Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Thursday, March 28, 2024
Please specify the group
Home > Featured > ‘தேடி வரும் தெய்வத் திருவருள்!’ — ரைட்மந்த்ரா பிரார்த்தனை கிளப்!!

‘தேடி வரும் தெய்வத் திருவருள்!’ — ரைட்மந்த்ரா பிரார்த்தனை கிளப்!!

print
சில வாரங்களுக்கு முன்னர் நாம் சாதனையாளர் சந்திப்புக்கு புதுக்கோட்டை சென்றிருந்தபோது, திரும்ப வரும் வழியில் நாமும் நண்பர் சிட்டியும் மயிலாடுதுறை – கும்பகோணம் சாலையில் உள்ள கோவிந்தபுரத்தில் உள்ள இராமநாம போதேந்திராள் அதிஷ்டானத்திற்கு சென்றிருந்தோம். அங்குள்ள புத்தக கடையில் திரு.பி.சுவாமிநாதன் அவர்கள் எழுதிய சில நூல்களையும், திருமதி.ஷ்யாமா சுவாமிநாதன் என்பவர் எழுதிய ‘காஞ்சி மகானின் கருணை அலைகள்’ என்ற நூலையும் வாங்கி வந்தோம்.

DSC07870 copy

இன்றைய பிரார்த்தனை பதிவு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்பதால் மிக பொருத்தமான ஒரு கதையையோ அல்லது மகிமையையோ வெளியிடவேண்டும் என்று நாம் விரும்பியபோது, மேற்படி நூலில் கிடைத்தது தான் நாம் கீழே குறிப்பிட்டுள்ள சம்பவம். இன்றைய பிரார்த்தனை கோரிக்கைக்கு வலு சேர்க்கும் விதமாக அது அமைந்தது மகா பெரியவரின் கருணையே!

கலியுகத்தில் குரு பக்தி ஒன்றே கடைத்தேறுவதற்கு ஒரே வழி என்பதை மறக்கவேண்டாம்!! குரு என்ற பெயரில் கோடி கோடியாக சொத்துக்களை குவித்து சுகபோக வாழ்வு வாழ்ந்தவர்கள் வாழ்பவர்கள் மத்தியில் மகா பெரியவர் போல ஒரு தன்னலமற்ற எளிமையே உருவான குரு நமக்கு கிடைப்பதற்கு நாம் பல ஜென்மப் புண்ணியம் செய்திருக்கவேண்டும். அவரை ஏதேதோ அற்ப காரணங்களை மனதில் வைத்து ஏற்க மறுத்தால், இழப்பு  சம்பந்தப்பட்டவர்களுக்குத் தானே தவிர அந்த சர்வ வியாபிக்கு அல்ல.

==================================================================

தேடி வரும் தெய்வத் திருவருள் !
– திருமதி ராதாவேங்கடேசன்

தேடி வரும்  தெய்வத் திருவருள் என்று மகா பெரியவரை  பற்றி சொல்வார்கள். அந்த அனுபவம் எனக்கும் ஏற்பட்டது. காஞ்சி மகானையே தெய்வமாக தொழும் அளவுக்கு பக்தி செய்யத் தெரியாதிருந்தும் அவர் மீது நல்ல நம்பிக்கை கொண்டவள் நான்.

Kanchi maganin karunai alaigal2009 ஆம் வருடம் செப்டம்பர் 29 ஆம் தேதி, என் பிள்ளை யு.எஸ்.ஸில்  மோட்டார்  சைக்கிள் விபத்தில் சிக்கி மிக ஆபத்தான நிலையில் இருப்பதை அறிந்ததும் அவசரமாக புறப்பட்டுச் சென்றோம் நானும் என்  கணவரும். அங்கு சென்று அவனை பார்த்தபோது அவனை வெண்டிலேட்டரில் வைத்திருந்தனர். பிழைப்பது கடினம் என்று டாக்டர்கள் கூறிவிட்டனர்.

அப்போது என் பெரியம்மா ஸ்ரீமதி விசாலாக்ஷி அவர்கள் ஓமன் நாட்டில்  இருந்தார்கள்.  அவர்கள் காஞ்சி மகான் மீது அசையாத பக்தி  கொண்டவர்கள்.  சமஸ்கிருதத்தில் மகான் மீது பல பாடல்கள்  புனைந்துள்ளார். இவனுடைய நிலைமை பற்றி பெரியம்மாவிடம் கதறி அழுதேன். பெரியம்மாவும் நான் பெரியவாளிடம் வேண்டிக்கொள்கிறேன் என்றார்.

அடுத்த நாள் காலை பெரியம்மா என்னை போனில் கூப்பிட்டு, “பெரியவா என்  கனவில் வந்து, அவன் தலைமாட்டிலேயே நான் இருக்கேன். அவன் நன்றாக ஆகிவிடுவான். அவனை  கவலைப்படாமல் இருக்கசொல்லு!” என்றார்கள் என்று கூறினார். மனம் சிறிது தைரியம் அடைந்தது.  ஆனால் அது வெறும் வாய்ச்சொல்லாக இருந்துவிடாமல் செயலில் காண்பித்தது தான் ஆச்சரியம்.

என் கணவர் கம்ப்யூட்டர் தெரிந்தவர். உறவினர் அனைவருக்கும் பிள்ளையின் நிலை குறித்து எழுதி, பிரார்த்தனை பண்ணும்படி வேண்டுகோள்  விடுத்தார்கள். அதில் ஒருவர் அனுப்பியிருந்த மெயிலில் பெரியவர் அபய ஹஸ்தத்துடன் அமர்ந்திருக்க மேலே “நான் இருக்கேன்” என்று இருந்தது. அந்த நண்பர் “இந்த படத்தை அவன் தலைமாட்டில் வையுங்கள் அவன் பூரண குனமடைவான்” என்று எழுதியிருந்தார். என்ன ஒரு கருணை!

உடனே அதை பிரதி எடுத்து அவன் தலைமாட்டில்  வைத்திருந்தோம். டாக்டர்களே ஆச்சரியப்படும்படி அவன் குணமாகி மார்ச் மாதம் முதல் வேலைக்கு போக ஆரம்பித்தான்.

Naa irukkaenஇத்தோடு நின்றுவிடவில்லை. அவனுக்கு 2011 பிப்ரவரி 7 ஆம் தேதி கல்யாணமும்  நடந்தேறியது. எங்களுக்கு பேரனோ பேத்தியோ பிறக்கப்போவது தெரிந்து சந்தோஷத்திற்கு அளவேயில்லை. கல்யாணத்திற்கு முன் அவன் இந்தியாவிற்கே வந்துவிட்டான். பெரியம்மாவும் இந்தியா வந்துவிட்டார்கள். என் பிள்ளை தனக்கு ஒரு ஆண் குழந்தை தான் பிறக்கப்போகிறது என்று சொல்லிக்கொண்டிருந்தான்.

மூன்று மாதம் ஆகி டாக்டர்கள் கர்ப்பத்தை உறுதி செய்த பிறகு பெரியம்மாவை பார்த்து ஆசி பெறச்  சென்றான். பெரியம்மாவோ உனக்கு ‘அபூர்வா’ தான் பிறக்கப்போகிறாள் என்று பெரியவா சொன்னதாகச் சொல்லி ஆசீர்வாதம் செய்தார்கள். அவர்கள் திருவாக்கின்படியே பெண் குழந்தை தான் பிறந்தது. மூன்றாவது மாதமே கர்ப்பத்திற்க்குள்ளேயே ‘அபூர்வா’ என பெரியவாளால் பெயரிடப்பட்டு பிறந்த அபூர்வ பேத்தி தான் என் பேத்தி.

பெரியவா வாக்குப் படி டிசம்பர் 8, 2011 அன்று அபூர்வா பிறந்து எங்களை மகிழ்ச்சிக்கடலில் ஆழ்த்தினாள். இப்படி எங்களை தேடி வந்து ஆசீர்வதிக்கும் தெய்வத் திருவருள் மகா பெரியவர்.

– திருமதி ராதாவேங்கடேசன், ஹவுசிங் காலனி குவார்ட்டர்ஸ், பெங்களூர் – 12.

