Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Friday, March 29, 2024
Please specify the group
Home > Featured > ஒரு பாவமும் அறியாத எனக்கு மட்டும் ஏன் இப்படி? கேள்வியும் பதிலும்!

ஒரு பாவமும் அறியாத எனக்கு மட்டும் ஏன் இப்படி? கேள்வியும் பதிலும்!

print
மும்பையிலிருந்து சந்திரசேகர் என்பவர் சமீபத்தில் நமக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பியிருந்தார். நம் தளத்தை பற்றி சமீபத்தில் தான் கேள்விப்பட்டதாகவும், இத்தனை நாள் இப்படி ஒரு தளம் இருப்பது தெரியாமல் போனதற்கு வருந்துகிறேன் என்றும் ஒவ்வொரு பதிவாக அனைத்து பதிவுகளையும் தற்போது விடாமல் படித்து வருவதாகவும் குறிப்பிட்டிருந்தார். நமது பிரார்த்தனை கிளப் பற்றி தெரிந்துகொண்டதாகவும் தனது மிகப் பெரும் துன்பம் ஒன்றை பற்றி குறிப்பிட்டு தனக்காக நம் பிரார்த்தனை கிளப்பில் பிரார்த்தனை செய்யும்படியும் கேட்டுக்கொண்டார்.

மேலும் மகா பெரியவா குறித்தும், தனது பிரச்சனைகள் குறித்து இரண்டு தனித் தனி கடிதங்களை WORD DOCUMENT ல் டைப் செய்து இணைத்திருப்பதாகவும் படித்துவிட்டு அவசியம் தன்னை தொடர்புகொள்ளும்படியும் கேட்டுக்கொண்டார்.

இது நடந்தது கடந்த சனிக்கிழமை அன்று. மின்னஞ்சல் அனுப்பிவிட்டு, அன்று மாலையே நம்மை தொடர்புகொண்டு படித்துவிட்டீர்களா என்று கேட்டார். ‘இன்னும் இல்லை சார்… நாளை பயணத்தில் இருப்பேன் அப்போது படிக்கிறேன்’ என்று கூறினோம். ஆனால் வள்ளிமலையில் இருந்தபோது அதை படிப்பதற்கு சந்தர்ப்பம் அமையவில்லை. இதற்கிடையே இரண்டு மூன்று முறை நம்மை தொடர்புகொண்டு ‘என் மின்னஞ்சலை படித்துவிட்டீர்களா? என் மின்னஞ்சலை படித்துவிட்டீர்கள?’ என்று கேட்டபடி இருந்தார்.

இன்று காலை அவருடைய மின்னஞ்சலை பொறுமையாக படித்து முடித்தோம். என்ன சொல்வதென்று தெரியவில்லை… அவருடைய துன்பத்தை பற்றி படித்தவுடன் கண்கலங்கிவிட்டோம். ‘உனக்கும் கீழே உள்ளவர் கோடி நினைத்துப் பார்த்து நிம்மதி நாடு’ என்று கவியரசரின் வார்த்தைகள் தான் நினைவுக்கு வந்தன.

இப்படிப்பட்ட சூழ்நிலையிலும் அவருக்கு கடவுள் நம்பிக்கையோ மகா பெரியவா மீதான பக்தியோ சிறிதும் குறையவில்லை என்பது தான் ஆச்சரியம். நாம் ஏற்கனவே பல முறை கூறியிருக்கிறோம்: துன்பத்தில் தொடரும் பக்தியே தூய்மையானது!

அவர் இருந்த சூழ்நிலையில் அவர் நம்மிடம் எதிர்பார்த்தது உடனடி ஆறுதல். விழி நீரை துடைத்து நம்பிக்கையூட்டும் ஒரு கரம். அந்த எதிர்பார்ப்பின் காரணமாகத் தான் அடிக்கடி நம்மை தொடர்புகொண்டு தான் அனுப்பிய மின்னஞ்சலை படித்துவிட்டோமா என்று கேட்டபடி இருந்தார். மேலும் நமது தளத்தின் சேவைகளில் தானும் இணையவேண்டும் என்பது அவரது தீராத அவா.

இன்று காலை அவருடைய மின்னஞ்சலை பார்த்தவுடன் அவருக்கு எப்படி ஆறுதல் சொல்வது, எப்படி அவர் மனதில் நம்பிக்கையை விதைப்பது என்று புரியவில்லை. காரணம் கடந்த காலங்களில் பல ஜோதிடர்கள் அவரது ஜாதகத்தை பார்த்து பலன் சொல்கிறேன் பேர்வழி என்று அவரது நம்பிக்கையையும் நிம்மதியையும் முற்றிலும் குலைத்து சிதைத்து விட்டிருக்கிறார்கள்.

நாம் ஏற்கனவே கூறியிருக்கிறோம்… நாம் வணங்கும் தெய்வத்தைவிடவோ அல்லது குருவைவிடவோ எந்தக் காலத்திலும் எந்த சூழ்நிலையிலும் ஜோதிடம் சக்திமிக்கது அல்ல. ஜோதிடத்தை ஒரு முன்னெச்சரிக்கையாக எடுத்துக்கொண்டால் போதும். அதையே வேதவாக்காக இறுதித் தீர்ப்பாக எடுத்துக்கொள்ளும்போது தான் பிரச்சனையே. எனவே இவருக்கு ஆறுதல் சொல்வது என்பது சற்று சவாலான பணி தான் என்று நமக்கு தெரியும்.

Vallalar 1இருப்பினும் அவரை தொடர்புகொண்டு பிரச்சனையின் ஆணிவேர் எது, நம்மால் அதை தீர்க்க செய்யக்கூடியது என்ன, என்பதையெல்லாம் அவருக்கு விளக்கி, இதே போன்று துன்பத்தில் இருந்த ஒருவருக்கு மகா பெரியவா கூறிய ஆறுதல் என்ன உள்ளிட்டவற்றையெல்லாம் விளக்கி, மின்னஞ்சலும் அனுப்பிவிட்டோம்.

‘நான் என்ன பாவம் செய்தேனோ தெரியவில்லை சார்….. எனக்கு மட்டும் இப்படி’ என்ற குமுறல் அவருக்கு இருந்தது. துன்பப்படும் மனிதன் கடந்த காலங்களில் தான் பாவம் செய்திருக்கவேண்டும் என்பதில்லை. முற்பிறவியில் கூட பாவம் செய்திருக்கக்கூடும் என்று விளக்கி தனியாக ஒரு மின்னஞ்சல் அனுப்பியிருந்தோம். அதை உங்களுக்கு இங்கே அளித்தால் மிகவும் பலனுள்ளதாக இருக்கும் என்று கருதி இங்கே அளிக்கிறோம்.

சிலர் ‘புழு பூச்சி உட்பட எந்த ஜீவனுக்கும் யாருக்கும் எந்த கெடுதலும் இதுவரை நான் செய்தது இல்லை. அப்படியிருக்கும்போது எனக்கு மட்டும் ஏன் இப்படி?’ என்கிற சந்தேகம் இருக்கும். இந்த ஜென்மத்தில் செய்திருக்கமாட்டீர்கள். ஆனால் போன ஜென்மத்தில் செய்திருக்க வாய்ப்பிருக்கிறதே…

கீழே அளித்திருக்கும் பாடல் மனுநீதிச் சோழனின் வாழ்க்கை வரலாற்றை விளக்கும் ‘மனுமுறை கண்ட வாசகம்’ என்ற நூலில் வள்ளலாளர் எழுதியிருப்பது. இதை மனப்பாடம் செய்து கோவிலுக்கு செல்லும்போது இறைவனிடம் மானசீகமாக மன்றாடி வாருங்கள். நீங்கள் செய்த பாவங்கள் மன்னிக்கப்படுவதோடு உங்களுக்கும் ஆறுதல் கிடைக்கும். கண்ணீரால் கழுவ முடியாத பாவங்களே இந்த உலகில் இல்லை.

மனப்பாடம் செய்ய சுலபமாக இதை பாடல் வடிவில் (YOUTUBE VIDEO) இறுதியில் தந்திருக்கிறோம்.

Thalaivar J

எந்தப் பிறவியில் என்ன பாவம் செய்தேன் என் இறைவா…?

நல்லோர் மனதை நடுங்கச் செய்தேனோ?
வலிய வழக்கிட்டு மானங் கெடுத்தேனோ?
தானம் கொடுப்போரை தடுத்து நின்றேனோ?
கலந்த சிநேகரை கலகம் செய்தேனோ?

மனமொத்த நட்புக்கு வஞ்சகம் செய்தேனோ?
குடி வரி உயர்த்தி கொள்ளை கொண்டேனோ?
ஏழைகள் வயிறு எரியச் செய்தேனோ?
தருமம் பாராது தண்டம் செய்தேனோ?

மண்ணோரம் பேசி வாழ்வளித்தேனோ?
உயிர்கொலை செய்வோர்க்கு உபகாரம் செய்தேனோ?
களவு செய்வோர்க்கு உளவு சொன்னேனோ?
பொருளை இச்சித்து பொய் சொன்னேனோ?

ஆசை காட்டி மோசம் செய்தேனோ?
வரவு போக்கு ஒழிய வழி அடைத்தேனோ?
வேலையாட்களுக்கு கூலி குறைத்தேனோ?
பசித்தோர் முகத்தைப் பாராதிருந்தேனோ?
இரப்போர்க்கு பிச்சை இல்லை என்றேனோ?

கோள் சொல்லி குடும்பம் கலைத்தேனோ?
நம்பியோரை நட்டாற்றில் நழுவ விட்டேனோ?
கலங்கி ஒளிந்தோரை காட்டி கொடுத்தேனோ?
கற்பிழந்தவளை கலந்திருந்தேனோ?

காவல் கொண்டிருந்த கன்னியரை அழித்தேனோ?
கணவன் வழி நிற்போரை கற்பழித்தேனோ?
கருப்பம் அழித்து களித்திருந்தேனோ?
குருவை வணங்க கூசி நின்றேனோ?

குருவின் காணிக்கை கொடுக்க மறந்தேனோ?
கற்றவர் தம்மை கடுகடுத்தேனோ?
பெரியோர் பாட்டில் பிழை சொன்னேனோ?
பட்சியை கூண்டில் பதைக்க அடைத்தேனோ?

கன்றுக்கு பாலூட்டாது கட்டி வைத்தேனோ?
ஊண் சுவை உண்டு உடல் வளர்த்தேனோ?
கல்லும், நெல்லும் கலந்து விற்றேனோ?
அன்புடையோர்க்கு துன்பம் செய்தேனோ?

குடிக்கின்ற நீருள்ள குளம் தூர்த்தேனோ?
வெயிலுக்கு ஒதுங்கும் விருட்சம் அழித்தேனோ?
பகை கொண்டு அயலார் பயிரழித்தேனோ?
பொது மண்டபத்தை போய் இடித்தேனோ?

ஆலயக் கதவை அடைத்து வைத்தேனோ?
சிவனடியாரை சீற வைத்தேனோ?
தவம் செய்வோரை தாழ்வு சொன்னேனோ?
சுத்த ஞானிகளை தூஷணம் செய்தேனோ?
தெய்வம் இகழ்ந்து செருக்கு அடைந்தேனோ?

என்ன பாவம் செய்தேனோ?
இன்னது என்று அறியேன் என் இறைவா…
உய்யும் வழியும் உண்டோ – உணர்த்திடுவாய்
உலகெலாம் காத்திடும் உமையொரு பாகா!
தாயும், தந்தையும் நீ ஆவாய்
தனயன் என்னை மன்னித்தருள் செய்வாய்…!!

மேற்கூறிய கேள்விகளுக்கு ‘ஆம்’ என்று உங்கள் உள் மனம் கூறினால், இனியாவது அவற்றை தவிர்த்திடலாமே! எஞ்சிய நாட்களில் உத்தமனாக வாழ்ந்து, கருணைக்கடலாம் இறைவனின் மன்னிப்பை பெற்று நல் வாழ்வை அடைந்திடலாமே!!

மேற்கூறிய பட்டியலில் உள்ள ஒவ்வொரு பாவமும் ஒன்றையொன்று விஞ்சும் அளவிற்கு கொடிய பாவங்கள்… உயிரைக் கொல்லும் நஞ்சில் எது முதன்மையானது என்று ஆராய்வது போல இதில் உள்ளவற்றை தரம் பிரிப்பது. அந்தளவு அனைத்தும் கொடிய பாவங்கள்.

இதுவரை நடந்ததை விடுங்கள். இனி பாவம் செய்யாமல் இருப்பது உங்கள் கைகளில்! இதை அனைவரும் உணர்ந்து குற்றங்களை களைந்து வாழ்ந்தால் பாவம் என்கிற வார்த்தையோ துன்பம் என்கிற வார்த்தையோ நம் அகராதியில் இருந்தே காணாமல் போய்விடுமே!!

====================================================================

* கீழே அளிக்கப்பட்டுள்ள வீடியோவில் இந்த பாடலை கேட்க்க தவறாதீர்கள். தவறுகள் பல செய்து, திருந்திய ஒரு ஆன்மா, இறைவனிடம் மன்னிப்பு கேட்டு கதறி அழும் அந்த சூழலை மிக அருமையாக வெளிப்படுத்தியிருக்கிறார் பாடியவர்.

நல்லோர் மனதை நடுங்கச் செய்தேனோ? Youtube Video

====================================================================

An appeal – Help us in our mission!

Rightmantra.com is a website that focuses on Spirituality, Self-development and True values without any commercial interest. We are running full-time. Give us your hand. Help us to serve you better. Join our ‘Voluntary Subscription’ scheme or Donate us liberally. Ask your near and dear ones to help us in our mission. We are striving to make this world a better place to live. Little Drops of Water Make the Mighty Ocean. If you don’t who else will?

Our A/c Details:

Name : Rightmantra Soul Solutions
A/c No. : 9120 2005 8482 135
Account type : Current Account
Bank : Axis Bank, Poonamallee Branch, Chennai – 600 056.
IFSC Code : UTIB0001182

நமது தளத்தின் ‘விருப்ப சந்தா’ திட்டத்தில் சேர்ந்துவிட்டீர்களா?

====================================================================

Also check similar articles….

கலியின் தீமை, ஊழின் கடுமை நீக்கும் அருட்கொடை = பன்னிரு திருமுறை!

மனித குலம் அவசியம் செய்ய வேண்டிய அறங்கள்!

நாமசங்கீர்த்தனத்தின் பெருமையும் விஷ்ணு சஹஸ்ர நாமத்தின் மகிமையும்!

விரும்பிய வேலை கிடைக்க, மழலை வரம் கிட்ட, வாஸ்து தோஷம் நீங்க, மாதவிடாய்க் கோளாறுகள் நீங்க – பரிகாரம்… பரிகாரம்!

கடவுள் என்ற ஒருவர் இருந்தால் ஏன் இத்தனை துன்பங்கள்?

ஊழ்வினையை அனுபவித்தே தீரவேண்டுமா? அது அத்தனை சக்திமிக்கதா? கர்மா Vs கடவுள் (1)

நம் தலைவிதியை மாற்ற முடியுமா? பெரியோர்கள் என்ன கூறுகிறார்கள்? – கர்மா Vs கடவுள் (2)

====================================================================

[END]

10 thoughts on “ஒரு பாவமும் அறியாத எனக்கு மட்டும் ஏன் இப்படி? கேள்வியும் பதிலும்!

  1. துயர் கொண்ட அந்த மனதுக்கு எப்படி ஆறுதல் சொல்வது என்றே தெரியவில்லை.
    நீங்களும் அதை மிக அழகாக “நமக்கும் கீழே உள்ளவர் கோடி” என்று கோடிட்டு காட்டி அவர் மனதை மட்டும் அல்லாது எல்லோர் மனதையும் ஆறுதல் கொடுத்திர்கள்.
    நம் சென்னை நண்பர் சந்திரசேகர் அவர்களுக்கு ஒரு பிரேம வாசம் போல இவருக்கும் ஒரு போதிமரம் கிடைக்கும்.
    இந்த சூழலிலும் கடவுள் நம்பிக்கை தளராமல் அவர் இருப்பது ஆச்சரியம் அது அவரின் முழு சரணாகதியை குறிக்கிறது. அதற்க்கு பலன் கண்டிப்பாக உண்டு.
    அவரது விழி நீரை துடைத்து ஆறுதல் காட்ட நம் தளம் இருக்க அவருக்கு கவலை எதற்கு. இதுவும் கடந்து போகும் என்று நினையுங்கள்.மேகத்திரை விலக்கி உங்கள் துயர் விரைவில் தீர ஒளி கிடைக்கும். உங்களுக்காக எத்தனையோ நெஞ்சங்கள் பிரார்த்தனை செய்யும்.
    என்ன பாவம் செய்தேனோ என்ற பாடலில் வரும் எல்லா தவறுகளுமே உயிர் நடுக்க செய்கிறது. நினைக்க கூட முடியவில்லை.அதனால் கடைசி பாரா மட்டும் என்னை மாதிரி மனம் கஷ்டப்படும் வாசகர்கள் சொல்லிகொள்கிறோம்.
    என்றும் அன்புடன்.

  2. வணக்கம்……….. ஏதோ பிரச்சினையால் துன்புறும் நண்பர் விரைவில் ஆறுதல் அடைந்திட குருவருளையும் திருவருளையும் வேண்டுகிறோம்………

    பாவங்களின் பட்டியல் பயமுறுத்துகிறது…….. தெரிந்தோ தெரியாமலோ இதுவரை பாவங்கள் செய்திருப்பின் அதை மன்னித்து, இனி மேலும் எந்த பாவமும் செய்யாதவாறு நம்மை இறைவன் தடுத்தாட்கொள்ள வேண்டும்……….

  3. இந்த பதிவை படிக்கும் பொழுது என் நெஞ்சு பதை பதைக்கிறது.. திரு சந்திர சேகர் நம் தளத்திற்கு வந்து விட்டார். இனிமேல் அவர் கஷ்டம் சூரியனைக் கண்ட பனி போல் விலகி விடும். நம் பிரார்த்தனை என்றும் அவருக்கு உண்டு.

    இறைவா நான் தெரிந்தும் தெரியாமலும் செய்த பாவத்தை பொறுத்து காக்கவும்

    நன்றி
    உமா வெங்கட்

  4. வாழ்க வளமுடன்

    தாமத பட்ட நீதி அநீதிக்கு சமம் என்பர்

    அவ்வாறிருக்க முற்பிறவி பாவத்திற்கு இப்பிறவியில் தண்டனை என்பது என்ன நீதி ,

    சுந்தர் சார்தான் பதில் சொல்ல வேண்டும்

    நன்றி

    1. வாரியார் ஸ்வாமிகள் இது குறித்து பல சொற்பொழிவுகளில் விளக்கியிருக்கிறார். வாரியாரின் குமுதம் வினா-விடை நூலில் இதற்கான பதில் இருக்கிறது. அதை படித்தால் உங்கள் ஐயம் தீரும். எதற்கு அவர் கூறிய ஒன்றை தருகிறேன்.

      நாம் செய்த நல்வினை, தீவினை ஒன்றுக்கு ஆயிரமாகப் பெருகி வரும். வயலில் இட்ட விதை ஒன்று பலவாக வருவதுபோல் வினைகளும் பன்மடங்கு வளர்ந்து ஜென்ம ஜென்மத்துக்கு வரும்.
      – திருமுருக. கிருபானந்த வாரியார் ஸ்வாமிகள்

  5. குருவருளும் திருவருளும் நம் நண்பருக்கும், நம் தள வாசகர்களுக்கும் என்றும் துணை இருக்கட்டும்!!

    குரு சரணம் சரணம்

  6. சுந்தர் அண்ணா..

    இந்த பதிவு என்னுடைய சந்தேகத்தையும் போக்கி விட்டது. இன்னும் எப்படி பக்தி செய்ய வேண்டும் என்ற எண்ணம் மேலோங்குகிறது..

    தென்னாடுடைய சிவனே போற்றி.
    எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி..

  7. அறிந்தோ, அறியாமலோ செய்த பாவங்கள் களைய ஒரு வழி காட்டியுள்ளீர்கள். மிக்க நன்றி

    மனதை உருக்கும் அற்புதமான குரல். பாடல்

  8. சந்திரசேகர் அவர்கள் நிம்மதி பெற மஹா பெரியவர் திருவடி பணிவோம். அவர் இறுக்க பயம் ஏன். நிச்சயம் நண்பர் சந்திரசேகர் மன நிம்மதி அடைவார். கண் கண்ட சுவாமி நம் மஹா சுவாமிகள்.
    மஹா சுவாமிகள் நல வாழ்வு அடைய வழி காட்டுவார்.

    அந்த பாடல் படிக்க மனது நடுங்கிருது.

    இனி பாவம் புரியாமல் அருள வேண்டும் நம் சுவாமிகள்.

    நன்றி திரு சுந்தர்.

    கே. சிவசுப்ரமணியன்

  9. வணக்கம் சுந்தர். திரு சந்திரசேகருக்கு பிரச்சனை தீர ப்ராப்தம் இருக்கிறது. அதனாலதான் ரைட் மந்தர தளத்திற்கு வந்து இருக்கிறார் . மன அமைதி கிட்ட வாழ்த்துக்கள். பாவங்களின் பட்டியல் பயமாக இருக்கிறது படிக்கவே. நிச்சயமாக பல பாவங்கள் செய்து இருப்போம் என்றே தோன்றுகிறது.இறைவனே துணை. நன்றி.

Leave a Reply to viji Cancel reply

Your email address will not be published. Required fields are marked *