Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Thursday, March 28, 2024
Please specify the group
Home > Featured > என்று மாறும் தன்னை அழித்து இன்பம் காணும் இந்த நிலை?

என்று மாறும் தன்னை அழித்து இன்பம் காணும் இந்த நிலை?

print
நாளை நம் நாட்டின் 67 வது சுதந்திர தினம். ‘தண்ணீர் விட்டா வளர்த்தோம் சர்வேசா இப்பயிரை… கண்ணீரால் காத்தோம்’ என்று சுதந்திரத்திற்காக நம் முன்னோர்களும் தலைவர்களும் எத்தனை பாடுபட்டார்கள் என்பதை பாரதி ஒரே ஒரு வரியில் கூறிவிட்டார்.

எத்தனை எத்தனையோ தன்னலமற்ற ஜீவன்களின் தியாகத்தின் பலன் தான் இன்று நாம் அனுபவித்து வரும் சுதந்திரம். தங்கள் அபிமான சினிமா நட்சத்திரங்களின் பிறந்த தேதியும், படப்பட்டியலும் தெரிந்த அளவுக்கு இன்றைய தலைமுறையினருக்கு காந்தி, நேரு, வல்லபாய் பட்டேல், கட்டபொம்மன், வ.உ.சி  உள்ளிட்ட சில தலைவர்களை தவிர வேறு யார் பெயரையும் தெரியவில்லை. பெயர் தெரிந்திருந்தாலும் அவர்கள் வாழ்க்கை வரலாறோ அவர்கள் கடந்து வந்த பாதையோ தெரியவில்லை. வெட்கி தலை குனியவேண்டிய விஷயம் இது.

Happy Independence Day

சுதந்திர போராட்ட தியாகிகளின் வரலாறு மறக்கப்பட்டுவிட்டது. தன்னலமற்ற தியாகிகளை கொண்டாடுவதை விட்டுவிட்டு தங்களை ஏய்த்து பிழைப்பை நடத்தும் தங்கள் முன்னேற்றத்துக்காக, சுயலாபத்துக்காக தங்கள் ரசிகர்களை பயன்படுத்திக்கொள்ளும் திரைப்பட நடிகர்கள் பின்னே இன்றைக்கு இளைஞர்கள் செல்கிறார்கள்.

இங்கு மனிதாபிமானத்தை யாரும் வளரப்பதில்லை. தேச பக்தியை வளர்ப்பதில்லை. தெய்வ பக்தியை வளர்ப்பதில்லை. ஆனால் தனி மனிதர்கள் மீது கண்மூடித்தனமான பக்தியை தான் வளர்த்து வருகிறார்கள். இதனால் யாருக்கு என்ன பயன்? தேசத்திற்காக மெழுகாய் உருகி, வாலிப வயதில் அனைத்து சுகங்களையும் தியாகம் செய்த பகத்சிங், வாஞ்சிநாதன், திருப்பூர் குமரன் போன்றோரின் பிறந்த தேதியோ வரலாறோ அறியாத நம் இளைஞர்கள், இயக்குனர் கூறும் வசனத்தை ஒப்பிக்கும் சினிமா நடிகர்கள் மீது வெறி கொண்டு திரிகிறார்கள். என்றைக்கு முடிவுக்கு வரும் இந்த அவலம்?

தன்னை அழித்து பெறும் இன்பம்!

வசதியான மனிதரின் வீட்டில் வளர்க்கப்பட்ட அந்த நாய்க்கு வேளாவேளைக்கு கிடைத்த சாப்பாட்டில் திருப்தி இல்லை. அந்த வீட்டைவிட்டு வெளியேறி ரோட்டுக்கு வந்து தனக்குப் பிடித்த உணவைத் தேட ஆரம்பித்தது. நாள்கணக்கில் அலைந்து திரிந்து வாடியதுதான் மிச்சம். ரோட்டில் ஏற்டிகனவே திரிந்து கொண்டிருந்த நாய்களுடன் சண்டை போட்டுத் தெருவோர எச்சிலையைக் கூடக் கைப்பற்ற முடியவில்லை.