(நன்றி : டாக்டர் ஷ்யாமா சுவாமிநாதன் எழுதிய ‘காஞ்சி மகானின் கருணை அலைகள்’)

==================================================================

நமது தளத்தில் வெளியிடப்படும் ஒவ்வொரு பிரார்த்தனையும் மிக முக்கியமானது என்றாலும் இந்த வார பிரார்த்தனையை எல்லாவற்றுக்கும் மேல் என நாம் கருதுகிறோம். இரண்டு மகத்தான உயிர்களை உடனடியாக காப்பாற்றியாகவேண்டும். எனவே யாரை தலைமை ஏற்கச் சொல்வது என்று தீவிரமாக யோசித்தபடி  இருந்தோம்.

மகா பெரியவா தொடர்புடைய யாரையாவது தலைமை ஏற்கச் சொல்லவேண்டும் என்று முடிவு செய்திருந்தோம். திரு.பி.சுவாமிநாதன் அவர்கள் ஏற்கனவே ஒரு முறை தலைமை தாங்கிவிட்டார். (பார்க்க: உங்கள் உலகம் பெரிதாகி துன்பங்கள் கடுகாக வேண்டுமா?) இந்த முறை யாரை கேட்டுக்கொள்வது என்று யோசித்தபடி இருந்தோம். அப்போது நமது நினைவுக்கு வந்தவர் திரு.சாணு புத்திரன் என்கிற சுரேஷ் கிருஷ்ணமூர்த்தி அவர்கள். SAGE OF KANCHI, MAHA PERIYAVA CHARANAM உள்ளிட்ட இணைய குழுமங்களில் இந்த பெயர் மிகவும் பிரசித்தம்.

சாணு புத்திரன் மகா பெரியவாவின் மிகப் பெரிய பித்தன் என்று  சொல்லலாம். மூச்சு விடுவதற்கு காற்றுக்கு பதிலாக மகா பெரியவரையே அவர் சுவாசித்து வருகிறார் என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன். இவரை கருவியாக வைத்துக்கொண்டு மகா பெரியவர் பல அற்புதங்களை நிகழ்த்தி இருக்கிறார்… நிகழ்த்தி வருகிறார்.

தனியார் வங்கி ஒன்றில் அதிகாரியாக பணிபுரியும் திரு.சாணு புத்திரன் மகா பெரியவாவின் பக்தரானது ஒரு சுவாரஸ்யமான கதை. அதை வேறொரு சந்தர்ப்பத்தில் பார்ப்போம்.

நமது சமீபத்திய புதுக்கோட்டை பயணத்தில் நாம் அப்பைய தீகிதரின் அதிஷ்டானம், மற்றும் போதேந்திராளின் அதிஷ்டானம் சென்றிருந்தோம். ஆனால் நேரமின்மை காரணமாக போதேந்திராள் அதிஷ்டானத்திற்கு எதிரே அமைந்துள்ள மகா பெரியவரின் தபோவனத்திற்கு செல்ல  முடியவில்லை. அடுத்த முறை பார்த்துக்கொள்ளலாம் என்று வந்துவிட்டோம். (இந்த தபோவனத்தில் மகாபெரியவரும், மற்றும் காஞ்சி சங்கர மடத்தின் முந்தைய 67 பீடாதிபதிகளும் இருக்கிறார்கள் என்பது தான் விசேஷமே! இது இங்கு வந்த கதை ஒரு பேரதிசயம். அதை ஒரு தனிப் பதிவாக வேறொரு நாள் பார்க்கலாம்).

அது குறித்த வருத்தம் நமக்கு இருந்த சூழ்நிலையில், இரண்டு வாரங்களுக்கு முன்னர் ஒரு நாள் சாணு புத்திரன் நமக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பியிருந்தார். அதில், “உங்களை பற்றியும் உங்கள் தளத்தை பற்றியும் நிறைய கேள்விப்பட்டிருக்கிறேன். உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள். உங்களை விரைவில் சந்திக்க  ஆசைப்படுகிறேன். கோவிந்தபுரத்தில் உள்ள மகா பெரியவரின் தபோவனத்தில் உள்ள  மூலவரின் புகைப்படம் முதன்முறையாக அதிகாரப்பூர்வமாக தபோவனத்தால் வெளியிடப்பட்டுள்ளது. அதை உங்களுக்கு இத்துடன் அனுப்பியிருக்கிறேன். உங்கள் தளத்தில் பகிர்ந்துகொள்ளவும்!” என்று கூறியிருந்தார்.

govindapuram_moolavar copy

சாணு புத்திரன் அவர்களிடமிருந்து மூலவரின் புகைப்படம்  நம்மை தேடி வந்ததில் நமக்கு அளவற்ற மகிழ்ச்சி. நாம் ஒரு அடி எடுத்து வைத்தால் நம்மை நோக்கி நூறு அடி எடுத்து வைப்பவரல்லவா நம் குரு! தபோவனத்தை விரைந்து தரிசிக்கவேண்டும் என்று சங்கல்பித்துக்கொண்டோம்.

அடுத்த இரண்டாவது வாரமே, எதிர்பாராதவிதமாக வடலூர் செல்லவேண்டி வந்ததால் அப்படியே கோவிந்தபுரம் சென்று தபோவனத்தையும் தரிசித்துவிட்டு வருவோமே என்று கோவிந்தபுரம் சென்றோம்.

திரு.சாணு புத்திரன் அவர்கள் அங்கு நமது விசேஷ தரிசனத்திற்கு ஏற்பாடு செய்திருந்தபடியால், தபோவனத்தில் வாலண்டியராக இருக்கும் சந்தானம் என்பவர் நம்முடன் வந்து தபோவனத்தை சுற்றிக்காட்டி தரிசனம் செய்வித்தார். உரிய அனுமதி பெற்று பல புகைப்படங்களை க்ளிக்கி அள்ளிக்கொண்டு வந்துவிட்டோம். (இதுவும் தனிப் பதிவாக வரும்).

இப்படிப்பட்டதொரு சூழ்நிலையில் இன்றைய பிரார்த்தனை பதிவு குறித்து சாணு புத்திரன் அவர்களிடம் நேற்று மாலை பேசினோம். இதற்கு முன்னர் அவரிடம் நாம் ஓரிரு முறை பேசியிருந்தாலும் எங்கள் உரையாடல் ஒரு சில வினாடிகளுக்கு மேல் நீடித்ததில்லை. ஆனால், நேற்று மூன்று மணி நேரத்திற்கும் மேல் அவரிடம் பேசியிருப்போம். பிரார்த்தனை செய்யவேண்டிய அந்த இரண்டு ஜீவன்கள் குறித்து பேச்சை துவக்கி, மகா பெரியவா மற்றும் இவர் வாழ்க்கையில் அவர் செய்த அற்புதங்கள், நமது தளம், நமது  நோக்கம், என எங்கள் பேச்சு எங்கெங்கோ சென்றது.

நம் வாழ்க்கையில் திருப்புமுனை ஏற்படுத்தக்கூடிய மற்றுமொரு நிகழ்வும் எங்கள் உரையாடலால் நேற்று நடைபெற்றது. ஆம்… நாமே அதை  எதிர்பார்க்கவில்லை. நல்லோர் சத்சங்கதிற்க்காக மகா பெரியவர் எனக்களித்த பிக்ஷை அது. (விபரங்கள் விரைவில்!)

Saanu Puthiran2
தனது தாயார் சாணு என்கிற ஜானகியுடன் சாணு புத்திரன் சுரேஷ் கிருஷ்ணமூர்த்தி அவர்கள்…

நமது நம்பிக்கைக்கும் நல்லெண்ணத்திற்கும் ஒருவர் பாத்திரமாவது என்பது அத்தனை சுலபமல்ல. அந்த வட்டத்திற்குள் இருப்பவர் வெகு சிலரே. அவர்களுள் ஒருவர் திரு.சாணு புத்திரன் என்றால் மிகையாகாது. பல விஷயங்களில் எங்கள் சிந்தனை ஒத்திருப்பது கண்டு மகிழ்ச்சியடைந்தோம்.

