Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Friday, March 29, 2024
Please specify the group
Home > Featured > 32 இலட்சணங்களும் அமையப் பெற்ற ஒரே சிவலிங்கம் — Rightmantra Prayer Club

32 இலட்சணங்களும் அமையப் பெற்ற ஒரே சிவலிங்கம் — Rightmantra Prayer Club

print
டம்பவனம், ஆலவாய், நான்மாடக்கூடல், தூங்காநகர் என்ற பல சிறப்புப் பெயர்களைக் கொண்டது வெள்ளியம்பலமாகிய மதுரை மாநகரம். மதுரையின் மையத்தில் நின்றருளும் அன்னை மீனாட்சியின் அருமைநாயகன் அருள்மிகு சோமசுந்தரேசுவரர்.

உலகில் உள்ள சித்தர்களுக்கு எல்லாம் தலைவனான சோமசுந்தரேசுவரர் வீற்றிருப்பதால் மதுரையானது “சுந்தரானந்த சித்தர் பீடம்” என்றும் அழைக்கப்படுகிறது.

Madurai temple, India

அருள்மிகு சோமசுந்தரேசுவரர் எனப் போற்றப்படும் சுயம்புலிங்கத்திற்குச் “சுந்தரன்” என்ற பெயரை யார் வைத்தார்?  ஏன் வைத்தார்?

பொதுவாகச் சிவலிங்கங்களை ஐந்து வகையாகப் பிரிக்கலாம்.

1. ஈசன் தானே விரும்பிச் சிவலிங்கமாக எழுந்தருளிய “சுயம்பு லிங்கங்கள்” முதலாவதாகும்.

2. மற்றபிற தெய்வங்கள், தேவர், விண்ணோர், கந்தர்வர் முதலானோர் வைத்து வணங்கி வழிபட்ட சிவலிங்கங்கள் இரண்டாவதாகும்.

3. இறைவனின் பிரதிநிதியாக மக்களை ஆண்ட மன்னர்கள் வைத்து வணங்கிய சிவலிங்கங்கள்   மூன்றாவதாகும்.

4. மற்றபடி மக்கள் தங்களது வழிபாட்டிற்காகச் சிவலிங்கங்களை வைத்து வழிபடுபவை நான்காவதாகும்.

5. இவைகள் தவிர அஃறிணை உயிரினங்கள் வழிபட்ட சிவலிங்கங்களும் உண்டு.

Sivalinga
அருள்மிகு பார்வதி உடனுறை பசுபதிஸ்வரர்

மொழிக்கு இலக்கணம் இருப்பது போன்று, ஒரு சிவலிங்கம் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதற்கு இலக்கணம் உண்டு. சிவலிங்கத்திற்கு மொத்தம் 32 இலட்சணங்கள் உண்டு.  இந்த 32 இலட்சணங்களும் அமையப் பெற்ற ஒரே சிவலிங்கம் மதுரையில் சுயம்புத் திருமேனியாய் வீற்றிருந்து அருளும் அருள்மிகு சோமசுந்தரேசுவரர் திருமேனியே ஆகும்.

(மேலே நீங்கள் காண்பது சென்னை புறநகரில் உள்ள ஒரு சிவாலயத்தின் லிங்கம். ஒரு மாதிரிக்கு தரப்பட்டுள்ளது!)

முப்பத்திரண்டு இலட்சணங்களையும் உடைய, ஞானவடிவாகிய, முடிவில்லாத அழகினையுடைய இறைவன், ஒரு பாகத்தில் உமையம்மை யோடும் அழகு செய்து எப்போதும் அருள் பாலிக்கின்ற தன்மையைக் கண்டு வானில் உள்ள தேவர்கள், “சோமசுந்தரன்“ என்று பெயர் வைத்து வணங்கி வழிபட்டுள்ளனர் என்கிறது திருவிளையாடற் புராணத்தின் மூர்த்திவிசேடப் படலத்தில் உள்ள கீழ்க்கண்ட பாடல்.