Bone-eating-dog1கடைசியாக அதற்குக் காய்ந்து போன எலும்புத் துண்டு ஒன்று கிடைத்தது. வெயிலில் பல மாதம் காய்ந்து போன எலும்பு என்பதால் அதிலிருந்த அத்தனை சுவையும் வற்றிப்போய், அது கல் போல  ஆகியிருந்தது. ஆனாலும் அது தெரியாத அந்த நாய் அந்த எலும்பைக் கஷ்டப்பட்டு கடித்தது. நாயின் வாயில் கீறல்கள் ஏற்பட்டு ரத்தம் கசிந்தது. தன் ரத்தத்தை ருசித்த நாயோ ரத்தம் எலும்பிலிருந்துதான் வருகிறது என்று எண்ணி இன்னும் ஆவேசமாக எலும்பைக் கடிக்க ஆரம்பித்தது. இதைப் பார்த்த வழிப்போக்கர் ஒருவர் “அட… மட நாயே அது காய்ந்துபோன எலும்பு. நீ சுவைக்கும் ரத்தம் எலும்பிலிருந்து வரும் ரத்தம் இல்லை. உன் வாயிலிருந்தே கசியும் உன் ரத்தம் தான்!” என்று சொல்ல, வழிப்போக்கரை பார்த்து ஏளனமாக சிரித்த நாய் சொன்னது, “இத்தனை நாள் வரை – இந்த எலும்புத் துண்டைக் கடிக்கும்வரை – என் நாக்கு ரத்தம் சுவைத்ததில்லை. இந்த எலும்பை கடித்தபிறகு இப்போது தான் ரத்தத்தின் சுவை தெரிய ஆரம்பித்தது. ஆகவே இந்த ரத்தம் எலும்புத் துண்டிலிருந்து தான் எனக்கு கிடைக்கிறது. என்னை நீ ஏமாற்ற முடியாது. உன் வேலையை பார்த்துக்கொண்டு போ!” என்று சொல்லி காய்ந்த அந்த எலும்பை வேகமாக கடிக்க ஆரம்பித்தது.

“உன் தலைவிதி அப்படின்னா… நான் சொல்றது எங்கே உன் மண்டையிலே ஏறப்போகுது?” என்று அந்த வழிபோக்கர் தன் வழியே செல்லலானார்.

அபிமான நடிகர்களின் பின்னே சென்று, அவர்களை பற்றிய வெட்டிக் கதைகளை பேசிக்கொண்டு, அது தான் சந்தோஷம், மகிழ்ச்சி என்று கருதி தன்னையே அழித்துக்கொண்டு ஏமாற்றிக்கொண்டு, நேரத்தை வீணடித்துக்கொண்டு வாழ்ந்து வரும் ஒரு சரசாரி இளைஞனுக்கும் அந்த ஐந்தறிவு விலங்கிற்கும் எந்த வேறுபாடும் கிடையாது.

இதில் என்ன ஒரு விஷயம் என்றால் ஒரு சில நடிகர்கள் தங்கள் ரசிகர்கள் இவ்வாறு இருப்பதை விரும்புவதில்லை. ஆனால் அவர்களின் விருப்பத்திற்கு மாறாக அவர்களின் ரசிகர்கள் இத்தகைய செயல்களில் ஈடுபடுகின்றனர் என்பதே உண்மை. தங்கள் அபிமான நடிகருக்கு ஒரு ரசிகர் செய்யும் உண்மையான துரோகம், அவர் பெயரை பயன்படுத்தி வெட்டித்தனங்கள் செய்து, தங்கள் வாழ்க்கையை கெடுத்துக்கொள்வது தான்.