திரு.சாணு புத்திரன்  அவர்களை பற்றி மேலும் சொல்லவேண்டும் என்றால், தனியார் வங்கியில் அதிகாரியாக பணியாற்றுகிறார். நம்மை விட வயதில் மூத்தவர். அவரது குணத்திற்கு ஏற்ப நல்ல மனைவியும் சத்புத்திரனும் அவருக்கு அமைந்திருக்கிறார்கள்.

சொந்த வாழ்வில் சில மாதங்களுக்கு முன்பு மிகப்பெரிய துயர் ஒன்று அவருக்கு ஏற்பட்டது. அந்த நிலையிலும் அவர் மகா பெரியவா மீது வைத்திருந்த பக்தி மாறவில்லை. சொல்லப்போனால் பெருகியிருக்கிறது. நாம் ஏற்கனவே கூறியிருக்கிறோம் ‘துன்பத்திலும் தொடரும் பக்தியே தூய்மையானது’. அப்படி ஒரு பக்தி அவருக்கு வாய்த்திருக்கிறது. அவர் மீது நமக்கு மதிப்பு பெருக இதுவும் காரணம்.

தினசரி மகா பெரியவரை பற்றி ஒரு நான்கு வரி பாடல் எழுதுவதை எழுதுவதை  வழக்கமாக வைத்திருக்கிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்த விரதத்தை சங்கல்பித்துக்கொண்டு இதுவரை 92 பாடல்கள் எழுதியிருக்கிறார். இத்தனைக்கும் இவர் தமிழில் புலமை பெற்றவர்  கிடையாது. பாண்டித்யமும் கிடையாது. மகா பெரியவரின் கடாக்ஷம் இவருக்கு பரிபூரணமாக இருப்பதாலேயே அது சாத்தியப்படுகிறது.

அனைவரும் நன்றாக இருக்கவேண்டும். மகா பெரியவரின் புகழ் மேலும் மேலும் பெருகவேண்டும் என்று கருதும் நல்ல மனதுக்கு சொந்தக்காரர்.

இவரை காரணத்தோடு தான் மகா பெரியவா நம்மிடம் அறிமுகப்படுத்தி வைத்திருக்கிறார் என்பதை பின்னர் தான் புரிந்துகொண்டோம்.

பிரார்த்தனை செய்யவேண்டியவர்கள் குறித்த விபரத்தை கூறி இந்த வார பிரார்த்தனை கிளப்புக்கு தலைமை ஏற்கவேண்டும் என்று கேட்டகொண்டபோது, இப்போதே அவர்களுக்காக பிரார்த்தனை செய்ய ஆரம்பித்துவிடுகிறேன் என்றார்.

“பிரார்த்தனை பதிவில் உங்களை என் வாசகர்களுக்கு அறிமுகப்படுத்துகையில் எப்படி அறிமுகப்படுத்தவேண்டும்?” என்று கேட்டோம். வினயம் மிக்க அவர் தன்னைப் பற்றி என்ன சொல்லப்போகிறார் என்கிற ஆவலும் நமக்கு ஏற்பட்டது.

“மகா பெரியவரின் பக்தர்களின் நிழலைத் தேடி ஓடும் கடைக்கோடி பக்தன் நான் என்று நீங்கள் என்னை அறிமுகப்படுத்தினால் போதும். அதுவே எனக்கு பெருமை!” என்றார்.

இந்த வார பிரார்த்தனைக்கு தலைமை ஏற்றிருக்கும் திரு.சாணு புத்திரன் அவர்களுக்கு நம் மனமார்ந்த நன்றி.

(குறிப்பு : வரும் ஞாயிறு அனுஷத்தன்று திரு.சாணு புத்திரன் கோவிந்தபுரம் மகா பெரியவா தபோவனம் சென்று அங்கு பெரியவா சன்னதியில் நடைபெறவிருக்கும் புஷ்பாஞ்சலியை தரிசிக்கவிருக்கிறார். தொடர்ந்து சிதம்பரம் பயணம். அங்கு ஆடல்வல்லான், சிவகாமசுந்தரி தரிசனம். இரண்டு இடங்களிலும் அங்கு இருக்கும் நேரம் முழுதும் இந்த வாரம் பிரார்த்தனை சமர்பிக்கப்பட்டுள்ள இருவருக்காகவும் இதற்கு முன்பு கோரிக்கைகள் சமர்பித்த அனைவருக்காகவும் பிரார்த்தனை செய்வதாக கூறியிருக்கிறார்!)

ஸ்ரீ மஹாபெரியவா காயத்ரி:

ஓம் காஞ்சி வாஸாய வித்மஹே
சாந்த ரூபாய தீமஹி |
தன்னோ சந்த்ரசேகரேந்த்ர ப்ரசோதயாத் ||

==================================================================

இந்த வார பிரார்த்தனைக்கான கோரிக்கைகளை பார்ப்போமா?

குருவே இது உங்களுக்கு அடுக்குமா?

மயிலாடுதுறையை அடுத்த நாகங்குடியை சேர்ந்தவர்கள் குருமூர்த்தி (80) மற்றும் சுகந்தா (75) தம்பதியினர். அவர்களுக்கு மஹாலக்ஷ்மி (50) என்கிற மகளும் வைத்யநாதன் (46) என்கிற மகனும் உள்ளனர். இவர்களின் வீட்டு மருமகன் அதாவது திருமதி.மஹாலக்ஷ்மி அவர்களின் கணவர் திரு.கிருஷ்ணமூர்த்தி (55) கும்பகோணத்தில் உள்ள கல்லூரி ஒன்றில் விரிவுரையாளராக பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு ஒரு மகள். அவருக்கு திருமணமாகி கணவரோடு வசித்து வருகிறார்.

பெரியவர் குருமூர்த்தி & சுகந்தா தம்பதியினர்
பெரியவர் குருமூர்த்தி & சுகந்தா தம்பதியினர்

ஒரு நாள் திரு.கிருஷ்ணமூர்த்தி திடீரென மூர்ச்சையடைந்து வீழ்ந்துவிட, மயிலாடுதுறையில் உள்ள மருத்துவமனை ஒன்றில் அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. தொடர்ந்து கோமாவில் விழுந்தவர் மீளவேயில்லை. பல்வேறு டெஸ்ட்டுகள் எடுத்து பார்த்ததில் அவருக்கு மூளையில் கட்டி (BRAIN TUMOUR) இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.  இதை அடுத்து சென்னையில் வடபழனியில் உள்ள மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. டியூப் மூலமாகத் தான் உணவு சென்றுவருகிறது. ஒரு நாளைக்கு சுமார் ரூ.15,000/- என்று பல நாட்கள் செலவழித்த நிலையிலும் மருத்துவர்கள் “தற்போது எதுவும் கூற முடியாது, என்ன வேண்டுமானாலும் நடக்கலாம், இனி வீட்டில் வைத்து ட்ரீட்மெண்ட் கொடுங்கள்!” என்று கைவிட்டுவிட்டனர்.

திரு.கிருஷ்ணமூர்த்தி அவர்களுக்காக நாம் நிச்சயம் மகா பெரியவாவிடம் சண்டையே போடவேண்டும். ஏனெனில் மஹா பெரியவர் 1952 இல் நாகங்குடி வந்தபோது குருமூர்த்தி & சுகந்தா தம்பதியினர் தற்போது இருக்கும் வீட்டில் தான் தங்கினார். அவர் தங்கியிருந்த வீடு என்பதாலேயே அதை பிற்காலத்தில் 1962 இல் வாங்கியபோது எந்த வித ஆல்டரேஷனும் செய்யாமல் அந்த வீட்டை ஒரு கோவில் போல பரமாரித்து வருகின்றனர் இந்த முதிய தம்பதியினர்.

காஞ்சி மகானை தவிர பெரியவர் குருமூர்த்திக்கும் அவர் மனைவி சுகந்தா அம்மாவுக்கு எதுவுமே தெரியாது. அவர் மீது உயிரையே வைத்துள்ளனர். (அருகிலுள்ள படத்தை பாருங்கள். அந்த சிறிய படத்தில் எத்தனை மகா பெரியவா படம் இருக்கிறது என்று!!) அப்படிப்பட்டவர்களின் குடும்பத்திற்கு இப்படி ஒரு சோதனையா? குருவே இது உங்களுக்கு அடுக்குமா?