இந்தமா விலிங்கத் தெண்ணான் கிலக்கண விச்சை மேனி
அந்தமி லழகன் பாகத் துமையொடு மழகு செய்து
சந்ததம் விளக்கஞ் செய்யுந் தகைமையை நோக்கிச் சோம
சந்தர னென்று நாமஞ் சாத்தினார் துறக்க வாணர்

உலகில் எத்தனை சிவலிங்கங்கள் உள்ளன என்று யாரும் அறியார்! ஆனால், சிவலிங்கத்திற்கு உண்டான அத்தனை அம்சங்களையும் ஒன்றாய்ப் பெற்ற ஒரே சிவலிங்கம் மதுரை அருள்மிகு சோமசுந்தரேசுவர் திருமேனியே ஆகும். திங்கள் கிழமைகளில் (சோமவார விரதம்) விரதமிருந்து சோமசுந்தரேசுவரரைப் போற்றி வணங்கி எல்லா நலன்களும் பெற்றும் பெற்றுப் பெருவாழ்வு வாழ்வோமாக…

(நன்றி : http://temples-kalairajan.blogspot.in/)

==================================================================

இந்த வார பிரார்த்தனைக்கு தலைமை தாங்குபவர் : காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் துணைப் பதிவாளரும், ஆன்மீக ஆராய்ச்சியாளருமான நண்பர் திரு.காளைராசன் அவர்கள்.
.
திரு.காளைராசன் ஏற்கனவே உங்களுக்கு அறிமுகமானவர் தான். ‘பக்தன் கேட்க, பெருமாள் கொடுத்த சிவனின் பிரசாதம் – உண்மை சம்பவம்!’  என்ற பதிவில் இவரைப் பற்றி விளக்கியிருப்போம்.

Thiru kalairajanமதுரை தியாகராசர் கலைக்கல்லூரியில் பி.எஸ்.சி, கணிதம், அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் எம்.ஏ. தமிழ், அழகப்பா பல்கலைக்கழகத்தில் எம்.ஃபில்., மற்றும் பி.எச்.டி. ஆராய்ச்சி முடித்து முனைவர் பட்டம் பெற்றுள்ள திரு.காளைராசன் சிவகங்கை மாவட்டம் கோட்டையூரை சேர்ந்தவர்.

பெருமாள் மற்றும் ஈஸ்வரன் இருவரின் பரிபூரண அருளும் கடாக்ஷமும் ஒருங்கே பெற்றவர்.

சமீபத்தில் சுமார் 110 நாட்கள் நடை பயணம் செய்து ராமேஸ்வரம் முதல் காசி வரை (பாத) யாத்திரை சென்றுவிட்டு திரும்பியிருக்கிறார்.

மிகச் சிறந்த எழுத்தாளர். சைவ-வைணவ பேதம் பாராத பக்தர். temples-kalairajan.blogspot.in என்று ஒரு வலைத்தளம் துவங்கி, தாம் தரிசித்த ஆலயங்கள் பற்றி அவ்வப்போது பதிவிட்டு வருகிறார்.

இவரது தொண்டுகளில் சில : திருப்பூவணம் கோயிலில் ஸ்ரீ பொன்னனையாள் அன்னதான அறக்கட்டளையின் இணைச்செயலாளர், திருப்பூவணம் ஆடித்தபசு மண்டபம் திருப்பணி ஒருங்கிணைப்பாளர், சக்குடி கோயில் புனர்நிர்மாணம் துவக்கிட தூண்டுதலான பணிகள் செய்தமை.

இவரது முதல் நூல் திருப்பதி தேவஸ்தானத்தின் நிதியுதவி பெற்று அச்சிடப்பட்டு 24-09-2007 அன்று தவத்திரு குன்றக்குடிப் பொன்னம்பல அடிகளார் அவர்களால் திருப்பூவணநாதர் திருக்கோயிலில் வைத்து வெளியிடப்பெற்றது.

