லோரும் நலமோடு இருக்க . நன்றி.

  2. வணக்கம், I have request about Monday morning special edition.
    Please try to give article about English (spoken) language. I believe this will help many people. நன்றி.

  3. சுந்தர் அவர்களே
    உங்கள் பணிகள் அனைத்தும் செவ்வனே நடைபெறவும் எங்கும் எப்போதும் அந்த பரம்பொருள் உங்களுக்கு துணை நின்று அருள்புரியவும் நமது வாசகர்கள் சார்பில் உளமார வாழ்த்தி வேண்டுகிறோம்
    வாழ்க வளமுடன் !!!

  4. படிச்சு முடிச்சவுடனே டயர்ட் ஆயிட்டேன்

    ஆனால் நீங்கள் இவ்வளவு வேலை செய்தும் டயர்ட் ஆகாம காலடி க்கு கெளம்பிட்டீங்க!

    நிச்சயம் இது அந்த இறைவன் லீலைதான் எங்களுக்காக இறைவன் அனுப்பிய தூதராக தங்களை நினைக்கிறோம்.

    (சிலர் நான் ரொம்ப அதிகமாக தங்களை புகழ்கிறேன் என நினைக்கலாம் ஆனால் நான் தங்களை இது வரை பார்த்தது கூட இல்லை மனதில் தோன்றியதை சொல்கிறேன் இதுவும் அந்த இறைவன் திருவிளையாடல்தான் )

    தங்கள் பயணம் மிக சிறப்பாக அமைய இறைவன் துணை இருப்பார் என நம்புகிறோம்.

  5. பயனுள்ள பதிவு, தாமதமாகத் தான் படித்துள்ளேன். முடிந்தவரை நாளை வழிபாடு செய்கிறேன். எப்பொழுதும், மஞ்சள், உப்பு,சர்க்கரை,அரிசி, பருப்பு ஆகியவற்றைப் புதியதாக வாங்கி கடவுள் முன் வைத்து வழிபாடு செய்வது வழக்கம். தங்கள் பயணமும் பணியும் சிறக்க வாழ்த்துகள்.

  6. Was waiting for ur post.read it now very happy
    Will surely follow ur advice.
    May God bless you.

    Tks n regards
    Ranjini
    Chennai

  7. வாழ்க வளமுடன்

    பயணங்கள் முடிவதில்லை .சுந்தர் சாரின் பயணம் வெற்றி அடைய வாழ்த்துகள்

    நன்றி

  8. சுந்தர் அண்ணா..

    அட்சய திருதியை பற்றி முழுவதுமாக தெரிந்து கொண்டோம்.தங்களின் அறிவுறுத்தலின் படி, இந்த நாள், இனிய நாளாக சென்று கொண்டிருக்கிறது அண்ணா..இந்த நன்னாளில்,நம் தள மெய்யன்பர்கள் வாழ்வில், இன்பம் பொங்கிட, இறைவனை வேண்டுகிறோம் அண்ணா.

    மிக்க நன்றி அண்ணா..

  9. Dear Sundar,
    Thank you fro the article; one feedback: I am using windows 7, If I press ‘Print PDF’ button given at the top of the article, it is creating PDF of the entire web page including all the buttons in the website, comments etc.
    Is it possible to just “print PDF’ of the article only?
    Thanks

  10. அட்சய திதியை பற்றி மிகவும் அழகாக பதிவு செய்து இருக்கிறீர்கள் . இந்த பதிவு காலத்தால் அழியாத காவியம்..

    நான் அட்சய திதி அன்று பசு மாட்டிற்கு அகத்திக்கீரையும், கனக தாரா தமிழில் ( பொன் மழை – கண்ணதாசன் ) கூடல் அழகர் பெருமாள் சன்னதி முன் பாடினேன். அன்று திருப்பரங் குன்றம் சென்று வந்தேன்

    நன்றி
    உமா வெங்கட்

Leave a Reply to nithyakalyani Cancel reply

Your email address will not be published. Required fields are marked *