சமீபத்தில் நாகங்குடி சென்றபோது இவர்கள் அறிமுகம் கிடைத்தது. தொடர்ந்து நடைபெற்ற சம்பவங்கள் உணர்சிக் குவியல் என்றால் மிகையாகாது. நம் தளம் மேற்படி குடும்பத்தினருக்கு நிறைய கடன்பட்டுள்ளது. வரும் குருவாரம் அதை விரிவாக காணலாம்.

நேற்று மாலை சுகந்தா அம்மா நம்மிடம் பேசும்போது மருமகன் பேச்சு மூச்சற்று கிடக்கும் நிலையை கூறி அழுதே விட்டார்.

’மஹா ம்ருத்யுஞ்சய மந்திர’த்தை சொல்லுங்கள் என்றோம்.

“24 மணிநேரமும் அதை சொல்லி வருகிறேன். என் மகளும் அதை சொல்லி வருகிறாள்!!” என்றார்.

“உங்கள் மருமகனைப் மருத்துவமனையில் பார்த்து மகா பெரியவர் குஞ்சித பாதத்துடன் இருக்கும் படத்தை தரவேண்டும். மருத்துவமனை வார்ட் மற்றும் இதர விபரங்களை கொடுங்கள்” என்றோம்,

“மகா பெரியவா படம் என்னிடம் மட்டுமல்ல என் மகளிடம் கூட இருக்கிறது. அதை அவள் பார்க்காத நேரமேயில்லை” என்றார்.

எதையுமே அவர்களிடம் நம்மால் கூற முடியவில்லை. எதைச் சொன்னாலும் அவர்கள் அதை ஏற்கனவே செய்திருக்கிறார்கள் அல்லது செய்து வருகிறார்கள். இந்த நிலையில் நம்மால் மகா பெரியவாவை கடிந்து கொள்வதை தவிர வேறு என்ன செய்யமுடியும்?

“எங்கள் தனிப்பட்ட கோரிக்கையை வேண்டுமானால் கிடப்பில் போடுங்கள். இந்த குடும்பத்தை எப்படியாவது ரட்சியுங்கள் பெரியவா!” என்று தான் கேட்கிறோம் அவரிடம்.

குருமூர்த்தி (80) மற்றும் சுகந்தா (75) தம்பதியினரின் மருமகன் கிருஷ்ணமூர்த்தி BRAIN TUMOUR பாதிப்பிலிருந்து உடனடியாக நீங்கி பரிபூரண நலனை பெறவும் முன்பைப் போல ஆரோக்கியத்துடனும் அவர் தன் பணியை தொடரவும் அவரை நம்பியிருக்கும் குடும்பத்தினர் காப்பாற்றப்படவும், சகல சௌபாக்கியங்களும் நோயற்ற வாழ்வும் குறைவற்ற செல்வமும் மேற்படி குடும்பத்தினர் அனைவரும் பெறவும் நாம் நித்தம் தொழும் நம் குரு மகா பெரியவாவை வேண்டுவோம்.

==================================================================

தன்னிகரற்ற சமூக சேவகி திருமதி.சாந்தி ஸ்ரீஹரி அவர்கள் நலம் பெறவேண்டும்!

முன்னாள் நடிகையும் சமூக சேவகியுமான ‘டிஸ்கோ சாந்தி’ என்று அழைக்கப்படும் திருமதி.சாந்தி ஸ்ரீஹரி அவர்கள் கல்லீரல் பாதிப்பால் சிங்கப்பூரில் உள்ள மருத்தவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். அவருடைய தங்கை லலிதகுமாரி உடனிருந்து கவனித்து வருகிறார்.

Srihari-Disco-Shantiகணவர் இறந்த துக்கத்தால் சாந்தி அவர்கள் உடல் நலம் குன்றி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதை அறிந்து மிகவும் கவலையுற்றோம். எந்த வித விளம்பரங்களுமின்றி  சாந்தி அவர்கள் இந்த தாய்த் திருநாட்டுக்கு செய்து வந்த சேவைக்கு இந்த வானத்தையும் பூமியையும் ஒருங்கே கொடுத்தால் கூட ஈடாகாது.

உடனடியாக அவரைப் பற்றியும் மற்றவர்கள் அதிகம் அறிந்திராத அவரது சமூக சேவைகளை பற்றியும் நம் தளத்தில் நேற்று முன்தினம் பதிவளித்தோம். வரலாறு காணாத ஹிட்டாகிவிட்ட அந்த பதிவு சமூக வலைத்தளங்களில் பரபரப்பாக பகிரப்பட்டு வருகிறது. (பார்க்க : ஒரு கவர்ச்சி நடிகையின் மறுப்பக்கம்!)

படிப்பவர்கள் மனசாட்சியை உலுக்கி எடுக்கும் விதம் அந்த பதிவு அமைந்திருப்பதாக பலர் நம்மிடம் கருத்து தெரிவித்து வருகின்றனர். மேலும் அந்த பதிவைப் படித்த பலர் தற்போது சாந்தி அவர்களுக்காக பிரார்த்தித்து வருகின்றனர். நமது வாராந்திர பிரார்த்தனை கிளப்பிலும் அவருக்காக பிரார்த்தனையை சமர்பித்து அவருக்காக இறையருளை பெற்றுத் தர விரும்பி இங்கு பதிவு செய்கிறோம்.

இந்நிலையில் சிங்கப்பூரில் உள்ள நமது வாசகி ஒருவரை தொடர்புகொண்டு உடனடியாக அவரிடம் மகா பெரியவா படம் ஏதேனும் இருந்தால், அதை கொண்டு போய் சாந்தி அவர்களிடம் மருத்துவமனையில் எப்படியாவது சேர்பித்துவிடும்படியும், தங்கை லலிதகுமாரியிடம் நமது பிரார்த்தனை பற்றி எடுத்துக்கூறி முடிந்தால் ஞாயிறு மாலை நடைபெறவுள்ள கூட்டுப் பிரார்த்தனையில் அவர்களையும் இணையும்படி கேட்டுக்கொள்ளுமாறு கூறியிருக்கிறோம். எப்பாடுபட்டாவது சாந்தி அவர்களை மருத்துவமனையில் சந்தித்து மகா பெரியவா படத்தை தந்துவிடுவதாக அந்த வாசகியும் உறுதியளித்திருக்கிறார். அவருக்கு நம் நன்றி.

சகோதரி திருமதி.சாந்தி ஸ்ரீஹரி அவர்கள் பரிபூரண குணம் பெற்று வீடு திரும்பவேண்டும். குடும்பத்தினருடனும் தன மகன்களுடனும் அவர் சந்தோஷமாக வாழவேண்டும். மேன்மேலும் சேவையில் சிறந்து விளங்கவேண்டும். அவரை நம்பி இரண்டு குடும்பங்கள் இருக்கின்றன. பல கிராம மக்கள் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்லவேண்டும்
இவர் போல யார் என்று ஊர் சொல்லவேண்டும்

==================================================================

பொது பிரார்த்தனை

Dharmapuri newborn

தருமபுரியில் குழந்தைகளை பறிகொடுத்து தவிக்கும் தாய்மார்கள் ஆறுதல் பெற வேண்டும்!