திருக்குறள் பற்றி பல்வேறு ஆராய்ச்சிகள் செய்து வியக்கத்தக்க முடிவுகளை வெளியிட்டுள்ளார். உதாரணத்துக்கு : முதற் குறளில் குறிப்பிடப்பெற்றுள்ள  “ஆதிபகவன்” என்பது விநாயகப் பெருமானையே குறிக்கும் என்பது பற்றியது, குறள் கூறும் இறைவன் – பத்தாவது குறளில் கூறப்பெற்றுள்ள இறைவன் அனந்த சயனப் பெருமாளாகும். இப்படிப் பலப் பல!

இந்த வார பிரார்த்தனைக்கு தலைமை ஏற்கவேண்டும் என்று சொன்னபோது மகிழ்ச்சியுடன் ஒப்புக்கொண்டார். இவர் இந்த வாரம் தலைமை ஏற்கவேண்டும் என்பது சோமசுந்தரக் கடவுளின் விருப்பமே அன்றி வேறொன்றுமில்லை.

சமீபத்தில் இவர் ராமேஸ்வரம் – காசி பாதயாத்திரை சென்று வந்தமையால், நம் நாட்டில் நீங்கள் கண்டு குமுறிய அவலங்களில் ஏதேனும் ஒன்றை இந்தவார பொதுப் பிரார்த்தனைக்கு நீங்களே அனுப்புங்கள் என்று கேட்டுகொண்டோம். அவர் அனுப்பிய கோரிக்கையே பொதுப் பிரார்த்தனையாக வைக்கப்பட்டுள்ளது.

இந்த வார இறுதியில், திருவாடானை சிநேகவல்லி சமேத ஆதிரத்தினேசுவரர் கோவிலுக்கு செல்லவிருப்பதாகவும் அங்கு நம் அனைவருக்காகவும் பிரார்த்தனை செய்வதாகவும் கூறியிருக்கிறார். இதற்கு முன்பு கோரிக்கை சமர்பித்தவர்களுக்காகவும் பிரார்த்திப்பதாக கூறினார். இவர் காசியில் இருந்தபோது இவரிடம் பேசும் வாய்ப்பு கிடைத்தது. அப்போது இவரிடம் நம் வாசகர்களுக்காக பிரார்த்திக்கும்படி கேட்டுக்கொண்டோம். அவரும் விஸ்வநாதரிடம் பிரார்த்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

==================================================================

இந்த வார பிரார்த்தனைக்கான கோரிக்கைகளை பார்ப்போமா?

நம் வாசகர் பாஸ்கரன் என்பவர் அனுப்பியுள்ள பிரார்த்தனை இது.

பிறந்த குழந்தைக்கு இதயத்தில் பிரச்னை!

நண்பர்கள் மற்றும் ரைட்மந்த்ரா ஆசிரியர் சுந்தர் அவர்களுக்கு வணக்கம்.

புதுவையை சேர்ந்த என்னுடைய நண்பர் திரு.பழனி அவர்கள் ஒரு கட்டிடத் தொழிலாளி. அவருடைய மனைவி திருமதி.மலர்க்கொடி. மிகவும் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவர்கள். அவர்களுக்கு சமீபத்தில் ஒரு ஆண்குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்த சந்தோஷத்தில் திளைத்த பெற்றோர்கள் அடுத்த வந்த செய்தியால் நிலைகுலைந்துள்ளனர். பிறந்து 20 நாட்களே ஆகியுள்ள இளமாறன் என பெயரிப்பட்டுள்ள அந்த குழந்தைக்கு இதயத்தில் உள்ள வால்வுகளில் ஏதோ பிரச்னை. சென்னையில் உள்ள காவேரி மருத்துவமனையில் ஐ.சி.யு.வில் அனுமதிக்கப்பட்டு, நேற்று தான் ஜெனரல் வார்டுக்கு மாற்றப்பட்டது. அக்குழந்தை எந்த பாதிப்பும் இல்லாமல், நோய் நீங்கி ஆரோக்கியமுடன் வாழ அனைவரையும் பிரார்த்திக்க வேண்டுகிறேன்.