இந்த தேசத்தின் மீது நம்பிக்கை கொண்டவர்கள் தியாகிகள் வரலாறுகளை எடுத்துக் சொல்லுங்கள்.

நாளை சுதந்திர தினத்தை முன்னிட்டு நம் தளத்தின் மிக விசேஷ பதிவு ஒன்று வருகிறது. அவசியம் அனைவரும் அதை தவறாது படிக்கவேண்டும். அனைவரிடமும் பகிர்ந்துகொள்ளவேண்டும். பசி தூக்கம் தொலைத்து, குடும்பத்தை மறந்து, உறவுகளை இழந்து, தங்கள் வாழ்க்கையையே இந்த தேசத்திற்காக தியாகம் செய்த அந்த நல்லுள்ளங்களுக்காக இதைக் கூடவா செய்யமாட்டீர்கள்?

ஜெய் ஹிந்த்!

===============================================================

India Indpendence day

யாருக்கு இங்கே சிலை வைத்துக்கொண்டிருக்கிறோம்?

சிட்டகாங் ஆயுத கிடங்கை சூறையாடி ஆங்கில அரசை கண்ணில் விரலை விட்டு ஆட்டிய பிறகு பிறகு கைது செயப்பட்டு ஆங்கிலேயர்களால் ஒவ்வொரு பல்லாக தட்டி எடுக்கப்பட்டு பல வித சித்திரவதைகளுக்கு பின் உயிர் நீத்த சூர்யா சென், கணேஷ் கோஷ், வீராங்கனை கல்பனா தத்தா, ஆங்கில அதிகாரியை லண்டனில் சுட்டு வீழ்த்தி, தப்பி ஓட நினைக்காது அமைதியாக ஒரு நாற்காலியை இழுத்துப் போட்டு உட்கார்ந்து கொண்டு காவல் துறையின் வரவுக்காக காத்திருந்து பிறகு தூக்கிலடப் பட்ட இளைஞன் மதன்லால் திங்கரா, நாட்டின் பண்பாட்டையும், இந்து மத நம்பிக்கைகளையும் அவமதித்த ஆங்கிலேயர்களை கொன்று தூக்கு மேடை ஏறிய சாப்பேகர் சகோதரர்கள், ஜாலியன்வாலா பாக் சம்பவத்திற்கு காரணமாக இருந்த ஒட்வயர் என்ற அதிகாரியை ஐரோப்பா முழுவதும் பல ஆண்டுகளாக பின் தொடர்ந்து புத்தகத்தின் உள்ளே மறைத்து வைத்திருந்த துப்பாக்கியினால் சுட்டுக் கொன்று சரித்திரம் படைத்த தியாகி உதம் சிங், பண்டிட்ஜி என்று பகத் சிங்கினால் குருவாக மதிக்கப்பட்டு ஆங்கிலேயர்களுக்கு அல்லும் பகலும் ஓயாத தலைவலியாக இருந்து அலஹாபாத் நகர் மத்தியில் இருந்த மாந்தோப்பில் மறைந்திருந்தபோது கூட்டாளியினால் காட்டிக் கொடுக்கப் பட்டு தனி ஒருவனாக இருந்து ஒற்றை துப்பாக்கியுடன் சமர் புரிந்து இறந்த வீரன் சந்திரசேகர ஆசாத், வீரன் வாஞ்சியுடன் ரயில் நிலையம் சென்று ஆஷ் துரையை சுட்டுக் கொன்று வெளியே ஓடி இன்று வரை என்ன ஆனான் எனபது தெரியாத நம்மூர் மறத் தமிழன் மாடசாமி…

இதில் எத்தனை தியாகிகளை இன்றைய தலைமுறையினருக்கு தெரியும்? எத்தனை பேர்களின் சரித்திரம் பாடப் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது? இவர்களது பிறந்த நாள் நினைவு வைத்துக் கொண்டு கொண்டாடப்பட்டிருக்கிறதா அல்லது நினைவு நாளில் அஞ்சலி செய்திருக்கிறோமா? இவர்களை மறந்துவிட்டு அந்நிய சக்திகளுக்கு விலை போனவர்களுக்கு முச்சந்தியில் சிலை வைத்துக் கொண்டு பெருமிதம் அடைகிறோமே? இது நன்றி கெட்ட தேசமா இல்லையா?