மருத்துவ வசதிகள் முன்னேறிவிட்டன என்று நாம் மார்தட்டிக் கொள்ளும் இந்த காலத்தில், பிறந்து சில நாட்களே ஆனா பச்சிளம் குழந்தைகள் பல தருமபுரி அரசு மருத்துவமனையில் இறந்துபோயுள்ளன. எடை குறைவு, குறைபிரசவம், மஞ்சள் காமாலை போன்றவற்றால் பாதிக்கப்படும் குழந்தைகள் தருமபுரி அரசு மருத்துவமனையில் உள்ள பச்சிளம் குழந்தைகளுக்கான தீவிர சிகிச்சைபிரிவில் அனுமதிக்கப்படுகின்றன. கடந்த 14 மற்றும் 15 ஆம் தேதிகளில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த 6 குழந்தைகள் உயிரிழந்ததை தொடர்ந்து சுகாதாரத் துறை மருத்துவர் சீனிவாசன் தலைமையிலான குழுவினர் மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டனர். இந்நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த மேலும் 4 பச்சிளம் குழந்தைகள் நேற்று உயிரிழந்தன. போதிய மருத்துவர்களும், செவிலியர்களும் இல்லாததே குழந்தைகள் உயிரிழப்புக்கு காரணம் என பாதிக்கப்பட்டவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.அடிப்படை வசதிகள் இல்லாததே காரணம் என எதிர்கட்சிகள் குற்றம் சாட்டிவருகின்றன.

இதுவரை தருமபுரி, சேலம் இரண்டு மாவட்டங்களிலும் இதுவரை 22 குழந்தைகள் பலியாகியுள்ளன.

எது எப்படியோ பத்து மாதம் கருவை சுமந்து குழந்தையை பெற்ற தாய்மார்களுக்கு தான் தெரியும் அந்த துக்கம்.

தேவையில்லாதவற்றை வாக்கு வங்கி அரசியலுக்காக அரசுகள் அள்ளி வழங்குவதால் தான் மருத்துவம் போன்ற அடிப்படை வசதிகளுக்கு அரசால் நிதி ஒதுக்க முடிவதில்லை. கல்வி, மருத்துவம் இரண்டை தவிர அரசு எதையுமே இலவசமாக தரக்கூடாது.

பிறந்த குழந்தைகளை பறிகொடுத்து தவிக்கும் அந்த தாய்மார்கள் ஆறுதல் பெறவும், மீண்டும் அவர்கள் அனைவருக்கும் குழந்தைச் செல்வம் கிட்டவும் இறைவனை பிரார்த்திப்போம்.

இதுவே இந்த வார பொது பிரார்த்தனை!

==================================================================

http://rightmantra.com/wp-content/uploads/2013/04/Mahaperiyava-36.jpgமயிலாடுதுறையை சேர்ந்த திரு.கிருஷ்ணமூர்த்தி (55) அவர்களுக்கு BRAIN TUMOUR நீங்கி அவர் பரிபூரண குணமடைந்து,  பணிகளை  செய்யவும், அவரும் குடும்பத்தினரும் சகல சௌபாக்கியங்களை பெற்று  வாழவும், கல்லீரல் பாதிப்பால் உடல்நலம் குன்றி சிங்கப்பூர் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வரும் முன்னாள்  நடிகையும், சிறந்த சமூக சேவகியுமான திருமதி.சாந்தி ஸ்ரீஹரி அவர்கள் பரிபூரண குணமடைந்து தன் சேவையை மேன்மேலும் தொடரவும், துயரத்தில் மூழ்கியுள்ள அவர் தம் குடும்பத்தினர் மகிழ்ச்சிக் கடலில் மூழ்கவும்   எல்லாம் வல்ல இறைவனையும் நம்மை என்றும் வழி நடத்தும் மகா பெரியவரை பிரார்த்திக்கிறோம்.  அதே போன்று தருமபுரியில் பச்சிளம் குழந்தைகளை பறிகொடுத்து கதறும் தம்பதிகளுக்கு ஆறுதல் கிடைக்கவும் அவர்களுக்கு மீண்டும் சந்தான பாக்கியம் கிடைக்கவும் இறைவனை வேண்டுவோம்.

இந்த வார பிரார்த்தனைக்கு தலைமை ஏற்கும் திரு.சாணு புத்திரன் அவர்கள்
எல்லா நலனும் வளமும் பெற்று இறைத்தொண்டில் மேன்மேலும் சிறந்து விளங்கவும் பிரார்த்திப்போம்.

நமது பிரார்த்தனைகளை இறைவனிடம் கொண்டு சேர்த்து பலன் பெற்று தரவேண்டிய பொறுப்பு நாம் என்றும் வணங்கும் மகா பெரியவா அவர்களையே சாரும். அவரது திருவடிகளில் இந்த பிரார்த்தனைகளை சமர்ப்பிக்கின்றோம்.

கூட்டுப் பிரார்த்தனை அவருக்கு மிகவும் பிடித்த ஒன்று என்பதால் நிச்சயம் மகா பெரியவா அவர்கள் இந்த விஷயத்தில் சீக்கிரமே தமது அனுக்ரஹத்தை நல்குவார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது.

இதற்கு முன்பு, பிரார்த்தனை கிளப்பில் நாம் பிரார்த்தனை செய்தவர்களுக்காகவும் ஒரு சில வினாடிகள் பிரார்த்திப்போம்.

நாம் இறைவனிடம் எதை வேண்டிக்கொண்டாலும் நாமும் அதற்காக உழைப்போம்!!!

பிரார்த்தனை நாள் : நவம்பர் 23, ஞாயிற்றுக்கிழமை நேரம் : மாலை 5.30 – 5.45

இடம் : அவரவர் இருப்பிடங்கள்

=============================================================

பிரார்த்தனை கிளப்பிற்கு கோரிக்கை அனுப்பியுள்ள மற்றவர்கள் கவனத்திற்கு:

உங்கள் கோரிக்கைகள் அடுத்தடுத்து இடம்பெறும். கோரிக்கை இடம்பெறும் வரையிலும் அதற்கு பிறகும் கூட நீங்கள் தவறாமல் வாரா வாரம் நடைபெறும் இந்த பிரார்த்தனையில் கலந்துகொண்டு பிரார்த்தனை செய்துவாருங்கள். உங்கள்  வேண்டுதலை பிரார்த்தித்துவிட்டு கூடவே இங்கு கோரிக்கை அனுப்பும் பிறர் நலனுக்காகவும் சில நிமிடங்கள் பிரார்த்தனை செய்யுங்கள். பிறருக்காக பிரார்த்தனை செய்வது மிகவும் உன்னதமான விஷயம்.  இறைவனுக்கு மிகவும் ப்ரீதியான ஒன்று.

=============================================================

பிரார்த்தனையை துவக்கும் முன் மூன்று முறை ராம…ராம….ராம… என்று உச்சரித்துவிட்டு பிரார்த்தனையை ஆரம்பிக்கவும். ராம நாமத்தை மூன்று முறை உச்சரித்தால் விஷ்ணு சஹஸ்ர நாமத்தை முழுமையாக உச்சரித்த பலன் கிடைக்கும்.

அதே போன்று முடிக்கும்போது ‘ஓம் சிவ சிவ ஓம்’ என்ற மந்திரத்தை மூன்று முறை உச்சரிக்கவும்.

(பிற மதத்தவர்கள் இந்த பிரார்த்தனையில் பங்கேற்றால் அவரவர் வழிபாட்டு தெய்வத்தை நினைத்து பிரார்த்தனை செய்யும்படி கேட்டுக்கொள்கிறோம். பிரார்த்தனைக்கு மதம், இனம் மொழி கிடையாது என்பது நீங்கள் அறிந்ததே.)

=============================================================

உங்கள் கோரிக்கை பிரார்த்தனை கிளப்பில் இடம் பெற…

உங்கள் கோரிக்கைகள் இந்த பகுதியில் வெளியிடப்பட்டு பிரார்த்தனை செய்யப்படவேண்டும் என்று நீங்கள் விரும்பினால் அதை எங்களுக்கு மின்னஞ்சல் செய்யவும்.

உங்கள் வேண்டுதல்கள் குடும்பப் பிரச்னை, நோயிலிருந்து விடுதலை, நல்வாழ்வு, அறுவை சிகிச்சையில் வெற்றி, வழக்குகளில் நல்ல தீர்ப்பு (நியாயம் உங்கள் பக்கம் இருப்பின்), வேலைவாய்ப்பு மற்றும் இதர நியாயமான கோரிக்கைகளை அடிப்படையாக வைத்து இருக்கலாம். பிரார்த்தனையால் தீர்க்க முடியாத பிரச்சனைகளே இல்லை!