டி.என்.பாஸ்கரன், சென்னை.

==================================================================

நிம்மதி குலைக்கும் கடன் பிரச்னை தீரவேண்டும்!

அனைவருக்கும் என் வணக்கம்.

என் பெயர் மு. செந்தில்குமரன், (வயது 51)

தாங்க முடியாத கடன் பிரச்சனையில் மாட்டிக்கொண்டு விழித்து வருகிறேன். இதனால் நிம்மதியாக சாப்பிட்டும் உறங்கியும் பலனாட்கலாகிறது. எனது கடன்கள் முழுவதும் அடைபட வேண்டயும், மன நிம்மதி வேண்டியும் மற்றும் எனது மனைவின் உமா மஹேஸ்வரியின், (வயது 39)  முழங்கால் வலி குணமடைய வேண்டியும் பிரார்த்தனை செய்ய வேண்டிகொள்கின்றேன்.

மு.செந்தில்குமரன்,
சென்னை 14

==================================================================

ஏழு வயது பெண் குழந்தைக்கு உடலில் பிரச்னை தீரவேண்டும்!

அடுத்து நம் முகநூல் நண்பர் ஹாலாஸ்ய சுந்தரம் அவர்கள் மூலம் கேள்விப்பட்ட விஷயம் இது.

மலேசியாவில் வசிக்கும் அவரின் நண்பரின் மகள் வைஷாலி என்று பெயருள்ள ஏழு வயது பெண் குழந்தைக்கு உடலில் ஏதோ பிரச்னை ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். இரண்டு டெஸ்ட்கள் எடுத்ததில் பயப்பட ஒன்றுமில்லை என்று ரிசல்ட் வந்துள்ளது. இருப்பினும் இன்னும் ஒரு டெஸ்ட் ரிசல்ட் வரவேண்டியுள்ளது. அந்த குழந்தை எந்த பிரச்னையும் உடலில் இல்லாமல் ஆரோக்கியத்துடன் நீண்ட நாட்கள் வாழவேண்டும் என்று பெரியவாளையும், பகவானையும் பிரார்த்தனை செய்யுமாறு அனைவரையும் கேட்டுக் கொள்கிறோம்.

– சுந்தர், ரைட்மந்த்ரா.காம்

==================================================================

பொது பிரார்த்தனை

எங்கே செல்கிறது நாடு?

(இந்த வார பிரார்த்தனைக்கு ஏற்றிருக்கும் திரு.காளைராசன் அவர்கள் நமது வேண்டுகோளின்படி சமர்பித்திருக்கும் பொது பிரார்த்தனை.)

சமீபத்தில் நடைபெற்ற எனது 110  நாள் ராமேஸ்வரம் – காசி பாதயாத்திரையில் நான் கண்டு குமுறிய விஷயங்கள்….

tobaccoதமிழகம், கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் சாலை ஓரங்கள் எல்லாம் மதுப்பாட்டில்கள் உடைந்து காணப்பட்டன.  வண்டியில் செல்லும் ஓட்டுநரும் அவரது உதவியாளரும் தங்களுடன் மதுப்பாட்டில்களை எடுத்துக் கொண்டு வழியில் குடித்துக் கொண்டே வாகனம் ஓட்டுகின்றனர் என்பதை அறிய முடிந்தது.

மஹாராஷ்டிரம், மத்தியப்பிரதேசம், உத்திரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் சிறுவர் முதல் முதியோர் வரை பெண்கள் உட்பட அனைவரும் வயது வித்தியாசம் இன்றி பான்பராக் பயன்படுத்துகின்றனர். பல இடங்களில் பெரியவர்களே சிறுவர்களிடம் பான்பராக் வாங்கிவரும்படி கடைக்கு அனுப்புவதும், அப்படி வாங்கி வரும் சிறுவர்கள் தாங்களும் ஒரு பாக்கெட் எடுத்துக்கொள்வதும் சர்வசாதரணமாக நான் கண்ட காட்சி.