– (பாலா ஸ்ரீனிவாசன்,சிங்கப்பூர், தினமலர்.காம்)

===============================================================

[END]

10 thoughts on “என்று மாறும் தன்னை அழித்து இன்பம் காணும் இந்த நிலை?

  1. ADVANCE INDEPENDENCE DAY WISHES

    சுதந்திரம் நமக்கு என்ன சும்மாவா கிடைத்தது. நமக்கு பாடுபட்டு சுதந்திரம் வாங்கி கொடுத்த தியாகிகளை நினைவு கூர்வோம்.

    நன்றி
    உமா

  2. ஆணித்தரமான பதிவு!

    நாளை சுதந்திர தினத்தை முன்னிட்டு டிவியில் காட்டப்படும் நிகழ்சிகள் எல்லாம் சினிமா சம்பத்தப்பட்டதுதான். இதில் எந்த நிகழ்ச்சியை பார்த்து யார் என்ன கற்றுக்கொள்ளமுடியும். சினிமா மற்றும் டிவி சீரியல் அடிமைகளை விடுவிக்க புதிதாக ஒரு சுதந்திர போராட்டம் வரவேண்டும்.

    வந்தே மாதரம்!

  3. அருமையான, நெஞ்சை சுட்டெரிக்கும் பதிவு.
    **
    இன்றைய அவலங்களுக்கு நாமும் ஒரு காரணம் தான். இன்று சினிமா – 75%; அரசியல், மற்ற தேவையற்ற சில – 25% இளைஞர்களை கெடுகின்றது.
    **
    இந்த அவலங்களுக்கு நாமும் ஒரு காரணம் என்றாலும்,

    “எந்த குழந்தையும் நல்ல குழந்தை தான் மண்ணில் பிறக்கையிலே அது நல்லவனாவதும் தீயவனாவதும் அன்னை வளர்ப்பினிலே” என்ற பாடல் நினைவுக்கு வருகிறது (இந்த பாடலை கூட சினிமாவில் தான் கற்றுகொண்டோம். ஆனால், அது அந்த கால சினிமா). இந்த பாடலை கூறுவதால், அன்னையர்களை குறை கூறுகின்றேன் என்று அர்த்தமில்லை.

    மாறாக, குழந்தையின் வளரும் சூழலை தான் கூறுகிறேன். சமீபத்தில் படித்த செய்தி, குழந்தையை பல முறை அடித்த வீட்டு ஆசிரியரின் செயல் வீடியோ மூலம் தெரியவந்துள்ளது. என்னவென்று படித்தால், அந்த குழந்தைக்கு மூன்று வயது தானாம். அதற்க்கு முறையாக abcd வரவில்லை என்று வீட்டு ஆசிரியரை நியமிதார்களாம். மூன்று வயது குழந்தைக்கு இந்த அளவிற்கு ஒடுக்கு முறை கல்வி தேவையா ???

    இது ஒரு புறம். பள்ளிகள் பள்ளிகளாக செயல்படாமல் வியாபார கூடங்களாக செயல் படுகின்றன. கும்பகோணம் பள்ளி 96குழந்தைகளை கொன்றுகுவித்து, 10வருடம் கழித்து இப்போது தான் ஏதோ சிறிய தண்டனையை சிலருக்கு மட்டுமே கொடுத்து இருக்கிறார்கள்.

    இது எல்லோரும் வெளிப்படையாக அறிந்த குற்றம். வெளியே அறியாத குற்றம் பள்ளிகள் செய்கின்றன – என்னவெனில், குழந்தைகளுக்கு குரு எதிர்க்கால வழிகாட்டுதல் செய்கிறாரா? தங்களின் சுயத்தை அறிந்து கொள்ள உதவி செய்கிறார்களா? (சுயத்தை அறிந்து கொள்ள உதவி செய்யாத கல்வியும் ஒரு கல்விதானா?) நீதிநெறியை போதிகிறார்களா? எதிர்கால வாழ்க்கைக்கு பயனுள்ள அடிப்படை திறன்களை கற்று தருகிறார்களா? எதுவுமே இல்லை. இது மாபெரும் (வெளியில் தெரியாத) குற்றம். இதனால் தான் நாட்டில் இவ்வளவு பிரச்னை, எல்லா துர்செயல்களுக்கும் தொடக்கம்.
    **
    இப்படி இன்னும் எவ்வளவோ சொல்லலாம். இன்றைய இளைஞர்கள் தங்களை தாங்களே விரும்பாதது (வாழ்வில் பிடிப்பின்மை அற்று) இருப்பதே அவர்கள் நிழல் கதா நாயகர்களை இந்த அளவிற்கு ரசிக்க காரணம்.
    **
    தங்களால் நிஜ வாழ்வில் முடியாத பலவற்றை நிழல் நாயகர்கள் செய்வதால் அவர்கள் மீது கண்மூடித்தனமான பற்று.

    நாம் நம் inspirationஐ தேர்வு செய்யும் போது கவனமாக இருக்க வேண்டும். சினிமாவிலும் நூற்றுக்கு ஒன்று, இரண்டு நல்ல மனிதர்கள் இருக்கத்தான் செய்கின்றனர். அவர்களை ஒரு அளவோடு நேசிப்பதில் தவறில்லை.
    **
    முதலில் நம் தாய் (தந்தையரை) கவனித்து, பின் நம் சுற்றத்தை நம்மால் முடிந்த அளவு கெடுக்காமல் (இன்றைய காலத்தில் நல்லது செய்யாவிட்டாலும் பரவா இல்லை. கெட்டது செய்யாமல் இருக்க வேண்டும்) இருப்பதே நாம் நம் தாய்நாட்டிற்கு செய்யும் ஒரு நல்லதாக இருக்கும்.
    **
    **சிட்டி**.

  4. என்று தணியும் எங்கள் சுதந்திர தாகம்
    என்று மடியும் எங்கள் அடிமையின் “மோகம் ” . பாரதியார்

    பலவற்றிற்கும் அடிமையாய் இருப்பதையே பலர் மோகிக்கிறார்கள்… நிலைமை மாறும் … மாற வேண்டும் …
    சுதந்திர தின வாழ்த்துக்கள் … Camp @ SYRACUSE, NEW YORK

  5. சினிமாவில் வந்தால் மட்டுமே இவர்களை தெரிந்து கொள்ளமுடியும் என்ற சூழ்நிலை….
    பாட புத்தகத்திலும் இவர்கள் வரவில்லை என்பது தான் கொடுமை

    இது போல் எவளோ உயிர்களோ

    இறைவா

  6. அந்தணன் சந்திர சேகர ஆசாத்
    இந்த பெயரில் அந்தணன் சாதியை குறிகிறதா.சுந்தர் நீங்கள் சாதி யை விரும்புகிறவரா.

    1. அது நான் எழுதியது அல்லவே. தினமலரில் அந்த அன்பர் அளித்த பின்னூட்டத்தை காப்பி பேஸ்ட் செய்தேன். அவருக்கு ஒருவேளை அதை வெளிக்காட்ட விருப்பம் இருந்திருக்கலாம். இருப்பினும் உங்கள் கருத்துக்கு மதிப்பளித்து எடிட் செய்துள்ளேன். நன்றி.

      – சுந்தர்

Leave a Reply to V UMA Cancel reply

Your email address will not be published. Required fields are marked *