உங்கள் பெயரையும் சூழ்நிலையும் வெளியிட விரும்பாவிட்டால் வேறு ஒரு பெயரை நீங்களே குறிப்பிட்டு நமக்கு மின்னஞ்சல் அனுப்பவும். பொதுவாக உங்கள் பிரச்னை நீங்க குறிப்பிடும் புனைப் பெயருடன் அறிவிக்கப்பட்டு பிரார்த்தனை நடைபெறும்.

E-mail : simplesundar@gmail.com    Mobile : 9840169215

=============================================================

பிரார்த்தனையின் மகத்துவத்தை போற்றும் வகையிலும் இறையருளின் தன்மைகளை வலியுறுத்தும் வகையிலும் ஒவ்வொரு பிரார்த்தனை பதிலும் ஒரு கதை இடம்பெறுகிறது. அந்த கதைகளை படிக்க, வாசச்கர்கள் கீழ்கண்ட முகவரியை செக் செய்யும்படி கேட்டுகொள்ளப்படுகிறார்கள்.

இதற்கு முன்பு பிரார்த்தனை கிளப் பகுதியில் இடம் பெற்ற பதிவுகளை படிக்க:
http://rightmantra.com/?cat=131

=============================================================

சென்ற வார பிரார்த்தனைக்கு தலைமை தாங்கியவர் : காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் துணைப் பதிவாளரும், ஆன்மீக ஆராய்ச்சியாளருமான நண்பர் திரு.காளைராசன் அவர்கள்.

[END]

20 thoughts on “‘தேடி வரும் தெய்வத் திருவருள்!’ — ரைட்மந்த்ரா பிரார்த்தனை கிளப்!!

  1. திரு சாணு புத்திரன் அவர்களுக்கு எனது பணிவான வணக்கங்கள்

    இந்த வார பிரார்த்தனைக்கு கோரிக்கை வைத்திருக்கும் அனைவருக்காகவும் பிரார்த்தனை செய்வோம். தருமபுரியில் குழந்தைகளை இழந்து வாடும் பெற்றோர்கள் ஆறுதல் பெற பிரார்த்தனை செய்வோம்

    இந்த வார பிரார்த்தனைக்கு தலைமை ஏற்கும் திரு சாணு புத்திரன் எல்லா வளமும் பெற்று வாழ பிரார்த்தனை செய்வோம்

    //கூற்றாயினவாறு விலக்கிலீர்
    கொடுமை பல செய்தன நானறியேன்
    ஏற்றா அடிக்கே இரவும் பகலும்
    பிரியாது வணங்குவநெப்[பொழுதும்
    தோற்றாதென் வயிற்றினகம் படியே
    குடரோடு துடக்கி முடக்கியிட
    ஆற்றேன் அடியே நதிகைக் கெடில
    வீரட்டானத் துறை அம்மானே

    லோகா சமஸ்தா சுகினோ பவந்து

    ராம் ராம் ராம்

    நன்றி
    உமா

    1. பெரியவா சரணம்

      மிக்க நன்றி!

      “லோகா சமஸ்தா சுகினோ பவந்து” என்ற உங்களது உள்ளம் மகத்தானது. வணங்கி நிற்கின்றேன் நானும்!

      இவ்வுலகிலேயே பெரும் தனவான் யாரென்றால் சதாசர்வ காலமும் இறைவனை வழிபட்டுக்கொண்டே இருப்பவன் தான்;

      பெரும் வள்ளல் யாரென்றால் மற்றவர்களுக்காக ப்ரார்த்தித்துக் கொண்டிருப்பவன் தான்.

      நான் சொல்லவில்லை இதனை; ஒரு மஹானின் அருட்சொல் இது.

      தாங்கள் வள்ளல் என்பதை நிறைவுபடுத்திவிட்டீர்கள். மிக்க நன்றி!

      உங்கள் அனைவரது ப்ரார்த்தனையின் பலனால் கோவிந்தபுரத்தில் நல்ல தரிசனமும், ஆழ்ந்த த்யானமும், ப்ரார்த்தனையையும் செவ்வனே செய்ய இயன்றது. நம் அனைவரது ப்ரார்த்தனைதனையும் ஸ்ரீமஹாஸ்வாமிகளும், காமகோடி குருமார்களும் நற்பலனைத் தருவதாகச் செய்ய வணங்கி நிற்கின்றேன்.

      பெரியவா கடாக்ஷம்

      – சாணு புத்திரன்.

      நாம் தனவானாய் இருக்கின்றோமோ இல்லையோ வள்ளலாக இருக்க முயல்வோம் என்பதற்கேற்ப “லோகா சமஸ்தா சுகினோ பவந்து”

      1. மகா பெரியவா சரணம்

        சார், தங்களது பின்னூட்டத்தை படிக்கும் பொழுது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.

        ஓம் ஸ்ரீ குருப்யோ நமஹ்

        நன்றி
        உமா

  2. வணக்கம்……….

    திரு. சாணு புத்திரன் அவர்களுக்கு வணக்கங்கள்…………தன் பெயர் வேறாகினும் தன் தாயின் புத்திரன் என்று சொல்லிக் கொள்வதில் பெருமைப் படுகிறார்……….வாழ்க…….

    கோவிந்தபுரம் தபோவனம் குரு தேவரின் படம் அருமை……… எங்கிருந்தாலும் நம் தளத்திற்கு வந்து அருள் புரிந்து விடுகிறார்கள்………

    திரு.கிருஷ்ணமூர்த்தி அவர்கள் விரைவில் நலம் பெறவும், சகோதரி சாந்தி அவர்கள் குணமடையவும், தர்மபுரியில் தம் தாயிடமிருந்து பிரிந்த குழந்தைகள் மீண்டும் அவர்களிடமே வந்து சேரவும் குருவருளையும், திருவருளையும் வேண்டுவோம்………..

    1. பெரியவா சரணம்.

      தரணி உள்ளவரை தாய்மை நிலைபெற்றிருக்குமென சான்றோர் உரைத்ததன் காரணமே தன்னிகரில்லாத அன்பினைப் பொழுயும் தாய்மையால் தானே!

      பெற்றவள் என்னை ஈன்றெடுத்த பொழுதில் எனைப் பார்த்து எந்த அளவு மகிழ்ந்திருப்பாள் என்று நான் அறியாவிட்டாலும், நிமிர்ந்து நின்று கூற விரும்புகிறேன்… என்னை ஒவ்வொருவரும் “சாணு புத்திரன்” என அழைக்கையில் அவளது அன்றைய பொழுதின் பெருமிதத்தினை விடவும் ஒரு நூலளவேனும் என்னுடையது அதிகமாகத் தான் இருக்கும்.

      தரணி உள்ள வரையிலும் தாய்மை நிலைத்திருக்கும் என்பது சான்றோர் வாக்கு. அந்தத் தாய்மையின் நிலையோடு நம் அனைவரையும் காத்து ரக்ஷிக்கும் மஹாஸ்வாமிகளிடம் எல்லோரது ப்ரார்த்தனைகளையும் எடுத்துச் சென்று உருகி நின்று வேண்டிட உதவிய ஒவ்வொரு ஜீவர்களுக்கும் நமஸ்காரம். ஸ்ரீசரணாளின் அனுக்ரஹத்தில் திருமதி சாந்தி ஸ்ரீஹரி, க்ருஷ்ணமூர்த்தி, மற்றும் நிலைகுலைந்து தவிக்கும் தாய்மைகள் மட்டுமன்றி அனைவரது ப்ரார்த்தனைகளையும் ஏற்று எல்லோரையும் சுகமாக ஜீவிக்க வைக்க அவரது பாதாரவிந்தங்களில் உங்கள் அனைவரோடும் சாஷ்டாங்க நமஸ்காரங்கள் செய்கின்றேன்.

      குருவருள் அனைவரையும் காக்கும்!

      பெரியவா கடாக்ஷம்.

      நமஸ்காரங்களுடன்,
      சாணு புத்திரன்.

  3. வணக்கம் சுந்தர் சார்

    திரு. சாணு புத்திரன் அய்யாஅவர்களுக்கு சிரம் தாழ்ந்த வணக்கங்கள்

    நாம் செய்யும் பிராத்தனை விட அய்யா அவர்கள் செய்யும் பிராத்தனைக்கு வலிமை ரொம்ப அதிகம் பெரியவா நிச்சயம் செவிசாய்ப்பார் அவர் பாதத்தில் வைத்த கோரிக்கை என்றும் வீண்போகது..