இந்த இரண்டு அவலங்களும் நீங்கினால் இந்தியாவின் இளைய சமூதாயம் சீர்பெறும்.

இதற்காக இறைவனிடம் இறைஞ்சுவோம்.

இதுவே இந்த வார பொது பிரார்த்தனை.

அன்பன்
கி.காளைராசன்

==================================================================

http://rightmantra.com/wp-content/uploads/2013/04/Mahaperiyava-36.jpgபுதுவையை சேர்ந்த பழனி மற்றும் மலர்க்கொடி தம்பதிகளின் குழந்தை இளமாறனுக்கு இதயத்தில் ஏற்பட்டுள்ள பிரச்னை நீங்கி அக்குழந்தை ஆரோக்கியத்துடன் வாழவும், சென்னையை திரு.செந்தில்குமரன்அவர்களின் கடன் பிரச்சனை தீர்ந்து அவரது மனையில் சுபிக்ஷம் நிலவவும், அவரது மனைவி உமா மகேஸ்வரிக்கு ஏற்பட்டுள்ள முழங்கால் வலி நீங்கவும், மலேசியாவை சேர்ந்த பெண் குழந்தை வைஷாலிக்கு உடலில் எந்த பாதுப்புமில்லாமல் நலமுடன் இருக்கவும் மதுரை சோமசுந்தரக் கடவுளை பிரார்த்திப்போம். மதுவுக்கும் புகையிலைக்கும் அடிமையாகி சீரழிந்து வரும் நாட்டின் எதிர்காலத் தூண்களும், உழைக்கும் வர்க்கத்தினரும் திருந்தி நல்வாழ்வு வாழ இறைவனை வேண்டுவோம்.

இந்த வார பிரார்த்தனைக்கு தலைமை ஏற்கும் திரு.காளைராசன் அவர்கள் சகல சௌபாக்கியங்களும் பெற்று இறைத்தொண்டில் மேன்மேலும் சிறந்து விளங்கவும் பிரார்த்திப்போம்.

நமது பிரார்த்தனைகளை இறைவனிடம் கொண்டு சேர்த்து பலன் பெற்று தரவேண்டிய பொறுப்பு நாம் என்றும் வணங்கும் மகா பெரியவா அவர்களையே சாரும். அவரது திருவடிகளில் இந்த பிரார்த்தனைகளை சமர்ப்பிக்கின்றோம்.

கூட்டுப் பிரார்த்தனை அவருக்கு மிகவும் பிடித்த ஒன்று என்பதால் நிச்சயம் மகா பெரியவா அவர்கள் இந்த விஷயத்தில் சீக்கிரமே தமது அனுக்ரஹத்தை நல்குவார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது.

இதற்கு முன்பு, பிரார்த்தனை கிளப்பில் நாம் பிரார்த்தனை செய்தவர்களுக்காகவும் ஒரு சில வினாடிகள் பிரார்த்திப்போம்.

நாம் இறைவனிடம் எதை வேண்டிக்கொண்டாலும் நாமும் அதற்காக உழைப்போம்!!!

பிரார்த்தனை நாள் : நவம்பர் 16, ஞாயிற்றுக்கிழமை நேரம் : மாலை 5.30 – 5.45

இடம் : அவரவர் இருப்பிடங்கள்

=============================================================

பிரார்த்தனை கிளப்பிற்கு கோரிக்கை அனுப்பியுள்ள மற்றவர்கள் கவனத்திற்கு:

உங்கள் கோரிக்கைகள் அடுத்தடுத்து இடம்பெறும். கோரிக்கை இடம்பெறும் வரையிலும் அதற்கு பிறகும் கூட நீங்கள் தவறாமல் வாரா வாரம் நடைபெறும் இந்த பிரார்த்தனையில் கலந்துகொண்டு பிரார்த்தனை செய்துவாருங்கள். உங்கள்  வேண்டுதலை பிரார்த்தித்துவிட்டு கூடவே இங்கு கோரிக்கை அனுப்பும் பிறர் நலனுக்காகவும் சில நிமிடங்கள் பிரார்த்தனை செய்யுங்கள். பிறருக்காக பிரார்த்தனை செய்வது மிகவும் உன்னதமான விஷயம்.  இறைவனுக்கு மிகவும் ப்ரீதியான ஒன்று.

=============================================================

பிரார்த்தனையை துவக்கும் முன் மூன்று முறை ராம…ராம….ராம… என்று உச்சரித்துவிட்டு பிரார்த்தனையை ஆரம்பிக்கவும். ராம நாமத்தை மூன்று முறை உச்சரித்தால் விஷ்ணு சஹஸ்ர நாமத்தை முழுமையாக உச்சரித்த பலன் கிடைக்கும்.

அதே போன்று முடிக்கும்போது ‘ஓம் சிவ சிவ ஓம்’ என்ற மந்திரத்தை மூன்று முறை உச்சரிக்கவும்.

(பிற மதத்தவர்கள் இந்த பிரார்த்தனையில் பங்கேற்றால் அவரவர் வழிபாட்டு தெய்வத்தை நினைத்து பிரார்த்தனை செய்யும்படி கேட்டுக்கொள்கிறோம். பிரார்த்தனைக்கு மதம், இனம் மொழி கிடையாது என்பது நீங்கள் அறிந்ததே.)

=============================================================

உங்கள் கோரிக்கை பிரார்த்தனை கிளப்பில் இடம் பெற…

உங்கள் கோரிக்கைகள் இந்த பகுதியில் வெளியிடப்பட்டு பிரார்த்தனை செய்யப்படவேண்டும் என்று நீங்கள் விரும்பினால் அதை எங்களுக்கு மின்னஞ்சல் செய்யவும்.

உங்கள் வேண்டுதல்கள் குடும்பப் பிரச்னை, நோயிலிருந்து விடுதலை, நல்வாழ்வு, அறுவை சிகிச்சையில் வெற்றி, வழக்குகளில் நல்ல தீர்ப்பு (நியாயம் உங்கள் பக்கம் இருப்பின்), வேலைவாய்ப்பு மற்றும் இதர நியாயமான கோரிக்கைகளை அடிப்படையாக வைத்து இருக்கலாம். பிரார்த்தனையால் தீர்க்க முடியாத பிரச்சனைகளே இல்லை!

உங்கள் பெயரையும் சூழ்நிலையும் வெளியிட விரும்பாவிட்டால் வேறு ஒரு பெயரை நீங்களே குறிப்பிட்டு நமக்கு மின்னஞ்சல் அனுப்பவும். பொதுவாக உங்கள் பிரச்னை நீங்க குறிப்பிடும் புனைப் பெயருடன் அறிவிக்கப்பட்டு பிரார்த்தனை நடைபெறும்.

E-mail : simplesundar@gmail.com    Mobile : 9840169215

=============================================================

பிரார்த்தனையின் மகத்துவத்தை போற்றும் வகையிலும் இறையருளின் தன்மைகளை வலியுறுத்தும் வகையிலும் ஒவ்வொரு பிரார்த்தனை பதிலும் ஒரு கதை இடம்பெறுகிறது. அந்த கதைகளை படிக்க, வாசச்கர்கள் கீழ்கண்ட முகவரியை செக் செய்யும்படி கேட்டுகொள்ளப்படுகிறார்கள்.

