Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Friday, March 29, 2024
Please specify the group
Home > Featured > மகா பெரியவா எரிமலையாய் வெடித்த தருணம் – நெஞ்சை உலுக்கும் சம்பவம் – குரு தரிசனம் (15)

மகா பெரியவா எரிமலையாய் வெடித்த தருணம் – நெஞ்சை உலுக்கும் சம்பவம் – குரு தரிசனம் (15)

print
கா பெரியவா பக்தர்களுக்கு அருளியது தொடர்பாக பல பதிவுகளை வெளியிட்டுள்ளோம். எந்த சூழ்நிலையிலும் மகா பெரியவா கோபங்கொண்டு எவரிடமும் பேசியது கிடையாது. சபித்தது கிடையாது. சில சமயம் பக்தர்கள் தவறுக்காக அவர் கோபப்படுவதுண்டு. காலில் விழுந்தவுடன் அடுத்த நொடி கோபம் நீங்கி சாந்தமாகிவிடுவார். தவறு செய்வது மனித இயல்பு அதை மன்னிப்பது மட்டுமல்ல மறப்பது தான் தெய்வ குணம் என்பது அவருக்கு தெரியும். ஆனால்… தவறுக்கும் தவறான தவறை ஒருவர் செய்த காரணத்தால் மகா பெரியவா எரிமலையாய் சீறி அனல் கக்கிய தருணம் பற்றி தெரியுமா?

2006 ஆம் ஆண்டு சக்தி விகடனில் வெளியான இந்த சம்பவத்தை படியுங்கள். பல இடங்களில் நமக்கு திக் திக் என்று இருக்கும். கண்ணீர் பொத்துக்கொண்டு வரும்.

மிராசுதாரை மிரள வைத்த மகா பெரியவா!

பல வருஷங்களுக்கு முன், ஒரு சித்ரா பௌர்ணமி தினம். திருவிடைமருதூர் ஸ்ரீமகாலிங்க ஸ்வாமி கோயிலில் மஹாந்யாஸ ருத்ர ஜபத்துடன் ஓர் அபிஷேகம் விமரிசையாக நடைபெற்றது. 11 வேத பண்டிதர்களை வைத்து அதை நடத்தியவர், திருவாரூரைச் சேர்ந்த மிராசுதார் நாராயணஸ்வாமி ஐயர் என்பவர். காலை எட்டு மணிக்கு ஆரம்பித்த ருத்ராபிஷேகம், மதியம் ஒரு மணி அளவில் பூர்த்தி அடைந்தது.

காஞ்சி மகா ஸ்வாமிகளிடம் அபரிமிதமான பக்தி கொண்டவர் மிராசுதார் நாராயணஸ்வாமி ஐயர். ‘எப்படியும் இந்த ருத்ராபிஷேகப் பிரசாதத்தை பெரியவாளிடம் சமர்ப்பித்துவிட வேண்டும்’ என்று தீர்மானித்தார். ருத்ராபிஷேகப் பிரசாதத்தை பயபக்தி யுடன் ஒரு வாழை இலையில் வைத்து, புதுப் பட்டு வஸ்திரத்தில் சுற்றி எடுத்துக் கொண்டார். அன்று மாலையே திருவிடைமருதூர் ரயில்வே ஸ்டேஷனில், மதுரை- சென்னை பாசஞ்சர் ரயிலில் ஏறினார் மிராசு தார். விடியற்காலம் செங்கல்பட்டு ஸ்டேஷனில் இறங்கி, பஸ் பிடித்து காஞ்சிபுரம் வந்து இறங்கினார் நாராயணஸ்வாமி ஐயர்.

அன்று மடத்தில் ஏகக் கூட்டம். ஸ்நானம் இத்யாதி களை முடித்துக் கொண்டு, பெரியவா தரிசனத்துக்காக பிரசாதத்துடன் காத்திருந்தார் மிராசுதார். நண்பகல் 12 மணி சுமாருக்கு, ஸ்ரீசந்திரமௌலீஸ்வர பூஜையை முடித்துவிட்டு வந்து உட்கார்ந்தார் மகா ஸ்வாமிகள். பக்தர்கள் கூட்டம் நெருக்கியடித்தது. மிராசுதாரால் ஸ்வாமிகளை நெருங்க முடியவில்லை. உடனே மிராசுதார், ‘‘எல்லாரும் நகருங்கோ… நகருங்கோ. நா பெரியவாளுக்கு திருவிடைமருதூர் மகாலிங்க ஸ்வாமி ருத்ராபிஷேகப் பிரசாதம் கொண்டு வந்திருக்கேன். அத அவர்ட்ட சமர்ப்பிக்கணும்’’ என்று பிரசாத மூட்டையைக் காட்டிக் கெஞ்சினார்.

ஒருவரும் நகருகிற வழியாகத் தெரியவில்லை. மிராசுதாரின் தவிப்பையும் பதற்றத்தையும் பார்த்த மடத்தைச் சேர்ந்த ஒருவர், வழி ஏற்படுத்திக் கொடுத்து நாராயணஸ்வாமி ஐயரை, பெரியவாளுக்கு அருகே அழைத்துச் சென்றார். பெரியவாளைப் பார்த்தவுடன் மிராசுதாருக்குக் கையும் காலும் ஓடவில்லை. தொபுக் கடீர் என்று சாஷ்டாங்கமாக தரையில் விழுந்து எழுந்தார். மகா ஸ்வாமிகள் அவரை அண்ணாந்து பார்த்தார்! ‘என்ன விஷயம்’ என்பதைப் போல புருவங்களை உயர்த்தினார்.

உடனே மிராசுதார் கைகள் உதற பிரசாத மூட்டை யைப் பிரித்துக் கொண்டே, ‘‘பிரசாதம்… பிரசாதம் பெரியவா’’ என்று குழறினார். மீண்டும் பெரியவா, ‘‘என்ன பிரசாதம்?’’ என்று கேட்டு அவரைப் பார்த்தார். அதற்குள், மூட்டையைப் பிரித்து, பிரசாதத்தை எடுத்து, அங்கிருந்த மூங்கில் தட்டு ஒன்றில் வைத்து, ஸ்வாமிகளுக்கு முன்பாகச் சமர்ப்பித்தார் மிராசுதார். அதில், ஒரு சிறிய வாழை இலையில் விபூதி, குங்குமம், சந்தனம் ஆகியவற்றுடன் கொஞ்சம் வில்வ தளம், இரண்டு தேங்காய் மூடிகள், பூவன் வாழைப்பழங்கள் சில இருந்தன.

Periyava copy

மகா ஸ்வாமிகள், ‘‘இதெல்லாம் எந்த க்ஷேத்ர பிரசாதம்?’’ என்று கேட்டு மீண்டும் மிராசுதாரைப் பார்த்தார். மிராசுதார் சற்று தன்னை நிதானப்படுத்திக் கொண்டு மிக விநயமாக, ‘‘பெரியவா! நேத்திக்கு திருவிடைமருதூர்ல மகாலிங்க ஸ்வாமிக்கு ருத்ரா பிஷேகம் பண்ணி வெச்சேன். மஹாந்யாஸ ருத்ர ஜபத்தோட பெரிய அபிஷேகம். அந்தப் பிரசாதம்தான் இது. பெரியவா சந்தோஷப்படுவேளேங்கறதுக்காக எடுத்துண்டு ரயிலேறி ஓடி வந்தேன். வாங்கிண்டு அனுக்ரஹம் பண்ணணும்!’’ என்று சொல்லி முடித்தார்.

உடனே பெரியவா அந்த பிரசாத மூங்கில் தட்டையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்து விட்டுக் கேட்டார்: ‘‘நாராயணசாமி! நீ பெரிய மிராசுதான். இருந்தாலும் செலவுக்கு இன்னும் யாரை யாவது கூட்டு சேத்துண்டு இந்த ருத்ராபி ஷேகத்தை ஸ்வாமிக்கு பண்ணினயோ?’’

‘‘இல்லே பெரியவா… நானே என் சொந்தச் செலவுல பண்ணினேன்’’ என்று, அந்த ‘நானே’வுக்குச் சற்று அழுத்தம் கொடுத்துச் சொன்னார் மிராசுதார். பெரிய வாள் தனக்குள் சிரித்துக் கொண்டார். அத்துடன் விட வில்லை. ‘‘லோக க்ஷேமத்துக்காக (உலக நன்மைக்கு) மத்யார்ஜுன க்ஷேத்ரத்துலே (திருவிடைமருதூர்) ருத்ராபிஷேகத்தைப் பண்ணினாயாக்கும்?’’ என்று கேட்டார். உடனே மிராசுதார் ஆதங்கத்துடன், ‘‘இல்லே பெரியவா. ரெண்டு மூணு வருஷ மாவே வயல்கள்ல சரியான வெளச்சல் கிடை யாது. சில வயல்கள் தரிசாவே கெடக்கு. திருவிடைமருதூர் முத்து ஜோஸ்யரைப் போய்ப் பாத்தேன். அவர்தான், ‘சித்ரா பௌர்ணமி அன்னிக்கு மகாலிங்க ஸ்வாமிக்கு மஹாந்யாஸ ருத்ராபிஷேகம் நடத்து. அமோகமா வெளச்சல் கொடுக்கும்’னார்! அத நம்பித்தான் பண்ணி னேன் பெரியவா’’ என்று குழைந்தார்.

எதிரில் வைத்த பிரசாதம் அப்படியே இருந்தது. ஆசார்யாள் இன்னும் அதை ஸ்வீகரித்துக் கொள்ளவில்லை. ‘‘அப்டீன்னா ஆத்மார்த்தத் துக்காகவோ, லோக க்ஷேமார்த்தமாவோ நீ இதைப் பண்ணலேனு தெரியறது’’ என்று சொன்ன ஸ்வாமிகள், சற்று நேரம் கண் மூடி தியானத்தில் ஆழ்ந்து விட்டார்.

பதினைந்து நிமிடங்கள் கழித்து கண்களைத் திறந்தார் ஆசார்யாள். அவர் முகத்தில் அப்படி ஒரு தெளிவு! கண் மூடி தியானித்த பதினைந்து நிமிடங்களுக்குள், பல விஷயங்களைப் புரிந்து கொண்டு விட்ட ஒரு ஞானப் பார்வை. அனைவரும் அமைதியாக இருந்தனர். ஸ்வாமிகள் தொடர்ந்தார். ‘‘சரி… ருத்ர ஜபத்துக்கு எத்தனை வேத பிராமணாள் வந்திருந்தா?’’

‘‘பதினோரு வேத பண்டிதாளை ஏற்பாடு பண்ணியிருந்தேன் பெரியவா!’’ – இது மிராசுதார்.

உடனே ஸ்வாமிகள், ‘‘வைதீகாள் எல்லாம் யார் யாரு? எந்த ஊருன்னெல் லாம் தெரியுமோ? நீதானே எல்லா ஏற்பாடும் பண்ணினே?’’ என்று விடாப்பிடியாக விசாரித்தார்.

இதையெல்லாம் கவனித்துக் கொண்டிருந்த பக்தர்களுக்கு, ‘பெரியவா ஏன் இப்படித் துருவித் துருவி விசாரணை செய்கிறார்!’ என வியப்பாக இருந்தது. இருந்தாலும், ஸ்வாமிகள் காரணமில்லாமல் இப்படி விசாரிக்க மாட்டார் என்பதையும் புரிந்து கொண்டார்கள். மிராசுதார், தன் இடுப்பில் செருகியிருந்த ஒரு பேப்பரைக் கையில் எடுத்தார்.

‘‘வாசிக்கறேன் பெரியவா. திருவிடைமருதூர் வெங்கட்ராம சாஸ்திரிகள், சீனுவாச கனபாடிகள், ராஜகோபால சிரௌதிகள், மருத்துவக்குடி சந்தான வாத்யார், சுந்தா சாஸ்திரிகள், சுப்பிரமணிய சாஸ்திரிகள், திருமங்கலக்குடி வெங்கிட்டு வாத்யார்… அப்புறம்…’’ என்று மிராசுதார் ஆரம்பிப்பதற்குள், ஸ்வாமிகள், ‘‘எல்லாம் நல்ல அயனான வேதவித்துகளாத்தான் ஏற்பாடு பண்ணிருக்கே. அது சரி… ஒன் லிஸ்ட்டுலே தேப்பெருமாநல்லூர் வேங்கடேச கனபாடிகள் பேரு இருக்கானு பாரு…’’ என்று இயல்பாகக் கேட்டார்.

உடனே மிராசுதார் மகிழ்ச்சி பொங்க, ‘‘இருக்கு பெரியவா… இருக்கு. அவரும் ஜபத் துக்கு வந்திருந்தார்!’’ என ஆச்சரியத்தோடு பதிலளித்தார்.

Periyava angryசூழ்ந்து நின்ற பக்தர்களுக்கெல்லாம் ‘பெரியவா எதற்காக ஒரு அபிஷேகம் நடந்த விஷயத்தைப் பற்றி, இப்படி துருவித் துருவி விசாரிக்கிறார்’ என்று வியப்பு. தவிர, ஒருவரும் வாய் திறக்கவில்லை. அமைதியாக நின்று கவனித்தனர்.

ஸ்வாமிகள், ‘‘பேஷ்… பேஷ்! வேங்கடேச கனபாடிகளையும் ஜபத்துக்குச் சொல்லிருந்தயா? ரொம்ப நல்ல காரியம். மகா வேத வித்து! இப்ப கனபாடிகளுக்கு ரொம்ப வயசாயிடுத்து. குரல் எழும்பறதுக்கே ரொம்பவும் சிரமப்படும். ஜபத்தை புடிச்சு (மூச்சடக்கி) சொல்றதுக்கு கஷ்டப்படுவார்’’ என்று கூறியதுதான் தாமதம்… மிராசுதார் படபடவென்று, உயர்ந்த குரலில், ‘‘ஆமாம் பெரியவா! நீங்க சொல்றது ரொம்ப சரிதான். அவர் சரியாவே ருத்ரம் ஜபிக்கலே! சில நேரம் வாயே திறக்காம கண்ண மூடிண்டு ஒக்காந்துருக்கார். அடிக்கடி கொட்டாவி விடறார். அதனால ஜப ‘ஸங்க்யை’யும் (எண்ணிக்கை) கொறயறது! நேத்திக்கு அவர் ரொம்ப சிரமம் கொடுத்துட்டார். ஏண்டா அவரை வரவழைச்சோம்னு ஆயிடுத்து பெரியவா’’ என்று சொல்லி முடித்ததுதான் தாமதம்… பொங்கி விட்டார் ஸ்வாமிகள்.

வார்த்தைகளில் கோபம் கொப்பளிக்க ஸ்வாமிகள், ‘‘என்ன சொன்னே… என்ன சொன்னே நீ? பணம் இருந்தால் எத வேணும்னாலும் பேசலாங்கிற திமிரோ! தேப்பெருமாநல்லூர் வேங்கடேச கனபாடிகளோட யோக்யதாம்சம் பத்தி நோக்கு என்ன தெரியும்? அந்த வேதவித்தோட கால்தூசி பெறுவயா நீ? அவரப் பத்தி என்னமா நீ அப்டிச் சொல்லலாம்? நேத்திக்கு மகாலிங்க ஸ்வாமி சந்நிதியிலே என்ன நடந்ததுங்கறத இப்போ நா புரிஞ்சுண்டுட்டேன்! நா கேக்கற கேள்விக்கு இப்போ நீ பதில் சொல்லு! நேத்திக்கு ஜப நேரத்துலே… கனபாடிகள் முடி யாமல் கண் மூடி ஒக்காந்திருந்த நேரத்துலே நீ அவர்ட்ட போய், கடுமையாக ‘ஏங்காணும், காசு வாங்கலே நீர்! இப்படி ஜபம் பண்ணாம வாயடச்சு ஒக்காந்திருக்கீரே’னு கத்தினது உண்டா, இல்லியா?’’ என்று பொரிந்து தள்ளிவிட்டார். விக்கித்து நின்றது மிராசு. கூட்டமும் பிரமித்துப் போனது.

‘‘என்ன சொன்னே… என்ன சொன்னே நீ? பணம் இருந்தால் எத வேணும்னாலும் பேசலாங்கிற திமிரோ! தேப்பெருமாநல்லூர் வேங்கடேச கனபாடிகளோட யோக்யதாம்சம் பத்தி நோக்கு என்ன தெரியும்? அந்த வேதவித்தோட கால்தூசி பெறுவயா நீ?

கை- கால்கள் நடுங்க சாஷ்டாங்க மாகப் பெரியவா கால்களில் விழுந்தார் நாராயணஸ்வாமி ஐயர். ஸ்வாமிகள் ஒன்றுமே சொல்லவில்லை. மிராசுதார் தானாகவே எழுந்தார். வாயைப் பொத்திக் கொண்டு நடுக்கத்துடன், ‘‘தப்புதான் பெரியவா! இப்போ நீங்க சொன்ன இதே வார்த்தைகளை நேத்திக்கு அந்த கனபாடிகளைப் பாத்து, ஸ்வாமி சந்நிதியிலே சொன்னது வாஸ்தவம்தான். என்னை மன்னிச்சுடணும் பெரியவா’’ என்று கெஞ்சினார். பெரியவா விடவில்லை.

‘‘இரு… இரு… நீ அந்த ஒரு தப்பை மாத்ரமா பண்ணினே? சொல்றேன் கேளு. எல்லாருக்கும் நீ தட்சிணை கொடுத்தியோல்லியோ… ஒவ்வொரு வைதீகாளுக்கும் எவ்ளவு தட்சிணை கொடுத்தே?’’ என்று கேட்டார். மிராசுதார் மென்று விழுங்கியபடியே, ‘‘தலைக்குப் பத்து ரூவா கொடுத்தேன் பெரியவா’’ என்றார் ஈனஸ்வரத்தில். ஸ்வாமிகள் நிறுத்தவில்லை. ‘‘சரியா சொல்லு! எல்லா வைதீகாளுக்கும் சமமா பத்துப் பத்து ரூவாயா கொடுத்தே! நேக்கு எல்லாம் தெரியும்’’ என்று மடக்கினார்.

மிராசுதார் மௌனமாக நின்றார். ஆனால், ஆசார்யாள் விடவில்லை! ‘‘நேத்திக்கு நீ என்ன பண்ணினேங்கறத நா சொல்றேன் கேட்டுக்கோ… நோக்கு சொல்ல வெக்கமாருக்கு போல. வைதீகாளை எல்லாம் வரிசையா சந்நிதியிலே ஒக்காத்தி தலைக்குப் பத்து ரூவா ஸம்பாவனை பண்ணிண்டே வந்தே. தேப்பெருமாநல்லூர் கனபாடிகள்கிட்டே வந்தபோது, ‘இவர்தான் சரியாவே ருத்ரம் சொல்லலியே… இவருக்கு எதுக்கு மத்தவா மாதிரி பத்து ரூவா கொடுக்கணும்?’னு தீர்மானிச்சு ஏழே ஏழு ரூவா சம்பாவனை பண்ணினே. ஏதோ அவரைப் பழி வாங்கிப்டதா எண்ணம் நோக்கு. கனபாடிகள் எதையாவது லட்சியம் பண்ணாரா பாத்தியா? நீ கொடுத்ததை வாங்கி அப்டியே தலப்பிலே முடிஞ்சுண்டுட்டார். நா சொல்றதெல்லாம் சரிதானே, சொல்லு’’ என்று உஷ்ணமானார் ஆசார்யாள்.

பக்தர்கள் அனைவரும் அப்படியே ஸ்தம்பித்து நின்றிருந்தனர்! ஒருவரும் வாய் திறக்கவில்லை!

‘நேற்று திருவிடைமருதூர் கோயிலில் நடந்த விஷயங்கள் பெரியவாளுக்கு எப்படித் தெரிந்தது?’ என அங்கே குழுமியிருந்த பக்தர்கள் ஆச்சரியப்பட்டனர். மிராசுதார் பெரியவா கால்களில் விழுந்து எழுந்து, ‘‘தப்புத்தான் பெரியவா! ஏதோ அஞ்ஞானத்தினாலே அப்படி நடந்துண்டுட்டேன். இனிமே அப்படி நடந்துக்கவே மாட்டேன்! என்னை நீங்க மன்னிச் சுடுங்கோ…’’ என்று சொல்லி முடிப்பதற்குள், பெரியவா, ‘‘இரு… இரு! இதோட முடிஞ்சுட்டாத்தான் பரவாயில்லையே… ஜப பிராமணாளுக்கெல்லாம் அங்க மகாதானத் தெரு ராமசந்த்ரையர் கிரஹத்துலதானே சாப்பாட்டுக்கு ஏற்பாடு பண்ணியிருந்தே?’’ என்று கேள்வி போட்டார்.

‘‘ஆமாம் பெரியவா!’’ – இது மிராசுதார்.

உடனே ஆசார்யாள், ‘‘சாப்பா டெல்லாம் பரமானந்தமா நன்னாத் தான் போட்டே. பந்தியிலே, நெய் ஒழுக ஒழுக நெறய மிந்திரி பருப்பு, திராட்சை எல்லாம் போட்டு சக்கரைப் பொங்கல் பண்ணச் சொல்லி, ஒங் கையாலே நீயே பரிமாறினே… சரியா?’’ என்று கேட்டார். வெலவெலத்துப் போய் விட்டார் மிராசுதார் நாராயண ஸ்வாமி ஐயர்!

மிராசுதார் வாயைப் பொத்தியபடியே, ‘‘ஆமாம் பெரியவா! பந்தியிலே சக்கரைப் பொங்கலை மட்டும் என் கையால நானே பரிமாறினேன்!’’ என்று குழைந்தார்.

ஸ்வாமிகள் விடவில்லை. ‘‘சரி… அப்டி சக்கரைப் பொங்கலை நீ போடறச்சே, பந்தி தர்மத்தோடு பரிமாறினதா ஒம் மனசாட்சி சொல்றதா?’’ என்று கேட்டார் கடுமையாக.

வாய் திறக்கவே இல்லை மிராசு. ஆசார்யாளே பேசினார்: ‘‘நீ சொல்ல வேண்டாம்… நானே சொல்றேன்! நீ சக்கரைப் பொங்கல் போடறச்சே, அது பரம ருசியா இருந்ததாலே வைதீகாள்ளாம் கேட்டுக் கேட்டு வாங்கிச் சாப்டா! நீயும் நெறயப் போட்டே. ஆனா, தேப்பெருமாநல்லூர் வேங்கடேச கனபாடிகள் வாயவிட்டு, ‘சக்கரைப் பொங்கல் இன்னும் போடுடாப்பா… ரொம்ப ருசியாருக்கு’னு பல தடவை வாய்விட்டுக் கேட்டும்கூட நீ காதுலே வாங்கிண்டு அவருக்குப் போடாமலேயே போனயா இல்லியா? எத்தன தடவ வாய்விட்டுக் கேட்டார்! போடலியே நீ! பந்தி வஞ்சனை பண்ணிப்டியே… இது தர்மமா? ஒரு மஹா சாதுவ இப்டி அவமானப்படுத்திப்டியே…’’ _ மிகுந்த துக்கத்துடன் மௌனத்தில் ஆழ்ந்து விட்டார் ஸ்வாமிகள்!

மிராசுதார் தலை குனிந்து நின்றார். பக்தர்கள் வாயடைத்து நின்றனர். அனைவருக்கும் ஒரே பிரமிப்பாக இருந்தது. கண்களை மூடி, கால்கள் இரண்டையும் பின்புறமாக மடித்து, நிமிர்ந்து அமர்ந்து கொண்டார் ஆசார்யாள். சாட்சாத் பரமேஸ்வரனே அப்படி அமர்ந்திருப்பது போன்ற ஒரு திருமேனி விலாசம். அசையவில்லை.

பதினைந்து நிமிஷங்கள். மௌனம். பிறகு, கண்களைத் திறந்து, மௌனம் கலைந்தார் ஆசார்யாள். ஒருவரும் வாய் திறக்கவில்லை. ஆசார்யாளே நாராயணஸ்வாமி ஐயரைப் பார்த்து தீர்க்கமாகப் பேச ஆரம்பித்தார்.

‘‘மிராசுதார்வாள்! ஒண்ணு தெரிஞ்சுக்கணும். கனபாடிகளுக்கு இப்போ எண்பத்தோரு வயசாறது. தன்னோட பதினாறாவது வயசிலேருந்து எத்தனயோ சிவ க்ஷேத்ரங்கள்ளே ஸ்ரீருத்ர ஜபம் பண்ணியிருக்கார். ஸ்ரீருத்ரம் எப்பவுமே அவரோட நாடி நரம்புகள்ளேயும், ஸ்வாசத்திலேயும் ஓடிண்டே இருக்கு. அப்பேர்ப்பட்ட மகான் அவர். அவர்ட்ட நீ நடந்துண்ட விதம் மகா பாபமான கார்யம்… மஹா பாபமான கார்யம்!’’ _ மேலே பேச முடியவில்லை பெரியவாளால். கண் மூடி மௌனமாகி விட்டார். சற்றுப் பொறுத்து ஆசார்யாள் தொடர்ந்தார்:

‘‘நீ ‘பந்தி பேதம்’ பண்ணின காரிய மிருக்கே, அது கனபாடிகள் மனச ரொம்பவே பாதிச்சுடுத்து. அவர் என்ன காரியம் செஞ்சார் தெரியுமா நோக்கு? சொல்றேன் கேளு. நேத்திக்கு சாயங்காலம் அவர் நேரா தேப்பெருமாநல்லூர் போகலே. மகாலிங்க ஸ்வாமி கோயிலுக்குப் போனார். ‘அஸ்மேத’ (பெரிய பிராகார) பிரதட்சிணம் மூணு தடவை பண்ணினார். நேரா மகாலிங்க ஸ்வாமிக்கு முன்னாலே போய் நின்னார். கை கூப்பி நின்னுண்டு என்ன பிரார்த்திச்சார் தெரியுமா?’’ மேலே பேச முடியவில்லை பெரியவாளால். சற்று நிதானப்படுத்திக் கொண்டு தொடர்ந்தார்:

Venkatesa kanapadigal‘‘கண்ணுலேர்ந்து தாரையா நீர் வழிய, ‘அப்பா ஜோதி மகாலிங்கம்! நா ஒன் னோட பரமபக்தன். பால்யத்லேர்ந்து எத்தனையோ தடவ ஒன் சந்நிதியிலே மஹாந்யாஸ ஸ்ரீருத்ரம் ஜபிச்சிருக்கேன். நீ கேட்ருக்கே. இப்போ நேக்கு எம்ப்ளத்தோரு வயசாறது. மனசுலே பலமிருக்கு. வாக்குலே அந்த பலம் போயிடுத்துப்பா! இன்னிக்கு மத்யானம் சாப்படறச்சே நடந்தது, நோக்குத் தெரியாம இருக்காது. அந்த சக்கரப் பொங்கல் ரொம்ப ரொம்ப ருசியா இருந்துதேனு ‘இன்னும் கொஞ்சம் போடுங்கோ’னு வெக்கத்த விட்டு அந்த மிராசுதார்கிட்டே பல தடவ கேட்டேன். அவர் காதுல விழுந்தும் விழாத மாதிரி நகந்து போயிட்டார். நேக்கு சக்கரப் பொங்கல்னா உசுருங்கறது நோக்குதான் தெரியுமே. சபலப்பட்டுக் கேட்டும் அவர் போடலியேனு அப்போ ரொம்ப தாபப் பட்டேன்.

ஆனா, சாப்டு கையலம்பிண்டு வாசத் திண்ணைக்கு வந்து ஒக்காந்தப்புறம்தான், ‘இப்டியரு ஜிஹ்வா சபலம்’ (பதார்த்தத்தில் ஆசை) இந்த வயசுலே நமக்கு இருக்கலாமானு தோணித்து. அப்பா மகாலிங்கம்… இப்போ அதுக்காகத்தான் நோக்கு முன்னாடி வந்து நிக்கறேன். ஒன்னை மத்யஸ்தமா வெச்சுண்டு இந்த க்ஷணத்லேர்ந்து ஒரு பிரதிக்ஞை பண்ணிக்கறேன். எல்லாரும் காசிக்குப் போனா, புடிச்ச பதார்த்தத்த விடுவா. காசியிலேயும் நீதான்… இங்கயும் நீதான். அதனால ஒனக்கு முன்னாலே, ‘இனிமே என் சரீரத்தை விட்டு ஜீவன் பிரியற வரைக்கும் சக்கர பொங்கலையோ அல்லது வேற எந்தத் தித்திப்பு வஸ்துவையோ தொடவே மாட்டேன்! இது சத்யம்டாப்பா மகாலிங்கம்’னு வைராக்ய பிரமாணம் பண்ணிண்டு, ‘அப்பா ஜோதி மகாலிங்கம்! நா ஒங்கிட்ட உத்தரவு வாங்கிக்கறேன்’னு சொல்லி பன்னிரண்டு சாஷ்டாங்க நமஸ்காரம் பண்ணினார். கனபாடிகள் கண்ணுலேர்ந்து பொலபொலன்னு கண்ணீர். ஊருக்குப் பொறப்டுட்டார்! இப்போ சொல்லு… நீ பண்ணின காரியம் தர்மமா? மகாலிங்கஸ்வாமி ஒப்புத்துப்பாரா?’’

பெரியவா நிறுத்தினார். அப்போது மதியம் மூணு மணி. ‘‘நேக்கு இன்னிக்கு பி¬க்ஷ வேண்டாம்!’’ என்று சொல்லி விட்டார் ஸ்வாமிகள். அங்கிருந்த ஒருவருமே நகரவில்லை. சாப்பிடவும் போகவில்லை. அமைதி நிலவியது. அனைவரது கண்களிலும் நீர். மிராசுதார் நாராயணஸ்வாமி ஐயர் பிரமித்து நின்றிருந்தார். அவருக்குப் பேச நா எழவில்லை. பக்தர்களுக்கு ஒன்றுமே புரியவில்லை. ‘நேற்றைய தினம் திருவிடைமருதூர் க்ஷேத்திரத்தில் நடந்த அத்தனை விஷயங்களையும் உடன் இருந்து நேரில் பார்த்த மாதிரி பெரியவா சொல்றாளே, இது எப்படி?’ என்று அனைவரும் வியந்தனர்.

பெரியவா காலில் அப்படியே விழுந்தார் மிராசுதார். கேவிக் கேவி அழ ஆரம்பித்து விட்டார். அவர் நா தழுதழுத்தது: ‘‘பெரியவா! நா பண்ணது மகா பாவம்! அகம்பாவத்திலே அப்டி பண்ணிப்டேன். என்னை மன்னிச்சுடுங்கோ. இனி, என் ஜன்மாவிலே இப்டி நடந்துக்கவே மாட்டேன். ‘மன்னிச்சுட்டேன்’னு சொல்லணும் பெரியவா!’’ என்று கன்னத்தில் அறைந்து கொண்டார் மிராசுதார்.

பெரியவா காலில் அப்படியே விழுந்தார் மிராசுதார். கேவிக் கேவி அழ ஆரம்பித்து விட்டார். அவர் நா தழுதழுத்தது: ‘‘பெரியவா! நா பண்ணது மகா பாவம்! அகம்பாவத்திலே அப்டி பண்ணிப்டேன். என்னை மன்னிச்சுடுங்கோ. இனி, என் ஜன்மாவிலே இப்டி நடந்துக்கவே மாட்டேன். ‘மன்னிச்சுட்டேன்’னு சொல்லணும் பெரியவா!’’ என்று கன்னத்தில் அறைந்து கொண்டார் மிராசுதார்.

ஆசார்யாள் வாய் திறக்கவில்லை. விடவில்லை மிராசுதார். ‘‘பிரார்த்திக்கி றேன் பெரியவா. நீங்க இந்த மகாலிங்க ஸ்வாமி ருத்ராபிஷேகப் பிரசாதத்தை ஸ்வீகரிச்சுக்கணும்… என்னை மன்னிச்சுடுங்கோ!’’ என்று பிரசாதத் தட்டை நோக்கிக் கைகளைக் காண்பித்தார்.

உடனே ஆசார்யாள், ‘‘இருக்கட்டும்… இருக்கட்டும். நேக்கு அந்த மகாலிங்க ஸ்வாமியே ப்ரசாத அநுக்ரஹம் பண்ணுவார்’’ என்று சொல்லி முடிப்பதற்குள், ‘‘நகருங்கோ… நகருங்கோ’’ என்று ஒரு குரல் கூட்டத்துக்கு வெளியே கேட் டது. எல்லோரும் விலகி வழிவிட்டனர். தலையில் கட்டுக் குடுமி. பளிச்சென்று பஞ்ச கச்ச வேஷ்டி. இடுப்பில் பச்சைப் பட்டு வஸ்திரம். கழுத்தில் பெரிய ருத்ராட்ச மாலை. பட்டுத் துணியில் பத்திரப்படுத்தப்பட்ட பிரசாதத்தை ஒரு பித்தளைத் தட்டில் வைத்துக் கைகளில் பக்தியோடு ஏந்தியபடி சுமார் அறுபத்தைந்து வயது மதிக்கத் தக்க பெரியவர் ஒருவர், பெரியவாளுக்கருகே வந்து சேர்ந்தார். பிரசாதத் தட்டை ஆசார்யாளுக்கு முன்பு பவ்யமாகச் சமர்ப்பித்து விட்டு, ‘‘எம் பேரு மகாலிங்கம். திருவிடமருதூர் மகாலிங்க ஸ்வாமி ஆலய அர்ச்சகர். நேத்திக்கு ஸ்வாமிக்கு ருத்ராபிஷேகம் நடந்தது. ஒரு மிராசுதார் நடத்தினார். இந்தூர்லே எங்க அக்காவ (சகோதரி) கொடுத்துருக்கு. ஆசார்யாளுக்கும் அந்த பிரசாதத்தைக் கொடுத்துட்டு, அவளையும் பாத்துட்டுப் போகலாம்னு வந்தேன். நமஸ்காரம் பண்ணிக்கிறேன். பெரியவா அநுக்ரஹிக்கணும்’’ என்று நமஸ்கரிக்கப் போனவரைத் தடுத்தார் ஸ்வாமிகள்.

‘‘நீங்களெல்லாம் சிவதீட்சை வாங்கிண்டவா. நமஸ்காரம் பண்ணப்டாது’’ என்று சொன்ன பெரியவா, அவர் கொண்டு வந்த பிரசாதங்களை ஸ்வீகரித்துக் கொண்டு, சிவாச்சார்யாருக்கு மடத்து மரியாதை பண்ணச் சொன்னார். அதற்குள், சற்றுத் தள்ளி நின்றிருந்த மிராசுதாரைப் பார்த்துவிட்டார் சிவாச்சார்யார். ‘‘பெரியவா! இவர் தான் நேத்திக்கு அங்கே ருத்ராபிஷேகம் பண்ணி வெச்சவர். அவரே இங்கே வந்திருக்காரே!’’ என்று ஆச்சரியத்துடன் கூறிவிட்டு, உத்தரவு பெற்றுக் கொண்டு போயே விட்டார் அந்த மகாலிங்கம் சிவாச்சார்யார்.

ஆசார்யாளை மீண்டும் ஒரு முறை நமஸ்கரித்து எழுந்து, கன்னத்தில் போட்டுக் கொண்ட மிராசுதார் நாராயண ஸ்வாமி ஐயர், ‘‘திரும்பத் திரும்பப் பிரார்த் திக்கறேன் பெரியவா. நா பண்ணினது ரொம்ப பாவ காரியம்தான்! இதுக்கு நீங்கதான் ஒரு பிராயச்சித்தம் சொல்லணும்’’ என்று மன்றாடினார்.

விருட்டென்று ஸ்வாமிகள் எழுந்து விட்டார். ‘‘இதுக்கு பிராயச்சித்தம் நா சொல்ல முடியாது. தேப்பெருமாநல்லூர் வேங்கடேச கனபாடிகள்தான் சொல்லணும்’’ என்றார்!

‘‘இந்தப் பாவி பண்ணின காரியத்துக்கு கனபாடிகள் பிராயச்சித்தம் சொல்வாரா பெரியவா?’’ என்று தாபத்தோடு கேட்டார் மிராசுதார்.

உடனே ஸ்வாமிகள் சற்று உரத்த குரலில், ‘‘நோக்கு ‘ப்ராப்தம்’ இருந்தா நிச்சயம் சொல்வார்!’’ என்று கூறிவிட்டு, விடுவிடுவென்று உள்ளே சென்று விட்டார். அதன் பிறகு பெரியவா வெளியே வரவே இல்லை. சில மணி நேரம் காத்திருந்து பார்த்தார் மிராசுதார். பின்னர் ஒரு முடிவுக்கு வந்தவராகப் புறப்பட்டு பஸ் பிடித்து செங்கல்பட்டு வந்து சேர்ந்தார். ரயிலைப் பிடித்து, அடுத்த நாள் காலை திருவிடைமருதூர் வந்து சேர்ந்தார்.

அங்கே காவிரி ஆற்றுக்குச் சென்று ஸ்நானத்தை முடித்துக்கொண்டு, ஒரு வைராக்கியத்துடன் அருகிலுள்ள தேப்பெருமாநல்லூரை நோக்கி நடையைக் கட்டினார். எப்படியும் வேங்கடேச கன பாடிகளைப் பார்த்து, அவர் காலில் சாஷ் டாங்கமாக விழுந்து, மன்னிப்புக் கேட்டு, அவர் கூறும் ‘பிராயச்சித்த’த்தைப் பூர்த்தி செய்து, பாபவிமோசனம் பெற்றுவிட வேண்டும் என்கிற வைராக்கியத்துடன் வேக வேகமாக நடந்தார்.

தேப்பெருமாநல்லூர் அக்ரஹா ரத்தில் நுழைந்தார் மிராசுதார். எதிர்ப்பட்ட ஒருவரிடம் கன பாடிகள் பெயரைச் சொல்லி, அவர் க்ருஹம் எங்கே என விசாரித் தார். உடனே அவர், வெளியே பலர் கூட்டமாக நின்றிருந்த ஒரு வீட்டைச் சுட்டிக் காட்டி, ‘‘துக்கம் விஜாரிக்க வந்திருக்கேளா? அதான் வேங்கடேச கனபாடிகள் வீடு. இன்னிக்கு விடியக் காலம் தான் கனபாடிகள் திடீர்னு காலமா யிட்டார். ‘அநாயாஸேன’ மரணம் (சிரமங்கள் இல்லாத சுலப மரணம்). போய்ப் பார்த்துட்டு வாங்கோ’’ என்று சொல்லிப் புறப்பட்டார்.

இதைக் கேட்டவுடன் பிரமித்து நின்று விட்டார், நாராயணஸ்வாமி ஐயர். யாரோ அவர் தலையில் சம்மட்டி கொண்டு தாக்கியது போலிருந்தது. நேற்று மடத்தில் ஆசார்யாள் உரத்த குரலில் ஆணித்தரமாகச் சொன்ன வாக்கியம் மீண்டும் அவர் காதுகளில் ஒலிப்பது போலிருந்தது: ‘நோக்கு ப்ராப்தம் இருந்தா நிச்சயம் சொல்வார்!’

‘பிராப்தம் இல்லேங்கறது நேத்திக்கே பெரியவாளுக்கு தெரிஞ்சிருக்கு’ என்பது மிராசுதாருக்கு இப்போது புரிந்தது. கனபாடி கள் வீட்டுக்குச் சென்றார் மிராசுதார். மானசீகமாக மன்னிப்புக் கேட்டுக் கொண்டு, கனபாடிகளின் பூத உடலுக்கு நமஸ்காரம் பண்ணினார். புறப்பட்டார்.

அதன் பிறகு, பல விதமான துன்பங்களுக்கு ஆளான மிராசுதார், ஓரிரு வருஷங்களுக்கு உள்ளாகவே தன் சொத்துகளையெல்லாம் இழக்க நேரிட்டது. வடக்கே சென்று பல சிவாலயங்களிலே திருமடப்பள்ளி கைங் கரியம் பண்ணிவிட்டு, காசி க்ஷேத்ரத்திலே காலகதி அடைந்தார்.

[நன்றி : எஸ்.ரமணி அண்ணா | சக்தி விகடன்]

===============================================================

பாவம் என்னும் பெருந்தீக்கு அஞ்சுவோம்…

பார்த்தீர்களா வாசகர்களே… பந்தி வஞ்சனை (அதாவது பந்தியில் நமக்கு வேண்டியவர்களை மட்டும் நன்கு கவனித்து மற்றவர்களை புறக்கணிப்பது) பாபத்திலும் பெரும் பாவம். இது போன்ற அன்னதான கைங்கரியங்களில் வயதானவர்கள் ஏதேனும் விருப்பப்பட்டு கேட்டால், அவர்கள் மீது எரிந்துவிழாமல், ‘இல்லை’ என்று சொல்லாமல் அவர்களுக்கு நிச்சயம் தரவேண்டும். அவர்கள் திருப்திப்படும்வரை தரவேண்டும். அதே போன்று வேதியர்களுக்கு சன்மானம் அளிக்கும்போது பாரபட்சம் பார்க்கக்கூடாது. அவர்கள் மனம் நோகும்படி நடக்கலாகாது.

===============================================================

Also check from our archives…

“ஏம்பா! உங்களுக்கு எப்போ பார்த்தாலும் பெரியவா சேவை தானா?” – குரு தரிசனம் (14)

வேதம் தழைக்க சென்னையில் ஓர் வேத வித்யா ஆஸ்ரமம்!

வாழைப்பழத்துக்கு பதில் மகா பெரியவா கொடுத்த நெற்பொரி. ஏன்? எங்கு? – குரு தரிசனம் (13)

“கடமைக்கே நேரமில்லை, இதுல கோவிலுக்கு எங்கே சாமி போறது?” – குரு தரிசனம் (12)

காசியில் கங்கா ஜலம் எங்கு எடுக்கவேண்டும்? – குரு தரிசனம் (11)

குரு தரிசனம் – முந்தைய பதிவுகளுக்கு ….

http://rightmantra.com/?cat=126

================================================================
Also check :

Articles about Sri Ragavendhra Swamigal in Rightmantra.com

முதல் மாணவன், முதல் வேலை, முதல் சம்பளம்…!! – ஸ்ரீ ராகவேந்திர தரிசனம் (6)

புதுவை பிருந்தாவனத்தில் காட்சி தந்த ராகவேந்திரர் – உண்மை சம்பவம் – ஸ்ரீ ராகவேந்திர தரிசனம் (5)

பட்ட மரம் துளிர்த்தது; வேத சக்தி புரிந்தது – ஸ்ரீ ராகவேந்திர தரிசனம் 4

கேட்பதை தருவார், கேட்டதும் தருவார் குருராஜர் – ஸ்ரீ ராகவேந்திர தரிசனம் 3

“அழைத்தால் போதும் அடுத்த கணமே நினைத்தது நடக்கும்!” – ஸ்ரீ ராகவேந்திர தரிசனம் 2

திருவருளும் குருவருளும் – ஸ்ரீ ராகவேந்திர தரிசனம் (1)

குருராஜர் இருக்க கவலை எதற்கு? நெகிழ்ச்சியூட்டும் நிஜ அனுபவங்கள்!

நம் தளத்திற்கு கிடைத்த ஸ்ரீ ராகவேந்திர சுவாமிகளின் பரிபூரண ஆசி! எங்கே… எப்படி?

ஆங்கில கவர்னருக்கு ராகவேந்திரர் காட்சியளித்த அற்புதம் – கஜெட் ஆதாரத்துடன்!

யாருக்கு தேவை தண்ணீர்?

உச்சரிப்பை விட உன்னத பக்தியே சிறந்தது!

இறைவா… பிறர் நிறைவில் பெருமிதமே தினம் காணும் குணம் வேண்டும்!

எது வந்த போதும் துணை நீயே குருராஜா – உண்மை சம்பவம்

முக்காலமும் நீ அறிவாய் குருராஜா – நம் தள வாசகரிடம் ஸ்ரீ ராகவேந்திரர் நிகழ்த்திய அற்புதம்!

===================================================================

[END]

13 thoughts on “மகா பெரியவா எரிமலையாய் வெடித்த தருணம் – நெஞ்சை உலுக்கும் சம்பவம் – குரு தரிசனம் (15)

  1. குருவே சரணம்

    ஓம் ஸ்ரீ குருப்யோ நமாஹ்

    நன்றி
    உமா

  2. என்னையுமறியாமல் பல இடங்களில் அழுதுவிட்டேன். குறிப்பாக கீழ்கண்ட வரிகள்…

    ///ஒன்னை மத்யஸ்தமா வெச்சுண்டு இந்த க்ஷணத்லேர்ந்து ஒரு பிரதிக்ஞை பண்ணிக்கறேன். எல்லாரும் காசிக்குப் போனா, புடிச்ச பதார்த்தத்த விடுவா. காசியிலேயும் நீதான்… இங்கயும் நீதான். அதனால ஒனக்கு முன்னாலே, ‘இனிமே என் சரீரத்தை விட்டு ஜீவன் பிரியற வரைக்கும் சக்கர பொங்கலையோ அல்லது வேற எந்தத் தித்திப்பு வஸ்துவையோ தொடவே மாட்டேன்! ///

    மகா பெரியவாளுக்கு தான் எத்தனை ஞானம். எங்கோ திருவிடைமருதூரில் மகாலிங்கேஸ்வரர் முன்பு ஒருவர் பிரார்த்திப்பதை இங்கே காஞ்சியில் தாம் அமர்ந் இடத்திலிருந்தபடி சொல்கிறார் என்றால் அவரும் சிவனும் வேறு வேறல்ல… என்பது மட்டும் புரிகிறது.

    கடந்த காலங்களில் நான் விசேடங்களில் பந்தி பரிமாறிய நாட்களை அசைபோடுகிறேன். அறிந்தும் அறியாமலும் நான் இது போன்று ஏதேனும் செய்திருப்பேனோ என்று அச்சம் ஏற்படுகிறது.

    அறிந்தும் அறியாமலும் தெரிந்தும் தெரியாமலும் செய்த பாவங்கள் அனைத்தையும் பொறுத்தருள்வாய் ஈசனே!

    – பிரேமலதா மணிகண்டன்,
    மேட்டூர்

  3. நன்றி சுந்தர்ஜி

    எப்பேர் பட்ட உண்மைகள், தர்மங்கள் இந்த பதிவில் உள்ளது. படித்து முடித்ததும் நம் மஹா பெரியவாவின் அற்புதமும் தேப்பெருமாநல்லூர் வேங்கடேச கனபாடிகள் அவர்கள் மீது பக்தியும் ஏற்பட்டது.

    ப.சங்கரநாராயணன்

  4. நாம் செய்யும் பாவ காரியங்களை யாரும் அறிய மாட்டார்கள் என்ற நினைப்பில் தான், ஆணவத்துடனும் ,அகம்பாவத்துடனும் கடவுளை கன நேரம் மறந்து செய்யும் செயல்களே ஏராளம் . மனிதனின் பாவ செயல்கள் – லஞ்சம் வாங்குவது ,மற்றவரை கேவலமாக பேசுவது , யாரிடமும் அன்பு காட்டாதிருப்பது ,திருடுவது அனைத்தும் யாரும் என்னை என்ன செய்ய முடியும் என்ற நிலையில் செய்வதுதான் . ஆனால் கடவுள் அல்லது கடவுள் ஸ்தானத்தில் உள்ள குரு (மகா பெரியவா ) நம்மை அனுதினமும் நம் அருகில் ஸ்தூல ஸ்தானத்தில் ரட்சிக்கின்றனர் என்ற நினைப்பு வந்தால் போதும் – நாம் அக்கணமே ஆத்மா சுத்தி பெற்றவர்கள் ஆவோம். எந்த பாவ எண்ணங்களும் நம்மை அண்டாது . ஸ்ரீ மகா பெரியவா அருளினால் இந்த நிகழ்வை நாங்கள் அறிய உதவியதற்கு நன்றி சுந்தர்ஜி

  5. ஏற்கனவே சில முறை இந்த நிகழ்ச்சியை கேட்டும் படித்தும் இருந்தாலும், ஒவ்வொரு முறையிலும் ஒரு புதிய தெளிவு ஏற்படுகிறது. கண்ணீர் கண்களில். ‘பந்தி வஞ்சனை கட்டாயமாக தவிர்க்கப்பட வேண்டியது’ – இன்றைய செய்தி.
    ஸ்ரீ குருப்யோ நம:

  6. வணக்கம்………..

    தன் மீது பக்தி கொண்ட நல்லுள்ளத்திற்கு ஏற்பட்ட ஒரு அவமானத்தைக் கண்டு இறைவன் எப்படி சீறுவார் என்பதையும் அவ்வாறு அவமான படுத்தியவர்களுக்கு கிடைக்கும் தண்டனையையும் தெரிந்து கொண்டோம்………..குருவின் திருவடிகளைப் பற்றிக் கொள்வது மட்டுமல்லாமல் யாருக்கும் தீங்கு நினைக்காமல் வாழ்ந்தால் மட்டுமே அவரின் ஆசியைப் பெறமுடியும் என்று தோன்றுகிறது………கனபாடிகளை நினைக்கும் போது மனது கனக்கிறது…….. குருவே சரணம்……

  7. அப்பப்பா மகாப்பெரியவாளின் கோபத்தில் உள்ள நியாயம் வியக்க வைக்கிறது. தன்னைப்பற்றி உயர்வாக நினைத்தால் மட்டும் போதாது மற்றவர்கள் தன்னை மதிக்கும்படி நடந்துகொள்ளவேண்டும் என்பதையும் இந்தப்பதிவு தெள்ளத்தெளிவாக உணர்த்துகிறது.

    பந்தி எப்படி கவனிக்கவேண்டும் என்பதை நன்றாக புரிந்து கொண்டேன்.
    ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர!

  8. மகா பெரியவ கட்டுரை.
    படிக்க படிக்க நீங்கள் சொன்னது போல பல இடங்களில் கண்ணீர் பெருகியது. சாந்த சொருப பெரியவா அவர்களை பற்றி மட்டும் தான் இதுவரை படித்துள்ளோம். நிஜமாகவே இது நெஞ்சை உலுக்கும் சம்பவம் தான்.
    சிவனிடம் கனபாடிகள் நிற்கும் கோலம் என்னை எனக்கே நினைவு படுத்துகிறது. இதுமாதிரி எத்தனை முறை நான் நின்றிருப்பேன்.
    எல்லாரும் காசிக்குப் போனா, புடிச்ச பதார்த்தத்த விடுவா. காசியிலேயும் நீதான்… இங்கயும் நீதான். அதனால ஒனக்கு முன்னாலே, ‘இனிமே என் சரீரத்தை விட்டு ஜீவன் பிரியற வரைக்கும் சக்கர பொங்கலையோ அல்லது வேற எந்தத் தித்திப்பு வஸ்துவையோ தொடவே மாட்டேன்! /// இந்த வரிகள் எல்லோரையும் கண்ணீர் விட வைக்கும்.
    இந்த கோரிக்கையை என்னை மாதிரி எத்தனையோ தாய்மார்கள் தங்கள் குடும்ப நலனுக்காக வேண்டிக்கொண்டு இருப்பார்கள்.
    என் தந்தையரிடம் ஏற்பட்ட மனகசப்புக்கு பிறகு கடந்த 1 1\2 வருடங்களாக எனக்காக எப்பொழுதும் கடவுளிடம் கை ஏந்தவில்லை. மற்றவர்களுக்காக மட்டுமே வேண்டிகொள்வேன்.
    மிராசுதாரரின் தவறுக்கு கோபபட பெரியவா இருந்தார்.
    நான் என்ன தவறு செய்தேன்? ஏன் என் மேல் கோபப்பட்டார் என்று அந்த கடவுளிடம் கொஞ்சம் கேட்டு சொல்லுங்கள்.
    நன்றி.

  9. சிவாபராதத்துக்கு யாராயிருந்தாலும் பயப்பட வேண்டும். அதிலும் சிவபக்தர்களுக்கு அபராதம் செய்யவே கூடாது.

  10. சுந்தர்ஜி

    மகாபெரியவா எரிமலையா வெடிச்ச தருணம் விஷயத்தை படித்து மிகவும் கலங்கிவிட்டேன்.

    பெரியவாளின் தீர்க்க ஞானத்தை என்னென்று சொல்லுவது. மேலும் அவருடைய ஒவ்வொரு சொல்லும் சாட்டையடி போல வஞ்சனை செய்வோருக்கு ஏற்படும். பந்தியில் நடந்த அவமரியாதையும், தட்சனையில் சாஸ்திரிகளுக்கு ஏற்பட்ட அநீதிக்கும் பெரியவாவிடம் மிராசுதருக்கு கிடைத்த அறிவுரை எல்லா மானிடர்களுக்கும் ஒரு நல்ல பாடம். இனியேனும் யாரும் யாரையும் மதிக்காமலும் நடப்பதும் அவமரியாதை செய்யாமலும் நடந்துகொள்ள ஸ்ரீ மகாபெரியவாளை மனதார பிரார்த்திக்கிறேன்.

    எல்லோரும் எல்லோரையும் சமமாக பாவிப்போம்.

    நன்றி சுந்தர்ஜி

    வரதராஜன் – கோவை

Leave a Reply to தமிழ்ச்செல்விஞானப்பிரகாசம் Cancel reply

Your email address will not be published. Required fields are marked *