Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Friday, March 29, 2024
Please specify the group
Home > Featured > அனுமனுடன் யுத்தம் செய்த இராமர்! எங்கே? ஏன்? – இராமநாம மகிமை (3)

அனுமனுடன் யுத்தம் செய்த இராமர்! எங்கே? ஏன்? – இராமநாம மகிமை (3)

print
ராவண வதமெல்லாம் முடிந்து இராமர் அயோத்தி திரும்பிவிட்டார். பட்டாபிஷேகமும் விமரிசையாக நடைபெற்றது. மக்கள் குறையின்றி வாழவும், பருவ மழை தவறாது பெய்யவும் அப்போதெல்லாம் அரசர்கள் அடிக்கடி யாகம் செய்வர். இராமபிரானும் வசிஷ்டர், ஜனகர், விஸ்வாமித்திரர் போன்ற மகரிஷிகளை கொண்டு யாகம் ஒன்றை செய்ய முடிவு செய்து அதற்குரிய ஏற்பாடுகளுக்கு ஆணையிட்டார். யாகமும் அயோத்தி நகருக்கு வெளியே ஒரு பரந்து விரிந்த இடம் தேர்வு செய்யப்பட்டு விமரிசையாக துவங்கியது.

அப்போது அது வழியே இராமனின் ஆளுகைக்கு உட்பட்ட தேசம் ஒன்றை ஆண்டு வந்த சகுந்தன் என்கிற அரசன் வந்தான். யாகம் ஒன்று மிகப் பெரிய ரிஷிகளை கொண்டு நடத்தப்பட்டு வருவதை பார்த்து, வியந்தவன் உள்ளே சென்று அவர்களிடம் ஆசி பெற தீர்மானித்தான்.

ஆனால், வேட்டையாடிவிட்டு திரும்பிக்கொண்டிருந்தமையால், அப்படியே யாகசாலைக்குள் செல்ல விருப்பமின்றி, வெளியே நின்றபடி உள்ள இருந்த ரிஷிகளை பார்த்து “வசிஷ்டாதி ரிஷிகளுக்கு என் வணக்கங்கள்!” என்றான்.

இதை நாரதர் கவனித்துவிட்டார்.

இன்றைய கலகத்திற்கு கரு கிடைக்கவில்லையே என ஏங்கிக் கொண்டிருந்தவருக்கு இது லட்டு போல கிடைத்துவிட்டது.

நேரே விஸ்வாமித்திரரிடம் சென்று, “விஸ்வாமித்ர மகாமுனிவரே! இராமனின் ஆளுகைக்குட்பட்ட ஒரு நாட்டின் சிற்றரசன் சகுந்தன். அவன் இந்த யாகசாலை முன்பு நின்று, ‘வசிஷ்டாதி முனிவர் யாவருக்கும் என் வணக்கங்கள்’ என்று கூறிவிட்டுப் போகிறான். வசிஷ்டரைப் போன்று தாங்களும் இராமருக்குக் குருதானே? தாங்களும்தானே முக்கியப் பொறுப்பேற்று இந்த யாகத்தை நடத்துகிறீர்கள்? தங்கள் பெயரையும் சொல்லிச் சகுந்தன் வணக்கத்தைத் தெரிவித்திருக்க வேண்டாமா? வேண்டுமென்றே விஷமத்தனமாகத் தங்களை இந்தச் சிற்றரசன் அவமானப்படுத்தியிருப்பது எனக்கு வேதனையாயிருக்கிறது” என்று சிண்டு முடிந்தார்.

அது கேட்ட விஸ்வாமித்திரர் கொந்தளித்தார். “என்ன ஆணவம் அவனுக்கு… அவனை இப்போதே…” என்று பல்லைக் கடித்தபடி சபிக்க எத்தனிக்க, நாரதர் குறுக்கிட்டு, “விஸ்வாமித்திரரே சற்று பொறும். சகுந்தனை சபித்துவிட்டு தங்கள் தவவலிமையை ஏன் குறைத்துக்கொள்ளவேண்டும்? பேசாமல் இராமனை அழைத்து சகுந்தனை தண்டிக்கும் பொறுப்பை அவரிடம் விட்டுவிடவேண்டியது தானே?” என்றார்.

Rama Nama Magimai J

“நீங்கள் சொல்வதும் சரி தான்” என்று நாரதரின் கருத்தை ஆமோதித்த விஸ்வாமித்திரர் இராமனை தன்னை வந்து சந்திக்கும்படி பணித்தார்.

இராமனும் விஸ்வாமித்திரரை வந்து சந்தித்தார்.

நடந்தவற்றை அவரிடம் விளக்கிய விஸ்வாமித்திரர், “உன் குருவை அவமதித்தவனுக்கு என்ன தண்டனை தரப்போகிறாய்?” என்று கேட்டார்.

ஏதோ ஒரு மிகப் பெரிய உண்மையை உலகிற்கு உணர்த்த வேண்டியே நாரதர் இந்த நாடகத்தை அரங்கேற்றுகிறார் என்று ஸ்ரீராமனுக்கு தெரியாதா என்ன?

“நீங்களே சொல்லுங்கள் குருவே. நீங்கள் என்ன சொன்னாலும் அதை நிறைவேற்ற தயாராக இருக்கிறேன்” என்றார்.

“இன்று மாலை சூரியன் மறைவதற்குள் சகுந்தனின் தலை என் காலடியில் கிடக்கவேண்டும்!” என்கிறார்.

“உத்தரவு குருவே!” என்று கூறியபடி சகுந்தனை தேடி புறப்பட்டார் இராமர்.

நாரதர் அடுத்து உடனே சகுந்தனிடம் ஓடிச் சென்று, “என்ன காரியமப்பா செய்துவிட்டாய் நீ…. விஸ்வாமித்திரரருக்கும் சேர்த்து வணக்கம் கூறியிருக்கலாமே… இதோ உன் தலையை துண்டிக்க இராமனை பணித்திருக்கிறார். இராமன் உன் மீது போர் தொடுக்க கிளம்பி வந்துகொண்டிருக்கிறார்”

“ஐயோ… இராமபிரானை எதிர்க்க என்னால் முடியுமா? பேசாமல் என் தலையை நீங்களே துண்டித்து இராமன் கைகளில் சேர்பித்திவிடுங்கள்…” என்று உடைவாளை நாரதர் கைகளில் கொடுத்தான்.

நாரதர் அவனது நிலை கண்டு கலங்கினார். “சற்று பொறப்பா… உன் மீது எந்த தவறும் இல்லை எனும்போது நீ ஏன் வீணாக உயிர்த் தியாகம் செய்யவேண்டும்? மேலும் நீ மாண்டுவிட்டால் உன் மனைவி, மக்களுக்கு, குடிகளுக்கு யார் இருக்கிறார்கள்…”

“அப்படியானால் இதிலிருந்து தப்பிக்க நீங்கள் தான் ஒரு உபாயம் சொல்லவேண்டும் பிரபு” என்று நாரதரிடம் கோரிக்கை விடுத்தான்.

நாரதர் யோசித்தாவரு, “உன் நாட்டின் எல்லையில் இருக்கும் கானகத்தில் உள்ள மலைப் பகுதியில் தான் அனுமனின் தாய் அஞ்சனா தேவி வசிக்கிறாள். அவளை சென்று அவரிடம் சரணடை. அவள் ஒருவளால் தான் உன்னை காப்பாற்ற முடியும்!” என்றார்.

சகுந்தனும், உடனே அஞ்சனா தேவி வசிக்கும் கானகத்திற்கு சென்று அவளை தேடுகிறான். நேரம் கடந்து சென்றுகொண்டிருந்தே தவிர, அஞ்சனா தேவியை கண்டுபிடிக்க முடியவில்லை.

கடைசியில், தீ மூட்டி “அஞ்சனா தேவி சரணம்!” என்று கூறியபடி அதில் குதித்து உயிர்த் தியாக செய்ய முயன்றான்.

அஞ்சனாதேவி அவன் முன் பிரத்யட்சமானாள்.

“குழந்தாய்….எதற்காக என்னை தேடிக்கொண்டிருந்தாய்? தற்போது உயிரையும் அதற்காக தியாகம் செய்ய துணிந்தாய்?”

“தாயே… எனக்கு உயிர்பிச்சை கொடுங்கள். அது உங்களால் தான் முடியும்”

“என்ன விபரம் என்று சொல்லப்பா…”

“இல்லை தாயே… எனக்கு அடைக்கலம் கொடுப்பதாக முதலில் சொல்லுங்கள்… பிறகு சொல்கிறேன்” சகுந்தன் பிடிவாதமாக நிற்கவே, அஞ்சனா தேவி, “உனக்கு அபயமளித்தேன். கவலைவேண்டாம்!” என்று வரமளித்தாள்.

இறுதியில் நடந்தது அனைத்தையும் விவரித்தான் சகுந்தன். இராமபிரான் சகுந்தனை தேடிக்கொண்டிருக்கும் விபரம் அறிந்தது, அஞ்சனா தேவி திடுக்கிட்டாள்.

இருப்பினும் கொடுத்த வாக்கின்படி சகுந்தனை காப்பது தன் கடமை என்பதால், அனுமனை தன் முன் வரும்படி நினைத்தாள். தாய் நினைத்த அடுத்த நொடி, அனுமன் அங்கே தோன்றினான்.

“தாயே… என்னை அழைத்த காரணம் என்னவோ? தங்கள் கட்டளைக்கு காத்திருக்கிறேன்…” என்றார்.

அஞ்சனா தேவி அனைத்தையும் விவரித்து, “என்னிடம் சரண் புகுந்தவனை காப்பாற்ற வேண்டியது உன் கடமை!” என்று கூறி சகுந்தனை இராமனின் அஸ்திரத்திடமிருந்து காக்கும் பொறுப்பை அனுமனிடம் ஒப்படைத்தாள்.

இக்கட்டானதொரு தனக்கு ஏற்பட்டதை எண்ணி வருந்தினான் அனுமன். இருப்பினும் தாய் சொல்லை காப்பாற்றவேண்டியது தனயனின் கடமையல்லவா? எனவே தனது தாய்க்காக, உயிரினும் மேலான தனது இராமனையே எதிர்க்க துணிந்தான்.

அனுமந்த சேவையில் ஸ்ரீராமர் !
அனுமந்த சேவையில் ஸ்ரீராமர் !

தனது வாலை ஒரு பெரிய கோட்டை போல எழுப்பி, அதன் உள்ள சகுந்தனை ஒளிந்துகொள்ளுமாறு செய்து, அதன் மேல் தான் உட்கார்ந்துகொண்டார்.

சகுந்தனை தேடி அந்தப் பகுதிக்கு வந்த இராமன், அவனை கண்டுபிடிக்க இயலாமல், அஸ்திரங்களை ஜெபித்து சகுந்தனின் சிரத்தை கொய்து வாருங்கள் என்று கட்டளையிட்டார்.

ஆனால், அவர் செலுத்திய அஸ்திரங்கள் அனைத்தும் மீண்டும் அவர் காலடியிலேயே வந்து வீழ்ந்தன. சக்தி மிக்க இராமபாணம் கூட தோற்றுவிட்டது.

இராமருக்கு ஒன்றுமே புரியவில்லை. இராமபாணம் தோற்றதாக சரித்திரமேயில்லையே… என்ன காரணம் என்று புரியாமல் குழம்பித் தவித்தார்.

அது சமயம் அங்கே வந்த நாரதர், “இராமா, உன் அஸ்திர பிரயோகத்தை ஒரு கணம் நிறுத்தி, சற்று எதிர்பக்கம் உற்றுக் கவனி. காரணத்தை நீயே அறிவாய்” என்றார்.

இராமனும், அப்படியே செய்ய, எதிர்புறம் இருந்து “ஜெய் ஸ்ரீ ராம்… ஜெய் ஸ்ரீ ராம்” என்று இராம நாமம் ஒலிப்பது காதில் கேட்டது.

இது அனுமனின் குரலாயிற்றே… அவன் ஒருவனால் தான் இத்தனை பக்தியுடனும் தீர்க்க்கத்துடனும் இராம நாமத்தை கூற முடியும்… என்று தீர்மானித்தார்.

“இராமா… நீ நினைப்பது சரிதான். அனுமன் அங்கே இராம நாமம் ஜபித்து கொண்டிருக்கிறான். உன்னைவிட உன் நாமத்திற்கு சக்தி அதிகம். உன் நாமத்தை அனுமன் இதயப்பூர்வமாக ஜெபித்துக்கொண்டிருக்கும்போது, அவனை மீறி அவன் காவல் காத்துக்கொண்டிருக்கும் சகுந்தனை உன்னால் ஒன்றும் செய்ய முடியாது! இராமபாணம் மட்டுமல்ல… பிரம்மாஸ்திரம் கூட இதன் முன் பலிக்காது!” என்றார்.

இதற்க்கிடியே சினம் தணிந்த விஸ்வாமித்திரர், தன்னால் ஒரு நிரபராதியின் உயிர் போய்விடக்கூடாதே என்று அங்கு ஓடி வந்தார்.

“இராமா நிறுத்து… நிறுத்து… சகுந்தனை ஒன்றும் செய்துவிடாதே”

“குருநாதா…மன்னிக்கவேண்டும். இராமன் வாக்கு தவறினான் என்று நாளை சரித்திரம் பேசக்கூடாதே… சகுந்தனின் தலையை சூரிய அஸ்தமனத்திற்குள் தங்கள் காலடியில் சமர்ப்பிக்கிறேன் என்று நான் அளித்த வாக்குறுதி என்னவாவது?” – இது இராமன்.

தான் போட்ட முடிச்சை தானே அவிழ்க்க விரும்பிய நாரதர், சகுந்தனை வெளியே வரும்படி அழைத்து, விஸ்வாமித்திரரின் பாதங்களில் அவன் தலைபடும்படி வீழ்ந்து நமஸ்கரிக்கச் சொன்னார்!

ஆக நாரத மகரிஷியின் சாதுரியத்தால் அனைவரின் வாக்கும் காப்பாற்றப்பட்டது. இராம நாமத்தின் பெருமையும் உலகிற்கு உணர்த்தப்பட்டது.

நாடிய பொருள் கைகூடும் ஞானமும் புகழும் உண்டாம்
வீடியல் வழியதாகும் வேரியங்கமலை நோக்கும்
நீடிய அரக்கர் சேனை நீறுபட்டழிய வாகை
சூடிய சிலையிராமன் தோள்வலி கூறுவார்க்கே!

(….. ராமநாம மகிமை தொடர்ந்து பொழியும்)

=====================================================================

Also Check :

ராம்சுரத்குமார் விளக்கிய ராமநாம மகிமை – (2)

கருடனின் கர்வத்தை அழித்த சிவபெருமான் – இராமநாம மகிமை (1)

=====================================================================

13 thoughts on “அனுமனுடன் யுத்தம் செய்த இராமர்! எங்கே? ஏன்? – இராமநாம மகிமை (3)

  1. ராம ராம.

    ராம நாமத்திற்கு இணை ஏதும் இல்லை.

    நன்றி.

    கே. சிவசுப்ரமணியன்.

  2. வணக்கம் சுந்தர் சார்

    ராமநாமம் மகிமை அருமையோ அருமை சார்

    நன்றி

  3. சுந்தர்ஜி
    ராமனின் நாம மகிமை படிக்கும்போது மெய் சிலிர்கிறது. இன்று இருக்கும் இந்த அசுர வேக வாழ்கை, இவ்வாறு சிந்தித்து, அதற்கு செல்யல் வடிவம் கொடுத்து, அதை எல்லோரும் படிக்க வேண்டும்
    என்பதில் நம் சுந்தர்ஜின் சேவை மிகவும் அளபைரியது. மேலும் விவரிக்க வார்த்தைகள் இல்லை.
    நன்றி சுந்தர்ஜி

  4. ஜெய் ஸ்ரீ ராம். ஜெய் ஸ்ரீ ராம்.

    ராம நாம மகிமை உணருவோம். வளம் பெறுவோம்.

    ஜெய் ஸ்ரீ ராம்

  5. வாழ்க வளமுடன்

    வாரியார் சுவாமிகள் வேடிக்கையாக கூறியது

    ராம நாமத்தை ஹிந்துக்கள் மட்டும் சொல்வதில்லை கிருத்துவர்கள் , இஸ்லாமியர்கள் , மற்றும் அனைத்து மதத்தினரும் சொல்லுகின்றனர் , வந்தாராம் …………போனாராம்…………..கேட்டாராம்……………..சொன்னாராம் ……………இருந்தாராம்

    நன்றி

  6. ராம் ராம் ராம்

    ஓம் தசரதாய வித்மஹே;
    சீதா வல்லபாய தீமஹே;
    தன்னோ ராம ப்ரசோதயாத்.

    ஜெய் ஸ்ரீ ராம்.

    அனைவரும் ராம நாம மகிமையை உணர்ந்து போற்றுவோம்;

  7. நம் தளம் மூலமாக சகுந்தன் கதையை பற்றி தெரிந்து கொண்டோம். தெரியாத கதையை தெரிந்து கொண்டதில் அளப்பற்கரிய மகிழ்ச்சி வார வாரம் பல தெரியாத கதைகளை எதிர்பார்க்கிறோம்

    ராம நாம மகிமையோ மகிமை.
    ராம நாமத்திற்கு ஈடு இணை எது.

    ராம் ராம் ராம்

    நன்றி
    உமா வெங்கட்

  8. அருமையான ராம நாம மகிமையை உணர்த்தும் மற்றுமோர் பதிவு
    ஸ்ரீ ராம் ஜெய ராம் ஜெய ஜெய ராம்

    நன்றி
    வாழ்க வளமுடன்.

  9. ராம நாம மகிமையை உணர்த்தும் ஒவ்வொரு பதிவும் நாமனைவரும் ராம நாமத்தை தோணியாகக் கொண்டு நம் பிறவிப் பெருங்கடலைக் கடந்து உய்ய வேண்டும் என்பதற்காக அளிக்கப் பட்டவையாகவே உணர்கிறோம்………..நன்றிகள் பல……..

    ஸ்ரீ ராம ஜெயம்……ஸ்ரீ ராம ஜெயம்……ஸ்ரீ ராம ஜெயம்……

  10. ராம நாம மகிமை போற்றுதர்க்கு உரியது.
    நாமும் ராம நாமம் ஜெபித்து வாழ்வில் வளம் பெறுவோம்.
    ஜெய் ஸ்ரீ ராம், ஜெய் ஸ்ரீ ராம்.

  11. Rama nama has more power than Lord ராம் himself

    Let us all chant the tharaga manthiram and pray that we have the oppurtunity to live in Rama Rajya again. Let us all pray for our nation’s welfare, peace and prosperity. Let Lord Ram give strength and good health to the leaders who are dedicated to the service of our nation.

    Jai Sri Ram

  12. சுந்தர் அண்ணா..

    ராம நாம மகிமை உணர்ந்தேன் ..

    ஸ்ரீ ராம ஜெயம் .

  13. வணக்கம் சுந்தர். முன்பே படித்த கதைதான். மீண்டும் படிக்க தந்தமைக்கு நன்றி . ராம் ராம் ராம் ஸ்ரீ ராம்.

Leave a Reply to MRS, RAMASHANKAR Cancel reply

Your email address will not be published. Required fields are marked *