இதற்கு முன்பு பிரார்த்தனை கிளப் பகுதியில் இடம் பெற்ற பதிவுகளை படிக்க:
http://rightmantra.com/?cat=131

=============================================================

சென்ற வார பிரார்த்தனைக்கு தலைமை தாங்கியவர் : மேற்கு மாம்பலம் காசி விஸ்வநாதர் கோவில் கோ-சாலைப் பணியாளர் திரு.கீர்த்தி அவர்கள்

[END]

9 thoughts on “32 இலட்சணங்களும் அமையப் பெற்ற ஒரே சிவலிங்கம் — Rightmantra Prayer Club

  1. மதுரையிலேயே 20 வருடங்கள் இருந்தும் சோம சுந்தர கடவுள் பற்றிய தெரியாத செய்தியை நம் தளத்தின் மூலம் தெரிந்து கொண்டதில் மிக்க மகிழ்ச்சி. சோம சுந்தரரை கார்த்திகை திங்கள் விரதமிருந்து அவரின் அருட் கடாட்சத்திற்கு பாத்திரமாவோம்.

    இந்த வார பிரார்த்தனைக்கு தலைமை ஏற்கும் திரு காளைராசனுக்கு என் பணிவான வணக்கங்கள்.

    இந்த வார பிரார்த்தனைக்கு கோரிக்கை வைத்திருக்கும் அனைவருக்காகவும், நம் நாடு மக்கள் மற்றும் மது மற்றும் புகையிலை பழக்கத் திலிருந்து விடுபட்டு நல் வாழ்க்கை வாழ இறைவனிடம் வேண்டுவோம்

    //வேத வேள்வியை நிந்தனை செய்துழல்
    ஆதமில்லி அமணோடு தேரரை
    வாதில் வென்றளிக்கத் திரு உள்ளமே
    பாதி மாதுடனாய பரமனே
    ஞாலம் நின் புகழே வேண்டுந்தென்
    ஆலவாயில் உறையும் என் ஆதியே//

    லோக சமஸ்த சுகினோ பவந்து

    ராம் ராம் ராம்

    நன்றி
    உமா

    1. ஹாய் உமா,

      தாங்கள் கூறியுள்ள பாடல் கடன் பிரச்சினை தீர்க்கும் பதிகம்.
      இந்த வார கோரிக்கைக்கு ஏற்ட பாடல்.
      இது ‘மு. செந்தில்குமரன்’ அவர்களுக்கு தெரிய படுத்தவும்.

      What a co incidence !!

      S. மாறன்

  2. மதுரை அருள்மிகு சோமசுந்தரேசுவரரைப்பற்றிய தகவலுக்கு நன்றி.

    RM நண்பர்களின் பிரச்சனைகள் தீரவும், நாட்டு மக்கள் நல்வாழ்வு வாழவும் பிரார்த்தனைகள்.

    ஓம் நம சிவாய

  3. அருமையான தகவல். அற்புதமான பதிவு. மதுரை சோமசுந்தரரிடம் இத்தனை மகத்துவம் இருக்கிறது என்பதை அறியும்போது இன்னும் அவரை தரிசிக்காமல் இருக்கிறோமே என்று மனம் தவிக்கிறது.

    விரைவில் மதுரை அழைத்துச் செல்லும்படி என் கணவரிடம் கூறியிருக்கிறேன்.

    இந்த வார பிரார்த்தனைக்கு தலைமை ஏற்றுள்ள திரு.காளைராசன் அவர்களை பற்றிய தகவல்களை அவர் ஆற்றி வரும் தொண்டுகளை பற்றி கேள்விப்படும்போது பிரமிப்பாக இருக்கிறது.

    பலவித போக்குவரத்து வசதிகள் நிரம்பியுள்ள இந்த காலத்தில் நாம் காசிக்கு செல்லவில்லை. ஆனால், காளைராசன் அவர்கள் பாதயாத்திரையாகவே அந்த புனிதப் பயணம் மேற்கொண்டார் என்பதை அறியும்போது சிலிரிக்கிறது.