    மிக்க நன்றி

    1. பெரியவா சரணம்.

      நமது புராணங்களில் சொல்வது போல, கங்கை பாவங்களை அழித்து விடுகிறாள்; நிலவு தாபத்தை (எரிச்சலை) குறைக்கிறது; கற்பகத்தரு ஏழ்மையையை அழிக்கிறது. இவை தனித்தனியாகச் செய்கின்றன. ஆனால் ஸாதுக்களோ, பாவம், தாபம், தைனியம் (ஏழ்மை) எல்லாவற்றையும் ஒரு சேர நீக்கிவிடும் ஆற்றல் உள்ளவர்கள்.

      நாம் அனைவரும் கலியுகத்து நடமாடும் தெய்வத்தின் கால்களில் விழுந்து ப்ரார்த்தித்துள்ளோம். அவரது கருணையில் சர்வ நிச்சயமாய் அனைவரும் காக்கப் படுவார்கள் என்பது திண்ணம்.

      த்யான மூலம் குரூர் மூர்த்தி: பூஜாமூலம் குருபதம் |
      மந்த்ர மூலம் குரோர் வாக்யம் மோக்ஷ மூலம் குருக்ருபா ||

      பெரியவா கடாக்ஷம்.

      நமஸ்காரங்களுடன்
      சாணு புத்திரன்.

  4. சுந்தர்ஜி

    திரு. சாணு புத்திரன் அவர்களுக்கு வணக்கங்கள் பல

    குருமூர்த்தி சுகந்தா தம்பதியினரின் மருமகன் கிருஷ்ணமூர்த்தி BRAIN TUMOUR பாதிப்பிலிருந்து உடனடியாக நீங்கி பரிபூரண நலனை பெற -சகோதரி திருமதி.சாந்தி ஸ்ரீஹரி அவர்கள் பரிபூரண குணம் பெற்று வீடு திரும்பவேண்டும். என நம் அனைவரும் சாணு புத்திரன் அவர்களுடன் சேர்த்து மகா பெரியவா அவரது திருவடிகளில் இந்த பிரார்த்தனைகளை சமர்ப்போம்.

    பிறந்த குழந்தைகளை பறிகொடுத்து தவிக்கும் அந்த தாய்மார்கள் ஆறுதல் பெறவும், மீண்டும் அவர்கள் அனைவருக்கும் குழந்தைச் செல்வம் கிட்டவும் இறைவனை பிரார்த்திப்போம்.

    கோவிந்தபுரம் மகா பெரியவா தபோவனத்தில் உள்ள மூலவரின் புகைப்படம் அருமை

    1. பெரியவா சரணம்.

      தங்களைப் போன்ற நல்ல உள்ளங்களோடு சேர்ந்து ப்ரார்த்திக்கும் ஒரு மஹா பாக்கியத்தினை எம்பெருமான் ஆச்சார்யன் எனக்கு வழங்கியுள்ளார். இவ்வரம் போலவே இன்னுமொரு வரமாக நம் அனைவரது ப்ரார்த்தனைக்கும் நல்ல பலனைக் கட்டாயமாகத் தருவார் என்ற நம்பிக்கை வெகுவாக உள்ளது.

      பெரியவா கடாக்ஷம்.

      நமஸ்காரங்களுடன்,
      சாணு புத்திரன்.

  5. பெரியவா சரணம்.

    அடியாரைப் போற்றுதும்… ஆண்டவனைப் போற்றுதும் என்பார்கள். கலியுகத்தில் பகவான் குருஸ்வரூபமாகவே அவதாரம் செய்வார் என்பது சான்றோர் வாக்கு. அப்பேர்ப்பட்ட பரமேஸ்வர ஸ்வரூபியாக ஸ்ரீமஹாஸ்வாமிகள் நமக்கென அவதரித்து, வாழ்வு நெறிதனை நமக்கெல்லாம் சொல்லியருளியதோடு, வாழ்ந்தும் காட்டிய மஹான். இன்றளவிலும் சூக்ஷமரூபமாய் நமக்கெல்லாம் அருள்பாளித்துவரும் ஜெகத்குருவல்லவா அவர்! அந்த விழுப்புரத்துதித்த வேதவிழுபொருளை அனைவர்க்காகவும் ப்ரார்த்திப்பது தானே முறையும் கூட! நேற்றையதினம் எனது ப்ரார்த்தனைப் பாடலைப் பகிரும் பொழுதில் எழுதியதை அடுத்த சில நிமிடங்களிலேயே செய்யவைத்த பரம்பொருள் அவர். ஆம்! முகமறியாத ஒரு ஜீவனுக்காக எந்த ஒரு ப்ரதிபலனும் பாராமல் ப்ரார்த்தனை செய்தோமானால் அந்த ஜகத்குரு கட்டாயம் நம்மையும் ரக்ஷிப்பார் என்பதில் எள்ளளவும் ஐயமில்லையே!

    ஞாயிறு காலையில் கோவிந்தபுரம் தபோவனத்திற்குச் சென்று ஸ்ரீமஹாஸ்வாமியை தரிசிக்கும் பாக்கியத்தில் அனைவருக்காகவும் ப்ரார்த்திப்போம். குஞ்சித சங்கர த்யானம் சர்வ ரோக நிவாரணம் என்பதற்கேற்ப குஞ்சிதபாதமோடு சென்று அந்த சங்கரனை தரிசித்துவிட்டு அன்றைய தினம் மதியம் தில்லையம்பலத்தானாம் குஞ்சிதபாதத்தையும் தரிசித்து அனைவருக்காகவும் ப்ரார்த்திப்போம்! அந்த பொழுதின் அனைத்து உறவுகளும் தாங்களெல்லாம் இருந்த இடத்திலிருந்தே என்னோடு சேர்ந்து ப்ரார்த்திக்கவேண்டி அனைவரையும் நமஸ்கரித்து வேண்டுகிறேன். இன்றைய பொழுதினில் ரோகம் காரணமாய் கஷ்டப்பட்டுக்கொண்டிருக்கும் ஜீவர்களுக்கு மட்டுமல்லாமல், துன்பத்தால் வாடும் ஒவ்வொரு ஜீவர்களும் நிவாரணம் பெற்று நல்வாழ்வு வாழ அனைவரும் எங்களோடு ப்ரார்த்திக்க வேண்டுமாய் நமஸ்கரிக்கின்றேன். பவதி பிக்ஷாந்தேஹி!

    பெரியவா கடாக்ஷம்.

    நமஸ்காரங்களுடன்,
    சாணு புத்திரன்.
    குருவுண்டு பயமில்லை; குறையேதும் இனியில்லை!

    1. சாணு புத்திரன் அய்யா அவர்களுக்கு ரைட் மந்திரா தளம் சார்பாக கோடி வணக்கங்கள்! எங்கள் தளத்தின் பிரார்த்தனைக்கு குருவின் பரிபூரண அருள் பெற்ற நீங்கள் தலைமை ஏற்பது இந்த வாரம் எங்களுக்கு கிடைத்த வரப்ப்ரசாதம்.

      உங்களோடு பிரார்த்திக்க நாங்கள் அல்லவா கொடுத்து வைத்து இருக்க வேண்டும்? நிலைமை அவ்வாறு இருக்க நீங்கள் எங்களை நமஸ்கரித்து பிரார்த்தனைக்கு அழைப்பது உங்களின் பெருந்தன்மையினை காட்டுகிறது. சர்க்கரை பந்தலில் தேன் மழை. எல்லாம் பெரியவா அவர்களின் கருணை மழை அன்றி பிறிதில்லை. உங்கள் குஞ்சித பாத செய்யுளை படத்தோடு தினமும் தரிசிக்க அலுவலக கணிப்பொறியில் சேமித்து வைத்துள்ளோம். உங்கள் வருகையினால் எங்கள் தளமும் வாசகர்களும் புனித அடைந்தோம். இந்த வாரம் மிக சிறப்பு வாய்ந்த வாரம்!! சுந்தர்ஜி அவர்கள் தளம் ஆரம்பித்த பலனை உங்கள் வருகையால் அடைந்து விட்டார் என்றே இனி சொல்லலாம். மீண்டும் தங்களை வணங்குகிறேன்! நன்றி

      1. பெரியவா சரணம்.

        ப்ரார்த்தனை என்பதை பிக்ஷையாக பெறுகையில் அது சத்யமான நற்பலனைத் தரும் என்பதை ஒரு பெரியவர் கூற அறிந்த நொடி முதலாய் அதன்படியே நடந்து வருகின்றேன். உலகிலேயே ஒரு உன்னதமான தர்ம கார்யம் உயர்ந்ததாகக் கருதப்ப்டுவது, நாம் முகமறியா ஜீவர்களுக்காக ப்ரார்த்திப்பது தாம் என நம் தர்ம நெறிகள் கூறுகின்றன.

        அனாதப்ரேத சம்ஸ்காராத் அஸ்வமேத பலம் லபேத் என காஞ்சி ஸ்ரீமஹாஸ்வாமிகள் கூறி அருளியோயுள்ளார்கள். இதன் அர்த்தம் எவரொருவர் அனாதி ப்ரேதத்துக்கு அந்த ப்ரேத ஜீவியின் சமயப்படியோ அல்லது தமது சமய நெறிப்படியோ சம்ஸ்காரம் செய்வித்து அருள்கின்றாரோ அவருக்கு அஸ்வமேத யாகம் செய்த பலன் கிட்டிடும் என்றார். அந்த அளவு நம்மால் இயலாவிட்டாலும் மற்றவர் வாழ் நலன் கருதி ப்ரார்த்தனை செய்யவாவது ஒரு மஹாபாக்கியம் கிட்டியதென மனதார சந்தோஷிக்கின்றேன். நம் ப்ரார்த்தனையில் பலன் அந்தந்த ஜீவிதர்களுக்கு கிட்டுமாயின் அது நமக்கு பேரானந்தத்தைத் தரும்.

        பெரியவா கடாக்ஷம்

        – சாணு புத்திரன்.

  6. இவ்வார பிரார்த்தனைக்கு தலைமையேற்கும் திருவாளர்.சாணுபுத்திரன் அவர்களுக்கு எனது வணக்கங்கள். உடல்நிலை பாதிக்கப்பட்டிருக்கும் இருவரும் நிச்சயமாக குணம் பெறவேண்டியவர்கள். அவர்களை மகாபெரியவா தம் கருணையால் காப்பாற்றவேண்டும் என வேண்டிக்கொள்கிறேன். குழந்தைகளை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு மன அமைதியை பெரியவா அவர்கள் அளிக்க வேண்டும். இனியும் இக்கொடுமை தொடரா வண்ணம் மருத்துவர்கள் நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொள்வோம்.

    1. பெரியவா சரணம்.

      ஸ்ரீமஹாஸ்வாமியின் கருணாகடாக்ஷத்தில் அனைவரும் நலமோடிருக்க ப்ரார்த்திக்கின்றேன்.

      பெரியவா கடாக்ஷம்

      நமஸ்காரங்களுடன்
      சாணு புத்திரன்.

  7. மிகவும் அருமையாக உள்ளது. நண்பர் சாணுபுத்திரன் பிரார்த்தனைக்கு அனைவரும் துணை நிற்போம். ஜய ஜய சங்கர ஹர ஹர சங்கர

    1. பெரியவா சரணம்.

      தங்களது ஆசிகளில் கோவிந்தபுரம் மற்றும் சிதம்பரத்தில் நல்ல தரிசனமும், தடையில்லா ப்ரயாணமும், ஆத்மார்த்த ப்ரார்த்தனைகளும், சத்புருஷர்களது சத்சங்கமும் கிடைக்கப் பெற்றோம். ஸ்ரீமஹாஸ்வாமிகள் கருணாகடாக்ஷத்தில் அனைவரும் நலமோடு வாழ்வோமாக!

      பெரியய்வா கடாக்ஷம்.

      நமஸ்காரங்கலுடன்
      சாணு புத்திரன்.

  8. சுந்தர்ஜி,

    திரு சானு புத்திரன் அவர்களுக்கு என் பணிவான வணக்கங்கள். இந்த வார பரர்தனையில் இடம் பெற்றவர்களை கண்டிப்பாக மஹா பெரியவா காப்பாற்றுவார். நான் இருக்கிறேன் என்று ஓடோடி வந்து விடுவார்.

    மற்றும் சானு அவர்களின் தாயாருக்கும் என் அனந்த கோடி நமஸ்காரங்கள். என்ன தவம் செய்தீர்களோ இப்புத்திரனை பெறுவதற்கு. கண்ணு பட போகின்றதம்மா ….

    நன்றி

  9. பெரியவா சரணம்

    அற்புதமான நன்னாள் இன்று. புலரும் கதிர்கரத்தொனின் தரிசனம் கோவிந்தபுரம் ஸ்ரீ ராமநாம போதேந்திர சரஸ்வதி சுவாமிகள் பிருந்தாவன ஆஸ்ரமத்தில். அந்த சன்னதியில் ராம நாம ஜபம் செஇதபடியாக அவரது பிருந்தாவனத்தை வளம் வந்து பிரார்த்தனை செய்தோம்.

    திரு.கணேசன் ராமனுஜன் of Facebook Periyava Charanam group member with his family members joined me over there. Did a prayer at mahaswamy tapovanam with more than sixty good souls (photos shared in Periyava Charanam group in facebook lively fm there). Now on the way to chidambaram to have darshan of nataraja n pray. Shall write a detailed post in fb periyava groups. Also want to share that with periyavas permission took a snap of mahaswamy with pushpanjali which will be shared here shortly. He blessed all of us as Kunjitha Sankaran.

    என்னோடு சேர்ந்து பிரார்த்தித ஒவ்வொரு ஜீவர்களுக்கும் கோடானு கோடி நன்றிகள் மற்றும் எந்தன் ஆத்மார்த்த நமஸ்காரங்கள்.

    லோகத்தில் மிக மிக உசத்தியான பிக்ஷை பிரார்த்தனை பிக்ஷை தான். நீங்கள் எல்லோரும் அதனை எனக்கு தந்துள்ளீர்கள். மஹா புண்ணியம் செய்துள்ளீர்கள்.

    பெரியவா கடாக்ஷம்.

    1. என்னோடு கோவிந்தபுரத்தில் ப்ரார்த்திக்க திட்டக்குடியிலிருந்து தனது குடும்ப உறவுகளோடு வந்திருந்த அந்த அன்பானவரது பெயர் கணேசன் ராமசுகன் என்பதாகும். ஆத்மார்த்தமாக அவரும் அவரது மனைவியும் கண்களில் நீர்பணிக்க ப்ரார்த்தித்தனைக் கண்டு எமதுள்ளம் பெருமகிழ்வை அடைந்ததை உணர்ந்தேன். கூட்டுப் ப்ரார்த்தனைக்கு பெரிய வலிமையுண்டு என்பதற்கு பெரும் சான்று – உங்கள் அனைவரது ப்ரார்த்தனைகளாலும் அவை தந்த பலத்தாலும், கோவிந்தபுரத்தில் மட்டுமல்லாம் சிதம்பரத்திலும் எமது ப்ரார்த்தனை செவ்வனே நடைபெற்றது மட்டுமல்லாது சத்புருஷர்களைச் சந்திக்கும் பாக்கியமும் பெற்றோம்.

      நம் ப்ரார்த்தனைகளை செவிமடுத்து சர்வ வல்லமை பெற்ற ஈஸ்வரனிடத்திலிருந்து பலனை செவ்வனே பெற்றுத் தரவேண்டி ஸ்ரீமஹாஸ்வாமிகளை ஆத்மார்த்தமாக நமஸ்கரித்து வேண்டுகிறேன்.

      சாணு புத்திரன்.

Leave a Reply to சாணு புத்திரன் Cancel reply

Your email address will not be published. Required fields are marked *