    இளைஞர்களை நல்வழிப்படுத்த இங்கு யாருமில்லை. அந்த கடமையை செய்யவேண்டிய அரசியல் தலைவர்களோ அவர்களை சுரண்டுகிறார்கள். இந்நாட்டையும் மக்களையும் சொக்கநாதர் தான் காப்பாற்றவேண்டும்.

    இந்த வாரம் பிரார்த்தனையை சமர்பித்துள்ள அனைவருக்காகவும் பிரார்த்திக்கிறேன்.

    ஓம் நம சிவாய!

    – பிரேமலதா மணிகண்டன்,
    மேட்டூர்

  4. 2 முறை மதுரை அருள்மிகு சோமசுந்தரேசுவரரையும் மீனாட்சி அம்மனையும் தரிசித்து இருக்கிறேன்.

    புதுவையை சேர்ந்த பழனி மற்றும் மலர்க்கொடி தம்பதிகளின் குழந்தை இளமாறனுக்கு இதயத்தில் ஏற்பட்டுள்ள பிரச்னை நீங்கி அக்குழந்தை ஆரோக்கியத்துடன் வாழவும், சென்னையை திரு.செந்தில்குமரன்அவர்களின் கடன் பிரச்சனை தீர்ந்து அவரது மனையில் சுபிக்ஷம் நிலவவும், அவரது மனைவி உமா மகேஸ்வரிக்கு ஏற்பட்டுள்ள முழங்கால் வலி நீங்கவும், மலேசியாவை சேர்ந்த பெண் குழந்தை வைஷாலிக்கு உடலில் எந்த பாதுப்புமில்லாமல் நலமுடன் இருக்கவும் மதுரை சோமசுந்தரக் கடவுளை பிரார்த்திப்போம். மதுவுக்கும் புகையிலைக்கும் அடிமையாகி சீரழிந்து வரும் நாட்டின் எதிர்காலத் தூண்களும், உழைக்கும் வர்க்கத்தினரும் திருந்தி நல்வாழ்வு வாழ இறைவனை வேண்டுவோம்.

    இந்த வார பிரார்த்தனைக்கு தலைமை ஏற்கும் திரு.காளைராசன் அவர்கள் சகல சௌபாக்கியங்களும் பெற்று இறைத்தொண்டில் மேன்மேலும் சிறந்து விளங்கவும் பிரார்த்திப்போம்.

  5. வணக்கம்…….

    பிரார்த்தனை சமர்ப்பித்துள்ளவர்கள் அனைவருக்காகவும் பிரார்த்திப்போம்……….குருவருளாலும், திருவருளாலும் அனைவரின் பிரார்த்தனைகளும் நிறைவேறும்………..

  6. sir
    பழனி மற்றும் மலர்க்கொடி தம்பதிகளின் குழந்தை இளமாறனுக்கு இதயத்தில் ஏற்பட்டுள்ள பிரச்னை நீங்கி அக்குழந்தை ஆரோக்கியத்துடன் வாழவும், செந்தில்குமரன்அவர்களின் கடன் பிரச்சனை தீர்ந்து அவரது மனையில் சுபிக்ஷம் நிலவவும், அவரது மனைவி உமா மகேஸ்வரிக்கு ஏற்பட்டுள்ள முழங்கால் வலி நீங்கவும், வைஷாலிக்கு உடலில் எந்த பாதுப்புமில்லாமல் நலமுடன் இருக்கவும் மதுவுக்கும் புகையிலைக்கும் அடிமையாகி சீரழிந்து வரும் நாட்டின் எதிர்காலத் தூண்களும், உழைக்கும் வர்க்கத்தினரும் திருந்தி நல்வாழ்வு வாழ இறைவனை வேண்டுவோம். –
    selvi

  7. DEAR SUNDAR SIR,

    THANKS FOR YOUR PRAYER.

    YESTER DAY EVENING BABY ILAMARAN WAS DISCHARGED FROM THE HOSPITAL. THE PARENTS OF THE BABY THANKED ALL FOR THE PRAYER.

    REGARDS.
    D N BASKARAN.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *